19.5.13

ஐ. பி. எல் ஸ்பெஷல்


  • இருபது ஓவர் மாட்சில் ஒரு பாலைக் கூட அடிக்காமல் விட முடியாது. அப்படி ஏதாவது ஒரு பாலை மட்டையாளர் அடிக்காமல் விட்டால் --- அப்போது சப்பாத்தி ஷாட் ஸ்பெஷலிஸ்ட் ரவி சாஸ்த்ரி சொல்லும் காமெண்டரி உங்கள் காதில் தேனாக வந்து விழும்.  அதுவும் சாஸ்த்ரி வீட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் கல்லெறிந்த செய்தி தெரிந்தவர்களுக்கு மட்டும். எப்படித்தான் பழசெல்லாம் மறந்துட்டுப் பேசுறாங்களோ?
  • ஸ்ரீஷாந்த் பஜ்ஜு விடம் அடி வாங்கிய வீரன். பல சமயங்களில் அழுது அழுதே கொஞ்சம் அனுதாபம் சம்பாரித்துக் கொண்ட இந்தப் பையன் கொஞ்சம் அழுகுணி ஆட்டம் ஆடி சம்பாரிக்கலாம் என்று பார்த்திருக்கிறார். இந்தக் குற்றத்துக்கான தண்டனைதான் ஹர்பஜன் அவனை அறைந்தது. இதற்கு மேல் அவருக்கு எதுவும் தண்டனை கிடைக்காது. மிஞ்சிப் போனால் விளையாடத் தடை சொல்வார்கள். அதனாலென்ன இருக்கவே இருக்கிறது காங்கிரஸ் --- அதில் சேர்ந்து ஒரு எம். பி. ஆகிவிட மாட்டாரா என்ன?
  • விஜய்  மால்யா எம். பி. தனது கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அதன் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளப் பாக்கி செலுத்தவில்லை. ... ஏறக்குறைய 6,500 கோடி கடன்களை வசூல் செய்யும் வழி தெரியாமல் இருக்கின்றன வங்கிகள். மல்யாவுக்கு சொத்து மதிப்பி ஏறக்குறைய 40, 000 கோடிகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும், அரசும் ஒன்னும் செய்ய முடியவில்லை, வங்கிகளும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழியர்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரும் அவரது புதல்வரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் - ஐ. பி. எல்லில். 
  • வங்கிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது எஸ் பேங்க் மாக்சிமம். அவர்கள் ஒரு மேட்சுக்கு ஒரு லட்சம் என்று ஏறக்குறைய 77 போட்டிகள்.... எப்படி ஒரு வங்கிக்கு இவ்வளவு பணம் இந்த ஒரு மாத விளம்பரத்தில் மட்டும் செலவு செய்ய முடியும். பெப்சி ... வோடபோன் ... ஸ்டார் ப்ளஸ் ... விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு பணம் என்றால், அவர்களின் இலாபம் எவ்வளவு.... வி ஆர் ஸ்லேவ்ஸ் ஆப் தி அட்வேர்டைஸ்மென்ட்ஸ்... 
  • நடு கிரவுண்டில் சண்டையிட்டுக் கொண்ட கம்பீரும் கோலியும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை என்பது சரியாகவே தோன்றியது. ஒருவேளை கொல்கொத்தா வெற்றி பெற்றால் பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று நினைத்தாரோ கம்பீர். சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று கோலிக்கு கிலி உண்டாக்கி விட்டார்கள். வருடத்திற்கு என்பது கோடிகள்  என்று ஐந்து வருடத்திற்கு ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது சண் டி. வி. இறுதி மாட்சில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கும் மும்பைக்கும் இடையே இருக்கலாம்... 
  • லலித் மோடி லலித் மோடி என்று  ஒருவர் பிக்சிங் செய்து இந்த ஐ. பி. எல்லை மிகவும் பிரபலப் படுத்தியவர்.... அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் லவுட்டியவர்... இன்னமும் அவருக்கே என்ன ஆச்சுன்னு தெரியலை... ஆனா ஏன் ஸ்ரீ சாந்த் கேசுல டெல்லி போலிஸ் இவ்வளவு அக்கறை காட்டுதுன்னு தெரியலை... வேற ஏதாவது ரேப் கேசு வந்து அதை மறைக்க இதைச் செய்யுறாங்களோ அல்லது இறுதிப் போட்டியில் நடக்க இருக்கும் பிக்சிங்கை மறைக்க முன்பே நடவடிக்கை என்ற பெயரில் ரசிகர்களை இன்னமும் உண்மையிலேயே உண்மையான மாட்ச்   நடக்கும் என்று நம்ப வைப்பதற்கா? 

12.5.13

உண்மையான தேச பக்தர்கள் - கைதிகளே

தேச பக்தி கைதிகள்

  • பாகிஸ்தானிய சிறையில் கடந்த வாரம் சக கைதிகளால் தாக்கப்பட்ட சரப்ஜித்சிங் மரணமடைந்தார். எதனால் பாகிஸ்தானிய கைதிகள் அவரை தாக்கினார்கள்? அரசின் தூண்டுதலாக இருக்கலாம் அல்லது தற்செயலாக  நடந்த ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம்.
  • இந்த செய்தி வந்த உடனேயே ஜம்மு சிறையில் இருந்த பாகிஸ்தானிய சனாவுல்லா இந்தியக் கைதிகளால் தாக்கப் பட்டிருக்கிறார். இது நிச்சயமாக அரசின் தூண்டுதலின்றி  நிகழ வாய்ப்பே இல்லை. ஆனால் இதை யாராலும் நிரூபிக்க முடியாது. ஆனால் எதனால் இந்தத் தாக்குதல்கள் இங்கே நடந்தது? இந்திய தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட பல பாரத மகன்கள் தவறாக தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் இருக்கிறார்கள் போல தெரிகிறது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட ஒரு கைதிக்காக ராணுவ வீரர்கள் கூட கொதித்தெழாத நிலையில் இந்த சிறைமகன்கள்  உடனே பழி வாங்கினால் இவர்களைக் காட்டிலும் தேச பக்தி மிகுந்தவர்கள் யாராவது உண்டு என்று சொல்ல முடியுமா? இவர்களுக்குத்தான் நாட்டின்  குடிமகன்களுக்கான விருதைக் கொடுக்க வேண்டுமென நமது குடியரசுத் தலைவரை வேண்டி விருபிக் கேட்டுக் கொள்கிறேன்.
  • பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட இந்தியப் பிரஜைக்கு ஆதரவாக பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த அனைத்து அரசியல்வாதிகளும், இந்தியப் பிரதமரும் பாகிஸ்தானிய கைதி இந்தியச் சிறையில் இறந்ததற்காக "இந்தியா ஒரு காட்டு மிராண்டி அரசு" என்று சொல்ல  முன்வருவார்களா வர முடியுமா? ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லுவார்கள். 
வடக்கே ஒருவிதமான பக்தி என்றால் தெற்கே வேறு விதமான பக்தி நடக்கிறது.  வடக்கே சிறைக்குள் கலவரம் என்றால் இங்கே சிறை வைத்ததால் வெளியே கலவரம்.  அப்பா தியாகிகள் உள்ளே இருக்கிறார்கள் கலவரக் காரர்கள் வெளியே இருக்கிறார்கள் என்று அர்த்தமா? தெரியவில்லை.

பா.ம.வை ஒழிக்க சதி என்று அதன் முக்கிய நிறுவனர் சொல்லுகிறார். ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்.
தமிழக மக்களை ஒழிக்க சதி செய்கிறார் அவர் என்று நாம் யாரிடம் மனு கொடுப்பது?

எனக்கு ஒரு பட்டுதான் நினைவுக்கு வருகிறது...
தாஸ் தாஸ் சின்னப்பா தாஸ் தாஸ் ... பள்ளிக் கூடம் போகமலே பாடங்களை .... அவர் கூட மனசு மாறினதா பாரதிராஜா சொல்றாரு... பள்ளிக்கூடம் போய்  பாடம் படிச்சு மருத்துவராகி.... ரத்தம் எல்லாம் ஒண்ணுன்னு பார்த்தவங்க இன்னும் சாதி சாதின்னு பேசுறாகளே இதென்ன படிச்சு வாங்கின பட்டமா...

இதுக்காக சிறைச்சாலை போற மாதிரி செயல்கள் செய்து, பேசி... அந்தப் பக்தியை நிலை நாட்டுறாக ... அப்படியாவது தினமும் அவர்களைப் பற்றி நாம் எல்லாரும் பேசுறோம்லையா ...

4.5.13

"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" - அரசு மரியாதை செய்யுங்கள்


  • "முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படியே கைது செய்யப்பட்டால் காந்தியின் நிலைக்கு உயர்ந்து விடலாம் அல்லது ஹிட்லைரைப் போலவாவது இருந்து விடலாம் என்றெல்லாம் கனவு காணுகிறார்கள் - பாவம் அப்துல்கலாம் ... எதெற்கெடுத்தாலும் இந்தக் கனவு காணுங்கள் படாத பாடு படுகிறது!

  • எண்பது மற்றும் தொன்னூறுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரது கவனத்தையும் தங்களது பக்கமாய் திருப்பினார்கள்... பசுமை தரும் மரங்களை வெட்டி சாலையில் இட்டு தங்களது செல்வாக்கை விரித்த போது, கொஞ்சம் வாக்கு வங்கிகளைத் தன பக்கம் கொணர்ந்து, அதை தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய சக்தியாக மாற்றிவிட முடியும் என்றும் அதனால் அது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமோ என்று தோன்றியது. வெறும் சாதியை முன் வைத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் நிச்சயமாய்த் திருப்பினார்கள்.
  • சாதியைத் தாண்டி வந்தது போலக் காண்பித்தது நல்ல மாற்றமாகவே தெரிந்தது. அந்த சமயங்களில் அவர்கள் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்பதும், அதைத் தொடர்ந்து வெளிவந்த புத்தகங்களும் உண்மையிலேயே தமிழரின் பெருமையை வெளிக் கொண்டுவந்தன என்பதும், சாதியத்தைக் கடந்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்கிற ஒரு சக்தியா அது வளர்வதையும் பார்த்து சிறு மகிழ்ச்சி அடைந்ததென்னவோ உண்மைதான்.

  • ஆனால் அது கொள்கைகளின்றி தேர்தலுக்குத் தேர்தல் தாவியதைப் பார்த்து  வெறுப்பு வந்தாலும் சரி கட்சியை வளர்க்கிற வரை இது தேவைப்படும் யுத்தியாகக் கருதிக் கொள்வோம் என்று வெறுப்பை மறைத்து வைத்தேன். அதன் பிறகு அதைக் கண்டு கொள்ளவும் இல்லை வெறுப்பும் இல்லை.

  • யாருமே கண்டு கொள்ளப்படாத சக்தியாக இல்லை என்கிற போது  சாதிக் காரர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிற மேதாவியாக இருந்து கொள்ளாலாம் என்று ஒவ்வொரு மாவட்டமாய்ச் சென்று சாதியத்தை விதைக்கிற மனப் பான்மை - முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்த யுத்திகளை மீண்டும் கையில் எடுக்கிற வித்தை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
  • ஊர் ஊராய்ச் சென்று மாநாடு நடத்தி எல்லாருக்கும் எதிராய்ப் பேசுவார்கள், பாதகம் விளைவிப்பார்கள், பிரிவினையை ஆழப்படுத்துவார்கள், அப்போதெல்லாம் மனித நேயம், உரிமை பற்றிப் பேசாத ஐ.நா. வரை சென்று வந்த மனித நேய ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒருவரைக் கைது செய்த பின் அராஜகம் அக்கிரமம் என்று சாதி புத்தியை வெளிக் கொண்டு வருகிறார்கள்.

  • சாதி அரசியல் என்பது சாக்கடை அரசியலே... அதைத் தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. பேருந்தைக் கொளுத்துவது - மரத்தை வெட்டுவது - கல் விட்டு எறிவது - இவைகளாலெல்லாம் எதையும் மீட்டு விட முடியாது. 
************************
சரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -
                                                   தியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.   

இந்திய அரசின் உளவாளி  என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் "அவர் இந்தியாவின் வீர மைந்தர்" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.


இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர்? அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து  கொண்டிருந்தது? {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}

தவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.

ஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே  ஏன்? {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}

குண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா?

ஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா?  இவர்கள் அப்பாவிகள் இல்லையா? இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா? 

அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை.  நல்ல ஊடகங்கள்.

எந்த அரசும் இதைக்  கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ? அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.

குடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...

ஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.

28.4.13

சொர்க்கமேன்னாலும் நம்மூரு போல வருமா?


  • சிறைவாசம் செல்வதற்கு ஏற்கனவே நான்கு வார அவகாசங்களை வழங்கியிருந்த நீதிமன்றம் இப்போது மேலும் நான்கு வாரங்களை உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கியிருக்கிறது. ரூ. 278 கோடிகள் மதிப்பிலான மீதியிருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதற்காக 'மனிதாபிமான' அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
    • மனிதாபிமானம் என்பதற்கான புதிய விளக்கம். இதுபோல பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் என்று அறிவிப்புதான் இது.
  • டெல்லியில் ஐந்து வயதுப் பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2000 கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள்.
    • ?????????????
  • நரேந்திர மோடியை விமர்சித்த பிறகு நித்திஷ் குமார் அரசிற்கு, மத்திய அரசு 12,000 கோடி பின்தங்கிய பகுதிகளுக்கு உதவும் நிதி வழங்க முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் மட்டுமே கருதி இந்த முடிவை உண்மைக்கும் நீதிக்கும் சொந்தக் காரரான காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
    • ஸ்டாலின் வீட்டில் உண்மையாய் ரெய்டு நடத்திய மாதிரி.........
  • 29 வயதான கிருஷ்ணா என்கிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் [கர்நாடகா] தனது சொத்து மதிப்பு ரூ. 910 கோடிகள் என்று   தெரிவித்திருக்கிறார். 
    • ஏழைகளின் நண்பன் காங்கிரஸ் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவும், ஏழை இளைஞர்களுக்கு மிகப் பெரிய க்ரியா ஊக்கியாக இருப்பதும் தான் அவரது வாழ்க்கை இலட்சியமாம்.
  • பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதற்கு பெண்களின் பார்வையே காரணம் என்று சத்யதேவ் கட்டாரே என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் [மத்தியப் பிரதேசம்] சொல்லியிருக்கிறார்.  
    • எல்லாப் பெண்களின் கண்களையும் குருடாக்க வேண்டும் என்றுதான் சொல்ல நினைத்தாராம்...   என்று விட்டு விட்டாராம்.
  • பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமா நடக்கிறது .... எல்லா இடங்கலிலும் தான்... பாலியல் பலாத்காரத்தை கட்டுப் படுத்துவதுதான் உள்துறை அமைச்சகத்தின் வேலையா என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த [உத்திரப் பிரதேசம்] ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். 
    • கடற்படைக்கு மீனவர்களைக் காப்பதுதான் வேலையா? உள்துறைக்கு மக்களைக் காப்பதுதான் வேலையா... நிதி அமைச்சகத்துக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதான் வேலையா ... சீனர்கள் ஊடுருவாமல் தடுப்பதுதான் இராணுவத்தின் வேலையா .... என்றெல்லாம் கேட்க நினைத்தாராம்...
  • தெற்கே தினம் தினம் தமிழக மீனவர்களைக் கொள்ளும் இலங்கையிடம் அமைதி... பத்தொன்பது கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனர்களிடம் பேச்சு வார்த்தை ... பாலியல் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நீதி கேட்ட பெண்ணிடம் மட்டும் 'அறை' --- 
    • என்ன வீரம் சார்... என்ன கொடுமை சார்?


23.4.13

அன்னை தெரசாவும் அபியும்


[அபி இக்கட்டுரை எழுதிய அ. பிரபாகரனைக் குறிக்கிறது.]

************************************************************

ரொம்ப நாளாயிற்று - ஏதேனும் எழுதி. உண்மையா பொய்யாவில் அவ்வப்போது ஏதாவது எழுதச் சொல்லி அப்பு அன்பாய்க் கேட்பார். என் சோம்பேறித்தனம் அதற்கு ஆப்பாய் வந்து நிற்கும். நண்பரும் ஆரம்பத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை பதிவேற்றம் செய்தால் சுமார் 15 காமேன்ட்டுகளாவது வரும். இப்போது அவரே எப்போதாவதுதான் எழுதுகிறார். எனவே அவரைத் தொடர்ந்தவர்களும் அவரைக் கை விட்டு விட்டார்கள். அவரே எழுதி, அவரே படித்துக் கொண்டு அவரே சிலாகிக்கும் நார்சிச மனோபாவத்திலிருந்து அவரை விடுவிக்கும் கடமை எனக்கு இருப்பதாலும், வெகுநாள் கழித்து அவரை இப்போதுதான் சந்தித்ததாலும் ஏதேனும் எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. பல மாதங்களுக்கு முன் நானும் அப்துல் கலாமும் என்று எழுதியதாக ஞாபகம். இனி கட்டுரை ....

************************************************************
சமீபத்தில் ஒரு நண்பர் ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரையை எனக்கு மெயிலில் அனுப்பியிருந்தார். அவர் ஒரு கிறித்தவர் - அன்னை தெரசாவின் அபிமானி. அந்தப் புத்தகம் அன்னைத் தெரசாவைப் பற்றி விமர்சித்து எழுதப் பட்டிருக்கிறது. நண்பருக்கோ அன்னை தெரசாவைப் பற்றி மனதில் மிகப் பெரிய பிம்பம் இருக்கிறது. தற்காலத்தில் வாழ்ந்த தெய்வப் பிறவியாக அவரை நண்பர் பாவித்துக் கொண்டிருக்கிறார். இந்த விமர்சனத்தைப் படித்ததும் அவருக்கு நிலை கொள்ளவில்லை. குழப்பமாகப் போய் விட்டது. பிம்பம் தகர்ந்து விடுமோ என்று பயப்படுகிறார்.

பல நேரங்களில் நாம் பிம்பங்களில்தான் சுகம் கண்டு கொண்டிருக்கிறோம். பிம்பங்கள் நொறுங்குவது நமக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நொறுங்குகிற பிம்பங்களிருந்துதான் உண்மையின் வாசல் உங்களுக்குக் கொஞ்சமேனும் புலப் படும். ஆனால் உண்மையின் வெளிச்சங்கள் அவர்களது அறிவுக் கண்களை கூசச் செய்யும் என்பதால் மனிதர்கள் அதை விரும்புவதில்லை. பிம்பங்களிலேயே வாழ்ந்து முடிந்து விடுகிறார்கள்.

சிறுவயதில் நம் எல்லோருக்கும் நம் தந்தைதான் ஹீரோ. சிறு வயதில் நாங்கள் கிராமத்தில் வசித்த போது எங்கள் வீடு ஊரின் ஓரத்தில் இருந்தது. என் தந்தை வேலையின் நிமித்தம் இரவு நேரங்களில் அடிக்கடி தாமதமாக வருவார். அவர் வரும் வரை என் தாயார் வீட்டினுள் விழித்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பார். ஒரு கால் ஊனமான எண்பது  வயதான என் தாத்தா பாதுகாவலுக்காக கையில் தடியுடன் திண்ணையில் உட்கார்ந்து இருப்பார். திருடன் யாரேனும் வந்தால் வெளியே ஆம்பிளை உட்கார்ந்திருக்கிறாரே என்று என் அம்மாவுக்குத் தைரியம். என் தந்தை வந்ததும் என் அம்மா இன்னும் தைரியமாகி விடுவார்.

ஆனால் என் தாத்தாவாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் சாதாரணத் திருடன் வந்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது.  இதுதான் உண்மை. சாதாரணத் திருடனை எதிர்ப்பதற்குக் கூட இருவருக்குமே உடல் வலிமை நிச்சயமாய் இல்லை. ஆனால் நாங்கள் எமது இரவுகளை சாந்தமாகக் கழிப்பதற்கு எங்களுக்கு வீரமான என் தாத்தாவின் பிம்பமோ, தந்தையின் பிம்பமோ தேவைப்பட்டது. [ப்ராய்டு கூட கடவுளைப் பற்றி பேசும் போது இது பற்றிக் குறிப்பிடுகின்றார்] இப்போது அந்தப் பிம்பம் உண்மையில்லை என்று தெரிய வந்ததால் என் தந்தை மீதோ அல்லது தாத்தா மீதோ என் அன்போ மரியாதையோ குறைந்து விட வில்லை.

என் நண்பரின் வருத்தத்தைக் கேட்ட போது என் சிறு வயதில் என் அம்மாவும் நாங்களும் உட்கார்ந்திருக்கும் காட்சிதான் ஞாபகம் வந்தது. ஏறத்தாழ எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் பிம்பங்கள் உண்டு. பிம்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. பிம்பங்கள் வைத்திருப்பதில் தவறில்லை. பிம்பங்கள் எல்லாருக்கும் கண்டிப்பாகத் தேவை. ஆனால் மனிதப் பிம்பங்களை  அதீதப் புனைவுகளோடு மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகப் பார்க்கிற போதுதான் பிரச்சனை வருகிறது. 

அன்னை தெரசா ஒன்றும் கடவுள் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் அவரை நேரடியாக ஒரு முறை பார்த்திருக்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னை லயோலாக் கல்லூரியில் வைத்து அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் வாகனம் வந்ததும் எல்லாரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் நான் ஓடவில்லை.  சிலர் கை குலுக்கவும், ஆசீர் வாங்கவும் எத்தனித்தார்கள். நான் அதையும் செய்ய வில்லை. ஆனால் கொஞ்சம் அருகிலேயே நின்று பார்த்தேன். இவற்றிலெல்லாம் எனக்கு அப்போது அவ்வளவாக ஆர்வமில்லை. நான் மாணவனாக இருந்தபோது அன்னை தெரேசா குறித்து யாரோ சொன்ன ஒரு சில விமர்சனங்களால் பாதிக்கப் பட்டிருக்கிறேனோ என்று இப்போது தோன்றுகிறது. 

ஆனால், பிறகு வந்த காலங்களில் அவரது சபையினர் நடத்தும் இல்லங்கள் சிலவற்றைப் பார்க்க நேர்ந்தது. அவருடைய ஆளுமையின் தாக்கம் அப்போது புரிந்தது. சித்தாந்த ரீதியாக அவரது சபையினரின் செயல்பாடுகள் ஒரு சிலருக்கு [அமைப்பு ரீதியான மாற்றம் பற்றி {வெறுமனே ! } பேசும் ஒரு சிலருக்கு] பிடிக்காதிருக்கலாம். ஆனால் அந்த சகோதரிகளின் அர்ப்பணமும் , ஏழைகள் மீதான கரிசனையும், சேவையும், துறவு மனப்பான்மையும் நிச்சயமாய்ப் போற்றப்படத் தக்கவை.

இப்போது நண்பர் சொன்ன நூலுக்கு வருவோம். ஒருவர் மிகப் பிரபலமாகி விட்டால் அவரது அடுத்த பக்கத்தைப் பற்றிப் பேசுவதும், விமர்சிப்பதும் பொதுவான நடைமுறைதான். இப்படி விமர்சிப்பதாலேயே விமர்சிப்பவர்களில் சிலர் பிரபலமாகி விடுவார்கள். அந்தவகையில் இந்த நூலும் அன்னை தெரசாவின் அடுத்த பக்கத்தைப் பற்றி பேசுகிறது. நூலினுடைய மொத்த நோக்கமே அதுதான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. 

இது அன்னை தெரசாவிற்கு மகிமையே சேர்க்கிறது. அவர் சாதாரண மனிதர்தான் - கடவுளல்ல என்ற உண்மையை அது தெரிந்தோ தெரியாலோ வலியுறுத்துகிறது. அதனாலேயே அவர் போற்றப்படத்தக்கவர் என்ற உண்மை இதன் மூலம் புலப்படுகிறது. அதாவது - குறைகளோடு வாழ்ந்த மனிதராய் இருந்தும் - தனது குறைகளைக் கடந்து அன்பை விதைத்து இவ்வளவு பெரிய தாக்கத்தைப் பலரிலே ஏற்படுத்தியிருக்கிறாரே  என்பது வியப்பாய் இருக்கிறது.

ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகள் அவர் மனிதராக எத்தனை குறைபாடுகளைக் கொண்டிருந்தார் என்பதை வைத்துச் செய்யப்பட முடியாது. மாறாக அவர் வரலாற்றில்  அவரைப் பின்பற்றுவர்களிடம் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைப் பொறுத்தே செய்யப்பட வேண்டும். இது காந்தியிலிருந்து பிரபாகரன் வரை எல்லாருக்கும் பொருந்தும்.

எனவே அந்த நண்பரிடம் நான் இப்படிச் சொன்னேன் - "ஒரு மனிதர் மீது விமர்சனங்கள் வைப்பதால் அவரது  மனிதத்தன்மை மென்மேலும் வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த மனிதத்தன்மையோடு அவர் செய்த பெரிய காரியங்களாலேயே அவர் மகானாகிறார் - விட்டுத்தள்ளுங்கள்."
                                                                                                         
                                                                                                            - அ . பிரபாகரன் 
*********************************************************

அபிக்கு
நார்சிச மனோபாவத்திலிருந்து என்னை மீட்டெடுக்க வேண்டிய கடமை உணர்ந்து கொண்டதனால் இன்றிலிருந்து நீர்
நார்சிசம் மீட்ட சுந்தர பாண்டியன் என்று அழைக்கப் படுவாயாக!


[அபி என்பது திகப் பிரசங்கி என்பதையும் குறிக்கும்]
*********************************************************