27.11.12

வாழ்க தேசிய ஒற்றுமை

நேற்றுதான் துப்பாக்கி பார்த்தேன். உடனேயே துப்பார்க்குத் துப்பாய குறள்தான் நினைவுக்கு வந்தது. எழுதலாமென்று வலைப் பக்கம் வந்தால் அதிஷாவின் துப்பார்க்குத் துப்பாய டாஸ் போர்டில் நின்றது. எனவே துப்பாக்கியைத் தூரவைத்து விட்டு இன்னொரு தேசிய ஒற்றுமை பற்றி எழுதுவோம் என்று தோன்றியது.
***********

சில நாட்களுக்கு முன்பு கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகளை மூடிக் கிடக்கும் கோலார் தங்க வயலில் கொட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்ல. அங்கு மட்டுமல்ல கர்னாடக எல்லையின் எந்த ஒரு இடத்திலும் அதைக் கொட்ட அனுமதிக்க மாட்டோம். 

இவர்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் நாங்கள் பெறுவோம் என்று சொன்னவர்கள். இங்கே சுற்றி இருக்கும் எல்லாரும் வயித்தில புளியைக் கரைச்சுக்கிட்டு இருக்கணும். இங்க உற்பத்தியாகிற மின்சாரத்தை கேரளா வாங்குமாம் - கர்நாடகா வாங்குமாம். ஆனால் கழிவு கூட அவர்கள் மண்ணை மிதிக்கக் கூடாதாம். 

 இந்தப் பக்கம் ஒரு அரசு வருகிற கொஞ்ச நஞ்ச தண்ணிக்கும் உலை வைக்கப் பார்க்குது. அந்தப் பக்கம் தண்ணீர் தரவே மாட்டோம் - ன்னு அடம் பிடிக்குது ஒரு அரசு. ஆனால் இரண்டு பேருக்கும் இங்கேயிருந்து மின்சாரம் வேணுமாம். ஏன்னா நாமெல்லால் ஒரே தேசம். பக்கத்தில இருக்கவுங்க என்ன செய்தாலும் நாம மட்டும் எல்லாருக்கும் அனுசரணையா இருக்கனுமாம். அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கூட மீறலாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் மட்டும் ஏதாவது சொன்னால் நாட்டைப் பிளக்க சதின்னு தமிழ் நாட்டுல இருக்கவந்தான் சொல்றான்.

இப்ப உச்ச நீதி மன்றம் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து விட்டது. எதுக்கு நம்ம தீர்ப்பு குடுத்து - அத அவங்க மதிக்காம போனாலும் நம்ம ஒன்னும் செய்ய முடியாம இருக்கோம். அதுனால இனி தீர்ப்பே வேண்டாம் அப்படின்னு முடிவுக்கு வந்து விட்டது. இப்ப என்னடான்னா உச்ச நீதி மன்றம் - காவிரி நீர்ப் பிரச்னைக்கு இரு மாநில முதல்வர்களும் பேசித்தீர்க்க வேண்டும் என்று  யோசனை தெரிவித்து இருக்கிறதாம். அப்படியே கோர்ட்டுக்கு வர்ற எல்லா கேசுகளுக்கும் யோசனை மட்டும் சொன்னா நல்லா இருக்கும்.


மாண்பு மிகு நாராயண சாமி அவர்கள் "கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒப்பந்தப் படி நான்கு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்று திருவாய் மலர்ந்த்திருக்கிறார். யாரோடோ போட்ட ஒப்பந்தம். எங்க சொல்லிப் போட்டாங்க? இதென்ன கொடுமை சரவணா? எல்லாத் துன்பங்களையும் நம்ம அனுபவிக்கனும், அவர்கள் எதையுமே விட்டுக் கொடுக்காமல் எல்லாத்தையும் பெறனும்னா நல்ல தேசியம் நல்ல ஒற்றுமை.

என்ன செய்றது!

**********
பேசாம விஜய் சாரை மிலிட்டரிலேர்ந்து ஒரு நாற்பது நாள் லீவுல தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி ஏதாவது செய்ய முடியுமான்னு கேக்கலாம். அவர் லீவுல மும்பைக்குப் போனதுனால இந்த விவகாரத்துல நமக்கு என்ன நடக்குதுன்னே தெரியலை.



27.10.12

சூப்பர் சிங்கர் ஜூனியர் த்ரி - ஆஜித் - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நிச்சயமாய் சூப்பர் சிங்கர். இந்த முறை ஜூனியர் என்பதனால் இன்னும் அதிகமான நெருக்கம்.
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலைச் சொல் கேளாதவர் ... 
அற்புதமான குழந்தைகளின் குரல்களில் ஏற்கனவே கேட்ட பாடல்கள் கூட இன்னும் இனிதாகவே இருந்தது.

பைனலில் திரு. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் முன்னிலையில், தம்பி அஜீத் வெற்றி பெற்றது நிச்சயமாய் அவனுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். உண்மையில் வெற்றி பெறுவதற்கான நபர் அவர்தான் என்றே நான் கருதியிருந்தேன். அப்படி இல்லையென்றாலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றே கருதியிருந்தேன். ஏனெனில் டாப் ஐந்தில் வராதவர் பைனலில் வெற்றி பெற்றால் தானே ஒரு கிக்.

என்னதான் குரல்களின் மயக்கம் நம்மை யோசிக்க விடாமல் செய்தாலும் நம்மால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை... விஜய் தொலைக் காட்சி தனது சில்மிஷங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. கடந்த முறை அதிக எஸ் எம் எஸ்கள் பெற்று சாய் வெற்றி பெற்றார் என்று மட்டும்தான் சொன்னது. இந்த முறையும் அதே போல அதிக வாக்கு என்னிக்கையில் இவர் வெற்றி பெற்றார் என்றுதான்  சொன்னார்கள். இந்த முறை வைல்ட் கார்டில் எண்ணிக்கை சொன்னவர்கள் பைனலில் எண்ணிக்கைகளைச் சொல்ல வில்லை.  இருந்தாலும் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை ரிசல்ட் சரியாக இருந்தது போலவே தோன்றியது - இருந்தாலும் சில கேள்விகள் இல்லாமல் இல்லை.

ஏற்கனவே மூன்று இந்து தம்பி தங்கைகள் பைனலில் சேர்ந்து விட்ட பிறகு வைல்ட் கார்டில் இருந்து பைனலில் வர வேண்டியது ஒரு இஸ்லாமிய மற்றும் கிறித்தவ குழந்தை.... அது அப்படியே நடந்தது.  இப்படித்தான் நடக்கும் என்பதை நான் எதிர் பார்த்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடம் அதைப் பற்றி முண்பே சொல்லியிருந்தேன். அது அப்படியே நடந்ததைப் பார்த்த பிறகு ஒன்று  ஜோசியம் சொல்லலாம் அல்லது ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தும் தகுதி எனக்கு இருக்கிறது என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது.   இது போல எத்தனை பேர் பெருமைப் பட்டிருக்கிறிர்களோ, யாருக்குத் தெரியும்? 
வைல்ட் கார்டில் இருந்து பைனலுக்கு வரும் நபர்களுக்கு வாக்குகள் அதிகம் பெற வாய்ப்பு இருக்கிறது. அது நேரடியாக பைனலுக்கு நுழையும் நபர்களுக்கு இல்லை.  காரணம் நிறைய இருக்கின்றது. 

இந்த முறை நிச்சயமாய் சுகன்யாவும் கவுதமும் ஒழுங்காக பாட வில்லை. இருவரின்  வாய்சும்    ஒத்துழைக்க வில்லை என்பது மட்டுமலாமல் பல இடங்களில் சுருதி சேர வில்லை என்பதும் உண்மை. உண்மையிலேயே சுருதி சேரவில்லையா சேர விட வில்லையா என்பது தெரிய வில்லை. மிகவும் கடினமான பாடல்களையே தேர்ந்தெடுக்கும் சுகன்யா இந்த முறை கொஞ்சம் இலகுவான பாடலையே தேர்ந்தெடுத்தது போலவே இருந்தது. சரி ...அப்படியே அவர்கள் மிக நன்றாகப் பாடி இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தோன்றியது...  இது எப்போதும் நடப்பது தானே. அடுத்த முறையில் இருந்து முதலில் நேரடியாக பைனலுக்குத் தேர்ந்தெடுக்கப் படும் நபர் நிச்சயமாய் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே யோசிப்பார் இப்போது சுகன்யா யோசித்துக் கொண்டிருப்பதைப் போல.

வழக்கம் போல திரு மனோ அவர்கள் ஏதாவது சொல்லி அவர்கள் எதையும் கணக்கு பண்ணுவதில்லை என்பதை நமக்குத் தெளிவு படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். 
ஒவ்வொரு முறையும் யாராவது வெளியேற்றப் படும் போது புள்ளி ஐந்து மதிப்பெண்களில் தான் வெளியேறி இருக்கிறார்கள். அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பெற்று யாரும் உள்ளேயும் இல்லை வெளியேவும் போகவில்லை.  அப்படித் தான் திரு மனோ அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த ரவுண்டில் இந்த இடத்தில் சுருதி சேரலை .. உங்கள் இரண்டு பேரில் நீ இதில் சரியில்லை... அதில் சரியில்லை என்று யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. ஆனால் மதிப்பெண்கள் மட்டும் புள்ளி. ஐந்துதான் வித்தியாசம் இருக்கும்.
அது எப்போதுமே பொய் என்பதை அவராக மைக்கைப் புடுங்கி பைனல் மேடையில் பேசி மீண்டும் நிருபித்து விட்டார். அதாவது - அஜூத் மற்றும் பிரகதி இருவரும் அனைத்து நடுவர்களிடமிருந்து ஒரே மதிப்பெண்களைப் பெற்றதாகவும், எஸ். எம். எஸ் களில் மட்டும் புள்ளி ஐந்து மதிப்பெண் கூடப் பெற்று ஆஜித் வெற்றி பெற்றதாகவும் திரு. மனோ சொன்னது தாங்கள் ஏற்கனவே இது போல ஒவ்வொரு வாரக் கடைசியிலும் சொன்னது உண்மையில்லை என்பதை நிருபித்து இருக்கிறார்.

அந்த புள்ளி பாதி எஸ். எம். எஸ் அனுப்புன அந்தப் புண்ணியாவான் யார்ன்னு தெரிந்தா அந்த மாதிரி பாதி எஸ். எம். எஸ். எப்படி அனுப்பு றதுன்னு சொன்னா நல்லா இருக்கும். ஒருவேளை அவரே புள்ளி. ஐந்து எஸ். எம். எஸ். அனுப்புனாரோ என்னவோ.

என்னதான் உள்ளே அரசியல் நடந்தாலும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தைப் பார்க்க மாட்டேன் என்கிற உறுதியை மட்டும் என்னால் வழங்க முடியாது. இசைக்கு மயங்காதவர்கள் யாரவது உண்டா... என்ன?

****************************************************

ஆனால் இந்த முறை இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை ஊமைப் படம் பார்க்க வைத்த பெருமை விஜய் டிவிக்கே சேரும். இதை தெரியாமல் நடந்த பிழையாகக் கருத முடிய வில்லை. 

2.10.12

நம்ம மகாத்மா

ஒரு தொலைக் காட்சியின் காணொளியை எனது வலைப் பதிவில் தருவது இது இரண்டாவது முறை என்று நினைக்கிறேன். முதல் முறை சுப்ரமணிய சுவாமியின் பேட்டிஒன்று. இது இரண்டாவது. காந்தி பிறந்த நாளில் மிகவும் காத்திரமான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது கை கூட வில்லை. இந்தக் கானோளியைக்கண்ட பிறகு எழுதாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது. அடிப்படைச் செய்திகள் கூடத் தெரியாத நமக்கு என்ன மிகப் பெரியக் கட்டுரை தேவை என்று தோன்றியது.

தேசப் பிதா... மகாத்மா பற்றி என்ன தெரிந்திருக்கிறது நமக்கு. நமது கல்வி முறை தேதிகளை நினைவில் வைக்கச் சொல்லிக் கொடுத்தாலும் நமக்கு அது மனதில் பதிவதில்லை. கல்வி முறை பற்றியும் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

பாருங்கள்


namma mahatma di msmorethan143

24.9.12

அன்பின் வன்முறை ....

இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்தக் குரல் உலகம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது குறைவதாய்த் தெரியவில்லை. அநேகமாக இன்னும் அதிகமாகலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த முறையான அடையாளம் இல்லாத ஓர் அமெரிக்க யூதர் இஸ்லாமியர்களின் மீது மிகுந்த வெறியோடு, எந்தவிதமான அடிப்படைத் தரவுகளுமின்றி மிக மோசமான ஒரு குறும் படத்தை இயக்கப் போக உலகமெங்கும் இருக்கிற இஸ்லாமியர்கள் ஒட்டு மொத்தமாக அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். 

லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப் பட்டதாகவும் அவரோடு இணைந்து மேலும் இருவரும், பாகிஸ்தானில் இதுவரை பத்தொன்பது நபர்களும் கொல்லப்  பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் இல்லை - அவர்களும் பாகிஸ்தானியர்கள் என்றே நினைக்கிறேன்.

இதோடு இணைந்து இந்த சமயத்தில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று நபிகளின் கார்ட்டூன் ஒன்று வெளியிட இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. மத சம்மந்தப் பட்ட கோட்பாடுகளில் கைய வைக்கிற யாரும் மிகக் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தீப் பொறி ஒரு காட்டை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்கர்கள் கிறித்தவக் கடவுளைக் கிண்டலித்து பழகிப் போனவர்கள். இப்போது அவர்களின் கோபம் இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. இதை அவர்கள் கருத்துச் சுதந்திரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளப் படாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

உலகின் எல்லா நாடுகளும் ஒருங்கே அமெரிக்காவின் கருத்துச் சுதந்திரம் என்கிற கோட்பாட்டை அவர்கள் பாணியில் யாரும் புரிந்து கொள்ள முடியாது. அப்படி எல்லாரும் அதே விதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டதாகத் தான் அது இருக்கும். 

ஒரு மனிதனின் தவறான கருத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்காக வன்முறை எதிப்பை ஒரு போதும் நியாயப் படுத்த முடியாது.  

அடிப்படையில் எல்லாம் சமயங்களும் 
அன்பைப் போதிப்பவைகளாகவே இருக்கின்றன. 
ஆனால், அதில் இருக்கும் உறுப்பினர்கள்
தாங்கள் போதிக்கும் அன்பே உயர்ந்தது என்று சண்டையிடப் போய் 
அவர்கள் அனைவரும் 
தாங்கள் போதிக்கும் அன்பிற்கு எதிரானவர்களாகவே ஆகி விடுகின்றனர். ஆனால் இதை அவர்கள் உணராமல் இருப்பதுதான் 
பிரச்சனையின்  ஆணிவேரே.

கொசுறு:

இன்னொசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் - முழு ஸ்கிரிப்ட் - சொடுக்கவும்.



26.8.12

... நட்பன்று ... முகநூல் நட்பே நட்பு


கணினி [கம்ப்யூட்டர்] ஒருவர் இருவர் என்று இன்று எல்லார் கையிலும் வந்துவிட்டது. அதன் சிறு வடிவமான தொலைபேசியிலும் அதன் தொழில் நுட்பம் பகிரப்பட அது இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகி விட்டது. இணையமும் அதனோடு சேர்ந்து விட  இந்த சோசியல் நெட்வொர்க்குகள் எல்லா இடங்களிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.   

தொழில் நுட்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. இந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் அபரிமிதமானது மட்டுமல்ல மாறாக மிகவும் வேகமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.  

நண்பர்களோடு பேசலாம், பழகலாம் என்று சமூகத் தளங்களில் இணைய முடிவெடுப்பதற்குள் புதிய புதிய சமூகத்தளங்கள்.  
எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்க யு டியூபுக்கு சென்று பார்த்து பயன்படுத்த முயல்வதற்குள் அடுத்த வசதி என்று போய்க் கொண்டே இருக்கிறோம். 
இந்தக் களோபாரத்தில் நண்பர்களிடம் பேசுவது கூட மறந்து போய் விடுகிறது. 

இப்ப நான் வெறும் முக நூல் மாட்டருக்கே வந்தர்றேன்.

இந்த முக நூல் புத்தகம் இருக்கிறதே இதனை நானும் இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இடையில் கொஞ்சம் தளர்ந்து போனேன். இருந்தாலும் இந்தத் தளம் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கிறது என்பதை எழுதாமல் இருக்க முடியவில்லை. என்னை யாருன்னே  தெரியாதவர்கள் கூட எனக்கு நண்பர்கள். 
எவ்வளவு விரைவாக அன்யோன்யமாகிப் போகிறோம். எவ்வளவு நெருக்கமாகிறார்கள். ஒரு நண்பரை உருவாக்கிக் கொள்வது அப்படி ஒன்றும் கடினம் இல்லை. 
எவ்வளவு புதிய புதிய நண்பர்கள் எனக்கும் அவர்களுக்கும். நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள். 
முல்லா நாசருதீன் கதையில் வரும் - சூப் ஆப் தி சூப் ஆப் த சூப் ஆப் த --- போல நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களுக்கு எல்லாம் அறிமுகமாகி இருக்கிறேன். ஹன்சிஹா போட்டோ போட்டதினாலே நான் நண்பராகிறேன் அவரும் உடனே என்னை நண்பராகச் சேர்த்துக் கொள்கிறார். 
அனுஷ்கா புடிக்குமா அதுனால அந்த போட்டோவைப் பாத்துட்டு அதை எழுதுறது ஆனா பொண்ணான்னு கூடத் தெரியாம நண்பராகி விட்ட சந்தோஷத்துல திளைக்கிறேன். அவர்களிடம் சாட் செய்கிறேன், லைக் பண்றேன். ஷேர் பண்றேன்... 
ஆனா கொடுமை சார் - அப்பா அம்மாகிட்ட பேச நேரம் இல்லை.

என் ஸ்டேட்டசை நாலு பேரு லைக் பண்ணா அதுவும் சந்தோஷமா இருக்கு. திரையைப் பார்த்து பார்த்து குடும்ப உறுப்பினர்களைக் கூட நேராப் பாக்கிறத விட இப்பல்லாம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல பார்க்குறதுதான் புடிக்குது. 

அதனால என்ன ஆச்சுன்னா தெரிஞ்ச ஆட்களை விட, எனக்குத் தெரியாத ஆட்களோட பழகுறதுல ஒரு சுகம் கண்டு போனேன். எந்தவித கமிட்மெண்டும் இல்ல பாருங்க. அவன் கஷ்டத்துல பங்கு பெற வேண்டிய அவசியம் இல்லை. என் கஷ்டத்துல 'ஐ ஆம் சாரி' அப்படிங்குற பதிலோட என் நண்பர்களின் கமிட்மென்ட் முடிஞ்சு போகுது. அதுவும் சந்தோஷமாத் தான் தெரியுது.

தன் அண்ணன் பொண்ணு இறந்து விட்டாள் என்று என் நண்பர்  போட்டோ போஸ்ட் பண்ணதை நாலு பேரு லைக் பண்றான் சார்.
எத லைக் பண்றதுன்னே விவஸ்தை இல்லாமல் போச்சு. அவ்வளுவு பிஸியாமா! ... அதனால ரெண்டு வார்த்தை கூட எழுத முடியாம போச்சு -
அதுக்காக அதை டிஸ்லைக் பண்ணலாமான்னு  ஒரு குரல் கேக்குது  - நான் என்ன சொல்றது?

முகமே தெரியாத யாரோ ஒருவருடைய சுவற்றிலேயோ [wall] ஆணியில் அடித்ததை அவர் பகிர்ந்து [share] கொள்ள, நான் அதை விரும்பி [like], என் சுவற்றில் ஒட்டிவிட [post] அதை எனது நண்பர்கள், சில சமயம் நண்பர்களின் நண்பர்கள் என்று எல்லாரும் மீண்டும் லைக், ஷேர், போஸ்ட், லிங்க், சஜ்ஜஸ்ட் என்று மீண்டும் அடுத்த ரவுண்டு நமது சுவற்றிற்கே வந்து விடுகிறது.
உலகம் எவ்வளவு சின்ன உருண்டை. முருகன் சுற்றி வருகிற நேரம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. சில சமயம் ஆணை முகத்தான் சுற்றி வரும் நேரத்திற்குள் வந்து விடுகிறது.

இப்ப ஒரு நாளைக்கு இணைய இணைப்பு கிடைக்க வில்லை என்றால் தூங்க முடியலை, சாப்பிட முடியலை.
என் நாலு விட்ட நண்பர் சுவற்றில் என்ன லைக் பண்ணி, ஷேர் பண்ணினார்னு ஒரே யோசனையா இருக்கு!
அனுஷ்கா பொண்ணு தூங்கப் போனுச்சா - அதனோட ஸ்டேடஸ் என்னன்னு தவிக்க விடுது. அதனோட ஸ்டேடசை 650 ஆவதா ஆளா  நான் லைக் பண்ணலைன்னா அது தூங்கப் போகுமா போகதாங்கிற கவலை அதுக்கு மேல வாட்டுது.
என் அப்பா மருத்துவ மனையில் இருந்தப்ப கூட இப்படி எல்லாம் மனசு தவிக்கலைங்க. இப்ப இந்தத் தவிப்பு மனுஷனைக் கிறுக்குப் பிடிக்க வைக்குது.

மக்களே! இப்ப கொஞ்ச நாள்லயே தல சுத்துதே... அதுலேயே இருக்குற நண்பர்களுக்கு...  ஒரு நாள் முக நூல் புத்தகம் காலியானா எப்படி இருக்கும்னு நினைச்சாலே எனக்கு ஒரே திகிலா இருக்கு....

ஆனா கொடுமையைப் பாருங்க சார் இதைக் கூட நான் முக நூலில் ஷேர் பண்ண வேண்டிய சூழ்நிலைக் கதியாகிப் போனேன். 

கொசுறு:
நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களே,
நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களே  -
இந்தப் பதிவென்னமோ சீரியஸா எழுதத் தொடங்கியதுதான்.
பாதியிலேயே  ஜாலியா மாறிப் போச்சு. 
சரி  எழுதுனதுதான் எழுதினோம்
காத்திரமும் பகடியும் சேர்ந்து செய்த ஒரு கலவைப் பின் நவீனக் கட்டுரையாக
இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இனி நீங்க --- ஒழுங்காப் பயன்படுத்தணும்... சரியாப் பயன்படுத்தணும். குறிப்பறிந்து நடக்கணும். 
இது ஆல்கஹால் மாதிரி அளவாய்ப் பயன்படுத்தணும் 
என்பது போல நல்ல யோசனைகள் இருந்தால் 
தயவு செய்து காமென்ட் போடுங்க.
வேற யாருக்கும் இல்லாட்டியும் நிச்சயம் எனக்காவது பயன்படும். 

ஒருத்தனின் கிறுக்கை  சரிசெஞ்ச புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.

காமென்ட் போடவெல்லாம்  நேரம் இல்லைன்னா
ஒரு  லைக் பண்ணுங்க ...
இல்லாட்டி   ஷேர்  பண்ணுங்க ...
எனக்காக  இல்லாட்டாலும்
இந்த அனுஷ்கா,  ஹன்சிகாவுக்காகவாவது ...




முக நக நட்பது நட்பன்று
முகநூல் நட்பே நட்பு.
அப்பு 



23.8.12

தமிழ் படிக்க தெரியுமா? - இதனைப் படிங்க




உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ.

ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை.

முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.

பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம்,   நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்! 


***********************************


குறிப்பு: 

இதற்கும் எனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை. என் நண்பர் அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதை அப்படியே பதிவிட்டிருக்கிறேன். ஒரிஜினல் ஆசிரியர் யார் என்று தெரியாது. இதற்கு முன்பு இதே ஆங்கிலத்தில் வந்தது. ஆங்கிலத்திற்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பதால் அதை அப்போது விட்டு விட்டேன்.


15.8.12

சுதந்திர இந்தியா - காணொளி



இந்திய சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களை சொல்லும் இவ்வேளையில், சில வருடங்களுக்கு முன்பு பார்க்க நேர்ந்த ஒரு வீடியோவை உங்களோடு மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 இந்த வீடியோ மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இத்தாலி நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லும் வீடியோ. ஆனால் சுதந்திர இந்தியாவின் அத்தனை செயல்பாடுகளையும் இதில் காண முடியும். ஒருவேளை இந்தியா இன்னும் அதிகமாக முதலாளித் துவத்தில் ஊறி வளர்ந்தாலும் இப்படித் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த காணொளியின் இணைப்பு மின்னஞ்சல் வழியாகப் பெறப் பட்ட  போது நண்பர்கள் சிலர் ஒரு தலைப்புக் கொடுத்தார்கள் -
ஏன் சோனியா காந்தி இந்தியாவை நேசிக்கிறார்?  மிகச் சரியான தலைப்பு. 

இந்தியா சுதந்திர இந்தியா

வீடியோவில் - இத்தாலி என்பதை இந்தியா என்று
வாசியுங்கள் -

கொடி ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.

 சுதந்திர தின வாழ்த்துக்கள்.





கொசுறு :

இது ஏற்கனவே பகிரப்பட்ட காணொளி - ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் பார்த்தாலும் மிகவும் மகீழ்வீர்கள்.  

14.8.12

ஒலிம்பிக்கில் இந்தியா முதலிடம்...



கேட்பதற்கு பிதற்றல் போல இருந்தாலும் இது உண்மைதான். மொத்தம் எழுபத்தி ஒன்பது நாடுகள் பதக்கங்கள் வாங்கியிருக்கின்றன... அதில் எல்லா பட்டியல்களிலும், அமேரிக்கா தான் முதலிடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகின்றன அப்புறம் எப்படி இந்தியா என்று நீங்கள் யோசிப்பீர்கள். நான் சொல்லுவது உண்மைதான்.

எல்லாரும் சொல்லும் பட்டியலில் இந்தியா ஐம்பத்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தங்கம் பெறாதவர்கள் பட்டியல் என்று ஒன்று உண்டு... 
இந்தப் பட்டியலில் இந்தியாதான் முதலிடம். அதாவது இரண்டு வெள்ளி மற்றும் நன்கு வெண்கலம் பெற்று மொத்தம் ஆறு பதக்கங்கள் பெற்று தங்கப் பதக்கங்கள் பெறாதவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

என்னதான் இந்திய அரசு பற்றிய விமர்சனத்தை முன்வைத்தாலும், இந்தியா முதலிடம் என்று சொல்லும் போது அந்த நாட்டின் குடிமகன் என்ற முறையி பெருமையாகத்தானே இருக்கிறது. அதற்காகத்தான் இந்த மாத்தி யோசி..... உங்களுக்கும் பெருமையா இருக்கா???


11.8.12

டெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்


டெசோ மாநாடு பற்றி எல்லாரும் எழுதி எழுதி கிழித்து எரிந்து விட்டார்கள். கலைஞர் மட்டும் வலைப்பூக்களைப் படிப்பவராக இருந்தால், எழுதியிருப்பதை படித்து இருந்தால் அவர்மேலே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும். நிறையப் படிப்பவர் அவர். அதனால் பத்திரிகைகளில் வந்திருப்பதைப் பார்த்தும் அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் கூட கொஞ்சமாவது மாற்றம் தெரிந்திருக்கும். அதற்கெல்லாம் அசருபவர் அல்ல. சரி இது கலைஞர் பற்றிய கட்டுரை அல்ல.  அதுமட்டுமல்லாமல் டெசோ மாநாடு நடத்தும் அருகதை, கலைஞருக்கோ அல்லது வேறு யாருக்கோ இங்கே இருக்கிறதா என்பதைப் பற்றியும் நான் எழுதப் போவதில்லை.

ஆனால் டெசோ மாநாடு நடத்துவதற்கான எதிர்ப்பு ஆள்பவர்களிடமிருந்து வருவதைக் கண்டுதான் எழுதவேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.

டெசோ மாநாட்டை புறக்கணிப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அது இதுவரை அவரை நம்பிக் கேட்டோம் என்பது தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே இதை மறுப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. 

ஆனால் அனுமதி மறுப்பதற்கான உரிமை அரசிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அரசு சொல்லுமேயானால், அது எந்த அளவுக்கு இலங்கையின் மீது அனுசரணையோடு இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று நாராயண சுவாமி சொல்லியிருக்கிறார். கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுவதற்கு இதுவே மேல்தான். ஆனால் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த இலங்கைக்கு கைகட்டும் காங்கிரஸ் அங்கே சீனா வந்து ஆட்டம் போட்ட பிறகுதான் ஆஹா சூடு வைத்துக் கொண்டேமே என்று யோசிக்கும்.

எல்.டி. டி. யை ஆதரிப்பது குற்றம் என்றும் சொன்ன போதும் கூட எல்.டி.டி. ஐ ஆதரித்துப் பேசக்கூடாது என்றுதான் அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது அந்த வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது புரிகிறது.  கலைஞர் வேடதாரி என்பது எல்லாருக்கும் தெரியுமானால், எதற்கு இந்த அரசாங்கங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு இதை எதிர்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசு அங்கே பங்கேற்கும் நபர்களை தான் தனியாக கவனிப்பேன் என்கிறது. சிலருக்கு அங்கிருக்கிற இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுக்கிறது. இந்திய அரசு 'ஈழம்' என்பதை பயன்படுத்தக் கூடாது என்கிறது. தமிழக அரசு சென்னையில் இதை நடத்தக் கூடாது என்கிறது. 

ஆகமொத்தம் காரணம் ஒன்றுதான்: ஈழம் பற்றிப் பேசினால் அதன் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதில் நாம் கலைஞரை விமர்சிக்கிறோம் என்று இந்த மாநாட்டின் எதிர்ப்பில் -  "ஈழம்" மீது நமக்கு இருக்கும் வேட்கையை குறைத்து விடவும்,இனி யாருமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையயைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேறு யாரும் கூட ஈழ மாநாடு என்கிற ஒன்றை நடத்த முடியாது. உண்மையான ஈழ ஆதரவாளர்கள் கூட. 

அரசியல்வாதிகளில் பச்சோந்திகள் தவிர வேறு யாரும் இல்லை. இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா? ஒவ்வொருவருக்கும் வயதுதான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாகூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனால் அவர்கள் ஈழ ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அம்மாவைப் பாராட்டி ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, பாராட்டி, .... கொஞ்ச நாளிலேயே அம்மா எல்லாருக்கும் ஆப்பு வைத்தார்கள். அதே அம்மா புரானிகள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள். 

கலைஞர் மாநாடு நடத்த வேண்டும் என்றோ, கூடாது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இதுதான். 

சுதந்திர நாட்டில் ஒருவன் தான் விரும்பிகிற, நம்புகிற கொள்கையை வெளிப்படுத்துவதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை மறுப்பவர்கள் அரக்கர்கள் - அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் கூட.

இந்தக் கருத்துச் சுதந்திரம் மிதிக்கப் படும் நேரத்தில் அது கலைஞருக்கு எதிரானது என்று நாம் மகிழும் வேளையில், மிதிக்கும் கால்கள் நமது தலையின் மேல் இருப்பதை கவனிக்க மறக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத இந்த இந்தியா நாடு விரைவில் 
சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறது. 

10.8.12

அன்னா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்



அன்னா பற்றிய தொடர் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலெழுந்த வாரியாக படிக்கிற செய்திகள் நம்மையும் உள்ளே இழுக்கின்றன. ஆனால் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தின் கட்டமைவு பற்றிய சில கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. 
ஏன் அன்னாவை எதிர்க்கும் அருந்ததிராயைக் குறி வைக்கிறார்கள் ஆனால் சோ - வை விட்டு விடுகிறார்கள்?

  • ஆதரவாளர்கள்    


அன்னா ஆதரவாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் [இன்னும் நுணுக்கமாகப் போனால் இன்னும் நிறைய என்றுதான் நான் கருதுகிறேன்]. 

முதல் வகையில் குரல் கொடுப்பவர்கள் அன்னாவோடு ஒட்டி நின்று ஊழல் ஒழிய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள். அதனால் அன்னா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுகிறவர்கள். அதனாலேயே அவர் முற்றிலுமாகக் காந்தியவாதி என்பதை என்பிப்பதற்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பின்பற்றுபவர்கள். இதில் சிலர் அறிவு ஜீவிகள். பெரும்பான்மையானவர்கள் சாதாரண மக்கள், மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள்.
 
ஆதரவாளர்களில் மற்றொரு வகை ஊழலுக்கு எதிர்ப்பு என்பது சரியானதுதான்; அன்னாவைப் பின்பற்றுவது அவசியம்தான் என்பதோடு, அதிலும் உள்ள சிக்கல்கள் களையப்படவேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் ஊழல் என்பது மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனை அல்ல; மாறாக அதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். பிரச்சனை என்னவென்றால் தள்ளி நின்று அண்ணாவை ஆதரிக்கும் இந்த வகை ஆதரவாளர்களையும் அன்னா எதிர்ப்பாளர்களாகவே முதல் வகை ஆதரவாளர்கள் கருதுவதுதான். 

  • எதிர்ப்பாளர்கள் 

ஏன் இந்தச் சிக்கல்? இதைப் புரிந்து கொள்ள அன்னா எதிர்ப்பாளர்களையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கொள்கை பிடிக்காததால் அன்னாவை எதிர்ப்பவர்கள் முதல் வகை. அவர் காங்கிரசின் கைக்கூலியோ என்பதனால் பிடிக்காமல் போனவர்கள் இரண்டாம் வகை. 

முதல் வகையில், அருந்ததிராய், அருணா ராய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகை வெறுப்பாளர்கள் வரிசையில் ‘சோ’ போன்றவரைச் சொல்லலாம். குஜராத் முதல்வரைப் பற்றித் தவறாகச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை இவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றே கருதுகிறேன். 

இதில் முதல் வகை எதிர்ப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவர்கள் - மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதேபோல இரண்டாம் வகை வெறுப்பாளர்கள் இன்னும் அதிகமாகவே கவனிக்கப் பட வேண்டியவர்கள். அண்ணாவோடு ஒட்டி நிற்கும் ஆதரவாளர்கள் தள்ளி நிற்பவர்களையும் எதிர்த்து நிற்பவர்களை மட்டுமே கவனித்து இந்த இரண்டாம் வகை வெறுப்பாளர்களை /எதிர்ப்பாளர்களைப் பற்றி அதிக அக்கறையோ அல்லது அவர்களை பெரிய எதிரியாகப் பார்ப்பதை விடுத்து அருந்ததிராயை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். இதில் எந்த வித சிக்கலுமின்றி ‘சோ’ வகையறாக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் [அல்லது தப்பிக்க ஆதரவாளர் அறிவு ஜீவிகள் உதவுகிறார்களா?]. 

அருந்ததி ராய் கேட்கிற கேள்விகள் நியாயமானவை என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மனமின்றி அன்னாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது சுதந்திரப் போர் என்பது இந்தியாவிற்குள் நடக்கும் முதல் சுதந்திரப் போர்தான் – அது அரசியல் வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா அல்லது சாதிய / இந்துத்துவத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா என்பதிலும், அல்லது பழங்குடியினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லாமல் இவர்களை அன்னாவின் மீதும் காந்தியத்தின் மீதும் அவதூறு செய்வதாக அவதூறு செய்கிறார்கள் முதல் வகை ஆதரவாளர்கள். இந்தச் சிக்கலில் அன்னா ஆதரவாளர்களில் இரண்டாவது வகையாளர்கள் அருந்ததிராயின் கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளையும் சிக்கல்களையும் முன்னிறுத்துவதனால், அன்னா ஆதரவாளர்களில் இரண்டாம் வகையும் அன்னாவின் எதிரிகளாகக் கட்டமைக்கப் படுகிறார்கள்.

இதில்தான் அன்னா ஆதரவாள அறிவுஜீவிகள், இரண்டாம்வகை ஆதரவாளர்கள் மீதும், முதல் வகை எதிர்ப்பாளர்கள் மீதும் வெறியோடு இருக்கும் சூழலில் ‘சோ’ போன்றவர்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். 

  • வேண்டுகோள் 


எனவே அன்னாவை கொள்கையளவில் எதிர்க்கும் அருந்ததிராய் போன்றோரை கொடூரமானவராக சித்தரித்து, இந்துத்துவக் கொள்கை வெறியில் எதிர்க்கும் ‘சோ’ வை எந்த விதச் சிக்கலுமின்றி தப்பிக்க உதவும் முதல் வகை ஆதரவாளர்களே கொஞ்சம் விழித்தெழுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். 

இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த அறிவு ஜீவிகள் ஏற்கனவே விழித்து எழுந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. முதல்வகை அன்னா ஆதரவாளர்களும், இந்தியா இந்து என்கிற போர்வையில் மீண்டும் சாதியக் கட்டுமான மேலாதிக்கத்தை விதைக்க இந்த ஊழல் போராட்டத்தை ஆதரித்து சோ எதிர்ப்பின் வழியாய்ச் சாதிக்க நினைப்பதை இவர்கள் ஆதரவின் வழியாய்ச் சாதிக்க நினைக்கிறார்களோ என்றும் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இருந்தாலும், இதில் சாதாரண மக்கள், பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த முகாந்திரம் களைந்து போகிறது. ஆனால் அறிவு ஜீவிகளின் அந்தக் கட்டமைவில்தான் இந்தச் சந்தேகம் வலுக்கிறது.


8.8.12

ஒலிம்பிக் - ஐந்து வளையங்கள்

௦ ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நாடாகவும் அதல பாதாளத்தில் இருக்கிற நாடு கிரீஸ்: ஏறக்குறைய கடைசியில் இருக்கிற அந்த நாடு ஒலிம்பிக் தொடக்க விழாவில் [எல்லா ஒலிம்பிக்குகளிலும்] முதலாவது வந்து தொடங்கி பொருளாதார பாதாளத்திற்கு பாலன்ஸ் செய்கிறார்கள்... ஏனெனில் முதலில் வருவது பெருமை.  

௦ ஒலிம்பிக் விழாவில் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய விடயம் - ஐ. நா. வின் பட்டியலில் இடம்பெறாத நாடுகளைக் கூட ஒலிம்பிக் ஏற்றுக்கொண்டிருப்பது  மிகவும் பாராட்டப் படவேண்டியது.  பாலஸ்தீனம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டப் பட வேண்டியதுதானே. ஈழம் சகோதர சகோதரிகள் - முன்னமேயேஒலிம்பிக் விழாவில் பங்கேற்று இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசிலிருந்து ஈழ  சகோதரர்கள் இப்போது கூட முயற்சி செய்யலாமே என்றும் தோன்றுகிறது. ஒருவேளை அதற்கான முதல் அங்கீகாரம் ஒலிம்பிக்கில் கூட கிடைக்கலாம்.

௦ இந்த ஒலிம்பிக் இன்னொரு விதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வரை நடந்து முடிந்த எந்த ஒலிம்பிக்கிற்கும் இல்லாத சிறப்பு இந்த ஒலிம்பிற்கு கிடைத்திருக்கிறது. பங்கேற்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் பெண் வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு... எல்லா நாடுகளிலும் பெண்கள் பங்கேற்பதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதில் இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் பெருமை - வீரர்கள் பட்டியலிலேயே இல்லாத பெண் கூட வீரர்கள் அணிவகுப்பில் வரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது...

௦  லண்டன் தொடக்க விழாவில் எப்படி இயற்கையோடு இருந்த நிலையிலிருந்து, தொடர்ந்து கருவிகள், ஆலைகள், தொழில் நுட்ப வளர்ச்சி என்று மிக அட்டகாசமாக காண்பித்தார்கள். தங்கள் நாடு பிடிக்கிற ஆசையில் உலகம் முழுவதும் சென்று வெறித்தனமாக நிறைவேற்றிய அராஜகங்கள் மட்டும் மிஸ்ஸிங்... ஐ திங் தட் திஸ் அம்னீசியா டிசர்வ்ஸ் ய கோல்ட் மெடல்!


௦ தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பில் முதலில் கிரேக்கம் வருவது போல கடைசியில் ஒலிம்பிக்கை நடாத்தும் நாடு வருவது பெருமைக்குரிய விஷயமாம். எனக்குள்ள சந்தேகம் - முதலில் வருவது பெருமையா  கடைசியில் வருவது பெருமையா? இரண்டும் என்றால் - இந்தியா பதக்கப் பட்டியலில் கடைசியில் வரும் என்று நினைத்திருந்தேன். அந்த பெருமை கை நழுவிப் போனதில் எனக்கு மிக வருத்தமாகவே இருக்கிறது. 





30.7.12

பேசும்படம்

 சில சமயங்களில் படங்கள் நமது எழுத்தை விட அதிகமாக பேசும்...

முதல் படம் நேற்று டோக்கியோவில் அணு உலைகளுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்..




விபரம்: http://kgmi.com

இந்த கூட்டம் அங்கேயே பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது.

மேலும் விபரம்:
http://www.dianuke.org/



விபரம்:

http://www.theaustralian.com.au/

26.7.12

மக்கள் கார்...

 ஹிட்லர் பல விஷயங்களுக்காக அடிக்கடிப் பேசப் படுகிற நபர். சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு மிகக் குறைந்த விலையில், "மக்களுக்கான வாகனம்" தயாரிப்பதில் மிக மும்முரமாக முப்பதுகளில் இறங்கினார். 


"போல்க்ஸ்  வாகன்" என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இது "நானோ" ப்ராஜெக்ட் மாதிரி - ஆனால் வேறு மாதிரி... அப்போது ஏறக்குறைய வெறும் இருநூற்றி ஐம்பது அமெரிக்க டாலர்களுக்குள் மக்கள் வாங்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாம். "போல்க்" [volk] என்றால் சாதாரண குடிமகன் [folk] என்று பொருள்.   

விஷயம் என்னவென்றால், அதற்கு முன்பாகவே ஹிட்லர், தனது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மக்குளுக்கான வேலை வாய்ப்பைப் பெருக்கவும், நகரங்களை இணைக்கவும், நெடுந்தூர 'இருபுற' நால் வழிச் சாலைகள் அமைப்பதில் மிகப் பெரிய ஆர்வம் காட்டினார்.  

"வோல்ப்ஸ்புர்க்"  என்கிற இடத்தில் வோல்க்ஸ் வாகனின் தலைமை நிறுவனம் இருக்கிறது. மிகப் பெரிய நிறுவனம். வெளியில் இருந்து பார்த்தேன். அந்த நிறுவனத்தினுள் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆசையை, "ஹனோவர் " வோல்க்ஸ் வாகனின் நிறுவனத்திற்குள் சென்று பார்க்கும் வாய்ப்பில் சரிக்கட்டிக் கொண்டேன். ஏறக்குறைய 'நான்கு' கிலோ மீட்டர்கள் நடந்து பார்த்தோம். உள்ளே புகைப் படங்கள் எதுவும் எடுக்க கூடாது என்பதனால் எதுவும் முடிய வில்லை.

எல்லாமே ரோபோ இயந்திரங்களால் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாற்றப்படுகின்றன. கடைசி கட்ட வேலைகளை மட்டும் மனிதர்கள் செய்கிறார்கள். அதைப் பற்றிய விவரத்திற்காக - ஒரு வீடியோ.


"ஹானோவரில்" மட்டும் இப்போது ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் ஆட்கள் வேலை செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இது இருபத்திஎட்டாயிரம் என்று சொன்னார்கள். இயந்திரங்கள் வந்து மனிதர்களின் வேலையைப் பறித்துக் கொண்டது. இங்கே 'டிரான்ஸ் போர்ட்டர்' வகைக் கார்களை மட்டும் உற்பத்தி செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 'எழுநூறு' கார்கள் உற்பத்தி செய்யப் படுகின்றனவாம். ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய இருபத்தி ஒன்ராயிரம்......

'வோல்க்ஸ் வாகன்' மிக முக்கியமான நிறுவனம். நிறைய ஜெர்மானியர்கள் அதைத் தான் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளை விட விலை குறைவுதான்........ ஆனால் தரமானவை.........

இந்தியாவிலும் மக்கள் கார்கள் வந்துவிட்டன... 
ஆனால், தரம், சாலைகள், சாலை விதிகள் இவைகள்தான் இன்னும்  இல்லை.... 

6.7.12

ஏட்டிக்குப் போட்டி

 கடந்த ஆறு நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்ப படையினரின் அட்டகாசங்களை எதிர்த்தும், மீன்களுக்கான விலையை நிர்ணயம் செய்யக் கோரியும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், மதுரை கொழும்பு இடையே விமானப் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிப்புச் செய்யப் பட்டதற்கு வணிகர்கள் வரவேற்பும் பாராட்டும் செய்திருக்கின்றனர்.

18.6.12

குப்பை அள்ளேல்


சென்னையின் அக்கினி பிரவேசம் முடிந்து - பள்ளிக்கரனை புகை மண்டலப் பிரவேசம் அதிகமானதில் சென்னை முழுவதும் குப்பைக் கூளங்கள் எல்லா வீதிகளிலும் இருக்க அது மிகப் பெரிய பிரச்சனையாகிப் போனது. 

இந்த எப்.எம் ரேடியோக்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த குப்பைக் கூளங்களுக்கு யார் காரணம் என்று மாத்தி மாத்தி கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க. அதுல நிறையப் பேரு காரணம் நாமதான் - எல்லாரும் பொறுப்பில்லாம ரோட்டில குப்பை போடுறோம். சின்னப் பிள்ளைகளை  பொறுப்பா வளக்கிறது இல்லை. நமக்கு சிவிக் சென்ஸ் இல்லைங்கிற ரேஞ்சுங்குப் பேசுறாங்க.

சிவிக் சென்ஸ் உள்ள ஐயாக்களே, நடு ரோட்டில குப்பை கிடந்தா சரி.. இந்த நாட்களில் குப்பை கிடப்பது குப்பைத் தொட்டிகளில் . அவைகள் நிரம்பி அதில் போடுவதற்கு இடமில்லாமல் அதன் அருகில் வைத்த குப்பைகள் தான் மலை போல் குவிந்து இருந்தன. அதில் உணவுப் பண்டங்கள் மக்கி புதிய உயிரினங்கள் உருவாகி எவலூஷன் சரி என்று வாதித்துக் கொண்டிருந்தன... நாற்றம் மக்களை அந்தப் பாதையில் கூட அனுமதிக்க வில்லை. 

புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்காக முப்பத்தி இரண்டு அமைச்சர்கள் தான் சென்னையைக் காலி பணிவிட்டதாகக் கேள்வி. அதென்ன முனிசிப் பாலிட்டி ஊழியர்களும் புதுக்கோட்டைக்குச் சென்று விட்டார்களா?

இப்ப நமது மக்கள் எல்லாரும் அரசை விட்டுவிட்டு நம்மை நாமே குறை சொல்ல ஆரம்பித்து விட்டோம்.  அரசில் உள்ளவர்கள் என்னதான் செய்கிறார்கள் ?

வாரத்துல மூணு நாலு நம்ம ப்ரைம் மினிஸ்டர் "பண வீக்கம்" மிகுந்த கவலை அளிக்கிறது அப்படின்னு சொல்றார். இதை நம்ம சொன்னா சரி பதிவில இருந்துகிட்டு அவர் சொல்லலாமா ? ஒருவேளை பண வீக்கம் நமக்கு சிவிக் சென்ஸ் இல்லாததால்தான்  பணத்தின் மதிப்புக் குறையுதோ?

--- புதுக்கோட்டையிலிருந்து ஊழியர்கள் திரும்பி வந்து விட்டார்கள் போல! சிலை சாலைகள் மிளிர்கின்றன ---

நண்பர்களே ...
 வந்துட்டேன்! வந்துட்டேன்! வந்துட்டேன்! 
இன்னும் இரண்டு மாதங்களுக்கு கொஞ்சம்  நேரம் கிடைக்கும் என்று கருதுகிறேன். 
நல்லா இருக்கிங்களா?


 

21.2.12

மாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு


மாயன் காலண்டர்
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது.

மாயன் காலண்டறென்ன மாயன் காலண்டர்
நம் பெரம்பலூர் சாமியார் வேறு சொல்லியிருக்கிறார்
இந்த ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று...
முழுதும் அழியா விட்டாலும் முக்கால்வாசியாவது அழுந்து விடும் அப்படியே இல்லையென்றாலும் அரைவாசியாவது அழிந்து விடும் என்கிறார்கள்.

அறிவியல் வயப்பட்டு இன்றைய அறிவியல் அறிஞர்கள் சொல்லுவது மட்டுமே சரி என்று வாதிட்டுக் கொண்டிருக்கிற மேற்குலக நாடுகளின் அறிஞர்கள், பழங்கால மக்களின் ஞானம், நம்பிக்கைகள், அவர்களது விஞ்ஞான அறிவை மூட நம்பிக்கை என்று சொல்லும் இந்த மேற்குலக வாதிகள் இந்தக் காலண்டரின் குறிப்பில் ஆழ்ந்து இருப்பது - அது நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை.

என்னதான் நம்பிக்கை இல்லை என்றாலும் சில விஷயங்கள் நம்மை மீறி நம் மனதுக்குள் சென்று விடுகின்றன.
பகுத்தறிவு பேசினாலும் மஞ்சள் துண்டு தேவைப்படுவது மாதிரி..
திராவிடக் கட்சியின் தலைவி என்றாலும் சோவின் தயவில் இருப்பது மாதிரி...
சில விஷயங்கள் நம்மை அறியாமலே உள்ளே சென்று விடுகின்றன..
மாயன் காலண்டர்  மீதான நம்பிக்கையும்தான்..
அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருப்பதனால்... உலகம் அழிவதைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கி விட்டார்களா என்ன? இல்லை.
ஒருவர் படமெடுத்தார்... நல்ல வரவு... அவருக்கென்ன...
...
மனிதர்கள் எப்போது உலகில் வாழத் தொடங்கினார்களோ 
அப்போதே உலகம் முடியத் தொடங்கி விட்டது.
ஒருவன் கண்ணை மூடும் போது உலகம் முடிந்து போகிறது. 
அவ்வளவுதான். அதில் மேற்கொண்டு விவாதிக்க ஏதுமில்லை.
என்று நான் முடிகிறேனோ அன்றே உலகம் முடியத் தான் போகிறது.
மாயன் என்ன மாயாண்டி என்ன...
என் உயிர் பிரியும் நேரம் நான் உலகைப் பிரியும் நேரம்
அல்லது
உலகம் என்னைப்பிரியும் நேரம்.

உலகம் முடிவதும் தொடர்வதும் அதன் கையில்...
அதைக் காப்பாற்ற நாம் தேவையில்லை.
அதற்காக நாம் அதை அழிக்கத் தேவையில்லை.
எனக்கான உலகம் என்னோடு முடிகிறதென்பதால்
இந்த உலகை என்னோடு முடிக்க வேண்டிய அவசியமில்லை.
அணு உலைகள் அதை அவசரமாய் அழிக்கும்.
அணுகுண்டுகள் அழிக்கும்,
எப்போதும் இந்த உலகம் இருக்காதேன்பதற்காய்
விரைவாய் அழிக்க வேண்டுமா.


எல்லா நாட்களும் நல்ல நாட்களே.
எல்லா வருடங்களும் நல்ல வருடங்களே.
நல்லவைகளும் தீயவைகளும்
மனிதர் நம் கையிலே.


மாய உலகம்
"என்ன ராஜேஷ் ஏன் இந்த முடிவு? வாருங்கள்...  மீண்டும் ... விரைவில் ..." என்று மாய உலகம் ராஜேஷின் பின்னூட்டத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பின்னூட்டம் இட்டேன். ஆனால் நண்பர் மீண்டு இங்கு வரமுடியாத தூரம் சென்றதாக அறிந்த செய்தி மனதை காயப்படுத்தியது. அவரது இறுதிப் பதிவின் பாடல்கள் எல்லாம் மாய உலகத்தை நினைவுபடுத்துவதாகவே இருந்தது.
இந்த பதிவை அவருக்குச் சமர்பிக்கிறேன்.

மணல் வீடு -

கடற்கரையில் நாமே கட்டிய வீட்டை நாமே இடிப்பதில்லையா? பத்திரமாய் நெடுநாள் இருக்கும் என்று எண்ணுவோம். ஆனால் எதிர் பாராத நேரத்தில் அலை வந்து அடித்துப் போகும். கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தால் ஜாலியாக யாரோ அதை உதைத்து  விட்டுப் போவதையும் காண நேரும். மாய[ன்] உலகத்தைப் பற்றி நினைக்கும் போது கடற்கரை மணல் வீடு ஞாபகத்திற்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.


31.1.12

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும்

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும் என்ற இந்தப் பதிவு சில விளக்கங்களைத் தருவதற்காக. எழுதி சில மாதங்கள் ஆனாலும் இப்போதுதான் பதிவிடுகிறேன்.

நிபுணத்துவம் என்பதும் ஒன்றில் ஆழ்ந்த பார்வையும் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் நிபுணர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்த அல்லது பன்முக நிலைகளில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். 
  • ஒரு சிறு துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு மருத்துவர் நிச்சயமாக அதிகமாக விரும்பப்படுவார் - உதாரணத்திற்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவ்வாறே மதிக்கப் படுவர். சிறுநீரகக் கோளாறு மற்றும் பல் மருத்துவர் என்கிற பலரும் தேவைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் சிறுநீரக மாற்று அறுவை செய்தவனுக்கு பல்மருத்துவர் அவராக பல்லில் பிரச்சனை என்று பல்லைப் பிடுங்கி விட முடியாது. அப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர், இதனால  பெரிசா ஒன்னும் பிரச்சனை வராது அப்படின்னு பல்லைப் புடுங்கினாறு - அதோட சேர்த்து அவரோட வாழ்க்கையையும் புடிங்கிட்டாறு. ச்பெசலிச்டுகள் ஒட்டுமொத்த நோயாளியின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டுதான் ட்ரீட்மென்ட் செய்ய முடியும்.

பொருளாதார வல்லுனர்கள் மனித வாழ்வின் மேம்பாடு என்பது பொருளாதார வாழ்வு மட்டுமே என்று சிந்திப்பதில் தவறில்லைதான். ஆனால் அதிலும் அது தனித்து விடப்பட்ட பார்வைதான் தவறு. அனைத்து சமூக உறுப்பினர்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொதுவாக கணக்கிடுவது ஒரு முகப் பார்வைதான். அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி என்பது மேல்நாட்டு முன்னாதரணம் அல்லது அந்நிய முதலீடு  மட்டுமே என்பது அடுத்த கடிவாளக் குதிரைப் பார்வை. இதைச் சொல்லுவதற்கு புள்ளி விவரங்களோ அல்லது ஒருவர் பாண்டித்துவம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்கிற ஒன்றை மட்டும் இது அப்படி இருந்தால் இதில் வளர்ச்சி உண்டு என்று சொல்லுகிறவர்கள் - இதுவரை அது எப்படி இருந்தது என்று பார்ப்பதும் அவசியம். அந்நிய முதலீடு என்பது சரி என்றாலும் அது எப்படி சரியாகும் என்கிற கேள்வியை வைப்பது சரிதானே.
  • இன்றைக்கு முதலாளித்துவத்தின் உதவியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மேலை நாடுகளின் பொருளாதார முன்னுதாரணத்தைக் கொண்டிருப்பது தவறே என்று கருத வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவின் வால்மார்ட்டிற்கு அங்கே தேவை இருக்கிறது. மிகப் பெரிய நாடு. மக்கள் சிதறி இருக்கிற நாடு. சில முக்கியமான நகரங்களை விட பிரிந்திருக்கிற பல கிராமங்களைக் கொண்ட நாடு. ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்வதற்கு - காரின்றி அங்கே அமையாது உலகு... எனவே பொருட்கள் ஓரிடத்திலும் மொத்தமாகவும் குவிக்கப் படவேண்டியது அவசியம். எனவே செயின் நிறுவனங்களுக்கான தேவையும் மொத்தமாக வாங்கும் அவசியமும், வருடத்தில் பல மாதங்கள் வெளியும் செல்லுவதற்கு கடுமையான தட்ப வெட்ப நிலை என்று பலவற்றைக் கொண்டு அவைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.  எனவே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்காது. சில மாதங்கள் எதுவும் பயிரிட முடியாது என்பதில், குளிரூட்டப் பட்ட இடத்தில் பதனிடப்பட்ட பொருட்களின் தேவைகள் அங்கே இருக்கின்றன.
  • நமது நாட்டிற்கு அப்படி தேவை என்ன என்பது புரியவில்லை. அப்படியே அது தேவை எனினும், இவர்கள் நம் நாட்டின் முதலாளித்துவ முதலைகளின் துணை கொண்டு செய்ய முடியும் என்பதை சிந்திக்க முடியாதா? இந்தியாவின் சிறு வணிகர்கள் ஒழுங்காக வரி கட்டுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு முதலாளிகள்தான் அதிக அளவு ஏய்க்கிறார்கள் என்பதும் உண்மைதானே. அப்படி எனில் உலகம் முழுவதும் பழம் தின்னி கோட்டை போட்ட முதலாளிகள் எந்த அளவுக்கு இருப்பார்கள்?
வால் மார்ட் இங்கே வந்தால் லட்சக் கணக்கில் வேலை கொடுப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி அது மிகப் பெரிய செலவு செய்தால் எப்படி அதற்கு குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கக் கட்டுபடியாகும். இரண்டு வழிகளில் செய்ய முடியும். முதலில் குறைந்த விலைப் பொருட்களை அதிக விலைக்குக் கொடுப்பது. அல்லது தரமற்ற பொருட்களைக் குறைந்த விலைக்குக் கொடுப்பது. தரம் வேண்டுமெனில் அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்கிற மறை முக நிர்ப்பந்தத்தை கொடுப்பது. அல்லது வேலை செய்யும் ஊழியர்களுக்கு, குறைந்த ஊதியம் கொடுத்து தனது லாபத்தைப் பேருக்கும் வழி ஒன்றில்தான் அது கட்டுபடியாகும்.
  • விண்டோஸ் நிறுவனர் செய்த முதலீடுக்கு மேல் பல மடங்கு - ஆயிரக்கணக்கான மடங்கு இலாபம் சம்பாதித்து விட்டார். ஆனால் மார்க்கெட்டிற்கு வரும் எந்த புதிய ஒ. எஸ். அல்லது வோர்ட் தயாரிப்புகளும் குறைந்த விலைக்கு வருவதில்லை. அதனால்தான் ஒவ்வொரு நாளும் அளவுக்கதிகமான சொத்துக்கள் அவருக்குச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றது.
எல்லாரையும் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக்குவதிற்குப் பதில் சிலரை மட்டும் அது வளர்த்து விடுகிறது.
பன்னாட்டுச் சந்தை மற்றும் பன்னாட்டுக் காப்புரிமை என்கிற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து - நம் நாட்டில் இருக்கும் வேப்ப மர நலன்கள் அல்லது மஞ்சளின் மகத்துவம் பற்றி எவனாவது காப்புரிமை பெற்றிருக்க இங்கே நாம் அவனுக்கு கப்பம் கட்ட வேண்டும்.
இப்போது நவீனக் கப்பம் பல்வேறு வழிகளில் கட்ட வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனம் வந்தால், அரசு அவர்களுக்கு நிலம் ஒதுக்கிடு செய்வது, மற்றும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது என்று வாரி கட்டிச் செய்கிறது. ஆனால் இங்கு உள்ள ஒரு குடிமகன் ஒரு கடை தொடங்க அலையாய் அலைய வேண்டியிருக்கிறது.

  • என்னைப் பொறுத்தவரை அந்நிய முதலீடுகள் சரியா தவறா என்பதைத் தாண்டி, இங்குள்ள அரசுகள் இங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சரியான வழிமுறைகளை யோசிப்பதில்லை என்பதுதான் மிகப் பெரிய குற்றச் சாட்டாக இருக்கிறது. 

கொசுறு

ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்களில் கட்டாயம் முடிக்க வேண்டிய பணி ஒன்று என் கவனத்தை ஈர்த்திருப்பதால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு இதே நிலைதான் என்று எண்ணுகிறேன். மாதம் ஒன்று என்பதே மலைப்பாக இருக்கும். இணையத்தில் வரும் போது நண்பர்களின் வலைப் பக்கங்களுக்கு வருகிறேன்.  

15.1.12

பொங்கல்தான் தமிழ் புத்தாண்டு


முதலில் ஒரு சிறிய நினைவூட்டல் - கடந்த ஆண்டு பொங்கலன்று எழுதிய பதிவிலிருந்து சில வரிகள் - அதோடு தொடங்கலாம்.

"அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நடக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்."  
                                                                           
                                                                                             முழுப் பதிவும் படிக்க...


  • பல ஆண்டுகளாக எனக்குத் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் அன்றுதான். அறிவியல் ரீதியாகவோ அல்லது, சங்க இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து அதை என்பிப்பதற்கான தேவையோ அல்லது அறிவியல் பூர்வமாக பொங்கல் தான் புத்தாண்டு என்று சொல்வதற்கான நிலையில் நான் இல்லை. அதை நிறைய அறிஞர்கள், பதிவுலக நண்பர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அரசு அறிவிப்பதனாலோ இன்னொரு அரசு அதை மாற்றி மற்றொரு நாள் அறிவிப்பதினாலோ பின் வரும் சந்ததியினருக்கு வரலாறு மாற்றிச் சொல்லப் படும் நிலை உருவாகும் என்பது அறிந்ததுதான். ஆனால் நாம் அதைத் தானே ஏற்றுக் கொள்ளுகிறோம். என்ன செய்வது? 

  • இந்த புதிய அறிவிப்பிற்குப் பிறகு அரசுக் கட்டிடங்களில் ஒளித்த மின்விளக்குகள் வேண்டுமானால் மறையலாம். நம் உள்ளங்களில் ஏற்றப்படும் விளைக்கை அணைக்க முடியுமா? இந்த அரசின் அறிவிப்பிக்குப் பிறகு தனி மனிதக் கொண்டாட்டத்தை தடை செய்யும் உரிமை அரசுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு அரசினால் தமிழர்களின் தமிழ் புத்தாண்டு அங்கிகரிக்கப் பட்டது - அல்லது ஏற்கனவே உள்ள தவறை சரி செய்தது. மற்றொரு அரசு மீண்டும் தவறை உண்மை என்று உணர்த்தப் பார்க்கிறது. அது எந்த விதத்திலும் தமிழர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மாற்றி விட முடியுமா அல்லது தடுத்து விட முடியுமா?

அதனாலே
பொங்கலோ பொங்கல் என்பதோடு
தை முதலே ஆண்டின் முதல் என்பதயும் சேர்த்து
முழக்கம் இட வேண்டியிருக்கிறது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு அன்று பொங்கலிட்டு
புதிய உணவை - புதிய பானையில்
பொங்கி மகிழ்வோம்.


கொசுறு : 

தமிழ் புத்தாண்டு - தைப் பொங்கல் / வௌவால் 

மதுமதியின் தூரிகையின் தூறல் 

வானம் எனக்கொரு போதி மரம்

 கனடா வாழ் தமிழர் ஒருவரின் கட்டுரை



  

13.1.12

சமாதியான சங்கமம்

ஏன் இந்தப் புறக்கணிப்பு? 

  • வரலாற்று தொன்மை மிக்க குழுமம் ஒவ்வொன்றும் தங்களுடைய தனிப்பட்ட தன்மையைத் தக்க வைப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்யும். அது மற்றவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதற்காக அல்ல. தங்களுடைய தனிப்பட்ட கலாச்சாரக் கூறுகளை பாது காப்பாதற்கும் தங்களது தனித்துவத்தை அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்கும்.

வரலாறு இல்லாத பண்பாட்டுக் குழுமங்கள் கூட தங்களது பண்பாட்டுக் கூறுகளை காட்சிப் படுத்துவதிலும், அதை மியூசியங்களில் வைப்பதிலும் காட்டுகிற அக்கறை அதிகம் என்பதை அவர்கள் சேமித்து வைத்திருக்கிற ஐநூறு ஆண்டு பழமையான கல், மண் இவைகளைப் பார்த்தாலே தெரிந்து விடும். இங்கே என்னடாவென்றால், பழைமையான பண்பாட்டு நகரம் தண்ணிரில் இருக்கிறது.


  • மிச்சம் மீதி உள்ள பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் ஏதாவது அக்கறை இருக்கிறதா என்பதே மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. தமிழகத்தில் நாட்டுப் புறக் கலைகள் அருகி வருகின்றன என்பதும், அதில் இருக்கும் கலைஞர்கள் நலிந்து அந்த ஆடல், பாடல் கலைகள் அழிந்து வருகின்றன என்பதும், இதனால் தங்கள் கலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விடும் சூழல் இருப்பதும் நாம் அறிந்ததே.

சங்கமம் - யார், எதற்கு, அதில் என்ன சிக்கல் என்பதையும் தாண்டி, சங்கமம் மீதான என் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி எனக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

அதனால், சில பல கலைஞர்கள் பொங்கல் நாட்களில் பணம் பெற்றார்கள் என்பதையும் தாண்டி - இந்தப் பண்பாட்டின் சில கூறுகளை உயிர்ப்போடு இருக்க அது உதவியது என்பதில் ஐயம் இல்லை.

ஆட்சி மாற்றம் - வழக்கம் போல பண்பாட்டுக் கூறுகளை காப்பதில் தனது பங்கை காக்க மறந்து விட்டது என்றே கருதுகிறேன். இன்னமும் காழ்ப்புனர்ச்சியிலேயே அரசு நடந்தது கொண்டிருக்கிறது. கடந்த அரசு - இதை தமிழக சுற்றுலாத் துறை இணைந்து நடத்தியதாக நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு தமிழகப் புத்தாண்டை மாற்றியது வேறு விஷயம். அதற்காக 'கலை விழாக்களை' புறக்கணித்தது பற்றி மிகுந்த கோபம் உண்டாகிறது.
இன்றைக்கு சங்கமம் என்பது ஏதோ காணக் கூடாத வார்த்தை போல எங்கும் எதிலும் காணோம். என்ன ஆயிற்று?


  • ஜனவரி மாதம் எப்படி புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வருமோ அதுபோல 'கலை வாரம்' என்கிற சங்கமும் இருந்தது. ஆட்சி மாற்றத்தினால் புத்தகக் கண்காட்சி நடக்குமோ நடக்காதோ என்கிற சில விவாதங்கள் வந்த பொது இது நிச்சயம் நடக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதே போலத்தான் சங்கமம் பற்றியும் நினைத்தேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

கடந்த ஆண்டு வரைக்கும் போட்டி போட்டு எழுதிய பத்திரிக்கைகள், இலக்கிய வாதிகள், கிண்டல் அடித்தவர்கள், கவிதை வாசித்தவர்கள், பாடியவர்கள், ஆடியவர்கள் .... யாரும் எதுவும் பேச வில்லை என்பது மிகவும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்.

ஒருவேளை சங்கமம் புத்தாண்டைப் போல ஏப்ரலுக்கு மாற்றப் பட்டிருக்கிறதோ அல்லது நாம் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறோமா என்பதை யாரிடம் கேட்பது.?

ஆமாம்!!!
 தமிழக அரசுக்கு ஏன் தமிழர்கள் மீது வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


ஏன் இந்த வெறுப்பு?


  • கடந்த முறை தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை இல்லை என்று சொன்ன மத்திய அரசு இந்த முறை, மத்திய தணிக்கைக் குழு சரி என்று சொல்லிவிட்ட பிறகு மாநில அரசுக்கு அதைத் தடை செய்ய உரிமை இல்லை என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறது.

படத்தை தடை செய்வதில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இதில் மட்டும் மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று வியாக்கினம் பேசுகிற மத்திய அரசு, உச்ச நீதி மன்றம் முல்லைப் பெரியாரில் நீர் மட்டத்தை உயற்றுவதற்கு உத்தரவிட்ட பின்பு கேரள அரசு தனியாக ஒரு சட்டம் இயற்றியதே.... அதைப் பற்றி என்றாவது திருவாய் திறந்திருக்கிறதா...

ஆமாம்!!!
மத்திய அரசுக்கு என் தமிழர்கள் மீது இந்த வெறுப்பு?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


கொசுறு:

"குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!"

- காசி அனந்தன்


தொடர்புடைய இணைப்புகள்:

சென்னை சங்கமம்

இந்த வாரப் பூச்செண்டும் திட்டும் 


12.1.12

வாக்கு வாதம் - இ.க.வும் - மு. பெ யும்


தலைப்பின் நீளம் கருதி இடிந்தகரையை இ.க. எனவும் - முல்லைப் பெரியாறை  மு. பெ எனவும் குறுக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

கடந்த வாரம் ஒரு நாள் என் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது... முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அது முற்றிலும் தவறு என்று சொன்னார். கேரளா அரசியல்வாதிகளின் தவறான அணுகு முறை பற்றிப் பேசினார்.
அதே வேகத்தில் நான் கூடங்குளம் பற்றி பேச்செடுக்க அவர் சொன்னார் – “நான் கூடங்குள அணுமின் நிலையத்தை ஆதரிப்பவன் எனவே நம் வாதத்தை அப்படியே முடித்துக் கொள்ளலாம். மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாமே என்றார்.

அவர் மட்டுமல்ல பல பேர் இந்த அணுகுமுறை மட்டுமே சரி என்கிறார்கள் – அதாவது முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவை எதிர்ப்பவன் அதே சமயம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிரவனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று நான் நினைக்க பல காரணங்கள் எனக்கு தெரிகிறது.

  1. மனித வாழ்க்கையில் அச்சப் படுவது தவறு. இதுதான் ஒருவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அச்சப் படுவது தவறு என்றும் அதேபோல கூடங்குள விவகாரத்தில் மக்கள் அச்சப் படுவது தவறு என்றும் சொல்ல வைக்கிறது.
  2. இதனால் என்ன செய்ய வேண்டுமென்றால் – மனிதர்களின் மேல் நம்பிக்கை வைப்பதை விட ... தொழில் நுட்பத்தில் அறிவியல் அணுகு முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதனால்தான் .... புதிப்பிக்கப் பட்ட அணை மீது நம்பிக்கை கொள்ளாத அரசும் [கேரளா] அரசின் பாதுகாப்பாக தயாரிக்கப் பட்டுள்ள உலையின் மீது நம்பிக்கை கொள்ளாத மக்களும் தவறு என்பதினால் ஒருவர் கேரளாவையும் மறு பகுதியில் கூடங்குளம் மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  3. தேவையற்ற பண விரயம்... இவ்வளவு செலவு செய்து கட்டப் பட்ட அணை / இவ்வளவு பணம் செலவு செய்ய பட்டு கட்டப் பட்ட உலை இரண்டையும் அப்படியே கை விட முடியாது என்பதனால் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குள மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது..
  4. கூடங்குள மின்சாரம் அதிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அணை தண்ணீர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் // வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை ஆதரிக்கவும் அதே சமயத்தில் வளர்ச்சியைத் தடுப்பதை எதிர்க்கவும் வேண்டும் என்கிற அவசியத்தில் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குளத்தையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  5. இரண்டுமே பொய் பிரச்சாரம் செய்கிறது. கேரளா அணை உடைந்து விடும் என்றும் அதே சமயம் கூடங்குள உலை உடைந்து விடும் என்பதும் பொய் பிரச்சாரம்...

எனவே இது போன்ற காரணங்களுக்காக தொழில் நுட்பத்தை ஆதரிப்பவர் / அறிவியல் மீது நம்பிக்கை வைப்பவர் அனைவரும் – முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவையும், இந்தியாவின் அல்லது தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டவர் அனைவரும்... கூடங்குளத்தில் அணுஉலை வருவதை ஆதரிக்க வேண்டும் என்பதே சரி என்று நினைக்கிறார்கள்....


ஆனால் அது சரியா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்...
எனது அணுகுமுறை -
அடுத்த பதிவில்...


கொசுறு:
இத்தகைய நம்பிக்கை கொண்டோர் அனைவரும் தமிழக மக்கள் மீதும், தமிழக வளர்ச்சியின் மீதும் அக்கறை கொண்டார்கள் என்பதையும் மறந்தது விடக் கூடாது. 

7.1.12

சிறுதுளி - புத்தாண்டு ஸ்பெஷல்


அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடிக்க...
  • புத்தாண்டு இலவசப் பொருட்கள் - பொங்கலன்று தொடங்கி புத்தாண்டுக்குள் முடியும் என்று தமிழக அரசுக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • ஏதாவது தெரிகிறதா? சித்திரைப் பெருநாள் விழா என்பது மீண்டும் புத்தாண்டுப் பெருவிழாவாக மாறி விட்டது. 
    • புத்தாண்டு என்றால் அடுத்த புத்தாண்டா? [இரண்டாயிரத்து பதின்மூன்றா] 
    • அம்மாகிட்ட சில கேள்விகள் கேக்கலாம்தான் ஆனா பயமா இருக்கு..

  • "கச்சத்தீவில் மீன்பிடி உரிமை தமிழகத்துக்கு கிடையாது" 
    • உடனே இலங்கை அரசு இப்படித்தான் என்று தாறு மாறாகவெல்லாம் குதிக்காதீர்கள். சொன்னது இலங்கை அரசு இல்லை - மத்திய அரசு.
    • புத்தாண்டு உண்மை...

  • மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தென் ஆப்ரிக்கா பயணம். உர இறக்குமதி தொடர்பாக ஒப்பந்தம் போடுவதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் பயணம். 
    • பார்லிமேன்ட்லேயே பேசமாட்டார். இவர் கடல் கடந்து என்ன பேசப் போகிறார். தமிழ்நாட்டில் இருந்த எடமே தெரியலை அஞ்சா நெஞ்சன் ஆப்ரிக்காவுப் போகிறார் - சாரி தென் ஆப்பிரிக்காவிற்குப் போகிறார்.
    • தமிழகத்தில் வாய் பேச முடியாததால் நாடு விட்டு நாடு செல்கிறாரா?
    • புத்தாண்டுப் பயணம் - யார் கண்டார் புதிய உத்வேகத்தோடு காந்தி திரும்பி வந்தது மாதிரி போராட்ட உணர்வோடு வரலாம். [காந்தி மன்னிப்பாராக]

  • தமிழ் நாட்டில் வாசம் செய்யும் நம் சேர நாட்டு செஞ்சோற்று விரும்பிகள் - அதான் கேரளா தண்ணீர் தருகிறேன் என்று சொல்லுதே அப்புறம் என்ன - அப்படி என்றார்கள். 
    • அப்புறம் புதிய அணை கட்டி தமிழகம் அதை பராமரித்துக் கொள்ளலாம் என்றார் உம்மாண்டி. இன்று புதிய அணையை பராமரிப்பது கேரளத்திடமே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். புதிய அணை கட்டினால்கூட நூற்றி இருபது அடி உயரத்தை விட கூடுதலாக கட்ட மாட்டார்கள்
    • எனவே செஞ்சோற்று விரும்பிகள் அமைதியாக இருப்பதே நல்லது. பேசாமல் அவர்கள் அனைவரும் ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி மூன்று முறை ஜோதி வடிவில் காட்சி கொடுக்கும் மகரஜோதியை - காட்டிலாகா அதிகாரிகள் ஏற்றும் ஜோதியை - ஐயப்பனின் தரிசனம் என்று கொண்டாடிவிட்டு வரலாம். இன்னமும் அதைச் செய்கிறார்களே... 
    • நீதிமன்றத்தில் இதுநாள் வரை இவர்கள் தான் ஜோதியை ஏற்றியது என்று சொன்ன பிறகும், இப்படித் தேடித் தேடித் போகிற இவர்கள்தான் அறிவாளிகள் - ஒருவேளை ஐயப்பன் சொன்னால்தான் அணை கட்டுவதை விடுவார்களோ என்னவோ.
    • எல்லாரையும் மகர ஜோதிக்கு அழைத்திருப்பது - தினகரன் - விளங்கிரும்.
    • புத்தாண்டு ஏமாற்று ஜோதி 

  •  அம்மாசொன்னதாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது. பத்திரிக்கைகள் எரிக்கப் பட்டது. இது அம்மாவிற்குத் தெரியாது. [நம்பிட்டோம்] 
    • சரியா தப்பா... இரண்டு பேருமே தப்புதான். 
    • மக்கள் போராட்டம் எல்லாம் தப்பு தப்புன்னு சொன்ன மகராசங்கேல்லாம் இப்ப கம்னு இருக்காங்க. ஒன்னு புரிஞ்சு போச்சு அதாகப் பட்டது -  அமைதிப் போராட்டம் எல்லாம் ஒத்து வராது...
    • அதனால் அம்மா வழிப் போராட்டம்தான் ஒத்து வரும். ஆக இதுதான் புத்தாண்டுப் போராட்டம்.  புதிய போராட்டம்.

கொசுறு கேள்வி

அ. தி.மு.க தொண்டர்கள் எதுக்கு கோபப்பட்டார்கள்?
மாமி என்று சொன்னதுக்கா?
இல்லை மாட்டுக் கறி சாப்பிட்டாங்கன்னு சொன்னதுக்கா?
நாம எல்லாரும்தான் மாட்டுக் கறி சாப்பிடுறோம். நான் சாப்பிடுவேன். அதுக்கு கோபப் பட வேண்டிய அவசியம் இல்லை.
மாமி இல்லைன்னா - இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..
மாமிதான் அப்படின்னா கோபப் பட வேண்டிய அவசியம் இல்லைதானே?

    4.1.12

    முதல் நாள்

    முதல் நாள் மழை பெய்தால் 
    வருடம் முழுதும் மழை பொழியுமாம் 
    செழிப்பாய் இருக்குமாம் நாடு
    – பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

    முதல் நாள் அழுதால் 
    வருடம் முழுதும் அழுவோமாம். 
    மனது சொல்லுகிறது.

    ஆனால்
    முதல் நாள் குடித்தால் 
    வருடம் முழுதும் குடிக்க நேரமோ என்றோ
    முதல் நாள் விடுமுறையில் உழைக்காமல் இருந்தால் 
    வருடம் முழுதும் உழைக்காமல் இருக்க நேரிடுமே என்று 
    மனதும் சொல்ல மறுக்கிறது 
    அரசும் சொல்ல மறுக்கிறது.


    நாம் குடிப்பதற்கான காரணம் தெரிகிறதா?
    நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கான காரணம் புரிகிறதா?


    1.1.12

    கனவு மெய்ப்பட வேண்டும் - 2012


    கனவு மெய்ப்பட வேண்டும். 
    மார்டின் லூதர் கிங்கின் கனவோ, பாரதியின் கனவோ, அல்லது கலாமின் கனவோ மட்டும்தான் மெய்ப்பட வேண்டுமென்றில்லை.


    நம் ஒவ்வொருவருக்கும் சில கனவுகள் இருக்கும். இல்லைஎன்று மறுப்பதற்கில்லை. எல்லா சமயங்களிலும் அது வெறும் தொழில் சார்ந்த அல்லது என்ன வாங்குவது என்கிற கனவுகளையும் தாண்டி இருக்கும்.


    அந்தக் கனவுகள் மெய்ப்பட முயல்வோம். 
    வெறும் கனவுகள் என்ன செய்யும்.



    புத்தாண்டு வாழ்த்துக்கள்.


    "கனவு மெய்ப்பட வேண்டும்
    கை வசமாவது விரைவில் வேண்டும்
    ...

    கண் திறந்திட வேண்டும்
    காரியத்தில் உறுதி வேண்டும்"

    -பாரதியார்  


    கொசுறு:
    இந்தப் புத்தாண்டை நாம் கொண்டாடுவதில் அதிகமான ஈர்ப்பு இருந்ததில்லைதான்.  உலகம் முழுவதும் கொண்டாடுகிற இந்த நாளில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவது தப்பில்லை என்றே கருதுகிறேன்.
    என்ன தைக்கு மீண்டும் சொல்லிவிட்டால் போகிறது.

    HAPPY NEW YEAR
     
    Glückliches neues Jahr 
     Bonne année