குடியரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.1.17

'குடி' அரசும் 'தடி' அரசும்

'குடியரசு' என்பது மக்கள் ஆட்சி என்பது பொருள்:
தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது.

மெரினாவில் அது ஜனவரி 24 ஆம் தேதி 
கருக்கலில் கலைந்து போனது.
அதைக் காலையில் இருந்து குலைத்தது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
'தடி'தாங்கிய குடிகள் 

'அடி'த்துக் கலைத்தார்கள் 
இப்போது இருப்பது 'தடியரசு' 
அடியரசும் கூட ...

-
குடியரசு 
தடியரசு 
அடியரசு 
தின வாழ்த்துகள் 


19.2.14

எல்லாம் சிவமயம் - குடியரசு - 2

இது இந்தியக் குடியரசும் அரசியல் அமைப்பும் - 1 என்ற முந்தைய தொடர்ச்சியாக படிக்க விரும்புவோர் இந்தச் சுட்டியை அழுத்தவும்.

உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கடந்த ஏழு மாதங்களுள் மிக உன்னதமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே ஜனவரியில் அவர் வழங்கிய தீர்ப்பு நேற்று வழங்கிய தீர்ப்பை முன்னறிவித்ததாகவே கொள்ளலாம். ஒரு குடியரசின் மிக முக்கியமான அம்சம் என்பது நீதித் துறை. அது மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்கும் போதுதான் மக்களுக்கு குடியரசின் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.

ஏற்கனவே பேரறிவாளனை பொறுத்த வரை, அவரது சாட்சியம் மாற்றி எழுதப்பட்டு அவரையும் குற்றவாளியாக்கிய உண்மை, சாட்சியம் வாங்கிய அதிகாரியால் ஒப்புக்கொள்ளப் பட்டபோதே, நீதி மன்றமே தானாக அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, குறைந்த பட்சம் பேரறிவாளனையாவது விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது நடக்க வில்லை என்றாலும், இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட கருணை மனு காரணமாக மரண தண்டனை ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்கிற போது - அது கொஞ்சம் நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது. 

தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களைப் போல நீதிபதிகள் அனைவரும் நேர்மையோடும், துணிச்சலோடும் இருப்பது அவசியமாகிறது. நிரபராதிகள் ஒரு போதும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுதான் நீதி தேவதையின் அறைகூவலாக இருந்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் நிரபராதிகள் போல வெளிவிடப் படுவதும் தான் குடியரசின் மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.

எப்போது ஒரு நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து விசா மோசடி செய்த ஒரு தேவயானிக்காக தவம் இருந்து அவரை வரவழைத்து அதைக் கொண்டாடியதோ, அவருக்கு பதவி உயர்வு கொடுத்ததோ அப்போதே நாம் உண்மையையும் நீதியையும் தூக்கிப் பிடிக்கிறோமா இல்லையா என்பது உலகுக்கு தெரிந்து விட்டது. எப்போதும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டு வருகிறதோ என்கிற சந்தேகத்தை இந்தத் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது. இது போல தொடர்ந்து நீதி பட்சத்தில் உண்மையான குடியரசாக இந்தியா மலர வாய்ப்புள்ளது.

இந்த மரண தண்டனை ரத்து ஒரு சிலரால் கேலி செய்யப் படலாம். திரு ராகுல் காந்தி போல - "ஒரு பிரதமரைக் கொன்றவர்களுக்கே மரண தண்டனை ரத்து, விடுதலை என்றால் சாதாரண மக்களைக் கொன்றவர்களுக்கு என்ன நடக்கும் என்று பயந்து போயிருக்கிறார். அதிகாரம் தனது கையில் இருந்து, சாட்சியங்களை மாற்றிய அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு நிரபராதியை 23 ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்த இவர்களை - என்னவென்று கேள்வி கேட்பது? இவ்வளவு பேசப்பட்ட வழக்கிலேயே நீங்கள் சாட்சியங்களை மாற்றியிருக்கிறீர்களே - யாருக்கும் தெரியாத வழக்குகளில் உங்களின் கை வரிசை எப்படி இருந்திருக்கும் என்று கேட்கலாம் அல்லவா?

எது எப்படியெனினும், இப்போது இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் அம்மாவுக்கு இருப்பதால், எல்லாம் சிவமயத்திலிருந்து, அம்மாமயத்திற்கு மாறியிருக்கிறது. ஒரு சிலரை விடுவிப்பதாலேயே, குடியரசின் மீதும் அரசியல் அமைப்பின் மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடாது.

முன்னால் நீதிபதி சுரேஷ் குஜராத் கலவரத்தில், தங்கள் வஞ்சம் தீர்க்க வருபவர்களை அனுமதியுங்கள் என்று சொன்னதற்கான 'ஒலிப்பதிவு' இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதைத் தெரிவித்த திரு பாண்ட்யா சுட்டுக் கொள்ளப் பட்டதும் அனைவருக்கும் தெரியும். சஞ்சீவ்பட் என்கிற போலிஸ் அதிகாரி திரு மோடி இவ்வாறு சொன்னார் என்று சொன்னதும், அவரை வேறு சில காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்ததும் அனைவரும் அறிந்ததே. இது போல எத்தனை வந்தாலும், அரசியல் வாதிகள் விடுவிக்கப் படலாம்... ஆனால் சதாசிவம் போல சில உண்மையான நீதிபதிகள் நேர்மையோடு செயலாற்றும் வரை நீதி தாமதமானாலும், காப்பாற்றப் படலாம் என்கிற நம்பிக்கையையும் தான் குடியரசின் மீதும் வைக்க வேண்டியிருக்கிறது.



13.8.13

குளோபல் காங்கிரசிடம் சமர்ப்பிக்க காந்திக்கு ஒரு வேண்டுகோள்

பாட்டும்   பெட்ரோலும் 
சின்ன வயசு  விஷயங்கள் பலவற்றை இப்போது நினைக்கிற போது எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுவதால் நான் என் முட்டாள் தனங்களை எல்லாம் மறந்தே போய் விட்டேன்.
சின்ன வயதில் எம். ஜி. ஆர். மற்றும் சிவாஜி படங்களை பார்த்த போதெல்லாம் எப்படி இவர்கள் இப்படி அழகாகப் பாடுகிறார்கள் என்று தோன்றும்... சிவாஜியின் வாயசைவில் அவரே பாடுவது போலத் தோன்றுவதால் அவர்தான் பாடுகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். .... அதாவது பின்னணிப் பாடகர்கள் என்கிற விஷயம் எனக்குத் தெரியவில்லை...
ரஜினிப் படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு - வேறெங்க ஊர்த் திருவிழாக்களில்தான் --- எங்க திருவிழான்னாலும் நடந்து போய் செட்டில் ஆகி ... விடிய விடிய படம் பார்த்த காலங்கள் உண்டு --- நான் சொல்வது இதற்கு முன்பு---

ஒருமுறை ஏதோ ஒரு பாட்டில் ஹீரோ வாய் அசைக்காமல் இருந்தாலும் பாட்டு தொடர்கிறது... எனக்கு முடியலை எப்படி வாயைத் திறக்காமல் இப்படி சுத்தமா சத்தமா பாட முடியும்... நானும் வீட்டுக்கு வந்து வாயை மூடிக் கொண்டு பாடிப் பாக்குறேன்.... ம்க்கும் ம்க்கும் தான்... அதை அப்படியே தொடந்திருந்தால் நான் மங்கி வெங்கி மாதிரி ரொம்ப பேமஸ் ஆகி இருப்பேன்.  என் அண்ணன் நான் செய்யுற செட்டைஎல்லாம் பாத்துட்டு அட மக்கு மக்கு பாடுறது அவன் இல்லை வேற ஆளுன்னு சொன்னதுக்கு என்னைய முட்டாள்ன்னு நினைச்சியான்னு திருப்பிக் கேட்டேன்... இப்ப நினைச்சா சிரிப்பா இல்லை...
°°°
இதாவது பரவாயில்லை எங்க ஊர் மெயின் ரோட்ல இருந்தாலும் சுத்து வட்டாரத்துல இருபது கிலோ மீட்டருக்கு பெட்ரோல் பங்கே கிடையாது... ஒரு வாட்டி மே மாச விடுமுறையில் மாமா வீட்டுக்கு திருச்சிக்கு போனேன் - அப்பா கூட்டிட்டுப் போய் விட்டாரு. பெட்ரோல் இருக்கிற இடத்துலதான் பெட்ரோல் பங்க் இருக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... மாமா திருச்சில மட்டும் எப்புடி இம்புட்டு பெட்ரோல் கிடைக்குது எங்க ஊர்ல ஏன் பெட்ரோலே இல்லை - ன்னு கேட்டேன்...  மாமா ரெண்டு விஷயம் சொன்னார்... அட முட்டாப் பயலே... பெட்ரோல் தோன்ற எடத்துல வராது ஊத்தி வச்சு எடுக்குறாங்கன்னு சொன்னதுக்கு போங்க மாமா பெட்ரோல் நிலத்துலேர்ந்துதான் வருதுன்னு ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தாங்க நீங்க என்ன ஊத்தி எடுக்குறாங்கன்னு சொல்றீங்க போங்க மாமா ...

°°°
கேட்டா உங்களுக்கு சிரிப்பு வருதா இல்லையா? இவன் இவ்ளோ பெரிய முட்டாப் பயலான்னு  என்னையப் பத்தி நினைப்பு வரும்... பரவாயில்லை... நான் சின்னப்பயலா இருந்தப்பதான் அப்படி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விஷயங்கள் அறிந்து கொண்டேன். ஆனால் நம்ம நாட்ட ஆள்கிற மிகப் பெரியவர்களைப் பார்த்தா, வளர்ந்த பிறகும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளாமல் மேலோட்டமாய்ப் பார்க்கிற அவங்க என்னைய விட பெரிய முட்டாள்களாத் தெரிவதானால் என் சின்ன வயசு முட்டாள் தனங்களை ஜாலியாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கிறது.
°°°
முப்பது ரூபாயும் மூன்று வேளை  சாப்பாடும் 

முப்பது ரூபாய்க்கு ஒரு நாளைக்கு சாப்பிட முடியும் என்று பேசுற அமைச்சர் அந்த முப்பது ரூபாய்க்கு அரை லிட்டர் பெட்ரோல் போட முடியுமான்னு கேட்டிருப்பாரா ... மூணு வேலை ரோட்டுக் கடையில சாப்பிட்டு இடையில இரண்டு காப்பித் தண்ணி குடிச்சாலே முப்பது ரூபா பத்தாதே அறிவு ஜீவிகளா எப்படி முப்பது ரூபா போதும்?
சரி அது போதும்னா எல்லா அமைச்சர்களுக்கும் 900 ரூபா சம்பளம் குடுத்து மக்களோட மக்களா வைக்கலாமே சாமி... அப்படியே எல்லாரும் கவர்ன்மெண்டு பஸ்லதான் பார்லிமென்ட்டுக்கு வரணும்னு சொன்னாங்கன்னா குடுக்குற 900 ரூபாயையும் பஸ்ஸுக்கே சரியாப் போகும்னு இந்த அறிவு ஜிவிகளுக்குத் தெரியுமா...முப்பது ரூபா குடுத்தா இருக்க இடத்துக்கு சாப்பாடு வந்துர்ற மாதிரி --- வாயை மூடிக்கிட்டா சுதி சுத்தமா பாட்டு வர்ற மாதிரி பேசுறீங்களே மான்பு மிகு அமைச்சர்களே...
முப்பது ரூபாய்க்கு நம்ம தேசியக் கொடிக்குள்ள சுத்தி வைக்கிற பூ வாங்க முடியுமா சாமி.  இதுக்கு வக்காளத்துக்கு  பதிப்பாளர்கள் வேற. உங்க பதிப்பகத்தை எல்லாம் மூடிட்டு ஹோட்டல் நடத்தி முப்பது ரூபாய்க்கு மூணு வேளை  சாப்பாடு போடுங்க நானும் லைப் டைம் பிளான்ல முதல் ஆளா சேர்கிறேன்.

முக நூலில் படிச்சேன் --- ஒரு பணக்காரனின் ஷாம்ப்பூவில் இருக்கும் பழங்கள் கூட ஒரு ஏழையின் தட்டில் இருப்பதில்லை என்று... ஷாம்பே முப்பது ரூபாய்க்கு வாங்க முடியாதே அவன் எப்படி சாப்பாடு வாங்க முடியும்...
முப்பது ரூபாய்க்கு ஒரு ஷாம்பூ வாங்க முடிந்தால் வாங்கி ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் வீட்டில் இருக்கிற எல்லாரும் சாப்பிட வேண்டியதுதான்.
சரி ஒரு வீட்டில் மூணு இருந்தால் ஒருத்தர் வேலைக்குப் போனால் மூணு பேரும் முப்பது ரூபாய்க்குள்ள  சாப்பிட முடியமா மாமு.

காந்தியின் சுதேசி காங்கிரஸ் 


காந்தித்தாத்தா சுதேசி இயக்கம்னு ஒன்னு ஆரம்பிச்சாரு... கதர் இயக்கம் -- உப்புச் சத்தியாகிரகம்.... வெளி நாட்டுப் பொருட்களை வாங்காதே... புத்தகத்துல படிக்கிறோம்... ருப்பியாவுல மட்டும் காந்தித் தாத்தா சிரிக்கிறார்... இன்னைக்கு இதே காங்கிரஸ்தான் வாங்க வாங்க ன்னு வெளி நாட்டுக் காரனைக் கூப்பிடுது.
ஒரு கட்டுரை ஒன்று படித்தேன். தமிழ்ப் பற்று இந்தியப்பற்றாளர்கள் எல்லாரும் போட்டி போட்டு நாம் அனைவரும் முயற்சி செய்தால், இந்தியப் பொருட்களை வாங்கினால் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த முடியும்... அதனால் சோப்பு என்றால் சந்திரிகா, சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பூ என்றால் டாபர், குளிர் நீர் பானம் என்றால் இளநீர் ... இப்படி நாம் ஒரே நாளில் வெளி நாட்டுப் பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் இருபது ரூபாய் உயரும் ...

அது மட்டுமல்ல அந்தக் கட்டுரையில சாதாரணக் குடிமகனான எனக்கே தெரிஞ்சுர்க்கே ஏன்  இது நிதி அமைச்சருக்குத் தெரியலைன்னு அண்ணனுங்க கேட்குறாங்க... நம்ம அமைச்சரு அடப் போங்கடா முட்டாப் பசங்களான்னு சொல்றாரு...

நம்ம அண்ணன்களுகிட்ட வருவோம்... ரூபாய் மதிப்பு உயரக் கூடாதுன்னுதானே அவங்க இப்படியே பண்றாங்க... சில்லறை வியாபாரம் முதக் கொண்டு, காந்தி அந்நிய பொருட்களை, துணிகளை வாங்காதீர்கள் என்று எதிர்த்த அந்நிய கம்பெனிகளை உள்ளே கூட்டிகிட்டு வர்றாங்க ... ஒரு ஏரியா விடாம எல்லாப் பக்கமும் கடையத் திறந்து கோகோ கோலாவும் கோல்கேட்டும் வித்தா நான் எங்க போய் தேடுறது... ஏதோ பவொண்டோ  மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சு ஓடுது...

காங்கிரசுகாரர்கள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து நான் என் அண்ணனைச் சொன்ன மாதிரி காந்தியின் சுதேசியை முட்டாள்ன்னு சொல்றாங்க... நான் வளர்ந்துட்டேன்... நம்ம அரசியல்வாதிகள் எப்போ வளரப் போறாங்கன்னு  தெரியலை...
***
வெளி நாட்டு மோகம் நம்மைக் கண்ணை கட்டிருச்சு... எத்தனை காந்தி வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. இந்தக் காங்கிரசுக்காரர்கள் இப்படி இருக்கிற வரை... இந்தியா ஒளிரனும்னா வெளிநாடு மாதிரி இருக்கணும்னு கதை சொல்லுவாங்க... அவங்களை மாதிரி இருந்தாதான் பிரகாசமா இருப்போம்... பொருளாதாரம் வளரும் அப்படி இப்படி எல்லாம் கதை சொல்லுவாங்க.
இதெல்லாம் வெறும் கனவு... வெளிநாட்டுக்காரனுக்கு மார்க்கெட் இல்லை அதுனால நம்மளைத் தேடுறான்... என் மாமா ரெண்டு விஷயம் சொன்னாருன்னு சொன்னேன். முதலாவது நான் முட்டாப்பயன்னு சொன்னார். இரண்டாவது... தோன்ற எடத்துல பெட்ரோல் வந்தா நாம ரொம்ப பணக்கார நாடா ஆகிடுவோம்...
எனக்கு -பெட்ரோல் தோன்ற எடத்துல வரலை'ன்னு தெரிஞ்சிருச்சு... ஆனா அதே சமயத்துல நம்ம பொருட்களை மட்டுமே நாம பயன்படுத்தினா நாம நல்லா இருப்போம் அப்படின்னு தெரியுது... எனக்கு அறிவு வளர்ந்திருச்சு ...

தோன்ற இடத்துல வர தண்ணியையே அந்நியக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கிற இந்த அரசியல் வாதிகள் தோன்ற இடத்துல பெட்ரோல் வந்தாலும் நம்ம நாட்டை வளமான நாடா ஆக விட்டிடுவாங்களா என்ன​?
நம்மகிட்ட இருக்குற விஷயத்தை வச்சு நாம பணக்காரனா ஆகிறத தடுக்குற இந்த அரசியல்வாதிகள் முட்டாளா அறிவாளிகளா மாமா!
***
அணுப்பிரகாசம் வெடிப்பிரகாசம் 
அணையப் போற விளக்கு பிரகாசமாய் எரியும்ன்னு சொல்லுவாங்க ... நம்ம நாடு என்னைக்கும் பிரகாசமா இருக்கணும், என்றுமே ஒளி கொடுக்கணும்னு நினைக்கிற பல பேர் ரோட்டுல நின்னு குரல் கொடுக்கிறாங்க.... அணு உலை ஆபத்தானது அது அணையும் போது பிரகாசமாய் எரியும் மெழுகு மாதிரி அது நிரந்தரமில்லைன்னு சொல்றாங்க ...

நம்ம காங்கிரஸ்வாதிகள் கேக்குறது இல்லை... அடப்பாவிங்களா சில்லறை வியாபாரிகள் வயுத்துல அடிக்காதிங்கடா ன்னா கேக்குறதில்லை... அறிவு ஜீவிகள், மனித ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் இவர்கள் சொல்லுவதை இந்த அரசியல்வாதிகள் கேட்பதில்லை...

யார் எது சொன்னாலும் அவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்கிறது சுதேசிக் காங்கிரஸின் பேத்தி...
எந்த ஊர்ல எவன் போராட்டம் பண்ணினான் தண்ணியை கோகோ கோலா இல்லாட்டி பெப்சிக்கு குடுன்னு.... எந்த ஊர்ல வெளி நாட்டுக் கம்பெனிகளை உள்ள விடுங்கன்னு போராட்டம் பண்ணினான்... நீங்களா உள்ள விடுறீங்க... நீங்களா ஒளிரும் இந்தியாங்கிறீங்க ... நகரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் வறுமைக் கோட்டுக்கு மேலே இருக்கிறார்கள்என்று சொல்றீங்க ... சென்னை என்ன வெறும் மவுண்ட் ரோடா... அப்ப கொட நாட்டுல இருக்குறவங்க எல்லாம் ஏழைகளா என்ன... என்ன கருமாந்திரமோ!
ஆனா நாட்டுக்கு நல்லது, மக்களுக்கு நல்லதுன்னு சொல்ற போராட்ட, வீரம் மிக்க மக்களை, மனித ஆர்வலர்களை, சூழல் நண்பர்களை முட்டாள்கள் என்கிறீர்களே நான் எங்க அண்ணனையும் மாமாவையும் சொன்னது மாதிரி... என்ன செய்ய முடியும்?
வெளிநாடு வெளிநாடுன்னு மோகத்துல இருக்குற இந்தக் காங்கிரஸ் காரர்களை காந்தித் தாத்தாவே நீதான் காப்பாத்தணும்...

ஆனா தாத்தா, நீர் கோமணத்தோட போகாதேயும்,  அப்படியே போனாலும் இன்டிமிசிமியின் கோவனம் கிடைச்சாக் கட்டிகிட்டுப் போம். அப்பத்தான் காங்கிரஸ் ஆபிசுக்குள்ளேயே அனுமதி கிடைக்கும் (இன்டிமிசிமி / ஒரு இத்தாலிய நாயுடு ஹால் மாதிரி) - இப்பப் புரியுதா​?  அதுக்கப்புறம் தான் சுதேசியே பேச முடியும்... ஆமா​!

அப்படியே அவங்க கிட்ட சுதந்திர தின வாழ்த்துக்களையும் சொல்லிருங்க - அதாவது இந்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்து அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்ய முதலாளிகளுக்கு கொண்டு போய் சேர்த்த உண்மையான காங்கிரஸ் இதுதான் என்பதால் வாழ்த்துக்களை நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

காங்கிரசுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் -  மக்களிடமிருந்து பிடுங்கி அந்நியர்களுக்கு நாட்டைக் கொடுத்ததற்கு... உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்ன?

26.1.11

குடியரசு தினம் - யார் குற்றம்?

 62 வது குடியரசு தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.



  • குடியரசு தினக் கொண்டாட்டத்தை - நாசிக் அருகே பெட்ரோலில் கலப்படம் செய்த கும்பல் ஒன்று கூடுதல் மாவட்ட ஆட்சியரை [கலக்டர் சோனாவானேவை ] உயிருடன் எரித்து - தொடங்கி வைத்திருக்கிறது. மக்களாட்சியைக் கொண்டாட இதை விட சிறப்பான கொண்டாட்டம் இருக்கமுடியுமா?

ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே, அவரது உயிருக்கே, பாதுகாப்பற்று இருக்கும் போது நாமது நாட்டைக் குடியரசு என்று சொல்லுவது தகுமா? அல்லது மக்களாட்சி என்பது இதுதானா? தான் செய்வதை சரி என்று சொல்வதற்கும் அதற்காக ஒருவனை உயிருடன் எரிப்பதற்கும் நாம் இன்றும் தயாராக இருக்கிறோம் என்றால் என்ன குடியரசு இது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நீதியும், நேர்மையும், உண்மையான உழைப்பும் நமது மதிப்பீடுகளாக மாறமுடியாமல் போனது யார் குற்றம்? மதிப்பீடுகள் தெரியாமல் பிறரை ஏமாற்றி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் குற்றமா? அல்லது ஊழல் தான் நமது உயிர் மூச்சு என்று முன்மாதிரி காட்டிக் கொண்டிருக்கிற அரசியல் வாதிகள் குற்றமா? அல்லது மதிப்பீடுகளை கற்பித்துக் கொடுக்க மறந்த அதிகாரிகள் குற்றமா? அல்லது ஏமாற்றினால்தான் இன்றைய பொருளாதார சூழலில் வாழ முடியும் என்கிற நிலைக்குத தள்ளியிருக்கிற பொருளாதார முறையா? அல்லது சமூக அமைப்பு முறையா?
  • இறந்த அந்த மாவட்ட அதிகாரியின் நினைவு இல்லாமலே குடியரசு தினம் நிறைவு பெரும். நமது நாட்டைப் போல வேறு ஜனநாயக நாடு இல்லவே இல்லை என்கிற பெருமையோடு இந்த விழாவும் நிறைவு பெரும்.
இந்த ஆண்டு பிறந்து பன்னிரண்டு நாட்களுக்குள் இரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய எந்த வருத்தமோ தெரிவிக்க முடியாமல் இருக்கிற அரசு நமது அரசு.

அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்றும், அதற்கான ஆதாரத்தை தராமல் வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்துகிற முயற்சி என்று இலங்கை சொல்லிவந்த நிலையில்; சென்னை புத்தக் கோவில் ஒன்றில் தாக்குதல் நடந்த பிறகு இலங்கைத் தூதர் "இனிமேல் தாக்குதல் நடை பெறாது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

வெறும் கோரிக்கைகள் ஒன்றிற்கும் உதவாது என்ற நிலையில் அரசு இருப்பது யார் குற்றம்?
தாக்குதல் நடத்தியவர்களை விஷமிகள் [உபயம் - தினகரன்] என்று பத்திரிக்கைகள் எழுதியதும், இலங்கைக் கடற்படையினரின் அநீத செயல்களைக் கண்டிக்காமல் எழுதும் வியாபாரப் பத்திரிக்கைகள் இங்கே இருப்பது யார் குற்றம்?

  • புத்தக் கோவிலில் கல்லெறிந்தால்தான் நீதி கிடைக்கும் என்கிற நிலை இருந்தால் இது யார் குற்றம்?
  • இந்த அரசு எங்களுக்கு பாதுகாப்பு தரவில்லைஎன்றால் இலங்கை அரசிடம் சென்று தஞ்சமடைவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று நாகப்பட்டினம் மீனவர்கள் சொல்கிறார்களே - இது யார் குற்றம்.?
  • கச்சத் தீவை சென்று கொடுத்தது யார் குற்றம்? இலங்கைக் கடற்படையினருக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பலை வழங்கியதே  இந்த இந்திய அரசு - இது யார் குற்றம். இறந்து போன மீனவர்கள் குற்றமா?
  • என்நாட்டு மக்களைக் கொள்கிற ஹிட்லரே மேல் என்று இந்த நாட்டு மக்களை நினைக்க வைப்பதுதான் குடியரசா?
நானே பாதிக்கப் பட்டேன். நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்...

பாதிக்கப் பட்டவன்தான் குரல் எழுப்ப வேண்டும் என்பதா குடியரசு?

பராசக்தி - பார்த்துக் கொண்டா இருக்கிறாய்!
                 - பார்த்து சிரித்துக் கொண்டா இருக்கிறாய்.