தியாகிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியாகிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.11.16

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது

கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது என்று சொன்னால்  வியப்பாக இருக்கிறது. அதற்குள் இத்தனை ஆண்டுகள் ஓடோடி விட்டனவா?

அப்படியானால்
தமிழக
மாநில
அரசின் வயதென்ன?

கர்நாடக, கேரள அரசுகளின் கொண்டாட்டங்களை பற்றி எழுதும் தமிழ் பத்திரிக்கைகள் மருந்துக்கு கூட இதைப்பற்றி எழுதவில்லை.

தமிழர்கள் இதை நினைவு கூர்ந்தால் பிரிவினை வாதம் பேசுகிறவர்கள்,
இந்திய இறையாண்மைக்கு ஊரு விளைவிப்பவர்கள் என்று இவர்களே எழுதுவார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்  இந்தத் தேதியன்று, தமிழ் நாட்டின் தலைநகரில் கொடியேற்றி  கூட்டங்கள் நடைபெற்றன. அவர்களெல்லாம் கண்டு கொள்ளப் படாமலே போய் விட்டனர்.

நம்மைப் பற்றி என்ன சொல்வது?
வாழ்க கர்நாடகம் ... வாழ்க கேரளம்.


15.8.16

அகண்ட பாரதம்

இந்தியாவின் எழுபதாவது சுதந்திர  தின நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நேற்றே பத்திரிக்கைகள் எங்கே எங்கே யார் யார் கொடி  ஏற்றுவார்கள் என்ற செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டன. இன்றைய செய்தித்தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றுகிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டிருக்கின்றன. நாளைய செய்தித் தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றினார்கள் என்ற செய்தியை வெளியிடும். அந்த அளவிற்கு நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடுவதிலிருந்தே சுதந்திர இந்தியாவை எவ்வளவு மதிக்கிறோம் என்பது நமக்குப் புரியும். வாழ்க பாரதம்.

# # #

மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்வோம். பல மொழிகள், சமயங்கள், கட்சிகள், கொள்கைகள். இவைகளைத் தாண்டி ஒன்றாய் இருக்கத் துடிக்கும் மக்களைப் பெரும்பான்மை மக்களில் நானும் ஒரு அங்கமாய் இருக்கின்றேன் என்பதில் எனக்குப் பெருமையே. ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

ஆனால் சில நாட்களாக இந்த நம்பிக்கையை சிதைக்கும் செயல்கள் இந்தியாவில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அரசு செய்ய வேண்டிய செயல்களை சில நிறுவனங்கள் செய்கின்றன. காவல் துறை செய்ய வேண்டிய வேலையை சில குழுக்கள் செய்கின்றன. அவைகளும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. வன்முறைகள் அவிழ்த்து விடப் படுகின்றன. தலித் மக்கள் தாக்கப் படுகின்றனர். பன்மைத் தன்மையை அழிக்க பல்வேறு முயற்சிகள் நடை பெறுகின்றன.
அகில இந்தியா வானொலியில் தமிழ் மொழிச் செய்திகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. கல்வி வரைவில் சமஸ்கிருதம் திணிக்கப் படுகிறது. என் மொழியை நான் மதிப்பது என்பது இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் குலைப்பதாய் பார்க்கப் படுகிறது.
இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

இன்னும் ஒரு தியாகி பென்சன் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பதாய் இன்றைய செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது. தியாகள் மதிக்கப் படாத ஊரில், தியாகத்திற்கு என்ன மரியாதை இருக்கும்.

# # #

தென்கோடியில் இருக்கும் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. மின்சாரம் தடை பட்டு பதிவேற்றம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன். சுதந்திர நாட்டின் ஓர் அங்கம்தான் இவைகள் எல்லாம். குறைகள் இருப்பதனால் ஒரு நாட்டைக் குறை சொல்ல முடியாது. நாமும் முயன்றால் குறைகளைக் குறைக்க முடியும். முயல்வேன்.

# # #

சுதந்திர தேசம் – அது பன்முக தேசம் – அனைவரையும் மதிக்கும் தேசம் - வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும். இந்தியா அதைப் பேணும்.
வாழ்க இந்தியா! 

4.8.15

எதற்காகத்தான் போரிட முடியும்?

போகிற போக்கைப் பார்த்தால் நம் நாட்டில் _____________ வாழ்க என்கிற பேரணிகளிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கிடைக்கும் போலத் தெரிகிறது.

இன்னும் ஒன்றிற்கும் அந்தப் பாக்கியம் உண்டு. –எங்கள் வீதியில் டாஸ்மாக் இல்லை. அங்கே வேண்டும் என்ற போராட்டம் நிச்சயமாய் அனுமதிக்கப் படுவதுமட்டுமல்லாமல் பாதுகாப்போடு நிச்சயமாய்க் ஏசி பாரோடு கூடிய கடையும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிர வேறொன்றுக்கும் இங்கு அனுமதியும் இல்லை அவசியமும் இல்லை.

ஏறக்குறைய ஒருமாதத்துக்கும் மேலாய் இரு சக்கர வாகனத்தில் செல்கிற நண்பர்கள் அல்லோலப்பட்டு, சில பேர் காவல்துறை அதிகாரிகளிடம் இன்னும் மாட்டாமல் டபாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது தவறில்லைதான். ஆனால் வேகாத வெயிலில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை பள்ளம மட்டுமே உள்ள ரோட்டில் போவது சாதனைதான். 

விபத்தினால் உயிர் இழந்தது ஹெல்மெட் அணியாததால்தான் என்று ஒரு வழக்கை விசாரிக்கப் போய் நீதிபதிகள் இத்தக கட்டாயமாக்கி இருக்கிறார்கள். ஒழுங்கான சாலைகள் இல்லாததால்தான் விபத்துக்களே நடக்கின்றன என்று அரசுக்கு செப்டம்பர் ஒன்றுக்குள் அந்த நீதிபதிகள் கெடு வைக்கலாமே. நிற்க.

வெறும் தூண்களோடு நின்று போன மேம்பாலப் பணிகள், சாலை செப்பனிடாமல் பள்ளம் உள்ள சாலைகள், இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன மக்களும் வணிகர்களும், பல மனுக்களைக் கொடுத்த பிறகும் அரசு செவிசாய்க்காமல் இருந்ததால் அவர்களே ஏழு லாரிகளில் தார் ஜல்லி தயாராக வைத்து சாலை போடப் போனால், அவர்களைக் கைது செய்து உள்ளே வைத்தது மட்டுமல்லாமல் அந்த ஏழு லோடும் ஸ்வாகா ஆனது. 
ரோடு போட்டது ஒரு குத்தமா. உங்களைய ரோடு போடச் சொன்னாதான் குத்தம். நாங்களா போட்டாலும் குத்தமா?

பள்ளிக்கு அருகில் இருக்கும் சாராயக் கடையை மாத்தச் சொல்லி நீதி மன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்து, அதற்கும் செவி சாய்க்காமல், சசி பெருமாளின் உயிரைக் குடித்த பிறகு அதைப் பூட்டியிருக்கிரார்கள். 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் அனைவருக்கும் சிறை. நீதி மன்ற உத்தரவை ஒரு இடத்தில் மட்டும் நிறைவேற்றத் தயங்கும் காவல்துறை, தமிழக அளவில் ஹெல்மெட் விஷயத்தில் ஆர்வம காட்டுவது மட்டும் ஏன்?

ஒரு விஷயத்தில் சட்டத்தை மதிக்கும் காவல் துறை மறு விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறது?
ஒரு விஷயத்திற்கு மட்டும் தானாக வந்து சட்டம் போடும் நீதி மன்றம் இந்த விஷயத்தை தானாக எடுக்க ஏன் தயங்குகின்றது.?
 வருமானம் வரும் விஷயத்திற்கு மட்டும்தான் சட்டமா?




12.5.13

உண்மையான தேச பக்தர்கள் - கைதிகளே

தேச பக்தி கைதிகள்

  • பாகிஸ்தானிய சிறையில் கடந்த வாரம் சக கைதிகளால் தாக்கப்பட்ட சரப்ஜித்சிங் மரணமடைந்தார். எதனால் பாகிஸ்தானிய கைதிகள் அவரை தாக்கினார்கள்? அரசின் தூண்டுதலாக இருக்கலாம் அல்லது தற்செயலாக  நடந்த ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம்.
  • இந்த செய்தி வந்த உடனேயே ஜம்மு சிறையில் இருந்த பாகிஸ்தானிய சனாவுல்லா இந்தியக் கைதிகளால் தாக்கப் பட்டிருக்கிறார். இது நிச்சயமாக அரசின் தூண்டுதலின்றி  நிகழ வாய்ப்பே இல்லை. ஆனால் இதை யாராலும் நிரூபிக்க முடியாது. ஆனால் எதனால் இந்தத் தாக்குதல்கள் இங்கே நடந்தது? இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட பல பாரத மகன்கள் தவறாக தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் இருக்கிறார்கள் போல தெரிகிறது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட ஒரு கைதிக்காக ராணுவ வீரர்கள் கூட கொதித்தெழாத நிலையில் இந்த சிறைமகன்கள்  உடனே பழி வாங்கினால் இவர்களைக் காட்டிலும் தேச பக்தி மிகுந்தவர்கள் யாராவது உண்டு என்று சொல்ல முடியுமா? இவர்களுக்குத்தான் நாட்டின்  குடிமகன்களுக்கான விருதைக் கொடுக்க வேண்டுமென நமது குடியரசுத் தலைவரை வேண்டி விருபிக் கேட்டுக் கொள்கிறேன்.
  • பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட இந்தியப் பிரஜைக்கு ஆதரவாக பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த அனைத்து அரசியல்வாதிகளும், இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானிய கைதி இந்தியச் சிறையில் இறந்ததற்காக "இந்தியா ஒரு காட்டு மிராண்டி அரசு" என்று சொல்ல  முன்வருவார்களா வர முடியுமா? ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லுவார்கள். 
வடக்கே ஒருவிதமான பக்தி என்றால் தெற்கே வேறு விதமான பக்தி நடக்கிறது.  வடக்கே சிறைக்குள் கலவரம் என்றால் இங்கே சிறை வைத்ததால் வெளியே கலவரம்.  அப்பா தியாகிகள் உள்ளே இருக்கிறார்கள் கலவரக் காரர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று அர்த்தமா? தெரியவில்லை.

பா.ம.வை ஒழிக்க சதி என்று அதன் முக்கிய நிறுவனர் சொல்லுகிறார். ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்.
தமிழக மக்களை ஒழிக்க சதி செய்கிறார் அவர் என்று நாம் யாரிடம் மனு கொடுப்பது?

எனக்கு ஒரு பட்டுதான் நினைவுக்கு வருகிறது...
தாஸ் தாஸ் சின்னப்பா தாஸ் தாஸ் ... பள்ளிக் கூடம் போகமலே பாடங்களை .... அவர் கூட மனசு மாறினதா பாரதிராஜா சொல்றாரு... பள்ளிக்கூடம் போய்  பாடம் படிச்சு மருத்துவராகி.... ரத்தம் எல்லாம் ஒண்ணுன்னு பார்த்தவங்க இன்னும் சாதி சாதின்னு பேசுறாகளே இதென்ன படிச்சு வாங்கின பட்டமா...

இதுக்காக சிறைச்சாலை போற மாதிரி செயல்கள் செய்து, பேசி... அந்தப் பக்தியை நிலை நாட்டுறாக ... அப்படியாவது தினமும் அவர்களைப் பற்றி நாம் எல்லாரும் பேசுறோம்லையா ...

4.5.13

"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" - அரசு மரியாதை செய்யுங்கள்


  • "முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படியே கைது செய்யப்பட்டால் காந்தியின் நிலைக்கு உயர்ந்து விடலாம் அல்லது ஹிட்லைரைப் போலவாவது இருந்து விடலாம் என்றெல்லாம் கனவு காணுகிறார்கள் - பாவம் அப்துல்கலாம் ... எதெற்கெடுத்தாலும் இந்தக் கனவு காணுங்கள் படாத பாடு படுகிறது!

  • எண்பது மற்றும் தொன்னூறுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரது கவனத்தையும் தங்களது பக்கமாய் திருப்பினார்கள்... பசுமை தரும் மரங்களை வெட்டி சாலையில் இட்டு தங்களது செல்வாக்கை விரித்த போது, கொஞ்சம் வாக்கு வங்கிகளைத் தன பக்கம் கொணர்ந்து, அதை தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய சக்தியாக மாற்றிவிட முடியும் என்றும் அதனால் அது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமோ என்று தோன்றியது. வெறும் சாதியை முன் வைத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் நிச்சயமாய்த் திருப்பினார்கள்.
  • சாதியைத் தாண்டி வந்தது போலக் காண்பித்தது நல்ல மாற்றமாகவே தெரிந்தது. அந்த சமயங்களில் அவர்கள் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்பதும், அதைத் தொடர்ந்து வெளிவந்த புத்தகங்களும் உண்மையிலேயே தமிழரின் பெருமையை வெளிக் கொண்டுவந்தன என்பதும், சாதியத்தைக் கடந்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்கிற ஒரு சக்தியா அது வளர்வதையும் பார்த்து சிறு மகிழ்ச்சி அடைந்ததென்னவோ உண்மைதான்.

  • ஆனால் அது கொள்கைகளின்றி தேர்தலுக்குத் தேர்தல் தாவியதைப் பார்த்து  வெறுப்பு வந்தாலும் சரி கட்சியை வளர்க்கிற வரை இது தேவைப்படும் யுத்தியாகக் கருதிக் கொள்வோம் என்று வெறுப்பை மறைத்து வைத்தேன். அதன் பிறகு அதைக் கண்டு கொள்ளவும் இல்லை வெறுப்பும் இல்லை.

  • யாருமே கண்டு கொள்ளப்படாத சக்தியாக இல்லை என்கிற போது  சாதிக் காரர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிற மேதாவியாக இருந்து கொள்ளாலாம் என்று ஒவ்வொரு மாவட்டமாய்ச் சென்று சாதியத்தை விதைக்கிற மனப் பான்மை - முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்த யுத்திகளை மீண்டும் கையில் எடுக்கிற வித்தை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
  • ஊர் ஊராய்ச் சென்று மாநாடு நடத்தி எல்லாருக்கும் எதிராய்ப் பேசுவார்கள், பாதகம் விளைவிப்பார்கள், பிரிவினையை ஆழப்படுத்துவார்கள், அப்போதெல்லாம் மனித நேயம், உரிமை பற்றிப் பேசாத ஐ.நா. வரை சென்று வந்த மனித நேய ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒருவரைக் கைது செய்த பின் அராஜகம் அக்கிரமம் என்று சாதி புத்தியை வெளிக் கொண்டு வருகிறார்கள்.

  • சாதி அரசியல் என்பது சாக்கடை அரசியலே... அதைத் தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. பேருந்தைக் கொளுத்துவது - மரத்தை வெட்டுவது - கல் விட்டு எறிவது - இவைகளாலெல்லாம் எதையும் மீட்டு விட முடியாது. 
************************
சரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -
                                                   தியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.   

இந்திய அரசின் உளவாளி  என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் "அவர் இந்தியாவின் வீர மைந்தர்" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.


இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர்? அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து  கொண்டிருந்தது? {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}

தவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.

ஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே  ஏன்? {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}

குண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா?

ஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா?  இவர்கள் அப்பாவிகள் இல்லையா? இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா? 

அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை.  நல்ல ஊடகங்கள்.

எந்த அரசும் இதைக்  கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ? அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.

குடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...

ஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.

2.10.12

நம்ம மகாத்மா

ஒரு தொலைக் காட்சியின் காணொளியை எனது வலைப் பதிவில் தருவது இது இரண்டாவது முறை என்று நினைக்கிறேன். முதல் முறை சுப்ரமணிய சுவாமியின் பேட்டிஒன்று. இது இரண்டாவது. காந்தி பிறந்த நாளில் மிகவும் காத்திரமான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது கை கூட வில்லை. இந்தக் கானோளியைக்கண்ட பிறகு எழுதாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது. அடிப்படைச் செய்திகள் கூடத் தெரியாத நமக்கு என்ன மிகப் பெரியக் கட்டுரை தேவை என்று தோன்றியது.

தேசப் பிதா... மகாத்மா பற்றி என்ன தெரிந்திருக்கிறது நமக்கு. நமது கல்வி முறை தேதிகளை நினைவில் வைக்கச் சொல்லிக் கொடுத்தாலும் நமக்கு அது மனதில் பதிவதில்லை. கல்வி முறை பற்றியும் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

பாருங்கள்


namma mahatma di msmorethan143

15.11.11

அடுத்த "சாமி" - நம்ம ஊரிலிருந்து

தமிழர்களை இழிவு படுத்துவதற்கு வேறு யாரும் வெளியிலிருந்து வர வேண்டாம். அரசுப் பதவியில் இருக்கும் தமிழர்களே போதும்.
"இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுச்சேரியில் ஒரு அமைச்சர் மக்களிடம் வாக்குச் சேகரிக்கும் போது - "இங்கே உங்களுக்கு குழந்தைகளைத் தவிர அனைத்தையும் கொடுத்திருக்கிறோம்" [நேற்று குழந்தைகள் தினம்] என்று சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார். 

நான் ரொம்ப நாகரிகமாகச் சொல்லியிருக்கிறேன் - தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் - "நாங்க ஒன்னே ஒன்னுதான் குடுக்கலை - குழந்தை பெத்துக் குடுக்கலை அவ்வளவுதான் மத்ததெல்லாம் குடுத்தாச்சு."




புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட இதே மாண்புமிகு வி. நாராயணசாமிதான்  - நேற்று திருவாய் மலர்ந்து  - கூடங்குளத்தில் "தொடர்ந்து இந்தப் போராட்டக் காரர்கள் போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க உள்ளோம்." என்று சொல்லியிருக்கிறார். மக்கள் குடுத்தால் கணக்கு காமிக்க வேண்டாமா -- என்பது போன்ற நிறைய விஷயங்கள் சொல்லி மக்களின் அறிவுக் கண்களைத் திறந்திருக்கிறார்.

மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒன்றும் தவறில்லைதான். ஒரு போராட்டத்தை உடைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யத்தானே அரசு செய்யும்.அதைச் செய்யாமல் இருந்ததால்தானே ஆச்சரியம்.

மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்க்கிறதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியுமாம். அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு, இவர்கள் கூப்பிடிகிற போதெல்லாம்  பணம் கொடுத்துதான் மக்களை அழைத்து வருகிறார்களா? இன்று வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்கார நண்பர்களே ஒவ்வொரு முறை காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் இப்படித்தான் போனீர்களா? அல்லது சுதந்திரப் போராட்டத் தியாகிகளே எல்லாம் ஒவ்வொரு போராட்டத்திற்கும் மக்கள் கொடுத்த பணத்திற்கு ஆங்கில அரசிடம் கணக்கு கான்பித்திர்களா...  நமது அரசு ஒன்றும் ஆங்கில அரசு இல்லைதான்... கணக்கு கேட்டா காட்டிட்டுப் போறாங்க... எப்போத் தாக்கல் செய்ய வேண்டுமோ அப்போது செய்வார்கள் என்றே நம்புகிறேன்  - யாரிடமிருந்து பணம் வந்தாலும் அவர்களுக்குக் கணக்குக் கொடுக்கவாவது அவர்கள் கணக்கு வைத்திருக்க மாட்டார்களா என்ன?

அல்லது எப்படிப் பணத்தை தண்ணியை செலவழித்தாலும் இப்படி தொடர் போராட்டத்துக்கு அழைத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் கூட வருவதில்லையே - அப்படின்னு கோவத்துல சொல்றாரா மாண்புமிகு அமைச்சர்?

மாண்புமிகு அமைச்சர் என்ன நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்றால் - மக்களுக்கு யாரும் அறிவில்லை. தன் சந்ததிக்காகவும், தன் வாழ்க்கை பாதுகாப்பிற்காகவும் போராடுவதற்கு மக்கள் வரமாட்டார்கள்.  மக்களுக்கு பொது நலம் என்பதே இல்லை - அதன் அடிப்படையில் ஒரு போராட்டத்திற்காக பணம் கொடுக்கிற நிலையில் மக்கள் இல்லை - அதற்காகத்தானே பெட்ரோல் முதற்கொண்டு மற்றும் எல்லா அத்தியாவசியப் பொருட்கள் விலை வரை ஏற்றி வைத்திருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி எப்படி மக்கள் போராட்டத்திற்கு வருவதோ அல்லது பணம் கொடுக்கவோ முடியும் என்று சொல்லுகிறார். இதை அவரால் புரிந்துகொள்ள முடியாது. 

அவருக்கு என்ன ஆச்சரியம் என்றால் அப்படி யோசிக்க விடாமல்தானே எல்லாரும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் -  அப்படி இருக்கும்போது எப்படி இவர்களுக்கு போராட துணிச்சல் வந்தது? யார் பணம் குடுக்குறா? பணம் குடுத்தே ஆட்களை கூப்பிட்ட உங்களுக்கு அப்படித்தானே நினைக்கத் தோணும். இல்லைன்னா, உங்க பின்னாடி வர்ற தொண்டர்கள் யோசிக்க முடியாமத்தான் உங்க பின்னாடி வர்றாங்களா மகாராசா! 

ஒரு மக்கள் போராட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்கிற மிகச்சிறிய விஷயம் கூட  தேறாத நாம்தான் மாக்களுக்காக அரசு அரசுக்காக மக்கள் அல்ல என்று சொல்லுகிறோம். மிரட்டல் மற்றும் உருட்டல் வழியாக ஒரு போராட்டத்தை கலைக்க வேண்டும் என்று ஒரு அரசு நினைத்தால் - அது ஆங்கிலேய அரசு என்று சொல்வதில் தவறென்ன? 

வெளி நாட்டில் நாலு பேரு நாடு ரோட்டுல நின்னு ஒரு கொடி பிடிக்கிற செய்தியை ஒரு வெளிநாட்டு நிறுவனம் செய்தி எனத் தந்தால் காசு குடுத்து அந்தச் செய்தியை வாங்கி நம்ம ஊரு தொலைக் காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிடும். இங்கே நூற்றுக் கணக்கான மக்கள் வாழ்வாதரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் போது அதை ஒரு ஓரத்திலும், சாமி சொல்வதை முதல் பக்கத்தில் போட்டு மக்களைக் கொச்சைப் படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அரசு இயந்திரங்கள் அப்படித்தான் இருக்கும். ஆனால் மீடியா அப்படி இருக்க முடியுமா? அவர்களை புரிந்து கொள்ளா விட்டாலும் பரவாயில்லை இழிவு படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா. 

கொசுறு

"19. Protection of certain rights regarding freedom of speech, etc.-
  1. All citizens shall have the right-
    1. to freedom of speech and expression;
    2. to assemble peaceably and without arms;
    3. to form associations or unions;
    4. to move freely throughout the territory of India; ...."
                                                        FUNDAMENTAL RIGHTS  - INDIAN CONSTITUTION

9.4.11

அன்னா ஹசாரேக்கு எதிராய் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய்

அன்னா ஹசாரே ஒரு தனி மனிதனாய் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகும், பிரதமரோடு உரையாடிய பின்பும், இது ஒன்றும் நடக்கிற காரியம் இல்லை என்று, சாகும் வரை உண்ணா விரதம் இருக்கிறார். இது போராட்டம். களத்திலும் நாட்டிலும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இப்போராட்டம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இணையத்தில் தமிழ் வலைப் பூக்களில் இது பெற்ற முக்கியத் துவத்தைக் கூட தமிழ் பத்திரிகைகள் பதிவு செய்யவில்லை என்பது வருத்தம்தான். 

எத்தனை எத்தனைப் பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள். எதெதெற்கோ நேரடி ஒளிபரப்புச் செய்யும் தொலைக் காட்சிகள் இதைச் செய்தால்தான் இப்போராட்டத்தை வலுப் படுத்த முடியும் என்பது திண்ணம். 

வியாபார நோக்கம் கொண்ட பத்திரிக்கைகள், ஊழல் பின்புலம் கொண்ட அரசியல் வாதிகளின் தொலைக் காட்சிகள், வியாபார நோக்கம் கொண்ட விளையாட்டு தொலைக் காட்சிகள், உண்மையை இருட்டடிப்புச் செய்யும் மீடியாக்கள் இதற்கு ஒரு போதும் துணையிருக்காது.
எல்லாக் கட்சியும் அயோக்கியக் கட்சிதான். அவைகளுக்குள்ள அதிகாரப் போதையைத் தெளிவு படுத்தவும், ஊழல் பற்றிய நினைவு வராமல் இருக்கவும், லோக் பால் சட்ட மசோதா நிறைவேற்றப் படவேண்டும் என்பதுதான் இந்த வீரரின் கோரிக்கை. 

எதற்கும் ஒத்து வராத அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த  விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.  அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய். இவர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராய் ஒன்றைக் குரல் கொடுப்பார்கள் அதில் ஏதாவது பெற முடியுமெனில்....
அவநம்பிக்கை எதையும் சாய்த்து விடக் கூடாது. எல்லாத் தமிழ் வலைப் பூக்களின் முதற் பக்கத்திலும் அன்னா ஹசாரே பற்றிய கட்டுரைகள் முதற்பக்கத்தில் சில நாட்களுக்கு இருக்கும் படி செய்தாலே இந்தப் போராட்டத்தை இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.

சிறு தீப் பொறி காட்டை அழிக்கும். அன்னா ஹசாரேப் பொறி ஊழல் நாட்டை ஒழிக்கும்.


விரிவான கட்டுரைகளுக்கு 
http://truetamilans.blogspot.com/2011/04/40000-1000.html


http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_7097.html


http://smuthukumaran.wordpress.com/2011/04/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87/

http://tamilnanbargal.com/node/32566

http://www.sangkavi.com/2011/04/blog-post_07.html

http://www.giriblog.com/2011/04/hazaare-no-to-politicians.html



28.11.10

நவம்பர் இருபத்தி ஏழு

தமிழர்களை தலை நிமிர்த்தும் முயற்சியில் தனது இன்னுயிரை ஈந்த அந்த போராளிகளை நினைவு கூறும் போது, இருக்கும் தமிழர்கள் இன்னும் இன உணர்வோடு எழுந்து நிற்க இந்த நாள் துணை நிற்கும் என்பது மட்டுமல்ல, தியாகிகள் எப்போதும் வரலாற்றும் பக்கங்களிலும், நமது நினைவுகளிலும் நீங்காமல் இருப்பார்கள்.