31.10.11

கல்பாக்கம் பாதுகாப்பானதா?


கல்பாக்கம் அணு மின் நிலையம் பற்றிய சில செய்திகளை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக சிலர் எழுப்பும் வாதம் - கல்பாக்கம் ஒழுங்காக இயங்க வில்லையா?

பூவிலகின் நண்பர்கள் கடந்த இருபத்தி இரண்டாம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ரமேஷ் என்பவர் பேசிய காணொளியை கீழே இணைத்துள்ளேன். அதில், எப்படி மாநில அரசில் உள்ளவர்கள் அணுஉலை குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாமே இருந்தார்கள் என்றும், கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைத்த பொது பின்பற்றப் படாத முறைகள் குறித்தும், மாதிரி எவாகுவேஷன் செய்த போது ஏற்பட்ட குளறு படிகளும், சுனாமி வந்த போது வெளிவராத உண்மைகளும், பாதுகாப்பற்ற சூழலையும் சுனாமி வந்ததற்குப் பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் சுனாமி அலெர்ட் வந்தபோது எப்படி மந்தமான சூழல் அங்கே இருந்தது என்பது பற்றியும் தனது அனுபவங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
அது மட்டுமல்ல,
கல்பாக்கம் சுனாமி எல்லைக்குள் வராது என்று சொல்ல முடியாது. மேலும் எரிமலைக் குழம்புகள் வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்பதும், அந்த எல்லைக்கு அருகில் கல்பாக்கம் இருக்கிறது என்கிற புதிய தகவலையும் தருகிறார்.
கொஞ்சம் ஸ்லோவான பேச்சுதான் ... ஆனால் தகவல்கள் அவசியமானவையே.






புகழேந்தி அவர்களின் உரை..


29.10.11

என் அறிவில் ஏழாம் அறிவு...

  • தென் தமிழகத்திலிருந்து இந்தியாவிலிருந்து, கஜினி மூலம் வட இந்தியாவிற்கு பயணம் செய்த முருகதாஸ், காஞ்சீபுரத்திலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரை  கதைக் களனாக வைத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வெறும் திரைப் படமாகக் கருதுவதா அல்லது வரலாற்று ஆவணப் படமாக எடுத்துக் கொள்வதா என்று குழப்பம்தான் நீடிக்கிறது.
  • இந்தியாவை அடிமைப் படுத்த "பயோ போரை" கையிலெடுக்கிறது சீனா. அதற்குத் தடையாக ஒருவரின் ப்ராஜெக்ட் இருக்குமோ என்பதற்காக அவரைக் கொலை செய்வதற்கு சீனாவிலிருந்து ஒருவர் சென்னை வர - இந்தியா அடிமைப் பட்டதா இல்லையா என்பதுதான் கதை. 
  • ஹீரோ ஒருவரின் முயற்சியில் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் என்கிற சங்கரின் ஒற்றை வரிக் கதை போல இதுவும் என்று சொல்லலாம். இந்தியன் தாத்தா ஊழலை ஒழித்த மாதிரி, அந்நியனில் மீண்டும் ... .. அப்புறம் சிவாஜி கறுப்புப் பணத்தை ஒழித்த மாதிரி, . .... இதில் முருகதாஸ் ஒரு நாட்டையே நோய் நொடி இல்லாமல் செய்துவிடும் கதை. சமூக நோய் என்பதற்கு பதில் இதில் உடல் நோய்...
திரைப் படம்
  • திரைப் படம் என்கிற நோக்கில் பல்வேறு குறைபாடுகள் என்பதை பலர் சுட்டிக் காண்பித்து விட்டார்கள் என்பதனால் மேற்கொண்டு என்ன சொல்லுவது? 
  • சென்னை என்கிற ஒரு நகரத்தில் எந்த விதமான கட்டுப்பாடுகளுமின்றி வலம் வர வேண்டுமானால் சீனக் காரனாகத்தான் இருக்க வேண்டும் போல் இருக்கிறது. எத்தனைக் குழப்பங்களுக்கு மத்தியிலும் எந்தவிதமான எதிர்ப்புமின்றி சுற்றித் திரியும் அந்த சீன பாத்திரம் ..... சரி திரைப் படம் தானே என்று விட்டு விடலாம்.
  • சென்னை  விமான நிலையத்தில் குடியேறல் பகுதி இவ்வளவு ஆடம்பரத்தோடு மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று இருக்கிறதைப் பார்க்கும் போது சரி இதுவும் சினிமாதானே என்று விட்டு விடலாம்.
  • வசியம் என்பது இவ்வளவு எளிதில் சாத்தியப்படும் எனில், நண்பர் ஒருவர் கேட்டிருப்பது போன்று எதற்கு வைரஸ் கதைகளெல்லாம் - வசியம் ஒன்றின் மூலமே எல்லாரையும் அழித்து விடலாம் - ஆனால் அதனால் சீனாவிற்கு இந்தியா அடிபணியாது என்பதனால் இந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்கும் வசதி இருக்கிறது.
  • இவ்வளவு எளிதாக ஐ.ஐ.டிக்குள் நுழைய முடியுமென்றால் வெளி நாட்டுக் காரர்கள் கூட இங்கே வந்து ஆராய்ச்சி செய்யலாம் போலிருக்கிறதே. வெளியிலிருந்து யாரும் வர முடியாது ஆனால் உள்ளே உள்ள செகுரிடி கூடவா? அது மட்டுமல்ல ஜெனெடிக்  இஞ்சினியரிங்கில் ஒரு சோதனைக் கூடத்தில் அவர்கள் சொல்லுவது போலவே இன்னும் ஒரு நாள் மீதமிருக்கிற நிலையிலேயே, வெயில் படக் கூடாது என்பதையும் தாண்டி, {சுடிதார் நிழலையும் தாண்டி} - அரவிந்த் மீண்டு வருவது... இது திரைப் படம் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது.   மைனாரிட்டி ரிப்போர்ட் என்கிற டாம் க்ரூஸின் படம் ஒன்றில் இதே போல யாருக்கும் தெரியாமல் கண் மாற்று சிகிச்சை செய்கிற காட்சியை நம்புகிற மாதிரி காண்பித்திருப்பார்கள்.  இங்கே மிகப் பெரிய சோதனை முயற்சியை - ஜஸ்ட் லைக் தட் என்பது ... சரி படம்தானே...
  • இது போல லாஜிக் இல்லாத கதையமைப்பு... சுருக்கமாய் சொன்னால் இது "லாஜிக் இல்லா மாஜிக்" - ஆனால் அந்த மாஜிக்கையும் ஒழுங்காய் செய்ய வில்லை.
  • சூர்யாவின் நடிப்பு அருமை. கண்கள் நிறையப் பேசுகிறது. அதென்ன கஜினியில் நயன் தாராவின் ஆராய்ச்சிப் பொருள் சூர்யா... இங்கே ஸ்ருதியின் ஆராய்ச்சிப் பொருள் சூர்யா...   பெண்களின் ஆராய்ச்சிப் பொருளா சூர்யா!
வரலாற்று ஆவணப் படம்

  • இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் தசாவதார முதல் இருபது நிமிடங்களை விட இது பல மடங்கு பரவாயில்லை என்றே தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளை நன்றாகப் பிரசன்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பிறகு வருவது தான் மேலே சொன்னது. இன்னும் கடினமாய் உழைக்க வேண்டியிருக்கிறது. 
  • அங்கே உலகத்தையே அழிக்க ஒரு "பயோ போர்" இங்கே இந்தியாவை அழிக்க ஒரு பயோ போர். இரண்டிலுமே காட்டிக் கொடுக்கும் விஞ்ஞானிகள் தமிழர்கள்.  இந்தக் கொடுமைய எங்கே போய் சொல்லுவது?

கேள்விகள் .... கேள்விகள்  
அதற்காக இந்தப் படத்தில் எதுவுமே இல்லை என்று சொல்லி விடமுடியாது. சொல்லுகிற உண்மைகள், கருத்துக்களைப் பதிவு செய்ததில்தான் தகராறே தவிர சொல்லிய கருத்துக்கள் பல கவனிக்கப் பட வேண்டியவை - அவை நிறைய, நிறைய உண்டு.

  • வீரமாமுனிவர் என்று அழைக்கப் படுகிற ஒருவர் - சதுரகாதி, தேம்பாவணி மற்றும் கலைச்சொற்கள் அகராதி என்று பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதினர். ஆனால் அவர் இதாலியிலிருந்து வந்தவர். இத்தாலியில் யாருக்காவது  பெஸ்கி என்று யாராவது தெரியுமா என்றால் நிச்சயம் தெரியாது. இத்தாலியில் அந்த வரலாறு இருக்குமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் மொழி தெரியாத ஒருவர் வந்து மற்றொரு நாட்டிற்குச் சென்று பணிபுரிவதேல்லாம் எல்லாக் காலங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக நடப்பதுதான். ஆனால் நாம்தான் அவைகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
  • எனவே போதி தர்மரைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தது குறித்து வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை. இப்போது தெரிந்து கொண்டோம் அதைப் பதிவு செய்துகொள்வோம்.
  • இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளையும் இன்னும் பல ஆராய்ச்சிகளுக்கும் இது இட்டுச் செல்ல வேண்டும். அவர்களுடைய ஆராய்ச்சியில் வெறும் கூகுளிங் மட்டும் செய்தே உண்மையைச் சொல்லுகிறார்கள். ஆனால் அது மட்டும் உண்மையைச் சொல்லி விடாது. ஏனெனில் அது எல்லாவற்றையும் காட்டும். ஆழ்ந்த ஆராய்ச்சி தேவைப் படுகிறது [கூகுல் பற்றி எழுதி விட்டேன் அது என்னைத் தடை செய்து விடுமோ - தெரியவில்லை. உடான்சுக்கு எதிராக நான் ஒன்றுமே எழுதவில்லை ஆனால் ஏனோ  தெரியவில்லை என்னை ப்ளாக் செய்திருகிறார்கள். எதுவும் எழுத முடியவில்லைடா சாமி ... ]

  • போதி தர்மர் மட்டுமல்ல அவரோடு சேர்ந்து கற்றுக் கொண்ட, இங்கேயே இருந்த மக்களின் வரலாறு என்ன ஆனது? இங்கே அது வளராமல் போனதற்கான காரணம் என்ன? அறிவியல் நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகளாக மாற்றியது எது? அல்லது மாறிப் போனது எப்போது?, என்கிற நிறைய கேள்விகளை இது கொண்டுவருகிறது.  அவைகளை மீண்டும் எழுப்புவது, ஆய்வது நமது கையில்தான் இருக்கிறது.
  • இது தமிழரின் பெருமை பாராட்ட மட்டுமல்ல -  
  • காப்புரிமை என்கிற பெயரில் நமது வளங்களை பறித்துக் கொண்டிருக்கிற சூழலை எதிர் கொள்வது எப்படி? அல்லது ஏற்கனவே மஞ்சள், வேப்ப இலை என்று பல பறி போன நிலையில் இருப்பதைக் காப்பாற்றுவது எப்படி? என்று அடுக்கடுக்கான கேள்விகள், நம்மை நாமே மீண்டும் மதிப்பிட்டுக் கொள்வதற்காகவும், நமது வாழ்வின் சூழலை மேம்படுத்துவதற்காகவும். .
  • இது போன்ற கேள்விகள் ஏற்கனவே கேட்கப் படாமல் இல்லை என்பது அர்த்தமல்ல. நீங்கள் கூகுளிங் செய்தாலே இதைப் பற்றிய விபரம் தெரியவரும். 
  • நம் உலகம் திரை உலகம் என்பதனால் ஒரு செய்தியை திரை வழி சொன்னால்தான் பேசப் படுகிறது. எனக்குத் தெரிந்து அந்த வேலையை இந்தப் படம் செய்திருக்கிறது.
  • அதில் சொல்லப் பட்டிருக்கிற செய்திகள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. சீனா நல்லவர்களைக் கொண்டிருந்தாலும் அதன் அரசு மென்வன்முறையை கட்டவிழ்த்து விடுகிற நாடாக இருக்கிறது என்பதும், அது இது போன்ற செயல்களைச் செய்வதற்குத் தயங்காது என்பதும் மனதில் வைத்து கொள்ளலாம். 
  • சீனா என்று மட்டுமல்ல, இன்றைக்கு மருந்து உற்பத்தி செய்கிற நாடுகளோ அல்லது ஆயதங்கள் உற்பத்தி செய்கிற நாடுகளோ எதுவாக இருந்தாலும் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கு எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.  ஆன்டி-வைரஸ் கம்பெனிகள் வைரஸ்களைப் பரப்பி தங்களது வைரஸ் பாதுகாப்புகளின் விற்பனையைப் பெருக்கிக் கொள்வது போல... 

ஜீன்களை உசுப்பேத்திவிட வேண்டும் என்பதல்ல - நம் மனதில் மறைந்து மறந்து போயிருக்கிற, மறைந்து போயிருக்கிற பல வரலாற்று உண்மைகளையும் உசுப்பி விட வேண்டியிருக்கிறது. {பூம்புகாரை வைத்தே ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது}

இது வெறும் பெருமைக்காக மட்டுமல்ல - தமிழர்களின் பொற்காலம் என்று சொல்லப்படுகிற கால கட்டங்களில் ரோமும், கிரேக்கமும், சீனாவும் கூட நாகரிகத்தில் வளர்ந்து இருந்தததாக சொல்லப் படுகிறது. அந்த ஒட்டு மொத்த நாகரிகமும் சில காலங்களில் அழிந்து போனது. அப்படியெனில் எது அவைகளிலிருந்து மாற்றியது என்கிற பறந்து பட்ட கேள்வியையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது. 



கொசுறு: 

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர்

நெறிப்படுத்தினரே. 
                       -  "மரபியல்" தொல்காப்பியம்  


நமக்கு ஆறறிவு இருந்தாலே போதும் - தமிழர்குலம் நிச்சயம் மாபெரும் குலமாய்  இருக்கும்.


27.10.11

சிறுதுளி 271011 - கூவத்தில் சென்னை -

சென்னை
  • சென்னையில் கூவம் இருக்கிறது என்பது தெரிந்தவர்களுக்கு மழை பெய்தால் ஒட்டு மொத்த சென்னையே கூவமாகி விடும் என்பது தெரியாததல்ல.  
    • புதிய சென்னையின் புதிய மேயர் [விரிவாக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்பதற்கும் புதிய சென்னையின் புதிய மேயர் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்...] பொறுப்பேற்றிருக்கிற நிலையில் பருவ மழை தீவிரமடைந்து அவரை உடனே வேலைக்கு அழைத்திருக்கிறது.
  • சென்னை: மழை இல்லை என்றாலும் தத்தளிக்கும், மழை வந்தாலும் தத்தளிக்கும். சரியான திட்டமிடல் இல்லை. இந்நிலையில் "போர்க்கால அடிப்படையில் சென்னையில் குப்பைகள் அகற்றப்படும்" புதிய மேயர் அறிவித்திருக்கிறார். எல்லா குப்பைகளும் தண்ணீரில் அடித்துக் கொண்டு ஊருக்குள்ளே வந்துவிட்டது.
  • கூவத்தை சுத்தம் செய்தால் மழைக் காலங்களில் சுத்தமான நீர் சென்னை முழுவதும் இப்போது போல சென்னை தத்தளித்தாலும் நீருக்குள் நகரமாக வெனிஸ் நகரம் போல இருக்கும்.
வெனிஸ் பற்றித் தெரியாதவர்கள் யாராவது உண்டா? இருந்தாலும் ஒரு சிறு காணொளி.




இல்லைன்னா மன்மதன் அம்பு பாருங்கோ!

  • சென்னையில் மழை வந்தால் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அல்லது நீர் வடியும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
  • மழை வந்தால் அனைத்தும் கூவத்தில் கலக்கிறது சென்னையே கூவமாகிவிடுகிறது. வெயில் வந்தால் சென்னை சஹாராவாகி விடுகிறது 
    • இதற்குச் சென்னையா காரணம்?
மேதாவித்தனம்
  • கடந்த பதிவில் சொன்ன ஒரு விஷயத்திற்கு ஒரு சிறு உதாரணம்.
  • கலைஞர் ஒரு அறிக்கையில் - தனித்து போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றில் சொல்லியிருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் இருபத்தி இரண்டு சதவீதமும் தற்போது இருபத்தி ஆறு சதவிதமும் பெற்றிருக்கிறோம்.
    • முக்கியமான விஷயம் இனிமேதான் - 
    • ஆனால் இது காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் என்று சொல்ல முடியாது. அதே சமயம் அ.தி.மு.க. வுக்கு எதிரான வாக்குகள் என்றும் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறார். 
    • என்னைக் கேட்டால் எதுவுமே சொல்ல முடியாது என்று பேசாமல் இருந்திருக்கலாம்.
காங்கிரசுக்கு எதிரான வாக்குகள்னா ஒரு வேளை ஜாமீன் கிடைக்காது. ஏன் இது அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் - ன்னு சொல்ல முடியாதுன்னுதான் ஒரே கன்பியுஷன்!

26.10.11

தீப விழா


நண்பர்களே தீப விழா வந்துவிட்டால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்... குழந்தைகள் முதற்கொண்டு பெரியோர் வரை...
தீப விழா வாழ்த்துக்கள்...

நல்லாக் குளிப்போம் - எண்ணெய் தேய்த்துக் குளித்தல் உடம்புக்கு நல்லது...
கந்தலானாலும் கசக்கிக் கட்டுவோம் - ஆனால் அப்படிப் பட்டவர்கள் யாரும் வலைப் பக்கம் வருவதில்லை என்பதனால்
கசக்கிக் கட்டும் யாருக்காவது ஒரு புதிய உடை பரிசளிப்போம்.
நன்றாய் உணவருந்தி - அருகில் இருப்போரோடு பகிர்ந்துன்னுவோம்.

இருக்கிற விலை வாசியில்

யாரும் பட்டாசு கொழுத்தி காசை கரியாக்க வேண்டாம்.

அந்தக் கரியால் சூழலை மாசு படுத்த வேண்டாம்.

[சிவகாசி மக்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது]

அது மட்டுமல்ல வெடி வெடிக்கிற ஆசைதான் நம்மை அணு வெடி, அணு குண்டு வரை விட்டிருக்கிறது.  இப்போ அணு உலை வெடி பார்ப்பது வரை நம்மை வளர்த்து விட்டிருக்கிறது.

தீப விழாவில் மின்சார விளக்குகளை அனைத்து விட்டு [அப்படியே தொல்லைக் காட்சியையும் சேர்த்து] எண்ணெய் விளக்குகள் ஏற்றி, அந்தத் தீப ஒளி வெள்ளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் இடுங்கள்.

அனைவருக்கும் தீப விழா வாழ்த்துக்கள்.

23.10.11

கட்சிகளும் காட்சிகளும் - தேர்தல் முடிவுகள் குறித்த ஓர் அலசல்


அ.தி.மு.க.
  • உள்ளாட்சி தேர்தல் முடிந்து அம்மாவின் கட்சி அறுதிப் பெரும்பான்பை பெற்று தனித்து நின்றாலும் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இது குறுகிய காலத்தில் அவரின் அரசுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கடந்த அரசை மைனாரிட்டி அரசு என்று மாத்திரமே விளித்து வந்த அம்மா யாரும் மறந்தும் கூட அந்த வார்த்தையைப் பிரயோகிக்க முடியாத படி வெற்றியைப் பறித்திருக்கிறார். இதனால் அவருக்கு கூடுதலான பொறுப்புணர்வு சேர்ந்திருக்கிறது. இதைச் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு அவர் சொல்லியிருப்பது போலவே அனைத்து மாநிலங்களிலும் முதன்மையான மாநிலமாக இதை மாற்றிவதிலே கவனம் செலுத்த வேண்டும். 
  • முன்பு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த்திருந்த போது அவரின் பேச்சுகளில் இருந்த ஆணவம் இப்போது முற்றிலும் இல்லை என்று சொல்லுவது கடினம் என்றாலும் கொஞ்சம் குறைந்தே காணப் படுவது கவனிக்கப்பட வேண்டியிருகிறது. மரணம் எதிர் நோக்கியிருக்கிற தமிழர்களுக்கான தீர்மானம், மற்றும் அணு உலைக்காக அவர் மக்கள் பக்கம் சார்ந்த்திருக்கிற அணுகுமுறை என்று சிலவற்றைச் சொல்லலாம். ஆனால் அவைகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மக்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கான சாணக்கியத் தனம் என்று  சிலர் கூறும் குற்றச் சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வண்ணம் அவரின் முடிவுகள் இருப்பதில்தான் இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மெய்ப்பிக்க இயலும். "வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வீதி வீதியாகச் சென்று நன்றி சொல்ல வேண்டும்" என்ற அவரது அறிக்கை அதற்கான முதல் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம். 
  • [ஆனால் சமச்சீர் கல்வி மற்றும் சட்டமன்ற இட மாற்றம் தொடர்பான சில விஷயங்கள் அவரின் அணுகுமுறை மாற வில்லை என்று சொன்னாலும் மக்கள் சார்பான மேற்சொன்ன இரண்டு விஷயங்கள் முன்பு அவை அடிபட்டுப் போய்விடுகின்றன]. 
  • இந்த வெற்றி காங்கிரசுக்கு மற்றும் கலைஞரின் கட்சிக்கு எதிரான மக்களின் கோபம் இன்னும் தீர வில்லை என்பதோடு அ. தி. மு.வுக்கான ஆதரவையும் அதிகமாக சேர்த்திருக்கிறது என்பதில் மெஜாரிட்டி ஆட்சி என்பது மக்களும் மேம்பாட்டுக்கான உழைப்பில் இறங்குவதற்கான உத்திரவாதம் என்பதால் மக்களின் வெறுப்புக்குள்ளாகாமல் இருக்க வேண்டியது அவசியம் - அப்படி வெறுப்புக்குள்ளானால் என்ன ஆகும் என்பதை கலைஞரின் கண்ணீரைப் பார்த்திருக்கும் அம்மா மறக்க மாட்டார் என்றே கருதுகிறேன். 
  • அதை மறக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை அவர் நன்கு அறிவார்.

தி.மு.க.
  • கலைஞர் வெறும் வாயிலே அம்பெய்துவார் - அதாவது வாய்ச்சொல்லில் வீரர் என்கிறேன். சில சமயங்களில் பேசிக் கெடுப்பார், பல சமயங்களில் பேசாமல் கெடுவார். இத்தனைக்குப் பிறகும் கடந்த தேர்தலில் தி.மு.க தொண்டர்களால்தான் தி.மு.க. தோற்றது என்று கலைஞர் பேசியதன் விளைவோ என்னவோ ஒரு மாநகராட்சியைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. தமிழ் மக்களுக்கு இன்னல்கள் நடந்த போது பேசாமல் இருந்ததன் விளைவு இப்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  தான் ஆட்சியில் இருந்த போதெல்லாம் இத்தகைய போராட்டங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது அ.தி.மு.க அரசு இவைகளைக் கண்டு கொள்வதில்லை என்ற அவர் வைக்கிற குற்றச் சாட்டை பாமர மக்கள் கூட நம்ப வில்லை என்பதையே இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. 
  • அது மட்டுமல்லாமல் ஆளும் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எப்போதும் நடப்பதுதான் என்று அறிக்கை வேறு. அது எந்த அளவுக்கு என்றால் - மு. க. அழகிரி வார்டிலேயே தி. மு.க. நான்காவது இடத்திற்குத் தள்ளப் பட்டிருக்கின்றது என்பதிலிருந்து நாம் புரிந்தது கொள்ளலாம். 
  • மத்தியில் இன்னும் பதவியில் அமர்ந்திருக்கும் அவர் மக்கள் பிரச்சனைக்காக தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டு வெறும் அறிக்கையில் இல்லாமல் - இறங்கி வேலை செய்தால் ஒழிய அவரால் ஒன்றும் பேச முடியாது - ஏனெனில் வெறும் பேச்சைக் கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை அவர் அறிவார் - 
  • வரிசையாகத் தோற்றுக் கொண்டிருந்த கால கட்டங்களிலேயே அவர் சொல்லுவார் - பேச்சைக் கேட்க இங்கே வருகிறீர்கள் ஆனால் வாக்கை மட்டும் அவருக்குப் போட்டு விடுகிறீர்கள் என்று - இருந்தாலும் அதுதான் அவரைக் காப்பாற்றிக் கொண்டும் வந்திருக்கிறது. ஆனால் இனியும் அந்த நிலை நீடிக்காது என்றே கருதுகிறேன். 
  • இருந்தும் அவர் பேசுவதை யாரும் தடுத்து விட முடியாது என்கிற விஷயமும் எட்டிப் பார்க்கின்றது.
காங்கிரஸ்
  • அதைப் பற்றி எழுத வேண்டுமா என்ன? பதினைந்து மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்டு மாநகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இதில் அ.தி,மு.க - முன்னூற்றி ஐம்பது உறுப்பினர்களையும், தி.மு.க. நூற்றி ஒன்று உறுப்பினர்களையும் [மொய்] பெற்றிருக்கிறது. அவைகளோடு ஒப்பிடும் போது இந்தப் பதினைந்து பெற்றதற்கு ஒன்று வாங்கிய பா.ம. க. வே மேல். 
  • இத்தனை ஆண்டு கால வரலாறு உள்ள கட்சி தமிழர்களை அழித்தொழிக்க ஆவன செய்துவிட்டு அவர்களிடமே ஆட்சி பீடத்திற்கு அனுமதி கேட்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதை இனியாவது மாற வேண்டும். ராகுல் காந்தி அமெரிக்கப் பெண்ணை மணக்க இருப்பதாக வரும் வதந்திகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் - [தனி நபர் சொந்த விஷயங்களை உள்ளிழுப்பதற்கு மன்னிக்கவும் - வாக்குக்காக கிராமங்களுக்குச் சென்று மதியம் கஞ்சி குடித்துவிட்டு மாலையில் அரண்மனையில் படுத்துறங்கும் நடிப்பே இப்படிப் பேச வைக்கிறது] - இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழரை கொன்றது உறுதிப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் - தமிழ் மீனவர்களை கொன்றொழிக்கப் படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் - தமிழக முதல்வரின் கூடங்குளம் பற்றிய கடிதத்தைக் கூட பிரதமரிடம் சேர்க்காத நிலையில் - எந்தத் தைரியத்தில் இங்கே வந்து இன்னும் போட்டி போடுகிறார்கள் [அவர்களுக்குள் நடக்கும் போட்டியல்ல]
  • இனிமேலாவது மிச்சமிருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதே வேண்டுகோள்.
பா.ஜ.க.
  • ஒரு கட்சியின் மேல் இருக்கும் வெறுப்பும் கோபமும் அதனுடைய எதிர் கட்சியின் வெற்றிக்கு நிச்சயம் வலுச் சேர்க்கும் - அ.தி.மு.க. வின் வலு கூடியது போல. எனவே காங்கிரசின் மேல் இருக்கும் கோபம் எட்டுத் திக்கும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த ஒன்றே அடுத்த முறை பா. ஜ.கவை ஆட்சி பீடத்தில் அமர்த்தும். [ஆருடம்] - எனவே அத்வானி அவர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம். 
  • உள்ளாட்சித் தேர்தலில் இது எதிர்க் கட்சி என்கிற நிலையில் இல்லாமல் இருப்பதால் பா.ஜ.க. எப்போதும் தோற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இரண்டு நகராட்சித் தலைவர் பதவியைத் தட்டிப் பறித்திருக்கிறது. 
  • ஒன்று கோவை மாவட்டத்தில் மற்றொன்று நாகர் கோவிலில். இரண்டிலும் மதக் கலவரங்களை மையப் படுத்தி அதைக் கூர்மைப் படுத்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டது. 
  • இது இன்னும் தனது செல்வாக்கைப் பயன் படுத்த இந்த வெற்றிக்குப் பிறகு இதே ஆயுதத்தை மீண்டும் எடுக்கலாம் என்பதால் தமிழ் மக்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
தே.தி.மு.க
  • விஜயகாந்த் கட்சி சில படிப்பினைகளுக்குப் பிறகு - இந்தத் தேர்தலில் ஐந்து மாநகராட்சி உறுப்பினர்களையும் இரண்டு நகராட்சித் தலைவர்களையும் பெற்றிருக்கிறது என்பது அவருக்கென்று இருக்கிற வாக்கு வங்கியையும் அதோடு சேர்த்து மிகப் பெரிய கொள்கை ஒன்றும் இல்லையென்றாலும் சினிமா தருகிற புகழை வைத்துக் கொண்டே வெற்றி பெற முடியும் என்பதற்கே அவர் உதாரணம். 
  • மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்று மில்லை. விஜய் தாராளமாய் தேர்தலில் குதிக்க அவரது அப்பா அவருக்கு அனுமதி அளிக்கலாம்.
ம.தி.மு.க. 
  • சட்டமன்றத் தேர்தலில் தனித்து விடப்பட்ட கட்சி - தன்மானத்தோடு ஒதுங்கி நின்ற வை. கோ வின் புகழ் சற்றே கூடியிருக்கிறது... மாநகராட்சியில் எட்டு கவுன்சிலர்களை பெற்றிருக்கிறார்கள். ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும் பெற்றிருக்கிறார்கள். இது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளையும் தமிழர்கள் சார்பாக அவர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கான வெற்றியாகக் கருதுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பா.ம.க
  • தனித்துப் போட்டியிட்டதற்காக அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மாநகராட்சி உறுப்பினரைப் பெற்று மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள். இனிமேலும் தனித்துப் போட்டி போடுவார்களா - மன்னிக்கவும் போட்டியிடுவார்களா?
ம.ம.க.
  • நேற்றையக் கட்டுரையில் பிரபாகரனின் வருத்தத்தைப் போக்கும் விதமாக மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு வெற்றி - கோவை மாவட்ட என்பத்தி ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. எந்த மாவட்டம் என்பதைக் கவனிக்க.

எனவே
தனித்து நின்று தங்கள் கட்சிகளின் பலத்தை அறிந்து கொள்ளவே என்று எல்லாராலும் சொல்லப் பட்டாலும் நடந்த முடிவுகள் வெறும் கட்சியைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. கட்சி சார்பு என்பதையும் தாண்டி - ஒரு கட்சியின் மீதான வெறுப்பு, ஒருவரின் அணுகுமுறை மாற்றம் - மத்திய அரசின் தமிழர்களின் மீதான வெறுப்பு - போன்ற பல்வேறு காரணிகள் இந்தத் தேர்தலில் அடித் தளமாய் இருந்திருக்கின்றன. 

இனிமேலாவது மக்களின் உணர்வுகளை - கொள்கைகளை முன்னிறுத்த வேண்டிய கட்சிகளே தேவை என்பதையே இது உணர்த்துகிறது. 
இதுவே உண்மைஎன்றால் வாழ்க ஜன நாயகம்!

21.10.11

"குற்ற உணர்வும் நம்பிக்கையும்" - உள் தேர்தல் குறித்து

இந்த வலைப்பக்கத்தை திறக்கும் நேரத்தில் முடிவுகள் வெளிவரலாம்.  அதற்குள்ளாவது அந்த தேர்தல் பற்றி அ. பிரபாகரனின் அனுபவமும் ஆய்வும்

  • இன்று [பதினேழு] எங்கள் ஊரில் பஞ்சாயத்து தேர்தல். நான் தற்போது சென்னையில் இருக்கிறேன். இங்கு பத்தொன்பதாம் தேதிதான் தேர்தல். எனக்கு ஒட்டு எங்கள் ஊரில். ஆனால் இந்த முறை நான் ஊரில் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை. ஏறத்தாழ நானும் ஐந்தாறு தேர்தல்களைச் சந்தித்திருக்கிறேன். முதன்முறையாக நான் ஓட்டுப் போட முடியாதது பற்றி இப்போதுதான் கவலை வந்திருக்கிறது. மத்திய வயதுக்கு வந்துவிட்ட நான் இள வயதில் வாக்களித்ததில்லை. வாக்களிக்க விரும்பியதுமில்லை. சிறுவனாக இருந்த போதுஎங்கள் ஊர் தெப்பக் குளத்தில் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்று ஒரு இடது சாரி இயக்கத்தினர் எழுதி வைப்பார்கள். அது எனக்குப் புரிந்ததில்லை. ஆனால் இள வயதில் ஏதோஒரு விதத்தில் நான் ஓட்டுப் போடுவது தவறு என்றே கணித்திருந்தேன். பிறகு வந்த தேர்தல்களில் ஒரு சில நேரங்களில் வாக்களித்தும் சிலவற்றில் வாக்களிக்காமலும் இருந்திருக்கிறேன். சில நேரங்களில் இரண்டு மூன்று இடங்களில் முத்திரை குத்தி செல்லாததாக்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் வாக்களிப்பது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். 
காரணம் - நான் நேசிக்கிற கொள்கைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததாய் என் வாழ்க்கை போன பிறகு, தேர்தலில் மட்டும் அந்த வீராப்பு எதற்கு என்ற எண்ணமாக இருக்கலாம்.  ஏறத்தாழ வாழ்க்கை முழுவதுமே சசமரசமாகி விட்டது. ஒரு தன்னிலை [subject ] சமரசங்களால்தான் கட்டமைக்கப் படுகிறது என்பதும், அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்பதும் அயர்ச்சியையும் சலிப்பையும் தருகிற விஷயங்கள். இந்த அபத்தத்திற்கு நானும் பழகிப் போய் விட்டேன். அதிலும் ஒரு சுகத்தைக் கண்டுவிட்டேன் என்பது உண்மையிலேயே வருத்தம் தரும் ஒன்றுதான். இருப்பினும் இந்த குற்ற உணர்வு ஒன்றுதான் என்னை ஒரு மனிதனாகவே கருத வைக்கிறது என்பதுதான் ஆறுதல்.
  • சரி அது போகட்டும். இந்தத் தேர்தலில் ஊருக்குச் சென்று வாக்களிக்க முடியவில்லையே என்று நான் முதன் முதலாக வருத்தப் பட்டேன். அத்வுமல்லாது நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் அற்றுப் போன சமூகச் சூழலில் ஜனநாயகமும் தேர்தலும்தான் நம்பிக்கைக்கான இறுதிப் பற்றுக்கோள்கள்  என்று நான்  இப்போது நம்புகிறேன். அதுவுமல்லாது பஞ்சாயத்து தேர்தல் ஓரளவுக்கேனும் சிறு குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. தனிப் பஞ்சாயத்துக்களாக அறிமுகப் படுத்தப்பட்ட சில இடங்களில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு இது ஓர் அங்கீகாரமாகவும் அமைகிறது. சமூக மைய நீரோட்டத்தில் அவர்கள் சுய கவுரவத்தோடு இணைவதற்கு உதவுகிறது. [இருப்பினும் அதே கிராமங்களில் ஒரு சாராரே மீண்டும் மீண்டும் பஞ்சாயத்துக்களை கைப்பற்றுவது இன்னும் நடக்கிறதே, அது ஒருவித நவீன பிரபுத்துவத்தை கட்டமைக்கிறதே என்று நீங்கள் சொல்லக் கூடும். இருந்தபோதிலும் முன்பு போல உட்கார்ந்த இடத்தில் ஜெயிப்பதெல்லாம் கேள்விக்குள்ளாகி வருகிறது.] அதேபோல சிறுசிறு உள்ளூர் தெருப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பஞ்சாயத்து முறை ஓரளவிற்காவது உதவுகிறது என்பதும் உண்மை. இதுபோன்ற சில பல காரனங்களால் நான் எப்படியும் இந்த முறை வாக்களிக்க வேண்டுமென விரும்பினேன். ஆனால் அது இயலாமல் போய்விட்டது.
கடந்த வாரம் எங்கள் ஊருக்குப் போயிருந்த பொழுது சில சுவராசியமான விஷயங்களைக் கவனித்தேன். சுமார் ஐந்தாறு பேர் வந்து கொண்டே இருந்தார்கள்.. ... எனக்கென்னவோ இந்த முறை எங்கள் நகரத்தில் பிரச்சாரம் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. கடந்த வாரம் வரை பணப் பட்டுவாடா எதுவும் செய்யப் படவில்லை. நாடாளுமன்ற  சட்ட மன்ற தேர்தல்களிலெல்லாம் எங்கள் பகுதியில் உள்ள தொண்டர்கள் பணத்தோடு ரகசியமாய் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்த முறை அப்படியல்ல. காரணம் விசாரித்தபோது நம்பர் ஒருவர் சொன்னார் - "கட்சிகளெல்லாம் தனியாக நிற்பதால் எல்லாருக்கும் பயம். ஜெயிப்போமா தோற்போமா என்று. காசை எனவே வெளியில் விட மறுக்கிறார்கள். அப்போதுதான் தேர்தல் குறித்த உண்மை எனக்கு புலப்பட்டது. இது நாம் எல்லாரும் கவலைப்பட வேண்டிய ஒன்று.
  • ஒவ்வொரு தேர்தலிலும் நாம் கவலைப் பட ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரு தேர்தல்களிலும் என்னை மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம் விஜயகாந்தின் வளர்ச்சி. பொய்யாக நிறுவப்படும் இப்படிப் பட்ட கனவுலக பிம்பங்களின் அடிப்படையில் மக்கள் ஒவ்வொரு முறையும் அணிதிரளும் போது இந்த சமூகத்தின் வளர்ச்சி பின்னோக்கித் தள்ளப்படுகிறது. அரசியல் விழிப்புணர்வுக்கான எல்லா முகாந்திரங்களையும் இந்த மனிதர்கள் அடைந்து விடுகிறார்கள். எனவே விஜயகாந்த் போன்றவர்களின் ஒவ்வொரு மேலேழும்புதல்களும் என்னை விசனத்துக்குள்ளாக்கிறது.  இந்தத் தேர்தலில் அப்படிப் பட்ட வருத்தம் இந்த சிறு கட்சிகளைப் பார்க்கும் போது தோன்றியது. 
இந்தத் தேர்தலில் எல்லா சிறு கட்சிகளும் பெரும் கட்சிகளால் கழட்டி விடப்பட்டன. இது குறித்து நடுத்தர வர்க்க மனோபாவம் மிகவும் சந்தோஷப் படுகிறது. ஆனால் இது உண்மையிலேயே வருத்தப் பட வேண்டிய ஒன்று. இப்படிக் கட்சிகள் தனியாக நிற்கும் போது ஒருவிதத்தில் அவற்றின் பலம் தனியாகத் தெரியும் என்பது உண்மையாக இருந்தாலும் இது சிருபானமியினரின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாக அழித்து விடும் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. சாதாரணமாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளோடு சேரும் போது அவை தங்களது தனித்துவத்தை இழந்து விடுவது போல தோன்றினாலும், தேர்தலுக்குப் பிறகு சிறு கட்சிகளுக்கு தங்கள் கருத்தியல்களை எடுத்துரைக்கவும், தங்கள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. நான் த.மு.மு.க- வை மனதில் வைத்துச் சொல்லுகிறேன்.  இது போன்ற சிறு கட்சிகளுக்கு தமிழகத்தில் ஒரு கணிசமான வாக்கு வங்கி இருந்தாலும் அவை ஒவ்வொரு பகுதியிலும் தனித்து நிற்கின்ற போது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும். உதாரணம். ஒரு சிறிய கட்சிக்கு ஒவ்வொரு யூனியனிலும் ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் இருந்தாலும் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தமிழகம் முழுவதும் நான்கு சதவித வாக்குகள் உள்ள ஒரு கட்சி ஒரு மாநகராட்சியையோ, நகராட்சியையோ  கைப்பற்றாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  • எனவே இந்தத் தேர்தலில் பெரும் கட்சிகளால் சிறு கட்சிகளுக்கு மறுக்கப் பட்ட அங்கிகாரம் சிறுபான்மையினருக்கு மறுக்கப் பட்ட அங்கீகாரமாகவும் உணமையான மனித உரிமை பிரச்சனைகளுக்கும் விடுதலைக் கருத்தியல்களுக்கும் மூடு விழா நடத்தும் முயற்சியாகப் பார்க்க வேண்டும். இப்போது நான் கம்யூனிஸ்டுகள், சீமான், வைகோ போன்றவர்களை மனதில் இருத்திப் பேசுகிறேன். இந்த சிறிய கட்சிகள்தான் ஓரளவேனும் கொள்கையோடு இருக்கின்றன. பெரும் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளன - அல்லது அவற்றிற்கான கொள்கைகளை அதிகாரத்தை வைக்க அவை பல நேரங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கின்றன. எனவே, இந்தப் பஞ்சாயத்து தேர்தலைப் பொறுத்தவரையில் சிறு கட்சிகள் அனுதாபத்தோடும் கரிசனையோடும் பார்க்கப் பட வேண்டும்.  

சிறு கட்சிக்குப் போக வேண்டிய ஒரு வாக்கு வீணாகி விட்டதே என்ற குற்ற உணர்வு இப்போதும் எனக்கு ஓர் மூலையில் இருக்கிறது.

கட்டுரையாளர் - அ. பிரபாகரன்


இனி நான் - 
அ. பிரபாகரனுக்கு எனது சில கோணல் கேள்விகள்.
இந்த முறையாவது உங்களுக்கு ஓட்டுப் போடமுடியாதது பற்றி வருத்தம் வந்தது மிக்க மகிழ்ச்சி - அதோடு தேர்தல்தான் ஒரே நம்பிக்கை என்று முடிவுக்கு வந்தது குறித்தும் மகிழ்ச்சியே அடுத்த முறை தேர்தலுக்கு முன்பே இதுபற்றி சிந்தியுங்கள். 
  • ////இரண்டு மூன்று இடங்களில் முத்திரை குத்தி செல்லாததாக்கியிருக்கிறேன்.///  பலமுறை வாக்களிக்க செல்லாமல் இருந்திருக்கிறீர்கள்  சிலமுறை சென்று செல்லாததாக்கி இருக்கிறீர்கள் - பயங்கரமான ஆளா இருப்பிங்க போல இருக்கே.
  • கொள்கையுடைய சிறு கட்சிகள் என்று கம்யூனிஸ்டுகளைச் சொல்லி இருக்கிறீர்களே எந்தக் கம்யூனிஸ்டு என்று சொல்ல வில்லையே?
  • வைகோ கட்சி சிறு கட்சியா??!!
  • எல்லாரையும் சொன்னிங்க பா. ம. க வை விட்டு விட்டிர்களே - அது பெரிய கட்சி என்றா??!!
  • ///"குற்ற உணர்வு இப்போதும் எனக்கு ஓர் மூலையில் இருக்கிறது."///  தயவு செய்து உங்கள் மூளையிலும் வைத்துக் கொள்ளுங்கள் - அடுத்த முறை தவறாமல் வாக்களிக்கலாம்.
அப்பு


19.10.11

அப்துல்கலாம்: அணுஉலை: அவகாசம்

உயர்திரு. அப்துல் கலாம் - நான் மதிக்கும் மற்றும் நேசிக்கும் மனிதர்களுள் ஒருவர். அணு உலை பற்றி அவர் - மிகவும் நல்ல எனெர்ஜி என்று அவர் சொல்லுவதால் அவர் மீது இருக்கும் மதிப்பு ஒரு போதும் குறையாது என்றாலும், இனி மேலும் அந்த மதிப்பு கூடுமா என்பதுதான் தெரியவில்லை.

அவரது முடி - சங்கருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது - அது அந்நியனில் வெளிவந்தது. அது போல உயர்திரு. அப்துல்கலாம் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருக்கும் பலரையும் நேர்மறையாகவே  தனது பாதிப்பைத் தந்து கொண்டிருக்கிறார். 

சம்சாரிகள், சாமியார்கள் என்று வேடம் போட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் பிரம்மச்சார்யத்தின் அடையாளம். இஸ்லாமியராக இருந்தாலும் எந்த விதத்திலும் தனது மதக் கொள்கைகளை தனது சிந்தனைகளின் தாக்கத்தில் அதிகம் அலை பாய விடாதவர் - இதனாலேயே இஸ்லாமிய சமூகம் அவரை நன்முறையில் கண்டு கொள்ள வில்லையோ என்பது கூட கேள்வி. திரு. அப்துல்கலாம் இந்திய விஞ்ஞானிகளின் மகுடமாகப் போற்றப்படுகிறார் என்பது அவரது கண்டு பிடிப்புகளுக்காக என்பதைக் காட்டிலும் அவரது அர்ப்பணிப்பு என்பதுதான் நம்மை மிகவும் பாதித்திருக்கிறது.

கூடங்குளம் - அணு மின் உலை விவகாரத்தில் உயர்திரு. கலாம் அதில் அச்சப் பட ஒன்றுமில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மேற்கொண்டு தனது நிலைப்பாட்டை, தனது கருத்தை தெரிவிக்க இன்னும் சில நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். ஏற்கனவே ஜூன் மாதம்இருபத்திஒன்பதாம் தேதி சிவகாசியில் இதைச் சொன்னார். ஏறக்குறைய நூறு நாட்களுக்குப் பிறகு இன்னும் பத்து நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். அவரது கருத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு புலத்தில் மட்டுமே புலமை பெற்றவர்களாக இருப்போம் - எனக்கு கணிதம் பற்றி அதிகம் தெரியாது எனில், அதில் புலமை பெற்றிருக்கிற ஒருவரின் கருத்துக்கு செவி மடுப்போம். அல்லது மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாதெனில் அதி சிறந்த மருத்துவரின் கருத்து சரியே என்று சொல்லுவோம். சாதாரண மனிதர்கள் இப்படி துறை வல்லுனர்களின் கருத்துக்களை நம்பியே இருக்கிறோம்.
இதனால் அறிவியல் பூர்வமான கருத்துக்களை சில விஞ்ஞானிகள் கூறும் போது அது அந்தத் துறை வல்லுநர் என்கிற முறையில் அவரது கருத்துக்கு நாம் கொஞ்சம் கூடுதலாகவே மதிப்பளிக்கிறோம். அப்படியே பெரும்பான்மையானவர்கள் திரு. அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடும்.  அப்புறம் எதற்கு அவருக்கு இன்னும் பத்து நாட்கள் அவகாசம்... [ஏற்கனவே நூறுக்கும் மேல் ஆகிவிட்டது].

பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு துறைக்குள்ளும் இன்னும் சில கூடுதல் புலங்கள் இருப்பதாலும் ஒவ்வொன்றிலும் எல்லாரும் பாண்டித்தியம் பெற முடியாது என்பதும் உண்மை. மருத்துவத் துறை என்றாலும் அதிலும் காதுக்குத் தனி, எலும்புக்குத் தனி, பல்லுக்குத் தனி என்று பாகு போட்டு வல்லுனர்கள் பிரிந்து இருப்பது போல அறிவியலிலும் பல்வேறு உட்கூறுகள் அறிவியல் வல்லுனர்களை பிரித்து வைத்திருக்கிறது.

அதனால்தான் திரு. அப்துல் கலாம் அணு உலை பற்றி மேலும் கருத்துத் தெரிவிக்க இன்னும் பத்து நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறாரோ? இப்பப் பிரச்சனையின் உச்ச கட்டம் - நம் பதிவர் ஜீவா கேட்பது மிகவும் சரியாகத் தோன்றுகிறது - அறிவியலாளர் உங்களுக்கே பத்து நாட்கள் தேவைப் படுகிறது என்பதே அதில் எதோ உட்குத்து இருக்கு என்பதைக் காட்டுகிறது என்று சொல்லுகிறார். அது மிகச் சரி என்றே தோன்றுகிறது. 

ஸ்பெசல் துறை என்பது ஒரு விதத்தில் வளர்ச்சி என்றாலும் அவைகளினால்தான் நாம் ஒன்று பட்ட அல்லது முழுமையாக பார்க்கும் எல்லாவற்றையும் விட்டுத் தூர வந்து விட்டோம் அல்லது பார்க்க முடியாமல் இருக்கிறோம். மருத்துவர்கள் ஒரு மனிதனை ட்ரீட் பண்றோம் என்பதை மறந்து விட்டு வெறும் பல்லாகவும், வெறும் காலையும் அல்லது எலும்பையும் இப்படி ஒவ்வொன்றாக ட்ரீட் பண்றது தான் ப்ராப்ளம். [அறிவியல் என்பது அப்படித்தான் வளரும் என்பது கட்டாயம் கவனிக்கப் பட வேண்டியது]

அதேபோலத் தான் அறிவியலும் வெறும் பகுதிகளை மட்டும் காண்கிறதே தவிர ஒட்டுமொத்தமாகப் பார்க்கத் தவறுகிறது. நிச்சயமாக இன்றையச் சூழலில் அறிவியல் மற்றும் அறம் இரண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லை என்றுதான் தோன்றுகிறது; ஒட்டு மொத்தமாக மனித குலத்தின் வளர்ச்சி என்பதோ அல்லது அழிவு என்பதோஅதன் வரம்புக்குள் வருவது மாதிரி தெரியவில்லை.அந்தச் சூழலுக்குள் நாம் நேசிக்கும் முன்னாள் முதல் குடிமகன் சென்று விட்டாரோ என்றே அஞ்ச வேண்டியிருக்கின்றது.

அதாவது துறை வல்லுனர்கள் ஒன்று சில விஷயங்களை ரொம்பவும் காம்ப்ளிகேட் பண்ணுவார்கள் - அல்லது ரொம்ப சிம்பிளா ஆக்கிவிடுவார்கள். திரு . அப்துல் கலாம் அவர்கள் ரொம்ப சிம்பிளா ஆக்கிவிட்டார்கள். ரோடு விபத்து நடப்பதால் ரோட்டில் போகாமல் இருக்கிறோமா என்பது ஒரு விஞ்ஞானி கேட்கக் கூடிய கேள்வி அல்ல. அதை நாம் கேட்கலாம். மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப் போடா முடியுமா? அணு உலை விபத்துக்கும், சாலை விபத்துக்கும் நிறைய வேறுபாடுகள், அழிவின் கொடூரம், பரந்து விரியும் கதிர் வீச்சுகள் என்று....

உயர்திரு. அப்துல்கலாம் என்ற மனிதருக்கு முதல் குடிமகன் என்கிற உயர்ந்த மரியாதையை அரசியல்வாதிகள், பல்வேறு [அரசியல்] காரணுங்களுக்காக அவருக்கு வழங்கினார்கள். அப்போது அந்தப் பதவியின் நிமித்தம் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது - அது வெறும் 'பதவி பதவி' - அதிகாரம் ஏட்டளவில் மட்டுமே இருக்கக் கூடியது. எனவே அவரின் அரசியல் சம்மந்தப் பட்ட பேச்சுகள் எல்லாமே அரசியல்வாதிகளின் கருத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாகவே இருந்தது. வேறு சில அரசியல் காரணங்களால், இரண்டாம் தடவை கூட அவரால் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே பொக்ரான் சோதனையில் அவரது பங்களிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. அதனால் அணு பவர் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் சில ஸ்பெஷல் துறை என்பதனால் இந்த அவகாசத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர் விஞ்ஞானி என்ற முறையிலும் மக்கள் குடியரசுத் தலைவர் என்கிற முறையிலும் அவர் சொல்லுகிற எல்லாமும் மிகவும் கவனிக்கப் படும். எனவே அவர் நேரமெடுத்துப் பேசுவதே நல்லது.

நிச்சயமாய் அணு உலைகள் பாதுகாப்பானவை என்று மீண்டும் சொல்லுவார் என்றே நம்புகிறேன். அந்தப் பதிலுக்குள் - அணு உலையின் அழிவு பெரிதா அல்லது நாட்டின் வளர்ச்சி பெரிதா என்கிற கேள்வியை முன்னிறுத்தி அணுஉலை தேவை என்று சொல்லலாம். அல்லது பல்வேறு இடங்களில் உள்ள அணு உலைகளுக்கு அருகில் உள்ள மக்களின் அச்சம் போக்குவதற்கான தேவையில், அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லலாம். அவரது நிலையை ஓரளவு புரிந்து கொண்டாலும் எனக்குள் சில கேள்விகள் எழாமல் இல்லை.

"எதிர்கால இந்தியா 2020" என்பது அல்லது வளர்ச்சி என்பது நமது கல்லறைகளின் மேல் அல்லது நமது சந்ததியினரின் ஒட்டு மொத்தச் சுடுகாட்டின் மீது கட்டப் படவேண்டுமா?
அல்லது கல்பாக்கம் என்கிற ஒரு தவறை செய்துவிட்டோம் அல்லது அது போல பல தவறுகளை நாம் ஏற்கனவே செய்துவிட்டோம் என்பதற்காக அடுத்த தவறை தெரிந்தே அனுமதிக்க முடியுமா? அதனாலேயே கூடங்குளம் அணு உலை தேவைப் படுகிறதா?

நமது குற்றங்களை ஏதாவது ஒரு புள்ளியில் நிச்சயமாய் நிறுத்த வேண்டாமா? நிறுத்துவதற்கான புள்ளி போராட்டாங்களாக வரும்போது, உயர்திரு அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் அதை கமாவாக, [அரைப்புள்ளியாக] மாற்றித் தொடருவதும், இந்தத் தவறுகளும், குற்றங்களும் தொடரவே வழிவகுக்கும் என்பதாகாதா?


அவகாசத்திற்குப் பிறகு அவரின் பதில் ஒரு அரைப் புள்ளியாக இருந்தாலும் அல்லது முழுப்புள்ளியாய் இருந்தாலும் அது அவரை நான் நேசிக்கும் மனிதர்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடாது - ஒரு வேளை எண்ணிக்கையில் சரிவு இருக்கலாம். நமது நேசப் பட்டியலில் அவர் இருப்பதால் அவருக்கு பெரிய புகழ் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை அல்லது நமது நேசப் பட்டியலில் இருந்து நீக்கப் படுவதால் அவருக்கு பெரிய இழப்பு ஒன்றும் நேர்ந்துவிடப் போவதும் இல்லை என்பதை நாம் அறிவோம். இருந்தாலும் நல்லதொரு நிலைப்பாட்டை எடுப்பார் என்றே நம்புகிறேன். அதற்காகவே அவரின் இந்த அவகாசம் எதைச் செய்யப் போகிறது என்று அறிய நாம் காத்திருப்போம்.



அறிவு - அறிவியல் அழிவை ஏற்படுத்துமெனில் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாதேனில் அந்த அறிவால் என்ன பயன்...

கொசுறு 
இதுவரைக்கும் எந்த மருத்துவராவது ஐயா நாங்கள் உண்மையிலேயே வியாபார நோக்கோடுதான் மருத்துவம் பார்க்கிறோம் - கம்பெனிகள் கொடுக்கிற சாம்பிள் மாத்திரைகள் மற்றும் கமிஷனுக்காகவே சில மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறோம் என்று சொன்னதுண்டா? 
அல்லது 
எந்த அரசியல் வாதியும் நாங்களெல்லாம் கறை படிந்தவர்கள்தான்  - எல்லாவற்றிலும் எப்படி ஊழல் செய்யலாம் என்றுதான் பார்க்கிறோம் என்று சொன்னதுண்டா?
அல்லது
.... நீங்களே மற்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.

அப்புறம் எதற்கு நாம் விஞ்ஞானிகளிடம் எங்கள் கண்டு பிடிப்புகள் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்?

இன்னுமொரு கொசுறு - சிலர் சொல்லியிருக்கிறார்கள்...
ஆட்டம் பாம் முதல் சோதனைக்குப் பிறகு [1945  ] அதில் சம்பந்தப் பட்டிருந்த விஞ்ஞானிகள் சொன்னது...
"To me, science is an expression of the human spirit, which reaches every sphere of human culture. It gives an aim and meaning to existence as well as a knowledge, understanding, love, and admiration for the world. It gives a deeper meaning to morality and another dimension to esthetics."
— Isidor Isaac Rabi

"I am become death, the destroyer of worlds."
- J . Robert Oppenheimer

"Now we're all sons-of-bitches."
Remark to Robert Oppenheimer immediately after the first atom bomb test explosion at Alamogordo.
— Kenneth Tompkins Bainbridge 

 இறுதிக் கொசுறு

ஆட்டம் பாமுக்கும் அணு உலைக்கும் வித்தியாசம் தெரியாமல் இல்லை -  ஒட்டு மொத்த எனெர்ஜி எப்படி இருக்கும்னு அதைப் பத்தி சொன்னாதானே புரியும். அதுக்காக!

17.10.11

கவலைப் படாதே சகோதரா.. பி ஹாப்பி



இன்று உள்ளாட்சித் தேர்தல் - எந்த முடிவு வந்தாலும் டோன்ட் வொர்ரி பி ஹாப்பி.

மோடி ஒரு நாள் உண்ணா விரதம் - டோன்ட் வொர்ரி பி ஹாப்பி.

அன்னா ஹசாரே மௌவுன விரதம் - டோன்ட் வொர்ரி பி ஹாப்பி.

உலக முதலாளித்துவக் கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட், இத்தாலிய ரோம், ஸ்பெயின் மாட்ரிட் எனப் பல்வேறு நாடுகளில் கடந்த வாரத்தில் பல போராட்டங்கள் - இதுவே அனைத்து பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணம் என மக்கள் போர்க்கொடி -
[thanks - http://www.greenleft.org.au/node/49135 ]
ஆனால் இந்தியாவில் இப்போதும் அவைகளை ஆதரித்தே அனைத்து பொருளாதார முடிவுகளும் இருக்கின்றன- அதனால் என்ன டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...

ஓசோன் படலத்தில் ஏறக்குறைய 250 லட்சம் சதுர மைல்களுக்கு ஓட்டை விழுந்திருக்கிரதாம் - அதனால் என்ன டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...

ரயில்வே உணவு துறை வழங்கிய உணவை உண்ட காசிப் பயணிகளில் ஒருவர் மரணம் - இருவர் கவலைக்கிடம் - இன்னும் பத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமணையில் - அதனால் என்ன டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...


இந்தப் பாட்டை கேட்டுப் பாருங்கள் - டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...





கவலைப் படாமல் இருக்க முடியுமா என்ன?

14.10.11

ஏட்டிக்குப் போட்டி - பா.ஜ.க அரசியல்


மோடி உண்ணா விரதம் அத்வானி ரத யாத்திரை

1 யார் பிரதமர் என்கிற சர்ச்சையில் தன் பலத்தைக் காட்ட அத்வானி முயற்சி - குஜராத்தையே ஆட்டிப் படைத்த மோடி இந்தியாவை ஆட்டலாம் என்கிற ஆசையில் இருக்கும் போது அதில் மண்ணைப் போடும் விதமாக ரத யாத்திரை. மோடிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு உண்டா என்ற இன்றைய கேள்விக்கு, திரு. அத்வானி - இல்லை அவரே தனது பிளாக்கில் இதப் பாராட்டி எழுதியிருக்காரு - அதுவே எனக்கு மிகப் பெரிய வெற்றி --அப்படின்னு அத்வானி சொல்லியிருக்காரு. 
  • இத .. இதத் தானே அத்வானி எதிர் பார்த்திக ... உடனே ரத யாத்திரையை முடிச்சுக்கலாமே!- 
  • நான் ஒரு முறை சொன்ன உடனே நிதிஷ் குமார் நேரடியாக வந்து யாத்திரையை தொடங்கி வைக்க ஒப்புக் கொண்ட அவர் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு - அத்வானி பதில் சொல்ல மறுத்துவிட்டாராம். 
    • ஆமான்னு சொன்னாலும் பிரச்சனை - [இவரு டப்பா டான்ஸ் ஆடிரும்/ அதுவுமில்லாம மோடிக்கு எதிரா திரும்புறதா அப்பட்டமாத் தெரியும்/ மோடியும் நேரடியாவே பேச ஆரம்பிசுடார்ணா இவரு டப்பா...] இல்லைன்னு சொன்னா பதவி ஆசை பிடிச்சவர்னு பேர் வரும்] அதுனால பதில் சொல்லாம இருக்கிறார். நமக்குத் தெரியாதா என்ன!

2 . ரத யாத்திரையில் தன் மகளோடு [பிரதிபாவோடு ] அத்வானி யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். பாவம் அவருக்கு கலைஞர் கனிமொழி விவகாரம் தெரியாதா? காங்கிரசுக்குப் போட்டியாக பா.ஜ. விலும் குடும்ப வாரிசுகள். காங்கிரசுக்கு கொஞ்சமாவது இணையா இருக்கனும்ல. அடுத்து அத்வானி - பிரதிபாவா?

3 . ஊழலுக்கு எதிராக இந்த யாத்திரையாம் - ஆனால் ஏப்ரல் 17 வெளிவந்த எகனாமிக் டைம்ஸ் அறிக்கைப் படி அதிகக் கறைபடிந்த மாநிலங்களில் மெஜாரிட்டியை அவர்களது கட்சி பெற்றிருக்கிறது. [http://prashant-therealtruth.blogspot.com/2011/04/bjp-and-left-as-corrupt-as-congress.html ].
  • அத விடுங்க இந்த யாத்திரையை அவர் கர்நாடகாவிலிருந்து எடியூரப்பாவின் ஆசியோடு தொடங்கி ஊழலுக்கு எதிராகப் புறப்பட்டிருக்கலாம். [மோடி மத நல்லிணக்கம் வேண்டி உண்ணா விரதம் இருக்கும் போது எடியூரப்பா ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கப் படாதா?]
  • உத்தரகண்ட் மாநிலத்தில் ஊழல் காரணமாக முதல்வர் மாற்றப் படவில்லை என்றும் , எடியூரப்பா ஏதோ ஒரு அறிக்கை காரணமாகத்தான் மாற்றப் பட்டார் என்றும் ஊழல் காரணமாக இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இளங்கோவன் மற்றும் தங்க பாலுவுக்கு மட்டும்தான் பேசத்தெரியுமா என்ன?
4 . அ.தி.மு.க ஆட்சியிலும் அபகரிக்கப் பட்ட நிலங்கள் உண்டு: அதனால் இரண்டாயிரத்து ஐந்திற்கு முன்பு நடந்த அபகரிப்பிற்கும், அவைகளுக்கும் வழக்கு வேண்டும் என்று இல. கணேசன் நேற்று விருதுநகரில் சொன்னார்.

  • அப்படா பேசிட்டாருப்பா... அதேமாதிரி பா.ஜ. க மத்தியில் இருந்த போது நடந்த ஊழலையும் விசாரிக்கச் சொல்லி ஒரு பேட்டி குடுக்கலாமே!
  • கொசுறு - தி. மு.க. எவ்வளவு கண்ணியத்தோடு அ.தி.மு.கவின் நில அபகரிப்புகளைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது. அந்தக் கண்ணியம் கூட இல்லையே என்றுதான் கலைஞர் மனதொடிந்து போய்விட்டதாகக் கேள்வி.

13.10.11

ஏட்டிக்குப் போட்டி- அரசியல் உலா - காங்கிரஸ்

காங்கிரஸ் கோல்மால்
1 . இளங்கோவன் - அதி.மு.க. ஆட்சியில் கிராமங்களில் நாள் கணக்கில் மின்சார வெட்டு என்று பேசியிருக்கிறார். 
  • மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் இந்த காலத்தில் இப்படி என்றுதானே படிக்க வேண்டும்.

2 . விருதுநகரில் "இனி தி.மு.க. காங்கிரசைத் தீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். நான் அமைச்சராக இல்லையென்றாலும் எனக்கு அமைச்சர்கள் செல்வாக்கு இருக்கிறது - " இது தன்மான இளங்கோவன் சொன்னது.
  • இது தி. மு. க. வுக்கு எதிராகவா, [அதுதான் ஏற்கனவே உங்களால போச்சே] உங்கள் அன்னை சோனியாவுக்கு விட்ட எச்சரிக்கையா... தலைவர் பதவி ஆசை... ம்...

3 . உள்ளாட்சிகளிடமிருந்து பிடுங்கப் பட்ட அதிகாரத்தைத் திருப்பித் தருவோம் என்று காங்கிரஸ் தலைவர் தங்க பாலு பிரச்சாரம் பண்ணினாராம்.
  • அவர்கிட்டேயிருந்து பிடுங்கப் பட்ட அதிகாரத்தையே மீட்க முடியலை... அல்லது அவருகிட்ட உள்ள அதிகாரத்தை வச்சே புடிங்க முடியலை..

4 . மூவர் மரண தண்டனை அப்பீல் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற மூப்பனார் ... பேரவை வழக்குத் தாக்கலாம்.
  • ராஜீவ் கொலை செய்யப் பட்ட போது மாயமாயிருந்த மூப்பனார் மீதே வழக்குப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது... இதில் இது வேறயா?
 அடுத்து பா.ஜ. க

12.10.11

பாசக்கார நண்பர்களே - நேரம் ஒதுக்குங்கள்


நேற்று ஒரு மின்னஞ்சல் வரப் போய் அதன் சாரம் எல்லாருக்கும் பயன்படட்டுமே என்று இந்தப் பதிவு. 

நமது உலகில் ஒருவர் மற்றவருக்காக நேரம் செலவிடுதல் என்பது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் நமக்காகப் பலர் செலவழித்த நேரங்கள் தான் நம்மை நாம் இருக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. 
அப்படி நமக்கு நேரம் செலவழித்தவர்களுக்கு மீண்டும் நாம் நேரம் செலவிடுவதுதானே தருமம்.
உடனிருந்த அம்மா, அப்பா, சகோதரர்கள், நண்பர்கள், பதிவுலக நண்பர்கள்... நேரம் செலவிட பிள்ளைகள் தயாராக இருந்தால் இன்றைக்கு முதியோர் இல்லங்களே தேவையில்லை.. 
ரொம்ப சீரியசான பதிவாக மாற்ற விரும்பவில்லை.
உறவுகளுக்கு - குறிப்பாக நமக்காக நேரம் செலவழிப்பவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்...

நாம் எதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்வதற்கு - ஒன்றுமில்லாமல் வந்தோம் ஒன்றும் இல்லாமலலேயே போகப் போகிறோம். இதில் இடைப் பட்ட காலத்தில் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பல்வேறு நபர்களின் பங்களிப்பு. ஆனால் அதை எந்த அளவுக்கு நாம் உணர்ந்த்திருக்கிறோம் என்பதே கேள்வி. எத்தனை நபர்களுக்கு நன்றி என்று உள்ளத்தால் இல்லாவிடினும் உதட்டளவிலாவது சொல்லியிருப்போம்.
உயிரைக் கொடுத்த அம்மா, உலகைக் காட்டிய அப்பா, சேர்ந்து வளர்ந்த சகோதரங்கள், கல்வி கொடுத்த ஆசிரியர்கள், உணர்வு கொடுத்த நண்பர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ.

ஆனால் அவர்களுக்கு நன்றி என்று சொன்னோமோ என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. நன்றி சொல்லி அவர்களை அன்னியப் படுத்துவது அல்ல விஷயம். அவர்களுக்காக நாம் எப்படி நேரம் செலவிடுகிறோம் என்பதிலும் இருக்கிறது. 

காலம் மிக வேகமாகப் பயணிக்கும் காட்டாறு போன்றது. யாருக்கும் செவிசாய்க்காத அலை போன்றது. பல நேரங்களில் நாம் அதை உணர்வதற்கு முன்பே பல ஆண்டுகளைக் கடந்து விட்டிருப்போம். செங்கோவி இனிமேல் சனி ஞாயிறுகளில் பதிவுலகின் பக்கம் வருவதில்லை என்றும் தனது உறவுகளுக்கான நேரம் என்று வார இறுதி நாட்களுக்கு தனது வலைப்பூவிற்கு விடுமுறை கொடுத்த பாசம் - அந்த நியாயமான பாசமும் எல்லாரிடத்திலும் இருக்க வேண்டியது அவசியம். [அதுக்காக எல்லாரும் ஞாயிற்றுக் கிழமை லீவு விட்டுறாதிங்க].

இருக்கும் போது இல்லாமல் இருந்துவிட்டு - காலம் கடந்த போது இருக்க நினைத்தால்  அது நிகழாமலே போகலாம். எனவே உடனே, இன்றே, இப்போதே, இப்பவே....
 ....

சில மாதங்களுக்கு முன்பு பல ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த என் ஆசிரியர் ஒருவரது மின்னஞ்சலின் முகவரியைக் கண்டு பிடித்து அவருக்கு நன்றி சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து பதிலும் கூட. மனதுக்கு மிக நெருக்கமான தருணங்கள் அவை. 

வாழ்வில் இது போன்ற தருணங்கள் மிக அற்புதமானவை. அது எல்லாருக்கும் வாய்க்கும் என்றே கருதுகிறேன். 
....
"கலைஞர் - கனிமொழியை" மனதில் வைத்து இப்பதிவு எழுதப் படவில்லை.

10.10.11

முரண் செய்திகள்

முரண் படம் வந்தாலும் வந்தது என் கண்ணில் எல்லாம் முரணான செய்திகளாகவே படுகிறது.

  • முரண் படம் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த STRANGERS ON A TRAIN படத்தின் [முழு விமர்சனம் பிரபாகரனின் தத்து பித்துவங்களில் பார்க்கலாம்] கதையை சுட்டு எடுத்து வந்தாலும் திரைப் படத்தின் தொடக்கத்தில் ஏதோ தன்னுடைய கற்பனையில் உதித்த கதை போல "இப்படத்தில் வரும் நபர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல" அப்படின்னு தொடங்குறது எவ்வளவு பெரிய முரண்.
  • ஜெயலலிதா வந்த பிறகு மாநகரப் பேருந்துகள் எல்லாம் பச்சைக்கு மாறுகிறதாம். அம்மையார் மோடியின் நண்பர். மோடி எப்படி என்பது நமக்குத் தெரியும். அப்படியும் ஏன்  பச்சை கலர் ஜெயலலிதாவின் கலராகிப் போனது என்பது எவ்வளவு பெரிய முரண். உண்மையில் அது காவிக் கலராகத் தானே இருக்க வேண்டும்.

  • புதுச் சேரியில் கல்வி அமைச்சர் இன்னும் பத்தாவது கூடப் பாஸ் பண்ணலையாம். கல்வி அமைச்சராக இருப்பதே எவ்வளவு பெரிய முரண். இதில் ஆள் மாறாட்டம் செய்து வேற பரீட்சை எழுதியது எவ்வளவு பெரிய கள்ளத் தனம். பத்தாவது படிச்சாத்தான் டாக்டர் பட்டம் வாங்க முடியுமோ? டாக்டர் விஜய காந்த் பத்தாவது பாஸ் பண்ணிட்டாரா?

  • சென்னையில் பல ஸ்டார் ஹோட்டல்களில் நேற்று  விபச்சாரப் புரோக்கர்களைக் கைது செய்தார்களாம். பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் என்று மட்டும் பத்திரிகைகள் எழுதிவிட்டு தனி நபர்களின் பெயர்களை வெளிப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் உதவி இல்லாமல் இது அவர்களது ஹோட்டலில் நடக்குமா என்ன? எப்படி ஒரு இருட்டடிப்பு?  அதோடு இதையும் படிங்க - அந்த புரோக்கர்கள் பாத்திமா, பரிதா பானு, சிவா மற்றும் சாந்தியாம். அதாவது மத வேறுபாடு என்பது இதில் இல்லை. [http://www.thinaboomi.com/2011/10/08/7119.html ]
  • தொலைக் காட்சிப் பேட்டி ஒன்றில், அர்விந்த் கெஜ்ரிவால் - அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் இருப்பேன் என்று சொல்லி மிரட்டுவதற்கான உரிமை உண்டு - ஏனெனில் அவர் பாராளு மன்றத்திற்கு மேலானவர் என்று சொல்லியிருக்கிறார். அவர் மட்டுமல்ல எல்லா குடிமகன்களும் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் அரசை மிரட்டும் உரிமை இருக்கிறது என்கிறார். இங்கே ஒரு ஊரே சேர்ந்து போராடுது அதை கேட்க ஆளில்லை.
    • பின்னூட்டம்
      • இதில் எல்லாரும் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள்தான். ஆனால் அதை யாரும் மதிக்கிறதில்லை என்பதுதான் முரணான சேதி. அதில் இரண்டாவது இங்கேயும் ஒரு ஊர் முழுவதுமாகப் போராடி மீண்டும் போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள் எவ்வளவு தூரம் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள் போராட வேண்டியிருக்கிறதும் முரன் தானே.

7.10.11

சாமியின் மூன்று படிப்பினைகளும் ஐந்து இலக்குகளும்


சுப்பிரமணி சாமி எப்படியும் தன்னை எப்போதும் மீடியாவின் பார்வைக்குள் வைத்திருக்கும் ஒரு வசியக்காரர். சில சமயம் காமெடியன் போலப் பேசுவார் - சில சமயம் மந்திரக் காரர் போலப் பேசுவார் - சில சமயம் விசயக் காரார் போலப் பேசுவார். இந்தியா தீவிர வாதிகளிடமிருந்து காப்பாற்றப் பட வேண்டுமென்பதில் நாம் என்ன படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஐந்து strategic திட்டங்களையும் ஒரு கட்டுரையாக [சூலை பதினாறு] வடிக்கப் போய் வழக்கை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ... தீவிர வாதி?

அப்படி என்ன குழப்பத்தை விளைவிக்கும் அளவுக்கு அதில் இருந்தது என்பதை சுருக்கித் தந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் படிக்க கீழ்க்கண்ட இணையத்தில் படிக்கலாம். 
சில முன்முடிவுகளோடு தான் அவர் தொடங்குகிறார். தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் மட்டுமே. அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

இதில் எழுதப் பட்டிருப்பவை அனைத்தும் சுப்பிரமணி சாமியின் கருத்துக்களே - எனது கோணக் கேள்விகள் மட்டும் சிவப்பில்.
அவரின் கட்டுரைக்கு  ஆதாரம்:
http://www.dnaindia.com/analysis/comment_analysis-how-to-wipe-out-islamic-terror_1566203-all

அவரது படிப்பினை ஒன்று -
இஸ்லாமிய தீவிர வாதத்தில் ஒரு இந்து இறந்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறான். எனவே இந்துக்கள் கூட்டு மன நிலையோடு இந்து என்பதில் ஒன்றிணைய வேண்டும். இதில் இஸ்லாமியர்களும் தங்களது முன்னோர்கள் இந்துக்கள் என்பதை உணர்ந்து இதில் ஒன்றிணைய வேண்டும். அப்படி எல்லாரும் சேர்ந்து இந்து ஆட்சியை நிறுவ வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் இறக்கும் போதும் எல்லா இஸ்லாமியர்களும்தானே இறக்கிறார்கள். நீங்கள் சரியென்றால் அவர்களும் சரிதானே?
 

இரண்டாவது படிப்பினை
எது நடந்தாலும் இஸ்லாமியத் தீவிர வாதத்தின் மிரட்டலுக்குப் பணியக் கூடாது.
சரி

மூன்றாவது படிப்பினை
எவ்வளவு குறைவான தீவிர வாதமாக இருந்தாலும் இந்திய இந்துக்கள் முழுவதும் ஒன்றிணைத்து தங்களது முழு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அயோத்யா கோவில் தாக்கப் பட்டத்திற்கு உடனே அங்கே ராம் கோவில் கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அதே இடத்திலேயே மசூதி கட்டனுமா?

பரிந்துரைக்கும் ஐந்து STRATEGIC இலக்குகள்

ஒன்று - ஜம்மு காஷ்மீர் விவகாரம் - இதில் அரசு அதற்குக் கொடுத்திருக்கிற சிறப்பு ஸ்டேடசை ரத்து செய்து விட்டு அங்கே முன்னாள் ராணுவ வீரர்களை குடியமர்த்தி அதை இந்துக்களின் இடமாகவும், தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் அமைக்க வேண்டும்.
பாகிஸ்தான் பார்டரில்  இந்துக்களைக் குடியமர்த்தலாம் - நீங்கள் முதல் ஆளா? ராஜ பக்ஷே அங்கே பண்றதுக்கும் இதுக்கும் பெர்ய வித்யாசம் இல்லையே. அவர்தான் உங்கள் குருவா?
இரண்டு - கோவில்களில் வெடிவைத்து இந்துக்களைக் கொள்ளும் அவர்களின் முயற்சிகளுக்கு பதிலடியா இந்துக்கள் கோவில்களுக்கு அருகில் உள்ள ஏறக்குறைய முன்னூறு மசூதிகளை உடனடியாக அகற்றுதல்.
அப்படியே இஸ்லாமியர்களும் தங்கள் மசூதிக்கு அருகில் உள்ள 300 கோவில்களை அகற்றலாமா?
மூன்று - இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சிக்கும் அவர்களது முயற்சிக்கு -
எல்லாருக்கும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறையை முன்னிறுத்தி, தங்களது முன்னோர் இந்துக்கள் என்று ஏற்றுக்கொள்ளுகிரவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளித்து இந்தியா என்பதை ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும்.
எங்கள் முன்னோர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் ஓட்டுரிமை இல்லையா? எங்கள் முன்னோர்கள் மதங்களற்ற வானரங்கள் என்று ஏற்றுக் கொண்டால் ஓட்டுரிமை இல்லையா?
நான்கு - குடும்பக் கட்டுப் பாட்டுக்கு ஒத்துழைக்காத அந்த முஸ்லிம்களுக்கு - பதிலடியாக மத மாற்றத்தைத் தடை செய்வது - ஆனால் இந்துக்களாக யாரும் மாறுவதற்கு தடை விதிக்கப் படக் கூடாது. சாதி என்பது பிறப்பால் அல்ல மாறாக அது ஒழுக்க நெறி என்று அறிவிப்பது. இந்துக்கள் அல்லாதவர்கள் மீண்டும் இந்துக்களாக வரும் போது அவர்கள் விரும்பும் சாதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுப்பது.
உங்கள் அறிவிப்பில் எல்லாம் சரியாகி விடுமா? அப்பா சாதி ஒழியக் கூடாது - அதுதானே உங்கள் நோக்கம்.
ஐந்தாவது - இந்து மன நிலையை வேகமாக வளரச் செய்வது.
அதாவது சாதி மன நிலை அப்படித்தானே?

முடிவில் -
"Even if half the Hindu voters are persuaded to collectively vote as Hindus, and for a party sincerely committed to a Hindu agenda, then we can forge an instrument for change. And that is the bottom line in the strategy to deter terrorism in a democratic Hindustan at this moment of truth." - சுப்ரமணிய சுவாமி


இது நூற்றி ஐம்பதாவது பதிவு

6.10.11

சில அரசியல் காமெடிகள் - இந்த வாரம்

மறதி வாரம் - SELECTIVE அம்நிஷ்யா
  • உள்துறை அமைச்சர் ப.... சிதம்பரம் எனக்கு மறதி உண்டு என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார் - உங்களுக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் என்ன நடந்தது என்ற கேள்விக்கு..
  • சுபிரமனிய சாமி சூலை மாதம் எழுதிய ஒரு கட்டுரையைக் காரணம் காட்டி இப்போது சாமியைக் கைது செய்ய இருக்கிறது தில்லி போலிசு. சாமிக்கு மன்மோகன் சிங்கு தலையிடனுமாம். [இதைப் பற்றி நாளை கட்டுரை] ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்துதான் தில்லி போலிசு விழித்திருக்கிறது .. 
  • அதாவது பரவாயில்லை - சிபிஐ இருபது ஆண்டுகள் கழித்து ஒரு காமெடி பணியிருக்கிறது. என்ன காமெடியா செத்தவங்களுக்கு பரிசு மட்டும்தான் கொடுக்க முடியுமா தூக்கே தரலாம்னுதான்.
  • ராஜிவைக் கொன்ற தனுவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கிறது.சாகும் வரை தூக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை என்று கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதெப்படி செத்தவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு - இறந்தவரை எழுப்பி வந்து தூக்கில் போடுவார்களோ - அது ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரை எப்படியா... 
    • CBI தன்னைத் தானே காமெடி பண்ணிக் கொள்ளுகிறதா? இல்லை நம்மை வைத்துக் காமெடி பண்ணுகிறதா...
என்ன புடுங்குன?
  • பிடுங்குதல் சட்ட சபைக்குள் மட்டுமல்ல வெளியிலும் நடக்கிறது. சங்கரன் கோவிலில் விஷயகாந்தின் மைக்கை காவல் துறையினர் பிடுங்கினர் - னு செய்தி.
    • வீட்டுல அந்தக் காவலதிகாரியின் மனைவி கோபத்துல கூட என்ன பெருசாப் புடிங்கிப்புட்டன்னு கேட்க முடியாது. 
    • விஜயகாந்துதான் எலாத்தையும் புடுங்குவாறு அவருக்கேவா...
காந்தியவாதி காங்கிரசுக்கு எதிராய்
  • ஹசாரே காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகிறாராம். சீமானை ஆ ஊ வென்று சொன்னார்கள். வடக்கே இருந்தும் காங்கிரசுக்கு எதிர்ப்பாம். அது சரி ஹசாராவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. விட்டா காங்கிரசு தானாய் அழிந்து விடப் போகிறது. இன்றைக்கு கூட சத்ய பைட் பவனில் கலவரம் என்று எங்கள் அஞ்சா நெஞ்சம் உண்மைக் காங்கிரசுத் தலைவர் தங்க பாலு மூன்று பேரை நீக்கியிருக்கிரராம். 
    • அட... தங்க பாலுதான் இன்னும் தலைவரா?
நம்பிக் கெட்டதா?

  • அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வருமென்று சொன்னதை நம்பிக் கெட்டேன் என்று கலைஞர் ஐயா சொல்லியிருக்காகலாம். ஒரே முறை என்னை ஆட்சியில் வையுங்கள் - என் உயிர் பிரியும் முன் என்று சொன்னதை நம்பி நாமளும்தான் கேட்டோம். ஒவ்வொரு முறையும் இது கடைசி முறை கடைசி முறை...

4.10.11

மீண்டும் வெடிக்கும் அணு உலை விவாதம்

பத்ரி சேஷாத்ரி மிகவும் துணிச்சலாகவும், விவாத முறைகளையும் முன்வைத்து எழுதும் ஒரு நல்ல கட்டுரையாளர். அவரை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. அணு உலை பற்றி தமிழ் பேப்பரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் - இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அவர் எழுதிய கட்டுரைகளில் தெளிவின்றி, விவாத முறைகள் குழப்பப் பட்டு உள்ள கட்டுரை அல்லது கேள்வி பதில் என்றால் இதைச் சொல்லலாம் என்றே கருதுகிறேன். அது அவரது பிரச்சனை அல்ல - அவர் பதிவின் பொருள் அப்படி - "அணு." அதுதான் அவரை அலைக்கழித்து விட்டது என்று கருதுகிறேன்.

அவரது கட்டுரை கொடுக்காத சில உண்மையான தகவல்களை அதிலுள்ள பின்னூட்டங்களிலேயே காணலாம். இருந்தாலும் சில தெளிவுகள் தர வேண்டிய அவசியம் உள்ளதால் இந்தப் பதிவு. ஏனெனில் மீண்டும் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் அறிவிக்கப் பட்டிருக்கிற நிலையில் இதைப் போன்ற கட்டுரைகள் வரலாம் என்பதால் இந்தப் பதிவு.

இந்திய ஜனநாயகத்தில் மக்கள் போராட்டங்கள் பெற்றிருக்கிற வெற்றி ஜனநாயகம் வளர்ந்து வருவதற்கான வெற்றி என்று பாராட்டிவிட்டு,  பத்ரி [பலர் எழுப்பும் கேள்விகளுக்கு] தனது கேள்வி பதில்களுக்குச் செல்கிறார். 
என்னைப் பொறுத்தவரை - அவர் கேள்வியை முன்வைத்திருப்பதில் உள்ள கருத்துத் தெளிவு பதில்களில் இல்லை என்றே தோன்றுகிறது. 

முதல் கேள்வியின் சாரம் - அணுமின்சாரம் தயாரிக்க நிறைய செலவு ஆகிறது - மின்சாரமும் போதிய அளவு கிடைப்பதில்லை அப்புறம் ஏன் ஆபத்தான இதைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் என்று கேட்கிறார். 
இந்தக் கேள்விக்கான பதிலை - கேள்வியில் எங்கே தவறு இருக்கிறதென்று பார்ப்போம் என்று சொல்லி தவறையும் சுட்டிக் காட்ட வில்லை - அவர் எழுப்பிய கேள்விக்கான பதிலும் இல்லை. அதாவது இதில் மின்சாரம் தயாரிக்க நிறைய செலவு ஆகவில்லை என்பதோ அல்லது மின்சாரம் போதிய அளவு கிடைக்கும் என்பதோ அவரது பதிலாக இல்லை. அந்தப் பதில் எப்படிக் குழப்பப் பட்டிருக்கிறது என்று நீங்கள் தான் படிக்க வேண்டும். அதாவது இந்தக் கேள்வியின் தவறு என்பது நாம் அணு ஆயுதச் சோதனை செய்தது என்கிறார். வரலாற்றை நீங்கள் மாற்ற முடியுமா? அதாவது 20  ஆண்டுகளுக்கு முன்பே இவைகள் கட்டப் பட்டிருந்தால் இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது என்கிறார்.

  • இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டிருந்தாலும் அல்லது நிறைய மின்தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தாலும், அப்படி உலக அரங்கில் அவைகளைக் கட்டமைத்த நாடுகளில் இன்றைய பொழுதில் அவைகளை நிறுத்துவதற்கான முயற்சியில் இன்று இருக்கிறப் போது, இந்தியாவில் அப்படி முப்பது ஆண்டுகள் முன்பு அமைத்திருந்தாலும் இன்றைக்கு அந்தக் கேள்வி மீண்டும் எழவே செய்யும்.
இரண்டாவது கேள்வி - கதிர்வீச்சு அபாயம் பற்றி - அது ஆமாம் உண்மைதான் என்கிறார் பத்ரி. ஆனால் புகுஷிமாவில் கூட அத்தகைய கதிர்வீச்சுகள் ஏற்படவில்லை என்று பத்ரி சொல்லுகிறார்.  ஆனால் அது தவறு என்பதை புலவர் தருமி பின்னூட்டத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார். 
  • இந்தக் கேள்வியில் தான் பத்ரி தனியாய்த் தெரிகிறார். அதாவது நில நடுக்கம் இல்லாத இடங்களில்தான் அணு உலை அமைக்கிறார்கள் என்கிறார் - அப்படி முற்றும் வராத இடங்கள் என்று ஏதாவது இருக்கிறதா - அப்படி அறிவியலாளர்கள் ஒரு இடத்தைக் காண்பிக்க முடியுமா - நிலத்தின் தன்மையை வைத்து இங்கே ஏற்படுவது கடினம் என்று சொல்லலாம். ஆனால் அப்படிப் பட்ட இடங்களிலெல்லாம் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நினைவு படுத்தலாம்.  
  • சரி அப்படியே நில நடுக்கம் ஏற்படாத பகுதிகள் என்றால் - அதற்காக மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் வைக்க முடியுமா? பின்னூட்டத்தில் உள்ளது போல அண்ணா நகர் பக்கத்திலோ, அல்லது கடல் அருகில்தான் வைக்க வேண்டும் என்றால் மும்பையிலோ அல்லது கொச்சினிலோ வைக்கலாமே.  
  • இவ்வளவு பணிகள் முடிவடைந்த நிலையில் இதைக் கைவிட முடியுமா என்று அடுத்த கேள்வியைக் கேட்கலாம் - அதற்காக முப்பது வருஷத்துக்கு முன்னாடி உள்ள அருதப் பழசை இப்பக் கட்டி அழனுமா என்ன?
  • அப்படி ஏன் இந்த அபாயத்தை நாம் கட்டி அழணும்னா நமக்குத் தேவை இருக்கு அப்படின்கிறார் பத்ரி. இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும் - இது எவ்வளவு மின்சாரத் தேவையை நிறைவேற்றும் என்று பதிலைச் சொல்லாத வரை இதைப் பற்றி பேச முடியாது. ஆனால் இதற்குச் செலவழிக்கும் தொகையையும் அதனுடைய பராமரிப்புச் செலவுக்கும், சில ஆண்டுகள் கழித்து மூட வேண்டிய அவசியம் உள்ள இந்த அணு உலைகள், கழிவுகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்றெல்லாம் பார்த்தால் - இதனால் கிடைக்கும் மின் உற்பத்தி அதிகம் என்று சொல்லுவதிர்கில்லை.
  • எல்லா மின் நிலையங்களும் மிகப் பாதுகாப்பானவை - உடனே கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்யுமாம் - ஆனால் புகுஷிமாவில் அது நிகழாமல் போனதற்கு காரணம் மனித காரணமாம். இதனால்தானே மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இது ஒத்து வராதுன்னு. 
  • ஜப்பானிலேயே இப்படி என்றால் நமக்கெல்லாம் இது சரி வராது என்கிற வாதம் தவறு என்றும், இந்தியாவிலே கவனமின்மை என்பது படிக்காதவர்களிடமிருந்தும் சாக்கடை அல்லுபவர்களிடமிருந்தும், மின்சாரம் திருடபவர்களிடமிருந்தும் தான் வருகிறது என்றும் அழுத்திச் சொல்லுகிறார். இதற்கு படிப்பவர்கள்தான் [இந்தப் பதிவைப் படிப்பவர்கள்] பதில் சொல்ல வேண்டும். அணு மின் உலையைப் பொறுத்த வரை எல்லாம் படித்த விஞ்ஞானிகள் தான் வேலை செய்வார்களாம். அதனால் எந்தக் கவனமின்மையும் நிகழாதாம்.
  • அதாவது இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் இன்னும் நமக்குச் சரியாகப் புரியும். ' இந்தியாவில் கவனக் குறைவினால் ஏற்படும் விபத்துக்கள் படிக்காதவர்களிடமிருந்துதான் வருகிறது. அப்படியானால் படித்தவர்கள், நிச்சயமாய் கவனத்தோடும், ஆழ்ந்த அறிவுப் புலத்தொடும், மிகவும் பொறுப்புணர்வோடும் அல்லது ரெச்பான்சிபிலாகவும் நடந்து கொள்ளுவார்கள். இதைச் சரி என்றால், எங்கெல்லாம் விபத்து நடக்கிறதோ அங்கெல்லாம் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் - எங்கெல்லாம் பொறுப்புணர்வு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்றுதானே பொருள்.  நான் செய்வது விதண்ட வாதம் என்று எனக்குத் தெரியும். ஆனால் "நம் நாட்டில் நடக்கும் கவனமின்மை காரணமான தவறுகள், கல்வி அறிவு அற்றவர்களிடமிருந்து ஏற்படுகிறது. அது பூச்சிமருந்தைச் சரியாகப் பயன்படுத்தாதலிருந்து மின்சாரத்தைக் கொக்கிபோட்டு இழுப்பதிலிருந்து சரியான பாதுகாப்புக் கவசங்களை அணியாமல் சாக்கடையை அல்லது கழிப்பறைக் கிடங்குகளைச் சுத்தம் செய்வதுவரை செல்கிறது." - இந்த பதிலுக்கு வேறெப்படி பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் சொல்லுவதே உண்மைஎன்றால் இந்திய அரசின் முதல் கவனம் முழுவதும் இந்திய தேசத்தை கல்வியறிவு உள்ள நாடாக ஆக்குவதற்குத் தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படித் தானே எல்லாரையும் படிப்பறிவு உள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்ற முடியும்.
  • அது மட்டுமல்ல இந்தியா என்கிற தேசத்தை மிகவும் பாதுகாப்புள்ளதாக, இந்த தேசம் இப்படித் தான் இருக்கும் என்கிற எண்ணத்தை அணு உலைப் பாதுகாப்பிலிருந்து தொடங்குவோம் என்கிறார். எனக்கு அந்த நம்பிக்கையின் மீது சந்தேகம் இல்லை. இந்தியா மிகவும் பாதுகாப்பான மற்றும் பொறுப்புணர்வு உள்ள குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதிலோ அல்லது அப்படி வருவோம் என்பதிலே எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இந்தப் பாதுகாப்பிலிருந்து மாற்றத்திற்குப் போவோம் என்பதுதான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிய வில்லை.  அது எப்படி அணு உலையிலேர்ந்து சாதாரண குடிமகன்களின் பொறுப்புணர்வுக்குப் போக முடியும் என்பதே கேள்வி. 
அடுத்து பத்ரியின் கேள்வி - மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஏன் இதை அமைக்க வேண்டும் என்பதற்கு நாட்டில் எங்கே மக்கள் இல்லை என்கிற கேள்வியைக் கேட்கிறார். அதோடு மக்களே எதிர்பார்க்காத அளவுக்கு நஷ்ட ஈடு கொடுத்து அவர்களை மாற்று இடங்களில் அமர்த்த வேண்டும் என்கிறார். அதாவது கூடங்குளம் பகுதியில் மக்கள் அடர்த்தியாக வசிப்பது போலத்தான் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் குடியிருப்பதாகச் சொல்லுகின்றார் - அப்படியெனில் இந்தியா சீனாவை முந்தியிருக்க வேண்டு எண்ணிக்கையில்- சரி அதை விடுங்க...

அடுத்தது அணுஉலைக் கழிவுகள் பற்றியது - ஆமாம் அது அபாயம்தான் - என்கிறார். ஆனால் எதிர் கொள்ளக் கூடிய பிரச்சனை என்று சொல்லுகிறார்.
அதே போல மரபு சாரா முறைகள் வழியாக மின்சாரம் தயாரிப்பதால் இப்போதையத் தேவையை நாம் நிவர்த்தி செய்ய முடியாது என்பதோடு மட்டுமல்ல நாம் இதைப் பற்றி நியமான கேள்விகள் எழுப்பலாம் ஆனால் அதிகமாக பயமுறுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது என்பதோடு கட்டுரை முடிகிறது.

  • கேட்கப் படுகிற கேள்விகளுக்கு சரியான விளக்கம் இருந்தால் யாரும் மீண்டும் மீண்டும் கேட்கப் போவதில்லை. ஒவ்வொரு முறையும் கேட்கப் படும் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை என்பதனால்தான் மீண்டும் மீண்டும் கேட்கப் படுகின்றன. நியமான கேள்விகளை எழுப்பிய பத்ரியின் கேள்விகளுக்கே அவராலேயே நியாயமான பதில்களைச் சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். 
  • பத்ரியின் கட்டுரையைப் படிப்பவர்கள் எல்லாரும் அவரது கட்டுரையில், கேள்விகளையும் அதைத் தொடர்ந்து வரும் முதல் பத்தியை மட்டும் படித்தீர்களானால், அணு உலை ஆபத்து என்பது எவ்வவளவு அதிகம் என்று தெரியும். எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ளுகிற அவர் ஏன் இன்றும் அணு உலை தேவை என்பதைத் தெளிவின்றியே - குழப்பியே எடுத்து வைக்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் - நான் மன்மோகனைக் குறை சொல்வேன். அது சரியில்லை, இது சரியில்லை ஆனால் யாருக்கு அடுத்த முறை ஓட்டுப் போடுவாய் என்று கேட்டால் மன்மோகனுக்குத் தான் என்று நான் சொல்லுவது எவ்வளவு அபத்தமோ அப்படித் தான் அணு உலை அபாயமும். அணு உலை அபாயம்தான் ஆனால் அதுதான் வேண்டும் என்பது. 
  • அல்லது இப்போது உள்ள சூழலில் மன்மோகன்தான் ஒரே சாய்ஸ் என்பது போல அணு தான் ஒரே சாய்ஸ் என்று வாதிடலாம். அது தவறு - மாற்று பற்றி எதுவும் யோசிக்காமல், அது ஒத்து வராது என்பது தவறல்லவா. மாற்று வழி மின்சாரம் எதையும் முன்னேடுக்காமலேயே -[உ.ம். சூரிய ஒளியிலிருந்து] அதெல்லாம் ஒத்து வராது என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.
  • பத்ரியின் கேள்வி மற்றும் பதில்களின் முதல் பத்தி அடிப்படையில் பத்ரி அணு உலை எதிர்ப்பாளராகவே தெரிகிறார். 
  • ஆனால் ஏன் இதற்கும் மேலான கருத்துக்களை உள்ளடக்கி தமிழ் பேப்பரிலேயே வந்த கட்டுரைகளைஎல்லாம் கவனிக்க மறந்தார் என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதிகளை வாசிக்க இணைப்பான்களைச் சுட்டவும்.

பத்ரியின் முரனான கருத்துக்களுக்கு புலவர் தருமியின் பின்னூட்டம் - கட்டுரையின் பக்கமே.

சிறில் அலெக்ஸின் இரண்டு கட்டுரைகள்.

பாமரனின் கடிதம் - சோவியத் அதிபருக்கு 





3.10.11

வாசிப்பாளர்களை கவர்வது எப்படி?

முதலில் வந்ததுற்கு நன்றி - 

வாசிப்பாளர்களை கவர்வது எப்படி? என்கிற கேள்விக்கு இப்பதிவு முழுமையைப் பதில் சொல்லுமா என்பது தெரியாது. நான் பதிவுலகில் மீண்டும் நுழைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகம் பார்க்கப் பட்ட ஒரு பதிவினை கொண்டு பதில் சொல்லலாமென்று நினைக்கிறேன்.

இதுவரைக்கும் எந்தப் பதிவுகளும் நோட்டமிடாதப் பட அளவுக்கு "சூப்பர் சிங்கர் கலாட்டா" பார்வையிடப் பட்டிருக்கிறது. இதுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு முறைக்கு மேல் பார்வையிடப் பட்டிருக்கிறது. இது எனக்கு உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. பார்வையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -

ரூம் போட்டு யோசித்து எழுதிய பதிவுகள் கூட சில சமயங்களில் நூறைத் தாண்டாது. ஆனால் நடைமுறையில் மிகவும் பாப்புலரான சினிமா, தொலைக் காட்சி, கிரிக்கெட் இவைகள்தான் அதிகம் வாசிக்கப் பட்டிருக்கிறது. இன்றும் வசிக்கப் படுகின்றன -

அதிகம் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்கிற பதிவுலக நண்பர்கள் சினிமா, தொலைக் காட்சிகள் பற்றி எழுதலாம். மிகச் சிரமப் பட்டு தலைப் பெல்லாம்  தேட வேண்டியதில்லை. 

இது ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப் படக் கூடிய விஷயம்தான். ஏனெனில் இந்தியாவை விட்டு வெளியிலிருக்கிற நண்பர்கள் தங்களது பொழுது போக்கிற்காகவும் உற்சாகம் தரக் கூடிய பதிவுகளையும் தேடி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கிற பார்வையாளர்களும் அப்படி இருப்பதைத் தான் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. அதற்காக வெளியூரில் வசிப்பவர்கள் காத்திரமான பதிவுகளை வாசிப்பதில்லை என்றோ தமிழக வாசிப்பாளர்கள் சீரியசான விஷயங்களை படிப்பதில்லை என்றோ பொருள் கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் நானும் எழுத முடியாது இங்கே யாரும் வந்து படிக்கவும் முடியாது.
சூப்பர் சிங்கரை படித்தவர்கள் எல்லாம் இந்தப் பதிவையும் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனாலும் நன்றிகள்.
ஒரு முக்கியமான விஷயம் - அதிகம் பார்க்கப் பட்ட இந்தப் பதிவு ஒருவரைக் கூட என் நண்பராக இந்த வலைப் பூவில் இணைய இழுத்து வரவில்லை. இந்த உண்மையையும் பதிவு செய்ய வேண்டும்.

நான் இந்த ஆச்சரியத்தில் உறைந்து போக வில்லை - அதை விரும்பவும் இல்லை. மிக விரைவில் அல்லது நாளையே கூட அதிகமாக பார்வையாளர்களை கொண்டு வராத பதிவு ஒன்று வரும். அதிலேயே நான் நிறைவு கொள்ளுகிறேன்.

நன்றி

------------------------------------------------------
பின்னூட்டம்
இந்தப் பதிவை நான் எனது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளவே எழுதினேன். கடந்த கட்டுரையும் ஒரு விஷயத்தை என் பார்வையில் இருந்தே அணுகினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டேன். அதோடு அதில் யாரும் நெருங்கி வர வில்லை என்கிற விஷயமும் ஆச்சரியத்தைத் தந்தது என்று சொன்னேன். அவ்வளவே.
அதனால் எல்லாரும் சீரியசாத் தான் பதில் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களது பதிவையும் மகிழ்வோடு படிக்கிறேன். சினிமா பற்றிய பதிவுகளையும் அல்லது கணணி பற்றிய தெளிவு கொடுக்கிற செய்திகளையும் படிக்கிறேன். அவர்கள் அப்படியே தொடர்ந்து எழுதவும் வேண்டும் என்பதும் என் ஆவல். நானும் இடையில் ஜாலியாகவும், மொக்கைப் பதிவுகளும் எழுதகிறேன். எல்லாமே நல்லா இருக்குன்னு என்னாலே சொல்ல முடியாது.
அதனால உங்கள் பாணியில், உங்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எழுதுங்கள். எல்லாம் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை - சோகம், மகிழ்ச்சி, சீரியசான தருணம் --
வாழ்க வளமுடன்.

1.10.11

சூப்பர் சிங்கர் கலாட்டா

சூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும்.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டுமா என்றுதான் எழுதாமல் இருந்தேன். ஆனால் நேற்று முன்தினம் சத்யாவிற்காக அனைத்து இசையுலக ஜாம்பவான்களும் பாராட்டுக் கொடுத்ததைப் பார்த்த போது சரி எழுதுவோம் என்று தோன்றியது.

இசை என்பது எல்லார் மனதையும் வருடக் கூடியது. இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை - நீட்ஷே உட்பட. அவருக்கும் வாக்னருக்கும் ஆன உறவு இசையால் எழுந்தது  - பின்பு ஈகோவால் அழிந்தது. சரி விஷயத்திற்கு வருவோம். அப்படித்தான் இந்த இசை நிகழ்ச்சி எனக்கு சில வேளைகளில் மகிழ்ச்சி தந்தது.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிவுகள் பல பேருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. எனக்கு அப்படி இருந்தது. மிகவும் நன்றாக சத்யா பாடினார். சாய் நன்றாகப் பாடினார். அப்படித்தான் சொல்ல முடியும். ஆனால் மக்கள் வாக்கு ஏன் சாய்க்கு அதிகமாகக் கிடைத்தது என்பது பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

முதலில் - அந்த மக்கள் வாக்கு என்பது உண்மையானதா என்பதிலேயே சந்தேகம். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வாக்குகள் போடலாம் - போடலாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மக்கள் கையில் முடிவு இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி. ரேட்டிங்கைக் கூட்டுவதற்கான முயற்சி - இதில் சில நடுவர்களின் ஒத்துழைப்பு இன்றி இந்த நிகழ்ச்சியை அவ்வளவு சஸ்பென்ஸ் உள்ளதாகக் காட்டிக் கொள்ள முடியாது.

மக்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பவதால் ஸ்பான்சருக்கு லாபம் - தான் விரும்பியவருக்கு பட்டம் கொடுக்கலாம். மக்கள் கொடுத்தார்கள் என்று சொல்லலாம். கேட்டால் நாமளா ஒரு எண்ணிக்கையைக் கொடுக்கலாம். வோயில்டு கார்ட் ரவுண்டில் சாய் சரண் தேர்ந்தெடுக்கப் பட்ட போதே அந்தச் சந்தேகம் இருந்தது. அதை மக்கள் எதிர்பார்க்காதவருக்குக் கொடுக்கலாம். அப்படியாக அந்த நிகழ்ச்சியினை பார்க்கும் எண்ணிக்கையை அதிகப் படுத்திக் கொள்ளலாம். இதுதான் அவர்களது நோக்கம்.

அது சிம்புவின் அழுகையாக இருக்கட்டும் - ரம்பாவின் கோபமாக இருக்கட்டும். இதில் என்ன செய்யலாம் என்று பார்த்தார்கள் - சத்யா நன்றாகப் பாடுகிறார் ஆனால் சாய் பட்டம் வெல்கிறார். பிறகு இசைக் கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து சாயை விட ஏறக்குறைய நாற்பது மார்க்குகளை சத்யா பெற்றிருக்கிறார் என்று விளக்கம் வேறு. உண்மையிலேயே இதுதான் எண்ணிக்கை என்றால் இந்த எண்ணிக்கையை மேடையில் அறிவிப்பதற்கு என்ன வந்தது? - உண்மையில் அப்போது எண்ணிக்கை இருந்திருக்காது. அவ்வளவுதான் - அந்த முடிவு வந்தால்தான் போட்டி முடிந்தும் திருப்பி ஏர் டெல் சூப்பர் சிங்கர் இந்த வாரமும் ஒளி பரப்ப முடியும். ஆக மொத்தம் விறு விறுப்பாக நடத்தப் படவே ஒரு நிகழ்ச்சி.

எண்ணிக்கை கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் - வாக்குகள் ஓரளவிற்கு உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் - இது மக்கள் நடுவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. சஸ்பெண்சிற்காக நடுவர்கள் ஆடிய ஆட்டம் போல மக்கள் ஆடியிருக்கிறார்கள் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது. நடுவர்கள் எல்லாம் எழுந்து கை தட்டி விட்டால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுபோலவும் - அவர்கள் சொல்லியதற்கு மறு வார்த்தை இல்லை என்பது போலவும் இருந்ததற்கு மக்களின் பதில்.

ஒரு உதாரணம்.

கடைசி வாரத்தில் மூன்று பேர் மட்டும் பாடிய முதல் நாளில் சத்யாவிற்கு எல்லாரும் ஆறு மதிப்பெண் கொடுத்த போதே நான் முடிவு செய்து விட்டேன் - நிச்சயமாக சத்யா முதல் இரண்டு பேரில் உள்ளே இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று. ஏன்னா ஆறு மார்க்கு வாங்கி இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவது என்பது கஷ்டம் - அப்படி எல்லாரையும் நினைக்க வைத்து கடைசியில் மிகவும் சர்ப்ரைசாக சாயை விட புள்ளி ஐந்து மதிப்பெண்கள் வாங்கி உள்ளே நுழைந்ததாக நடுவர்கள் அறிவித்தார்கள். சாய் வெளியேறினார். மீண்டும் மலையாள வாடையோடு உள்ளவர் உள்ளே அனுப்பப் பட்டார். இத்தனைக்கும் அந்த வாரத்தைப் பொறுத்த வரைக்கும் உள்ள நான்கு நாட்கள் பெர்பார்மன்சில் சாய் இரண்டு பகுதிகளில் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றார் - சத்யா ஒன்று - பூஜா ஒன்று - ஆனால் சத்யா புள்ளி. ஐந்து கூடப் பெற்றதாகச் சொன்னார்கள். நடுவர்கள் சரியான தீர்ப்பு வழங்காத பொது மக்கள் கேட்பதற்கு முடிய வில்லை.
ஆனால் அன்று ஒருவேளை சத்யா வெளியேறி சாயைப் போல போட்டி போட்டு வந்திருந்தால்சத்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒருவனை எப்படி நோகடிக்க முடியுமோ அப்படி நோகடித்து - எல்லாரையும் நோகடித்து எதிர்பார்க்காத சஸ்பென்சை சீரியல் போல அளிப்பதில் அவர்களுக்கான ரேட்டிங்கைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

சரி ஏன் சாய் சரணைத் தேர்ந்தெடுத்தார்கள்?

1 . ஏற்கனவே மூன்று வருடங்களாகச் சாய் சரணின் தொல்லை தாங்கலை - இப்போது பட்டம் வெல்ல வில்லையென்றால் மீண்டும் அடுத்த சீசனிலும் வந்து விடுவாரோ என்ற பயம்

2 . ஏற்கனவே நான்கு சீசன்களில் மூன்று மலையாள சகோதர சகோதரி வந்து விட்டார்கள் - எனவே இந்த முறையாவது ஒரு தமிழ் பிராமனருக்கு கொடுப்போம் என்று இருந்திருக்கலாம்.

  • எது எப்படியோ விஜய் ஸ்டார் தனது பார்வையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டது.

  • எனக்கு இன்னும் புரியாத விஷயம் - ஏன் நம்ம கோபிநாத் எழுந்து எழுந்து நின்று தபேலா வாசித்தார் என்பதுதான்.  
  •  சத்யாவிற்குப் பிறகு எனக்குப் பிடித்த குரல் கவுதம் தான்.