வறுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வறுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.4.15

விவசாயிகளின் பெரிய வெள்ளி

நிலம் கையகப் படுத்தும் சட்டம்- இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவோடு பா.ச.க அரசு இருப்பது, தனக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர வேறொன்றம் இல்லை.

இந்த சட்டத்தினால் விவசாயிகளின் தற்கொலை குறையும் என்பது மட்டுமல்ல விவசாயிகளின் நலன் பெருகும் - கிராமப்புரங்கள் மேம்படும் என்று உயர்திரு கட்கரிசொல்லியிருக்கிறார். அது எப்படி என்று யாராவது விளக்கம் சொன்னாள் எனக்கு நன்றாக இருக்கும்.

இந்திய நாடு விவசாய நாடு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆசை காட்டி, ஐந்து மடங்கு விலை தருகிறோம் என்று தனியார் நலன் கருதி நிலங்கள் கையகப் படுத்தப்படுவது நம்மை நாமே கார்பொரேட் நிறுவனங்களுக்கு விற்பதற்கு சமம்.

நமது அடுத்த தலைமுறை சொத்திற்கும் சோத்திற்கும் வழியில்லாமல் பிச்சை எடுக்க நாம் எடுக்கும் முதல் வழியே இந்தக் கையகப் படுத்தும் சட்டம்.

19.11.11

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ... பதம்!

பழமொழிகள் இப்போது சொல்லப்பட்டால் என்ன உதாரணம் சொல்லுவது என்று ஆசிரியர்கள் கவலைப் பட வேண்டாம். அவர்களுக்கு உதவும் விதமாக சில பழமொழிகள். 

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
  •  உதாரணம் ஒன்று -  தமிழக சட்ட சபையில் மூவர் மரணதண்டனைத் தீர்ப்பை நிறுத்தி வைக்க போட்ட தீர்மானம்.
  • உதாரணம் இரண்டு -  கூடங்குளம் அணுமின் நிலையம் அவகாசத் தீர்மானம்.
  • இதுக்கு நல்ல பழமொழி - வேற இருக்கு 
  • ஆடுற மாட்டை ஆடிக் கற பாடுற மாட்டை பாடிக் கற .... கறந்துட்டான்களே உள்ளாதித் தேர்தல்ல! [ஐடியா திரு ராமராஜனா?]
தொட்டிலை ஆட்டி விடுவது - பிள்ளையையும் கிள்ளி விடுவது
  • மூவர் தூக்குத்தண்டனை ரத்து செய்யக் கோரும் வழக்கைத் தள்ளு படி செய்ய தமிழக அரசு வழக்குத் தாக்கல்.... 
புலி பதுங்குவது பாய்வதற்கே
  • உதாரணம் - உள்ளாட்சித் தேர்தல் வரை அமைதி காத்து இப்போது எல்லா வற்றின் விலையையும் கடுமையாக உயர்த்தி இருக்கும் தமிழக அரசு.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பானாம் 
  • பெட்ரோல் விலை உயர்வினால் சூடாகி இருந்த மக்களுக்கு ஓங்கி அடி - பால் விலை உயர்வு ... பேருந்துக் கட்டணம் உயர்வு.... ரெயில் கட்டணம் உயர்வு ... 
  • சம்பளம் ??????????????????????????????'..
  • எல்லாத்தையும் தாங்கிக்கிரீங்களே - நீங்க ரொம்ப நல்லவங்க ..... 
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
  • பொது நூலகங்களுக்கு புத்தகம் வாங்க இருபத்தி ஐந்து கோடி மற்றும் கட்டிடங்களுக்கு இருபத்தி ஐந்து கோடி முதல்வர் அறிவிப்பு.. 
கோழி மிதித்து குஞ்சு சாகுமா! அம்மா மிதித்து ...
  • மாற்றான்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்காத நிலையில் தமிழக 'மக்களே' [குழந்தைகளே] உங்களிடம் இல்லமால் வேறு எங்கே போகமுடியும். சொந்தத் தாய்க்குரிய கருணையோடு நடந்து கொள்ள விலை உயர்வு தவிர்க்கப் பட முடியாததாகி விட்டது.  
கரையான் புற்று பாம்புக்கு உதவுமாம் - 
  • விலைவாசி யுர்வுக்கு கலைஞர் அரசே காரணம் - முதல்வர் குற்றச் சாட்டு.
  • கலைஞரின் புற்று அம்மாவுக்கு நன்றாக உதவுகிறது... 
இதனால்தெரிந்து கொள்ள வேண்டியது:
  • பசுத்தோல் போர்த்திய புலி
    • உதாரணம் - சொல்லனுமா என்ன? 
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
    • விலை வாசி உயர்வுக்கு எதிராக சில கட்சிகள் போராட்டம்...
  •  "வெளுத்ததெல்லாம் பாலல்ல."  
    • 'கள்ளா' இருக்கணும்னு அவசியம் இல்லை -
    •  சுண்ணாம்பாக் கூட இருக்கலாம். 
இது நமக்கு - 'ச்சீ ச்சீ - இந்தப் பழம் புளிக்கும்.'
  • பால் உடலுக்கு நல்லதல்ல
  • பிரயாணம் உடலுக்குக் களைப்பைத் தரும்

28.9.11

விபத்தும் வறுமையும் - எல்லாரும் மன்னர்கள்


விபத்து

இரு நாட்களுக்கு முன்புதான் சாலை விபத்துக்கள் குறைந்திருக்கின்றனவா என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று எழுதினோம். ஆனால் அதற்கெல்லாம் ஆய்வு தேவையே இல்லை என்கிற விதமாக நேற்று திருவள்ளூரில் மூன்று மாணவர்கள் லாரி மோதி உடல் நடுங்கி இறந்திருக்கிறார்கள். நேரடியாக கவிதை வீதி சுந்தர் - களத்தில் இருந்து ஒரு ரிப்போர்ட்டும் கொடுத்து இருந்தார்.

பூந்தமல்லி சாலையில், செம்பரம்பாக்கம் பகுதியில் இருந்து சென்னைக்குள் வரும் தண்ணீர் லாரிகள், மணல் லாரிகள், கல்லூரி பேருந்துகள், நிறுவன பேருந்துகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு போகிற காட்சியைப் பார்த்தாலே மனம் பதைக்கும். இன்று மூன்று உயிர்களைக் குடித்தது. ஏற்கனவே பல உயிர்களை மணல் லாரிகள் காவு வாங்கியிருக்கின்றன. ஷேர் ஆட்டோக்கள் பலரின் உயிர்களை எடுத்தது முதற்கொண்டு எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் ஒன்றும் நடப்பது போலத் தெரியவில்லை.

ஓட்டுனர்கள் முதலாளிகள் கையில் சிக்கித் தவித்து ஒரு நாளைக்கு எத்தனை லோடு அடித்தால் சம்பளம் கிடைக்கும் என்கிற ரீதியில் தன உயிரை பணயம் வைத்து சாகசம் செய்ய வேண்டிய அவலத்திற்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள் - இல்லையெனில் வேலை கிடைக்காது என்பதனால். ஒவ்வொருவரும் தங்கள் தினசரி வாழ்க்கைக் காகப் போராட வேண்டிய சூழலில் தள்ளப் படுகிறார்கள். எல்லாருக்கும் குறைந்த பட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தராமல் - விலை வாசியைக் கட்டுப் படுத்துவது எப்படி என்று புரியாமல் - சாலை விதிகளை மதித்து நடந்தால் அவனுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்காது என்பதானால் மீறி நடப் பவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிற அரசுகள் - [மதிய மாநில அரசுகள்] .அவர்களைத் தானே சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள் அனைவருக்குமான அரசு என்பதோ அல்லது இந்தியர்கள் எல்லாருக்குமான அரசு என்பதெல்லாம் சும்மா. இந்தியாவைப் பொறுத்த வரை நான்கு நகரங்கள் முக்கியமானவை. தமிழகத்தைப் பொறுத்த வரை அவர்களுக்கு ஒரே நகரம் மட்டும்தான் முக்கியம். எல்லா வளர்ச்சிப் பணிகள் இந்த நகரங்களை சுற்றி மட்டுமே இருக்கும். தமிழக விவசாயிகள், விளை நிலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் நகரங்களை நோக்கி மட்டுமே வரவேண்டும். ஆனால் அவர்களாக வேலை தேடிக் கொள்ள வேண்டும். இவர்கள் கொண்டுவரும் தொழிலகங்கள் அல்லது வேலை வாய்ப்பைப் பேருக்கும் எதுவாக இருந்தாலும் சென்னையில் மட்டுமே குடி கொள்ளும்.

வளர்ச்சிப் பணிகள், வேலை வாய்ப்பிற்கான உத்திர வாதம் இவைகளெல்லாம் அவர்களது நகரங்கள், கிராமங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் எனில், எதற்காக எல்லாரும் சென்னை நோக்கு வரவேண்டும்? வறுமை அவர்களை விரட்டுகிறது. உயிரைக் கொடுத்தாவது அன்றைய சம்பளத்தைப் பெற வேண்டும் என்கிற நோக்கம் - தனது உயிரோ அல்லது அடுத்தவன் உயிரோ. போகிற விலை வாசி உயர்வில் முதலாளி சொல்லுகிற படி நடந்தால்தால் வேலை. அவர் 10 லோடு அடிக்கனும்னா அடித்துத் தானே ஆக வேண்டும்- ஓட்டுனர் உரிமம் இல்லாமலே வண்டி ஒட்டித்தான் ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். வயிற்றைக் கழுவத்தானே இத்தனை கூத்தும்.  
---
ஆனால் இதைவிடப் பெரியக் கூத்து.

இந்தியாவில் விலை வாசி உயர்வே இல்லை என்பது போலவும், இந்தியாவில் யாரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லை என்பது போலவும் மத்தியத் திட்டக் குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்து இருப்பதுதான்.
மத்தியத் திட்டக் குழு அறிக்கையில், கிராமங்களில் வசிப்பவர்கள் மாதம் 965 ரூபாய் செலவு செய்தால் அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லைஎன்று சொல்லியிருக்கிறது. அது மட்டுமல்ல நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகைக்காகவோ அல்லது பேருந்திற்காகவோ மாதம் 49 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லையாம். அதனால் இந்தியாவின் மக்கள் எல்லாரும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக ஒரு மாயை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
http://www.vikatan.com/news.php?nid=4078

சாதாரணக் கூலி விவசாயி கூட பணக் காரன்தான் அரசுகளின் பார்வையில். எதார்த்தம் தெரியாத இந்த அரசுகளா மனித வாழ்வை மேம்படுத்தப் போகின்றன - வேலை வாய்ப்பைப் பெருக்கப் போகின்றன - விபத்துக்களைத் தவிர்க்க ஆவன செய்யப் போகின்றன?

இதனால்தான் அன்றே கவி சொன்னான் போல 
"நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று-"


மத்தியத் திட்டக் குழு நம் எல்லாரையும் மன்னராக்கி விட்டது.