4.8.15

எதற்காகத்தான் போரிட முடியும்?

போகிற போக்கைப் பார்த்தால் நம் நாட்டில் _____________ வாழ்க என்கிற பேரணிகளிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பும் பந்தோபஸ்தும் கிடைக்கும் போலத் தெரிகிறது.

இன்னும் ஒன்றிற்கும் அந்தப் பாக்கியம் உண்டு. –எங்கள் வீதியில் டாஸ்மாக் இல்லை. அங்கே வேண்டும் என்ற போராட்டம் நிச்சயமாய் அனுமதிக்கப் படுவதுமட்டுமல்லாமல் பாதுகாப்போடு நிச்சயமாய்க் ஏசி பாரோடு கூடிய கடையும் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிர வேறொன்றுக்கும் இங்கு அனுமதியும் இல்லை அவசியமும் இல்லை.

ஏறக்குறைய ஒருமாதத்துக்கும் மேலாய் இரு சக்கர வாகனத்தில் செல்கிற நண்பர்கள் அல்லோலப்பட்டு, சில பேர் காவல்துறை அதிகாரிகளிடம் இன்னும் மாட்டாமல் டபாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது தவறில்லைதான். ஆனால் வேகாத வெயிலில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை பள்ளம மட்டுமே உள்ள ரோட்டில் போவது சாதனைதான். 

விபத்தினால் உயிர் இழந்தது ஹெல்மெட் அணியாததால்தான் என்று ஒரு வழக்கை விசாரிக்கப் போய் நீதிபதிகள் இத்தக கட்டாயமாக்கி இருக்கிறார்கள். ஒழுங்கான சாலைகள் இல்லாததால்தான் விபத்துக்களே நடக்கின்றன என்று அரசுக்கு செப்டம்பர் ஒன்றுக்குள் அந்த நீதிபதிகள் கெடு வைக்கலாமே. நிற்க.

வெறும் தூண்களோடு நின்று போன மேம்பாலப் பணிகள், சாலை செப்பனிடாமல் பள்ளம் உள்ள சாலைகள், இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன மக்களும் வணிகர்களும், பல மனுக்களைக் கொடுத்த பிறகும் அரசு செவிசாய்க்காமல் இருந்ததால் அவர்களே ஏழு லாரிகளில் தார் ஜல்லி தயாராக வைத்து சாலை போடப் போனால், அவர்களைக் கைது செய்து உள்ளே வைத்தது மட்டுமல்லாமல் அந்த ஏழு லோடும் ஸ்வாகா ஆனது. 
ரோடு போட்டது ஒரு குத்தமா. உங்களைய ரோடு போடச் சொன்னாதான் குத்தம். நாங்களா போட்டாலும் குத்தமா?

பள்ளிக்கு அருகில் இருக்கும் சாராயக் கடையை மாத்தச் சொல்லி நீதி மன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்து, அதற்கும் செவி சாய்க்காமல், சசி பெருமாளின் உயிரைக் குடித்த பிறகு அதைப் பூட்டியிருக்கிரார்கள். 

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் அனைவருக்கும் சிறை. நீதி மன்ற உத்தரவை ஒரு இடத்தில் மட்டும் நிறைவேற்றத் தயங்கும் காவல்துறை, தமிழக அளவில் ஹெல்மெட் விஷயத்தில் ஆர்வம காட்டுவது மட்டும் ஏன்?

ஒரு விஷயத்தில் சட்டத்தை மதிக்கும் காவல் துறை மறு விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறது?
ஒரு விஷயத்திற்கு மட்டும் தானாக வந்து சட்டம் போடும் நீதி மன்றம் இந்த விஷயத்தை தானாக எடுக்க ஏன் தயங்குகின்றது.?
 வருமானம் வரும் விஷயத்திற்கு மட்டும்தான் சட்டமா?