27.12.17

வருவீயா வரமாட்டியா ' திரைப் பாடல்




அடிக்கடி இதே ரோதனையாய் போச்சு---

ஒன்னு வந்து அடிபட்டுப் போகணும்
இல்லையா
பேசாம ஒதுங்கிப் போகணும்.

இரண்டும் இல்லாம
இந்தப்பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் சரியில்லை,  சொல்லிப்புட்டேன்.

நானும் எத்துணை வருஷம்தான் காத்துக்கிட்டே இருக்கிறது.

உங்களை விட எங்களுக்கெல்லாம் வயசாயிப்போச்சு.
நாங்களும் பேரன் பேத்தி எல்லாம் பாத்தாச்சு.
ஒவ்வொரு வாட்டியும் புதுப் படம் எடுக்குறப்ப ஏதாவது பேச வேண்டியது.
அப்புறம் மலையேற வேண்டியது,
திருப்பி வந்து போட்டோ எடுக்க வேண்டியது.


நீங்கதான் தைரியமான ஆள் ஆச்சே
வாங்க வந்து பாருங்க.



4.9.17

ஆசிரியர் தினம் - அனிதாவின் செய்தி

அனிதா படித்த பள்ளியில்
ஆயிரம் பேருக்கு மேல் படித்திருப்பார்கள்.
ஆனால் எத்தனை பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள்???

அனிதா
பத்தாம் வகுப்பில் 478
பனிரெண்டாம் வகுப்பில் 1176

ஆசிரியர் யாராயிருந்தாலும் 
அனிதாவால் படிக்க முடியுமெனில் 
ஆசிரியரால் என்ன பயன்?

ஆயிரம் பேரும் ஆயிரத்திற்கு மேல் எடுத்தால்தானே
ஆசிரியருக்குப் பெருமை!

-
அது சரி -
ஆயிரத்திற்க்கு மேல் எடுத்து 
இந்த நாட்டில் என்ன செய்வது?
தற்கொலையா????

-

இந்த நாட்டில்
ஆசிரியர்களுக்கு வேலை இல்லை...

நீட் - டி முழங்கி
கோச்சிங் செண்ட்டர்கள்
அந்த வேலையை எடுத்துக் கொண்டுவிட்டன..
படிக்காதவர்கள்
கல்வி அமைச்சர்களாய் இருக்கும் நாட்டில்
கோச்சிங் செண்டர்களுக்குத்தான் வேலை.

இருந்தாலும்

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

---




2.9.17

தமிழகத் தற்கொலைகள் - இப்போது அனிதா

கடந்த ஒரு வாராக் காய்ச்சலுக்குப் பிறகு 
கணினியைத் திறந்தால் 
நீட் தேர்வின் கொடூர அரக்கனை எதிர் கொண்டு போராடியும் வெற்றி காண இயலாமல், தன்னை மாய்த்துக் கொண்ட அனிதாவின் தற்கொலை 
இதயத்தை இன்னும் கனமாக்கியது.

1196 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை போராடிய ஒரு சாதாரண மாணவியால் வேறென்ன செய்ய முடியும்?

தற்கொலைகள் தவறுதான்.
ஆனால் இவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசுகள் தானே. அவைகள் தவறு செய்யும் போது மக்களுக்கு உதவ வேண்டியவைகள் நீதி மன்றங்கள் தானே.
அரியலூர் மண்ணைச் சேர்ந்த அந்த மாணவி டெல்லி வரை சென்றாள் - தனது வாதத்தை எடுத்து வைத்திருக்கிறாள். ஒரு சாதாரண பிரஜையின் வாதத்தை உணர்ந்து கொள்ளாத அரசு எப்படி மக்கள் அரசாக இருக்க முடியும்?

தமிழகத்தில் ஒரு தலைவர் சொல்லுகிறார் - அவள் இன்னும் இரண்டு முறை நீட் எழுதியிருக்க வேண்டுமாம் - அப்படியும் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேறு ஏதாவது பாடத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமாம். சமூக நீதி பேசி புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் இப்படிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அதாவது 1196 மதிப்பெண் எடுத்தும் நான் விரும்பியதை படிக்க எனக்கு முடியவில்லை என்றால் இந்த பள்ளிகள் எதற்கு இந்தத் தேர்வுகள் எதற்கு? 
18 வயது நிறைவில் நீங்கள் நீட் தேர்வு எழுதினால் போதும் என்றால் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மார்க்குகள் வீண் தானே. 

என்ன உடுத்த வேண்டும்? என்ன மொழி பேச வேண்டும்?  என்ன உண்ண வேண்டும் என்பது வரைக்கும் முடிவு செய்தாயிற்று? இப்போது யார் எதைப் படிக்க வேண்டும் என்று சொல்லுகிற நவீன குருகுலக் கல்வியைத் திணிக்கிறது அரசு. இதையே முன்மொழியும் அரசுகள் இருக்கும் வரை, தலைவர்கள் இருக்கும் வரை அனிதாக்கள் தற்கொலைகளைத் தடுக்க முடியாது.
-
தமிழகத்தின் கவிஞர் 

"அனிதா விரும்பியது கிடைக்கவில்லை என்றால் 
கிடைப்பதை விரும்ப வேண்டும்" அதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை - அப்படி இந்தியாவில் விரும்பியது கிடைக்க வில்லை என்று தற்கொலைகள் செய்து கொண்டால் இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தங்கள் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றால் என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன கவிஞர் இவர்?
-

இப்போது கூட தமிழகம் விழிக்க வில்லை என்றால்
பின்னர் 
எழுவது மிகக் கடினம்.




25.5.17

சரவணன் எய்த சங்கிலி – திரைப்படம்

இது திரைப்பட விமர்சனமல்ல - விவகாரம் 
·    என்னடா புதுப்படம் எதுவும் நமக்குத் தெரியாம வந்துருச்சா அப்புடின்னு நினைக்க வேண்டாம். இந்த வாரம் மூணு திரைப்படங்கள் பாத்தேன் – சங்கிலி புங்கிலி கதவைத் திற, எய்தவன் மற்றும் சரவணன் இருக்க பயம் ஏன்? அந்த மூன்று படங்களுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஒன்னு பரவாயில்லை, இன்னொன்னு சுமார் இன்னொன்னு மோசம் அப்படித்தான் சொல்லணும். ஹீரோசுக்கு பான்ஸ் இருந்தா மன்னிக்கணும்.

·    இன்னைக்கு எப்படியாவது அந்தப் படம் பாக்கணும்னு போன படங்களும் உண்டு. இன்னைக்கு எப்படியாவது படம் பாக்கனும்னு போன நாட்களும் உண்டு. விடுமுறை நாட்களில் எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்பதனால் இந்தப் படங்களை எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. நானாப் போய் மாட்டிகிட்ட படங்கள் என்று சொல்லலாம். அவசரக் கல்யாணம் சாகாவச சங்கடம் என்பது போல அவசரப்பட்டுப் போய் மாட்டிக்கொண்ட படங்கள். கட்டாயப் படுத்தி என்னைச் சங்கிலியில் கட்டிப்போட்ட என் நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம். நான் கட்டாயப்படுத்தி நான் இருக்க பயமேன் என்று நான் பயமுறுத்திய பயந்த என் நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.

·  பல சமயங்களில், பார்க்கும் படங்களை விட, படம் பார்க்கப் போகும்போது கிடைக்கும் அனுபவங்கள் நினைவில் நிற்கும். அப்படி ஒரு சில நினைவில் நின்றன. இன்னைக்கு விட்டா படம் பாக்க முடியாது என்பதனால் ஒவ்வொரு தியேட்டரா பார்த்துப் பார்த்து கடைசியில், தேவி – யில் சங்கிலி புங்கிலிய பாக்கப் போனோம். விரும்பின தியேட்டரும் கிடைக்கல, விரும்பின படமும் கிடைக்கலை. வேகமாய் போற வழியில் குறுக்கே ஒரு ஆட்டோ – திட்டலாம்னு பார்த்தா அருமையான வசனம் அந்த ஆட்டோவின் பின்னால்:
                                     “பாத்துப் போ பங்காளி
                                     நானும் ஒரு தொழிலாளி”
             அதைப் படிச்சிட்டு எங்க திட்டுறது? அப்படின்னா
                                     குறுக்கே வாராதே பங்காளி ன்னுட்டு சைலன்ட்டா போய்ட்டோம்.
·          சென்னையைப் பொறுத்தவரை விடுமுறை நாட்கள் என்றாலும் சாலைகள் முழுவதும் வண்டிகள் மற்றும் வண்டிகள். நாம் எப்போதுதான் சாலையில் வண்டி ஓட்டப் போகிறோம் என்று தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில் ஒன்று ஊர்ந்து செல்கிறோம் அல்லது நின்று கொண்டிருக்கிறோம். இந்த இரண்டைத்தான் நாம் இப்போது சென்னை சாலைகளில் செய்ய முடிகிறது. ஓட்ட வேண்டுமென்றால், சென்னை முழுவதும் பாலம் வேண்டும். போரூரை நாங்கள் கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

·  இப்போதெல்லாம் திரைப்படத்திற்கு தாமதமாகப் போவதையே நான் விரும்புகிறேன். சீரியல் விளக்குகள் போட்ட ஸ்க்ரீன் ஓபன் செய்வதில் இருந்து படம் பார்ப்பதை விரும்பியவன் நான். ஆனால் இப்போதுள்ள சூழலில் தாமதமாகச் செல்வதையே விரும்புகிறேன். சீரியல் விளக்குகளோ அல்லது வெள்ளை ஸ்க்ரீனை மூடியிருக்கும் மற்றொரு ஸ்க்ரீன் இல்லை என்பதனால் எல்லாம் இல்லை. திரைப்படத்திற்கு முன் நடக்கும் இரண்டு விஷயங்கள்.

·  முதலாவது புகைப்பிடிப்பது பற்றிய அறிவிப்பும் அதைத் தொடர்ந்து வரும் பயமுறுத்தும் விளம்பரமும். ஊரெல்லாம் புகையிலைக் கடைகள். மதுக்கடைகளை தடை செய்யச் சொன்னால் போலிஸ் தடியடி. போலிஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள். நேஷனல் ஹைவேயில் வைக்கக் கூடாது என்றால் முன்புற வாசலை அடைத்து பின்புற வாசலைத்திறந்து முகவரியை மாற்றிக் கொள்வது. இப்படியெல்லாம் செய்து விட்டு, குடிப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு என்று திரைப்படத்திற்கு முன்பு விளம்பரப் படுத்தினால் சரியாகி விடுமா என்ன? இந்த விளம்பரத்தைப் பார்ப்பதற்கு சும்மா இருந்து விடலாம். அல்லது, குடிக்கிறவனுக்கு குடிப்பதனால் என்ன நடக்கும் என்று தெரியாதா என்ன? கடைகளைத் திறந்து வைப்பது கட்டாயம் ஆனால் யாரும் குடிக்கக் கூடாது என்றால் எப்படி?

·          அடுத்தது நாம் பாடும் தேசிய கீதம். நீதி மன்றத்தை அவமதிப்புச் செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அல்லது எனக்குத் தேசப் பற்று இல்லை என்றும் அர்த்தம் இல்லை. திரைப்படத்திற்கு முன்னால் திரையரங்கில் தேசியகீதம் பாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. முன்னே சென்று பிடிக்காமல் இருப்பதை விட, வெளியே இருந்து விடுவதே நல்லதில்லையா? தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது யாரையும் உள்ளே அனுமதிப்பது இல்லை. என்பதினால் இப்போது அதற்குப் பிறகே செல்கிறேன். நாட்டின் பன்முகத்தன்மையையும், நாட்டின் மீதான மதிப்பையும் அதிகப்படுத்துவதற்கு பதில் வெறும் தேசிய கீதம் மட்டும் போதாது. எப்படி புகையைக் கட்டுப்படுத்த புகையிலை விளம்பரம் மட்டும் போதாதோ அதேபோல திரைப்படத்திற்கு முன்னால் தேசிய கீதம் பாடுவது மட்டும் போதாது. பள்ளிக் கூடத்திற்கு அருகில் டாஸ்மாக் கடைகள், ஊழல் அரசியல்வாதிகள், கொர்போரெட் நிறுவனங்களுக்காக கைக்கூலியாய் செயல்படும் அரசுகள், பழிவாங்க மட்டுமே பயன்படுத்தப்படும் வருமான வரித்துறை, என்று தேசத்தை வீழ்ச்சியுரும் செயல்கள் பல செய்துவிட்டு, கற்பனைக் கதைகளை மட்டுமே பேசும் திரைப்படங்களுக்கு முன்பு நான் தேசிய கீதம் பாடுவது ஏன் தேசப்பற்றையும் கற்பனை என்று ஆக்கிவிடாதா? நல்லவேளை டிஸ்கொத்தேவில் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று இன்னும் சொல்லப் படவில்லை. தேசிய கீதத்தெற்கென்று மரியாதை இருக்கிறது. திரைப்படத்திற்கு முன்பு பாடவைத்து அதைக் குலைப்பதாகாவே நான் கருதுகிறேன். அதைப் பாடும்போது நான் அமர்ந்திருந்தால்தான் அவமதிப்பு. நான் உள்ளேயே இல்லையென்றால் அது அவமதிப்பாகுமா என்ன?

·          சரி விஷயத்திற்கு வருவோம். சங்கிலி புங்கிலி ஒரு பேய்ப்படம். நல்ல பேயோடு ஜீவா சண்டை போடும் படம். சரவணன் இருக்க பயமேன் இதெல்லாம் ஒரு பேய்ப்படம்னு சொல்லவே பேயே வெட்கப்படும் ஒரு பேய்ப்படம். இதுல ஒரு நல்ல பேயோடு கூட்டுச் சேர்ந்து உதயநிதி நடிக்கும் படம். எய்தவன் ஒரு விதத்தில் பேய்ப்படம்தான் – ஒரு சமூகப் பேயான கல்வி நிறுவனத்தைக் காசாக்கும் ஒரு பேயோடு மோதும் ஹீரோ கலையரசன். இந்த மூன்று படங்களிலும் நல்ல செய்தி உண்டு.

·          எய்தவன் கல்வி நிறுவனங்கள் - குறிப்பாக மெடிகல் கல்லூரிகள் எப்படி ஏஜன்ட்டுகளை வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்றும், மாணவர்கள் எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல இன்றைக்கு நம் நாட்டில் எல்லாமே கார்பொரேட் கைகளில்தான் இருக்கின்றன. இந்தப் பேய்களோடு போட்டி போடுவதும், அதிலிருந்து உண்மையான அறிவை வளர்ப்பதும் மிகக் கடினம் என்றே தோன்றுகிறது.

·  சங்கிலி புங்கிலி கொர்போரெட் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி சிதைந்து போன கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை உணர வைக்க முற்படுகிறது. சொத்துக்காக குடும்பங்களைப் பிரித்தவர்கள் நமக்கு அருகிலேயே உண்டு. கூடி வாழ்வது அவசியம் என்பதை சங்கிலி பேயின் உதவியோடு செய்தி சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். பேய் வந்து சொன்னால்தான் நமக்கு புத்தி உரைக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ.

·     சரவணன் ரொம்ப நார்மல் திரைப்படம். விஜய் டிவி புகழ் கலக்கப் போவது யாரு டீமை குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்கள். ஒருத்தர் கூட நம்மை இம்மியளவு கூட சிரிக்க வைக்கவில்லை என்பது மிகப்பெரிய நகைச்சுவை.  ஒரு பேயின் உதவியோடு தான் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ. அதில் பேயும் சரியில்லை, படமும் சரியில்லை, கதையும் சரியில்லை. நாமாகக் கட்டாயம் குடுத்த காசுக்கு சிரிக்க வேண்டும் என்றால் சில இடங்களில் இவன் வந்தால் சிரித்து விடுவோம் என்று சிரிக்கலாம். போனாப் போகுதுன்னு பாட்டுக்குப் பாட்டில் சிரிக்கலாம். மற்றபடி அதில் நடிப்பும் இல்லை, கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை.

·          அதற்கு சங்கிலி பரவாயில்லை. பேய் அடிக்கடி வருகிறது. கொஞ்சம் கதை இருக்கிறது. என்ன, ,இரட்டை அர்த்த வசனங்கள் ஓவரா இருக்கிறது. சரவனனையும் சங்கிலியையும் இணைப்பது பேய் மட்டுமல்ல, சூரியும்தான். காமெடி என்பது சில இடங்களில் அவரது நடிப்பில் மட்டும்தான் வெளிப்படுகிறது ஸ்க்ரிப்ட்டில் இல்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் அவரைப் பார்ப்பதும் போரடிக்கிறது. காமெடியன்களுக்கு நிறைய பஞ்சம் இருக்கிறது. சாரி, சிரிக்க வைக்கும் காமெடியன்களுக்கு ... சூரி இன்னும் நல்லா வரலாம்.
  • வேறு வழியே இல்லாமல் படம் பார்க்கச் செல்லாதீர்கள். என்ன படம் பார்க்க விரும்புகிறீர்களோ அந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் அந்தப் படத்தைப் பார்க்காதீர்கள், பரவாயில்லைஅடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை என்றால் போய் பாருங்கள். இறுதியாய் செய்தி சொல்ல வேண்டுமல்லவா?
·          இந்த மூன்றில் எய்தவன் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மருந்துக்குக் கூட சிரிப்பு இல்லை. ‘வெய்ட் பண்ணச் சொன்னானா’ என்கிற ஒரு இடத்தில் மட்டும் நீங்கள் சிறிதே உதட்டை இழுத்து புன்னகைக்கலாம். இருந்தும் இந்தப் படம் பரவாயில்ல என்று சொல்வதற்கான காரணம் – நமக்கு முன்னால் நிஜப் பேய்கள் நிறையத் தாண்டவமாடுகின்றன. அவைகளோடு போராடுவதுதான் நமது இப்போதையத் தேவை. செத்துப் போன பேய்களை வைத்து காதலியோடு சேர்வதோ, செத்துப் போன பேயின் பயமுறுத்துதலின் வழியாய் நாம் சேர்ந்து இருப்பதெல்லாம் மீண்டும் ஓர் நாவல் போலத்தான். கற்பனை வாழ்க்கைக்கு ஒத்து வராது. ஊழல் சமூகம் திருந்த வேண்டுமென்றால் கல்வி கல்வியை இருக்க வேண்டும். அதைச் சரி செய்ய வேண்டிய கடமை எல்லாருக்கும் உண்டு. எந்தப் பேயும் இதைச் சரி செய்ய உதவிக்கு வராது... நாம் செய்தால்தான் உண்டு...




18.5.17

தங்கப்பதக்கம் vs ஒண்டிக்கட்ட

மானஸ்தன் படத்தில் வடிவேலு மற்றும் சரத்குமார் காமெடி பார்த்திருப்பீர்கள்… தங்கப்பதக்கம் படத்தைசரத், தங்கப்ப–தக்கம்என்றுவாசிப்பார். 
வடிவேலு அதை மீண்டும் மீண்டும் அது தங்கப்ப~ தக்கம் என்று பிரித்து சொல்லக்கூடாது, மாறாக, தங்கப்பதக்கம் என்று சேர்த்து சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்.




OR

starts at 2: 28



+++++++++++++++++++++++++++++++++++++++++


சமீபத்தில் என் நண்பர் ஒருவர் புதிதாய் எங்கோ போஸ்டர் பார்த்து விட்டு, one ticket ட்ட, அதாவது, ஒன்– டிக்கட்ட பாக்கணும்னு சொன்னார். எந்த டிக்கட்ட இவன் சொல்றான்னே புரியலை. எந்த டிக்கட்டு அதுன்னு கேட்டேன்.
புதுப் படம் போல... போஸ்டர் பார்த்தேன்.
அந்தப் படத்தைப் பாக்கனும்னு சொன்னான்.
அது என்னா படம்னு நானும் தேடித் தேடித் பாத்ததுல
ஒன்னும் சிக்கவே இல்லை.
கடைசியில இந்த போட்டோதான் கிடைச்சது. 



= = = 

அட மவனே  
அது ஒன் – டிக்கட்ட இல்லை ஒண்டிக்கட்ட அப்படின்னு அவனுக்குப் எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியலை. ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...

மக்களே,
அழகா எழுதுனாலே நமக்குத் தமிழ் படிக்க வராது.
இதுல கோணயா எழுதுனா நாங்க கேனத்தனமாத் தான் படிப்போம்.
நம்ம தமிழ் அப்படி ரொம்ப ஸ்ட்ராங்.
இந்தி கட்டாயம் படிக்கணும்னு எஸ், வி. எஸ். சொன்னார் தானே.
அதுனால தமிழ் படிக்கத் தெரியாதுங்கிறான்.
என்ன செய்யுறது?

16.5.17

குப்பை லாரியும் ஆட்டோவும்


ஏறக்குறைய மிகச்சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்ததற்கான காரணம் கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி சும்மா ஊர் சுற்றியே போரடித்துப் போய் விட்டது என்பதாக இருந்தாலும், இன்றைக்கு ஊர் திரும்பும் வேளையில் சந்தித்த குப்பைலாரியும் ஆட்டோவும் இந்தப் பதிவிற்கான காரணம் என்பதே மிகச்சரி. 
வேலையின்றி இருப்பது ஒரு கலை. வடிவேலு சொல்லுவதை போலவே அது ரொம்பக் கடினமான ஒன்றுதான்.
பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிமித்தம் காரணமாக ரயில் நிலையமும், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களும் பிதுங்கி விழுந்து கொண்டிருந்தன. எனது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வேளையில் எனக்கு முன் அந்தக் குப்பை லாரி ...

குடிதண்ணீர் லாரிகள் தண்ணீரை வீணாக்காமல் சென்றதாகவோ, விபத்தில்லாமல் சென்றதாகவோ வரலாறு இல்லை. குப்பை லாரிகளும் அதை போலவே தன்பங்குக்கு சில தனித்த பெருமைகளை பதிவு செய்திருக்கின்றன. புகை மூட்டத்தால் அது செல்கிற இடங்களை மாசு படுத்தாமல்சென்றதாக இல்லை. தண்ணீரை வீணடித்து தண்ணீர் கொண்டுவருவதை போல, மாசுபடுத்தித்தான் குப்பைகளை அள்ள  வேண்டியிருக்கிறது.

அப்படிப்பட்ட லாரி ஒன்றுதான் புகையை வாரி இறைத்து எல்லாரும் இருமித் தும்மும் படி செய்தது. வேகமாகச் செல்லும் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு முன்னே உள்ள வாகனங்கள் ஒதுங்கி வண்டியை நிறுத்து விட வேண்டும். அதே போல அம்புலன்சுக்கு பின்னால் குறைந்தது நூறு மீட்டர் இடைவெளி கிடைத்த பிறகுதான் நிறுத்தப் பட்ட வாகனங்கள் செல்ல வேண்டும். நம்ம ஊரில் ஆம்புலன்சுக்கு வழி விடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வந்திருக்கிறது. ஆனால் ஆம்புலன்ஸை ஒட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே செல்லும் பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. ஆம்புலன்சுக்கு எங்கே வழி இருக்கிறதோ அங்கே செல்லும். எப்போது பிரேக் விழும் என்று தெரியாது. அப்படிப் போடும் போது பின்னால் வரும் வண்டிகள் மோதி மற்றொரு விபத்து ஏற்பட்டு, இன்னொரு ஆம்புலன்ஸை அழைக்கக் கூடாது என்பதற்காகவே பின்னால் இடைவெளி. ஆனால் அது நம்ம ஊர் ரோட்டில் சாத்தியமே இல்லை. ஆம்புலன்சுக்கு ஒதுங்கி நாம் நிற்கும் வேளையில் நாம் மீண்டும் வண்டியை எடுப்பதற்குள் சர் சர் - என்று நூறு வண்டியாவது போய் விடும். ஆம்புலன்சுக்கு வழி விட்ட நம்ம முட்டாப் பசங்க. அவங்க ரொம்ப அறிவாளிங்க. நிற்க ...

இந்த குப்பை லாரிக்கு பின்னால் நூறு மீட்டருக்கு நாங்கள் யாரும் போக வில்லை. அந்தப் புகை யாரையும் நெருங்கி வரவிடவில்லை. இனிமேல் ஆம்புலன்சுக்குப் பின்புறமும் இப்படி கறுப்புப் புகை வரும் மெக்கானிசம் இருந்தால் பல விபத்துக்களைத் தவிர்க்கலாம். ஆனால் இந்த மெக்கானிசம் வேண்டுமெனில் குப்பைலாரியைத் தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. என்ன சிக்கல்? அதற்கு நான் மீண்டும் காலை சந்தித்த குப்பை லாரிக்குத் தான் செல்ல வேண்டும்.

நூறு மீட்டர் இடைவெளியில் நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு படத்தில் வடிவேலு காலை எழுந்து சாமி கும்பிட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் போல ஒருவர் எனக்கு வலப்புறம் ஓவர்டேக் செய்ய முயல்கிறார். வளசரவாக்கம் ரோட்டில் இடது புறம் வாகனங்கள் நிற்கும் என்பதால் வழிவிட முடியாமல் நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, வேறு வழியின்றி சற்றே ஒதுங்கி போய்யா போ என்று வழி விட, புகைவிடும் குப்பை லாரிக்குப் பின்னால் இருக்கும் அந்த நூறு மீட்டர் இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள வேகமாகச் சென்று அந்த லாரியை நெருங்கும் வேளையில் பிரேக் லைட் இல்லாத அந்தக் குப்பை லாரி பிரேக் போட, சுதாரித்து பிரேக் போட்டு  வலது புறம் திருப்ப, அப்படியே மிகப் பெரும் சத்தத்தோடு, கவிழ்ந்து விழுந்தது அந்த ஆட்டோ. நாங்கள் ஒவ்வொருவரும் பிரேக் போட வேறு எந்த விபத்தும் இல்லாமல் முடிந்தது அந்த விபத்து. 

எங்கிருந்தோ ஓடி வந்த அத்துனை பெரும் ஆட்டோவைத் தூக்கி அந்த ஓட்டுனரையும், அதில் பயணம் செய்த இருவரையும் உடனே வெளியில் தூக்கினார்கள். யாருக்கும் எந்த சிராய்ப்பும் இல்லாமல். 

நிமிர்த்து பார்க்கும் போது எல்லாவற்றிற்கும் காரணமான அந்த குப்பை லாரி புகையை மட்டும் விட்டுவிட்டு கண்ணுக்கெட்டாத தூரம் சென்று விட்டது. 

ஆட்டோ சரிந்து செல்வதை திரைப்படத்தில் மட்டுமே பார்த்த எனக்கு என் கண் முன் பார்த்தது தூக்கிவாரிப் போட்டது. அதன் பின்னால் வந்த நாங்கள் அனைவரும் பிரேக் போட்டது எங்களுக்குள்ளே விழிப்பாய் இருந்த அந்த ஓட்டுனர்தானே தவிர நாங்கள் இல்லை. எல்லா நேரமும் அந்த ஓட்டுநர் விழிப்பாய் இருப்பானா தெரியாது.

ஆம்புலன்சுக்குப் பின்னால் வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் குப்பை லாரியைத்தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் என்று சொன்னேன்.  சிக்கல் என்னவென்றால் அதில் பிரேக் லைட்பிக்ஸ் பண்ண வசதி இருக்காது. மேலும் பின்னால் எத்தனை பேர் அடிபட்டுக் கிடந்தாலும் அந்த ஓட்டுனருக்கு எதுவும் தெரியாது.

இதுவே இப்படி இருக்க இதுபோல ஆட்டோ ஓட்டுனர்களை வைத்து அரசுப்பேருந்துகளை இயக்குகிறார்களாம். ஏன் குப்பை லாரி ஓட்டுபவர்களை வைத்துக் கொண்டால் இன்னும் சுகமாக இருக்கும்.....


15.2.17

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது



·       டிகுன்னாவை திட்டித் தீர்த்த அதே கூட்டம், அதே தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகளைக் கொண்டாடுகின்றது.
o    நீதிபதிகள் மாறலாம் நீதி மாறுமா???

·         அன்றையத் தீர்ப்பு வந்த போது அழுதுகொண்டே முதல்வர் பதவி ஏற்ற ஓபிஎஸ், இன்று இந்தத்தீர்ப்பு வந்ததே தான் முதல்வராகப் பதவி ஏற்கத்தான் என்று நினைக்கிறார்.
o    காலம் மாறும், மனநிலை மாறும்.

·         இந்தத் தீர்ப்பின் படி நியாயம் நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்று முதல் குற்றவாளி கல்லறையில் இருந்து நியாயம் பேசுகிறார்கள்.
o    உடல் மண்ணாய் மாறினாலும் குற்றம் மாறுமா?

·         முதல் குற்றவாளி ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் இந்தத் தீர்ப்பு வந்திருக்குமா?
o    “பார்த்து” செய்திருக்க மாட்டார்களா?

·         ஊரே பன்னீரைத் தேடிச் செல்லும் போது, பன்னீர் தீபாவைத் தேடிச் செல்லுகிறார். அரசியல் தெரியாத பச்சிளங்குழந்தை – இரு கரங்களாகச் செயல்படுவோம் என்று சொல்கிறது. அதைத் தூக்கி தலையில் வைக்கும் தமிழனின் தன்மானம் கண்டு மகிழ்ச்சி.
o    ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் நம்மையெல்லாம் திருத்தவே முடியாது.”


ஐயா பெரியோர்களே, தாய்மார்களே, இனிமேலாவது இந்த நாடகம் முடிவுக்கு வரட்டும். வரம் பெற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிந்து கொண்டு, தண்டனை பெற இருக்கும் சசிகலாவை அழைக்காமல் விட்ட ஆளுனரைப் பாராட்டுவோம். 
இப்படித்தான் வரும் என்று முன்கூட்டியே தெரிந்து ஆழ்நிலைத் தியானம் செய்து, அம்மாவின் ஆசியோடு ‘நாளை பாருங்கள் என்று சொன்ன ஒபிஎஸ் அவர்களைப் பாராட்டுவோம். 
இதை அவருக்கு முன்கூட்டியே சொல்லிக் கொடுத்த அம்மாவின் ஆசீரைப் பாராட்டுவோம். 
வேறு வேலையே இல்லாமல் இதை இருபத்தி நான்கு மணி நேரமும் நேரலை செய்த தொலைக்காட்சிகளைப் பாராட்டுவோம். 
இதற்கும் பா.ஜ,கவிற்கும் தொடர்பு இல்லை என்றவர்களையும், இதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பு இல்லை என்றவர்களையும் பாராட்டுவோம்.

விசு அவர்கள் ஆளுநர் – ஓபிஎஸ் – சுக்கு பஞ்சபூதங்களும் சேர்ந்துவரும் ஐந்து மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்ததாகவும், சசிகலாவிற்கு ஏழரைக்கு [ஏழரை என்றால் சனியன் என்று உங்களுக்கு தெரியும்] என்று சொல்கிறார். இப்போது தெரிகிறதா? இது இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால், அவரை இயக்குவது யார் என்று தெரிகிறதா மக்களே. ஒன்று நீதிபதிகள் இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று முன்கூட்டியே ஆளுநரிடம் சொல்லியிருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு சொல்லியிருக்க வேண்டும். இதுவரை ஜெயலலிதாவை சந்திக்கவே விடவில்லை என்பதை எத்தனை வருடம் கழித்துச் சொல்லுகிறார் என்று பாருங்கள் வீரமான விசு. இப்போது தெரிகிறது, தீபாவிற்குப் பின் யார் இருக்கிறார்கள், அவரை யார் இயக்குகிறார்கள். ஒபிஎஸ் என் அம்மாவின் கல்லறை சென்றார் என்று.


இத்தனை நாள் களோபரத்தில், கடலில் கொட்டிய எண்ணெய் என்ன ஆனது என்றே தெரியவில்ல. தடுப்பூசி வேண்டாம் என்று சொன்ன போது அதையும் மீறி அரசு கேட்காமல் தடுப்பூசிகளைப் போட்டதில் எத்தனை குழந்தைகள் உடல்நிலை சரியில்லை, அல்லது மரணம் என்பது தெரியவில்லை. எத்தனை இடங்களில் பன்றிக்காய்ச்சல்கள், உயிரிழப்பு, என்பது பற்றி எந்தச் செய்தியும் இல்லை. எதுவும், எதுவும் இல்லை. நாமெல்லாம் மனுஷங்களா? இந்த லட்சணத்தில் மீண்டும் நேரலையாம். ஆளுநரின் அடுத்த ஆட்டமாம். எடப்பாடியா ஓபிஎஸ்- ஆ? அவர்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது. 

போங்கையா போங்க. போய் பிள்ளை குட்டிய படிக்க வைங்க.

*   *   *   *   *   *   *


10.2.17

தற்காலிக முதல்வரின் திராவிட வீரம்

தற்காலிக முதல்வரின் திராவிட வீரம்

மன்னார்குடி மாபியாவிடமிருந்து தமிழகத்தை மீட்கத்தான் வேண்டும். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதற்கான மாற்று / தீர்வு, தற்காலிக முதல்வரின் தற்காலிக வீரம்தானா?

  • மெரீனா மீண்டும் பொங்கி எழுந்திருக்கிறது. கடந்த முறை லட்சக்கணக்கான இளைஞர்களினால் எழுந்த எழுச்சியை, காவல்துறையைக் கட்டவிழ்த்து, கலங்கரை விளக்கை களங்கப்படுத்தியதற்காக  வெகுண்டெழாத தற்காலிக முதல்வர், தான் அவமானப்படுத்தப்பட்டதால், சீறிப் பாய்ந்திருக்கிறார். அம்மாவே எதிர்க்காத தனது தோழியை அவரது சீடர் எதிர்த்திருக்கிறார். அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
  • எம் இளைஞர்களை நீங்கள் அடித்து நொறுக்கிய போது சொல்லியிருக்க வேண்டாமா, மாண்புமிகு முதல்வர் அவர்களே – நீங்களும் ஜல்லிக்கட்டு வீரன் என்று? இப்போதுதானே சொல்கிறீர்கள். அதையும் சொல்லக் கூடாது என்று யாரவது கட்டாயப்படுத்தினார்களா? போராட்ட வீரர்களைத் துரோகிகள் என்று, பின்லேடனின் சீடர்கள் என்று ஒரு போட்டோ காட்டும் போது உங்கள் மனசாட்சி துடித்திருக்க வேண்டாமா?
  • பணிவு என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அறியாத அப்பாவியான நீங்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து அறுபது நாட்கள் கழித்து, அம்மாவின் ஆன்மா உங்களை எழுப்பியது குறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ராஜினாமா செய்த பிறகுதான் உங்களுக்கு அம்மாவின் மரணம் குறித்து சந்தேகம் வந்திருக்கிறதா, மாண்புமிகு முதல்வர் அவர்களே? அப்படி அம்மாவின் உண்மைத் தொண்டன் என்றால், உங்களின் முதல் அறிவிப்பே அம்மாவின் மரணம் குறித்து அறிய விசாரணைக் கமிஷன் இருப்பதாய் இருந்திருக்க வேண்டாமா முதல்வர் அவர்களே? இப்போதுதான் இதை பற்றி உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது என்றால் எங்களுக்கு உங்கள் மீது சந்தேகம் வராதா முதல்வரே?
  • மன்னார்குடி மாபியா என்று எல்லாராலும் அழைக்கப்படுகிறவர்கள் பற்றி உங்களுக்கு முன்பே தெரியாதா? இதுவரைக்கும் அவர்கள் உங்களையும் மற்றவர்களையும் மரியாதையோடுதான் நடத்தி வந்தார்களா? இதுவரைக்கும் அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதது போல இப்போதுதான் இதைப் பற்றியே உங்களுக்குத் தெரிந்தது போலவும் சொல்லுகிறீர்களே முதல்வரே, சின்னம்மா காலில் விழச்சொல்லி உங்களைக் கட்டாய படுத்தினார்களா? அவர்கள் காலில் எல்லாம் விழுந்த போது  வராத அவமானமா இப்பொது உங்களுக்கு வந்துவிட்டது முதல்வர் அவர்களே? எத்தனை பேர் அவர்கள் காலில் விழுந்திருந்தாலும் நீங்கள் நிமிர்ந்து நின்றிருக்க வேண்டாமா?
  • ராஜினாமா செய்த கையோடே நீங்கள் அம்மா கல்லறை சென்று ஆழ்நிலைத் தியானம் சென்றிருந்தால் நாங்கள், நீங்கள் சொல்வதை உண்மை என்றே ஒத்துக் கொண்டிருப்போம். என் இளம் தம்பி தங்கைகளை, அக்காக்கள், அம்மாக்களை அடித்து நொறுக்கிய போது சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருப்போம். ஆனால் இப்போது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறதே தற்காலிக முதல்வரே?
  • சரி அப்படியே இந்த மிரட்டல்கள், அம்மாவின் ஆட்சி என்றெல்லாம் நீங்கள் நினைத்திருந்தால், இந்நேரம் அதை ஏதாவது ஒரு வழியில் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்க வேண்டாமா?
  •  உங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு எல்லாரும் தி. மு. க. காரணம் என்று சொல்கிறார்கள். ஸ்டாலின் பன்னீரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் என்று நீங்களே காலில் விழுந்து சொன்ன சின்னம்மாவும், சசிகலாவை நான் பார்த்ததே இல்லை என்று சொன்ன நாஞ்சில் சம்பத்தும் சொல்லுகிறார்கள். அவர்கள் கூட உங்களை யார் ஆட்டுவிக்கிறார் என்று தெரியாமல் இருக்கிறார்களா? அல்லது அதைப் பற்றி பேசி இன்னும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்களா? ஒரு சில ஊடகங்கள் தவிர வேறு யாரும் உங்களை ஆட்டுவிப்பவர் யார் என்று சொல்ல யோசிக்கிறார்கள்.

  • உங்கள் அம்மா இறந்த போது ஒருவர் நெஞ்சில் ஓடிச்சாய்ந்து அழுதீர்களே நினைவு இருக்கிறதா?
  • உங்கள் அம்மா இறந்ததாக அறிவிக்கப்படும் முன்னரே நமது பொன்னார் என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா? அக்டோபர் மாதம் இருபத்தி மூன்றாம் தேதி – உங்கள் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து முப்பத்தி ஒரு நாட்கள் கழித்து – தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் வரப் போகிறது, அதை வைத்து நமது ஆளும் அதிகாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாரே – அது உங்களுக்குத் தெரியாதா?



  • உங்களுக்கும் சேகர் ரெட்டிக்கும் என்ன தொடர்பு முதல்வரே – சசிகலாவையே தெரியாது, பேசியதில்லை என்று சொன்ன  நீங்கள் இவரையும் தெரியாது என்று சொல்வீர்களா? இவருக்கும் சசிகலாவிற்கும் தொடர்பு இல்லையென்றால் இவருக்கும் உங்களுக்கும்தான் தொடர்பு இருக்க வேண்டும். அதனால்தான் மத்திய அரசின் பிடியில் நீங்கள் இருக்கிறீர்களோ என்கிற சந்தேகம் வருகிறது. அவருக்கும் சசிகலாவிற்கும்தான் தொடர்பு என்றால் இந்நேரம் அவைரைத் தூக்கி உள்ளே வைத்திருக்காதா மத்திய அரசு?
  • காந்தியைக் கொன்ற ஓர் அமைப்பு, ஏறக்குறைய பதினான்குஆண்டுகளுக்கும் மேலாக ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படாத ஓர் அமைப்பிற்கு நீங்கள் அனுமதி வழங்கியிருக்கிறீர்களே இது எதனால் என்று எங்களால் ஊகம செய்து விட முடியாதா? நீங்கள் யார் நெஞ்சில் சாய்ந்திருக்கிறீர்கள் என்பதுதெரியாதா?
  • உங்களுக்கென்று திரு விசு அவர்கள் குரல் எழுப்புகிறார். கையெடுத்துக் கும்பிடுகிறார். குருமூர்த்திகள் இருக்கிறார்கள். கணேசன்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பார்க்கும் போதுதான் உங்களின் திராவிட வீரம் மீது சந்தேகம் வருகிறது முதல்வரே. உங்களின் தன்மானம் மீதும் எங்களுக்கு ஐயம் வருகிறது.
  • நீங்கள் இன்னொரு மாபியா ஆகவோ, அல்லது இன்னொரு இடத்தில் கூழைக்கும்பிடு போடும் திராவிட முதல்வராகவோ இருக்க மாட்டீர்கள் என்று எங்களை நம்ப வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். ஒரு நாள் பேசி விட்டீர்கள் என்பதற்காக உங்களுக்கு உண்மையிலேயே வீரம் வந்து விட்டது என்று நம்பத்தயாரில்லை. 
  • நீங்கள் உண்மையிலேயே ஜல்லிக்கட்டு வீரன் என்றால் மத்திய அரசிடமும் மல்லுக்கட்டுங்கள்..... நாங்கள் சொல்வது பொய் என்று நிரூபியுங்கள்.
மக்களின் தீர்ப்பு இப்போது தேவையில்லையா? 
இன்னொரு தேர்தல் வந்தால் நல்லதில்லையா?




  


  

1.2.17

புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி


புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி  
- அ . பிரபாகரன் 
 சில ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் படித்த போது அங்கே உள்ள வெரோனாவில் ஒரு பங்கில் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பங்குக்குருவுக்கு உதவுவது என் வேலை. அவ்வப்போது அங்கே திருப்பலிக்கு ஒரு வயதான அம்மா பாப் தலையோடு வருவார். ஒவ்வொரு முறையும் திருப்பலி முடிந்தபிறகு என்னைத் தன் வீட்டுக்கு அழைப்பார். வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் அவரது கணவரும் என்மேல் பிரியமாக இருப்பார். அப்படி ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த அம்மா ஒரு புகைப்பட ஆல்பத்தைக் கொண்டு வந்தார். அதில் வெரோனாவில் உள்ள ஒரு சிற்றாலயத்தில் நற்கருணை ஆராதனை செய்யும் புகைப்படம் இருந்தது. அதைக்காட்டி, “உங்களுக்கு இதில் உன்ன தெரிகிறது?” என்றார். “அப்பம் வெள்ளையாக இருக்கிறது, வேறொன்றும் தெரியவில்லை” என்றேன்.

அவரோ என்னைக் கொஞ்சம் எரிச்சலுடன் பார்த்தார். அவரது கணவர் புன்னகைத்தார். செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் அவரது கணவர் நிறைய வாசிப்பவராக இருக்கக்கூடும். அவரது அறையில் மிகத் தடிமான புத்தகங்களும் முக்கியமான களஞ்சியங்களும் இருந்தன. நமது ரூபாய் மதிப்பில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு இருக்கலாம் அவை. அவரது கணவர் சிறுபுன்னகையோடு சொன்னார், “இந்த அப்பத்தில் இயேசுவின் உருவம் இவருக்;குத் தெரிகிறது என்று இவள் சொல்கிறாள், உங்களுக்குத் தெரிகிறதா? எனக்கு வெறும் அப்பம் மட்டும்தான் தெரிகிறது” என்றார். அந்தப் பெண்மணி உணர்ந்த இயேசுவின் உருவம் தெரியும் அந்தப் புதுமையை என்னால் அன்று உணர முடியாததுபோல பல தருணங்களில் நிகழ்ந்திருக்கிறது.

இறையியல் படிக்கின்ற காலங்களில் மைக் எவான்ஸ் போன்ற பெந்தகோஸ்து பிரச்சாரகர்களின் சீரணி அரங்கக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவை எனக்கு வேடிக்கையாகவும், கொஞ்சம் அதிசயம் மற்றும் வினோதமாகவும், நேர்த்தியாக நடைபெறும் சர்ரியலிச நாடகக் காட்சி போலவும் தோன்றும். அடிப்படையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பவன் மனித வாழ்வில் இறைவன் அசாதாரணமான ஈடுபடும் சாத்தியங்கள் உண்டு என்பதை நம்புவனாக இருக்கவேண்டும். நான் நம்புகிறேன். இருப்பினும் பெரும்பாலான மாதா கண்சிமிட்டுதல், சிலுவையில் இரத்தம் வடிதல், சுவற்றில் உருவம் தெரிதல் வகையிலான புதுமைகளை நான் பொருட்படுத்தியதில்லை. அது தனி நபர் அனுபவம் சார்ந்தது. அவரவர் மனச்சான்று சார்ந்தது. என்னைப் பொருத்தவரை எனக்கு அது நிகழவில்லை. அவ்வளவுதான்.

ஆனால், என் தனிப்பட்ட வாழ்வின் வழி நடத்துதலிலும் சமூக வரலாற்றின் இயக்கங்களிலும் கடவுள் அற்புதங்கள் செய்பவராக இருக்கிறார் என்பதை உணர்கிறேன். கடந்த சனிக்கிழமை எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி ஓர் அற்புதமாக அமைந்து போனது. கடந்த சனிக்கிழமையன்று நானும் என் நண்பரும் மெரினாவுக்குச் சென்று போராடும் இளைஞர்களோடு இருந்துவிட்டு வரலாமே என்று புறப்பட்டோம். அது இப்படி ஓர் உன்னதமான அனுபவமாக அமையும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வாழ்வின் அற்புதமான தருணங்களில் ஒன்றாகவும், மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகவும் அது அமைந்து போனது.

உலகில் வேறு எங்கேனும் போராட்டமே கொண்டாட்டமாகவும், கொண்டாட்டமே போராட்டமாகவும்; நிகழ்ந்;திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. 

இது ஒரு புதுமைதான். ஜல்லிக்கட்டுக்கான ஒரு சாதாரணப் போராட்டம் எப்படி இவ்வளவு தீயாய்ப் பரவியது? ஏதோ கிராமங்களில் மட்டும் நிகழக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு எப்படி இத்தனை ஆதரவு கிடைத்தது. லேப்டாப் இளைஞர்களும் வாட்ஸ் அப் நவநாகரீக யுவதிகளும் எப்படி போராட முன் வந்தார்கள்? வாழ்க்கையிலே ஒருமுறை கூட ஜல்லிக்கட்டு பார்த்திராத நகர்ப்புற மாந்தர்கள் எப்படிக் குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்தில் உட்கார்ந்து சென்றார்கள்? மக்களை மந்தைகளாவே வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் இவர்கள் பின்னால் போக நேரிட்டது எப்படி?

கேள்விகள் எதற்குமே எந்தவிதமான தர்க்கரீதியான பதில்கள் இல்லை. இது நிச்சயமாக என் காலத்தில் நான் கண்ட புதுமைதான். புதுமை என்பது ஏதோ அமானுஷ்யமாக வாழ்வின் இயக்கங்களுக்கு மாற்றாக நடக்க வேண்டியதில்லை. வரலாற்று இயக்கங்களுக்குள் இறைவன் ஊடுருவி பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்தி தருவதே விவிலியம் கூறும் புதுமைகளிலெல்லாம் பெரிய புதுமை. இஸ்ராயேல் மக்களின் எகிப்திய விடுதலையைவிட வேறு எந்தப் புதுமை உண்டு? அது வரலாற்று நிகழ்வுகளுக்கு ஊடாகத்தானே நடைபெற்றது. மெரினாவில் நிகழ்ந்த புதுமை அனுபவத்தில் ஒருநாள் சஞ்சரித்து வந்த எனக்கு சமகாலச் சமூகத்தின் பன்முகக் கூறுகளை பார்க்கும் அனுபவமாக அது அமைந்து போனது.

ஒரு பின்நவீனத்துவச் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அனைத்துக் குறியீடுகளும் நிறைந்து கிடந்தது மெரீனாக் கடற்கரை பெரிய கூட்டம். கடற்கரை முழுவதும் மணலோடு போட்டி போட்டுக் கொண்டு மக்கள் கூட்டம நின்றது. ஆனால் ஒன்று பட்ட குவியம் இல்லை. வழக்கமாக இப்படிப்பட்ட போராட்டங்களில் எதிர்கொள்ளும் பெரிய தலைமைகள் இல்லை. எங்கும் ஜனத்திரள். ஆங்காங்கே சிறு கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே கொஞ்சம் பொதுக்கூட்டம் போன்ற தோற்றம் இருந்ததே தவிர ஆங்காங்கே அதே போல பல கூட்டங்கள் நடந்தன.

யார் வேண்டுமானாலும் பேசினார்கள். எவருக்கும் மைக் கிடைத்தது. சிறு சிறு குழுக்கள் ஆங்காங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் ட்ரம்ஸ் வாசித்தார்கள். சிலர் தப்பு வாசித்தார்கள். சிலர் கரகாட்டம் ஆடினார்கள். சிலம்பாட்டம் நடைபெற்றது. இளம்பெண்கள் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள். கோசம் போட்டார்கள்;. சிலர் அமைதியாக பேனர் வைத்துக் கொண்டு நின்றார்கள். சிலர் மைக்கில் பேசினார்கள். சிலர் மைக் இல்லாமலும் பேசினார்கள். சிலர் சாலைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். எங்கிருந்தோ பிஸ்கட் பாக்கெட்கள் வந்தன. தண்ணீர் வந்தது. வாழைப்பழத்தார்களை சிலர் சுமந்து வந்து கொண்டிருந்தார்கள். திடீர் டாய்லெட்டுகள் ஆங்காங்கே நின்று கொண்டு மனிதர்களின் கழிவுகளை வாங்கிக் கொண்டு அவர்களை வெளியே அனுப்பின. சில நேரங்களில் குழந்தைகள் காணாமல் போனார்கள். மைக்கில் அறிவிப்புச் செய்ததும் மீண்டும் கிடைத்தார்கள்.

சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் சென்று பங்கேற்காவிட்டால்;; ஆயுசு குறைந்துவிடும் என்று எண்ணியது போல குடும்பத்தோடு வந்து பார்த்தோ பங்கெடுத்தோ சென்றான் என்று தோன்றியது. மொத்தத்தில் பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சமான சிறியவைகளின் உடைபட்ட கொண்டாட்டமாக அது அமைந்தது. இதைக் கடந்து வந்திருந்த மக்கள் யாரென்று பார்த்தால் பெரிய புதுமை காத்திருந்தது. கிராமத்தினர் இருந்தார்கள். கிராமத்தில் இருந்து பெற்றோருக்குத் தெரிந்தோ தெரியாமலோ சென்னை வந்து கம்பெனியிலோ, ஹோட்டலிலோ நிரந்தரமாகவோ, நிரந்தரமில்லாமலோ வேலைபார்க்கும் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என இருந்தார்கள். நல்ல படிப்புப் படித்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பீட்டாவை திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மூன்று லட்சமோ, ஐந்து லட்சமோ நன்கொடை கொடுத்துக் கல்லூரிகளில் சேர்த்துவிட்ட பிள்ளைகள், பதாகைகளோடும் கோசங்களோடும் நின்றார்கள். பெரியார் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். தீவிர கம்யூனிசம் பேசுபவர்கள் இருந்தார்கள். தமிழ்த்தேசியவாதிகள் இருந்தார்கள். எந்த இசங்களும் தெரியாத அப்பாவி ஜனங்களும் இருந்தார்கள். திருநீறு, குடுமிகளோடு வந்தவர்களும் இருந்தார்கள். இவர்கள் தமிழ்ப் பெண்களாக இருக்காது என்று தோன்ற வைத்த சிவப்புப் பெண்களும் சுடிதார்களுடன் இருந்தார்கள். சும்மா வந்தவர்களும் இருந்தார்கள். மிகுந்த தீவிர உணர்ச்சியோடு அங்கேயே தங்கி கண்களில் கனலோடு போராடிய இளைஞர்கள் இளம் பெண்களும் இருந்தார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் பன்மைத்துவத்துக்கான அங்கீகரிப்பாகவும், கொண்டாட்டமாகவும் இருந்தது மெரினாக் கடற்கரை. பின்நவீனத்துவத்தின் நேர்மறை அம்சமே பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதுதானே!.மொத்தத்தில் ஓர் வித்தியாசமாக அனுபவமாகவும், அற்புதமாகவும், நமது பண்பாட்டு உணர்வையும் அடையாளத்துக்கான தேடலையும், கொண்டாட்ட உணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்டி எழுப்புவதாக இருந்தது மெரினா அனுபவம். இந்த உணர்வு நிலையிலே சஞ்சரித்துவிடாமல் நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உண்டு. அவற்றுள் சில. 
  • முன்பு போலத் தூய்மைவாதம் பேசி ஒன்று திரட்டப்பட்ட அணிச்சேர்க்கைகளைக் கொண்டு போராடுவதே விடுதலைக்கு வழி என்று சொல்பவர்கள் தங்கள் வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பின் நவீனத்துவ உலகில் பல்வேறு கருத்தியல்கள். நோக்கங்கள் உள்ளவர்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் சேரும் புள்ளிகளை இனம்கண்டு கொள்வதே சாத்தியம் என்பதை மெரீனா கற்றுக் கொடுத்திருக்கிறது. ஜல்லிக்கட்டை எதிர்த்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டது ஒரு நல்ல அம்சம். 
  • மற்ற மாநிலங்களில் பம்மாத்துக் காண்பிப்பது போல் தமிழகத்தில் பன்மைத்துவத்தையும், இங்குள்ள பண்பாட்டு வேர்களையும் அழிக்க நினைத்தால் அந்த பருப்பு இங்கே வேகாது. இங்கே “மோடி” மஸ்தான் வேலைகளெல்லாம் பலிக்காது. 
  • இப்போது நடைபெற்ற போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. அமுக்கப்பட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் வெளிப்பாட்டுக் குவியலே ஜல்லிக்கட்டு. தமிழகம் புறக்கணிக்கப்படுதல், விவசாயிகளின் தற்கொலை, ரூபாய் நோட்டு செல்லாததால் கோபம், வேலையின்மை, ஜெயலலிதா மரணம் எதிர் கொள்ளப்பட்ட விதம் எனப் பல்வேறு பிரச்சனைகளால் நொறுங்கொண்ட தன்னிலைகளின் எதிர்ப்புக் குரலே ஜல்லிக்கட்டுப் போராட்டம். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை உணர வேண்டும். 
  • தற்போதைய முதல்வர் ஓ.பி செயலலிதா இறந்த நாளான டிசம்பர் 5ஐ தமிழகத்தின் இருண்ட நாளாக அறிவித்திருக்கிறார். செயலலிதா இருந்திருந்தால் இந்தப் போராட்டம் எப்படி எதிர் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நன்கு உணர்ந்வர்களுக்கு ஒப்பீட்டளவில் மென்மையாகத் தெரிந்த ஓ.பி.எஸ் இதை அறிவித்திருப்பது நல்ல நகை முரண். 
  • இந்தப் போராட்டத்தை முன் வைத்து பல்வேறு ஆதர்சங்களும், பிம்பங்களும் தலைமைகளாகக் கட்டமைக்கப்படுவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. அது மிக மேம் போக்கானதாகவும் நம் சமூகச் சிக்கல்களின் புரியாமை வெளிப்பாடகவும் தெரிகிறது. குறிப்பாக, கலாமின் வழிவந்த கூட்டம் ஒன்று சகாயம் போன்றவர்களைத் தீர்வுகளாவும், இலட்சிய நாயகர்களாவும் கட்டமைக்க முயல்வது தமிழ்ச்சமூகம் அடிப்படையில் தன் பிரபுத்துவ மனநிலையில் இருந்தும் நாயக வழிபாட்டுச் சிந்தனைகளில் இருந்தும் வெளிப்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 
  • ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழ் அடையாளத்துக்கான போராட்டமாகவும், நமக்கான பண்பாடுகளை நாமே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரத்துக்கான போராட்டமாகவும் பார்க்கப்பட வேண்டும். மாறிவரும் விஞ்ஞான உலகில் தமிழ்ச்சமூகத்தில் ஜல்லிக்கட்டின் பொருத்தப்பாடு இன்மை, மற்றும் அதில் இருக்கக்கூடிய சனாதன அம்சங்கள் என்றும் கவனத்துக்குரியவை. 
  • இப்போராட்டம் தமிழ்ச் சமூக எதரிகள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பளித்திருப்பது பாராட்டுக்குரியது. இதை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்பது யாரெல்லாம் போலிஸ் அட்டூழியத்தை சிவனின் திருவிளையாடலாகப் பார்த்தார்கள் என்பதையும் உணர்ந்தாலே இது புரியும். 
  • இக்கட்டுரையை எழுதி முடிக்கும் இத்தருணத்தில் போராட்டம் காவல் துறையின் அராஜகத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இருக்கிற பயங்கரவாதத்திலேயே கொடூரமான பயங்கரவாதம் காவல் துறையின் பயங்கரவாதம்தான். காரணம், அது அரசு அங்கீகாரத்தோடு செய்யப்படுகிறது. ஆனால் என்ன ஒன்று, சமூக வலைத்தளங்களால் அது முன்னெப்போதையும்விட இது பயங்கரமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 
  • ஜாலியன் வாலாபாக்கிலிருந்து, கூடங்குளம் வரை வரலாறு முழுக்க எல்லாப் போராட்டங்களிலும் இதுதான் உண்மை. ஆனால் செல்போன் யுகத்தில் இது அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் காவல் துறையினர் இனி பத்திரிக்கையாளர்களின் காமெராக்களை அணைத்துவிட்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் அராஜகங்களைத் தொடங்குவார்கள் என்று நம்பலாமே தவிர வேறு எதுவும் நல்லது நடக்கும் என்று தோன்றிவில்லை. 
முடிவாக: 
அற்புதங்களில் ஒரு சிக்கல் இருக்கிறது. அற்புதங்களை அனுபவிப்பவர்கள் அந்த நேரத்தில மட்டும் பரவசப்பட்டுவிட்டு பிறகு வழக்கமான இயல்புநிலைக்குத் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறது. இயேசுவின் அற்புதங்களை அதிசயித்து ஆகோ, ஓகோவென ஆர்ப்பரித்தவர்கள் அவரை அரசராக்க விரும்பியவர்கள் (யோவா 6) பிறகு தங்கள் பழைய நிலைக்குத் திரும்பி அவரைச் சிலுவையில் அறையக் கோசமிட்டார்கள். இந்த பின் நவீனத்துவ அற்புதங்களில் ஒன்றான இந்தப் போராட்டத்தின் பங்குதாரர்களும் அப்படிப் போவதற்கான சாத்தியம் இருக்கிறது. வால் ஸ்டிரீட் எழுச்சி நமக்கு ஞாபகம் வரவில்லையா? பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் நெகிழ்வுத்தன்மை (Fluidity) மற்றும் தற்காலத் தன்மை (Momentariness). இந்த ஜல்லிக்கட்டு எழுச்சியும் அப்படிப் போய்விடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. அப்படி இல்லாமல் ஆக்கச் செய்வதே வரலாற்று அற்புதங்களை நம்புகிறவர்களின் பணியாக இருக்க முடியும்.

26.1.17

'குடி' அரசும் 'தடி' அரசும்

'குடியரசு' என்பது மக்கள் ஆட்சி என்பது பொருள்:
தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது.

மெரினாவில் அது ஜனவரி 24 ஆம் தேதி 
கருக்கலில் கலைந்து போனது.
அதைக் காலையில் இருந்து குலைத்தது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
'தடி'தாங்கிய குடிகள் 

'அடி'த்துக் கலைத்தார்கள் 
இப்போது இருப்பது 'தடியரசு' 
அடியரசும் கூட ...

-
குடியரசு 
தடியரசு 
அடியரசு 
தின வாழ்த்துகள்