விவகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.2.17

புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி


புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி  
- அ . பிரபாகரன் 
 சில ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் படித்த போது அங்கே உள்ள வெரோனாவில் ஒரு பங்கில் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பங்குக்குருவுக்கு உதவுவது என் வேலை. அவ்வப்போது அங்கே திருப்பலிக்கு ஒரு வயதான அம்மா பாப் தலையோடு வருவார். ஒவ்வொரு முறையும் திருப்பலி முடிந்தபிறகு என்னைத் தன் வீட்டுக்கு அழைப்பார். வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் அவரது கணவரும் என்மேல் பிரியமாக இருப்பார். அப்படி ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த அம்மா ஒரு புகைப்பட ஆல்பத்தைக் கொண்டு வந்தார். அதில் வெரோனாவில் உள்ள ஒரு சிற்றாலயத்தில் நற்கருணை ஆராதனை செய்யும் புகைப்படம் இருந்தது. அதைக்காட்டி, “உங்களுக்கு இதில் உன்ன தெரிகிறது?” என்றார். “அப்பம் வெள்ளையாக இருக்கிறது, வேறொன்றும் தெரியவில்லை” என்றேன்.

அவரோ என்னைக் கொஞ்சம் எரிச்சலுடன் பார்த்தார். அவரது கணவர் புன்னகைத்தார். செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் அவரது கணவர் நிறைய வாசிப்பவராக இருக்கக்கூடும். அவரது அறையில் மிகத் தடிமான புத்தகங்களும் முக்கியமான களஞ்சியங்களும் இருந்தன. நமது ரூபாய் மதிப்பில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு இருக்கலாம் அவை. அவரது கணவர் சிறுபுன்னகையோடு சொன்னார், “இந்த அப்பத்தில் இயேசுவின் உருவம் இவருக்;குத் தெரிகிறது என்று இவள் சொல்கிறாள், உங்களுக்குத் தெரிகிறதா? எனக்கு வெறும் அப்பம் மட்டும்தான் தெரிகிறது” என்றார். அந்தப் பெண்மணி உணர்ந்த இயேசுவின் உருவம் தெரியும் அந்தப் புதுமையை என்னால் அன்று உணர முடியாததுபோல பல தருணங்களில் நிகழ்ந்திருக்கிறது.

இறையியல் படிக்கின்ற காலங்களில் மைக் எவான்ஸ் போன்ற பெந்தகோஸ்து பிரச்சாரகர்களின் சீரணி அரங்கக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவை எனக்கு வேடிக்கையாகவும், கொஞ்சம் அதிசயம் மற்றும் வினோதமாகவும், நேர்த்தியாக நடைபெறும் சர்ரியலிச நாடகக் காட்சி போலவும் தோன்றும். அடிப்படையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பவன் மனித வாழ்வில் இறைவன் அசாதாரணமான ஈடுபடும் சாத்தியங்கள் உண்டு என்பதை நம்புவனாக இருக்கவேண்டும். நான் நம்புகிறேன். இருப்பினும் பெரும்பாலான மாதா கண்சிமிட்டுதல், சிலுவையில் இரத்தம் வடிதல், சுவற்றில் உருவம் தெரிதல் வகையிலான புதுமைகளை நான் பொருட்படுத்தியதில்லை. அது தனி நபர் அனுபவம் சார்ந்தது. அவரவர் மனச்சான்று சார்ந்தது. என்னைப் பொருத்தவரை எனக்கு அது நிகழவில்லை. அவ்வளவுதான்.

ஆனால், என் தனிப்பட்ட வாழ்வின் வழி நடத்துதலிலும் சமூக வரலாற்றின் இயக்கங்களிலும் கடவுள் அற்புதங்கள் செய்பவராக இருக்கிறார் என்பதை உணர்கிறேன். கடந்த சனிக்கிழமை எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி ஓர் அற்புதமாக அமைந்து போனது. கடந்த சனிக்கிழமையன்று நானும் என் நண்பரும் மெரினாவுக்குச் சென்று போராடும் இளைஞர்களோடு இருந்துவிட்டு வரலாமே என்று புறப்பட்டோம். அது இப்படி ஓர் உன்னதமான அனுபவமாக அமையும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வாழ்வின் அற்புதமான தருணங்களில் ஒன்றாகவும், மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகவும் அது அமைந்து போனது.

உலகில் வேறு எங்கேனும் போராட்டமே கொண்டாட்டமாகவும், கொண்டாட்டமே போராட்டமாகவும்; நிகழ்ந்;திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. 

இது ஒரு புதுமைதான். ஜல்லிக்கட்டுக்கான ஒரு சாதாரணப் போராட்டம் எப்படி இவ்வளவு தீயாய்ப் பரவியது? ஏதோ கிராமங்களில் மட்டும் நிகழக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு எப்படி இத்தனை ஆதரவு கிடைத்தது. லேப்டாப் இளைஞர்களும் வாட்ஸ் அப் நவநாகரீக யுவதிகளும் எப்படி போராட முன் வந்தார்கள்? வாழ்க்கையிலே ஒருமுறை கூட ஜல்லிக்கட்டு பார்த்திராத நகர்ப்புற மாந்தர்கள் எப்படிக் குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்தில் உட்கார்ந்து சென்றார்கள்? மக்களை மந்தைகளாவே வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் இவர்கள் பின்னால் போக நேரிட்டது எப்படி?

கேள்விகள் எதற்குமே எந்தவிதமான தர்க்கரீதியான பதில்கள் இல்லை. இது நிச்சயமாக என் காலத்தில் நான் கண்ட புதுமைதான். புதுமை என்பது ஏதோ அமானுஷ்யமாக வாழ்வின் இயக்கங்களுக்கு மாற்றாக நடக்க வேண்டியதில்லை. வரலாற்று இயக்கங்களுக்குள் இறைவன் ஊடுருவி பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்தி தருவதே விவிலியம் கூறும் புதுமைகளிலெல்லாம் பெரிய புதுமை. இஸ்ராயேல் மக்களின் எகிப்திய விடுதலையைவிட வேறு எந்தப் புதுமை உண்டு? அது வரலாற்று நிகழ்வுகளுக்கு ஊடாகத்தானே நடைபெற்றது. மெரினாவில் நிகழ்ந்த புதுமை அனுபவத்தில் ஒருநாள் சஞ்சரித்து வந்த எனக்கு சமகாலச் சமூகத்தின் பன்முகக் கூறுகளை பார்க்கும் அனுபவமாக அது அமைந்து போனது.

ஒரு பின்நவீனத்துவச் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அனைத்துக் குறியீடுகளும் நிறைந்து கிடந்தது மெரீனாக் கடற்கரை பெரிய கூட்டம். கடற்கரை முழுவதும் மணலோடு போட்டி போட்டுக் கொண்டு மக்கள் கூட்டம நின்றது. ஆனால் ஒன்று பட்ட குவியம் இல்லை. வழக்கமாக இப்படிப்பட்ட போராட்டங்களில் எதிர்கொள்ளும் பெரிய தலைமைகள் இல்லை. எங்கும் ஜனத்திரள். ஆங்காங்கே சிறு கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே கொஞ்சம் பொதுக்கூட்டம் போன்ற தோற்றம் இருந்ததே தவிர ஆங்காங்கே அதே போல பல கூட்டங்கள் நடந்தன.

யார் வேண்டுமானாலும் பேசினார்கள். எவருக்கும் மைக் கிடைத்தது. சிறு சிறு குழுக்கள் ஆங்காங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் ட்ரம்ஸ் வாசித்தார்கள். சிலர் தப்பு வாசித்தார்கள். சிலர் கரகாட்டம் ஆடினார்கள். சிலம்பாட்டம் நடைபெற்றது. இளம்பெண்கள் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள். கோசம் போட்டார்கள்;. சிலர் அமைதியாக பேனர் வைத்துக் கொண்டு நின்றார்கள். சிலர் மைக்கில் பேசினார்கள். சிலர் மைக் இல்லாமலும் பேசினார்கள். சிலர் சாலைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். எங்கிருந்தோ பிஸ்கட் பாக்கெட்கள் வந்தன. தண்ணீர் வந்தது. வாழைப்பழத்தார்களை சிலர் சுமந்து வந்து கொண்டிருந்தார்கள். திடீர் டாய்லெட்டுகள் ஆங்காங்கே நின்று கொண்டு மனிதர்களின் கழிவுகளை வாங்கிக் கொண்டு அவர்களை வெளியே அனுப்பின. சில நேரங்களில் குழந்தைகள் காணாமல் போனார்கள். மைக்கில் அறிவிப்புச் செய்ததும் மீண்டும் கிடைத்தார்கள்.

சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் சென்று பங்கேற்காவிட்டால்;; ஆயுசு குறைந்துவிடும் என்று எண்ணியது போல குடும்பத்தோடு வந்து பார்த்தோ பங்கெடுத்தோ சென்றான் என்று தோன்றியது. மொத்தத்தில் பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சமான சிறியவைகளின் உடைபட்ட கொண்டாட்டமாக அது அமைந்தது. இதைக் கடந்து வந்திருந்த மக்கள் யாரென்று பார்த்தால் பெரிய புதுமை காத்திருந்தது. கிராமத்தினர் இருந்தார்கள். கிராமத்தில் இருந்து பெற்றோருக்குத் தெரிந்தோ தெரியாமலோ சென்னை வந்து கம்பெனியிலோ, ஹோட்டலிலோ நிரந்தரமாகவோ, நிரந்தரமில்லாமலோ வேலைபார்க்கும் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என இருந்தார்கள். நல்ல படிப்புப் படித்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பீட்டாவை திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மூன்று லட்சமோ, ஐந்து லட்சமோ நன்கொடை கொடுத்துக் கல்லூரிகளில் சேர்த்துவிட்ட பிள்ளைகள், பதாகைகளோடும் கோசங்களோடும் நின்றார்கள். பெரியார் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். தீவிர கம்யூனிசம் பேசுபவர்கள் இருந்தார்கள். தமிழ்த்தேசியவாதிகள் இருந்தார்கள். எந்த இசங்களும் தெரியாத அப்பாவி ஜனங்களும் இருந்தார்கள். திருநீறு, குடுமிகளோடு வந்தவர்களும் இருந்தார்கள். இவர்கள் தமிழ்ப் பெண்களாக இருக்காது என்று தோன்ற வைத்த சிவப்புப் பெண்களும் சுடிதார்களுடன் இருந்தார்கள். சும்மா வந்தவர்களும் இருந்தார்கள். மிகுந்த தீவிர உணர்ச்சியோடு அங்கேயே தங்கி கண்களில் கனலோடு போராடிய இளைஞர்கள் இளம் பெண்களும் இருந்தார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் பன்மைத்துவத்துக்கான அங்கீகரிப்பாகவும், கொண்டாட்டமாகவும் இருந்தது மெரினாக் கடற்கரை. பின்நவீனத்துவத்தின் நேர்மறை அம்சமே பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதுதானே!.மொத்தத்தில் ஓர் வித்தியாசமாக அனுபவமாகவும், அற்புதமாகவும், நமது பண்பாட்டு உணர்வையும் அடையாளத்துக்கான தேடலையும், கொண்டாட்ட உணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்டி எழுப்புவதாக இருந்தது மெரினா அனுபவம். இந்த உணர்வு நிலையிலே சஞ்சரித்துவிடாமல் நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உண்டு. அவற்றுள் சில. 
  • முன்பு போலத் தூய்மைவாதம் பேசி ஒன்று திரட்டப்பட்ட அணிச்சேர்க்கைகளைக் கொண்டு போராடுவதே விடுதலைக்கு வழி என்று சொல்பவர்கள் தங்கள் வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பின் நவீனத்துவ உலகில் பல்வேறு கருத்தியல்கள். நோக்கங்கள் உள்ளவர்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் சேரும் புள்ளிகளை இனம்கண்டு கொள்வதே சாத்தியம் என்பதை மெரீனா கற்றுக் கொடுத்திருக்கிறது. ஜல்லிக்கட்டை எதிர்த்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டது ஒரு நல்ல அம்சம். 
  • மற்ற மாநிலங்களில் பம்மாத்துக் காண்பிப்பது போல் தமிழகத்தில் பன்மைத்துவத்தையும், இங்குள்ள பண்பாட்டு வேர்களையும் அழிக்க நினைத்தால் அந்த பருப்பு இங்கே வேகாது. இங்கே “மோடி” மஸ்தான் வேலைகளெல்லாம் பலிக்காது. 
  • இப்போது நடைபெற்ற போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. அமுக்கப்பட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் வெளிப்பாட்டுக் குவியலே ஜல்லிக்கட்டு. தமிழகம் புறக்கணிக்கப்படுதல், விவசாயிகளின் தற்கொலை, ரூபாய் நோட்டு செல்லாததால் கோபம், வேலையின்மை, ஜெயலலிதா மரணம் எதிர் கொள்ளப்பட்ட விதம் எனப் பல்வேறு பிரச்சனைகளால் நொறுங்கொண்ட தன்னிலைகளின் எதிர்ப்புக் குரலே ஜல்லிக்கட்டுப் போராட்டம். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை உணர வேண்டும். 
  • தற்போதைய முதல்வர் ஓ.பி செயலலிதா இறந்த நாளான டிசம்பர் 5ஐ தமிழகத்தின் இருண்ட நாளாக அறிவித்திருக்கிறார். செயலலிதா இருந்திருந்தால் இந்தப் போராட்டம் எப்படி எதிர் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நன்கு உணர்ந்வர்களுக்கு ஒப்பீட்டளவில் மென்மையாகத் தெரிந்த ஓ.பி.எஸ் இதை அறிவித்திருப்பது நல்ல நகை முரண். 
  • இந்தப் போராட்டத்தை முன் வைத்து பல்வேறு ஆதர்சங்களும், பிம்பங்களும் தலைமைகளாகக் கட்டமைக்கப்படுவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. அது மிக மேம் போக்கானதாகவும் நம் சமூகச் சிக்கல்களின் புரியாமை வெளிப்பாடகவும் தெரிகிறது. குறிப்பாக, கலாமின் வழிவந்த கூட்டம் ஒன்று சகாயம் போன்றவர்களைத் தீர்வுகளாவும், இலட்சிய நாயகர்களாவும் கட்டமைக்க முயல்வது தமிழ்ச்சமூகம் அடிப்படையில் தன் பிரபுத்துவ மனநிலையில் இருந்தும் நாயக வழிபாட்டுச் சிந்தனைகளில் இருந்தும் வெளிப்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 
  • ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழ் அடையாளத்துக்கான போராட்டமாகவும், நமக்கான பண்பாடுகளை நாமே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரத்துக்கான போராட்டமாகவும் பார்க்கப்பட வேண்டும். மாறிவரும் விஞ்ஞான உலகில் தமிழ்ச்சமூகத்தில் ஜல்லிக்கட்டின் பொருத்தப்பாடு இன்மை, மற்றும் அதில் இருக்கக்கூடிய சனாதன அம்சங்கள் என்றும் கவனத்துக்குரியவை. 
  • இப்போராட்டம் தமிழ்ச் சமூக எதரிகள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பளித்திருப்பது பாராட்டுக்குரியது. இதை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்பது யாரெல்லாம் போலிஸ் அட்டூழியத்தை சிவனின் திருவிளையாடலாகப் பார்த்தார்கள் என்பதையும் உணர்ந்தாலே இது புரியும். 
  • இக்கட்டுரையை எழுதி முடிக்கும் இத்தருணத்தில் போராட்டம் காவல் துறையின் அராஜகத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இருக்கிற பயங்கரவாதத்திலேயே கொடூரமான பயங்கரவாதம் காவல் துறையின் பயங்கரவாதம்தான். காரணம், அது அரசு அங்கீகாரத்தோடு செய்யப்படுகிறது. ஆனால் என்ன ஒன்று, சமூக வலைத்தளங்களால் அது முன்னெப்போதையும்விட இது பயங்கரமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 
  • ஜாலியன் வாலாபாக்கிலிருந்து, கூடங்குளம் வரை வரலாறு முழுக்க எல்லாப் போராட்டங்களிலும் இதுதான் உண்மை. ஆனால் செல்போன் யுகத்தில் இது அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் காவல் துறையினர் இனி பத்திரிக்கையாளர்களின் காமெராக்களை அணைத்துவிட்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் அராஜகங்களைத் தொடங்குவார்கள் என்று நம்பலாமே தவிர வேறு எதுவும் நல்லது நடக்கும் என்று தோன்றிவில்லை. 
முடிவாக: 
அற்புதங்களில் ஒரு சிக்கல் இருக்கிறது. அற்புதங்களை அனுபவிப்பவர்கள் அந்த நேரத்தில மட்டும் பரவசப்பட்டுவிட்டு பிறகு வழக்கமான இயல்புநிலைக்குத் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறது. இயேசுவின் அற்புதங்களை அதிசயித்து ஆகோ, ஓகோவென ஆர்ப்பரித்தவர்கள் அவரை அரசராக்க விரும்பியவர்கள் (யோவா 6) பிறகு தங்கள் பழைய நிலைக்குத் திரும்பி அவரைச் சிலுவையில் அறையக் கோசமிட்டார்கள். இந்த பின் நவீனத்துவ அற்புதங்களில் ஒன்றான இந்தப் போராட்டத்தின் பங்குதாரர்களும் அப்படிப் போவதற்கான சாத்தியம் இருக்கிறது. வால் ஸ்டிரீட் எழுச்சி நமக்கு ஞாபகம் வரவில்லையா? பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் நெகிழ்வுத்தன்மை (Fluidity) மற்றும் தற்காலத் தன்மை (Momentariness). இந்த ஜல்லிக்கட்டு எழுச்சியும் அப்படிப் போய்விடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. அப்படி இல்லாமல் ஆக்கச் செய்வதே வரலாற்று அற்புதங்களை நம்புகிறவர்களின் பணியாக இருக்க முடியும்.

16.11.15

மழையில் மாடு மூழ்கியது

மாட்டு அரசியல் என்பதை என்னோடு பணிபுரிந்தவர் பி. பி (Beef Politics - B.P) என்று சுருக்கமாய்ச் சொன்னார். பி.பி எகிர்றது நல்லது இல்லை. அது உடம்புக்கு மட்டும் இல்லை நாட்டுக்கும்தான்.

தொடர்ந்து வந்த விவாத மேடைகளில் அந்த மாடுகள் மூழ்கியதாவே தெரிகிறது. வெள்ளம் வடிந்தவுடன் மாடுகள் மீண்டும் வெளிவரலாம்.

மார்ச் மாதம் ஹரியானாவில் நடைபெற்ற ஒரு வீடியோவைப் பார்த்தேன். ஒரு குழுக்கள் கட்டைகளோடும் கத்திகளோடும் சுற்றுகிறது. காவலர்கள் அவர்களுக்குத் துணி நிற்கிறார்கள். மாடுகளை ஏற்றிச் சென்ற ஓட்டுனர் கட்டிப் போட்ட உதைக்கப் படுகிறார். லாரி தீ வைக்கப் படுகிறது. அவைகளைச் செய்த நபர்கள் தங்கள் முகம் தெரியும் படி அந்த வீடியோவைப் பதவு செய்து சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.

வீடியோவிற்கு இங்கே சொடுக்கவும்

கடந்த மாதம் ஒரு ஒட்டுனரைக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

வீடியோ
அரசாங்கம் அமைத்யாய் இருக்கிறது. உலகம் முழுவதும் போய் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறார் நமது பிரதமர். 
கோமாதாவின் காவலர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பச்சோந்திக் குரல் எழுப்புகிறது. போலிஸ் எதற்கு? சட்டங்கள் எதற்கு? 
சட்டங்களை ஒரு குழு ஆயுதங்களோடு நிலைநாட்ட வேண்டிய சூழல் அரசுக்கு இருக்கிறது என்றால் அரசின் வேலை என்ன? 

இந்தத் தருணத்தில்தான் நம் பிரதமர் (இன்றைய செய்தித்தாளின் செய்திப் படி) தீவரவாதத்தை உலக நாடுகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். தனது நாட்டில் இப்படி நடக்கும் தீவிர வாதத்தை தன்னால் ஒடுக்க முடியவில்லை என்பதனால்தான் உலக நாடுகள் அதை எதிர்க்க வேண்டும் / ஒடுக்க வேண்டும் என்று பெசியதாகவே எண்ணத்த தோன்றுகிறது.


4.8.15

எதற்காகத்தான் போரிட முடியும்?

போகிற போக்கைப் பார்த்தால் நம் நாட்டில் _____________ வாழ்க என்கிற பேரணிகளிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கிடைக்கும் போலத் தெரிகிறது.

இன்னும் ஒன்றிற்கும் அந்தப் பாக்கியம் உண்டு. –எங்கள் வீதியில் டாஸ்மாக் இல்லை. அங்கே வேண்டும் என்ற போராட்டம் நிச்சயமாய் அனுமதிக்கப் படுவதுமட்டுமல்லாமல் பாதுகாப்போடு நிச்சயமாய்க் ஏசி பாரோடு கூடிய கடையும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிர வேறொன்றுக்கும் இங்கு அனுமதியும் இல்லை அவசியமும் இல்லை.

ஏறக்குறைய ஒருமாதத்துக்கும் மேலாய் இரு சக்கர வாகனத்தில் செல்கிற நண்பர்கள் அல்லோலப்பட்டு, சில பேர் காவல்துறை அதிகாரிகளிடம் இன்னும் மாட்டாமல் டபாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது தவறில்லைதான். ஆனால் வேகாத வெயிலில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை பள்ளம மட்டுமே உள்ள ரோட்டில் போவது சாதனைதான். 

விபத்தினால் உயிர் இழந்தது ஹெல்மெட் அணியாததால்தான் என்று ஒரு வழக்கை விசாரிக்கப் போய் நீதிபதிகள் இத்தக கட்டாயமாக்கி இருக்கிறார்கள். ஒழுங்கான சாலைகள் இல்லாததால்தான் விபத்துக்களே நடக்கின்றன என்று அரசுக்கு செப்டம்பர் ஒன்றுக்குள் அந்த நீதிபதிகள் கெடு வைக்கலாமே. நிற்க.

வெறும் தூண்களோடு நின்று போன மேம்பாலப் பணிகள், சாலை செப்பனிடாமல் பள்ளம் உள்ள சாலைகள், இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன மக்களும் வணிகர்களும், பல மனுக்களைக் கொடுத்த பிறகும் அரசு செவிசாய்க்காமல் இருந்ததால் அவர்களே ஏழு லாரிகளில் தார் ஜல்லி தயாராக வைத்து சாலை போடப் போனால், அவர்களைக் கைது செய்து உள்ளே வைத்தது மட்டுமல்லாமல் அந்த ஏழு லோடும் ஸ்வாகா ஆனது. 
ரோடு போட்டது ஒரு குத்தமா. உங்களைய ரோடு போடச் சொன்னாதான் குத்தம். நாங்களா போட்டாலும் குத்தமா?

பள்ளிக்கு அருகில் இருக்கும் சாராயக் கடையை மாத்தச் சொல்லி நீதி மன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்து, அதற்கும் செவி சாய்க்காமல், சசி பெருமாளின் உயிரைக் குடித்த பிறகு அதைப் பூட்டியிருக்கிரார்கள். 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் அனைவருக்கும் சிறை. நீதி மன்ற உத்தரவை ஒரு இடத்தில் மட்டும் நிறைவேற்றத் தயங்கும் காவல்துறை, தமிழக அளவில் ஹெல்மெட் விஷயத்தில் ஆர்வம காட்டுவது மட்டும் ஏன்?

ஒரு விஷயத்தில் சட்டத்தை மதிக்கும் காவல் துறை மறு விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறது?
ஒரு விஷயத்திற்கு மட்டும் தானாக வந்து சட்டம் போடும் நீதி மன்றம் இந்த விஷயத்தை தானாக எடுக்க ஏன் தயங்குகின்றது.?
 வருமானம் வரும் விஷயத்திற்கு மட்டும்தான் சட்டமா?




12.11.14

நான் ஒரு பிராமணன்

நான் ஒரு பிராமணன். நான் பிராமனாய் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்றும் எப்போதும், பிராமணராக வாழ்வதில் அக்கறை கொள்கிறேன் என்று உறுதி மொழி எடுக்கும் விதமாய் பேசி இருக்கிறார், மேன்மை தங்கிய சுப்புரமணி சாமி அவர்கள்.

எந்த ஒரு காலத்திலும், பிராமணர்கள் சொல்லுவதையே ஆட்சியில் இருப்பவர்கள் கேட்டிருப்பதாகவும், அதுவே அவர்களது தொழில் என்பது போலவும் பேசியிருக்கிறார். தான் சொல்லுவதை  கேட்பதாகவும், இது மற்ற இலாகாக்களை விட மேலானது என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது எப்பொழுதும், இந்தியப் பிராமணர்களும், படித்தவர்களும் பதவி வகித்ததில்லை என்றும், தான் சொல்லுவதை மற்றவர்கள் கேட்பதே தனக்குப் போதும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமல்ல இன்னும் ஒரு படி மேலே சென்று, மோடி அவர்களுக்கு பிராமணிய குணங்கள் இருப்பதால் அவரை பிராமணராக நியமிக்கிறேன் என்றும் தனது ட்விட்டீரில் மொழிந்திருக்கிறார்.

நான் என்ன நினைக்கிறேன்னா?


  1. எப்பவும் தலித்திய கட்சிகளைக் குறை சொல்லும் மகராசன்கள், சாதியம் ஒன்று இல்லை என்றும், தலித்துகள் பிராமணர்கள் பற்றி சொல்லுகிற கூற்று அனைத்தும் தவறு அல்லது அருதப் பழசு என்று சொல்லுபவர்கள் இதைக் கொஞ்சம் படிக்கணும்னு தோணுது.
  2. சுப்ரமணிய சாமி மேல பிராமணர்கள் கேஸ் போட்டா நல்லா இருக்குமான்னு சொல்லுங்க - பிராமணர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பிரமனர்களைப் பற்றி தவறாக, எல்லாரையும், ஆட்டுவிக்கும் கருவிகளாக மட்டுமே சித்தரித்தது தவறு என்று சொல்ல வேண்டிய கட்டாயம்.
  3. இல்லை அவர் சொல்லியது சரி என்றால், பிராமணர்கள் அல்லாதவர்கள் அறிவற்றவர்கள் என்று ஆகி விடுகிறது. பதவிக்காக ஆசைப் படுபவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லாதவர்கள் என்கிற ஒரு கருத்தையும் திணிப்பது, மற்ற எல்லாரையும் தவறாக சித்தரிப்பதற்கு சமம். அதனால் மற்றவர்கள் அவர் மீது வழக்குத் தொடுப்பது சாத்தியமா என்று யோசிக்கலாம்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுட்டவும் - மோடி பிராமணர் 

நான் இலாகா இல்லை என்பதானால் வருத்தப் படவில்லை. 


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

எம். எஸ். எஸ் பாண்டியனின் மரணத்திற்கான இரங்கல்.

இப்படி பிரமணித்தின் மேலாண்மை குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்திரு பாண்டியனின் மரணம் பேரிடியாய் வந்திருக்கிறது.

பிரமணியம், தலித்தியம், மற்றும், சாதியத்தின் பல்வேறு வகையான ஆதிக்கம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர். சுப்ரமணிய சுவாமி போன்றோர் உரத்துக் குரல் எழுப்பும் வேளையில், பாண்டியன் போன்றோர் இன்னும் அதிமாகவும், உரத்த குரலிலும் உண்மையை பதிவு செய்யவும், எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வேண்டியிருக்கிறது.

 அது வெறும் பிரமணிய எதிர்ப்பாக மட்டுமல்ல சாதியத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

எஸ். வி. ராஜதுரை அவர்களின் கட்டுரை





6.10.14

எங்கெங்கு காணினும் சக்தியடா !


எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 
- பாரதி தாசன்

##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.

பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.

###

ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும். 
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன. 
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.

###

ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது- 
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா 
என்ற வசனத்தைப் பார்த்த போது 
ஐயகோ 
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே 
குடைந்து எடுத்து விட்டது.

இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.

###

அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###

கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா? 

இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?

தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா? 
###

மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்

அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்



இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
பாரதிதாசன் 







17.1.14

மோடி ஷண்டை (ஷிண்டே) - நியாயமான பேச்சு 1


  • ஷிண்டே அவர்கள் -  மாநில அரசுகள் சிறுபான்மை இளைஞர்கள் மீது போடப்பட்டிருக்கிற தவறான, பயங்கரவாத வழக்குகள் இடப்பட்டு, சிறையில் அனாவசியமாக வாடிக் கொண்டிருக்கும் நபர்களை மீட்பதற்கான ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதப் போவதாத் தெரிவிக்கிறார். 
    • காங்கிரஸ்காரர்கள் எல்லாம் என்ன குழப்பத்துல இருக்குறாங்கன்னே தெரியலை. ராகுல் திடீர்னு நாட்டில்  ஊழல் மலிந்து விட்டதுன்னு சொல்றாரு. மன்மோகன் சிங் பொருளாதாரம் வீக் ஆகிவிட்டதுன்னு சொல்றாரு. சிதம்பரம் விலைவாசி உயர்வுதான் நமக்கு கவலை தருதுன்னு பேசுறாரு. வேற நாட்டுக் காரன் இவர்கள் செய்திகளை எல்லாம் படித்தால் ஆட்சில இவர்கள் மிகச் சிறந்த எதிர்கட்சிக் காரர்கள் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள். 
    • ராஜீவ் காந்தி கொலயில் பொய்க் குற்றச் சாட்டு  மற்றும் தவறான வாக்கு மூலம் உருவாக்கி, இருபத்து மூன்று ஆண்டுகளாக உள்ளே இருக்கும் நிரபராதிகளை விடுவிக்க எந்த தூசியும் தட்டலை. இப்ப எழுதப் போறாராம் எழுத... 
    • பொய் வழக்கு போடுறது / அணு உலைக்கு எதிராப் போராட்டம் பண்ணினா அன்னியச் செலவாணிக் கணக்கை கையில எடுக்குறது, சி.பி.ஐ.யை ஏவிவிடுறது  இதெயெல்லாம் நீங்க நிறுத்துங்க.... நல்லாப் பேசுறீங்க. என்னமோ ஏதோ 
  • மோடி சார் அதுக்கு நல்லாப் பதில் சொல்லிருக்கிறார். நமது நீதி மன்றங்களைப் பற்றிய தவறான ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கும் என்றும், நமது நீதி மன்ற விவகாரங்களில் கால தாமதம் ஆவதை தடுக்க முடியாது என்றும் பேசியிருக்கிறார். 
    • நல்ல விஷயம்தான். குற்றவாளிகளின் மதத்தைப் பார்த்து தண்டனை தரப் படுவதில்லை மோடி சார். ஆனால் அதிகார துஷ் பிரயோகம் செய்து ஒரு குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் கைது செய்வதும், அவர்களை சிறைக்குள் பல வருடங்களாக அடைக்கப் படுவதையும் பற்றி பேசுவதற்கு உங்க பதில் இப்படி இருக்கக் கூடாது. மதத்தைப் பார்த்து தண்டனை கிடையாது... ஆனால் மதம் பார்த்து கைது செய்கிறீர்களே அது தவறில்லையா.
    • உங்க விஷயத்துல கைது இல்லாம, சிறை செல்லாம, வழக்கு நடந்தது. அதுனால உங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு மதத்தைச் சார்ந்ததினால் குஜராத் சிறையில் அடைபட்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசுங்க. நல்லா இருக்கும். 
    • காங்கிரஸ் பேசுறது சரியில்லைதான். அதே மாதிரி நீங்க பேசுறதும்தான்.
  •  பின்னி -ன்னு ஒரு முன்னாள் காங்கிரஸ்காரரு, இந்நாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ, பதவி கிடைக்கலை என்பதனால் - கெஜ்ரிவால் ஒரு பொய்யர்ன்னும், அவருக்கு எதிரா போராட்டம் பன்னுவேன்னும்  சவால் விடுகிறார். ஆம் ஆத்மியை உடைக்க பல சாதிகள் நடக்கின்றன. நாம் பார்க்காத அரசியல் படங்களா?
  • சல்மான் குர்ஷித் - அடுத்த அறிவாளி - ஆம் ஆத்மி கட்சி அராஜகவாதிகளின் கூடாரம் அப்படின்னு அடிச்சு விடுறார். அராஜகவாதிகள்தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில பேசுறமாதிரி தெரியுது. மஞ்சக் காமாளைக் காரனுக்கு பார்க்கிறது எல்லாம் மஞ்சள்தான்... காங்கிரசும் அராஜவாதிகலின் கூடம்தான்...
  • ஜே. பி . அகர்வால் ன்னு இன்னொரு காங்கிரஸ் காரர் - தேர்தல் சமயத்தில் பேசிய பிரச்சனைகளை தீர்க்க ஒன்றும் செய்ய வில்லை எனவே ஆம்-ஆத்மி பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  நீங்க தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எதையும் பத்து வருஷமா இருந்து தீக்க வக்கில்லை. அல்லது பதவி விலக திராணி இல்லை. ஆனால் பேச்சு...
  • எது நியாமான பேச்சுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க!

9.11.13

ஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி


ஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏனென்றால் கூட்டம் நடத்தினால் எந்த மொழியில் நடத்துவது என்று ஒரே பிரைச்சனை. ஜெர்மனில் நடத்தினால் பிரெஞ்சு மொழி பேசுறவனுக்கு ஒன்னும் புரியாது. அதுல பேசுனா இத்தாலியன் பேசுறவனுக்கு ஒன்னும் புரியாது. இதுதான் அவங்களுக்கு பெரிய சிக்கல்.
இந்த யூனியனில் இன்னும் பல நாடுகள் சேருகின்ற போது இந்தச் சிக்கல் இன்னும் அதிகமாகும். அந்த ஆவணங்களை மொழி பெயர்க்க கடந்த ஆண்டு மட்டும் ஏறக்குறைய 100 கோடிக்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள். அது என்னமோ வருமானத்தில் ஒரு சதவீதம் என்று சொன்னாலும் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதனால் ஆங்கிலத்தை மட்டும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கலமா என்ற கேள்வி வந்தது. 
அதென்னமோ எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழியை அவ்வளவு எளிதாக ஒத்துக் கொள்வது இல்லை. செலவைக் குறைக்க ஆங்கிலத்தில் மற்றும் பிரெஞ்சில் மட்டும் ஆவணங்களை மொழி மாற்றம் செய்யலாம் என்று யோசனையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. 

என்னதான் இருந்தாலும் ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, இத்தாலியன் எல்லா மொழிகளும் ஆங்கில எழுத்துருவில்தான் எழுதப்படுகின்றன. இருந்தாலும் ஏன் மற்ற மொழிக் காரர்கள் யாரும் இதை ஒத்துக் கொள்வது இல்லை என்று தெரியவில்லை. ஒரே எழுத்துருவில் இருந்தாலும் இரண்டு மொழிகளின் வேறு பாடு அறியாமல் அவ்வளவு சுலபமாக இன்னொரு மொழியை வாசித்து விட முடியாது என்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கேள்வி.

ச என்ற சத்தத்திற்கு சில மொழிகள் s என்பதையும் சில மொழிகள் c என்பதையும் பயன் படுத்திகின்றன. இத்தாலிய மொழியில் chi என்று எழுதியிருப்பதை கி என்று வாசிப்பார்கள். சின்னப் பொண்ணு என்று ஆங்கிலத்தில் chinnapponnu என்று எழுதினால் அவர்கள் அதை கின்னப்பொண்ணு என்றுதான் வாசிப்பர்கள். போல்லோ என்கிற இத்தாலிய வார்த்தைக்கு கூகுல் உபயத்தால் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தால் chicken என்று வரும். ஆங்கிலம் தெரியாத இத்தாலியர் ஒருவர் சிக்கன் சாப்பிடுவீர்களா என்று கேக்க ஆசைப்பட்டு நீங்க கிக்கன் சாப்பிடுவீங்களா என்று கேட்டாராம். நல்ல வேளை, கிச்சன் சாப்பிடுவீங்களா என்று கேட்கவில்லை.

இது ஒரு சின்ன உதாரணம். ஆனால் ஆங்கிலத்தில் இந்த சிக்கல் எல்லாம் இல்லை. ச வுக்கு சில சமயம் s, சில சமயம் c. 'எப்' என்ற உச்சரிப்பிற்கு சில சமயம் f, சில சமயம் ph. க என்பதற்கு சில சமயம் c, சில சமயம் K என்று எல்லாக் குழப்படிகளும் உண்டு.  இ என்பதை ஆங்கிலத்தில் e என்றும், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் (மற்றும் பல மொழிகளில்) i என்றே எழுதுவார்கள். ஆனால் ie என்பதை ஜெர்மனில் ஈ என்றும் அதையே இத்தாலியனில் 'இயெ' என்று சொல்லுவார்கள்.
பிரெஞ்சு மொழியைப் பற்றி சொல்லவேண்டியதில்லை - பத்து எழுத்து இருக்கும் ஐந்து எழுத்தைத் தான் வாசிப்பார்கள்.

எனவேதான் ஒரே எழுத்துரு இருந்தாலும் மற்ற மொழிக்காரர்கள் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வது இல்லை. ஏனெனில் ஆங்கிலம் என்பது பிற்பாடு வந்த கலவை என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

இனிமேல் கற்பனை. - ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சுட்டவும்.

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கிற நாடுகள் எல்லாம் ஆங்கிலத்தை பொது மொழியாக ஏற்றுக் கொண்டன. ஆனால் ஐந்து வருடத்தில் ஆங்கிலத்தை சீரமைக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு....

முதல் வருடத்தில் மென் 'ச' வுக்கு இனிமேல் c என்பதற்கு பதிலாக s என்பதைப் பயன்படுத்துவது -  sertainly this will make sivil servants happy. அதுமட்டுமல்லாமல் க என்பதைக் குறிக்க இனிமேல் c என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் K என்பதைப் பயன்படுத்துவது.  This will klear up some konfusion and allow one key less on keyboards.

இரண்டாம் வருடத்தில் there will growing publik enthusiasm  - ஏனெனில் அந்த வருடத்தில் 'ph' என்ற வார்த்தைக்குப் பதில் 'F' என்ற வார்த்தைப் பயன்பாடு தொடங்குவதால். இது PHOTOGRAPH என்கிற வார்த்தையை 20 சதவீதம் குறைத்து FOTOGRAF என்று சுலபமாக வாசிக்க வைப்பதனால் பேச்சாளரின் மனச் சுமை குறைக்கப் படுகின்றது.

மூன்றாம் வருடத்தில் இன்னும் KOMPLIKATED மாற்றங்களை PUBLIK AKSEPT பண்ணி EKSPEKT பண்ணுவார்கள்.
இதற்குப் பிறகு, தொடர்ந்து வரும் இரண்டு வார்த்தைகள் தேவையற்றவை என அறிவிக்கப்படும் - ஏனெனில் அவைகள் தான் AKURAT SPELING எழுத தடையாக இருப்பதானால்.
அதற்குப் பிறகு AL WIL AGRE THAT THE HORIBLE MES OF THE SILENT 'E' IS DISGRASFUL (ஆல் வில் அக்ரீ தட் த ஹாரிபில் மெஸ் ஆப் த சைலன்ட் 'இ' இஸ் டிஸ்கிரேஸ்புல்)...
நான்காம் வருடத்தில் 'th' என்பதற்குப் பதில் 'Z' மற்றும் 'W' என்பதற்குப் பதில் 'V' என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள்.

அதனால் During ZE FIFZ YER, ZE UNESESARY 'O' KAN BE DROPD FROM VORDS KONTAINING 'OU' AND SIMILAR CHANGES VUD OFKORS BE APLID TO OZER KOBINATIONS OF LETERS. (த பிப்த் யியர், த அன்னெசெசரி 'ஓ' கேன் பி டிராப்ட் ப்ரம் வோர்ட்ஸ் கன்ட்டெய்னிங் 'ஓஉ' அண்ட் சிமிலர் சேஞ்சஸ் வுட் அப்கோர்ஸ் பி அப்ளைட் டு அதர் லெட்டர்ஸ்).

ஐந்தாம் வருடத்திற்குப் பிறகு -
VE VIL HAV A RELI SENSIBL RITEN STYL (வி வில் ஹாவ் ய ரியலி சென்சிபிள் ரிட்டன் ஸ்டைல்).

ZER VIL BE NO MOR TROBLS OR DIFIKULTIS AND EVRION VIL FIND IT ESI TO UNDERSTAND ECH OZER. ZE DREM VIL FINALI KAM TRU
(தேர் வில் பி நோ மோர் ட்ரபுள்ஸ் ஆர் டிபிகல்டிஸ் அண்ட் எவுரிஒன் வில் பைண்ட் இட் ஈசி டு அண்டர்ஸ்டாண்ட் ஈச் அதர். த ட்ரீம் வில் பைனலி கம் ட்ரூ).

°°°°°°°°°°°°°°°°°°°°°

இதே போல தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தி எழுதினால் பல குழப்படிகளைக் களைய இயலும். ந, ன மற்றும் ண என்பதற்கு 'na' என்று எழுதுவதன் மூலம் பல குழப்பங்களைக் களைய இயலும்.

'la' என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் ல, ள, ழ என்று மாணவர்களுக்கு மனச்சுமையை கூட்டும் எழுத்துக்கள் குறைக்கப் படும்.

'ra' வார்த்தைகளை 'ர' மற்றும் 'ற' என்பவைகளுக்குப் பயன் படுத்த இயலும்.

இதுப்போல புரட்சி செய்வதன் மூலம் 247 எழுத்துக்கள் என்பதை 24 எழுத்துக்களாக (NO c and X) குறைக்க முடியும்.

இப்படிச் செய்வதன் வழியாக மாணவர்களின் மனப்பாரத்தை மட்டுமல்ல தமிழையும் அழியாமல் காப்பாற்ற முடியும். அது மட்டுமல்லாது இப்படி எழுதும் போது தமிழிலக்கியத்தை உலக அரங்கில் எல்லா மக்களும் வாசிக்க ஆர்வம் அதிகம் ஆவதால் வருடத்திற்கு ஐநூறு மட்டுமே விற்கக் கூடிய புத்தகங்கள் இனிமேல் ஐம்பதாயிரம் விற்கும். தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கஞ்சிக்கு அலைய வேண்டியதில்லை. தமிழை வாழ வைத்த பெருமையும் அவர்களுக்கு மிஞ்சும்.

குறிப்பு:
இதைப் படித்து நீங்கள் எப்படி எதிர் வினை ஆற்றுகிறீர்கள் என்று சோதிப்பதெல்லாம் எனது நோக்கம் அல்ல. ஆங்கில எழுத்துருவை அனுமதித்து தமிழை நீங்களெல்லாம் வாழ வைப்பீர்கள் என்ற நம்பிக்கைதான் எனக்கு.





28.4.13

சொர்க்கமேன்னாலும் நம்மூரு போல வருமா?


  • சிறைவாசம் செல்வதற்கு ஏற்கனவே நான்கு வார அவகாசங்களை வழங்கியிருந்த நீதிமன்றம் இப்போது மேலும் நான்கு வாரங்களை உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கியிருக்கிறது. ரூ. 278 கோடிகள் மதிப்பிலான மீதியிருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதற்காக 'மனிதாபிமான' அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
    • மனிதாபிமானம் என்பதற்கான புதிய விளக்கம். இதுபோல பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் என்று அறிவிப்புதான் இது.
  • டெல்லியில் ஐந்து வயதுப் பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2000 கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள்.
    • ?????????????
  • நரேந்திர மோடியை விமர்சித்த பிறகு நித்திஷ் குமார் அரசிற்கு, மத்திய அரசு 12,000 கோடி பின்தங்கிய பகுதிகளுக்கு உதவும் நிதி வழங்க முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் மட்டுமே கருதி இந்த முடிவை உண்மைக்கும் நீதிக்கும் சொந்தக் காரரான காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
    • ஸ்டாலின் வீட்டில் உண்மையாய் ரெய்டு நடத்திய மாதிரி.........
  • 29 வயதான கிருஷ்ணா என்கிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் [கர்நாடகா] தனது சொத்து மதிப்பு ரூ. 910 கோடிகள் என்று   தெரிவித்திருக்கிறார். 
    • ஏழைகளின் நண்பன் காங்கிரஸ் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவும், ஏழை இளைஞர்களுக்கு மிகப் பெரிய க்ரியா ஊக்கியாக இருப்பதும் தான் அவரது வாழ்க்கை இலட்சியமாம்.
  • பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதற்கு பெண்களின் பார்வையே காரணம் என்று சத்யதேவ் கட்டாரே என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் [மத்தியப் பிரதேசம்] சொல்லியிருக்கிறார்.  
    • எல்லாப் பெண்களின் கண்களையும் குருடாக்க வேண்டும் என்றுதான் சொல்ல நினைத்தாராம்...   என்று விட்டு விட்டாராம்.
  • பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமா நடக்கிறது .... எல்லா இடங்கலிலும் தான்... பாலியல் பலாத்காரத்தை கட்டுப் படுத்துவதுதான் உள்துறை அமைச்சகத்தின் வேலையா என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த [உத்திரப் பிரதேசம்] ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். 
    • கடற்படைக்கு மீனவர்களைக் காப்பதுதான் வேலையா? உள்துறைக்கு மக்களைக் காப்பதுதான் வேலையா... நிதி அமைச்சகத்துக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதான் வேலையா ... சீனர்கள் ஊடுருவாமல் தடுப்பதுதான் இராணுவத்தின் வேலையா .... என்றெல்லாம் கேட்க நினைத்தாராம்...
  • தெற்கே தினம் தினம் தமிழக மீனவர்களைக் கொள்ளும் இலங்கையிடம் அமைதி... பத்தொன்பது கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனர்களிடம் பேச்சு வார்த்தை ... பாலியல் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நீதி கேட்ட பெண்ணிடம் மட்டும் 'அறை' --- 
    • என்ன வீரம் சார்... என்ன கொடுமை சார்?


7.4.13

தமிழ் இனி - குறும்படம்

எதேச்சையாக என் கண்ணில் பட்டது.


16.3.13

மாணவர் எழுச்சி

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் இயக்கம் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதமும் அதைத் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபடுவதைப் பார்க்கின்ற போது, எந்த அளவுக்கு நம்மைச் சுற்றியிருக்கிற பொது நலவாதிகள் 'பொது நலனை விட்டு அன்னியப் பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
அரசியல் வாதிகள், பொது நல வாதிகள் மாணவர்கள் தங்களது எல்லைகளை மீறுகிறார்கள் என்று உளறுவதை நிறுத்தி விட்டு இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வது நல்லது.

=============================================
இந்திய அரசிற்கு எந்த வித போராட்டமும் அரசின் கல்லைக் கரைக்காது. 
ஆனால் இந்தியாவைத் தாண்டி இண்டர்நேஷனல் அரங்கில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அதைத் தான் இந்தப் போராட்டம் மனதில் வைத்துச் செயல் பட வேண்டும்.

================================================

தமிழக முதல்வர் புலி குட்டிகளுக்குப் பெயர் சூட்டிய நிகழ்வுக்குப் போக முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.  ஒரு இயக்கத்தையே அழித்து விட்டு குட்டிகளுக்குப் பெயர் சூட்டல் 

================================================

இந்திரா காந்தி என்றால் எமர்ஜென்சி ஞாபகம் வருவது போல மன்மோகன் -சோனியா என்றால் தமிழின அழிப்பு - ஊரடங்கு உத்தரவு தான் நினைவுக்கு வரும் போல... தமிழக அரசும் சேர்ந்து கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடுவதும், ஊரடங்கு உத்தரவிடுவதும் ... இ.கா. தேவலை என்றே தோன்றுகிறது.

================================================

இந்திய அரசு ஒரு மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அரசு. அதற்கு தமிழ் மீனவர்கள் வரிசையாகக் கொள்ளப் பட்ட போது அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருந்தது. இப்போது இரண்டு மீனவர்கள் கொள்ளப் பட்ட வழக்கில் இத்தாலிய வீரர்கள் திருப்பி அனுப்பப் படாததை கண்டித்து இத்தாலிய தூதர் நாட்டை விட்டுச் செல்லத் தடை - பிரதமர் இத்தாலிய அரசை கண்டிக்கிறார். அது நாட்டின் கௌரவத்தை பாதிக்கும் செயலாம்.

இதே இந்திய மண்ணைச் சார்ந்த மீனவர்களை சிங்கள அரசு சுட்டுக் கொள்கிற இதில் எதயாவது இந்த அரசி செய்திருக்குமா? இத்துனூண்டு இலங்கை அரசை செல்லமாய்க் கேக்கக் கூட நமக்கு நாதியில்லை. இத்தாலிக்கு சவால் வேறு. ஒருவேளை நேரடியாகக் காசை வேறு எங்கும் இறக்கி விட்டார்கள் என்ற கவலையா என்று தெரியவில்லை.
===============================================

இந்த மாணவர் எழுச்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நிறையத் தடைகள் வரும். பிரிக்க சதி நடக்கும். அடக்க ஆள் வருவார்கள். குற்றம் சாட்டுவார்கள் . குறை கூறுவார்கள்.

ஆனால் இந்த மாணவர்கள் கொண்டிருக்கிற ஈரம், உரம், இன உணர்வு, போராட்ட குணம், நீதிக்கான தாகம் இவைகளைப் பார்க்கின்ற போது -- இது எதுவும் இல்லாத நாம் அவர்களின் ........ .......... ......... ....

அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் உபத்திரவம் பண்ணாமல் இருந்தாலே போதும்.



24.9.12

அன்பின் வன்முறை ....

இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்தக் குரல் உலகம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது குறைவதாய்த் தெரியவில்லை. அநேகமாக இன்னும் அதிகமாகலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த முறையான அடையாளம் இல்லாத ஓர் அமெரிக்க யூதர் இஸ்லாமியர்களின் மீது மிகுந்த வெறியோடு, எந்தவிதமான அடிப்படைத் தரவுகளுமின்றி மிக மோசமான ஒரு குறும் படத்தை இயக்கப் போக உலகமெங்கும் இருக்கிற இஸ்லாமியர்கள் ஒட்டு மொத்தமாக அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். 

லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப் பட்டதாகவும் அவரோடு இணைந்து மேலும் இருவரும், பாகிஸ்தானில் இதுவரை பத்தொன்பது நபர்களும் கொல்லப்  பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் இல்லை - அவர்களும் பாகிஸ்தானியர்கள் என்றே நினைக்கிறேன்.

இதோடு இணைந்து இந்த சமயத்தில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று நபிகளின் கார்ட்டூன் ஒன்று வெளியிட இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. மத சம்மந்தப் பட்ட கோட்பாடுகளில் கைய வைக்கிற யாரும் மிகக் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தீப் பொறி ஒரு காட்டை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்கர்கள் கிறித்தவக் கடவுளைக் கிண்டலித்து பழகிப் போனவர்கள். இப்போது அவர்களின் கோபம் இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. இதை அவர்கள் கருத்துச் சுதந்திரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளப் படாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

உலகின் எல்லா நாடுகளும் ஒருங்கே அமெரிக்காவின் கருத்துச் சுதந்திரம் என்கிற கோட்பாட்டை அவர்கள் பாணியில் யாரும் புரிந்து கொள்ள முடியாது. அப்படி எல்லாரும் அதே விதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டதாகத் தான் அது இருக்கும். 

ஒரு மனிதனின் தவறான கருத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்காக வன்முறை எதிப்பை ஒரு போதும் நியாயப் படுத்த முடியாது.  

அடிப்படையில் எல்லாம் சமயங்களும் 
அன்பைப் போதிப்பவைகளாகவே இருக்கின்றன. 
ஆனால், அதில் இருக்கும் உறுப்பினர்கள்
தாங்கள் போதிக்கும் அன்பே உயர்ந்தது என்று சண்டையிடப் போய் 
அவர்கள் அனைவரும் 
தாங்கள் போதிக்கும் அன்பிற்கு எதிரானவர்களாகவே ஆகி விடுகின்றனர். ஆனால் இதை அவர்கள் உணராமல் இருப்பதுதான் 
பிரச்சனையின்  ஆணிவேரே.

கொசுறு:

இன்னொசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் - முழு ஸ்கிரிப்ட் - சொடுக்கவும்.



11.8.12

டெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்


டெசோ மாநாடு பற்றி எல்லாரும் எழுதி எழுதி கிழித்து எரிந்து விட்டார்கள். கலைஞர் மட்டும் வலைப்பூக்களைப் படிப்பவராக இருந்தால், எழுதியிருப்பதை படித்து இருந்தால் அவர்மேலே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும். நிறையப் படிப்பவர் அவர். அதனால் பத்திரிகைகளில் வந்திருப்பதைப் பார்த்தும் அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் கூட கொஞ்சமாவது மாற்றம் தெரிந்திருக்கும். அதற்கெல்லாம் அசருபவர் அல்ல. சரி இது கலைஞர் பற்றிய கட்டுரை அல்ல.  அதுமட்டுமல்லாமல் டெசோ மாநாடு நடத்தும் அருகதை, கலைஞருக்கோ அல்லது வேறு யாருக்கோ இங்கே இருக்கிறதா என்பதைப் பற்றியும் நான் எழுதப் போவதில்லை.

ஆனால் டெசோ மாநாடு நடத்துவதற்கான எதிர்ப்பு ஆள்பவர்களிடமிருந்து வருவதைக் கண்டுதான் எழுதவேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.

டெசோ மாநாட்டை புறக்கணிப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அது இதுவரை அவரை நம்பிக் கேட்டோம் என்பது தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே இதை மறுப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. 

ஆனால் அனுமதி மறுப்பதற்கான உரிமை அரசிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அரசு சொல்லுமேயானால், அது எந்த அளவுக்கு இலங்கையின் மீது அனுசரணையோடு இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று நாராயண சுவாமி சொல்லியிருக்கிறார். கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுவதற்கு இதுவே மேல்தான். ஆனால் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த இலங்கைக்கு கைகட்டும் காங்கிரஸ் அங்கே சீனா வந்து ஆட்டம் போட்ட பிறகுதான் ஆஹா சூடு வைத்துக் கொண்டேமே என்று யோசிக்கும்.

எல்.டி. டி. யை ஆதரிப்பது குற்றம் என்றும் சொன்ன போதும் கூட எல்.டி.டி. ஐ ஆதரித்துப் பேசக்கூடாது என்றுதான் அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது அந்த வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது புரிகிறது.  கலைஞர் வேடதாரி என்பது எல்லாருக்கும் தெரியுமானால், எதற்கு இந்த அரசாங்கங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு இதை எதிர்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசு அங்கே பங்கேற்கும் நபர்களை தான் தனியாக கவனிப்பேன் என்கிறது. சிலருக்கு அங்கிருக்கிற இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுக்கிறது. இந்திய அரசு 'ஈழம்' என்பதை பயன்படுத்தக் கூடாது என்கிறது. தமிழக அரசு சென்னையில் இதை நடத்தக் கூடாது என்கிறது. 

ஆகமொத்தம் காரணம் ஒன்றுதான்: ஈழம் பற்றிப் பேசினால் அதன் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதில் நாம் கலைஞரை விமர்சிக்கிறோம் என்று இந்த மாநாட்டின் எதிர்ப்பில் -  "ஈழம்" மீது நமக்கு இருக்கும் வேட்கையை குறைத்து விடவும்,இனி யாருமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையயைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேறு யாரும் கூட ஈழ மாநாடு என்கிற ஒன்றை நடத்த முடியாது. உண்மையான ஈழ ஆதரவாளர்கள் கூட. 

அரசியல்வாதிகளில் பச்சோந்திகள் தவிர வேறு யாரும் இல்லை. இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா? ஒவ்வொருவருக்கும் வயதுதான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாகூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனால் அவர்கள் ஈழ ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அம்மாவைப் பாராட்டி ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, பாராட்டி, .... கொஞ்ச நாளிலேயே அம்மா எல்லாருக்கும் ஆப்பு வைத்தார்கள். அதே அம்மா புரானிகள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள். 

கலைஞர் மாநாடு நடத்த வேண்டும் என்றோ, கூடாது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இதுதான். 

சுதந்திர நாட்டில் ஒருவன் தான் விரும்பிகிற, நம்புகிற கொள்கையை வெளிப்படுத்துவதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை மறுப்பவர்கள் அரக்கர்கள் - அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் கூட.

இந்தக் கருத்துச் சுதந்திரம் மிதிக்கப் படும் நேரத்தில் அது கலைஞருக்கு எதிரானது என்று நாம் மகிழும் வேளையில், மிதிக்கும் கால்கள் நமது தலையின் மேல் இருப்பதை கவனிக்க மறக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத இந்த இந்தியா நாடு விரைவில் 
சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறது. 

21.2.12

மாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு


மாயன் காலண்டர்
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது.

மாயன் காலண்டறென்ன மாயன் காலண்டர்
நம் பெரம்பலூர் சாமியார் வேறு சொல்லியிருக்கிறார்
இந்த ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று...
முழுதும் அழியா விட்டாலும் முக்கால்வாசியாவது அழுந்து விடும் அப்படியே இல்லையென்றாலும் அரைவாசியாவது அழிந்து விடும் என்கிறார்கள்.

அறிவியல் வயப்பட்டு இன்றைய அறிவியல் அறிஞர்கள் சொல்லுவது மட்டுமே சரி என்று வாதிட்டுக் கொண்டிருக்கிற மேற்குலக நாடுகளின் அறிஞர்கள், பழங்கால மக்களின் ஞானம், நம்பிக்கைகள், அவர்களது விஞ்ஞான அறிவை மூட நம்பிக்கை என்று சொல்லும் இந்த மேற்குலக வாதிகள் இந்தக் காலண்டரின் குறிப்பில் ஆழ்ந்து இருப்பது - அது நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை.

என்னதான் நம்பிக்கை இல்லை என்றாலும் சில விஷயங்கள் நம்மை மீறி நம் மனதுக்குள் சென்று விடுகின்றன.
பகுத்தறிவு பேசினாலும் மஞ்சள் துண்டு தேவைப்படுவது மாதிரி..
திராவிடக் கட்சியின் தலைவி என்றாலும் சோவின் தயவில் இருப்பது மாதிரி...
சில விஷயங்கள் நம்மை அறியாமலே உள்ளே சென்று விடுகின்றன..
மாயன் காலண்டர்  மீதான நம்பிக்கையும்தான்..
அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருப்பதனால்... உலகம் அழிவதைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கி விட்டார்களா என்ன? இல்லை.
ஒருவர் படமெடுத்தார்... நல்ல வரவு... அவருக்கென்ன...
...
மனிதர்கள் எப்போது உலகில் வாழத் தொடங்கினார்களோ 
அப்போதே உலகம் முடியத் தொடங்கி விட்டது.
ஒருவன் கண்ணை மூடும் போது உலகம் முடிந்து போகிறது. 
அவ்வளவுதான். அதில் மேற்கொண்டு விவாதிக்க ஏதுமில்லை.
என்று நான் முடிகிறேனோ அன்றே உலகம் முடியத் தான் போகிறது.
மாயன் என்ன மாயாண்டி என்ன...
என் உயிர் பிரியும் நேரம் நான் உலகைப் பிரியும் நேரம்
அல்லது
உலகம் என்னைப்பிரியும் நேரம்.

உலகம் முடிவதும் தொடர்வதும் அதன் கையில்...
அதைக் காப்பாற்ற நாம் தேவையில்லை.
அதற்காக நாம் அதை அழிக்கத் தேவையில்லை.
எனக்கான உலகம் என்னோடு முடிகிறதென்பதால்
இந்த உலகை என்னோடு முடிக்க வேண்டிய அவசியமில்லை.
அணு உலைகள் அதை அவசரமாய் அழிக்கும்.
அணுகுண்டுகள் அழிக்கும்,
எப்போதும் இந்த உலகம் இருக்காதேன்பதற்காய்
விரைவாய் அழிக்க வேண்டுமா.


எல்லா நாட்களும் நல்ல நாட்களே.
எல்லா வருடங்களும் நல்ல வருடங்களே.
நல்லவைகளும் தீயவைகளும்
மனிதர் நம் கையிலே.


மாய உலகம்
"என்ன ராஜேஷ் ஏன் இந்த முடிவு? வாருங்கள்...  மீண்டும் ... விரைவில் ..." என்று மாய உலகம் ராஜேஷின் பின்னூட்டத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி பின்னூட்டம் இட்டேன். ஆனால் நண்பர் மீண்டு இங்கு வரமுடியாத தூரம் சென்றதாக அறிந்த செய்தி மனதை காயப்படுத்தியது. அவரது இறுதிப் பதிவின் பாடல்கள் எல்லாம் மாய உலகத்தை நினைவுபடுத்துவதாகவே இருந்தது.
இந்த பதிவை அவருக்குச் சமர்பிக்கிறேன்.

மணல் வீடு -

கடற்கரையில் நாமே கட்டிய வீட்டை நாமே இடிப்பதில்லையா? பத்திரமாய் நெடுநாள் இருக்கும் என்று எண்ணுவோம். ஆனால் எதிர் பாராத நேரத்தில் அலை வந்து அடித்துப் போகும். கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தால் ஜாலியாக யாரோ அதை உதைத்து  விட்டுப் போவதையும் காண நேரும். மாய[ன்] உலகத்தைப் பற்றி நினைக்கும் போது கடற்கரை மணல் வீடு ஞாபகத்திற்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.


31.1.12

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும்

நிபுணத்துவமும் பன்முகப் பார்வையும் என்ற இந்தப் பதிவு சில விளக்கங்களைத் தருவதற்காக. எழுதி சில மாதங்கள் ஆனாலும் இப்போதுதான் பதிவிடுகிறேன்.

நிபுணத்துவம் என்பதும் ஒன்றில் ஆழ்ந்த பார்வையும் அவசியம் என்பது உண்மைதான். ஆனால் நிபுணர்களின் கருத்துக்கள் ஒட்டு மொத்த அல்லது பன்முக நிலைகளில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். 
  • ஒரு சிறு துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு மருத்துவர் நிச்சயமாக அதிகமாக விரும்பப்படுவார் - உதாரணத்திற்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவ்வாறே மதிக்கப் படுவர். சிறுநீரகக் கோளாறு மற்றும் பல் மருத்துவர் என்கிற பலரும் தேவைதான். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் சிறுநீரக மாற்று அறுவை செய்தவனுக்கு பல்மருத்துவர் அவராக பல்லில் பிரச்சனை என்று பல்லைப் பிடுங்கி விட முடியாது. அப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர், இதனால  பெரிசா ஒன்னும் பிரச்சனை வராது அப்படின்னு பல்லைப் புடுங்கினாறு - அதோட சேர்த்து அவரோட வாழ்க்கையையும் புடிங்கிட்டாறு. ச்பெசலிச்டுகள் ஒட்டுமொத்த நோயாளியின் வரலாற்றையும் எடுத்துக்கொண்டுதான் ட்ரீட்மென்ட் செய்ய முடியும்.

பொருளாதார வல்லுனர்கள் மனித வாழ்வின் மேம்பாடு என்பது பொருளாதார வாழ்வு மட்டுமே என்று சிந்திப்பதில் தவறில்லைதான். ஆனால் அதிலும் அது தனித்து விடப்பட்ட பார்வைதான் தவறு. அனைத்து சமூக உறுப்பினர்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொதுவாக கணக்கிடுவது ஒரு முகப் பார்வைதான். அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சி என்பது மேல்நாட்டு முன்னாதரணம் அல்லது அந்நிய முதலீடு  மட்டுமே என்பது அடுத்த கடிவாளக் குதிரைப் பார்வை. இதைச் சொல்லுவதற்கு புள்ளி விவரங்களோ அல்லது ஒருவர் பாண்டித்துவம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்கிற ஒன்றை மட்டும் இது அப்படி இருந்தால் இதில் வளர்ச்சி உண்டு என்று சொல்லுகிறவர்கள் - இதுவரை அது எப்படி இருந்தது என்று பார்ப்பதும் அவசியம். அந்நிய முதலீடு என்பது சரி என்றாலும் அது எப்படி சரியாகும் என்கிற கேள்வியை வைப்பது சரிதானே.
  • இன்றைக்கு முதலாளித்துவத்தின் உதவியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மேலை நாடுகளின் பொருளாதார முன்னுதாரணத்தைக் கொண்டிருப்பது தவறே என்று கருத வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவின் வால்மார்ட்டிற்கு அங்கே தேவை இருக்கிறது. மிகப் பெரிய நாடு. மக்கள் சிதறி இருக்கிற நாடு. சில முக்கியமான நகரங்களை விட பிரிந்திருக்கிற பல கிராமங்களைக் கொண்ட நாடு. ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்வதற்கு - காரின்றி அங்கே அமையாது உலகு... எனவே பொருட்கள் ஓரிடத்திலும் மொத்தமாகவும் குவிக்கப் படவேண்டியது அவசியம். எனவே செயின் நிறுவனங்களுக்கான தேவையும் மொத்தமாக வாங்கும் அவசியமும், வருடத்தில் பல மாதங்கள் வெளியும் செல்லுவதற்கு கடுமையான தட்ப வெட்ப நிலை என்று பலவற்றைக் கொண்டு அவைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.  எனவே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்காது. சில மாதங்கள் எதுவும் பயிரிட முடியாது என்பதில், குளிரூட்டப் பட்ட இடத்தில் பதனிடப்பட்ட பொருட்களின் தேவைகள் அங்கே இருக்கின்றன.
  • நமது நாட்டிற்கு அப்படி தேவை என்ன என்பது புரியவில்லை. அப்படியே அது தேவை எனினும், இவர்கள் நம் நாட்டின் முதலாளித்துவ முதலைகளின் துணை கொண்டு செய்ய முடியும் என்பதை சிந்திக்க முடியாதா? இந்தியாவின் சிறு வணிகர்கள் ஒழுங்காக வரி கட்டுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு முதலாளிகள்தான் அதிக அளவு ஏய்க்கிறார்கள் என்பதும் உண்மைதானே. அப்படி எனில் உலகம் முழுவதும் பழம் தின்னி கோட்டை போட்ட முதலாளிகள் எந்த அளவுக்கு இருப்பார்கள்?
வால் மார்ட் இங்கே வந்தால் லட்சக் கணக்கில் வேலை கொடுப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி அது மிகப் பெரிய செலவு செய்தால் எப்படி அதற்கு குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கக் கட்டுபடியாகும். இரண்டு வழிகளில் செய்ய முடியும். முதலில் குறைந்த விலைப் பொருட்களை அதிக விலைக்குக் கொடுப்பது. அல்லது தரமற்ற பொருட்களைக் குறைந்த விலைக்குக் கொடுப்பது. தரம் வேண்டுமெனில் அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்கிற மறை முக நிர்ப்பந்தத்தை கொடுப்பது. அல்லது வேலை செய்யும் ஊழியர்களுக்கு, குறைந்த ஊதியம் கொடுத்து தனது லாபத்தைப் பேருக்கும் வழி ஒன்றில்தான் அது கட்டுபடியாகும்.
  • விண்டோஸ் நிறுவனர் செய்த முதலீடுக்கு மேல் பல மடங்கு - ஆயிரக்கணக்கான மடங்கு இலாபம் சம்பாதித்து விட்டார். ஆனால் மார்க்கெட்டிற்கு வரும் எந்த புதிய ஒ. எஸ். அல்லது வோர்ட் தயாரிப்புகளும் குறைந்த விலைக்கு வருவதில்லை. அதனால்தான் ஒவ்வொரு நாளும் அளவுக்கதிகமான சொத்துக்கள் அவருக்குச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றது.
எல்லாரையும் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக்குவதிற்குப் பதில் சிலரை மட்டும் அது வளர்த்து விடுகிறது.
பன்னாட்டுச் சந்தை மற்றும் பன்னாட்டுக் காப்புரிமை என்கிற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து - நம் நாட்டில் இருக்கும் வேப்ப மர நலன்கள் அல்லது மஞ்சளின் மகத்துவம் பற்றி எவனாவது காப்புரிமை பெற்றிருக்க இங்கே நாம் அவனுக்கு கப்பம் கட்ட வேண்டும்.
இப்போது நவீனக் கப்பம் பல்வேறு வழிகளில் கட்ட வேண்டும். ஒரு பன்னாட்டு நிறுவனம் வந்தால், அரசு அவர்களுக்கு நிலம் ஒதுக்கிடு செய்வது, மற்றும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது என்று வாரி கட்டிச் செய்கிறது. ஆனால் இங்கு உள்ள ஒரு குடிமகன் ஒரு கடை தொடங்க அலையாய் அலைய வேண்டியிருக்கிறது.

  • என்னைப் பொறுத்தவரை அந்நிய முதலீடுகள் சரியா தவறா என்பதைத் தாண்டி, இங்குள்ள அரசுகள் இங்குள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சரியான வழிமுறைகளை யோசிப்பதில்லை என்பதுதான் மிகப் பெரிய குற்றச் சாட்டாக இருக்கிறது. 

கொசுறு

ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்களில் கட்டாயம் முடிக்க வேண்டிய பணி ஒன்று என் கவனத்தை ஈர்த்திருப்பதால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு இதே நிலைதான் என்று எண்ணுகிறேன். மாதம் ஒன்று என்பதே மலைப்பாக இருக்கும். இணையத்தில் வரும் போது நண்பர்களின் வலைப் பக்கங்களுக்கு வருகிறேன்.  

30.12.11

முல்லைப் பெரியாறா முல்லப் பெரியாறா?


'லை' யா 'ல' வா? இதுல என்னடா இருக்குன்னு நினைக்கிரவங்களுக்காக...


வலைப் பதிவொன்றின் வழியாக ஆங்கில பதிவொன்று வாசித்தேன்.
ராதிகா கிரி  - அதில் எப்படி தமிழகத்தில் மற்றும் மற்ற இடங்களில் பனிபுரியும் மலையாள பத்திரிக்கை ஆசிரியர்கள் கேரள சார்பான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள் என்று விவரித்திருந்தார்கள்.
சின்ன விஷயம்தான் ஆனால் அது சொல்லும் படிப்பினைகள் ஏராளம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் 'பறந்து' பரந்து விரிந்து இருக்கும் கேரளா நண்பர்கள், எப்படி எப்போதும் உண்மையைத் தாண்டி தங்கள் கேரளா விரும்பிகளாக இருகிறார்கள் என்பது பலருக்கு புரியாது.
சொன்னால்,  நம்மை பழமை விரும்பிகள் என்று சொல்வதற்கு நிறைய பேர் தயாராக இருப்பார்கள். பல ஆண்டுகளாக தமிழ் நாட்டில் வாசம் செய்யும் எனக்குத் தெரிந்த கேரளா மாநிலத்தின் குடிமகன் ஒருவர் கேரளா சென்று புதிய கார் வாங்கி வந்தார். ஏன்  என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கேரள பதிவென்னோடுதான் இங்கே இன்னமும் அந்தக்கார் ஓடிக் கொண்டிருக்கிறது.

எங்கே இருந்தாலும் எப்படி தாங்கள் விரும்புவதை நிலை நிறுத்துவார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.. முல்லைப் பெரியாறு அணை பற்றி அறிய விக்கிப் பீடியாவில் தேடிய போது அதிலும் [mullaperiyar] என்றுதான் தேட வேண்டியிருக்கிறது. அதாவது பரவாயில்லை. அதில் எழுதியிருந்த விசயம் - இரண்டு மாநிலங்களுக்கு இடையிலும் உள்ள தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்கு உள்ள 'ரப்பிஷ்' ஒப்பந்தம் என்று ஆரம்பித்து இருந்தது.

 ... நான் விக்கி பெடியாவில் லாக் இன் செய்து, அந்தப் பதிவை எடிட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இன்னும் விக்கி பீடியாவில் எடிட் செய்ய படிக்க வேண்டியிருக்கிறது. வேறு யாரோ நிச்சையம் முறையீடு செய்து அதை மாற்றியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வார்த்தை இப்போது மாற்றப் பட்டிருக்கிறது.  ரபிஷை எழுதியது நமது கேரளா நண்பர்கள்தான்.

தமிழன்பர்கள் நிறைய இது போன்ற பொது தளங்களில் எழுத வேண்டிருக்கிறது.

ஆனால், நமக்குத் தெரியாமலேயே அல்லது விஷயம் புரியாமலேயே இன்னும் கேரளா கேட்பதில் தவறென்ன என்று கேட்கிற தமிழக வாழ் கேரளா நண்பர்கள் சில விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு - கொலை வெறி பாடலை ... மாற்றி டேம் பர்ஸ்ட் கேரளா புல்லா வாட்டரு - அப்படின்னு மாத்தி அதுல அம்மாவை ரத்த வெறி பிடித்த பேயாக படம் வெளியிட்டு ... இதல்லாம் தேவையா.. விக்கி பெடியாவில் ரப்பிஷ் என்பது... சாமி கும்பிட வருபவர்களை ... அதாவது அவர்களுக்கு வருமானத்தைக் கொண்டு வருபவர்களை உதைப்பது, வண்டிகளை நொறுக்குவது ,,,,,

ஆனால் இங்கே இருப்பவர்கள் மட்டும் அவர்கள் சம்பாதிப்பதற்கும், அதை அங்கே ஊருக்கு எடுத்துச் செல்வதற்கும் பாதுகாப்பு வேண்டுமாம்... அணை உடைந்தால் கேரளா புல்லா தண்ணீர் என்ன புழுகுடா சாமி. அணை உடைந்தால் இடுக்கிக்குதான் வரணும் தண்ணீர்.

 கொஞ்சம் கூட இருக்கிற இடத்தின், சம்பாதிக்கிற இடத்திற்கான கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாமல் இப்படி வெறி பிடித்து  உண்மை புரியாமல்  இருப்பவர்களை நாம் என்ன சொல்லுவது... 

திரு வை.கோ. சொன்னது போல - நீ இந்த ஒப்பந்தத்தை மதிக்கலன்னா நானும் மாநிலப் பிரிப்பை ஒத்துக் கொள்ளலை - இடுக்கி தமிழகத்திற்கு சொந்தம்...
வேறென்ன சொல்றது...



29.12.11

ஜெயா கேட்டவை -- "சோவா அ மோடியா "


முன்பு நான் விரும்பிக் கேட்பது “நீங்கள் கேட்டவை.”
விரும்பிய பாடல்களை எழுதிப் போடுவதற்கு [பதினைந்து காசுக்கு] அப்பாவை நம்பி இருக்க வேண்டுமே என்பதனால், நமக்கு விரும்பிய பாடல்களை வேறு யாராவது கேட்டிருக்க மாட்டார்களா என்ற எண்ணத்தோடுதான் ரேடியோ கேட்போம். அப்படித்தான் விரும்பிய பாடல்களைக் கேட்க முடிந்தது. இப்போதெல்லாம் நமக்கு விரும்பிய பாடலை பார்க்கவே முடிகிறபோது அதற்கான நேரம் இல்லாமல் இருப்பதும் சோகம்தான்.
சரி எதற்கு இந்த நீங்கள் கேட்டவை புராணம்?

தமிழக முதல்வர் கடந்த வாரம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டார். நிச்சயம் அதற்கு முன்பு பல முறை யோசித்திருப்பார். பல விஷயங்களை யோசித்திருப்பார். அப்படி அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் என்ன பாடல் கேட்டார் என்பது இப்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் வழியாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
அதை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சியே. 
அதற்கு முன்பு அவர் கேட்ட பாடல்.
மயக்கமா தயக்கமா....

முதலில் இதைப் பாருங்கள் பிறகு பேசுவோம்



யார் நம்பத் தகுந்த வட்டாரம் என்று கேட்பவர்களுக்கு...
வேறு யார் – நரேந்திர மோடி அவர்கள்தான் சொன்னார்கள்.
எனக்கும் அவருக்கும் ஒரு ஹாட் லிங்க் இருக்கு யு சீ....

என்ன கதை என்று கடுப்பாய் இருப்பவர்கள் தினமலரின் செய்தியைப் படியுங்கள். உங்களுக்கேத் தெரியும். 
அதாவது திருமதி சசிகலா முதலமைச்சரின் அளவுக்கு எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது என்றும் [நம்பினால் நம்புங்கள்...] அவரிடம் இந்தச் செய்தியை எப்படியும் சொல்ல முடியாததனால் மோடி வழியாக செய்தி அனுப்பப் பட்டே நமது முதலமைச்சர் அறிவுக் கண் திறக்கப்பட்டது என்று தினமலர் சொன்னது.

இப்ப வந்து மோடி கை அதிகமாகி அவர்தான் எல்லாமேஆகி விட்டதென்றால் யாருகிட்ட போவது... தினமலர்கிட்டயா?
சரி இப்படி தினமலர் எழுதுறது சோ வுக்குத் தெரியுமா... சோ கோவிச்சிக்க மாட்டாரா..?

சில நாட்களில் தினமலர் இதை எப்படி யோசித்ததுன்னே தெரியலை உடனே சோவைப் பேட்டி  கண்டு அவர்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது போல சித்தரித்து ஒரு பேட்டி வேறு வெளியிட்டிருக்கிறது...
அட ...... எப்படியெலாம் யோசிக்கிராங்கையா...

ஆக மொத்தம் ஜெயாவுக்கு யோசிக்கவே தெரியாதுங்குற ஒரு முடிவுக்கு வந்துட்டிங்களா... அல்லது சோவும் மோடியும் சொன்னால்தான் சில முடிவுகள் எடுக்க முடியும் அதுதான் தமிழர்களை பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்று நா கூசாமல் எழுத முடிகிறது...

யாரைக் கேவலப் படுத்துகிறீர்கள் - 
தமிழரையா தமிழக முதல்வரையா?

ஆக மொத்தம் நாங்கள் எல்லாரும் சோ சொல்வதையும் மோடி சொல்வதையும் கேட்டால்... அதோடு தினமலம் சொல்வதை எல்லாம் கேட்டால் நல்ல இருப்போம்னு முடிவே பண்ணிட்டிங்களா..
என்னமோ போங்க

சில கேள்விகள் அம்மாவிடம் ...

மயக்கம் இல்லாததால் இந்த முடிவா அல்லது கொடநாடு போகாமல் இருந்ததால்தான் இந்த முடிவா...
உண்மையிலேயே மயக்கம் தெளிந்ததா?
இன்னும் எத்தனை நாளைக்கு..


இப்படி நீங்கள் முன்பு சசி சொல்லுவதையும் இப்போது சோ சொல்லுவதையும் மோடி சொல்லுவதையும் கேட்டு நடந்தால் அவர்களின் பிடியிலிருந்து உங்களை மீட்பது எப்படின்னு நீங்களே சொல்லிட்டா நல்ல இருக்கும்...  

நாங்க மண்டையப் பிச்சுக்க வேண்டாம் பாருங்க... 

 

17.12.11

என் கழுகுப் பார்வை - 2011 ஒன்று



தரை வழி நின்று ஒரு இடத்தைப் பார்ப்பதற்கும் 
ஒரு மலை மீது நின்று அதே இடத்தைப் பார்ப்பதற்கும் 
நிறைய வித்தியாசம் இருக்கும். 
கீழிலிருந்து பார்க்கும் போது அழகாக இருக்காது என்பதல்ல விஷயம் - 
[அழகு என்பதை ஒரு வரையறைக்குள் கொண்டு வரமுடியாது] -
மேலிருந்து பார்க்கிற போது 
சிறிய நுணுக்கங்கள் தெரியாது என்பதும் அல்ல விஷயம்.

மேலிருக்கிற பார்வையில் - 
விசாலப் பார்வையோடு, 
வித்தியாசமான பரிமாணம் வெளிப்படும்.

சென்னையைத் தாண்டி - வேறு இடங்களில் இருபது கிலோ மீட்டரை இருபது நிமிடத்தில் பைக்கில் கடக்கிற நபர் முதல் முதலாய் சென்னை டிராபிக்கில் முழி பிதுங்கி இரண்டு கிலோ மீட்டரை கடக்க இருபது நிமிடங்கள் ஆகிற போது - அங்கே சுற்றியிருக்கிற கட்டிடங்களோடு சேர்ந்து - அந்த நபருக்கு ஆகா சென்னை எவ்வளவு பெருசுன்னு தோணும்.

வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இறங்கும் போது பார்க்கிற சென்னை - அட இவ்வளவுதானா சென்னைன்னு தோணும்.
ஆனால் அது கொடுக்கிற விசாலப் பார்வையைத் தரை கொடுத்து விட முடியாது.

கடலோரத்தில் இருக்கும் அந்த கட்டங்களின் நடுவே நமக்குத் தெரிந்த இடங்கள் இவளவு அருகில் இருக்கிறதா என்று தோன்றும். ஒரு வழிப் பாதை அல்லது சுற்றிச் சுற்றிச் சென்று சில இடங்களின் தொடர்புகள் கூட இல்லாதது போல நம்முடைய எண்ணம் மாறும்.

நிகழ்வுகள் சில அவ்வப் போது நடக்கிற போது நடக்கிற நிகழ்வுகள் தொடர்பற்றவைகள் போலத் தோன்றும். ஒவ்வொரு நிகழ்வையும் தனியே மட்டுமே பார்க்கச் சொல்லும்.

சில மாதங்கள் கழித்து 
சில நிகழ்வுகளை 
கொஞ்சம் தொலை தூரத்தில் இருந்து பார்க்கிற போது 
அவைகளின் வேறு பரிணாமங்கள் நமக்குத் தோன்றும்.

இந்த ஆண்டு நடந்த சில நிகழ்வுகளையும் 
அப்படிப் பார்க்கலாமென்று தோன்றுகிறது. 
அவை சில விஷயங்களை நமக்குத் தெளிவு படுத்தலாம் 
அல்லது சிக்கலுக்கு உள்ளாக்கலாம். 
எனக்குத் தெரிய வில்லை. 

இது சில பகுதிகளாக வெளி வரும். 
இது எனது கழுகுப் பார்வை மட்டுமே! 
தங்களது பார்வைகளையும் சேர்க்கிற நண்பர்கள் 
தங்களது கருத்துக்களையும் வெளியிடலாம்.

உதாரணத்திற்கு ஒன்று

இந்த ஆண்டு 
கேரளா மகர ஜோதி ஏமாற்று வித்தையில் ஆரம்பித்து, 
கேரளா  முல்லைப் பெரியாறு ஏமாற்று வித்தையில் முடித்திருக்கிறது. 
வருடம் முடியப் போகிறது -
ஏமாற்றும் வித்தைகள் முடியுமா தெரியாது.

தொடரும்....

8.12.11

முல்லைப் பெரியாரும் கூடங்குளமும்- முரண்பாடுகளா!



  • அச்சம் என்பதுதான் இரண்டு பிரச்சனைகளிலும் உள்ள முக்கியமான விஷயம் என்று நம்பப் படுகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம் - கூடங்குளம் பாதுகாப்பற்றது என்பதும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்பதும்.

கூடன்குளம் விஷயத்தில் மட்டும் 'கூடன்குளம்' பாதுகாப்பானது என்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவர் மாற்றி மற்றொருவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல முறை சொன்னது போல அதன் உண்மை நிலவரம் ஊருக்குத் தெரியாமலேயே இருக்கிறது. இந்த அச்சம் என்பது - வாழ்கிற மனிதர்களுக்கும், பிற்கால சந்ததியினருக்கும், இயற்கைக்கும், காற்றின் வழி பரவும் கதிர் வீச்சுக்கும் பாதிக்கப் படப் போவது கேரளாவும்தான். 
இதில் மட்டும் மத்திய அரசு சொல்வதைக் கேளுங்கள், நிபுணர் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்கிற நம்ம மக்கள் கூட, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசும் மக்களும் மத்திய அரசும், நீதி மன்றமும் சொல்வதைக் கேளுங்கள் என்று சொல்ல மறுக்கிறார்கள். அல்லது மிகவும் அமைதியாகி விடுகிறார்கள். ஆனால், தமிழ் மக்களைப் பார்த்து உங்களுக்கு இருக்கும் அச்சம் அவர்களுக்கு இருக்கக் கூடாதா - என்று இதற்கும் இங்குள்ளவர்கள் மேல் பழி போடுகிறார்கள்.

  • முல்லைப் பெரியாறு அணை என்பது - சிறியவர் முதல் பெரியவர் வரை அது உடைந்து விடும் உடைந்து விடும் என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள அரசியல் [தேர்தல் அரசியல் என்பதையும் தாண்டி] தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது ஆண்டுகளுக்கு போடப் பட்ட ஒப்பந்தத்தையும் உடைப்பதற்கும், எந்த வித இழப்பிட்டுத் தொகையும் தராமல் தப்பிப்பதற்கும், இடுக்குக்கிக்கு தண்ணீர் வரத்தை அதிகரிக்கச் செய்வதற்குமான பல்வேறு நோக்கத்தோடு, அணை உடைந்தது போகும் என்கிற பிதியைக் கிளப்புகிற முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புல அரசியல் தெரிந்தால் நாம் முல்லைப் பெரியாறு அரசியல் அச்சம் நமக்குப் புரியும். 
  • முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் ஆங்கிலேயர் காலத்தில் போடப் பட்டது அல்லது செல்லாது என்று நாம் வாதிடவும் முடியாது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் அதே ஒப்பந்தம் சில மாறுதல்களோடு மீண்டும் தமிழக மற்றும் கேரள அரசுகளால் புதுப்பிக்கப் பட்டன. அங்கே மீன் பிடிப்பதற்கான உரிமை, கூடுதல் ஒப்பந்தத் தொகை.... எனவே இது இந்திய பேராயத்தின் சட்ட நுணுக்கங்களுக்குள் ஒத்து வரும் ஒரு ஒப்பந்தமே. இப்போது மீண்டும் மறு பரிசீலனை செய்வதற்கான காரணம் ஏற்கனவே மேலே கூறப் பட்ட காரணங்களே. அச்சத்தினால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று அச்சுதானந்தர்கள் நினைக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி - கேரள ஒட்டுமொத்தமாக அரசியல், மத வேறு பாடு இன்றி - எந்த இடங்களில் வாழ்கிறார்கள் என்கிற நினைவின்றி எல்லாரும் முல்லை பெரியாறு - முல்லப்பெரியார் - அணை பாதுகாப்பற்றது என்று குரல் கொடுக்கிறார்கள்.

  • தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லவில்லையே அப்புறம் என் இன்னும் எதிர்க்க வேண்டும் என்கிற நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை கேரள அரசு நீதிமன்றத்தில், ஒப்பந்தம் என்பது அணை கட்டுவதற்கும், அதை நிர்வாகிப்பதற்கும் மற்றும் நிலத்திற்குமான ஒப்பந்தம்தான் எனவே இது தண்ணீருக்கான ஒப்பந்தம் இல்லை எனவே தண்ணீரைத் திருப்பி வேறு வழியாக அனுப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை - என்று வாதிட்டது. இன்னமும் 'நாங்கள் தண்ணீர் தருவோம்' என்பதை எப்படி ஐயா நம்புவது ...

விஷயத்திற்கு வருவோம் - கூடங்குளத்தில் அச்சம் என்றவுடன் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசின் முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அரசு என் முல்லைப் பெரியாறு விஷயத்தில் அமைதி காக்கிறது. 
எத்தனை ஆண்டுகளாக நீதி மன்ற முடிவைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தமிழ் மக்களின் அச்சம் தவறு ஆனால் கேரள மக்களின் பொய்யான அச்சம் சரியா? 
இத்தனைக்கும் அணை உடைந்தாலும் அதிலிருந்து வரும் தண்ணீர் இடுக்கி அணை தாங்கக் கூடிய வலு இருக்கிறது என்று சொல்லப் படுகிறது. 
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆறில் கட்டிய இடுக்கி அணையும் வலுவிழந்து விட்டதா? ஏனெனில் கேரள அரசு மக்களின் பீதியைக் கிளப்புகிரமாதிரி வெளியிட்ட ஒரு கானொளியில் முல்லைப் பெரியாறு அணை முப்பது ஆண்டுகளுக்காக மட்டுமே கட்டப் பட்டது என்கிற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைக்கிறார்கள். அப்புறம் எதுக்கு 999 ஒப்பந்தம்.? 
சரி சரி - இடுக்கி அணை எப்போது வலுவிழக்கும்? உங்க பொய்யை மெய்ண்டைன் பண்ண வேண்டாமா - சொல்லுங்க.

சரி விடுங்க - இதே கேரள அரசு அச்சத்தினால் தானே கூடங்குலப் ப்ராஜக்டை வேண்டாம் என்றது. உடனே அரசு கேட்டது. இப்போ இதுவும் வேண்டாம் என்கிறார்கள். மத்திய அரசு உடனே தீர்ப்பு வழங்கா விட்டாலும் நிச்சயம் அமைதி காக்கும். தமிழ் மக்கள் அச்சம் என்றால் அது சரியல்ல என்றால் என்ன சொல்லுவது?

இதே கேள்வியை தமிழ் நண்பர்களே, அல்லது தமிழக வாழ் கேரள நண்பர்களே - பலரிடம் "என்னமோ கூடங்குளம் அச்சம் அச்சம் என்கிறீர்கள்" இதே அச்சம் கேரள மக்களுக்கு இருக்கக் கூடாதா என்று கேட்கிறார்கள்?

இந்தக் கேள்வியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும்... அது ஏன் ஒரு அரசுக்கு வெண்ணையும் மற்றொரு அரசுக்கு சுண்ணாம்பும் தொடர்ந்து கொடுக்கிறது என்று...!


ஒரு ஊழியனின் குரல் - முரண்பாடுகள்

5.12.11

அந்நிய முதலீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்


கொசுறு ஒன்று 
கடந்த பதிவு சில கேள்விகளைத் தருவித்திருக்கிறது. அந்தப் பதிவு பொருளாதார விளக்கங்களை கொண்டிருக்கவில்லை, சிறு வணிகர்கள் வரி ஏய்ப்புச் செய்வது சரியா? சிறு வணிகத்தில் அந்நிய முதலிட்டினால்தான் ஐரோப்பிய அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி உருகிறதா என்ற கேள்விகள். அதற்கு பின்னூட்டத்தில் எழுதிய பதிலை இப்போது பதிவாக வெளியிடுகிறேன். பின்னூட்டத்தில் படித்தவர்கள் வேறு வலைப் பூவிற்குச் சென்று விடலாம்.
கருத்து
  • கடந்த பதிவின் நோக்கம் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதில் மட்டும் இல்லை. தலைப்பு அதைப் பற்றியது மட்டும் என்று கூறுவது போல உள்ளது தவறே. மாறாக ஒட்டு மொத்த முதலளித்துவ அமைப்பின் தற்போதைய வடிவம்.
  • மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் தனது கருத்தமைவைக் கட்டமைத்த காலத்தில் அவைகள் மிகப் பெரிய விடுதலை கூறுகளை உள்ளடக்கிய சக்தியாக இருந்தது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் முதலாளித்துவம் என்பது முற்றிலும் மோசமானது என்று நான் நினைப்பதில்லை. அரிச்டோக்ராட்ஸ் என்ற மேட்டிமைக் குடியினர் மட்டும் மதிக்கப் பட்ட காலத்தில், சமுதாயத்தில் அனைவரும் சமத்துவம் மிக்கவர்களாக மதிக்கப் பட இது மிகப் பெரிய உறுதுணையாக இருந்தது என்று மறுப்பதற்கில்லை. ஆனால் நாளாவட்டத்தில் இதுவே மக்களை ஒரு மாய வலைக்குள் சிக்க வைத்து விட்டது என்று நான் கருதுகிறேன். அதனால் கம்யூனிசம் சரி என்றோ அதுதான் மாற்று என்பதோ என் கருத்து அல்ல. பல மாற்றுகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதே சொல்கிற செய்தி.
  • ஒரு காலத்தில், ஒரு கலாச்சாரத்தில் உருவான நவீனம் அல்லது வளர்ச்சி என்பது அப்படியே இன்னோர் இடத்தில் சொருக வேண்டும் - சொருக முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் அது மிக நன்றாகத் தெரிந்தாலும் சில நாட்களிலேயே அல்லது சில மாதங்களிலேயே தனது சுய ரூபத்தைக் காட்டும்.
  • நவீனம் அல்லது சமூக வாழ்வு மேம்பாடு என்பது எப்போதும் மேலை நாட்டு ......... அனைத்தையும் வைத்தே நாம் பழகிப் போய் விட்டோம். எது நல்ல உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு நமது ஒப்பிடு எப்போதும் ஐரோப்பிய நாடுகளாகவே ஆகிப் போனதும் சரியல்ல.
  • இங்கு உள்ள மக்கள் தொகை, சூழல், நகரங்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ற விதத்தில் நமது பொருளாதார மேம்பாடு என்று சிந்திப்பதில்லை என்பது என் வருத்தமும் கூட.
  • முதலாளித்துவ பொருளாதாரத்தை பின் பற்றுகிற மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையில் பல காரணங்கள் இருந்தாலும் அளவுக்கு அதிகமான இலாபம் ஈட்டுதல் என்கிற ஒன்றும், காரணமாக இருக்கலாம். மற்றபடி அவர்கள் சிறு வணிகத்தை ஊக்கு வித்ததுதான் அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றெல்லாம் நான் சொல்ல வர வில்லை.
  • இதே பிழைப்பை நம் நாட்டைச் சார்ந்த அதி செல்வங்கள் படைத்தவர்கள் முதற்கொண்டு செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். அவர்களிடம் இருந்தும் நாம் காப்பாற்றப் பட வேண்டியது அவசியமே!
  • சிறு வியாபாரிகள் அனைவரும் நல்லவர்கள் என்றோ அல்லது அவர்கள் யாருமே ஏமாற்ற வில்லை என்றோ நான் ஒன்றும் சொல்ல வில்லை. அவர்கள் வரி செலுத்துவதில்லை என்றால் அதை எப்படி முறைப் படுத்த வேண்டும் என்பதும் அதற்கான செயல்களில் ஈடுபடுவதும்தானே அரசின் மற்றும் வல்லுனர்களின் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அந்நிய முதலீடு வந்தால் வரி சரியாகி விடுமா.. அல்லது நம் வரி ஏய்ப்பாலார்களைச் சமாளிக்க இதுதான் வழியா?
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இத்தனை ஆண்டுகளாக வரி ஏய்ப்புச் செய்து கொண்டிருக்கிறது. நெறிப் படுத்துகிறார்களா? கிங் பிஷேர் நட்டம் என்றால் உடனே அதற்கு என்ன செய்யலாம் என்று அரசு யோசிக்கிறது. ஆனால் சிறு வணிகர்கள் என்றால் மட்டும் எதுவும் தன்னிலேயே ஒருங்கிணைப்பதற்கு அரசு முயற்சி எடுக்கக் கூடாதா? இவைகள் எல்லாமே சிறுவர்களாக இருந்தாலும் சரி பெரியார்களாக இருந்தாலும் சரி ... தேவையான முறைப் படுத்தல் இல்லாமல் அதற்கான மாற்றுகளை யோசிக்காமல் எது சுலபமானது என்று நடக்கும் அரசியல் வாதிகளின் போக்கு பற்றிய கவலை தவறா?
  • அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் அதே ஆர்வத்தை நம் மக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகம் நேரடியாகப் பயன்பெறும் வண்ணமும் அதில் நேரடி ரேவேன்யுவை அரசுக்குக் கொண்டு வரும்படிஎல்லாம் செய்ய முடியாதா. என்ன - அரசியல் வாதிகளும், வல்லுனர்களும், நம் மக்களும் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். 
  • டாஸ்மாக்கை ஒருங்கிணைத்து வரி வசூல் செய்யும் போது சிறு வணிகர்களை ஒன்று சேர்க்க முடியாது என்பது நம்பும் படி இல்லை. அல்லது சிறு வணிகர்களை ஒன்று சேர்த்து ஒழுங்கான அமைப்பாக உருவாக்க முடியாதா?
கருத்து விவாதங்கள், பரிமாற்றங்கள் தான் நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற என்ற ஒன்றை, புதிய யுத்தியை கண்டு பிடிக்கவும் கையாளவும் செய்யும். இல்லையெனில், வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நாம் இருக்கிற அந்த ஒரே வழி என்று மேலை நாடுகளின் வாலை பிடித்துக் கொண்டு அதைத் தான் பின்பற்றிக் கொண்டிருப்போம்.

கொசுறு இரண்டு 
பல கேள்விகளை கடந்த பதிவில் விதைத்த வௌவால் அவர்களுக்கு நன்றி. அதனாலேயே இந்தப் பதிவு. வருத்தம் என்னவென்றால் அவர் கேட்டது போல பொருளாதார விளக்கங்களை நான் கூற வில்லை; அது இந்தப் பார்வைக்கு தேவையற்றது என்கிற எனது [தவறான !] எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.
கொசுறு மூன்று
நேரம் கிடைக்குமெனில் அந்நிய முதலீட்டில் உள்ள நன்மைகளையும் பற்றி எழுதலாம். பரந்து பட்ட பார்வைக்கு வழிவகுக்கும். ஆனால் அதை நண்பர்கள் பலர் செய்கிறார்கள்.
வௌவாலின் பதிவு
வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்

ரேவேரியின் பதிவு
அழியப் போகும் சிறு வணிகர்கள் 

ஜீவானின் கேள்வி
இது சரியா 



 

2.12.11

சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு தேவை என்பதாகவும் அது மட்டுமல்லாமல் இப்படி மட்டும்தான் நாடு முன்னேற முடியும் என்கிற மாயையும் நம் மனதில் விதைக்கப் படுகிறது.
முதலாளித்துவத்தின் அடிநாதம் என்பது லாபம் என்பதும் அதனால் அது எத்தகைய செயலையும் செய்யும் என்பது கண்கூடு. மேற்கத்திய பொருளாதாரம் என்கிற அவர்களின் தவறான கொள்கைகள் பலவற்றை நாம் எந்த வித மறு பரிசீலனையும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்கு பெருத்த அவமானம். அவமானம் என்பதை விட நமது நாட்டை அடமானம் வைக்கிற செயல். முதலீடுகள் இங்கே வர அவைகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.
ஒவ்வொரு முறையும் அந்நிய முதலீடும், போட்டியும் [காம்பெடிஷன்] வந்தால் விலை குறையும் என்பதுதான் அவர்களது வாதம். அது எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது விலை குறைந்து கொண்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. இன்னும் முழு அளவில் அந்நிய முதலீடுகள் இல்லாததுதான் இதற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டு இன்னும் முதலீட்டை எல்லாத் துறைகளிலும் அதிகப் படுத்தும் முட்டாள்தனத்தை விட வேறு கொடுமை ஒன்று இருக்க முடியாது. என்ன கொடுமை சார்?

ஒரே ஒரு கேள்வி...
ஐரோப்பிய அமேரிக்கா நாடுகளில் எல்லாம் பொருளாதார வீழ்ச்சி - தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கூட மேம்படுத்த முடியாத இந்த நிறுவனங்களா இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் தூக்கி விடப் போகிறது.... இன்னமும் நம்புறீங்களே சார்? அங்கெல்லாம் எடுத்த லாபம் பத்தாதுன்னு இங்க வரத் துடிக்கிறான். அல்லது அங்கே இனிமே எடுப்பதற்கு ஒன்னுமில்லைன்னு இங்க வர்றான்.. நீங்க இன்னும் சிவப்புக் கம்பள விரிப்பைப் போட்டு வரவேற்றுக் கொள்ளுங்கள். இதைச் சொல்லுவதால் எங்களைப் பழம் பெருச்சாளிகள் என்று நினைத்தாலும் அதற்காக கவலைப் படப் போவதில்லை. நமது நாட்டை நினைத்துத் தான் கவலைப் பட வேண்டியிருக்கிறது.


நன்றி - வார்த்தைகளை விட கார்டூன் பேசுமல்லவா - நன்றி தினமணி மற்றும் மதி.
Posted by Picasa