நீதித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.9.17

தமிழகத் தற்கொலைகள் - இப்போது அனிதா

கடந்த ஒரு வாராக் காய்ச்சலுக்குப் பிறகு 
கணினியைத் திறந்தால் 
நீட் தேர்வின் கொடூர அரக்கனை எதிர் கொண்டு போராடியும் வெற்றி காண இயலாமல், தன்னை மாய்த்துக் கொண்ட அனிதாவின் தற்கொலை 
இதயத்தை இன்னும் கனமாக்கியது.

1196 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை போராடிய ஒரு சாதாரண மாணவியால் வேறென்ன செய்ய முடியும்?

தற்கொலைகள் தவறுதான்.
ஆனால் இவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசுகள் தானே. அவைகள் தவறு செய்யும் போது மக்களுக்கு உதவ வேண்டியவைகள் நீதி மன்றங்கள் தானே.
அரியலூர் மண்ணைச் சேர்ந்த அந்த மாணவி டெல்லி வரை சென்றாள் - தனது வாதத்தை எடுத்து வைத்திருக்கிறாள். ஒரு சாதாரண பிரஜையின் வாதத்தை உணர்ந்து கொள்ளாத அரசு எப்படி மக்கள் அரசாக இருக்க முடியும்?

தமிழகத்தில் ஒரு தலைவர் சொல்லுகிறார் - அவள் இன்னும் இரண்டு முறை நீட் எழுதியிருக்க வேண்டுமாம் - அப்படியும் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேறு ஏதாவது பாடத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமாம். சமூக நீதி பேசி புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் இப்படிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அதாவது 1196 மதிப்பெண் எடுத்தும் நான் விரும்பியதை படிக்க எனக்கு முடியவில்லை என்றால் இந்த பள்ளிகள் எதற்கு இந்தத் தேர்வுகள் எதற்கு? 
18 வயது நிறைவில் நீங்கள் நீட் தேர்வு எழுதினால் போதும் என்றால் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மார்க்குகள் வீண் தானே. 

என்ன உடுத்த வேண்டும்? என்ன மொழி பேச வேண்டும்?  என்ன உண்ண வேண்டும் என்பது வரைக்கும் முடிவு செய்தாயிற்று? இப்போது யார் எதைப் படிக்க வேண்டும் என்று சொல்லுகிற நவீன குருகுலக் கல்வியைத் திணிக்கிறது அரசு. இதையே முன்மொழியும் அரசுகள் இருக்கும் வரை, தலைவர்கள் இருக்கும் வரை அனிதாக்கள் தற்கொலைகளைத் தடுக்க முடியாது.
-
தமிழகத்தின் கவிஞர் 

"அனிதா விரும்பியது கிடைக்கவில்லை என்றால் 
கிடைப்பதை விரும்ப வேண்டும்" அதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை - அப்படி இந்தியாவில் விரும்பியது கிடைக்க வில்லை என்று தற்கொலைகள் செய்து கொண்டால் இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தங்கள் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றால் என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன கவிஞர் இவர்?
-

இப்போது கூட தமிழகம் விழிக்க வில்லை என்றால்
பின்னர் 
எழுவது மிகக் கடினம்.




6.10.14

எங்கெங்கு காணினும் சக்தியடா !


எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 
- பாரதி தாசன்

##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.

பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.

###

ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும். 
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன. 
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.

###

ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது- 
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா 
என்ற வசனத்தைப் பார்த்த போது 
ஐயகோ 
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே 
குடைந்து எடுத்து விட்டது.

இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.

###

அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###

கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா? 

இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?

தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா? 
###

மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்

அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்



இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
பாரதிதாசன் 







26.7.13

நம் ஒரே நம்பிக்கை

மக்களாட்சி அரசமைப்பின் மிகப் பெரிய தூண் நீதித் துறை. இந்த நாட்டின் மக்கள் நல வாழ்விற்கும், தங்கள் உரிமைகள், பாதுகாப்பிற்கும் மக்கள் இறுதியாக நம்பியிருக்கும் ஒரே நிறுவனம் இந்த நீதித் துறைதான். இன்னும் அதன் மீதான நம்பிக்கையை, கணம் பொருந்திய நீதிபதிகள் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையை நான் இழக்க விரும்பவில்லை.

கணம் பொருந்திய நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தடை கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். சொல்வதற்கு என்ன இருக்கிறது?

நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வும் அவர்களது எல்லைகளும் வரையறுக்கப் பட வேண்டியது அவசியம்... இது நிச்சயம் நீதித் துறைக்கும் மக்களாட்சிக்கும் நல்ல விஷயம் இல்லை... ஆனாலும் சில செயல்பாடுகள் இது அவசியமோ என்று சொல்ல வைக்கின்றன...

நீதிபதிகள் ஒன்று சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். சட்டத்தை சரியாக அர்த்தமுள்ள விதத்தில் விளக்க வேண்டியது மட்டும் அதன் கடமையாக இருக்க வேண்டும். 

அதைத் தாண்டி என்றால் மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்க்கை, நாகரிக வாழ்க்கை இவற்றில் எல்லாம் பங்காற்றுவதற்கு நீதித்துறைக்கு அவசியம் இருக்கிறது என்று கருதினால், அதை பாரபட்சம் இன்றி செயல் படுத்துவது அவசியம். 

மக்களின் நலன் என்பது முன்வைக்கப் பட்டால், முதலில் மக்களின் பாதுகாப்பும், கவுரவுமும் முதலிடம் பெற வேண்டும். ஆனால் நடப்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நமது நல வாழ்க்கைக்கு அவசியமானதாகத் தெரியவில்லை.

காவேரி நீர் விவகாரம் எத்தனை ஆண்டுகள் விவகாரம் அதில் இன்னும் உறுதியான இறுதியான முடிவைத் தர நீதி மன்றத்தால் முடியவில்லை... கொடுத்த தீர்ப்பை பிறர் பின்பற்றாத நிலையிலும் அரசுகள் கூடி ஒரு சுமூகமான முடிவு எடுக்க வேண்டுமாம்.... 
முல்லைப் பெரியாறு அணையில் சரியான முடிவுகள் இல்லை... ஆனால் கூடங்குளம் விடயத்தில் மட்டும் விரைவான முடிவு...

எல்லா வழக்குகளுக்கும் வாய்தா .... ஆனால் இதற்கு மட்டும் இறுதியான முடிவு... 
உண்மையில் நீதித் துறை மக்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டிருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடியும் வரை அணு உலைகள் திறக்க தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் அவகாசம்... இன்னும் எத்தனை நாட்களுக்கு...

கணம் பொருந்திய நீதிபதிகள் தங்களது தீர்ப்போடு முடித்திருந்தால் பரவாயில்லை... ஆனால் நாட்டின் பொருளாதராத்திற்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், இந்தியா நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைக்கும் இது மிக அவசியமானது என்று தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். நாட்டின் தேசிய ஒருமைப் பாடு...

காவிரி நீர்க்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இல்லாத, அதற்கு வராத ஒருமைப்பாடு இதற்கு மட்டும் வேகமாய் வந்திருக்கிறது. மற்ற வழக்குகளுக்கு மட்டும் பேசி சுமூகமான முடிவு எடுக்க அரசுகள் முன்வர வேண்டும்... மக்கள் போராட்டங்களில் மக்களோடு அரசுகள் பேச்சு வார்த்தை தேவையில்லையா?

இந்திய நாட்டின் மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் நாட்டின் தென்கோடியில் கூடங்குளத்திலும், வடக்கில் கல்பாக்கத்திலும், இன்றைய மற்றும் நாளைய தலை முறையின் வாழ்கையை அடமானம் வைத்து இந்தியாவிற்கு ஒளியேற்றுவோம்... ஆனால் இந்த மக்களின் வாழ்வாதார விவசாயத்திற்கும், மீன் பிடித் தொழிலுக்கும் எந்த வித உத்தரவாதமும் இன்றி... இன்னும் சில ஆண்டுகளில், இந்திய நாட்டின் இந்தப் பகுதி மக்களின்நாடு பாலைவனமான பின்பு இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஒளியில் பிரகாசிக்கட்டும்...

வெறும் சட்ட விளக்கம் கொடுப்பவர்களாக இல்லாமல் அதைத்தாண்டி நாட்டின் வளர்ச்சி என்று நீதிபதிகள் சிந்திப்பது நல்லதுதான்... ஆனால் இதில் வெறும் மேல்நாட்டு பொருளாதார வளர்ச்சியைப் போல இந்திய நாடும் அணுவின் வளர்ச்சியில் வளர்வதுதான் வளர்ச்சி என்று சிந்திப்பதையும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்று சிந்திப்பதையும், நமக்கான வளர்ச்சி முறையை நாமே நிர்ணயிக்க வேண்டும் என்று சிந்திப்பதும் மிக நல்லது.  

அப்படியே இல்லை என்றால்கூட வெளி நாட்டில் அனு மின் நிலையங்கள், அவற்றின் பாதுகாப்பு அரண்கள், அணு உலையைச் சுற்றி எத்தனை ஆயிரம் மக்கள் இருக்கிறார்கள் அது ஏன் கூடங்குளத்தில் அதிகமாக இருக்கிறது .... ஏன் வளர்ச்சி பெற்ற ஜெர்மனி போன்ற நாடுகள் அனு உலைகளை மூட முடிவு எடுத்திருக்கின்றன? .. மாதத்தில் ஆறு மாதங்கள் வெயிலே இல்லாத நாடுகள் கூட என் சூரியஒளி வழியாக மின்சக்தி தயாரிக்கின்றன? ... வருடம் முழுவதும் சூரிய ஒளியில் குளிக்கிற நாம் ஏன் இன்னும் அதை அதிகப் படுத்தாமல் இருக்கிறோம்?.... அப்படி செயல்படுபவர்களும் ஏன் எப்போதும் போல ஊழலியே திளைத்து இருக்கிறார்கள்... எல்லாவ்ற்றளிலும் ஊழல் என்றால்.... கூடங்குள அணு மின் நிலையத்திலும் தரக்குறைவான சாதனங்கள் இருக்கின்றனவா....  எதனால் அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை? அவர்களின் நியாயமான கோரிக்கைகள் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளையும் நீதித் துறை ஒவ்வொரு மிகப் பெரிய தீர்ப்புக்கு முன்பும் எழுப்ப வேண்டியது அவசியம்... 
இல்லையெனில் கூடங்குளத்தில் இன்னும் இன்னும் அதிக அதிக உலைகள் தொடங்கப்படும் ஒட்டு மொத்த தமிழகத்திற்குமான அபாயம் இன்னும் அதிகமாகும்.

இன்னும் நீதித் துறையிடம் நம்பிக்கை இருக்கிறது... ஏனெனில் மக்களாட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது... 




24.7.13

இவர்களுக்கா நாம் அடிமைகளாய் இருந்தோம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகக் கெட்டு விட்டதாக தமிழக முன்னாள் முதல்வர் இன்று மிகப் பெரிய குற்றச் சாட்டை எழுப்பியிருக்கிறார்.... நமக்கு இன்னும் அதிகமாக நினைவுகள் மழுங்கி விட வில்லை என்பதை கணம் பொருந்திய முன்னாள் முதல்வருக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது. அதனால் இன்று எல்லாம் சரி ஆகி விட்டது என்று அர்த்தம் இல்லை.   
இன்றைய முதல்வர் எதனால் அந்நிய முதலீட்டை எதிக்கிறார் என்றும் அதன் பின்னால் உள்ள அரசியலும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்நிய முதலீட்டை அவர் எதிர்ப்பதை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டை அதிகரித்த காங்கிரஸ் சுதேசிகள் கொஞ்சமாவது தங்கள் 'சுதேசித் தன்மையை' உணர்ந்தார்கள் என்றால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. கலைஞர் உண்மையிலேயே மாற்றத்தை எதிர் பார்த்தால் மக்கள் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுப்பதே அவருக்கும் அவரது தளபதிகளுக்கும் நல்லது.


  • முல்லைப் பெரியாறு அணை வழக்கில் - தமிழக அரசு எப்படி உரிமை கோர முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தமிழக அரசின் பதிலில் திருப்தி அடைய வில்லையாம். 1970 ஆம் ஆண்டு இரு மாநில ஆளுநர்களும் புதிப்பித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்பது திருப்தியாக இல்லையாம். பேசாமல் அந்தந்த மாநிலங்களின் எல்லைக்குள் இருப்பவை எல்லாம் அந்தந்த மாநிலங்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பையாவது கொடுத்து விட்டுப் போகலாம்.... 
  • கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் - உச்ச நீதிமன்றத்தின் இன்னும் அரசாங்கம் நிறைவேற்ற வில்லை என்றும் அதனால் மின் நிலையத்தை இயங்க அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கை  தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்கள் உயர் நீதி மன்ற நீதிபதிகள்.  
  • சரியான காரணங்களோடு போனால் ஒத்தி வைக்கிறார்கள்.... வரலாற்று ஆவணங்களோடு போனால் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார்கள்.... என்ன செய்யலாம்? 
நாங்கள் சொன்னால்தான் சூரியன் கூட எழும் என்று சொன்ன இங்கிலாந்து ஆதிக்க வாதிகளின் அரண்மணையில் அடுத்து ஆள்வதற்கான புதிய இளவரசர் பிறந்திருக்கிராராம்... உலக மீடியாக்கள் லைவ் கவரேஜ் கொடுக்கின்றன... இங்கிலாந்து மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே ஒரு வாரிசு வந்தது போல ஆர்ப்பரிக்கிறார்கள்.... மக்களாட்சி மக்களாட்சி என்று சொன்னாலும் இன்னும் அரச பரம்பரையின் மீதான மோகம் கொஞ்சம் கூடக் குறைவதாய் இல்லை.. தமிழக ரசிகர் மன்றங்களுக்கும் இவர்களுக்கும் ஒன்றும் பெரிதாய் வித்தியாசம் இல்லை.. ரசிகர்களாவது நடிக்கிற கலைகர்களின் பின்னால் ஓடுகிறார்கள்... வெறும் பொம்மைகளின் மீது ஓடுகிறார்கள் இங்கிலாந்து மக்கள்... இன்னும் மக்களாட்சி மீது முழுமையான நம்பிக்கை இல்லாத இங்கிலாந்து மக்கள்...

கேவலம் இவர்களுக்கா நாம் அடிமைகளாய் இருந்தோம். அந்நிய முதலீட்டின் வழியாய் இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் அடிமைகளாய் இருப்போம்... கெஞ்சி தண்ணீர்ப் பிச்சை கேட்டு மலையாளர்களுக்கும், கன்னடர்களுக்கும் அடிமைகளாய் இருப்போம். நம் மக்களின் உயிர் கொடுத்து நம் அண்டை மாநிலத்தவருக்கு ஒளிகொடுப்போம் என்றென்றும் அடிமைகளாய்...
இந்தியா ஒளிர்க...






10.8.11

சமச்சீர் உச்ச நீதி மன்ற தீர்ப்பு - முழு விபரம்

சமச்சீர் உச்ச நீதி மன்ற தீர்ப்பு - முழு விபரம்

Samacheer Kalvi – Supreme Court Judgment 9 August 2011


நன்றி - http://arulgreen.blogspot.com/


11.5.11

பட்டி மன்றமும் - நீதி மன்றமும்

  • சில நாட்களுக்கு முன்பு, கலைஞர் தொலைக் காட்சியில் ஒரு பட்டி மன்றம். உழைப்பாளர்களுக்கு களைப்பைப் போக்க பெரிதும் உதவுவது நாட்டுப் புறப் பாடல்களா அல்லது திரைப் படப் பாடல்களா? லியோனி எப்போது இந்தத் திரைப்படப் பாடல்களை விட்டு வெளியே வரப் போகிறார் என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் திரைப் படம் தொடர்பான பட்டி மன்றம்தான். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகும் அப்படித்தானே இருக்கிறது. எல்லாமே நமக்குத் திரைப் படம் சம்பந்தப் பட்டவைகள்தானே. நாம் எப்போதுதான் அதைவிட்டு மீண்டு வரப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. 
    • சரி அது இருந்து விட்டுப் போகட்டும். அன்றைய தீர்ப்பை முடிவு செய்ய உதவியது, கலைஞரின் பொன்னர் சங்கர் - அதாவது திரைப் படப் பாடல்கள். 
    • எந்தப் பட்டி மன்றங்களும், பேச்சாளர்களின் விவாதத்தை முன்வைத்து யார் மிகச் சிறப்பாக வாதடியிருக்கிரார்களோ அதை முன்னிறுத்தி ஒரு போதும் தீர்ப்பு வருவதில்லை. நீதிபதி - பட்டிமன்ற நடுவர் - என்ன நினைக்கிறாரோ அதுதான் எப்போதும் தீர்ப்பாக வருகிறது. பேச்சாளர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் ஒரு போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை என்பதுதான் கவனிக்கப் படவேண்டியது. 
    • மேலும், அன்றைய தினம் கலைஞர் அவர்கள் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டதாலும், அவரும் திரைப்படத்தோடு தொடர்பு கொண்டவர் என்பதாலும், அண்மையில் அவரது பொன்னர் சங்கர் வெளிவந்தது என்பதாலும், இந்தத் தீர்ப்பு கலைஞருக்கு பிடிக்கும் என்பதாலும் அந்தத் தீர்ப்பு என்றே கருத வேண்டியிருக்கிறது. 
  • நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்குப் பிடிக்கும் விதத்திலேயே வழங்கப் படுகிறதோ என்று ஒரு சந்தேகம் - நீதி மன்றத்தை அவமதிக்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை. நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது என்பதால் இந்த அய்யம். பதினான்காம் தேதிதான் ஒரு தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்  - இதைப் படித்தவுடன் எனக்கு அந்தப் பட்டிமன்றம்தான் நினைவுக்கு வந்தது. - ஏன் பதினான்காம் தேதி? 
    • தேர்தல் முடிவுகள் இந்தத் தீர்ப்பை நிர்ணயம் செய்யலாம்.  
    • பட்டிமன்றங்கள் போலத்தான் நீதி மன்றங்களும் இருக்கின்றன
கலைஞருக்கும் இது தெரியும் - அவரின் சக்திக்கு உட்பட்ட இடங்களில் அவரின் விருப்படியே தீர்ப்பு வருகிறது. அதுபோலவே இன்னும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் இருக்கும் இடங்களில் அப்படித்தான் இருக்கும் என்பதை அவர் அறிவார்.

28.8.10

நீதித் துறை

நீதித் துறையில் -  2 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன. எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் இந்த வழக்குகள் முடிக்கப்பட?

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான் - ஒன்று வழக்குத் தொடுத்தவன் இறக்க வேண்டும் அல்லது  வழக்கு தொடுக்கப் பட்டவன் இறக்க வேண்டும் - ஆனாலும் வாரிசுகள் வழக்கில் ஆர்வம் காட்டும் போது ஆதுவும் வாழையடி வாழையாகத் தான் தொடரும்.

சீனாவில் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள் அளவிற்கு சாலையில் போக்குவரத்து ஜாம் ஆகியிருக்கிறது. இப்படி ஏறக்குறைய பத்து நாட்களாக இருக்கின்றது. சரியாக இன்னும் ஒருமாதம் ஆகும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ட்ராபிக் ஜாம் இன்னும் ஒரு மாதத்தில் சரியாகி விடும் - நமது நீதித்துறை ட்ராபிக் ஜாம் ஒரு போதும் சரியாகாது.

14.4.10

நீதியும் தொழிலும்

நீதிமன்றத்தின் தொடர் ஆதரவு

தில்லி - மாநகராட்சியின் அனுமதி பெறாமல் பல இடங்களில் செல் போன் டவர் வைத்திருந்த பல்வேறு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகும் அனுமதி பெறாமல் இருந்த டாடா நிறுவனத்தின் 35 செல் போன் டவர்களை சீல் வைத்திருக்கிறது மாநகராட்சி.
இதை எதிர்த்து - தங்களது தொழில் பாதிக்கப் படுகிறது என்று உயர் நீதி மன்றத்தில் டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
உயர் நீதி மன்றம் சீல் வைத்தது தவறு என்று சொல்லி உடனடியாக சீல்களை அகற்றும்படி உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

பணம் உள்ளவனுக்கு சார்பாகத்தான் நீதி எப்போதும் இருக்கும் என்பதற்கு மற்றொரு உதாரணம்.
இருக்க இடமில்லாதவன் ஒரு குடிசை போட்டால் அது
- செல் டவர் இருந்தால் - அது அவர்களது உரிமையா -


இந்திய நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபர் - இப்படி இருந்தால் எல்லாரும்தான் தொழிலதிபராக இருக்கலாம்?

இப்படி நீதித்துறை இருந்தால் எல்லா இடங்களிலும் அனுமதி பெறாமலே செல் டவர் வைக்கலாம்.

வக்கீல்கள்

வக்கீல்கள்

எந்த நிரபராதியும் எந்த விதத்திலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான்
வக்கீல்களின் "தொழிலை" மிகவும் உயர்ந்ததாகவும்,
இன்னும் சொல்லப் போனால்
புனிதமாகவும் கருதும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

சந்தர்ப்ப நிலையினாலும்,
அல்லது பிறரின் சூழ்ச்சிக்கு பலியாகவும்
அல்லது பணபலத்தினால் குற்றங்கள் கட்டமைக்கப் பட்டு
அதனால் குற்றம் சாற்றப் படும் நிலையில்,
குற்றம் செய்யாத நபர்கள் தங்களது குற்றமின்மையை
எடுத்துரைப்பதற்கு உதவியாகவும் - நிரபராதிகளை விடுவிக்கவும்
வக்கீல்கள் உதவியாக இருக்கிறார்கள்.

அல்லது குற்றம் சாற்றப் பட்டவர்கள்
எந்த விதத்திலும் தப்பித்து விடாமல் இருக்கவும்,
அதன் வழியாய் நீதி நிலைநாட்டப் பாடவும்
உதவியாகவும் அவர்கள் செயல்பட வேண்டும்.
அதனால்தான் அவர்களுக்கென்று சிறப்பான ஒழுக்க நெறிகள் உள்ளன.

ஆனால் அந்தத் தொழிலும் வெறும் பணம் அறுவடை செய்யும்
தொழிலாகவே மாறிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்.
போலி மருந்து விற்பனை செய்து மாட்டிக் கொண்ட தொழில் அதிபருக்கு ஆதரவாக அமைச்சரின் மனைவி ஒருவர் வாதாட இருப்பதாக உள்ள செய்திகள்
அரசுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

சட்டம் அறிந்தவர்கள் என்பதனால்,
சட்டத்திலிருந்து தப்பிக்கும் விதத்தில்
குற்றங்களை செய்வதற்கான
திட்ட வரையரைகளை செய்வதிலிருந்து -
அதிலுருந்து விடுபடுவது எப்படி என்பதுவரை எல்லா திட்டங்களை செயல் படுத்த உதவியாய்
இருப்பதனால் அவர்கள் வக்கீல்கள் என்பதையும் தாண்டி
குற்ற உற்பத்தியாளர்களாகவே தெரிகிறார்கள்.