15.2.17

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது



·       டிகுன்னாவை திட்டித் தீர்த்த அதே கூட்டம், அதே தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகளைக் கொண்டாடுகின்றது.
o    நீதிபதிகள் மாறலாம் நீதி மாறுமா???

·         அன்றையத் தீர்ப்பு வந்த போது அழுதுகொண்டே முதல்வர் பதவி ஏற்ற ஓபிஎஸ், இன்று இந்தத்தீர்ப்பு வந்ததே தான் முதல்வராகப் பதவி ஏற்கத்தான் என்று நினைக்கிறார்.
o    காலம் மாறும், மனநிலை மாறும்.

·         இந்தத் தீர்ப்பின் படி நியாயம் நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்று முதல் குற்றவாளி கல்லறையில் இருந்து நியாயம் பேசுகிறார்கள்.
o    உடல் மண்ணாய் மாறினாலும் குற்றம் மாறுமா?

·         முதல் குற்றவாளி ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் இந்தத் தீர்ப்பு வந்திருக்குமா?
o    “பார்த்து” செய்திருக்க மாட்டார்களா?

·         ஊரே பன்னீரைத் தேடிச் செல்லும் போது, பன்னீர் தீபாவைத் தேடிச் செல்லுகிறார். அரசியல் தெரியாத பச்சிளங்குழந்தை – இரு கரங்களாகச் செயல்படுவோம் என்று சொல்கிறது. அதைத் தூக்கி தலையில் வைக்கும் தமிழனின் தன்மானம் கண்டு மகிழ்ச்சி.
o    ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் நம்மையெல்லாம் திருத்தவே முடியாது.”


ஐயா பெரியோர்களே, தாய்மார்களே, இனிமேலாவது இந்த நாடகம் முடிவுக்கு வரட்டும். வரம் பெற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிந்து கொண்டு, தண்டனை பெற இருக்கும் சசிகலாவை அழைக்காமல் விட்ட ஆளுனரைப் பாராட்டுவோம். 
இப்படித்தான் வரும் என்று முன்கூட்டியே தெரிந்து ஆழ்நிலைத் தியானம் செய்து, அம்மாவின் ஆசியோடு ‘நாளை பாருங்கள் என்று சொன்ன ஒபிஎஸ் அவர்களைப் பாராட்டுவோம். 
இதை அவருக்கு முன்கூட்டியே சொல்லிக் கொடுத்த அம்மாவின் ஆசீரைப் பாராட்டுவோம். 
வேறு வேலையே இல்லாமல் இதை இருபத்தி நான்கு மணி நேரமும் நேரலை செய்த தொலைக்காட்சிகளைப் பாராட்டுவோம். 
இதற்கும் பா.ஜ,கவிற்கும் தொடர்பு இல்லை என்றவர்களையும், இதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பு இல்லை என்றவர்களையும் பாராட்டுவோம்.

விசு அவர்கள் ஆளுநர் – ஓபிஎஸ் – சுக்கு பஞ்சபூதங்களும் சேர்ந்துவரும் ஐந்து மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்ததாகவும், சசிகலாவிற்கு ஏழரைக்கு [ஏழரை என்றால் சனியன் என்று உங்களுக்கு தெரியும்] என்று சொல்கிறார். இப்போது தெரிகிறதா? இது இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால், அவரை இயக்குவது யார் என்று தெரிகிறதா மக்களே. ஒன்று நீதிபதிகள் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று முன்கூட்டியே ஆளுநரிடம் சொல்லியிருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு சொல்லியிருக்க வேண்டும். இதுவரை ஜெயலலிதாவை சந்திக்கவே விடவில்லை என்பதை எத்தனை வருடம் கழித்துச் சொல்லுகிறார் என்று பாருங்கள் வீரமான விசு. இப்போது தெரிகிறது, தீபாவிற்குப் பின் யார் இருக்கிறார்கள், அவரை யார் இயக்குகிறார்கள். ஒபிஎஸ் என் அம்மாவின் கல்லறை சென்றார் என்று.


இத்தனை நாள் களோபரத்தில், கடலில் கொட்டிய எண்ணெய் என்ன ஆனது என்றே தெரியவில்ல. தடுப்பூசி வேண்டாம் என்று சொன்ன போது அதையும் மீறி அரசு கேட்காமல் தடுப்பூசிகளைப் போட்டதில் எத்தனை குழந்தைகள் உடல்நிலை சரியில்லை, அல்லது மரணம் என்பது தெரியவில்லை. எத்தனை இடங்களில் பன்றிக்காய்ச்சல்கள், உயிரிழப்பு, என்பது பற்றி எந்தச் செய்தியும் இல்லை. எதுவும், எதுவும் இல்லை. நாமெல்லாம் மனுஷங்களா? இந்த லட்சணத்தில் மீண்டும் நேரலையாம். ஆளுநரின் அடுத்த ஆட்டமாம். எடப்பாடியா ஓபிஎஸ்- ஆ? அவர்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது. 

போங்கையா போங்க. போய் பிள்ளை குட்டிய படிக்க வைங்க.

*   *   *   *   *   *   *


10.2.17

தற்காலிக முதல்வரின் திராவிட வீரம்

தற்காலிக முதல்வரின் திராவிட வீரம்

மன்னார்குடி மாபியாவிடமிருந்து தமிழகத்தை மீட்கத்தான் வேண்டும். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதற்கான மாற்று / தீர்வு, தற்காலிக முதல்வரின் தற்காலிக வீரம்தானா?

  • மெரீனா மீண்டும் பொங்கி எழுந்திருக்கிறது. கடந்த முறை லட்சக்கணக்கான இளைஞர்களினால் எழுந்த எழுச்சியை, காவல்துறையைக் கட்டவிழ்த்து, கலங்கரை விளக்கை களங்கப்படுத்தியதற்காக  வெகுண்டெழாத தற்காலிக முதல்வர், தான் அவமானப்படுத்தப்பட்டதால், சீறிப் பாய்ந்திருக்கிறார். அம்மாவே எதிர்க்காத தனது தோழியை அவரது சீடர் எதிர்த்திருக்கிறார். அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
  • எம் இளைஞர்களை நீங்கள் அடித்து நொறுக்கிய போது சொல்லியிருக்க வேண்டாமா, மாண்புமிகு முதல்வர் அவர்களே – நீங்களும் ஜல்லிக்கட்டு வீரன் என்று? இப்போதுதானே சொல்கிறீர்கள். அதையும் சொல்லக் கூடாது என்று யாரவது கட்டாயப்படுத்தினார்களா? போராட்ட வீரர்களைத் துரோகிகள் என்று, பின்லேடனின் சீடர்கள் என்று ஒரு போட்டோ காட்டும் போது உங்கள் மனசாட்சி துடித்திருக்க வேண்டாமா?
  • பணிவு என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அறியாத அப்பாவியான நீங்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து அறுபது நாட்கள் கழித்து, அம்மாவின் ஆன்மா உங்களை எழுப்பியது குறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ராஜினாமா செய்த பிறகுதான் உங்களுக்கு அம்மாவின் மரணம் குறித்து சந்தேகம் வந்திருக்கிறதா, மாண்புமிகு முதல்வர் அவர்களே? அப்படி அம்மாவின் உண்மைத் தொண்டன் என்றால், உங்களின் முதல் அறிவிப்பே அம்மாவின் மரணம் குறித்து அறிய விசாரணைக் கமிஷன் இருப்பதாய் இருந்திருக்க வேண்டாமா முதல்வர் அவர்களே? இப்போதுதான் இதை பற்றி உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது என்றால் எங்களுக்கு உங்கள் மீது சந்தேகம் வராதா முதல்வரே?
  • மன்னார்குடி மாபியா என்று எல்லாராலும் அழைக்கப்படுகிறவர்கள் பற்றி உங்களுக்கு முன்பே தெரியாதா? இதுவரைக்கும் அவர்கள் உங்களையும் மற்றவர்களையும் மரியாதையோடுதான் நடத்தி வந்தார்களா? இதுவரைக்கும் அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதது போல இப்போதுதான் இதைப் பற்றியே உங்களுக்குத் தெரிந்தது போலவும் சொல்லுகிறீர்களே முதல்வரே, சின்னம்மா காலில் விழச்சொல்லி உங்களைக் கட்டாய படுத்தினார்களா? அவர்கள் காலில் எல்லாம் விழுந்த போது  வராத அவமானமா இப்பொது உங்களுக்கு வந்துவிட்டது முதல்வர் அவர்களே? எத்தனை பேர் அவர்கள் காலில் விழுந்திருந்தாலும் நீங்கள் நிமிர்ந்து நின்றிருக்க வேண்டாமா?
  • ராஜினாமா செய்த கையோடே நீங்கள் அம்மா கல்லறை சென்று ஆழ்நிலைத் தியானம் சென்றிருந்தால் நாங்கள், நீங்கள் சொல்வதை உண்மை என்றே ஒத்துக் கொண்டிருப்போம். என் இளம் தம்பி தங்கைகளை, அக்காக்கள், அம்மாக்களை அடித்து நொறுக்கிய போது சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருப்போம். ஆனால் இப்போது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறதே தற்காலிக முதல்வரே?
  • சரி அப்படியே இந்த மிரட்டல்கள், அம்மாவின் ஆட்சி என்றெல்லாம் நீங்கள் நினைத்திருந்தால், இந்நேரம் அதை ஏதாவது ஒரு வழியில் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்க வேண்டாமா?
  •  உங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு எல்லாரும் தி. மு. க. காரணம் என்று சொல்கிறார்கள். ஸ்டாலின் பன்னீரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் என்று நீங்களே காலில் விழுந்து சொன்ன சின்னம்மாவும், சசிகலாவை நான் பார்த்ததே இல்லை என்று சொன்ன நாஞ்சில் சம்பத்தும் சொல்லுகிறார்கள். அவர்கள் கூட உங்களை யார் ஆட்டுவிக்கிறார் என்று தெரியாமல் இருக்கிறார்களா? அல்லது அதைப் பற்றி பேசி இன்னும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்களா? ஒரு சில ஊடகங்கள் தவிர வேறு யாரும் உங்களை ஆட்டுவிப்பவர் யார் என்று சொல்ல யோசிக்கிறார்கள்.

  • உங்கள் அம்மா இறந்த போது ஒருவர் நெஞ்சில் ஓடிச்சாய்ந்து அழுதீர்களே நினைவு இருக்கிறதா?
  • உங்கள் அம்மா இறந்ததாக அறிவிக்கப்படும் முன்னரே நமது பொன்னார் என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா? அக்டோபர் மாதம் இருபத்தி மூன்றாம் தேதி – உங்கள் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து முப்பத்தி ஒரு நாட்கள் கழித்து – தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் வரப் போகிறது, அதை வைத்து நமது ஆளும் அதிகாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாரே – அது உங்களுக்குத் தெரியாதா?



  • உங்களுக்கும் சேகர் ரெட்டிக்கும் என்ன தொடர்பு முதல்வரே – சசிகலாவையே தெரியாது, பேசியதில்லை என்று சொன்ன  நீங்கள் இவரையும் தெரியாது என்று சொல்வீர்களா? இவருக்கும் சசிகலாவிற்கும் தொடர்பு இல்லையென்றால் இவருக்கும் உங்களுக்கும்தான் தொடர்பு இருக்க வேண்டும். அதனால்தான் மத்திய அரசின் பிடியில் நீங்கள் இருக்கிறீர்களோ என்கிற சந்தேகம் வருகிறது. அவருக்கும் சசிகலாவிற்கும்தான் தொடர்பு என்றால் இந்நேரம் அவைரைத் தூக்கி உள்ளே வைத்திருக்காதா மத்திய அரசு?
  • காந்தியைக் கொன்ற ஓர் அமைப்பு, ஏறக்குறைய பதினான்குஆண்டுகளுக்கும் மேலாக ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படாத ஓர் அமைப்பிற்கு நீங்கள் அனுமதி வழங்கியிருக்கிறீர்களே இது எதனால் என்று எங்களால் ஊகம செய்து விட முடியாதா? நீங்கள் யார் நெஞ்சில் சாய்ந்திருக்கிறீர்கள் என்பதுதெரியாதா?
  • உங்களுக்கென்று திரு விசு அவர்கள் குரல் எழுப்புகிறார். கையெடுத்துக் கும்பிடுகிறார். குருமூர்த்திகள் இருக்கிறார்கள். கணேசன்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பார்க்கும் போதுதான் உங்களின் திராவிட வீரம் மீது சந்தேகம் வருகிறது முதல்வரே. உங்களின் தன்மானம் மீதும் எங்களுக்கு ஐயம் வருகிறது.
  • நீங்கள் இன்னொரு மாபியா ஆகவோ, அல்லது இன்னொரு இடத்தில் கூழைக்கும்பிடு போடும் திராவிட முதல்வராகவோ இருக்க மாட்டீர்கள் என்று எங்களை நம்ப வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். ஒரு நாள் பேசி விட்டீர்கள் என்பதற்காக உங்களுக்கு உண்மையிலேயே வீரம் வந்து விட்டது என்று நம்பத்தயாரில்லை. 
  • நீங்கள் உண்மையிலேயே ஜல்லிக்கட்டு வீரன் என்றால் மத்திய அரசிடமும் மல்லுக்கட்டுங்கள்..... நாங்கள் சொல்வது பொய் என்று நிரூபியுங்கள்.
மக்களின் தீர்ப்பு இப்போது தேவையில்லையா? 
இன்னொரு தேர்தல் வந்தால் நல்லதில்லையா?




  


  

1.2.17

புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி


புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி  
- அ . பிரபாகரன் 
 சில ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் படித்த போது அங்கே உள்ள வெரோனாவில் ஒரு பங்கில் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பங்குக்குருவுக்கு உதவுவது என் வேலை. அவ்வப்போது அங்கே திருப்பலிக்கு ஒரு வயதான அம்மா பாப் தலையோடு வருவார். ஒவ்வொரு முறையும் திருப்பலி முடிந்தபிறகு என்னைத் தன் வீட்டுக்கு அழைப்பார். வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் அவரது கணவரும் என்மேல் பிரியமாக இருப்பார். அப்படி ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த அம்மா ஒரு புகைப்பட ஆல்பத்தைக் கொண்டு வந்தார். அதில் வெரோனாவில் உள்ள ஒரு சிற்றாலயத்தில் நற்கருணை ஆராதனை செய்யும் புகைப்படம் இருந்தது. அதைக்காட்டி, “உங்களுக்கு இதில் உன்ன தெரிகிறது?” என்றார். “அப்பம் வெள்ளையாக இருக்கிறது, வேறொன்றும் தெரியவில்லை” என்றேன்.

அவரோ என்னைக் கொஞ்சம் எரிச்சலுடன் பார்த்தார். அவரது கணவர் புன்னகைத்தார். செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் அவரது கணவர் நிறைய வாசிப்பவராக இருக்கக்கூடும். அவரது அறையில் மிகத் தடிமான புத்தகங்களும் முக்கியமான களஞ்சியங்களும் இருந்தன. நமது ரூபாய் மதிப்பில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு இருக்கலாம் அவை. அவரது கணவர் சிறுபுன்னகையோடு சொன்னார், “இந்த அப்பத்தில் இயேசுவின் உருவம் இவருக்;குத் தெரிகிறது என்று இவள் சொல்கிறாள், உங்களுக்குத் தெரிகிறதா? எனக்கு வெறும் அப்பம் மட்டும்தான் தெரிகிறது” என்றார். அந்தப் பெண்மணி உணர்ந்த இயேசுவின் உருவம் தெரியும் அந்தப் புதுமையை என்னால் அன்று உணர முடியாததுபோல பல தருணங்களில் நிகழ்ந்திருக்கிறது.

இறையியல் படிக்கின்ற காலங்களில் மைக் எவான்ஸ் போன்ற பெந்தகோஸ்து பிரச்சாரகர்களின் சீரணி அரங்கக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவை எனக்கு வேடிக்கையாகவும், கொஞ்சம் அதிசயம் மற்றும் வினோதமாகவும், நேர்த்தியாக நடைபெறும் சர்ரியலிச நாடகக் காட்சி போலவும் தோன்றும். அடிப்படையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பவன் மனித வாழ்வில் இறைவன் அசாதாரணமான ஈடுபடும் சாத்தியங்கள் உண்டு என்பதை நம்புவனாக இருக்கவேண்டும். நான் நம்புகிறேன். இருப்பினும் பெரும்பாலான மாதா கண்சிமிட்டுதல், சிலுவையில் இரத்தம் வடிதல், சுவற்றில் உருவம் தெரிதல் வகையிலான புதுமைகளை நான் பொருட்படுத்தியதில்லை. அது தனி நபர் அனுபவம் சார்ந்தது. அவரவர் மனச்சான்று சார்ந்தது. என்னைப் பொருத்தவரை எனக்கு அது நிகழவில்லை. அவ்வளவுதான்.

ஆனால், என் தனிப்பட்ட வாழ்வின் வழி நடத்துதலிலும் சமூக வரலாற்றின் இயக்கங்களிலும் கடவுள் அற்புதங்கள் செய்பவராக இருக்கிறார் என்பதை உணர்கிறேன். கடந்த சனிக்கிழமை எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி ஓர் அற்புதமாக அமைந்து போனது. கடந்த சனிக்கிழமையன்று நானும் என் நண்பரும் மெரினாவுக்குச் சென்று போராடும் இளைஞர்களோடு இருந்துவிட்டு வரலாமே என்று புறப்பட்டோம். அது இப்படி ஓர் உன்னதமான அனுபவமாக அமையும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வாழ்வின் அற்புதமான தருணங்களில் ஒன்றாகவும், மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகவும் அது அமைந்து போனது.

உலகில் வேறு எங்கேனும் போராட்டமே கொண்டாட்டமாகவும், கொண்டாட்டமே போராட்டமாகவும்; நிகழ்ந்;திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. 

இது ஒரு புதுமைதான். ஜல்லிக்கட்டுக்கான ஒரு சாதாரணப் போராட்டம் எப்படி இவ்வளவு தீயாய்ப் பரவியது? ஏதோ கிராமங்களில் மட்டும் நிகழக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு எப்படி இத்தனை ஆதரவு கிடைத்தது. லேப்டாப் இளைஞர்களும் வாட்ஸ் அப் நவநாகரீக யுவதிகளும் எப்படி போராட முன் வந்தார்கள்? வாழ்க்கையிலே ஒருமுறை கூட ஜல்லிக்கட்டு பார்த்திராத நகர்ப்புற மாந்தர்கள் எப்படிக் குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்தில் உட்கார்ந்து சென்றார்கள்? மக்களை மந்தைகளாவே வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் இவர்கள் பின்னால் போக நேரிட்டது எப்படி?

கேள்விகள் எதற்குமே எந்தவிதமான தர்க்கரீதியான பதில்கள் இல்லை. இது நிச்சயமாக என் காலத்தில் நான் கண்ட புதுமைதான். புதுமை என்பது ஏதோ அமானுஷ்யமாக வாழ்வின் இயக்கங்களுக்கு மாற்றாக நடக்க வேண்டியதில்லை. வரலாற்று இயக்கங்களுக்குள் இறைவன் ஊடுருவி பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்தி தருவதே விவிலியம் கூறும் புதுமைகளிலெல்லாம் பெரிய புதுமை. இஸ்ராயேல் மக்களின் எகிப்திய விடுதலையைவிட வேறு எந்தப் புதுமை உண்டு? அது வரலாற்று நிகழ்வுகளுக்கு ஊடாகத்தானே நடைபெற்றது. மெரினாவில் நிகழ்ந்த புதுமை அனுபவத்தில் ஒருநாள் சஞ்சரித்து வந்த எனக்கு சமகாலச் சமூகத்தின் பன்முகக் கூறுகளை பார்க்கும் அனுபவமாக அது அமைந்து போனது.

ஒரு பின்நவீனத்துவச் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அனைத்துக் குறியீடுகளும் நிறைந்து கிடந்தது மெரீனாக் கடற்கரை பெரிய கூட்டம். கடற்கரை முழுவதும் மணலோடு போட்டி போட்டுக் கொண்டு மக்கள் கூட்டம நின்றது. ஆனால் ஒன்று பட்ட குவியம் இல்லை. வழக்கமாக இப்படிப்பட்ட போராட்டங்களில் எதிர்கொள்ளும் பெரிய தலைமைகள் இல்லை. எங்கும் ஜனத்திரள். ஆங்காங்கே சிறு கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே கொஞ்சம் பொதுக்கூட்டம் போன்ற தோற்றம் இருந்ததே தவிர ஆங்காங்கே அதே போல பல கூட்டங்கள் நடந்தன.

யார் வேண்டுமானாலும் பேசினார்கள். எவருக்கும் மைக் கிடைத்தது. சிறு சிறு குழுக்கள் ஆங்காங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் ட்ரம்ஸ் வாசித்தார்கள். சிலர் தப்பு வாசித்தார்கள். சிலர் கரகாட்டம் ஆடினார்கள். சிலம்பாட்டம் நடைபெற்றது. இளம்பெண்கள் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள். கோசம் போட்டார்கள்;. சிலர் அமைதியாக பேனர் வைத்துக் கொண்டு நின்றார்கள். சிலர் மைக்கில் பேசினார்கள். சிலர் மைக் இல்லாமலும் பேசினார்கள். சிலர் சாலைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். எங்கிருந்தோ பிஸ்கட் பாக்கெட்கள் வந்தன. தண்ணீர் வந்தது. வாழைப்பழத்தார்களை சிலர் சுமந்து வந்து கொண்டிருந்தார்கள். திடீர் டாய்லெட்டுகள் ஆங்காங்கே நின்று கொண்டு மனிதர்களின் கழிவுகளை வாங்கிக் கொண்டு அவர்களை வெளியே அனுப்பின. சில நேரங்களில் குழந்தைகள் காணாமல் போனார்கள். மைக்கில் அறிவிப்புச் செய்ததும் மீண்டும் கிடைத்தார்கள்.

சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் சென்று பங்கேற்காவிட்டால்;; ஆயுசு குறைந்துவிடும் என்று எண்ணியது போல குடும்பத்தோடு வந்து பார்த்தோ பங்கெடுத்தோ சென்றான் என்று தோன்றியது. மொத்தத்தில் பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சமான சிறியவைகளின் உடைபட்ட கொண்டாட்டமாக அது அமைந்தது. இதைக் கடந்து வந்திருந்த மக்கள் யாரென்று பார்த்தால் பெரிய புதுமை காத்திருந்தது. கிராமத்தினர் இருந்தார்கள். கிராமத்தில் இருந்து பெற்றோருக்குத் தெரிந்தோ தெரியாமலோ சென்னை வந்து கம்பெனியிலோ, ஹோட்டலிலோ நிரந்தரமாகவோ, நிரந்தரமில்லாமலோ வேலைபார்க்கும் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என இருந்தார்கள். நல்ல படிப்புப் படித்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பீட்டாவை திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மூன்று லட்சமோ, ஐந்து லட்சமோ நன்கொடை கொடுத்துக் கல்லூரிகளில் சேர்த்துவிட்ட பிள்ளைகள், பதாகைகளோடும் கோசங்களோடும் நின்றார்கள். பெரியார் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். தீவிர கம்யூனிசம் பேசுபவர்கள் இருந்தார்கள். தமிழ்த்தேசியவாதிகள் இருந்தார்கள். எந்த இசங்களும் தெரியாத அப்பாவி ஜனங்களும் இருந்தார்கள். திருநீறு, குடுமிகளோடு வந்தவர்களும் இருந்தார்கள். இவர்கள் தமிழ்ப் பெண்களாக இருக்காது என்று தோன்ற வைத்த சிவப்புப் பெண்களும் சுடிதார்களுடன் இருந்தார்கள். சும்மா வந்தவர்களும் இருந்தார்கள். மிகுந்த தீவிர உணர்ச்சியோடு அங்கேயே தங்கி கண்களில் கனலோடு போராடிய இளைஞர்கள் இளம் பெண்களும் இருந்தார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் பன்மைத்துவத்துக்கான அங்கீகரிப்பாகவும், கொண்டாட்டமாகவும் இருந்தது மெரினாக் கடற்கரை. பின்நவீனத்துவத்தின் நேர்மறை அம்சமே பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதுதானே!.மொத்தத்தில் ஓர் வித்தியாசமாக அனுபவமாகவும், அற்புதமாகவும், நமது பண்பாட்டு உணர்வையும் அடையாளத்துக்கான தேடலையும், கொண்டாட்ட உணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்டி எழுப்புவதாக இருந்தது மெரினா அனுபவம். இந்த உணர்வு நிலையிலே சஞ்சரித்துவிடாமல் நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உண்டு. அவற்றுள் சில. 
  • முன்பு போலத் தூய்மைவாதம் பேசி ஒன்று திரட்டப்பட்ட அணிச்சேர்க்கைகளைக் கொண்டு போராடுவதே விடுதலைக்கு வழி என்று சொல்பவர்கள் தங்கள் வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பின் நவீனத்துவ உலகில் பல்வேறு கருத்தியல்கள். நோக்கங்கள் உள்ளவர்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் சேரும் புள்ளிகளை இனம்கண்டு கொள்வதே சாத்தியம் என்பதை மெரீனா கற்றுக் கொடுத்திருக்கிறது. ஜல்லிக்கட்டை எதிர்த்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டது ஒரு நல்ல அம்சம். 
  • மற்ற மாநிலங்களில் பம்மாத்துக் காண்பிப்பது போல் தமிழகத்தில் பன்மைத்துவத்தையும், இங்குள்ள பண்பாட்டு வேர்களையும் அழிக்க நினைத்தால் அந்த பருப்பு இங்கே வேகாது. இங்கே “மோடி” மஸ்தான் வேலைகளெல்லாம் பலிக்காது. 
  • இப்போது நடைபெற்ற போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. அமுக்கப்பட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் வெளிப்பாட்டுக் குவியலே ஜல்லிக்கட்டு. தமிழகம் புறக்கணிக்கப்படுதல், விவசாயிகளின் தற்கொலை, ரூபாய் நோட்டு செல்லாததால் கோபம், வேலையின்மை, ஜெயலலிதா மரணம் எதிர் கொள்ளப்பட்ட விதம் எனப் பல்வேறு பிரச்சனைகளால் நொறுங்கொண்ட தன்னிலைகளின் எதிர்ப்புக் குரலே ஜல்லிக்கட்டுப் போராட்டம். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை உணர வேண்டும். 
  • தற்போதைய முதல்வர் ஓ.பி செயலலிதா இறந்த நாளான டிசம்பர் 5ஐ தமிழகத்தின் இருண்ட நாளாக அறிவித்திருக்கிறார். செயலலிதா இருந்திருந்தால் இந்தப் போராட்டம் எப்படி எதிர் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நன்கு உணர்ந்வர்களுக்கு ஒப்பீட்டளவில் மென்மையாகத் தெரிந்த ஓ.பி.எஸ் இதை அறிவித்திருப்பது நல்ல நகை முரண். 
  • இந்தப் போராட்டத்தை முன் வைத்து பல்வேறு ஆதர்சங்களும், பிம்பங்களும் தலைமைகளாகக் கட்டமைக்கப்படுவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. அது மிக மேம் போக்கானதாகவும் நம் சமூகச் சிக்கல்களின் புரியாமை வெளிப்பாடகவும் தெரிகிறது. குறிப்பாக, கலாமின் வழிவந்த கூட்டம் ஒன்று சகாயம் போன்றவர்களைத் தீர்வுகளாவும், இலட்சிய நாயகர்களாவும் கட்டமைக்க முயல்வது தமிழ்ச்சமூகம் அடிப்படையில் தன் பிரபுத்துவ மனநிலையில் இருந்தும் நாயக வழிபாட்டுச் சிந்தனைகளில் இருந்தும் வெளிப்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 
  • ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழ் அடையாளத்துக்கான போராட்டமாகவும், நமக்கான பண்பாடுகளை நாமே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரத்துக்கான போராட்டமாகவும் பார்க்கப்பட வேண்டும். மாறிவரும் விஞ்ஞான உலகில் தமிழ்ச்சமூகத்தில் ஜல்லிக்கட்டின் பொருத்தப்பாடு இன்மை, மற்றும் அதில் இருக்கக்கூடிய சனாதன அம்சங்கள் என்றும் கவனத்துக்குரியவை. 
  • இப்போராட்டம் தமிழ்ச் சமூக எதரிகள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பளித்திருப்பது பாராட்டுக்குரியது. இதை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்பது யாரெல்லாம் போலிஸ் அட்டூழியத்தை சிவனின் திருவிளையாடலாகப் பார்த்தார்கள் என்பதையும் உணர்ந்தாலே இது புரியும். 
  • இக்கட்டுரையை எழுதி முடிக்கும் இத்தருணத்தில் போராட்டம் காவல் துறையின் அராஜகத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இருக்கிற பயங்கரவாதத்திலேயே கொடூரமான பயங்கரவாதம் காவல் துறையின் பயங்கரவாதம்தான். காரணம், அது அரசு அங்கீகாரத்தோடு செய்யப்படுகிறது. ஆனால் என்ன ஒன்று, சமூக வலைத்தளங்களால் அது முன்னெப்போதையும்விட இது பயங்கரமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 
  • ஜாலியன் வாலாபாக்கிலிருந்து, கூடங்குளம் வரை வரலாறு முழுக்க எல்லாப் போராட்டங்களிலும் இதுதான் உண்மை. ஆனால் செல்போன் யுகத்தில் இது அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் காவல் துறையினர் இனி பத்திரிக்கையாளர்களின் காமெராக்களை அணைத்துவிட்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் அராஜகங்களைத் தொடங்குவார்கள் என்று நம்பலாமே தவிர வேறு எதுவும் நல்லது நடக்கும் என்று தோன்றிவில்லை. 
முடிவாக: 
அற்புதங்களில் ஒரு சிக்கல் இருக்கிறது. அற்புதங்களை அனுபவிப்பவர்கள் அந்த நேரத்தில மட்டும் பரவசப்பட்டுவிட்டு பிறகு வழக்கமான இயல்புநிலைக்குத் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறது. இயேசுவின் அற்புதங்களை அதிசயித்து ஆகோ, ஓகோவென ஆர்ப்பரித்தவர்கள் அவரை அரசராக்க விரும்பியவர்கள் (யோவா 6) பிறகு தங்கள் பழைய நிலைக்குத் திரும்பி அவரைச் சிலுவையில் அறையக் கோசமிட்டார்கள். இந்த பின் நவீனத்துவ அற்புதங்களில் ஒன்றான இந்தப் போராட்டத்தின் பங்குதாரர்களும் அப்படிப் போவதற்கான சாத்தியம் இருக்கிறது. வால் ஸ்டிரீட் எழுச்சி நமக்கு ஞாபகம் வரவில்லையா? பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் நெகிழ்வுத்தன்மை (Fluidity) மற்றும் தற்காலத் தன்மை (Momentariness). இந்த ஜல்லிக்கட்டு எழுச்சியும் அப்படிப் போய்விடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. அப்படி இல்லாமல் ஆக்கச் செய்வதே வரலாற்று அற்புதங்களை நம்புகிறவர்களின் பணியாக இருக்க முடியும்.