போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.1.17

'குடி' அரசும் 'தடி' அரசும்

'குடியரசு' என்பது மக்கள் ஆட்சி என்பது பொருள்:
தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது.

மெரினாவில் அது ஜனவரி 24 ஆம் தேதி 
கருக்கலில் கலைந்து போனது.
அதைக் காலையில் இருந்து குலைத்தது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
'தடி'தாங்கிய குடிகள் 

'அடி'த்துக் கலைத்தார்கள் 
இப்போது இருப்பது 'தடியரசு' 
அடியரசும் கூட ...

-
குடியரசு 
தடியரசு 
அடியரசு 
தின வாழ்த்துகள் 


2.12.16

அப்பா சமுத்திரமே

அப்பா! நீர் திடீரென, "மோடி செய்துவிட்டாரே என்பதனால் அதை எதிர்க்க வேண்டியதில்லை" என்று சொல்லியிருந்ததைப் படித்தேன். 

உங்கள் மேல் வருத்தம் ,எல்லாம் இல்லை. உங்களைப் போல பெரும்பான்மை  இருப்பதில்தான் வருத்தம்.

மோடி செய்து விட்டாரே என்பதனால் எல்லாம் பலரும் எதிர்க்கவில்லை. அவசர கோலமாய், என்ன, எப்படி இருக்கும் என்பதை எல்லாம் யோசிக்காமல் செய்து விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம். 

பணக்காரர்களின் கைப்பாவையாக மாறிப்போய் விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம்.

தகுந்த தயாரிப்பு இல்லாமல் எல்லாரையும் இழி நிலைக்கு மாற்றி விட்ட நிலையை எதிர்க்கிறோம். 

இருப்பவர் யாரென்று எல்லாருக்கும் தெரியும். கூட இருப்பவர்களை விட்டு விட்டு, தொடர்பே இல்லாத சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து, அலைய விடும் இந்த மன நிலையை எதிர்க்கிறோம்.

.வரும் பணத்தை எடுத்து மக்களுக்கு எதுவும் செய்யாமல் மார்க்கெட்டுகளுக்கு வழங்கத் துடிக்கும் அந்தக் கார்ப்பரேட் ஐடியாவை வெறுக்கிறோம். அதனால் எதிர்க்கிறோம்.

வரிக்கு மேல் வரி விதித்து, வருமான வரி, ஜி எஸ் டி வரி, சாலை வரி, சுங்க வரி, விற்பனை வரி, இவைகளெல்லாம் கொடுத்தாலும், இதற்கு மேல் வங்கிகளில் பணம் வந்தாலும், அதை மக்களுக்காய் பயன்படுத்தாமல், எல்லாம் தனியார் வசம் ஒப்படைக்கத் துடிக்கும் அந்த முதலாளித்துவப் போக்கை எதிர்க்கிறோம்.

இவ்வளவுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்ற, வரி பாக்கி வைத்திருக்கிற முதலாளிகளை எல்லாம் விட்டு விட்டு எங்கள் கழுத்தை நெரிக்கிற இந்தப் போக்கை எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம்.

இதெல்லாம் எதுவுமே தெரியாதது போல புரியாதது போல - 

மோடி செய்துவிட்டதனால் மட்டுமே இது சரி என்று ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்களைத் தான் எதிர்க்கிறோம்

நீங்கள் மோடி செய்து விட்டதனாலேயே அதில் குறைகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத் தயங்கும் போது, மற்றவன் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கான இடம் தர வேண்டும். அதுதான் ஜனநாயகம். 

அப்பா சமுத்திரக்கனி,
உங்கள் பிள்ளையைக் கூட அடித்து விடக் கூடாது என்கிற காரணத்திலும், தன் பிள்ளைகள் மேல் உள்ள அக்கறையிலும் காவல் காக்கிற உங்கள் போல அவர் இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.

எழுபதுக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்களே. அது உங்கள் பிள்ளைகள் என்றால் .... 

சற்றுக் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

காத்திருப்போம்.


குறிப்பு:

என்னிடம் கறுப்புப் பணம் இல்லை.
நான் திமுக காரன் இல்லை.
நான் பாகிஸ்தான்காரன் இல்லை.
இந்தியாவின் எதிரியும் இல்லை 
துரோகியும் இல்லை.







13.9.16

காவு வாங்கும் காவிரி

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை

அவன் ஆற்றில் அணை போடுகிறான் 
நாம் வயலில் மனை போடுகிறோம்.


அவனுக்கு உணவு தேவை - எனவே ஆற்றில் நீர் பதுக்குகிறான்.
 நமக்கு மனை தேவை எனவே ஆற்றில் மணல் எடுக்கிறோம்.

அவன் அணை கட்டி நீரைத் தேக்குகிறான்.
நாம் நீர் தேங்க இடமில்லாமல் மனை  காட்டுகிறோம்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 
ஆற்றுக்கு அணை 
என்பது அதோடு முடிந்து விடுவதல்ல 

அதைத் தொடர்ந்து 
காற்றுக்கு வேலி யும் வரும்.

நாம் குளம் அழித்து 
மணல் எடுத்து,
மனை கட்டி 
வாழ வரும் போது 
மரமும் இருக்காது 
மழையும் இருக்காது

காற்றுக்காயும் 
கையேந்தும்  
காலம் வரும்.

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை


4.8.15

எதற்காகத்தான் போரிட முடியும்?

போகிற போக்கைப் பார்த்தால் நம் நாட்டில் _____________ வாழ்க என்கிற பேரணிகளிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கிடைக்கும் போலத் தெரிகிறது.

இன்னும் ஒன்றிற்கும் அந்தப் பாக்கியம் உண்டு. –எங்கள் வீதியில் டாஸ்மாக் இல்லை. அங்கே வேண்டும் என்ற போராட்டம் நிச்சயமாய் அனுமதிக்கப் படுவதுமட்டுமல்லாமல் பாதுகாப்போடு நிச்சயமாய்க் ஏசி பாரோடு கூடிய கடையும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிர வேறொன்றுக்கும் இங்கு அனுமதியும் இல்லை அவசியமும் இல்லை.

ஏறக்குறைய ஒருமாதத்துக்கும் மேலாய் இரு சக்கர வாகனத்தில் செல்கிற நண்பர்கள் அல்லோலப்பட்டு, சில பேர் காவல்துறை அதிகாரிகளிடம் இன்னும் மாட்டாமல் டபாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது தவறில்லைதான். ஆனால் வேகாத வெயிலில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை பள்ளம மட்டுமே உள்ள ரோட்டில் போவது சாதனைதான். 

விபத்தினால் உயிர் இழந்தது ஹெல்மெட் அணியாததால்தான் என்று ஒரு வழக்கை விசாரிக்கப் போய் நீதிபதிகள் இத்தக கட்டாயமாக்கி இருக்கிறார்கள். ஒழுங்கான சாலைகள் இல்லாததால்தான் விபத்துக்களே நடக்கின்றன என்று அரசுக்கு செப்டம்பர் ஒன்றுக்குள் அந்த நீதிபதிகள் கெடு வைக்கலாமே. நிற்க.

வெறும் தூண்களோடு நின்று போன மேம்பாலப் பணிகள், சாலை செப்பனிடாமல் பள்ளம் உள்ள சாலைகள், இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன மக்களும் வணிகர்களும், பல மனுக்களைக் கொடுத்த பிறகும் அரசு செவிசாய்க்காமல் இருந்ததால் அவர்களே ஏழு லாரிகளில் தார் ஜல்லி தயாராக வைத்து சாலை போடப் போனால், அவர்களைக் கைது செய்து உள்ளே வைத்தது மட்டுமல்லாமல் அந்த ஏழு லோடும் ஸ்வாகா ஆனது. 
ரோடு போட்டது ஒரு குத்தமா. உங்களைய ரோடு போடச் சொன்னாதான் குத்தம். நாங்களா போட்டாலும் குத்தமா?

பள்ளிக்கு அருகில் இருக்கும் சாராயக் கடையை மாத்தச் சொல்லி நீதி மன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்து, அதற்கும் செவி சாய்க்காமல், சசி பெருமாளின் உயிரைக் குடித்த பிறகு அதைப் பூட்டியிருக்கிரார்கள். 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் அனைவருக்கும் சிறை. நீதி மன்ற உத்தரவை ஒரு இடத்தில் மட்டும் நிறைவேற்றத் தயங்கும் காவல்துறை, தமிழக அளவில் ஹெல்மெட் விஷயத்தில் ஆர்வம காட்டுவது மட்டும் ஏன்?

ஒரு விஷயத்தில் சட்டத்தை மதிக்கும் காவல் துறை மறு விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறது?
ஒரு விஷயத்திற்கு மட்டும் தானாக வந்து சட்டம் போடும் நீதி மன்றம் இந்த விஷயத்தை தானாக எடுக்க ஏன் தயங்குகின்றது.?
 வருமானம் வரும் விஷயத்திற்கு மட்டும்தான் சட்டமா?




6.10.14

எங்கெங்கு காணினும் சக்தியடா !


எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 
- பாரதி தாசன்

##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.

பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.

###

ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும். 
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன. 
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.

###

ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது- 
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா 
என்ற வசனத்தைப் பார்த்த போது 
ஐயகோ 
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே 
குடைந்து எடுத்து விட்டது.

இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.

###

அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###

கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா? 

இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?

தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா? 
###

மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்

அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்



இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
பாரதிதாசன் 







31.7.13

இதுவே இறுதியாக இருக்கட்டும்!

ஒவ்வொரு முறையும் அணு உலை அதற்கு எதிராக எழுதுகிற போது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றுதான் தோன்றுகிறது... ஆனால் அதனால் இன்றைய மற்றும் நாளைய தமிழ் சமூகம் சந்திக்க இருக்கின்ற ஆபத்துகள் நம்மை அச்சுறுத்துவதால் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியது அவசியமாகவே இருக்கிறது.
முடிவின் ஆரம்பம் என்கிற ஆய்வுப்பட குறுந்தகட்டில் பல கருத்துகள் மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன...

ஒப்பந்த மீறல்கள் பற்றிச் சொல்லப் படுகின்றன... வெல்டிங் இல்லாத ரியாக்டோர்ஸ் என்கிற ஒப்பந்த மீறல், இதுவரை அவசர காலச் செயல்பாடு முறைகள் குறித்த ஆவணம் தயாரிக்காத நிலை, பத்து நாளைகளுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வேண்டிய இடத்தில் ஒன்றரை நாட்களுக்குத் தேவையான நீர் மட்டுமே கைவசம் இருக்கின்றன என்பது போன்ற பல்வேறு குறைபாடுகளை வைத்துக் கொண்டு தனது அழிப்புப் பணியை தொடங்க நீதி மன்ற அனுமதியோடு தொடங்கி இருக்கும் இந்த வேளையில் இது குறித்து தமிழர்கள்  எச்சரிக்கை உணர்வோடு இருப்பது மிக அவசியம்.

வி. டி . பத்மநாபன்






2.7.13

இயற்கை, முன்அறிவிப்பு, அனுதாபங்கள்

நான் எழுத வந்து ரொம்ப நாளாச்சு. மூச்சு விட நேரமில்லை முடிவெட்ட நேரமில்லை. எல்லாம் இன்றோடு முடிந்து இன்னும் மூன்று நாட்கள் கொஞ்சம் வேலைப்பளு இல்லாமல் இருக்கலாம். நிறைய நடந்து விட்டது. இப்போதைக்கு ஒன்று மட்டும்.

இயற்கையின் சீரழிவிற்கு எல்லைகள் கிடையாது என்பதை உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளம் மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது.  இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் வெறும் அனுதாபங்களோடு மட்டும் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்விகளை கேட்டாக வேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியிருக்கும் இந்தக் காட்டாற்று வெள்ளம் வரும் என்று முன்பே தெரியுமா தெரியாதா? அடிக்கத் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ராக்கெட் பறக்கிறது. வானிலை முன்னறிவிப்பை நமக்குத் தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் நமக்கு இல்லை... அப்படியே இருந்தாலும் வரும் முன் என்ன செய்ய வேண்டும் என்கிற தயார் மன நிலை, மக்களைக் காப்பாற்ற துரித நடவடிக்கை....ரொம்பக் குறைவு.

[உடனே, காப்பாற்றச் சென்று இறந்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி என்னைக் குற்றவாளியாக்க முயற்சிக்காதீர்கள்... அவர்கள் இறந்த ஹெலிகாப்டர்களை ஊழலில் தரம் குறைந்தவைகளாக வாங்கியதால் வந்தது.... வெறும் தொழில் நுட்பக் கோளாறால் மட்டுமல்ல.... அதை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்த இராணுவ வீரர்கள் இறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை].

மழை வருமா இல்லையா, எந்த அளவுக்கு வரும் என்பது வரை இன்று துல்லியமாக கூகுல் முதல் யாகூ வரை தெளிவாகச் சொல்கின்றன... ஆனால் அதைக் கண்டு அதற்கான முன் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசுதான்... மழை பெரு வெள்ளமாக  மாறுவது, மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது போன்ற நமது பணம் பார்க்கும் எண்ணம்தான் என்பதும் உண்மைதானே... 

எனவே வெளி நாட்டு கட்டளைகளை  ஏற்று பொருளாதார சீர் திருத்தம் என்ற பேரில், வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், தொழில் நுட்பம் என்ற பேரில் நாட்டை அழிவுப் பாதிக்கும் கொண்டு செல்லும் இந்த மன நிலையில் கொஞ்சம் மாற்றம் வந்தாலே போதும் பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். 

 சரி ஒரு மாதத்திற்கு முன்பே அறிக்கை தரக் கூடிய வானிலையின் மாற்றத்தைக் கண்டு பிடிக்க முடியாமலேயே இந்திய மக்கள் இப்படி ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து போயிருக்கிறார்களே ... சொல்லாமலே வரும் விபத்துகளை... [அணு உலை] அது கொண்டு வரும் விபரீதங்களைப் பற்றி நாம் யோசிப்பது கூட இல்லை என்பது வேதனைதான்... அதனால் முன்பே 
நாம் தமிழக மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.

அனுதாபங்களை இறந்தவர்களுக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை - இறக்க இருக்கிறவர்களுக்கும் சொல்லலாம். நான் செய்தது தவறென்றால்....

குஜராத் மாநில காங்கிரஸ், உடல்நலக் குறைவோடு இருக்கிற நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறது. 
நெல்சன் மண்டேலாவுக்கும் காந்தியின் அஹிம்சாவுக்கும் நிறையத் தொடரபு இருக்கிறது என்பதை உலகம் அறியும். அந்த நெருக்கத்தில்தானோ என்னவோ வேறு யாரும் அனுதாபம் தெரிவுக்கும் முன்பே குஜராத் மாநில காங்கிரஸ் ரொம்ப வேகமாகவே அவர் இறப்பதற்கு முன்பே அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறது. அதனால் அனுதாபம் தெரிவிப்பதில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.






4.5.13

"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" - அரசு மரியாதை செய்யுங்கள்


  • "முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்?" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள். அப்படியே கைது செய்யப்பட்டால் காந்தியின் நிலைக்கு உயர்ந்து விடலாம் அல்லது ஹிட்லைரைப் போலவாவது இருந்து விடலாம் என்றெல்லாம் கனவு காணுகிறார்கள் - பாவம் அப்துல்கலாம் ... எதெற்கெடுத்தாலும் இந்தக் கனவு காணுங்கள் படாத பாடு படுகிறது!

  • எண்பது மற்றும் தொன்னூறுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரது கவனத்தையும் தங்களது பக்கமாய் திருப்பினார்கள்... பசுமை தரும் மரங்களை வெட்டி சாலையில் இட்டு தங்களது செல்வாக்கை விரித்த போது, கொஞ்சம் வாக்கு வங்கிகளைத் தன பக்கம் கொணர்ந்து, அதை தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய சக்தியாக மாற்றிவிட முடியும் என்றும் அதனால் அது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமோ என்று தோன்றியது. வெறும் சாதியை முன் வைத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் நிச்சயமாய்த் திருப்பினார்கள்.
  • சாதியைத் தாண்டி வந்தது போலக் காண்பித்தது நல்ல மாற்றமாகவே தெரிந்தது. அந்த சமயங்களில் அவர்கள் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்பதும், அதைத் தொடர்ந்து வெளிவந்த புத்தகங்களும் உண்மையிலேயே தமிழரின் பெருமையை வெளிக் கொண்டுவந்தன என்பதும், சாதியத்தைக் கடந்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்கிற ஒரு சக்தியா அது வளர்வதையும் பார்த்து சிறு மகிழ்ச்சி அடைந்ததென்னவோ உண்மைதான்.

  • ஆனால் அது கொள்கைகளின்றி தேர்தலுக்குத் தேர்தல் தாவியதைப் பார்த்து  வெறுப்பு வந்தாலும் சரி கட்சியை வளர்க்கிற வரை இது தேவைப்படும் யுத்தியாகக் கருதிக் கொள்வோம் என்று வெறுப்பை மறைத்து வைத்தேன். அதன் பிறகு அதைக் கண்டு கொள்ளவும் இல்லை வெறுப்பும் இல்லை.

  • யாருமே கண்டு கொள்ளப்படாத சக்தியாக இல்லை என்கிற போது  சாதிக் காரர்களை எல்லாம் ஒருங்கிணைக்கிற மேதாவியாக இருந்து கொள்ளாலாம் என்று ஒவ்வொரு மாவட்டமாய்ச் சென்று சாதியத்தை விதைக்கிற மனப் பான்மை - முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்த யுத்திகளை மீண்டும் கையில் எடுக்கிற வித்தை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
  • ஊர் ஊராய்ச் சென்று மாநாடு நடத்தி எல்லாருக்கும் எதிராய்ப் பேசுவார்கள், பாதகம் விளைவிப்பார்கள், பிரிவினையை ஆழப்படுத்துவார்கள், அப்போதெல்லாம் மனித நேயம், உரிமை பற்றிப் பேசாத ஐ.நா. வரை சென்று வந்த மனித நேய ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒருவரைக் கைது செய்த பின் அராஜகம் அக்கிரமம் என்று சாதி புத்தியை வெளிக் கொண்டு வருகிறார்கள்.

  • சாதி அரசியல் என்பது சாக்கடை அரசியலே... அதைத் தவிர வேறொன்றும் சொல்லவதற்கில்லை. பேருந்தைக் கொளுத்துவது - மரத்தை வெட்டுவது - கல் விட்டு எறிவது - இவைகளாலெல்லாம் எதையும் மீட்டு விட முடியாது. 
************************
சரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -
                                                   தியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.   

இந்திய அரசின் உளவாளி  என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் "அவர் இந்தியாவின் வீர மைந்தர்" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.


இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர்? அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து  கொண்டிருந்தது? {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}

தவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.

ஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே  ஏன்? {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}

குண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா?

ஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா?  இவர்கள் அப்பாவிகள் இல்லையா? இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா? 

அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை.  நல்ல ஊடகங்கள்.

எந்த அரசும் இதைக்  கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ? அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.

குடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...

ஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.

28.4.13

சொர்க்கமேன்னாலும் நம்மூரு போல வருமா?


  • சிறைவாசம் செல்வதற்கு ஏற்கனவே நான்கு வார அவகாசங்களை வழங்கியிருந்த நீதிமன்றம் இப்போது மேலும் நான்கு வாரங்களை உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கியிருக்கிறது. ரூ. 278 கோடிகள் மதிப்பிலான மீதியிருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதற்காக 'மனிதாபிமான' அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
    • மனிதாபிமானம் என்பதற்கான புதிய விளக்கம். இதுபோல பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் என்று அறிவிப்புதான் இது.
  • டெல்லியில் ஐந்து வயதுப் பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2000 கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள்.
    • ?????????????
  • நரேந்திர மோடியை விமர்சித்த பிறகு நித்திஷ் குமார் அரசிற்கு, மத்திய அரசு 12,000 கோடி பின்தங்கிய பகுதிகளுக்கு உதவும் நிதி வழங்க முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் மட்டுமே கருதி இந்த முடிவை உண்மைக்கும் நீதிக்கும் சொந்தக் காரரான காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
    • ஸ்டாலின் வீட்டில் உண்மையாய் ரெய்டு நடத்திய மாதிரி.........
  • 29 வயதான கிருஷ்ணா என்கிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் [கர்நாடகா] தனது சொத்து மதிப்பு ரூ. 910 கோடிகள் என்று   தெரிவித்திருக்கிறார். 
    • ஏழைகளின் நண்பன் காங்கிரஸ் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவும், ஏழை இளைஞர்களுக்கு மிகப் பெரிய க்ரியா ஊக்கியாக இருப்பதும் தான் அவரது வாழ்க்கை இலட்சியமாம்.
  • பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதற்கு பெண்களின் பார்வையே காரணம் என்று சத்யதேவ் கட்டாரே என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் [மத்தியப் பிரதேசம்] சொல்லியிருக்கிறார்.  
    • எல்லாப் பெண்களின் கண்களையும் குருடாக்க வேண்டும் என்றுதான் சொல்ல நினைத்தாராம்...   என்று விட்டு விட்டாராம்.
  • பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமா நடக்கிறது .... எல்லா இடங்கலிலும் தான்... பாலியல் பலாத்காரத்தை கட்டுப் படுத்துவதுதான் உள்துறை அமைச்சகத்தின் வேலையா என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த [உத்திரப் பிரதேசம்] ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். 
    • கடற்படைக்கு மீனவர்களைக் காப்பதுதான் வேலையா? உள்துறைக்கு மக்களைக் காப்பதுதான் வேலையா... நிதி அமைச்சகத்துக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதான் வேலையா ... சீனர்கள் ஊடுருவாமல் தடுப்பதுதான் இராணுவத்தின் வேலையா .... என்றெல்லாம் கேட்க நினைத்தாராம்...
  • தெற்கே தினம் தினம் தமிழக மீனவர்களைக் கொள்ளும் இலங்கையிடம் அமைதி... பத்தொன்பது கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனர்களிடம் பேச்சு வார்த்தை ... பாலியல் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நீதி கேட்ட பெண்ணிடம் மட்டும் 'அறை' --- 
    • என்ன வீரம் சார்... என்ன கொடுமை சார்?


20.3.13

தமிழின எழுச்சியும் மக்களாட்சியும்

இந்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கொண்டுவரப் படும் தீர்மானம் - அதில் இந்தித் திருநாட்டின் அணுகுமுறை - இதையெல்லாம் தாண்டி தமிழகத்தில் உருவான இந்த பேரெழுச்சி தான் எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது.

இந்தித் துணைக் கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தி நாட்டின் வல்லமை குறித்து இங்கு யாரும் மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் உருவாக்க வில்லை. ஒரு ஜன நாயக நாட்டில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உடைய இனங்கள் ஒன்றாக வாழும் போது நிச்சயமாக சிறு இனங்கள் மதிக்கப் படாமல் இருப்பது நடக்கத் தான் செய்யும். சில சமயங்களில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது தெரியாமல் நடக்கிற விஷயம். சில சமயங்களில் ஓர் இனம் தான் அங்கீகரிக்கப் பட வில்லை என்பதை ஆள்பவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் மிகக் கொடிய விஷயம். சிற்றினக் குழுக்கள் தங்களது அங்கீகாரம் பற்றியெல்லாம் எண்ணக் கூடாது என்று நினைப்பதுதான் மிகவும் மோசமானது. நம் நாட்டில் அதுதான் நடக்கிறது என்று தோன்றுகிறது.
இஸ்லாமியர்கள் தனகளது அங்கீகாரம் பற்றி பேசக் கூடாது. தமிழர்கள் தங்களது அங்கீகாரம் பற்றி நினைக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பது எல்லாம் மெஜாரிட்டெரியனிசத் தின் வெளிப்பாடுதான். 

இந்தி(ய) நாட்டில் எல்லா குடிமக்களும் மதிக்கப்படுகிறார்கள் என்ற நினைப்பை திரு மன்மோகன் சிங் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் அது இல்லை என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் அல்லது இஸ்லாமிய மக்கள் நினைக்கிறார்கள் என்றால் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? ஏன் தனது குடிமக்களில் சிலர் அவ்வாறு நினைக்கிறார்கள் - எங்கே தவறு நடந்திருக்கிறது என்று யோசிக்க வேண்டும். அப்படி நினைக்கிற போதுதான் அந்த நாட்டின் குடிமக்கள் தான் இந்த நாட்டின் உறுப்பினர் என்கிற உண்மை நிலையை அடைவார்கள்.

அதை ஒரு போதும் செய்யாமல் - என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பிரதம மந்திரிக்குத் தெரியப் படுத்துவோம் - இதை அவருக்குச் சொல்வோம் என்று மந்திரிகள் சொல்வதைக் கேட்கும் போது பிரதம மந்திரி பேப்பர் படிப்பதில்லை,  செய்திகள் பார்ப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. எதோ மன்னராட்சி நடப்பதைப் போல அரசனுக்குத் தெரியப் படுத்தும் தலையாட்டி மந்திரிகள் சொல்லுவதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.

சில பேர் கேட்கலாம் - இப்படி ஒவ்வொரு போராட்டத்திற்கும் பதில் சொல்லுவதும் அதற்குண்டான அங்கீகாரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் பிரதம மந்திரிக்கு வேறு வேலையே இல்லையா.
தன் நாட்டு குடிமக்களின் நலனை விட வேறு என்ன அடிப்படைவேலை இருக்கிறது?

அதுமட்டுமல்ல - எப்போது நாம் மக்களாட்சி என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அப்போதே நாம் இது போன்ற போராட்டங்களுக்குச் செவிமடுக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இல்லையெனில் இலங்கை அரசு தமிழர்கள் மேல் தொடுத்த இனப் படுகொலைக்கும், இந்திய அரசு தமிழரின் குரலுக்குச் செவி மடுக்காததற்கும் எந்த விதமான வேறு பாடும் இல்லை.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][]


ஏன் நான் ஒவ்வொரு முறையும் போராட்டங்களுக்கு ஆதரவாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் என்னையே கேட்டுக் கொள்வது உண்டு.

இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பெசிமிஸ்ட்டா நான்?
அல்லது பாலாவை ஒரு சாடிஸ்ட் என்று சிலர் கூவுவதைப் போன்று, பலர் போராடுவதில் சுகம் காணும் ஒரு சாடிஸ்டா நான்?
அல்லது போராடி போராடி அடி வாங்கி வீங்குவதில் சுகம் காணும் மசோக்கிஸ்டா?
பெசிமிஸ்டும் இல்லை சாடிஸ்டும் இல்லை - ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

ஜனநாயக நாட்டில் தங்களது அங்கீகரத்தையும் உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்று மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிற சாதாரண இந்திக் குடிமகன்.

எதெல்லாம் எம் இனத்திற்கான அவமானமாக இருக்கிறதோ - எப்போதெல்லாம் நாம் அழிக்கப்படும் சூழலில் இருக்கிறோமோ - ஆபத்தான சூழலில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த ஜன நாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துப் போராடும் மக்கள் இந்த நாட்டின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை நீர்த்துப் போய் விடக் கூடாது என்று நினைக்கும் குடி மக்களின் இனத்தில் நானும் ஒருவன்.

இந்தி நாடு என் தாய் நாடு இல்லை என்றாலும் அது என் நாடு என்று நினைக்கும் சில கோடிகளில் நானும் ஒரு கடைக் கோடி.

நம்மைக் காப்பாற்ற இன்னொரு காந்தியோ இன்னொரு காமராஜரோ வருவார் என்று காத்துக் கிடப்பதைக் காட்டிலும், ஒன் மேன் ஆர்மியில் நம்பிக்கை இழந்த ஆனால் மக்களின் மகத்தான சக்தி மீது நம்பிக்கை கொண்டவன்.

ஐந்து வருடத்திற்கு மட்டும் அரசியல் என்று மக்கள் நினைப்பதைத் தாண்டி, அரசியல் தளத்தில் மக்கள் தொடர்ந்து பங்கெடுக்கிற குடிமக்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் போல் ஒருவன்.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]



இந்த தமிழின எழுச்சி மிக அவசியமானதும் மிகவும் தேவையானதும் கூட.
நான் இந்த எழுச்சி அவசியம் என்பதனால் தமிழகம் பிரிந்து விட வேண்டும் என்று எந்த விதத்திலும் நினைக்க வில்லை. இந்தி(யா) என்கிற எமது நாடு பிரிந்து போய் விடக் கூடாது என்பதிலும் நான் உறுதியாய் இருக்கிறேன்.

இது மற்ற மாநிலங்களில் எல்லாம் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும், அவர்களது சொத்துக்களை சுரண்டிக் கொழுக்கும் நம் பிற இனச் சகோதர்கள் கொக்கரிக்கும் நாட்டு ஒற்றுமை அல்ல. ஒரு நாடு என்பது எல்லா இனங்களையும் மதித்து நடக்க இந்த நாடு உலகத்திற்கு இன்னும் ஒரு மாதிரிகையாய் இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே.

இந்த எண்ணம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கிற எல்லா இனத்தவருக்கும் வர வேண்டியது அவசியம் -    கொழுப்பதற்கு மாத்திரம் அல்ல.  இதைக் குடிமக்கள் மட்டுமல்ல ஆள்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால் இது இன்னும் இந்தியா என்பதைத் தாண்டி யு.எஸ்.ஐ. -யுனைட்டட்  ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்கிற இது அழைக்கப் பட வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். 

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பில்லா வண்ணம் அதே சமயத்தில் இன்னும் அதிகமாக இனங்கள் மதிக்கப் படுவதற்கும், தங்களது சுதந்திர உணர்வுகளோடு வாழ்வதற்கும் யு.எஸ்.ஐ. வழிவகுக்கும் என்றே நம்புகிறேன். எனவே ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா என்பதை வலியுறுத்துவதே நல்லது என்று கருதுகிறேன். அதற்கான முதல் படியாகவே இன எழுச்சி என்பதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில் எந்த விதத்திலும் தனி இனம் ஒன்று ஆட்சி அமைப்பது என்பது மெஜாரிட்டேரியன் ஆட்சியாகத்தான் அமையும். அதைத் தவிர்க்க வில்லை என்றால் அது பாசிசத்திற்கே வழி வகுக்கும். ஹிட்லர் ஆட்சி செய்ததைப் போல அல்லது ஸ்டாலின் போல. பாசிசம் என்பது எந்த ஆட்சி தத்துவத்திலும் சாத்தியம் என்பதே நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

தனி இனங்களின் அங்கிகாரம் மதிக்கப் படவில்லைஎன்றால் இந்தியா பாசிசப் பாதையில் மிக வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். அது கூடிய விரைவில் இன்னுமொரு ஹிட்லர், இன்னுமொரு ராஜ பக்சேவை நான் இந்தியாவில் சந்திக்க வைக்கும். அப்போது நாம் கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. - வலைகள் கூட முடக்கப் படலாம். வாய்கள் ஒட்டப் படலாம், கால்கள் ஒடிக்கப் படலாம், கரங்கள் முறிக்கப் படலாம் - அப்போது வெறுமனே ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வாய் திறக்கும் ஜன நாயக குடி மக்களாக இருப்பார்கள் இந்தியக் குடிமக்கள். இதைத்தானா நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரும்புகிறோம்?

[[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]


16.3.13

மாணவர் எழுச்சி

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் இயக்கம் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதமும் அதைத் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபடுவதைப் பார்க்கின்ற போது, எந்த அளவுக்கு நம்மைச் சுற்றியிருக்கிற பொது நலவாதிகள் 'பொது நலனை விட்டு அன்னியப் பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
அரசியல் வாதிகள், பொது நல வாதிகள் மாணவர்கள் தங்களது எல்லைகளை மீறுகிறார்கள் என்று உளறுவதை நிறுத்தி விட்டு இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வது நல்லது.

=============================================
இந்திய அரசிற்கு எந்த வித போராட்டமும் அரசின் கல்லைக் கரைக்காது. 
ஆனால் இந்தியாவைத் தாண்டி இண்டர்நேஷனல் அரங்கில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அதைத் தான் இந்தப் போராட்டம் மனதில் வைத்துச் செயல் பட வேண்டும்.

================================================

தமிழக முதல்வர் புலி குட்டிகளுக்குப் பெயர் சூட்டிய நிகழ்வுக்குப் போக முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.  ஒரு இயக்கத்தையே அழித்து விட்டு குட்டிகளுக்குப் பெயர் சூட்டல் 

================================================

இந்திரா காந்தி என்றால் எமர்ஜென்சி ஞாபகம் வருவது போல மன்மோகன் -சோனியா என்றால் தமிழின அழிப்பு - ஊரடங்கு உத்தரவு தான் நினைவுக்கு வரும் போல... தமிழக அரசும் சேர்ந்து கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடுவதும், ஊரடங்கு உத்தரவிடுவதும் ... இ.கா. தேவலை என்றே தோன்றுகிறது.

================================================

இந்திய அரசு ஒரு மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அரசு. அதற்கு தமிழ் மீனவர்கள் வரிசையாகக் கொள்ளப் பட்ட போது அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருந்தது. இப்போது இரண்டு மீனவர்கள் கொள்ளப் பட்ட வழக்கில் இத்தாலிய வீரர்கள் திருப்பி அனுப்பப் படாததை கண்டித்து இத்தாலிய தூதர் நாட்டை விட்டுச் செல்லத் தடை - பிரதமர் இத்தாலிய அரசை கண்டிக்கிறார். அது நாட்டின் கௌரவத்தை பாதிக்கும் செயலாம்.

இதே இந்திய மண்ணைச் சார்ந்த மீனவர்களை சிங்கள அரசு சுட்டுக் கொள்கிற இதில் எதயாவது இந்த அரசி செய்திருக்குமா? இத்துனூண்டு இலங்கை அரசை செல்லமாய்க் கேக்கக் கூட நமக்கு நாதியில்லை. இத்தாலிக்கு சவால் வேறு. ஒருவேளை நேரடியாகக் காசை வேறு எங்கும் இறக்கி விட்டார்கள் என்ற கவலையா என்று தெரியவில்லை.
===============================================

இந்த மாணவர் எழுச்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நிறையத் தடைகள் வரும். பிரிக்க சதி நடக்கும். அடக்க ஆள் வருவார்கள். குற்றம் சாட்டுவார்கள் . குறை கூறுவார்கள்.

ஆனால் இந்த மாணவர்கள் கொண்டிருக்கிற ஈரம், உரம், இன உணர்வு, போராட்ட குணம், நீதிக்கான தாகம் இவைகளைப் பார்க்கின்ற போது -- இது எதுவும் இல்லாத நாம் அவர்களின் ........ .......... ......... ....

அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் உபத்திரவம் பண்ணாமல் இருந்தாலே போதும்.



27.1.13

தடை: விஸ்வரூப வெற்றி


கமல்ஹாசன்
ஒவ்வொரு திரைப் படம் எடுக்கும் போதும் 
ஏதாவது ஒரு சிக்கல், தடை என்று ஏடாகூடமாக 
மனிதன் மாட்டிப் போகிறார். 
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல 
எனக்கு ஒண்ணுமே ஆகுறதில்ல - ன்னு 
சொன்ன மனுஷனுக்குத் தான் இப்படி ஆகுது.

  • சண்டியர், ஹே ராம், விஸ்வரூபம் - வரிசையா வந்து மாட்டுது. ஒவ்வொன்றின் பின்புலத்திலும் உள்ள சிக்கல்கள் வெவ்வேறு என்றாலும், இந்த நேரத்தில் ஒரே ஒரு செய்திதான்.  திரைப்படங்களுக்குத் தடை என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதில்லை. 
  • திரைப்பங்களையே தடை செய்வதே நல்லதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். என்னைப் போல பல பிரபல அரசியல் வாதிகளும் நினைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அது சாத்தியப் படாது என்பதனால் சில திரைப் படங்களை தடை செய்வோம் அல்லது சில வாரங்கள் தடை செய்வோம் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். இது நல்ல எண்ணத்தினால் அல்ல - அரசியல் தந்திரம், மற்றும் வியாபார நஷ்டம், அரசியல் பழி வாங்கல் என்பதெல்லாம் இதன் பின் அடக்கம். 
  • இதில் கமல் 'நல்லவரா கெட்டவரா' என்பதெல்லாம் இந்த விவாதத்திற்கு உட்பட்டதல்ல. இந்தத் திரைப் படத்திற்கு தடை சரியா இல்லையா என்பதுதான். டாம் படத்திற்குத் தடை என்ற போதும் எனது கருத்து இதுவாகவே இருந்தது. கேரளா அரசின் கொள்கை, அது விரிக்கும் வலை தவறு என்பது தெரிந்தாலும் அதற்கானத் தீர்வு என்பது படத்தை தடை செய்வதில் இல்லை, அல்லது தீர்வு அது இல்லை என்றே சொல்லியிருந்தோம்.
  • ஒரு படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் சுதந்திரம் இங்கே பாதுகாக்கப் பட்டு விடுமா? இந்தத் திரைப் படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று நினைத்து விட முடியுமா? அதுதான் உண்மையெனில் அயோத்திக்கு எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும். அரசியல்வாதிகள் மக்களை ஒரு மாயையில் வைப்பதற்கு இது போன்ற உப்புச் சப்பில்லாத விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் கருத்துக்குச் செவி கொடுக்கிறோம் என்ற ஒரு செய்தியை வெளியில் செய்து விட்டு மறைமுகமாய் தங்களது அரசு இயந்திரங்களை அவர்களுக்கு எதிராய் முடுக்கி விடுவார்கள். திரைப் படங்களைத் தடை செய்வதோடு நமது தார்மிகக் கடமை முடிந்து விட்டது என்று நாமும் ஒதுங்கிப் போவோம். இதைத் தானே அவர்கள் நினைக்கிறார்கள். இனி அடுத்த முறை தேர்தலில் இஸ்லாமிய நண்பர்களின் ஒட்டு ஒட்டு மொத்தமாய் மோடியின் சகோதரிக்கு கிடைக்கும்.
  • இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் என்ற ஒரு கேவலமான ஒரு படத்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்த போது அதில் நபிகளை மிகவும் தவறாகச் சித்தரித்து இருக்கிறார்கள் என்பதில் ஒரு நியாயம் இருந்தது. அது எந்த விதமான தயாரிப்பும் இன்றி, அசிங்கமாக சித்தரிக்கப் பட்ட படம் என்பதில் அதன் தடையை நாம் நியாயப் படுத்த முடியும். எந்த விதமான காத்திர முகாந்திரமும் இன்றி கமலின் திரைப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. 
  • ஒரு படத்தில் ஒரு மதத்தவரை எப்போதும் திவிரவாதிகளாகக் காட்டுவது தவறு. ஆனால் ஒரு திரைப் படத்தில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டால் அது அப்படியே உண்மை என்ற அர்த்தம் இல்லை. அல்லது இந்திய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் படங்கள் வந்தால் அதற்கான எதிர்ப்புக் குரல் நிச்சயமாய் எல்லாரிடமிருந்தும் வரும். 
  • சரி ஒரு கேள்வி - இந்தியத் தமிழக அரசியல் வாதிகள் எல்லாரையும், கேவலமான பொறுக்கிகளாக, லஞ்சத்தில் ஊறிப் பெருத்த பெருச்சாளிகலாக காட்டும் திரைப் படங்கள் அனைத்தும் உண்மைதானே.   காவலர்கள் பெரும் கேடிகளா...அப்புறம் ஏன் எல்லாத் தமிழ் படங்களையும் தடை செய்யச் சொல்லி எந்த அரசியல்வாதியும் வரிந்து கட்டுவதில்லை?
  • எல்லாருக்கும் எல்லாருடைய கருத்துக்களோடும் உடன்பாடு இருப்பதில்லை. கமலின் பல கருத்துக்கள் எனக்கு உடன்படாதவைகளே. பல திரைப் படங்களின் கருத்துக்கள், அதன் கருத்து இவைகளோடு கூட உடன் பாடு இல்லைதான். அதற்காக அந்த மனிதன் ஒரு கருத்தை சொல்லக் கூடாது என்கிற உரிமை நமக்கில்லை என்றே கருதுகிறேன். அதே சமயத்தில் அந்தக் கருத்தை எதிர்க்கும் உரிமையும் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதிர்ப்பு என்பது தடையில் இல்லை... 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த நேரத்தில கமல் பாடின இந்தப் பாட்டை
பாக்கணும் போல இருக்கு,
"அடமேன்ட்டா நாங்க நடை போட்டா 
தடை போட நீங்க கவர்ன்மெண்டா 
தடா உனக்குத் தடா" 

இதே நேரத்தில் கமலைப் பார்த்து 
இந்தப் பாடலைப் பாட வேண்டும் போல இருக்கிறது.

"போனா போகுதுன்னு விட்டின்னா 
கேனன்னு ஆப்பு வப்பாண்டா"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குறிப்பு: 
பதிவு என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது என்பவர்கள் இதைக் கமல் பற்றிய பதிவு என்பதை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.
[அவசரத்துல ஒழுங்கா எழுதலை என்பதை மறைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.]

தொடர்புடைய சில பதிவுகள் :

அன்பின் வன்முறை இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் பற்றியது 

டாம் படத்தை தடை செய்தது தவறு


11.8.12

டெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்


டெசோ மாநாடு பற்றி எல்லாரும் எழுதி எழுதி கிழித்து எரிந்து விட்டார்கள். கலைஞர் மட்டும் வலைப்பூக்களைப் படிப்பவராக இருந்தால், எழுதியிருப்பதை படித்து இருந்தால் அவர்மேலே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும். நிறையப் படிப்பவர் அவர். அதனால் பத்திரிகைகளில் வந்திருப்பதைப் பார்த்தும் அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் கூட கொஞ்சமாவது மாற்றம் தெரிந்திருக்கும். அதற்கெல்லாம் அசருபவர் அல்ல. சரி இது கலைஞர் பற்றிய கட்டுரை அல்ல.  அதுமட்டுமல்லாமல் டெசோ மாநாடு நடத்தும் அருகதை, கலைஞருக்கோ அல்லது வேறு யாருக்கோ இங்கே இருக்கிறதா என்பதைப் பற்றியும் நான் எழுதப் போவதில்லை.

ஆனால் டெசோ மாநாடு நடத்துவதற்கான எதிர்ப்பு ஆள்பவர்களிடமிருந்து வருவதைக் கண்டுதான் எழுதவேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.

டெசோ மாநாட்டை புறக்கணிப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அது இதுவரை அவரை நம்பிக் கேட்டோம் என்பது தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே இதை மறுப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. 

ஆனால் அனுமதி மறுப்பதற்கான உரிமை அரசிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அரசு சொல்லுமேயானால், அது எந்த அளவுக்கு இலங்கையின் மீது அனுசரணையோடு இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று நாராயண சுவாமி சொல்லியிருக்கிறார். கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுவதற்கு இதுவே மேல்தான். ஆனால் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த இலங்கைக்கு கைகட்டும் காங்கிரஸ் அங்கே சீனா வந்து ஆட்டம் போட்ட பிறகுதான் ஆஹா சூடு வைத்துக் கொண்டேமே என்று யோசிக்கும்.

எல்.டி. டி. யை ஆதரிப்பது குற்றம் என்றும் சொன்ன போதும் கூட எல்.டி.டி. ஐ ஆதரித்துப் பேசக்கூடாது என்றுதான் அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது அந்த வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது புரிகிறது.  கலைஞர் வேடதாரி என்பது எல்லாருக்கும் தெரியுமானால், எதற்கு இந்த அரசாங்கங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு இதை எதிர்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசு அங்கே பங்கேற்கும் நபர்களை தான் தனியாக கவனிப்பேன் என்கிறது. சிலருக்கு அங்கிருக்கிற இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுக்கிறது. இந்திய அரசு 'ஈழம்' என்பதை பயன்படுத்தக் கூடாது என்கிறது. தமிழக அரசு சென்னையில் இதை நடத்தக் கூடாது என்கிறது. 

ஆகமொத்தம் காரணம் ஒன்றுதான்: ஈழம் பற்றிப் பேசினால் அதன் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதில் நாம் கலைஞரை விமர்சிக்கிறோம் என்று இந்த மாநாட்டின் எதிர்ப்பில் -  "ஈழம்" மீது நமக்கு இருக்கும் வேட்கையை குறைத்து விடவும்,இனி யாருமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையயைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேறு யாரும் கூட ஈழ மாநாடு என்கிற ஒன்றை நடத்த முடியாது. உண்மையான ஈழ ஆதரவாளர்கள் கூட. 

அரசியல்வாதிகளில் பச்சோந்திகள் தவிர வேறு யாரும் இல்லை. இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா? ஒவ்வொருவருக்கும் வயதுதான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாகூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனால் அவர்கள் ஈழ ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அம்மாவைப் பாராட்டி ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, பாராட்டி, .... கொஞ்ச நாளிலேயே அம்மா எல்லாருக்கும் ஆப்பு வைத்தார்கள். அதே அம்மா புரானிகள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள். 

கலைஞர் மாநாடு நடத்த வேண்டும் என்றோ, கூடாது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இதுதான். 

சுதந்திர நாட்டில் ஒருவன் தான் விரும்பிகிற, நம்புகிற கொள்கையை வெளிப்படுத்துவதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை மறுப்பவர்கள் அரக்கர்கள் - அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் கூட.

இந்தக் கருத்துச் சுதந்திரம் மிதிக்கப் படும் நேரத்தில் அது கலைஞருக்கு எதிரானது என்று நாம் மகிழும் வேளையில், மிதிக்கும் கால்கள் நமது தலையின் மேல் இருப்பதை கவனிக்க மறக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத இந்த இந்தியா நாடு விரைவில் 
சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறது. 

10.8.12

அன்னா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்



அன்னா பற்றிய தொடர் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலெழுந்த வாரியாக படிக்கிற செய்திகள் நம்மையும் உள்ளே இழுக்கின்றன. ஆனால் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தின் கட்டமைவு பற்றிய சில கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. 
ஏன் அன்னாவை எதிர்க்கும் அருந்ததிராயைக் குறி வைக்கிறார்கள் ஆனால் சோ - வை விட்டு விடுகிறார்கள்?

  • ஆதரவாளர்கள்    


அன்னா ஆதரவாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் [இன்னும் நுணுக்கமாகப் போனால் இன்னும் நிறைய என்றுதான் நான் கருதுகிறேன்]. 

முதல் வகையில் குரல் கொடுப்பவர்கள் அன்னாவோடு ஒட்டி நின்று ஊழல் ஒழிய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள். அதனால் அன்னா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுகிறவர்கள். அதனாலேயே அவர் முற்றிலுமாகக் காந்தியவாதி என்பதை என்பிப்பதற்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பின்பற்றுபவர்கள். இதில் சிலர் அறிவு ஜீவிகள். பெரும்பான்மையானவர்கள் சாதாரண மக்கள், மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள்.
 
ஆதரவாளர்களில் மற்றொரு வகை ஊழலுக்கு எதிர்ப்பு என்பது சரியானதுதான்; அன்னாவைப் பின்பற்றுவது அவசியம்தான் என்பதோடு, அதிலும் உள்ள சிக்கல்கள் களையப்படவேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் ஊழல் என்பது மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனை அல்ல; மாறாக அதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். பிரச்சனை என்னவென்றால் தள்ளி நின்று அண்ணாவை ஆதரிக்கும் இந்த வகை ஆதரவாளர்களையும் அன்னா எதிர்ப்பாளர்களாகவே முதல் வகை ஆதரவாளர்கள் கருதுவதுதான். 

  • எதிர்ப்பாளர்கள் 

ஏன் இந்தச் சிக்கல்? இதைப் புரிந்து கொள்ள அன்னா எதிர்ப்பாளர்களையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கொள்கை பிடிக்காததால் அன்னாவை எதிர்ப்பவர்கள் முதல் வகை. அவர் காங்கிரசின் கைக்கூலியோ என்பதனால் பிடிக்காமல் போனவர்கள் இரண்டாம் வகை. 

முதல் வகையில், அருந்ததிராய், அருணா ராய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகை வெறுப்பாளர்கள் வரிசையில் ‘சோ’ போன்றவரைச் சொல்லலாம். குஜராத் முதல்வரைப் பற்றித் தவறாகச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை இவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றே கருதுகிறேன். 

இதில் முதல் வகை எதிர்ப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவர்கள் - மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதேபோல இரண்டாம் வகை வெறுப்பாளர்கள் இன்னும் அதிகமாகவே கவனிக்கப் பட வேண்டியவர்கள். அண்ணாவோடு ஒட்டி நிற்கும் ஆதரவாளர்கள் தள்ளி நிற்பவர்களையும் எதிர்த்து நிற்பவர்களை மட்டுமே கவனித்து இந்த இரண்டாம் வகை வெறுப்பாளர்களை /எதிர்ப்பாளர்களைப் பற்றி அதிக அக்கறையோ அல்லது அவர்களை பெரிய எதிரியாகப் பார்ப்பதை விடுத்து அருந்ததிராயை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். இதில் எந்த வித சிக்கலுமின்றி ‘சோ’ வகையறாக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் [அல்லது தப்பிக்க ஆதரவாளர் அறிவு ஜீவிகள் உதவுகிறார்களா?]. 

அருந்ததி ராய் கேட்கிற கேள்விகள் நியாயமானவை என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மனமின்றி அன்னாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது சுதந்திரப் போர் என்பது இந்தியாவிற்குள் நடக்கும் முதல் சுதந்திரப் போர்தான் – அது அரசியல் வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா அல்லது சாதிய / இந்துத்துவத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா என்பதிலும், அல்லது பழங்குடியினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லாமல் இவர்களை அன்னாவின் மீதும் காந்தியத்தின் மீதும் அவதூறு செய்வதாக அவதூறு செய்கிறார்கள் முதல் வகை ஆதரவாளர்கள். இந்தச் சிக்கலில் அன்னா ஆதரவாளர்களில் இரண்டாவது வகையாளர்கள் அருந்ததிராயின் கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளையும் சிக்கல்களையும் முன்னிறுத்துவதனால், அன்னா ஆதரவாளர்களில் இரண்டாம் வகையும் அன்னாவின் எதிரிகளாகக் கட்டமைக்கப் படுகிறார்கள்.

இதில்தான் அன்னா ஆதரவாள அறிவுஜீவிகள், இரண்டாம்வகை ஆதரவாளர்கள் மீதும், முதல் வகை எதிர்ப்பாளர்கள் மீதும் வெறியோடு இருக்கும் சூழலில் ‘சோ’ போன்றவர்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். 

  • வேண்டுகோள் 


எனவே அன்னாவை கொள்கையளவில் எதிர்க்கும் அருந்ததிராய் போன்றோரை கொடூரமானவராக சித்தரித்து, இந்துத்துவக் கொள்கை வெறியில் எதிர்க்கும் ‘சோ’ வை எந்த விதச் சிக்கலுமின்றி தப்பிக்க உதவும் முதல் வகை ஆதரவாளர்களே கொஞ்சம் விழித்தெழுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். 

இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த அறிவு ஜீவிகள் ஏற்கனவே விழித்து எழுந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. முதல்வகை அன்னா ஆதரவாளர்களும், இந்தியா இந்து என்கிற போர்வையில் மீண்டும் சாதியக் கட்டுமான மேலாதிக்கத்தை விதைக்க இந்த ஊழல் போராட்டத்தை ஆதரித்து சோ எதிர்ப்பின் வழியாய்ச் சாதிக்க நினைப்பதை இவர்கள் ஆதரவின் வழியாய்ச் சாதிக்க நினைக்கிறார்களோ என்றும் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இருந்தாலும், இதில் சாதாரண மக்கள், பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த முகாந்திரம் களைந்து போகிறது. ஆனால் அறிவு ஜீவிகளின் அந்தக் கட்டமைவில்தான் இந்தச் சந்தேகம் வலுக்கிறது.


30.7.12

பேசும்படம்

 சில சமயங்களில் படங்கள் நமது எழுத்தை விட அதிகமாக பேசும்...

முதல் படம் நேற்று டோக்கியோவில் அணு உலைகளுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்..




விபரம்: http://kgmi.com

இந்த கூட்டம் அங்கேயே பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது.

மேலும் விபரம்:
http://www.dianuke.org/



விபரம்:

http://www.theaustralian.com.au/

12.1.12

வாக்கு வாதம் - இ.க.வும் - மு. பெ யும்


தலைப்பின் நீளம் கருதி இடிந்தகரையை இ.க. எனவும் - முல்லைப் பெரியாறை  மு. பெ எனவும் குறுக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

கடந்த வாரம் ஒரு நாள் என் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது... முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அது முற்றிலும் தவறு என்று சொன்னார். கேரளா அரசியல்வாதிகளின் தவறான அணுகு முறை பற்றிப் பேசினார்.
அதே வேகத்தில் நான் கூடங்குளம் பற்றி பேச்செடுக்க அவர் சொன்னார் – “நான் கூடங்குள அணுமின் நிலையத்தை ஆதரிப்பவன் எனவே நம் வாதத்தை அப்படியே முடித்துக் கொள்ளலாம். மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாமே என்றார்.

அவர் மட்டுமல்ல பல பேர் இந்த அணுகுமுறை மட்டுமே சரி என்கிறார்கள் – அதாவது முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவை எதிர்ப்பவன் அதே சமயம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிரவனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று நான் நினைக்க பல காரணங்கள் எனக்கு தெரிகிறது.

  1. மனித வாழ்க்கையில் அச்சப் படுவது தவறு. இதுதான் ஒருவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அச்சப் படுவது தவறு என்றும் அதேபோல கூடங்குள விவகாரத்தில் மக்கள் அச்சப் படுவது தவறு என்றும் சொல்ல வைக்கிறது.
  2. இதனால் என்ன செய்ய வேண்டுமென்றால் – மனிதர்களின் மேல் நம்பிக்கை வைப்பதை விட ... தொழில் நுட்பத்தில் அறிவியல் அணுகு முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதனால்தான் .... புதிப்பிக்கப் பட்ட அணை மீது நம்பிக்கை கொள்ளாத அரசும் [கேரளா] அரசின் பாதுகாப்பாக தயாரிக்கப் பட்டுள்ள உலையின் மீது நம்பிக்கை கொள்ளாத மக்களும் தவறு என்பதினால் ஒருவர் கேரளாவையும் மறு பகுதியில் கூடங்குளம் மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  3. தேவையற்ற பண விரயம்... இவ்வளவு செலவு செய்து கட்டப் பட்ட அணை / இவ்வளவு பணம் செலவு செய்ய பட்டு கட்டப் பட்ட உலை இரண்டையும் அப்படியே கை விட முடியாது என்பதனால் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குள மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது..
  4. கூடங்குள மின்சாரம் அதிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அணை தண்ணீர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் // வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை ஆதரிக்கவும் அதே சமயத்தில் வளர்ச்சியைத் தடுப்பதை எதிர்க்கவும் வேண்டும் என்கிற அவசியத்தில் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குளத்தையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  5. இரண்டுமே பொய் பிரச்சாரம் செய்கிறது. கேரளா அணை உடைந்து விடும் என்றும் அதே சமயம் கூடங்குள உலை உடைந்து விடும் என்பதும் பொய் பிரச்சாரம்...

எனவே இது போன்ற காரணங்களுக்காக தொழில் நுட்பத்தை ஆதரிப்பவர் / அறிவியல் மீது நம்பிக்கை வைப்பவர் அனைவரும் – முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவையும், இந்தியாவின் அல்லது தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டவர் அனைவரும்... கூடங்குளத்தில் அணுஉலை வருவதை ஆதரிக்க வேண்டும் என்பதே சரி என்று நினைக்கிறார்கள்....


ஆனால் அது சரியா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்...
எனது அணுகுமுறை -
அடுத்த பதிவில்...


கொசுறு:
இத்தகைய நம்பிக்கை கொண்டோர் அனைவரும் தமிழக மக்கள் மீதும், தமிழக வளர்ச்சியின் மீதும் அக்கறை கொண்டார்கள் என்பதையும் மறந்தது விடக் கூடாது. 

7.1.12

சிறுதுளி - புத்தாண்டு ஸ்பெஷல்


அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடிக்க...
  • புத்தாண்டு இலவசப் பொருட்கள் - பொங்கலன்று தொடங்கி புத்தாண்டுக்குள் முடியும் என்று தமிழக அரசுக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • ஏதாவது தெரிகிறதா? சித்திரைப் பெருநாள் விழா என்பது மீண்டும் புத்தாண்டுப் பெருவிழாவாக மாறி விட்டது. 
    • புத்தாண்டு என்றால் அடுத்த புத்தாண்டா? [இரண்டாயிரத்து பதின்மூன்றா] 
    • அம்மாகிட்ட சில கேள்விகள் கேக்கலாம்தான் ஆனா பயமா இருக்கு..

  • "கச்சத்தீவில் மீன்பிடி உரிமை தமிழகத்துக்கு கிடையாது" 
    • உடனே இலங்கை அரசு இப்படித்தான் என்று தாறு மாறாகவெல்லாம் குதிக்காதீர்கள். சொன்னது இலங்கை அரசு இல்லை - மத்திய அரசு.
    • புத்தாண்டு உண்மை...

  • மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தென் ஆப்ரிக்கா பயணம். உர இறக்குமதி தொடர்பாக ஒப்பந்தம் போடுவதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் பயணம். 
    • பார்லிமேன்ட்லேயே பேசமாட்டார். இவர் கடல் கடந்து என்ன பேசப் போகிறார். தமிழ்நாட்டில் இருந்த எடமே தெரியலை அஞ்சா நெஞ்சன் ஆப்ரிக்காவுப் போகிறார் - சாரி தென் ஆப்பிரிக்காவிற்குப் போகிறார்.
    • தமிழகத்தில் வாய் பேச முடியாததால் நாடு விட்டு நாடு செல்கிறாரா?
    • புத்தாண்டுப் பயணம் - யார் கண்டார் புதிய உத்வேகத்தோடு காந்தி திரும்பி வந்தது மாதிரி போராட்ட உணர்வோடு வரலாம். [காந்தி மன்னிப்பாராக]

  • தமிழ் நாட்டில் வாசம் செய்யும் நம் சேர நாட்டு செஞ்சோற்று விரும்பிகள் - அதான் கேரளா தண்ணீர் தருகிறேன் என்று சொல்லுதே அப்புறம் என்ன - அப்படி என்றார்கள். 
    • அப்புறம் புதிய அணை கட்டி தமிழகம் அதை பராமரித்துக் கொள்ளலாம் என்றார் உம்மாண்டி. இன்று புதிய அணையை பராமரிப்பது கேரளத்திடமே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். புதிய அணை கட்டினால்கூட நூற்றி இருபது அடி உயரத்தை விட கூடுதலாக கட்ட மாட்டார்கள்
    • எனவே செஞ்சோற்று விரும்பிகள் அமைதியாக இருப்பதே நல்லது. பேசாமல் அவர்கள் அனைவரும் ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி மூன்று முறை ஜோதி வடிவில் காட்சி கொடுக்கும் மகரஜோதியை - காட்டிலாகா அதிகாரிகள் ஏற்றும் ஜோதியை - ஐயப்பனின் தரிசனம் என்று கொண்டாடிவிட்டு வரலாம். இன்னமும் அதைச் செய்கிறார்களே... 
    • நீதிமன்றத்தில் இதுநாள் வரை இவர்கள் தான் ஜோதியை ஏற்றியது என்று சொன்ன பிறகும், இப்படித் தேடித் தேடித் போகிற இவர்கள்தான் அறிவாளிகள் - ஒருவேளை ஐயப்பன் சொன்னால்தான் அணை கட்டுவதை விடுவார்களோ என்னவோ.
    • எல்லாரையும் மகர ஜோதிக்கு அழைத்திருப்பது - தினகரன் - விளங்கிரும்.
    • புத்தாண்டு ஏமாற்று ஜோதி 

  •  அம்மாசொன்னதாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது. பத்திரிக்கைகள் எரிக்கப் பட்டது. இது அம்மாவிற்குத் தெரியாது. [நம்பிட்டோம்] 
    • சரியா தப்பா... இரண்டு பேருமே தப்புதான். 
    • மக்கள் போராட்டம் எல்லாம் தப்பு தப்புன்னு சொன்ன மகராசங்கேல்லாம் இப்ப கம்னு இருக்காங்க. ஒன்னு புரிஞ்சு போச்சு அதாகப் பட்டது -  அமைதிப் போராட்டம் எல்லாம் ஒத்து வராது...
    • அதனால் அம்மா வழிப் போராட்டம்தான் ஒத்து வரும். ஆக இதுதான் புத்தாண்டுப் போராட்டம்.  புதிய போராட்டம்.

கொசுறு கேள்வி

அ. தி.மு.க தொண்டர்கள் எதுக்கு கோபப்பட்டார்கள்?
மாமி என்று சொன்னதுக்கா?
இல்லை மாட்டுக் கறி சாப்பிட்டாங்கன்னு சொன்னதுக்கா?
நாம எல்லாரும்தான் மாட்டுக் கறி சாப்பிடுறோம். நான் சாப்பிடுவேன். அதுக்கு கோபப் பட வேண்டிய அவசியம் இல்லை.
மாமி இல்லைன்னா - இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..
மாமிதான் அப்படின்னா கோபப் பட வேண்டிய அவசியம் இல்லைதானே?

    20.12.11

    போராட்ட வருடம் - தமிழ் கழுகுப் பார்வை - 2011 இரண்டு

    இந்த ஆண்டு தமிழகத்தைப்  பொறுத்தவரை 
    நான்கு  போராட்டங்களைக் கண்டிருக்கிறது. 
    அவை நான்கும் மிக முக்கியமான போராட்டங்கள்.

    முதலாவது - தமிழக மீனவர் போராட்டம்


    "தண்ணிரில் பிழைக்க வைத்தான் பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்" என்று ம. கோ. இராமச்சந்திரன் பாடும் பாடல் வந்து பல வருடங்கள் ஓய்ந்து விட்டது. தண்ணிரில் பிழைக்க மட்டும் இல்லை, தண்ணிரில் சுடப்பட்டு இறந்து மிதக்கும் நிலையும் இருக்கிறதே என்பதில்தான் சோதனை அடங்கியிருந்தது. இயற்கையின் சீற்றத்திற்கு மத்தியில், போராடி வாழும் மீனவர்களுக்கு சிங்கள இனவெறியர்கள் எல்லைப் பிரச்சனைஎன்று கொன்று குவித்த மீனவர்களின் கண்ணிற் வாழ்க்கை கேட்பார் யாருமின்றி - தமிழகம் இந்திய எல்லைக்குள் இருப்பது என்பதை மறந்தே வாழ்கிறார்கள் நாடாளும் அதி புத்திசாலி நண்பர்கள்.

    கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி மீன் பிடிக்கச் சென்ற சிலர் மீது கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடித்திருக்கிறது இலங்கை அரசு. கேட்பார் யாருமில்லை. 

    பாதிக்கப் படும் பகுதிகள். ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டினம் என்று இலங்கையை ஒட்டிய பகுதிகள் - இன்னும் சொல்லப் போனால் - தென் தமிழக கடற்கரையோரப் பகுதிகள்.
    இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    இரண்டாவது - இடிந்த கரை போராட்டம்


    "தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்.' என்று கடற்கரையை ஒட்டியவர்கள் மட்டுமல்ல - கடற்கரை தாண்டிய மக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒரு மிகப் பெரிய அரக்கன் எப்போதும் தூக்கி நிறுத்திய அணுகுண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அது எப்போது வெடிக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள இராணுவமாவது ஏ.கே. 47 என்கிற நிலையில் சிலருடைய வாழ்வோடு முடிந்து போகிற ஒன்று. ஆனால் இது எப்ப வெடிக்கும் எப்படி வெடிக்கும், எத்தனை பேரைக் கொண்டு போகும், எத்தனை வருடங்களுக்கு இருக்கும், எத்தனை தலை முறைக்கு அந்த விளைவுகள் எதுவும் தெரியாது...

    இது மட்டுமல்ல - இந்தப் பிரச்சனையோடு பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விவகாரங்கள் வெளியில் வந்த பிறகுதான் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  வெளிவரும் கதிர் வீச்சுகள் பற்றிய உண்மையும் அதோடு சேர்ந்து எந்த அளவிற்கு தமிழகத்தின் வடக்குப் பகுதியும் ஆபத்தில் இருக்கிறது என்கிற உண்மை வெளிவந்தது. ஆனாலும் இந்தப் போராட்டங்களைக் கடுமையாக எதிர்பவர்களும் இல்லாமல் இல்லை.

    கல்பாக்கம் பகுதியில் உள்ள கதிர் வீச்சு அபாயங்கள் குறித்து இங்கே அறியலாம்.

    பாதிக்கப் படும் பகுதிகள் - தூத்துக்குடி, அதோடு சேர்ந்த கிராம நகரப் பகுதிகள். இவைகளில் தான் ஏற்கனவே பல்வேறு நச்சுப் பொருள்கள் காற்றில் கலந்து விளைவை உருவாக்கும் ஆலைகள் இருப்பதும் கவனிக்கப் பட வேண்டியிருக்கிறது.

    மூன்றாவது -  அணை காக்க கேரளாவிற்கு எதிரான போராட்டம்

    இதுவும் தண்ணீரை மையப் படுத்திய போராட்டமே - தண்ணீர் இல்லாமல் இறக்க வைக்கிற கொடுமை. ஒவ்வொரு முறையும் தமிழக கேரளா உறவில் ஏதாவது விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

    இதைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியாகிவிட்டது.

    பாதிக்கப் படும் பகுதிகள் - மீண்டும் தென் தமிழகமே....




    முக்கியமான மற்றொரு போராட்டம்
    மரண தண்டனைக்கு எதிரானது






    மற்ற மூன்று போராட்டங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாதது போலத் தோன்றலாம். ஆனால் இந்த மரண தண்டனை எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழர்கள் என்பதால் - நியாயமற்ற முறையில் வழங்கிய தீர்ப்பு என்கிற வகையில் இது முன்னெடுக்கப் பட்டது.

    தமிழக மீனவர்கள் என்பதனால் அரசு எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை.  இடிந்த கரையிலும் ஏற்கனவே கல்பாக்கத்தில் தொடங்கிய அந்த அதே கதிர்வீச்சை தமிழகத் தின் தென் பகுதிகளுக்கு பரப்புவதில் இன்னும் ஆர்வத்தோடு இருக்கிற மத்திய அரசு... முல்லைப் பெரியாறு அணையிலும் - வாய் திறந்த ப. சி கூட வாபஸ் பெரும் விதத்தில் மத்திய காங்கிரசும் கேரளா காங்கிரசும் கூட்டணியில் இருக்கிறது. இவைகள் எல்லாவற்றிலும் தமிழினத்திற்கு எதிரான போக்கே இருக்கிறது என்பதைப் பார்க்கும் போதே இந்த கடைசிப் போராட்டத்தின் உண்மை உங்களுக்குப் புரியலாம்.


    இதனால் அறிவது என்னவென்றால்:
    இந்த ஆண்டு தமிழர் அழிப்பை பல்வேறு வழிகளில் பலரும் முயற்சி செய்வது போல தமிழர்களின் விழிப்புணர்வும் ஆச்சரியப் பட வைக்கிறது.
    எது எப்படியெனினும் - தமிழகத்தை சுற்றி ஆபத்து காத்துக் கொண்டே இருக்கிறது.

    இரண்டாயிரத்துப் பதினொன்று - போராட்ட வருடம்

    ஆபத்து அதிகமாகிக் கொண்டேயும் இருக்கும் வருடம்.





    எத்தனை போராட்டங்கள் என்றால் என்ன தமிழின அழிப்புத் தொடருமா அல்லது வாழ்வு விடியுமா?.


    கொசுறு:
    இந்த ஆண்டு தொடங்கிய முதற் போராட்டம் தொடங்கி அனைத்துப் போராட்டங்களும் இன்னும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

    ஒரு வேளை - தெலுங்கானா மாதிரி பிரிக்கும் போராட்டம்தான் தீர்வா?????


    நன்றி:

    அனைத்து புகைப் படங்களும் வலைப் பூக்களின் முகவரி கொண்டு அப்லோடு [தரவேற்றமா?] செய்யப் பட்டிருக்கின்றன. அந்தந்த வலை உரிமையாளர்களுக்கு நன்றிகள்.
    தொடரும் ...