31.12.13

(நம்மாழ்வார்) இறுதியும் (ஆம் ஆத்மி) தொடக்கமும் 2013 - 4

வருடக்கடைசியில் முக்கியமான நிகழ்வுகள் குறித்து எழுதுவது 
மரபு என்பதனால் அதை மீற முடியவில்லை. 
(உருப்படியா ஒன்றும் எழுதவில்லை என்பதை எவ்வளவு நாகரிகமாக சொல்ல வேண்டியிருக்கிறது
அது போலவே இந்த வருடத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்தோமா 
என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.)
  • ஐ லவ் அமெரிக்கா நாட் தேவயானி 
    • இது போலவெல்லாம் நானே சொல்வேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நடக்கும் நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன. வெறும் தனது திறமையை மட்டும் ? வைத்து உயர் பதவியில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் தேவயானி மற்றும் அவரது தந்தையையும் நமக்கு இதற்கு முன்பு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் இந்த வயதில் பல முறை கேடுகளில் சிக்க ஒரு சிறு விஷயம் உதவி இருக்கிறது. விசா ஏமாற்று அதைத் தொடர்ந்து ஆதர்ஷ் குடியிருப்பில் வீடு வாங்கியது என்று நீண்டு கொண்டே போகிறது. இது அப்படியே இனிமேல் மறைக்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் சமாஜ்வாதி கட்சி MLA சீட் தர தயாராயிருக்கிறது - இயக்குனர்கள் யாரவது ஹீரோயின் அல்லது வில்லி வாய்ப்பு கூட கொடுக்கலாமப்பா...  
      • ஊழல் செய்தால் சீட்டு நிச்சயம். அப்துல்கலாமைத் தடவிப்பார்த்த போது இல்லாத தவிப்பு தேவயானிக்கு இருக்கும் பரபரப்பை பார்த்தால் - வடக்கில் பிறப்பது எவ்வளவு அவசியம் என்பதும், அப்படி முடியாத பட்சத்தில் ஓரளவு ஊழலாவது செய்வது அவசியம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
  • மரணம் - அனுதாபங்கள்
    • Walker - ன் மரணம் மிகப் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது திரைப்படத்தின் தலைப்பை போலவே வாழ்க்கை அவ்வளவு விரைவாய் முடிந்து போனது. இதுவே திரைப்படமாய் இருந்திருந்தால் நிச்சயம் அவர் தப்பியிருப்பார். மரணம் கொடுமையானது. திரைப்படத்தில் பல முறை உயிர் தப்பியவர் நிஜ வாழ்க்கையில் ஒரு முறை கூட தப்பவில்லை என்பது வேதனையே. 
    •  நெல்சன் மண்டேலா உடல் நிலை சரியில்லாத போதே இறந்து போனதாக முகநூலில் அஞ்சலி செய்தார்கள். இப்போதுதான் உண்மையான அஞ்சலிக்கு வேலை வந்தது. நிஜத்தில் பல முறை இறந்திருந்தாலும் எப்போதும் வாழ்பவர் அவர். 
      • இறப்பதோ ஒரு முறை. அதற்கு முன்பு கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் மண்டேலா போல. 
      • இறப்பு எப்படியும் வரும். இங்கிலாந்துக்கு டயானா போல அமெரிக்காவிற்கு வாக்கர். டயானா போல கொஞ்சம் ஆசணத்தில் இருந்து இறங்கி வாருங்கள். 
      • இந்தியாவிற்கு காந்தி போல தென் ஆப்பிரிக்காவிற்கு மண்டேலா. சுடப்பட்டாலும் கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் காந்தி போல. 
      • திடீரென இறந்தாலும், இயற்கையை நேசியுங்கள் நம்மாழ்வார் போல. இயற்கையோடு இயைந்து வாழுங்கள் அவர் போல!
    • நம்மாழ்வார் - திடீரென இறந்து இந்த ஆண்டின் சோகத்தை அதிகப் படுத்தி விட்டு சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை மட்டும் நம்பி, பாலை நிலத்தில் உறங்கிக் கிடந்த உயிரைத் தட்டி எழுப்பிய மகான்... போராட்ட நேரத்தில் மடிந்து பலருக்குள் உயிராய் கிளர்த்தெழுவார் என்று நான் நம்புகிறேன். விவசாய நாட்டுத் தலைவர்கள் நம்மாழ்வாரின் கருத்தை இப்போதாவது கேட்பார்களா? 
  • புதிய ஆண்டு 
  • ஜாதகம்
    • கணித மேதை ராமானுஜத்தை யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, கணக்கு பண்ணுவது மட்டும் எல்லாருக்கும் பிடிக்கிறது - உலகம் பூராவும். கணக்கு பிணக்கு என்றாலும் பொதுவாய் கணக்கிடுவது பிடிக்கிறது. கடந்த ஆண்டு பூராவும் மாயன் காலண்டர் பற்றி பேசினோம். வரப் போற ஆண்டைப் பற்றி அதற்குள் அடுத்த கணக்கு வந்துவிட்டது. 1947 ம் 2014 ம் ஒரே காலண்டராம்.. அதனால் அடுத்த விடுதலையைப் பற்றி எல்லாரும் அவதானிக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடிதான் அந்த விடுதலைப் போராட்ட தலைவர் எனவும், அடுத்த தேர்தல் முடிவுகள்தான் விடுதலை நாள் என்றும் பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. நானும் எனது பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா? 
      • விடுதலை சரிதான் 1947 நமது நாட்டில் பிளவு ஏற்படாமல் இருந்தால் சரி.
  • புதிய ஆண்டு
  • ஆம் ஆத்மி -
    • பெரியாரின் போராட்டக் கழகத்திலிருந்து தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த அண்ணாவின் தி. மு. கழகம் போல - அன்னா ஹசாரேவின் போராட்டக் களத்திலிருந்து அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி புறப்பட்டிருக்கிறது. அண்ணாவின் தி. மு. க. மிகப் பெரும் வெற்றி பெற்றது போலவே மிகச் சிறந்ததொரு வெற்றியை டெல்ஹியில் பதிவு செய்திருக்கிறது ஆம் ஆத்மி. 
    • எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் மிகப் பெரும் விடுதலையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதை வைத்தே கணிக்க முடியும். மக்கள் சார்பாக இப்போது போல எப்போதும் நிற்கும் என்று நிறைய எதிர் பார்க்கிறோம். ஒரு நாளைக்கு 700 லிட்டர் நீர், அரசு அதிகார்களின் மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது போன்ற நிறைய உத்திரவாதங்கள்... நல்ல தொடக்கம். இது போன்ற தொடக்கங்கள் தான் 2013 - ன் சோகங்களை பின்னுக்குத் தள்ளி நம்பிக்கையோடு வாழ வழி வகுக்கின்றன. 
    • தில்லியில் உள்ள ஆம் ஆத்மிக்கு கொடிகாத்த குமரனின் திருப்பூரில் ஒரு கிளை.... மக்கள் போராட்ட களத்தில் நிற்கும் உதய குமாருக்கு அழைப்பு என தமிழகத்திலும் ஏழை மக்களின் - (அரசு அதிகார எந்திரங்களுக்கு மத்தியில் சாதாரண மக்கள் எல்லாரும் ஏழைகள் தானே)- விடுதலைக்காய் உழைக்கும் தலைவர்கள் ஒன்று சேர வேண்டியது அவசியமாகவே படுகிறது. நிறைய மண்டேலாக்கள் - நிறைய நம்மாழ்வார்கள் - ஓரணி சேர வேண்டியது அவசியமாகிறது.
    • இப்போது 2014 இன்னும் ஒரு விடுதலை ஆண்டாய்தான் தெரிகிறது.
  • இன்னும் ஒரு உன்னதமான விடுதலையை அகிம்சை வழியாய் சாத்தியப் படுத்துவோம் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம். 
வாழ்த்துகள்!  

12.12.13

நானும் என் (கை) எழுத்தும்


நானும் என் (கை) எழுத்தும் 
- அ. பிரபாகரன் 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 வழக்கம் போல் இந்த முறையும் சங்கல்பம் செய்து கொண்டேன். இனிமேல் வாரம் ஒருமுறை எதையாவது எழுதுவது என்று. சரி. இந்த முறை நானும் என் எழுத்தும் என்று எழுதிப் பார்க்கலாமே என்று நினைத்தேன். இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு நான் என்ன சுஜாதாவா அல்லது நாஞ்சில் நாடனா என்று நீங்கள் நினைக்கக் கூடும். 
அவர்கள் மட்டும்தான் எழுத வேண்டுமா? தன்னை எழுத்தாளனாக நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் எழுத உரிமையிருக்கிறது.
எழுதுகிற ஒவ்வொருவனுமே தன்னை எழுத்தானாக நினைத்துக்கொண்டுதான் எழுதுகிறான். மற்றவர்களையும் அப்படி நினைக்க வைப்பதில்தான் அவன் வெற்றி இருக்கிறது. 

வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் என்னால் பிறரை அப்படி நினைக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நானும் என் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. சரி! அது போகட்டும். 

நானும் என் எழுத்தும் என்ற தலைப்பின் தொடக்கம் 1975 ம் வருடம் ஜூன் மாதம் மறவமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்குகிறது. எல்லாக் கேள்விக்கும் டாண் டாண் என்று பதில் சொல்லி வகுப்பில் முதல் மாணவனாக வரும் எனக்கு கையெழுத்து கேவலமாக இருக்கிறது என்பதை சரஸ்வதி டீச்சர் கண்டுபிடித்துச் சொன்னார். பிறகு வந்த வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்களால் என் கையெழுத்து பிரதானமாக விவாதிக்கப்படும். மூன்றாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் நான் முதன் முறையாகப் பென்சில் வைத்துப் பேப்பரில் தேர்வு எழுதியபோது, ராஜசேகர வாத்தியார் என் வினாத்தாளை மட்டும் எல்லா மாணவர்களுக்கும் முன்பாகத் தூக்கிக் காட்டி, "இங்க பாருங்கடா, கொமட்டிக்கிட்டு வருது", என்று கேவலப் படுத்தியது நினைவுக்கு வருகிறது. 

என் தந்தைக்கு மாற்றம் கிடைத்து நான் வேறொரு கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்தபோது, ஐந்தாம் வகுப்பில் எனக்கு ஆசிரியையாயிருந்த மிக்கேலம்மா என்னும் கன்னியாஸ்திரி 'சுத்தமாக எழுது' என்று புறங்கை மொழியிலேயே அடிப்பார். ஆனால் எத்தகு தண்டனைகளையும் என் கையெழுத்து ஏற்றுக்கொண்டதில்லை.

என் கையெழுத்து என் பழக்க வழக்கங்களைப் போலவே எப்போதும் திருந்த மாட்டேன் என்றது. என் மாணவப் பருவத்திலிருந்து என் கையெழுத்து என் ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாகவும், என் குறைபாடுகளின் பிரதிநிதியாகவுமே தென்படுகிறது.
மானுடத்தின் மறுபுறம் குறைபாடுகள்தானே. அறிவியலல்லாத மானுடம் சார்ந்த படிப்பு படிக்கிற ஒருவனுக்கு தேர்வுகளில் கையெழுத்து எவ்வளவு முக்கியம் என்பதை நன்றாகப் படித்தும் தொலைதூரக் கல்வித்தேர்வுகளில் தோல்வியடைந்த ஒருவனால்தான் புரிந்துகொள்ள முடியும்.

பள்ளிப் படிப்பு முடிந்த காலத்தில் காந்தியின் சுயசரிதையை வாசிக்க நேர்ந்து, காந்தியின் எழுத்தும் அசிங்கமாகத்தான் இருக்கும் என்று படித்தபோது, 'பரவாயில்லை, நாம் காந்தியைப் பின்பற்றுவதற்கு இது ஒன்றாவது கிடைத்ததே' என்று பெருமைப் பட்டுக்கொண்டேன். இப்பொழுதும் இந்தக் கையெழுத்தொடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கணினி வந்து என்னைப்போன்றவர்களை காந்தியின் சீடர்களாக வாழ்வதிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவசரத்திற்கு யாரிடமும் எழுதிக் கொடுத்து தட்டச்சு செய்யுமாறு கோரமுடியாது. நானும் என் எழுத்தும் என்று ஆரம்பித்து கடைசியில் கையெழுத்தைப் பற்றியதாக இந்தக் கட்டுரை நீள்கிறது. 

உண்மையில் நான் சொல்ல வந்தது என் எழுத்தைப் பற்றி. படைப்பு அனுபவம் (?!!!) பற்றி. அது என்னவோ தெரியவில்லை கதைகளும் கற்பனைகளும் எப்போதும் என்னை ஈர்த்து வந்திருக்கின்றன. வாராந்திரப் பத்திரிகைகளுக்கு அடிமையாகிப் போன ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்ததும், சிறிய அரசு நூலகமுள்ள கிராமத்தில் பிறந்ததும், கதைகளுக்கும் கற்பனைகளுக்கு அடிமையாகிப் போகும் வாய்ப்பைத் தந்தது. என்னைப் புத்தகங்கள் ஈர்த்திருக்கின்றன. சிறுவயதில் நானும் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கின்றேன். 

எதையாவது எழுதிப் பார்த்து என்னை வருங்கால தமிழகத்தின் மிகப் பெரிய எழுத்தாளனாக வருவேன் என்று நினைக்கா விட்டாலும், நாமும் எழுதலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து முயற்சித்து நீங்களெல்லாம் கேட்டறியாத சில பத்திரிகைகளில் என் சில படைப்புகள் வந்திருக்கின்றன. இவற்றில் சில அரசியல் கட்டுரைகள் கூட அடக்கம். அ. தாஸ், அ. பிரபாகரன் என்று சில பெயர்களில் எழுதியிருக்கிறேன். கணையாழியில் கூட ஓரிரு படைப்புகள் வந்திருக்கின்றன. 

பிறகு வந்த காலங்களில் வாழ்க்கை வெவ்வேறு விதமான சூழல்களை அமைத்துக் கொடுத்ததால் நான் என் எழுத்து வேலைக்கு ஓய்வு கொடுத்து என் நண்பர்களை இம்சிக்காமலும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இலக்கியப் பணி செய்வதை விடுத்து 'தேமே' என்று என்பாட்டுக்கு இருந்தேன். 

விதி யாரை விட்டது? இணையம் என்று ஒன்று வந்து என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வாழ்வு கொடுத்திருக்கிறது. தாமே எழுதி தாமே பதிவிடும் நார்சிசத்தில் நானும் ஒருவனாகி விட்டேன்

 இப்படி நானும் என் பொழப்பும் என்றிருந்த என்னை இணையம் மட்டுமல்லாது சமீபத்தில் நான் பயணித்த ஒரு பேருந்தும் எழுதச் சொல்லி வம்பிழுக்கிறது. மறவமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் தொடங்கிய என் எழுத்து வாழ்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஒரு திருப்பு முனையைச் சந்தித்தது. 

மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் அந்தப் பேருந்தில் பெரியார் பேருந்து நிலையத்தின் நசநசப்புக்கும் இரைச்சலுக்கும் தப்பி பரபரப்புடன் ஏறி அமர்ந்தேன். அப்படி சத்தத்திற்குத் தப்பி வருகிற என்னைப் போன்றவர்களைச் சோதிப்பதற்கேன்றேதான் தனியார் பேருந்துகளில் வீடியோ படத்தைப் போடுகிறார்கள். என்னதான் இதை எதிர்கொள்ளும் முன் தயாரிப்போடு ஏறினாலும் எரிச்சலும் இயலாமையும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அன்றும் அப்படித்தான். சிவா கார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் என்ற படத்தை என்னைப் போலக் களைத்து வந்து பஸ்ஸிலேறியவர்களின் தூக்கத்தைக் கெடுக்கவென்றே போட்டார்கள். எரிச்சலோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்த எனக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கேதான் என் எழுத்திற்கான மறு அழைப்பு காத்திருந்தது. 

அந்தப் படத்தில் கதாநாயகனுக்குத் தன பெயர் குறித்த பிரச்னை. அவனுக்குப் பிடிக்காத அசிங்கமான அந்தப் பெயர் அவன் ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாக இருப்பதாக அவன் கருதுவதுதான் அந்தப் படத்தின் முதல் பாதியின் கரு. ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன் 1997 ம் ஆண்டு கணையாழியில் 'பெயர்' என்ற தலைப்பில் வந்திருந்த என் கதைக் கருவோடு இது அப்படியே ஒத்துப் போனது

கதையை இத்துடன் இணைத்திருக்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது நான் சொல்ல வந்தது என்னவென்றால் இதோ இனி நானும் தொடர்ந்து எழுதப் போகிறேன். இது எனக்கு எழுத ஏதோ ஓர் உத்வேகம். தந்திருக்கிறது. "தொடங்கிட்டான்யா... தொடங்கிட்டான்யா" என்றெல்லாம் திட்டப்படாது. எங்களுக்கும் எழுத வருமுல்ல.
அ. பிரபாகரன்




°°°°°

எதிர் நீச்சல் படம் எடுத்த துரை செந்தில்குமார் இந்தக் கதையைப் படிக்க வில்லை என்பதை நான் நம்பத் தயாராக இல்லை.                             -  அப்பு 



2.12.13

ச. சசிமா .....


°சச்சின்
அளவுக்கு அதிகமாக புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கார் இனிமேல் விளையாட மாட்டாரே என்கிற கவலை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. இது என் தொண்டைக் குழியை இழுக்க இதைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு பல வருடங்களாகி விட்டது. (அப்பவே அவர் ரிட்டயர்டு ஆகியிருக்கனுமான்னு கேள்வி கேக்கப்புடாது).

அவரின் இறுதி விளையாட்டைக் கூட செய்தியாய்த்தான் படித்தேன். ஏதாவது ஒரு ஹீரோ பின்னால் போவதை நம்மால் தடுக்க முடியவில்லை. விடயம் அதுவல்ல.
இந்தியப் பத்திரிக்கைகள் போலவே பாக்கிஸ்தானியப் பத்திரிக்கைகளும் சச்சினை மிகவும் புகழ்ந்து எழுதியதைப் பார்த்த தாலிபான் - இனிமேல் சச்சினைப் புகழ்ந்து எழுதவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனக்கென்ன பயமா இருக்குன்னா நானும் தான் இந்தியப் பத்திரிக்கைகள் அளவுக்கு அதிகமாக சச்சினைப் புகழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். என்னையும் தலிபான் என்று நினைத்து விடுவார்களோ?

° சங்கரராமன்
சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஏறக்குறைய எண்பத்தி ஒரு நபர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி, ஆவணங்கள் மறைக்கப்பட்டு (அப்படி என்று சில பத்திரிக்கைகள் சொல்லுகின்றன) அனைவரும் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர். பிறழ் சாட்சிகளாவது குற்றம் என்றே இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால் தனியாகவோ ஒட்டு மொத்தமாகவோ அந்தர் பல்டி அடிப்பதெல்லாம் குற்றம் இல்லை என்று இப்போதுதான் தெரிந்திருக்கிறது.  அவர்கள் எல்லாம், உயிருக்குப் பயந்தோ, பணம் விரும்பியோ தங்கள் சாட்சியங்களை மாற்றிக் கொள்ள வில்லை. உண்மையை மட்டுமே சொன்னார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும், மறதி இருப்பது உண்மை என்றும், தமிழக மக்கள் அனைவரையும் போல, நான் நம்புகிறேன்.

எண்பதுக்கும் மேற்பட்டோர் மாற்றி சொல்லி பலரை விடுதலை செய்தததும், ஒரு அதிகாரி வாக்கு மூலத்தை மாற்றி எழுதி பல பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதும் இந்திய நீதித் துறைக்கு அழகல்ல. பேரறிவாளன் உட்பட பலர் இன்னும் உள்ளே இருப்பது நமக்குத் தான் அவமானம். 

ஒன்று இப்போதும் புரிகிறது. அரசும், அதிகாரமும், சேர்ந்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இவை இரண்டே போதுமானது.


° சிக்கியது - (பணமல்ல) 
ஒவ்வொரு ஆண்டும்  - அதாவது ஓர் ஆண்டு மட்டும், ஆர்.டி.ஓ சோதனைகளில் 22,000 கோடி லஞ்சம் பெறப் பட்டிருக்கிறது என்று ஒரு நிறுவனம் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட ஓர்  ஆய்வு தெரிவிக்கிறதாம். நான் சொல்லலை டைம்ஸ் ஒப் இந்தியா சொல்லுகிறது. 

"சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது, சாட்சிகளான ஓட்டுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக பிறழ்வதை கருத்தில் கொண்டு அனைத்து அதிகாரிகளையும் விடுதலை செய்கிறோம்." 

° மங்கள்யான் 
மங்கள்யான் - மங்களகரமான பெயர். [எனக்கென்னமோ மங்கள் அண்ட் மங்கல் மெட்டல் மார்ட் என்கிற வானொலி விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது.] 
மங்கள்யான் - செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பியிருக்கும் விண்கலம். செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு அங்கு சென்று சேரும் என்று சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து இந்தியா காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியே. அதுவெல்லாம் கூடாது என்று கோபித்துக் கொள்ள நாம் யார்? சொன்னால் நாம் பிற்போக்கு வாதி என்று சொல்வதற்கு விளக்கமாத்துக் கட்டையை  தூக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கில் ஓடிவருவார்கள்.  RTO காரர்களிடம் லஞ்சத்தில் சிக்கிய பணத்தை மீட்டாலே வருடத்திற்கு 42 விண்கலங்களை இந்தியா அனுப்ப முடியும். அதனால அதெல்லாம் கேட்கலை.
ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புறது போல அது போல ஒரே ஒரு போட் இந்திய இலங்கை கடற்பரப்புக்கு அனுப்புங்க. அதைத்தான் கேட்குறோம். இன்னைக்கு நினச்சு உடனே அனுப்பினா அது இன்னைக்கே போய் சேரும். செப்டம்பர் 2014 வரை காத்துக்குட்டு இருக்க வேண்டியது இல்லை பாருங்க. அதை விட்டுட்டு இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்று சொல்றீங்களே என்ன நியாயம்?

°°°°°°°°°°​​


அடுத்த பதிவு 
தமிழ் கூறும் நல்லுலகில் 
பின்நவீனத்துவக் கூறுகளை உள்ளடக்கி 
கதை கட்டுரை எழுதும் 
தமிழ் புத்திரன் அ. பிரபாகரனின் - 
(கை) எழுத்தும் நானும் 
என்கிற கட்டுரை... 
எதிர் நீச்சல் என்கிற படத்தின் கரு 
எங்கிருந்து கிடைத்தது என்பதை 
விவரிக்கும் கட்டுரை.

(விளம்பரம்)
இதை தினமணி, தினகரன் 
மற்றும் அனைத்து நாளிதழிலும் வரும் 
விளம்பரமாக நினைத்துக்கொள்ளவும்.
°°°°°°°°°°

9.11.13

ஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி


ஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏனென்றால் கூட்டம் நடத்தினால் எந்த மொழியில் நடத்துவது என்று ஒரே பிரைச்சனை. ஜெர்மனில் நடத்தினால் பிரெஞ்சு மொழி பேசுறவனுக்கு ஒன்னும் புரியாது. அதுல பேசுனா இத்தாலியன் பேசுறவனுக்கு ஒன்னும் புரியாது. இதுதான் அவங்களுக்கு பெரிய சிக்கல்.
இந்த யூனியனில் இன்னும் பல நாடுகள் சேருகின்ற போது இந்தச் சிக்கல் இன்னும் அதிகமாகும். அந்த ஆவணங்களை மொழி பெயர்க்க கடந்த ஆண்டு மட்டும் ஏறக்குறைய 100 கோடிக்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள். அது என்னமோ வருமானத்தில் ஒரு சதவீதம் என்று சொன்னாலும் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதனால் ஆங்கிலத்தை மட்டும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கலமா என்ற கேள்வி வந்தது. 
அதென்னமோ எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழியை அவ்வளவு எளிதாக ஒத்துக் கொள்வது இல்லை. செலவைக் குறைக்க ஆங்கிலத்தில் மற்றும் பிரெஞ்சில் மட்டும் ஆவணங்களை மொழி மாற்றம் செய்யலாம் என்று யோசனையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. 

என்னதான் இருந்தாலும் ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, இத்தாலியன் எல்லா மொழிகளும் ஆங்கில எழுத்துருவில்தான் எழுதப்படுகின்றன. இருந்தாலும் ஏன் மற்ற மொழிக் காரர்கள் யாரும் இதை ஒத்துக் கொள்வது இல்லை என்று தெரியவில்லை. ஒரே எழுத்துருவில் இருந்தாலும் இரண்டு மொழிகளின் வேறு பாடு அறியாமல் அவ்வளவு சுலபமாக இன்னொரு மொழியை வாசித்து விட முடியாது என்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கேள்வி.

ச என்ற சத்தத்திற்கு சில மொழிகள் s என்பதையும் சில மொழிகள் c என்பதையும் பயன் படுத்திகின்றன. இத்தாலிய மொழியில் chi என்று எழுதியிருப்பதை கி என்று வாசிப்பார்கள். சின்னப் பொண்ணு என்று ஆங்கிலத்தில் chinnapponnu என்று எழுதினால் அவர்கள் அதை கின்னப்பொண்ணு என்றுதான் வாசிப்பர்கள். போல்லோ என்கிற இத்தாலிய வார்த்தைக்கு கூகுல் உபயத்தால் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தால் chicken என்று வரும். ஆங்கிலம் தெரியாத இத்தாலியர் ஒருவர் சிக்கன் சாப்பிடுவீர்களா என்று கேக்க ஆசைப்பட்டு நீங்க கிக்கன் சாப்பிடுவீங்களா என்று கேட்டாராம். நல்ல வேளை, கிச்சன் சாப்பிடுவீங்களா என்று கேட்கவில்லை.

இது ஒரு சின்ன உதாரணம். ஆனால் ஆங்கிலத்தில் இந்த சிக்கல் எல்லாம் இல்லை. ச வுக்கு சில சமயம் s, சில சமயம் c. 'எப்' என்ற உச்சரிப்பிற்கு சில சமயம் f, சில சமயம் ph. க என்பதற்கு சில சமயம் c, சில சமயம் K என்று எல்லாக் குழப்படிகளும் உண்டு.  இ என்பதை ஆங்கிலத்தில் e என்றும், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் (மற்றும் பல மொழிகளில்) i என்றே எழுதுவார்கள். ஆனால் ie என்பதை ஜெர்மனில் ஈ என்றும் அதையே இத்தாலியனில் 'இயெ' என்று சொல்லுவார்கள்.
பிரெஞ்சு மொழியைப் பற்றி சொல்லவேண்டியதில்லை - பத்து எழுத்து இருக்கும் ஐந்து எழுத்தைத் தான் வாசிப்பார்கள்.

எனவேதான் ஒரே எழுத்துரு இருந்தாலும் மற்ற மொழிக்காரர்கள் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வது இல்லை. ஏனெனில் ஆங்கிலம் என்பது பிற்பாடு வந்த கலவை என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

இனிமேல் கற்பனை. - ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே சுட்டவும்.

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கிற நாடுகள் எல்லாம் ஆங்கிலத்தை பொது மொழியாக ஏற்றுக் கொண்டன. ஆனால் ஐந்து வருடத்தில் ஆங்கிலத்தை சீரமைக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு....

முதல் வருடத்தில் மென் 'ச' வுக்கு இனிமேல் c என்பதற்கு பதிலாக s என்பதைப் பயன்படுத்துவது -  sertainly this will make sivil servants happy. அதுமட்டுமல்லாமல் க என்பதைக் குறிக்க இனிமேல் c என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் K என்பதைப் பயன்படுத்துவது.  This will klear up some konfusion and allow one key less on keyboards.

இரண்டாம் வருடத்தில் there will growing publik enthusiasm  - ஏனெனில் அந்த வருடத்தில் 'ph' என்ற வார்த்தைக்குப் பதில் 'F' என்ற வார்த்தைப் பயன்பாடு தொடங்குவதால். இது PHOTOGRAPH என்கிற வார்த்தையை 20 சதவீதம் குறைத்து FOTOGRAF என்று சுலபமாக வாசிக்க வைப்பதனால் பேச்சாளரின் மனச் சுமை குறைக்கப் படுகின்றது.

மூன்றாம் வருடத்தில் இன்னும் KOMPLIKATED மாற்றங்களை PUBLIK AKSEPT பண்ணி EKSPEKT பண்ணுவார்கள்.
இதற்குப் பிறகு, தொடர்ந்து வரும் இரண்டு வார்த்தைகள் தேவையற்றவை என அறிவிக்கப்படும் - ஏனெனில் அவைகள் தான் AKURAT SPELING எழுத தடையாக இருப்பதானால்.
அதற்குப் பிறகு AL WIL AGRE THAT THE HORIBLE MES OF THE SILENT 'E' IS DISGRASFUL (ஆல் வில் அக்ரீ தட் த ஹாரிபில் மெஸ் ஆப் த சைலன்ட் 'இ' இஸ் டிஸ்கிரேஸ்புல்)...
நான்காம் வருடத்தில் 'th' என்பதற்குப் பதில் 'Z' மற்றும் 'W' என்பதற்குப் பதில் 'V' என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள்.

அதனால் During ZE FIFZ YER, ZE UNESESARY 'O' KAN BE DROPD FROM VORDS KONTAINING 'OU' AND SIMILAR CHANGES VUD OFKORS BE APLID TO OZER KOBINATIONS OF LETERS. (த பிப்த் யியர், த அன்னெசெசரி 'ஓ' கேன் பி டிராப்ட் ப்ரம் வோர்ட்ஸ் கன்ட்டெய்னிங் 'ஓஉ' அண்ட் சிமிலர் சேஞ்சஸ் வுட் அப்கோர்ஸ் பி அப்ளைட் டு அதர் லெட்டர்ஸ்).

ஐந்தாம் வருடத்திற்குப் பிறகு -
VE VIL HAV A RELI SENSIBL RITEN STYL (வி வில் ஹாவ் ய ரியலி சென்சிபிள் ரிட்டன் ஸ்டைல்).

ZER VIL BE NO MOR TROBLS OR DIFIKULTIS AND EVRION VIL FIND IT ESI TO UNDERSTAND ECH OZER. ZE DREM VIL FINALI KAM TRU
(தேர் வில் பி நோ மோர் ட்ரபுள்ஸ் ஆர் டிபிகல்டிஸ் அண்ட் எவுரிஒன் வில் பைண்ட் இட் ஈசி டு அண்டர்ஸ்டாண்ட் ஈச் அதர். த ட்ரீம் வில் பைனலி கம் ட்ரூ).

°°°°°°°°°°°°°°°°°°°°°

இதே போல தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்தி எழுதினால் பல குழப்படிகளைக் களைய இயலும். ந, ன மற்றும் ண என்பதற்கு 'na' என்று எழுதுவதன் மூலம் பல குழப்பங்களைக் களைய இயலும்.

'la' என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் ல, ள, ழ என்று மாணவர்களுக்கு மனச்சுமையை கூட்டும் எழுத்துக்கள் குறைக்கப் படும்.

'ra' வார்த்தைகளை 'ர' மற்றும் 'ற' என்பவைகளுக்குப் பயன் படுத்த இயலும்.

இதுப்போல புரட்சி செய்வதன் மூலம் 247 எழுத்துக்கள் என்பதை 24 எழுத்துக்களாக (NO c and X) குறைக்க முடியும்.

இப்படிச் செய்வதன் வழியாக மாணவர்களின் மனப்பாரத்தை மட்டுமல்ல தமிழையும் அழியாமல் காப்பாற்ற முடியும். அது மட்டுமல்லாது இப்படி எழுதும் போது தமிழிலக்கியத்தை உலக அரங்கில் எல்லா மக்களும் வாசிக்க ஆர்வம் அதிகம் ஆவதால் வருடத்திற்கு ஐநூறு மட்டுமே விற்கக் கூடிய புத்தகங்கள் இனிமேல் ஐம்பதாயிரம் விற்கும். தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கஞ்சிக்கு அலைய வேண்டியதில்லை. தமிழை வாழ வைத்த பெருமையும் அவர்களுக்கு மிஞ்சும்.

குறிப்பு:
இதைப் படித்து நீங்கள் எப்படி எதிர் வினை ஆற்றுகிறீர்கள் என்று சோதிப்பதெல்லாம் எனது நோக்கம் அல்ல. ஆங்கில எழுத்துருவை அனுமதித்து தமிழை நீங்களெல்லாம் வாழ வைப்பீர்கள் என்ற நம்பிக்கைதான் எனக்கு.





10.10.13

ராகுல் காந்தி

நீங்க
எப்போ வருவீங்க எப்புடி வருவீங்கன்னே சொல்ல முடியலை -
[ரஜினி ரசிகர்கள் அமைதி காக்கவும்]

திடீர்னு பிளாஸ்டிக் டப்பாவில மண் சுமந்திங்க எங்கள் தலைவரே,
உங்களை அப்படிப் பார்க்கிறப்ப அயர்ன் பண்ணின சட்டை கசங்காம ஆயிரம் பேரை அடிச்சுட்டு அசால்ட்டா நிக்கிற எங்க ஹீரோக்கள் மாதிரி
மண்ணு ஒட்டாம, கூடை வெயிட்டு கூட கூடிரக் கூடாதுன்னு சுமந்த உங்களைப் பாத்தா பெருமையா இருக்கு.

நான் கும்பகர்ணன் மாதிரிங்க... ஆனா அத ஏன் செஞ்சிங்க எதுக்கு செஞ்சீங்கன்னு விடை தெரியாமலே
பல நாள் தூக்கம் இல்லாமக் கிடக்கேன்.

உங்க சூட் கேசையே நீங்க தூக்க மாட்டிங்க -
நீங்க எப்படி???

சரி அத விடுங்க இன்னும் மூணு மாசத்துக்கு
என்னைத் தூங்க விடாம செய்யவே இன்னொரு செய்தியை சொன்னிங்க பாருங்க என்னால ஜீரணிக்கவே முடியலை.  .

கூட இருந்தபோதெல்லாம் ஒன்னும் சொல்லாம 
அமைதியின் அரசர் நம் பிரதமர் 
தொலை தூரம் சென்ற போது நீங்க சொன்னிங்க  பாருங்க -
குற்றவாளிகளைக் காப்பாற்றும் சட்டத்தை குப்பையில போடணும்னு 
ரொம்ப சந்தோசம் - 
நீங்க கூடை தூக்குறப்பவே இவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்,
அந்தக் கூடைய அன்னைக்கு தூக்கிப் போட்டதுமாதிரி எல்லாத்தையும் தூக்கிப் போடுவீங்கன்னு...
என்ன செய்யுறது உங்க அளவுக்கு யாருக்கும் இங்க புத்தி இல்லை.

அன்பானவரே -
அப்படியே 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விலக்கு -
அப்படின்னு சொல்ற சட்டத்தையும் பத்தி ஏதாவது அள்ளி விட்டா 
கொஞ்சம் நல்லா இருக்கும்..

காசு எவன் குடுத்தான்னு மக்களுக்குச் சொல்ல கூடாதுன்னு எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்து இருக்கீகளாம்ல...
நல்ல விஷயம்தான்...
நம்ம காங்கிரசுஸ்ல 70 சதவீதத்துக்கு மேலான பணத்தைக் கொடுத்தது 
யாரென்று தெரியாதுன்னு தாக்கல் செய்திருக்கீங்கலாமே 
பா.ஜ.க வும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லைன்னு 
அவர்களும் அந்த அளவுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் 
யாருன்னு சொல்லமாட்டேன்னு சொன்னபிறகு நீங்கல்லாம் 
சேர்ந்து இந்த அவசரச் சட்டம் கொண்டு வர்ரீங்க...

சீக்கிரம் இதைப் பத்தி பேசுனா நல்லா இருக்கும். அதோடு சேர்த்து இந்தியக் குடிமக்கள் ஏன் அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும்... அதனால் மக்கள் அனைவருக்கும் அரசு கேட்கும் கணக்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்னும் சொன்னிங்கன்னா உங்களுக்கு ரொம்பப் புண்ணியமா போகும்.

ஆமா அடுத்து எப்பங்க பேசுவீங்க
அவர் அமேரிக்கா போன பின்னாடியா?

பாவம் அமேரிக்காவே அடுத்த வேளை சம்பளம் கொடுக்க வக்கில்லாம எல்லாத்தையும் மூடிக்கிட்டு கிடக்கான்.
ஆனா வெக்கம் இல்லாம நாம அவன் பின்னடிக் கிடக்கோம்.
என்ன செய்ய நீங்க இப்படி ஏதாவது பேசுவீங்கன்னா இன்னொரு தடவை நம் பிரதமரை அங்கே போய் வரச் சொல்லலாம்.

நீங்க பேசுவீங்க ஆனா நான்தான் இன்னும் ஆறு மாசத்துக்கு தூக்கம் வராம கஷ்டப்படுவேன்.
பரவா இல்லை நாடு நல்லா இருக்கணும்னா தூங்கம இருக்கிறது ஒன்னும் தப்பில்லை.







21.9.13

இந்தியர்கள் கோமாளிகள் ஆக்கப் படுகிறார்களா? - (தினமணி தலையங்கம்)

அணு உலை விஷயத்தைப் பற்றியும் அதில் உள்ள சிக்கல்களை பற்றி எழுதும் போதெல்லாம் பொது மக்கள் கோபப்படுவதைத்தான் பார்க்கிறேன்.  அணு உலையே வேண்டாம் என்பதுதான் நமது நிலையாக இருந்தாலும், அரசு அதற்கு செவிமடுக்கும் சூழ்நிலையில் இல்லை. இந்த அரசு அவசரப் பட்டு எடுக்கும் எந்த முடிவும் நாட்டை அதல பாதாளத்திற்குத்தான் தள்ளும். நாட்டு மக்களின் பாதுகாப்பை பணயம் வைத்துத்தான் நமது வளர்ச்சி இருக்க வேண்டுமா என்பதைக் கேட்க வேண்டியிருக்கிறது. 

ஆனானப் பட்ட ஜப்பானே எல்லா அணு உலைகளையும் மூடியிருக்கிறது. நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

விபத்தினால் ஏற்படும் எந்த நிலையையும் பணம் சரி செய்துவிடாதுதான். அதற்காக விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் இருந்து அணுஉலை வழங்கும் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொழில் நுட்பக் கோளாறோ அல்லது சேவைக் குறைபாட்டினாலே விபத்து ஏற்பட்டால் அதை வழங்கிய நிறுவனத்தின் மீதான பொறுப்பை இந்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. 

சாதரணமாக வாங்கும் பொருட்களுக்கே கியாரண்டி எல்லாம் இருக்கும் போது அணு உலைகள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்... இப்படியே போனால் ஐ.எஸ்.ஐ. க்கெல்லாம் வேலையே இருக்காது. கியரான்டிக்கும் வேலை இருக்காது - சைனாப் பொருட்களைப் போல. ஆனால் உடைத்தால் தூக்கிப் போட இது ஒன்றும் கொசு அடிக்கும் பேட் அல்ல.
விபத்தினால் உயிரிழக்கப் போகிறவர்கள் கையெழுத்து இடப் போகிறவர்களும் அல்ல.
நம்மை பணயம் வைத்து நிறுவனங்களை - அமெரிக்க நிறுவனங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? 

அமேரிக்கா சிரியா மீது கட்டப் பஞ்சாயத்து பண்ணுகிறது? தனது நாட்டு மக்கள் மீதே சிரியா அதிபர் காஸ் பயன்படுத்தினார் என்று. இப்ப இந்தியப் பிரதமரைப் பயன்படுத்தி இந்திய மக்களின் பாதுகாப்பை உசாதீனப் படுத்த வைக்கும் இந்த வேலைக்கு யார் கட்டப் பஞ்சாயத்து பண்ணுவது? இந்தியப் பிரதமர் மீதோ, இதைச் செய்யத் தூண்டும் அமேரிக்கா மீது யார் படையெடுப்பது?

இனி தினமணி தலையங்கம்...
 ===============================================================
போபால் விஷவாயு விபத்தில், யூனியன் கார்பைடு நிறுவனம் இந்திய மக்களை ஏமாற்றியதைப் போன்ற இழிநிலை இனியும் ஏற்படலாகாது என்பதற்காக, மிகப்பெரும் எதிர்ப்புகள் போராட்டங்களுக்குப் பிறகு, அணுஉலை விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருந்தால், அணுஉலைகளை வழங்கியவர்கள் பொறுப்பேற்கவும், இழப்பீடு வழங்கவும் செய்யும் சட்ட விதிமுறைகள் ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இப்போது, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அணுஉலையை வழங்கிய நிறுவனம் பொறுப்பேற்று, இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையை இந்திய அரசு தளர்த்தவிருக்கிறது என்கின்ற செய்தி "கதிர்வீச்சுக் கசிவாக' வந்துகொண்டிருக்கிறது.
அணுஉலை விபத்தில் குடிமை கடப்பாடு சட்டம், பிரிவு 17-ல், விபத்துக்குக் காரணம் அணுஉலை, அல்லது தொழில்நுட்பம், அல்லது சேவைக் குறைபாடு என உறுதிப்படும்போது, அதை வழங்கிய நிறுவனமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.
தற்போது அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆலோசனை கூறியிருப்பதைப் போல, "இந்த பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்துவதோ அல்லது வலியுறுத்தாமல் விட்டுவிடுவதோ அந்த அணுஉலையை நடத்தும் நிறுவனத்தின் விருப்பத்தை சார்ந்தது' என்று மாற்றுவதன் மூலம், அணுஉலை வழங்குபவரைப் பொறுப்பேற்பிலிருந்து விடுவித்துவிட வழியேற்படுகிறது.
இந்தியாவில் அத்தனை அணுஉலைகளையும் தற்போது இயக்குவது இந்திய அணுமின் கழகம் (என்பிசிஐஎல்). இது இந்திய அரசு நிறுவனம். ஆக, பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்தாமல் தவிர்த்தால், முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய கடப்பாடு இயல்பாக இந்திய அணுமின் கழகத்தையே சேரும்.
அடுத்த கட்டமாக, அணுமின் நிலையங்களைத் தனியார்மயமாக்கும்போது, ஒப்பந்தத்தில் யாரைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பது அந்த தனியாரின் விருப்பம். ஆகவேதான் இந்த விதித்தளர்வு என்று இந்திய அரசு எதிர்வாதம் வைக்கக்கூடும்.
அனல்மின் நிலையங்களைப் போல, அணுமின் நிலையங்களையும் தனியார் நடத்துவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். ஆனால், அணுஉலை விபத்தில் குடிமைக் கடப்பாடு சட்டத்தில், இழப்பீடு தொகை அதிகபட்சம் எவ்வளவு? அரசு சார்ந்த நிறுவனம் என்றால் 300 மில்லியன் டாலர், அதாவது, இன்றைய கணக்கில் 1850 கோடி ரூபாய். அதுவே, தனியார் நிறுவனம் என்றால் ரூ.1500 கோடி மட்டுமே! எப்படி இருக்கிறது?
இந்திய அரசுக்கு அதிக தொகையும், தனியாருக்கு குறைந்த தொகையும் இழப்பீடு என்பதே ஒரு ஏமாற்று வேலை. இப்போதைக்கு அரசுதான் அணுஉலைகளை அமைக்கப் போகிறது என்று கூறி மக்களை ஏமாற்றும் வித்தை. இது தவறு என சுட்டிக்காட்டினால், "இந்தத் தொகை அந்தந்த நேரத்துக்கு மாறுதலுக்கு உட்பட்டது' என்பதையே இந்திய அரசு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.
இழப்பீடு வழங்குவதில் அதிகபட்ச அளவு என்ற கட்டுப்பாடு கூடாது என்றும், இழப்பின் தன்மையை கணக்கிட்டு முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கூறிய போதிலும் அதனை அரசு பொருட்படுத்தத் தயாராக இல்லை.
தனியார் நிறுவனங்கள் அணுமின்நிலையங்களை நடத்தும்போது, இழப்பீடு தொகைக்காக காப்பீடு செய்து கொள்வதே வழக்கம். இந்திய அரசு சொல்வதைப் போல, அவர்கள் காப்பீடு செய்து கொண்டால், ரூ.1500 கோடிக்கு மட்டுமே காப்பீடு செய்வார்கள். விபத்து மிகப்பெரியதாக இருப்பின், மீதி செலவினத்தை நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசுதான் ஏற்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுக்கு அணுஉலைகள் வழங்கப்போகும் அமெரிக்க நிறுவனங்கள் இரண்டு: வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ. இதில், புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு அணுஉலைகள் வழங்கிய ஜிஈ நிறுவனம் அடைந்த லாபம் 5 பில்லியன் டாலர். 2011, மார்ச் 11 ல் அணுஉலைகள் சேதமடைந்தன. இதற்கு ஜிஈ நிறுவனம் பொறுப்பேற்க சட்ட விதிகள் இல்லை. அப்படியே இருந்தாலும், இயற்கை பேரிடருக்கு (இந்திய சட்டத்திலும்கூட) அணுஉலை வழங்கியவர் பொறுப்பாக மாட்டார். இப்போது இந்த அணுமின் நிலையத்தை நடத்திய "டெப்கோ' காப்பீட்டுத்தொகையைவிட இழப்பீடு அதிகமாக இருப்பதால் நட்டத்தில் தத்தளிக்கிறது.
பட்டுத் திருந்துபவன் ஏமாளி. பார்த்துத் திருந்துபவன் அறிவாளி. நாம் அறிவாளியாக இல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாலேயே கோமாளி ஆக்கப்படுகிறோமே, அதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை!
(ஆசிரியர் தினமணி)
==============================================================================================

17.9.13

மதச்சார்பின்மை- அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மை என்ன என்பதை ராணுவ வீரர்களிடம்தான் அனைத்து அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திரு நரேந்திர மோடி அவர்கள் நேற்று உரையாற்றினார்...

நன்றி தினமணி 

இதற்கு முந்தய பதிவில் இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர்தான் அதிக செல்வாக்கோடு இருக்கின்றார் என்று எழுதியதற்கு நண்பர் ஒருவர் பின்வருமாறு பின்னுரை எழுதியிருந்தார்...
கோத்ரா ரயில் எரிப்பில் ஈடுபட்டது முஸ்லிம்கள்.கலவரத்தை ஆரம்பித்தது முஸ்லிம்கள்.அதன் பலனை அவர்கள் அனுபவித்தனர்."
நண்பர் சொன்ன கருத்தைத்தான் மோடியின் வரவை விரும்புகிற அனைவரும் சொல்லுகிறார்கள். ஆரம்பித்தது இஸ்லாமியர்கள்... எனவே அதன் பலன் மீண்டும் அவர்களை மற்றவர்கள் சேர்ந்து கொல்லுவது. அதனால்தான் அவர் வலுவான தலைமை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

குஜராத் முதல்வர் மீது இருக்கிற குற்றச்சாட்டே, தொடர்ந்த அல்லது தொடர விட்ட கலவரங்களை அடக்க மறந்தவர் அல்லது மறுத்தவர் என்பதுதான்... அரசு அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கலவரத்தை வளர்ப்பது என்பது இந்திய சட்டத்தின் மீதும் நீதி மன்றத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதை நாம் மறந்து விட முடியாது என்பதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். மக்கள்தான் சட்டத்தை மதிக்கவில்லை என்றாலும் முதல்வராவது மதிக்க வேண்டுமல்லவா? [யார் மதிக்கிறா அப்படின்னு பதில் கேள்வி கேட்டா அப்ப திரு மோடி அப்படித்தானான்னு பதில் கேள்வி கேக்க வேண்டியதுதான்].

கலவரம் விளைவிக்கிறவர்கள் குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள். அது யாராக இருந்தாலும்.... அதைக் காரணம் காட்டி நம் விருப்பப் படி செயல்பட இது ஒன்றும் தமிழ் திரைப்படம் இல்லையல்லவா​?

காங்கிரஸ் அரசுக்கு மாற்றான ஒரு அரசு வர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். அது பா.ஜ.க வாக இருக்கலாம்.  அதற்காக மதத்தை அரசியலில் கலப்பது தவறு. மீண்டும் மீண்டும் மதத்தை மட்டுமே பா.ஜ.க. முன்னிறுத்துவது தவறு என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுவது நல்லது. காங்கிரசை எல்லாரும்தான் எதிர்க்கின்றனர். ஏதோ காங்கிரஸ் ஆட்சி மைனாரிட்டி மக்களுக்கு மட்டுமே நல்லது செய்வது போலவும், மைனாரிட்டி மக்களுக்கு மட்டுமான ஆட்சி என்பது போலவும், இந்து மக்களை வாழ விடாது போலவும் பேசுவது அல்லது அப்படி ஒரு பிரம்மையை உருவாக்கி அதற்காக இந்தியக் குடிமக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்துத்தான் பா.ஜ. க. வை வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

உண்மை என்னவெனில் காங்கிரஸ் அரசு எந்த ஒரு இந்தியனையும் வாழ விடாது... அதற்கு பிரித்துப் பார்க்கத் தெரியாது. எல்லாரையும் வெறுக்கும். பணக்காரர்களை மட்டுமே மதிக்கும். உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. விவசாயிகளின் வெறுப்பு, சொந்த நாட்டு மீனவர்களையே காக்க துப்பில்லாத அரசு, மக்கள் கூடி வாழும் இடங்களில் ஒட்டு மொத்தமான அணு உலைகள், அந்நிய முதலீடு என்ற பெயரில் அனைத்தையும் வெளியாருக்குத் தாரைவார்க்கும் பொருளாதாரக் கொள்கை, ஊழல், பெட்ரோல் விலை உயர்வைக் கட்டுப் படுத்தாத தாரள மாயம், பெரு முதலாளிகளின் கைக் கூலிகளாக இருக்கும் அரசு, என்று அதன் மீது குற்றம் சாட்டுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன... 

இவைகளுக்கான மாற்றாக புதிய கொள்கைகள், திட்டங்கள் இவைகளை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். சும்மா அதை விட்டுவிட்டு இந்த அரசு இஸ்லாமியர்களைப் பாதுகாக்கிறது இந்துக்களை எதிர்க்கிறது என்று மக்களை எமோஷனல் பெயரில் வன்முறையையும், வெறுப்பையும் விதைப்பது - பா. ஜ.க விடம் மாற்றுக் கொள்கைகள் ஒன்றும் இல்லை என்பதைத் தான் காட்டும். அது இதை ஒரு போதும் காங்கிரசிடமிருந்து வேறுபட்ட கட்சியாக காண்பிக்காது. 

கொள்கைகள் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. தெளிவு படுத்த வேண்டியவைகள் கொள்கைகளே தவிர பிளவுகள் அல்ல... 

மதச் சார்பின்மையை நாம் ராணுவ வீரர்களிடம் கற்றுக் கொள்ளலாம். அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற திரு மோடியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அவரும் அரசியல்வாதி என்பதனால் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கலாம் - 
நீங்க எப்ப சார் கத்துக்கப் போறீங்க?

16.9.13

பாராட்டு, பானம், பாலியல் குற்றங்கள் -

பாராட்டு 
செய்தித் தாளைப் புரட்டினால் மோடி சகட்டு மேனிக்கு எல்லாரையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் என்கிற செய்தியை பத்திரிக்கைகள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன:  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் வாஜ்பேய் மற்றும் அத்வானிக்குப் புகழாரம். ராணுவ அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு. இந்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு. இதைப் பார்த்த உடனே தங்கள் பங்குக்கு சளைத்தவர்கள் இல்லை என மோடியைப் பலர் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். மோடி பன்முகத்தன்மை கொண்டவர் என வெங்கையா நாயுடு புகழாரம். ஒரு முகத்தை பார்க்கவே பல பேருக்கு பயமா இருக்கு இதுல பன்முகமா... மோடிய அறிவித்ததில் ஒரே வருத்தம் திரு அத்வானிக்குத்தான்... ஆனாலும் அவர் எப்படியாவது வழிக்கு வந்து விடுவார். அந்த நம்பிக்கையை திரு ஜஸ்வந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
என்ன செய்வது இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர் மேலானவர் ஆகிவிட்டார் என்கிற வருத்தமோ என்னவோ?

பானம்

  • லண்டனில் பிறந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஐ.பி. எல். ஊழல் பற்றி எதோ வர தனது அமைச்சர் பதவியை தாரை வார்க்க வேண்டியிருந்தது. ஊழல் குற்றம் சாட்டப் பட்ட எந்த அமைச்சர் தண்டிக்கப் பட்டார்... வழக்கம் போல மீண்டும் பதவி. சும்மா இல்லாமல் விவேகானத்தர் சிலை திறக்கப் போன இடத்தில் விவேகானந்தருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது  என்று உளறியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.  கலகம் விளைவிப்பவர்கள் எல்லாம் பதிவியில் இருக்கும் போது மது அருந்தியவர் மகானாக இருக்கக் கூடாதா என்ன​? 


  • பார்களைத் தமிழகம் முழுதும் தொடங்கி அதைப் பராமரித்து அதனால் வரும் வருமானத்தை வைத்து நமது நாடு நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது அம்மாவை மிஞ்ச அரசியலில் யாரும் இல்லை. நேற்றுக் கூட பத்திரிக்கையாளர் சோ அவர்கள் அம்மாவைப் பார்த்தார்களாம். அவர் வெறும் பத்திரிக்கையாளரா என்ன​? அது கிடக்கட்டும். மோடி அவர்கள் மதுரையில் கூட நிற்கப் போவதாகக் கேள்வி. அது என்னமோ தெரியலை எரித்தலுக்கும் திரு மோடி அவர்களுக்கும் நெருங்கிய சொந்தம் போல - கண்ணகி எரித்த மதுரையில் நிற்கப் போகிறாரே அதனால் சொன்னேன். இதற்கும் கோத்ரா எரிப்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை.  அது என்னமோ தெரியலை தமிழகத்தை கலவர பூமியாக ஆக்குவதில் எல்லாருக்கும் என்ன சந்தோஷமோ தெரியலை...


  • சொல்ல வந்த செய்தியை விட்டு எங்கேயோ போயாச்சே - புதிதாக அம்மா குடி நீர்... அம்மா உணவகம். குறைந்த விலையில் நிறைந்த தரம். பஸ் ஸ்டாண்டுல குறைந்த விலை போல பார்ஸ்டாண்டிலும் இது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பாலியல் குற்றங்கள்
பெண் பாலியல் வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த பிறகு பாலியல் பலாத்காரம் அதிகரித்திருக்கிறது. குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் மரணதண்டனை கொடுத்தால் குற்றம் குறைந்து விடும் என்றால் நானே குற்றவாளிகளைத் தூக்கிலிட எழுதிக் கொடுப்பேன் என்று சவால் விட்டாராம். அதுமட்டுமல்ல பலாத்காரம் செய்யப் பட்ட பெண்மீது அவள் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றிய பெண். அப்படிப் பட்ட பெண் எனக்கு இருந்திருந்தால் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தியிருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நல்ல வழக்கறிஞர். இப்படிப் பட்டவர்கள் இருந்தால் நீதிமன்றம் சிறந்து விளங்கும்.
அவர் வாய் வைத்த நேரமோ என்னமோ...
சிதம்பரத்தில், ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலாத்காரம் செய்ய, அப்பெண் மருத்துவ மனையிலும் இவர் தமிழக சிறையிலும் இருக்கின்றார்.
ஓடும் பஸ்ஸில் நடந்தது போல ஓடும் ரயிலில் ஏசி கோச்சில் இருந்த ஒரு டாக்டரை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒரு சி.பி.ஐ வீரரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதாவது பரவாயில்லை.  சோழவரத்தில் ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று ஒரு கும்பல் வன்முறை செய்திருக்கிறது
இது போன்ற செய்திகளை இன்னும் அதிகமாகவே பார்க்க முடியும்...
என்னதான் தண்டனைகள் அதிகரித்தாலும் குற்றங்களும் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் காரணம் வேறு எங்கோ இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து அரசியல்வாதிகளை விடுவித்த அரசாங்கம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
தமிழக அரசாங்கம் இந்த நிதி ஆண்டில் பத்து கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்திருக்கிறது - எதுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கான தொகையை 35 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பதற்காக.... அம்மா உணவகத்தில அவங்க சாப்பிட மாட்டாங்களா என்ன? சாதாரண மக்களை விட அவங்க சாப்பாட்டுக்கு அதிக பணம்... பேஷ் பேஷ்...


சசி தரூர் அவர்களுக்கும், அனைத்து மலையாளர்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். அதனால் இன்று சென்னை, கோவை, உதகமண்டலம் மற்றும் எல்லா இடங்களிலும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை... வாழ்க தமிழ்!


14.9.13

மரணம் - பெட்ரோல் - மோடி - அப்பு மண்டி ஆவணி 29


  • டெல்லி  வன்கொடுமை வழக்கில் நான்கு நபர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த நேரத்தில் தண்டனை பற்றி ஏதாவது பேசினால் நான் ஆணாதிக்க வாதியாக சித்தரிக்கப் பட வாய்ப்பு உள்ள காரணத்தினால் அதைத் தவிர்த்து விடுவதே நல்லது. இந்த மரண தண்டனை பெண்களைக் கொடுமைப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய பாடமாக இருக்கும். 
பழங்குடி மக்கள் மீதான் பாலியல் வன்முறைகள் - 
மற்றும் காடுகளில் தேடல் வேட்டையில் ஈடுபட்ட அரசு காவலர்கள் பெண்களை வன்கொடுமைகள் செய்ததற்கான 
பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
மனிதாபிமானம் உள்ள அனைவரும் 
இதையும் கவனிக்க வேண்டியது அவசியம். 
  • கலைஞருக்கு கரண்ட்ல கண்டம் - காங்கிரசுக்கு கண்டதெல்லாம் கண்டம். ஊழல் எதிர்ப்பாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் - சிறு வியாபாரிகள் - பெட்ரோல் வண்டி பயன்படுத்தும் அனைவரும் என, காங்கிரசுக்கு எதிரானவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காங்கிரசின் ஆட்சி நிச்சயமாய்க் கவிழும்... இதற்கென்று ஆருடம் தெரிய வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.  நேற்று நள்ளிரவில் இருந்து மீண்டும் பெட்ரோல் விலை ஏறியிருக்கிறது. ஏறக்குறைய எண்பது  ரூபாயைத் தொட்டு விட்டது. ஆனால் முப்பது ரூபாய் ஒரு நாள் செலவழித்தால் அவர்கள் ஏழைகள் இல்லை என்ற தங்களது கண்டு பிடிப்பை நிலை நிறுத்தும் வண்ணம் எல்லாரையும் பணக்காரர்களாய் ஆக்குவது ஒன்றே தனது குறிக்கோள் என்று காங்கிரஸ் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
தொன்னூறுகளில் தொடங்கிய தாரள மயமாக்கள் கொள்கைகளின் விளைவைத் தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்....  
தொடங்கி வைத்த பெருமை 
அமைதிப் பேரரசர் மன்மோகன் அவர்களையே சாரும்... 
என்னதான் நடந்தாலும் 
எதுவுமே நடக்காதது போல அவர்கள் இருப்பதுதான் அவர்களின் ப்ளஸ்... 
இவ்வளவு நடந்தும் 
ஒன்றும் நடக்காதது போல இருப்பதுதான் நமது ப்ளஸ்..
  • மோடி பா. ஜ. க... வின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறார். அத்வானி மன வருத்தத்தில் இருக்கிறார். நிச்சயமாய் இதை வைத்து பா.ஜ. க பிளவு படாது. மோடி நிச்சயமாய் ஒரு ஒளிரும் இந்தியாவை முன்னிறுத்தப் போகிறார்... "மாற்றம் ஒன்றே நமது இலக்கு" என்று இந்துயாவை முன்னிருத்துவார். கமல் ரசிகர்கள் நாங்கள் பா. ஜ.க. ஆதரவாளர்கள். எனவே திருச்சி வரும் மோடியை சந்தித்து ஜெயாவுடன் கூட்டணி கூடாது என்று சொல்ல இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். (விஷவரூபம் படத்தை பலர் எதிர்க்க இதுவும் ஒரு காரணம் போல). ஆனால், மோடியோ தமிழக முதல்வரோ இதற்கெல்லாம் சளைத்தவர்கள் அல்ல... நிச்சயமாய் பா.ஜ.க அ. தி.மு.க  கூட்டணி நிச்சயம். 
மோடி தனது கறைகளை எல்லாம் மறைக்காமலே 
பிரதம வேட்பாளர் அறிவிப்பு வெளி வந்திருக்கிறது... 
இனிமேல் எந்தக் கறையையும் தாங்கும் ஆற்றலையும் 
அவர் நிச்சயம் பெறுவார்.. 
கறை நல்லது என்கிற வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ 
பிரதம வேட்பாளர் அவர்களுக்கு நிச்சயம் பொருந்தும். 
மோடி வெற்றி பெற்றால் அவரை வெற்றி பெறச் செய்த பெருமை எல்லாம் அ.தி-மு.க. வை அல்ல அது காங்கிரசையே சாரும்.
தாராளமாய் காங்கிரஸ்காரர்கள் 
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் என்னைச் சேரும் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம். 
காங்கிரசுக்கு அ.தி.மு.க கூட்டணி கிடைக்காவிட்டாலும் 
நிச்சயமாய் எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடுகிற புண்ணியமாவது கிடைக்கும். 
கரண்டு கண்டமும் பெட்ரோல் கண்டமும் ஒன்னாய்ச் சேர்ந்திருப்பதால் 
காந்தி வந்தால் கூட காங்கிரசைக் காப்பாற்ற முடியாது.


1.9.13

என்ன ஆச்சு? – (நானும் பிரதமரும்) - நடுவுல கொஞ்சம் ...

என்ன ஆச்சு? டிரெயின விட்டு இறங்குனேன்... வேகமா நடந்து ஸ்டேஷனின் வாசலுக்கு வந்தேன்.. எதுத்தாப்ல இருந்த படகைப் பார்த்துட்டே படில இறங்குனேன்... ஓ மூணாவது படில செருப்பு வழக்கி விட்டு தலை கீழா விழுந்து படில உருண்டேனா... அப்ப இங்க அடிபட்டிருக்கும்... அங்கதான் ...-

- என்று நான் கீழே விழுந்த பிறகு புலம்ப ஆரம்பித்திருந்தால் நான் கீழே விழுந்ததை வேடிக்கை பார்த்த யாருக்கும் ஒன்றும் புரிந்திருக்காது... ஏன்னா அவங்க யாருக்கும் தமிழ் தெரியாது. மொழி தெரியாத நாட்டுல விழுந்தா இதுதான் சிக்கல்... புலம்பக் கூட முடியாது. யாரு செஞ்ச புண்ணியமோ தலைல அடிபடாம இருந்ததால புலம்பா தப்பிச்சேன்  (ஆனா பாவம் நீங்க மாட்டிக்கிட்டிங்க – என்ன செய்யுறது?).
நானும் வருஷத்துக்கு ஒருமுறை விழுகிறதை வழக்கமா வச்சிக்கிட்டு இருக்கேன். போன வருஷம் ஜூன் மாதம் இப்படித்தான் கி. க. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டு வெளியே வரும்போது படி முடிஞ்சிறோச்சுன்னு நினைச்சு காலை வைக்க நெஞ்சு தெறிக்க விழுந்தேன் (கி. க. சாலை அப்படின்ன உடனே உங்கள்ள சில பேர் மது உணவு சாப்பிட்டு வெளியே வரும்போது விழுந்தேன்னு படிக்க வாய்ப்பு உண்டு அதனால ரிப்பீட்டு மதிய உணவு) – ஆக மொத்தம் அன்னைக்கு குப்புற விழுந்தேன்... இப்ப மல்லாக்க...
கமல் சொன்ன மாதிரி அது என்ன மாயமோ தெரியல எனக்கு ஒண்ணுமே ஆகிறதில்லை... ... ....

ஏதோ நான் மட்டும்தான் இப்படி விழுந்து அடி வாங்கி ரொம்ப தெம்பா இருக்கிறதா எனக்கு ஒரு திமிரு வந்த நிமிஷமே நம்ம பிரதமரை நினைச்ச உடனே எல்லாம் மறந்து போச்சு... நானெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆகிப் போச்சு.

அவர் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னாடி ஒவ்வொரு முறையும் அவரை யார் கவிழ்த்து விழ வச்சாலும், அவரே வழுக்கி விழுந்தாலும்  ஒண்ணுமே ஆக மாட்டேங்குது - வெட்கமே இல்லாமல் நான் விழுவதுமாதிரி  அதை பெருமையா வேற சொல்றமாதிரி அவரும் தலையில இரண்டு கைய வச்சுகிட்டு ... 
“என்ன ஆச்சு? 2 G ஆ  ... ஏலம் விட்டாங்களா... ஆயிரக்கணக்கான கோடிகளை ஏப்பம் விட்டாங்களா... நான்தான் பிரதமாரா நான்தான் பேசணுமா ஓ கே ஓ கே.. அது ஊழல் இல்லை நாட்டுக்கு நட்டம் மட்டும்தான் சொன்னா  ... எதிர் கட்சிக் காரங்க இரண்டு நாள் சத்தம் போடுவாங்க... தூங்கி எந்திரிச்சா அதுக்கப்புறம் சரியாயிரும் ...”

அடுத்த கூட்டத் தொடர் - “என்ன ஆச்சு? நிலக்கரி ஊழலா? பதுக்கிட்டாங்களா. நான்தான் பிரதமாரா நான்தான் பேசணுமா... ஓகே ஓகே... எதிர் கட்சிக் காரங்க இரண்டு நாள் சத்தம் போடுவாங்க அதுக்கப்புறம் சரியாயிரும்.”

என்ன ஆச்சு? பண மதிப்பு சரிஞ்சு போச்சா? ரொம்பக் கேவலமா போச்சா? ஓகே ஓகே.. நான்தான் பிரதமாரா! நான்தான் பேசணுமா? எதிர்கட்சிகாரங்க கூப்பாடு போடுறதுனாலதான் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வர முடியலைன்னு சொன்னா இரண்டு நாள்ல சரியாயிரும்... ... என்ன ஆச்சு பணவீக்கம் அதிகமா போச்சா??? ஓகே ஓகே  - அப்பத்தான் இறக்குமதி கொறஞ்சு ஏற்றுமதி அதிகமாகுமுன்னு சொன்னா எல்லாம் சரியாயிரும்... 

அடங்கொக்க மக்கா - அவரும் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னாடி விழுகிறாரு.. ஆனா என்ன மாயமோ தெரியலை நாலு வருஷத்துக்கும் மேல ஆகிப் போச்சு அவருக்கு மட்டும் ஒண்ணுமே ஆகிறதில்லை...

ஆனா ஒண்ணுங்க - விழுந்தவனுக்குதாங்க வலி தெரியும்... நாங்க கடைசியில இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு... நாங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...
எது எப்படி ஆனாலும் எத்தனை முறை விழுந்தாலும் அவருக்கு ஒன்னும் ஆகாது... ஏன்னா ரெண்டு நாள் ஆனா நாமதான் எல்லாத்தையும் மறந்து போயிருவோம்...

ஆனா நமக்கு அப்படியா நமக்கு ஏதாவது ஆயிப்போனா என்னையே மொத்தமா மறந்துருவாங்க. அதுனால நான் முடிவு பண்ணிட்டேன். இனி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் ஒன்ற டன் வெயிட் இருக்கும்... அப்பதானே விழாம இருக்க முடியும். ஒருநாளைப் போல எல்லா நாளும் இருக்காதில்லை...

27.8.13

உம்மன் சண்ட்டிக்கு ஒரு உம்மா

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கும் ஒரு பதிவோ என தவறாக என்ன வேண்டாம். இது அப்படிப்பட்ட பதிவு ஒன்றும் இல்லை.

செல்போன் பயன்படுத்தாத முதல்வர் - திறந்த புத்தகம் என்று சொல்லப் படுகிற கேரளா முதல்வருக்கு எதற்கு ஒரு உம்மா... இப்போதுதான் சோலார் பேணல் விவகாரத்தில் சிக்கிச் சிதறினார் வேறு ஏதாவது பிரச்சனையா என்றெல்லாம் எண்ண வேண்டாம்.

கேரளத்தில் அரசுப் பணி பெற மலையாளம் கட்டாயம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் தேர்வில் மலையாளம் மொழிப் பாடமாக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பத்தாம் வகுப்பு பாடத் திட்ட அளவில் அரசு நடத்தும் மொழித் தேர்வில் பாஸ் செய்தால் மட்டுமே நிரந்தர பணி வழங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அதுக்கு எதுக்கு உம்மா... தமிழகத்தில் அது மாதிரி ஒரு தேர்வு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை... கோட்டைக்குள் சென்றால் பல மலையாளிகள் தமிழ் தெரியாமலே இருக்கிறார்கள்... இன்னமும் ஞான்  ஞி என்றே பேசுகிறார்கள்... இவர்களுக்கெல்லாம் தமிழ் மொழித் தேர்வு வைத்தால் நன்றாகத் தான் இருக்கும்...

தமிழ் மொழியை தமிழக அரசே கவிழ்க்கும் சூழ் நிலையில் மலையாளத்தைத் தூக்கிப் பிடிக்கும் உம்மா சண்டிக்கு உம்மா குடுத்தால் தப்பில்லை...
இதைப் பார்த்தாவது நம்மவர்கள் சுரணையோடு இருந்தால் நல்லதுதானே... ஆனால் அவர்களே ஆங்கிலிபிசி ல் பேசினால் நாம் என்ன செய்ய முடியும்?

22.8.13

'அப்பு மண்டி' - ஆவணி ஆறு

உணவுப்  பாதுகாப்புத் திட்டம்
  • மிக வெற்றிகரமாக ஏழை மக்கள் அனைவரும் நிச்சயமாக உணவைப் பெறுவதற்கான திட்டத்தை நாங்கள் நிறைவேற்ற மிகப் பெரிய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று இந்திய அன்னை சோனியா காந்தி சொல்லியிருக்கிறார்கள். இது ராஜீவ் காந்தியின் கனவு என்று சொல்லியிருக்கிறார். அவர் இருந்த போது இந்தியப் பாதுகாப்பு என்று போபார்ஸ் பீரங்கிகளை வாங்குவது அவர் கனவாக இருந்து நிறைவேற்றினார். இப்போது இன்னொரு கனவை இவர்கள் நிறைவேற்றுகிறார்கள் போல.
  •  இப்பதான் மத்தியத் திட்டக் கமிஷன் ஒரு நாளைக்கு முப்பது ரூபா சம்பாரிச்சா ஏழைகள் இல்லைன்னு சொல்லுச்சு... அப்படிப் பாத்தா ரோட்டுல பிச்சை எடுக்குறவங்க கூட ஏழைகள் இல்லைன்னு சொன்னது. இவங்க 67 சதவீதம் மக்கள் பயனடைவார்கள் என்று சொல்றாங்க...  
  • பூச்சி புழுத்து கிடங்குகளில் கிடக்கும் அரிசிகளை ஏழை மக்களுக்கு குடுங்கன்னு நீதி மன்றம் சொன்னதற்கு இதே காந்தியின் பேரன்களெல்லாம்  அரசு விஷயத்தில் நீதி மன்றம் தலையிடக் கூடாது அப்படின்னு சொன்னாங்க. இப்ப திடீர் கரிசனை மக்கள் மேல்....
அணுநீர்க் கசிவு 

  • ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இப்போதும் பணியாளர்கள் அணு உலையைக் குளிர்விக்க வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம். இப்போது ஏறக்குறைய 300 டன் கதிர்வீச்சு நீர் கசிவதாகவும் எந்தத் தொட்டியில் இருந்து கசிகிறது என்று கண்டு பிடிக்க வேலை செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். கூடங்குளத்த நினைச்சா என் எதிர்கால சந்ததியின் வாழ்க்கை முகமூடிகளுக்கு பின்னால்தான் என்று தோன்றுகிறது. அப்படி ஒரு நிலையில், ஒருவேளை இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் உதவி செய்யலாம். 
கச்சத் தீவு 
  • கச்சத்தீவு பற்றி மூச்சே விடக்கூடாது என்று இலங்கை அமைச்சர் சொல்லியிருக்கிறார். கவலைப் படாதீங்க...நீங்க மீனவர்களைச் சுடுங்க... நீங்க புத்தர் சண்டை போடச் சொன்னார்னு சொல்லுங்க... தமிழர்கள் அறிவில்லாதவங்கன்னு சொல்லுங்க... தமிழர்கள் நாட்டைப் பிரிக்க சதின்னு மாண்புமிகு பிரதம மந்திரி மன்மோகன் சிங்குகிட்ட சொல்லுங்க... அவர் உங்களுக்கு நன்றி சொல்லுவார். நீங்க பினான்ஸ் பண்ணி படம் எடுத்தாக் கூட இங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டான். கவலைப் படாதிங்க. 
தடை
  • ஜான் ஆப்ரஹாம் நடித்த படம் தமிழர்களை இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக காண்பிப்பதாகவும் படத்தை தடை செய்ய வேண்டுமென்றும் சொல்கிறார்கள். ஜான் ஆப்ரஹாம் இலங்கையில் இலங்கை அதிகாரிகள் யாரையும் பார்க்க வில்லை என்று சொன்ன மறு நிமிடம் அவர் இலங்கை அதிகாரிகளைப் பார்ப்பதற்காக இருந்த ஆதாரங்கள் முகப்புத்தகத்தில் வெளி வந்திருக்கின்றன. ஆமாம் நான் பார்க்கப் போனேன்... அவன்தான் ஸ்பான்சர் பண்றான்னு ஒப்பனா சொல்லிட்டா நம்ம பிரதமரே பாதுகாப்புக் குடுப்பாரே இதுக்குப் போய்  யாராவது பொய்  சொல்லுவாங்களா ஆப்ரஹாம்.
  • ரா இந்திய உளவுத் துறை என்றெல்லாம் சொல்லுகிறார்கள்... இலங்கை உளவுத்துறை ரொம்ப ஒப்பன் போல இருக்கிறது..
  • தமிழர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தால்தான் தமிழர்களின் நலன் கிடைக்கும் என்கிற ஒரு செய்தியை படம் பார்ப்பவர்கள் எடுத்துக் கொண்டால் போகிறது ஏனெனில் மலையாளர் ஒருவர்தான் மிக சிரத்தையோடு ராஜீவ் இந்தியாவைக் காப்பாற்ற போராடுகிறாராம்.
இளையராஜா 
  • சினிமாக் காரர்கள் எல்லாருக்கும் தங்களது பர்ஸ் நிறைந்தால் போதும் என்கிற அளவுக்கு மட்டுமே இருக்கிறார்கள். அதுதான் ஆப்ரஹாமை பொய் சொல்ல வைத்திருக்கிறது. பொதுவாக இலங்கைத் தமிழர்களை மனதில் வைத்தே பல திரைப் பட கலைஞர்கள் தங்கள் டாலர்களையும் பவுண்டுகளையும் குறி வைக்கிறார்கள். இளையராஜா என்றும் ராஜாதான். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லைதான். அவரும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதைத் தான் தொடர்ச்சியாக வரும் அவரது கான்செர்ட்ட்டுகள் சொல்லுகின்றன. அதாவது பணத்திற்கு மட்டும் அவர்கள் வேண்டும் ஆனால் ஆதரவுக் கருத்து என்கிற அளவில் கூட சில சமயம் எதுவம் சத்தமாய்ப் பேசுவதில்லை... அதனால் இங்கிலாந்தில் விற்பனை மந்தம் என்று சொல்லுகிறார்கள்.
  • இருபத்தி நான்காம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் வேளையில் இன்னும் அரங்கு நிறையாமல் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதனால் உலக நாயகன் முதற்கொண்டு எல்லாரும் வாங்க வாங்கன்னு கூவி விக்கிறாங்க... 
  • இதெல்லாம் தேவையான்னுதான் விசய் ஒரு படத்துக்கு இருபது கோடி வாங்குறாராம். அடப் பாவிங்களா காச என்னதான் பண்ணுவீங்க? நீங்களெல்லாம் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிச்சா உலகத்துக்கே சாப்பாடு போடலாம் போல இருக்கே?

13.8.13

குளோபல் காங்கிரசிடம் சமர்ப்பிக்க காந்திக்கு ஒரு வேண்டுகோள்

பாட்டும்   பெட்ரோலும் 
சின்ன வயசு  விஷயங்கள் பலவற்றை இப்போது நினைக்கிற போது எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுவதால் நான் என் முட்டாள் தனங்களை எல்லாம் மறந்தே போய் விட்டேன்.
சின்ன வயதில் எம். ஜி. ஆர். மற்றும் சிவாஜி படங்களை பார்த்த போதெல்லாம் எப்படி இவர்கள் இப்படி அழகாகப் பாடுகிறார்கள் என்று தோன்றும்... சிவாஜியின் வாயசைவில் அவரே பாடுவது போலத் தோன்றுவதால் அவர்தான் பாடுகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். .... அதாவது பின்னணிப் பாடகர்கள் என்கிற விஷயம் எனக்குத் தெரியவில்லை...
ரஜினிப் படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு - வேறெங்க ஊர்த் திருவிழாக்களில்தான் --- எங்க திருவிழான்னாலும் நடந்து போய் செட்டில் ஆகி ... விடிய விடிய படம் பார்த்த காலங்கள் உண்டு --- நான் சொல்வது இதற்கு முன்பு---

ஒருமுறை ஏதோ ஒரு பாட்டில் ஹீரோ வாய் அசைக்காமல் இருந்தாலும் பாட்டு தொடர்கிறது... எனக்கு முடியலை எப்படி வாயைத் திறக்காமல் இப்படி சுத்தமா சத்தமா பாட முடியும்... நானும் வீட்டுக்கு வந்து வாயை மூடிக் கொண்டு பாடிப் பாக்குறேன்.... ம்க்கும் ம்க்கும் தான்... அதை அப்படியே தொடந்திருந்தால் நான் மங்கி வெங்கி மாதிரி ரொம்ப பேமஸ் ஆகி இருப்பேன்.  என் அண்ணன் நான் செய்யுற செட்டைஎல்லாம் பாத்துட்டு அட மக்கு மக்கு பாடுறது அவன் இல்லை வேற ஆளுன்னு சொன்னதுக்கு என்னைய முட்டாள்ன்னு நினைச்சியான்னு திருப்பிக் கேட்டேன்... இப்ப நினைச்சா சிரிப்பா இல்லை...
°°°
இதாவது பரவாயில்லை எங்க ஊர் மெயின் ரோட்ல இருந்தாலும் சுத்து வட்டாரத்துல இருபது கிலோ மீட்டருக்கு பெட்ரோல் பங்கே கிடையாது... ஒரு வாட்டி மே மாச விடுமுறையில் மாமா வீட்டுக்கு திருச்சிக்கு போனேன் - அப்பா கூட்டிட்டுப் போய் விட்டாரு. பெட்ரோல் இருக்கிற இடத்துலதான் பெட்ரோல் பங்க் இருக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... மாமா திருச்சில மட்டும் எப்புடி இம்புட்டு பெட்ரோல் கிடைக்குது எங்க ஊர்ல ஏன் பெட்ரோலே இல்லை - ன்னு கேட்டேன்...  மாமா ரெண்டு விஷயம் சொன்னார்... அட முட்டாப் பயலே... பெட்ரோல் தோன்ற எடத்துல வராது ஊத்தி வச்சு எடுக்குறாங்கன்னு சொன்னதுக்கு போங்க மாமா பெட்ரோல் நிலத்துலேர்ந்துதான் வருதுன்னு ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தாங்க நீங்க என்ன ஊத்தி எடுக்குறாங்கன்னு சொல்றீங்க போங்க மாமா ...

°°°
கேட்டா உங்களுக்கு சிரிப்பு வருதா இல்லையா? இவன் இவ்ளோ பெரிய முட்டாப் பயலான்னு  என்னையப் பத்தி நினைப்பு வரும்... பரவாயில்லை... நான் சின்னப்பயலா இருந்தப்பதான் அப்படி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விஷயங்கள் அறிந்து கொண்டேன். ஆனால் நம்ம நாட்ட ஆள்கிற மிகப் பெரியவர்களைப் பார்த்தா, வளர்ந்த பிறகும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளாமல் மேலோட்டமாய்ப் பார்க்கிற அவங்க என்னைய விட பெரிய முட்டாள்களாத் தெரிவதானால் என் சின்ன வயசு முட்டாள் தனங்களை ஜாலியாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கிறது.
°°°
முப்பது ரூபாயும் மூன்று வேளை  சாப்பாடும் 

முப்பது ரூபாய்க்கு ஒரு நாளைக்கு சாப்பிட முடியும் என்று பேசுற அமைச்சர் அந்த முப்பது ரூபாய்க்கு அரை லிட்டர் பெட்ரோல் போட முடியுமான்னு கேட்டிருப்பாரா ... மூணு வேலை ரோட்டுக் கடையில சாப்பிட்டு இடையில இரண்டு காப்பித் தண்ணி குடிச்சாலே முப்பது ரூபா பத்தாதே அறிவு ஜீவிகளா எப்படி முப்பது ரூபா போதும்?
சரி அது போதும்னா எல்லா அமைச்சர்களுக்கும் 900 ரூபா சம்பளம் குடுத்து மக்களோட மக்களா வைக்கலாமே சாமி... அப்படியே எல்லாரும் கவர்ன்மெண்டு பஸ்லதான் பார்லிமென்ட்டுக்கு வரணும்னு சொன்னாங்கன்னா குடுக்குற 900 ரூபாயையும் பஸ்ஸுக்கே சரியாப் போகும்னு இந்த அறிவு ஜிவிகளுக்குத் தெரியுமா...முப்பது ரூபா குடுத்தா இருக்க இடத்துக்கு சாப்பாடு வந்துர்ற மாதிரி --- வாயை மூடிக்கிட்டா சுதி சுத்தமா பாட்டு வர்ற மாதிரி பேசுறீங்களே மான்பு மிகு அமைச்சர்களே...
முப்பது ரூபாய்க்கு நம்ம தேசியக் கொடிக்குள்ள சுத்தி வைக்கிற பூ வாங்க முடியுமா சாமி.  இதுக்கு வக்காளத்துக்கு  பதிப்பாளர்கள் வேற. உங்க பதிப்பகத்தை எல்லாம் மூடிட்டு ஹோட்டல் நடத்தி முப்பது ரூபாய்க்கு மூணு வேளை  சாப்பாடு போடுங்க நானும் லைப் டைம் பிளான்ல முதல் ஆளா சேர்கிறேன்.

முக நூலில் படிச்சேன் --- ஒரு பணக்காரனின் ஷாம்ப்பூவில் இருக்கும் பழங்கள் கூட ஒரு ஏழையின் தட்டில் இருப்பதில்லை என்று... ஷாம்பே முப்பது ரூபாய்க்கு வாங்க முடியாதே அவன் எப்படி சாப்பாடு வாங்க முடியும்...
முப்பது ரூபாய்க்கு ஒரு ஷாம்பூ வாங்க முடிந்தால் வாங்கி ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் வீட்டில் இருக்கிற எல்லாரும் சாப்பிட வேண்டியதுதான்.
சரி ஒரு வீட்டில் மூணு இருந்தால் ஒருத்தர் வேலைக்குப் போனால் மூணு பேரும் முப்பது ரூபாய்க்குள்ள  சாப்பிட முடியமா மாமு.

காந்தியின் சுதேசி காங்கிரஸ் 


காந்தித்தாத்தா சுதேசி இயக்கம்னு ஒன்னு ஆரம்பிச்சாரு... கதர் இயக்கம் -- உப்புச் சத்தியாகிரகம்.... வெளி நாட்டுப் பொருட்களை வாங்காதே... புத்தகத்துல படிக்கிறோம்... ருப்பியாவுல மட்டும் காந்தித் தாத்தா சிரிக்கிறார்... இன்னைக்கு இதே காங்கிரஸ்தான் வாங்க வாங்க ன்னு வெளி நாட்டுக் காரனைக் கூப்பிடுது.
ஒரு கட்டுரை ஒன்று படித்தேன். தமிழ்ப் பற்று இந்தியப்பற்றாளர்கள் எல்லாரும் போட்டி போட்டு நாம் அனைவரும் முயற்சி செய்தால், இந்தியப் பொருட்களை வாங்கினால் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த முடியும்... அதனால் சோப்பு என்றால் சந்திரிகா, சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பூ என்றால் டாபர், குளிர் நீர் பானம் என்றால் இளநீர் ... இப்படி நாம் ஒரே நாளில் வெளி நாட்டுப் பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் இருபது ரூபாய் உயரும் ...

அது மட்டுமல்ல அந்தக் கட்டுரையில சாதாரணக் குடிமகனான எனக்கே தெரிஞ்சுர்க்கே ஏன்  இது நிதி அமைச்சருக்குத் தெரியலைன்னு அண்ணனுங்க கேட்குறாங்க... நம்ம அமைச்சரு அடப் போங்கடா முட்டாப் பசங்களான்னு சொல்றாரு...

நம்ம அண்ணன்களுகிட்ட வருவோம்... ரூபாய் மதிப்பு உயரக் கூடாதுன்னுதானே அவங்க இப்படியே பண்றாங்க... சில்லறை வியாபாரம் முதக் கொண்டு, காந்தி அந்நிய பொருட்களை, துணிகளை வாங்காதீர்கள் என்று எதிர்த்த அந்நிய கம்பெனிகளை உள்ளே கூட்டிகிட்டு வர்றாங்க ... ஒரு ஏரியா விடாம எல்லாப் பக்கமும் கடையத் திறந்து கோகோ கோலாவும் கோல்கேட்டும் வித்தா நான் எங்க போய் தேடுறது... ஏதோ பவொண்டோ  மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சு ஓடுது...

காங்கிரசுகாரர்கள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து நான் என் அண்ணனைச் சொன்ன மாதிரி காந்தியின் சுதேசியை முட்டாள்ன்னு சொல்றாங்க... நான் வளர்ந்துட்டேன்... நம்ம அரசியல்வாதிகள் எப்போ வளரப் போறாங்கன்னு  தெரியலை...
***
வெளி நாட்டு மோகம் நம்மைக் கண்ணை கட்டிருச்சு... எத்தனை காந்தி வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. இந்தக் காங்கிரசுக்காரர்கள் இப்படி இருக்கிற வரை... இந்தியா ஒளிரனும்னா வெளிநாடு மாதிரி இருக்கணும்னு கதை சொல்லுவாங்க... அவங்களை மாதிரி இருந்தாதான் பிரகாசமா இருப்போம்... பொருளாதாரம் வளரும் அப்படி இப்படி எல்லாம் கதை சொல்லுவாங்க.
இதெல்லாம் வெறும் கனவு... வெளிநாட்டுக்காரனுக்கு மார்க்கெட் இல்லை அதுனால நம்மளைத் தேடுறான்... என் மாமா ரெண்டு விஷயம் சொன்னாருன்னு சொன்னேன். முதலாவது நான் முட்டாப்பயன்னு சொன்னார். இரண்டாவது... தோன்ற எடத்துல பெட்ரோல் வந்தா நாம ரொம்ப பணக்கார நாடா ஆகிடுவோம்...
எனக்கு -பெட்ரோல் தோன்ற எடத்துல வரலை'ன்னு தெரிஞ்சிருச்சு... ஆனா அதே சமயத்துல நம்ம பொருட்களை மட்டுமே நாம பயன்படுத்தினா நாம நல்லா இருப்போம் அப்படின்னு தெரியுது... எனக்கு அறிவு வளர்ந்திருச்சு ...

தோன்ற இடத்துல வர தண்ணியையே அந்நியக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கிற இந்த அரசியல் வாதிகள் தோன்ற இடத்துல பெட்ரோல் வந்தாலும் நம்ம நாட்டை வளமான நாடா ஆக விட்டிடுவாங்களா என்ன​?
நம்மகிட்ட இருக்குற விஷயத்தை வச்சு நாம பணக்காரனா ஆகிறத தடுக்குற இந்த அரசியல்வாதிகள் முட்டாளா அறிவாளிகளா மாமா!
***
அணுப்பிரகாசம் வெடிப்பிரகாசம் 
அணையப் போற விளக்கு பிரகாசமாய் எரியும்ன்னு சொல்லுவாங்க ... நம்ம நாடு என்னைக்கும் பிரகாசமா இருக்கணும், என்றுமே ஒளி கொடுக்கணும்னு நினைக்கிற பல பேர் ரோட்டுல நின்னு குரல் கொடுக்கிறாங்க.... அணு உலை ஆபத்தானது அது அணையும் போது பிரகாசமாய் எரியும் மெழுகு மாதிரி அது நிரந்தரமில்லைன்னு சொல்றாங்க ...

நம்ம காங்கிரஸ்வாதிகள் கேக்குறது இல்லை... அடப்பாவிங்களா சில்லறை வியாபாரிகள் வயுத்துல அடிக்காதிங்கடா ன்னா கேக்குறதில்லை... அறிவு ஜீவிகள், மனித ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் இவர்கள் சொல்லுவதை இந்த அரசியல்வாதிகள் கேட்பதில்லை...

யார் எது சொன்னாலும் அவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்கிறது சுதேசிக் காங்கிரஸின் பேத்தி...
எந்த ஊர்ல எவன் போராட்டம் பண்ணினான் தண்ணியை கோகோ கோலா இல்லாட்டி பெப்சிக்கு குடுன்னு.... எந்த ஊர்ல வெளி நாட்டுக் கம்பெனிகளை உள்ள விடுங்கன்னு போராட்டம் பண்ணினான்... நீங்களா உள்ள விடுறீங்க... நீங்களா ஒளிரும் இந்தியாங்கிறீங்க ... நகரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் வறுமைக் கோட்டுக்கு மேலே இருக்கிறார்கள்என்று சொல்றீங்க ... சென்னை என்ன வெறும் மவுண்ட் ரோடா... அப்ப கொட நாட்டுல இருக்குறவங்க எல்லாம் ஏழைகளா என்ன... என்ன கருமாந்திரமோ!
ஆனா நாட்டுக்கு நல்லது, மக்களுக்கு நல்லதுன்னு சொல்ற போராட்ட, வீரம் மிக்க மக்களை, மனித ஆர்வலர்களை, சூழல் நண்பர்களை முட்டாள்கள் என்கிறீர்களே நான் எங்க அண்ணனையும் மாமாவையும் சொன்னது மாதிரி... என்ன செய்ய முடியும்?
வெளிநாடு வெளிநாடுன்னு மோகத்துல இருக்குற இந்தக் காங்கிரஸ் காரர்களை காந்தித் தாத்தாவே நீதான் காப்பாத்தணும்...

ஆனா தாத்தா, நீர் கோமணத்தோட போகாதேயும்,  அப்படியே போனாலும் இன்டிமிசிமியின் கோவனம் கிடைச்சாக் கட்டிகிட்டுப் போம். அப்பத்தான் காங்கிரஸ் ஆபிசுக்குள்ளேயே அனுமதி கிடைக்கும் (இன்டிமிசிமி / ஒரு இத்தாலிய நாயுடு ஹால் மாதிரி) - இப்பப் புரியுதா​?  அதுக்கப்புறம் தான் சுதேசியே பேச முடியும்... ஆமா​!

அப்படியே அவங்க கிட்ட சுதந்திர தின வாழ்த்துக்களையும் சொல்லிருங்க - அதாவது இந்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்து அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்ய முதலாளிகளுக்கு கொண்டு போய் சேர்த்த உண்மையான காங்கிரஸ் இதுதான் என்பதால் வாழ்த்துக்களை நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

காங்கிரசுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் -  மக்களிடமிருந்து பிடுங்கி அந்நியர்களுக்கு நாட்டைக் கொடுத்ததற்கு... உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்ன?

31.7.13

இதுவே இறுதியாக இருக்கட்டும்!

ஒவ்வொரு முறையும் அணு உலை அதற்கு எதிராக எழுதுகிற போது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றுதான் தோன்றுகிறது... ஆனால் அதனால் இன்றைய மற்றும் நாளைய தமிழ் சமூகம் சந்திக்க இருக்கின்ற ஆபத்துகள் நம்மை அச்சுறுத்துவதால் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியது அவசியமாகவே இருக்கிறது.
முடிவின் ஆரம்பம் என்கிற ஆய்வுப்பட குறுந்தகட்டில் பல கருத்துகள் மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கின்றன...

ஒப்பந்த மீறல்கள் பற்றிச் சொல்லப் படுகின்றன... வெல்டிங் இல்லாத ரியாக்டோர்ஸ் என்கிற ஒப்பந்த மீறல், இதுவரை அவசர காலச் செயல்பாடு முறைகள் குறித்த ஆவணம் தயாரிக்காத நிலை, பத்து நாளைகளுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வேண்டிய இடத்தில் ஒன்றரை நாட்களுக்குத் தேவையான நீர் மட்டுமே கைவசம் இருக்கின்றன என்பது போன்ற பல்வேறு குறைபாடுகளை வைத்துக் கொண்டு தனது அழிப்புப் பணியை தொடங்க நீதி மன்ற அனுமதியோடு தொடங்கி இருக்கும் இந்த வேளையில் இது குறித்து தமிழர்கள்  எச்சரிக்கை உணர்வோடு இருப்பது மிக அவசியம்.

வி. டி . பத்மநாபன்






26.7.13

நம் ஒரே நம்பிக்கை

மக்களாட்சி அரசமைப்பின் மிகப் பெரிய தூண் நீதித் துறை. இந்த நாட்டின் மக்கள் நல வாழ்விற்கும், தங்கள் உரிமைகள், பாதுகாப்பிற்கும் மக்கள் இறுதியாக நம்பியிருக்கும் ஒரே நிறுவனம் இந்த நீதித் துறைதான். இன்னும் அதன் மீதான நம்பிக்கையை, கணம் பொருந்திய நீதிபதிகள் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையை நான் இழக்க விரும்பவில்லை.

கணம் பொருந்திய நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தடை கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். சொல்வதற்கு என்ன இருக்கிறது?

நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வும் அவர்களது எல்லைகளும் வரையறுக்கப் பட வேண்டியது அவசியம்... இது நிச்சயம் நீதித் துறைக்கும் மக்களாட்சிக்கும் நல்ல விஷயம் இல்லை... ஆனாலும் சில செயல்பாடுகள் இது அவசியமோ என்று சொல்ல வைக்கின்றன...

நீதிபதிகள் ஒன்று சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். சட்டத்தை சரியாக அர்த்தமுள்ள விதத்தில் விளக்க வேண்டியது மட்டும் அதன் கடமையாக இருக்க வேண்டும். 

அதைத் தாண்டி என்றால் மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்க்கை, நாகரிக வாழ்க்கை இவற்றில் எல்லாம் பங்காற்றுவதற்கு நீதித்துறைக்கு அவசியம் இருக்கிறது என்று கருதினால், அதை பாரபட்சம் இன்றி செயல் படுத்துவது அவசியம். 

மக்களின் நலன் என்பது முன்வைக்கப் பட்டால், முதலில் மக்களின் பாதுகாப்பும், கவுரவுமும் முதலிடம் பெற வேண்டும். ஆனால் நடப்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நமது நல வாழ்க்கைக்கு அவசியமானதாகத் தெரியவில்லை.

காவேரி நீர் விவகாரம் எத்தனை ஆண்டுகள் விவகாரம் அதில் இன்னும் உறுதியான இறுதியான முடிவைத் தர நீதி மன்றத்தால் முடியவில்லை... கொடுத்த தீர்ப்பை பிறர் பின்பற்றாத நிலையிலும் அரசுகள் கூடி ஒரு சுமூகமான முடிவு எடுக்க வேண்டுமாம்.... 
முல்லைப் பெரியாறு அணையில் சரியான முடிவுகள் இல்லை... ஆனால் கூடங்குளம் விடயத்தில் மட்டும் விரைவான முடிவு...

எல்லா வழக்குகளுக்கும் வாய்தா .... ஆனால் இதற்கு மட்டும் இறுதியான முடிவு... 
உண்மையில் நீதித் துறை மக்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டிருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடியும் வரை அணு உலைகள் திறக்க தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் அவகாசம்... இன்னும் எத்தனை நாட்களுக்கு...

கணம் பொருந்திய நீதிபதிகள் தங்களது தீர்ப்போடு முடித்திருந்தால் பரவாயில்லை... ஆனால் நாட்டின் பொருளாதராத்திற்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், இந்தியா நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைக்கும் இது மிக அவசியமானது என்று தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். நாட்டின் தேசிய ஒருமைப் பாடு...

காவிரி நீர்க்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இல்லாத, அதற்கு வராத ஒருமைப்பாடு இதற்கு மட்டும் வேகமாய் வந்திருக்கிறது. மற்ற வழக்குகளுக்கு மட்டும் பேசி சுமூகமான முடிவு எடுக்க அரசுகள் முன்வர வேண்டும்... மக்கள் போராட்டங்களில் மக்களோடு அரசுகள் பேச்சு வார்த்தை தேவையில்லையா?

இந்திய நாட்டின் மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் நாட்டின் தென்கோடியில் கூடங்குளத்திலும், வடக்கில் கல்பாக்கத்திலும், இன்றைய மற்றும் நாளைய தலை முறையின் வாழ்கையை அடமானம் வைத்து இந்தியாவிற்கு ஒளியேற்றுவோம்... ஆனால் இந்த மக்களின் வாழ்வாதார விவசாயத்திற்கும், மீன் பிடித் தொழிலுக்கும் எந்த வித உத்தரவாதமும் இன்றி... இன்னும் சில ஆண்டுகளில், இந்திய நாட்டின் இந்தப் பகுதி மக்களின்நாடு பாலைவனமான பின்பு இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஒளியில் பிரகாசிக்கட்டும்...

வெறும் சட்ட விளக்கம் கொடுப்பவர்களாக இல்லாமல் அதைத்தாண்டி நாட்டின் வளர்ச்சி என்று நீதிபதிகள் சிந்திப்பது நல்லதுதான்... ஆனால் இதில் வெறும் மேல்நாட்டு பொருளாதார வளர்ச்சியைப் போல இந்திய நாடும் அணுவின் வளர்ச்சியில் வளர்வதுதான் வளர்ச்சி என்று சிந்திப்பதையும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்று சிந்திப்பதையும், நமக்கான வளர்ச்சி முறையை நாமே நிர்ணயிக்க வேண்டும் என்று சிந்திப்பதும் மிக நல்லது.  

அப்படியே இல்லை என்றால்கூட வெளி நாட்டில் அனு மின் நிலையங்கள், அவற்றின் பாதுகாப்பு அரண்கள், அணு உலையைச் சுற்றி எத்தனை ஆயிரம் மக்கள் இருக்கிறார்கள் அது ஏன் கூடங்குளத்தில் அதிகமாக இருக்கிறது .... ஏன் வளர்ச்சி பெற்ற ஜெர்மனி போன்ற நாடுகள் அனு உலைகளை மூட முடிவு எடுத்திருக்கின்றன? .. மாதத்தில் ஆறு மாதங்கள் வெயிலே இல்லாத நாடுகள் கூட என் சூரியஒளி வழியாக மின்சக்தி தயாரிக்கின்றன? ... வருடம் முழுவதும் சூரிய ஒளியில் குளிக்கிற நாம் ஏன் இன்னும் அதை அதிகப் படுத்தாமல் இருக்கிறோம்?.... அப்படி செயல்படுபவர்களும் ஏன் எப்போதும் போல ஊழலியே திளைத்து இருக்கிறார்கள்... எல்லாவ்ற்றளிலும் ஊழல் என்றால்.... கூடங்குள அணு மின் நிலையத்திலும் தரக்குறைவான சாதனங்கள் இருக்கின்றனவா....  எதனால் அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை? அவர்களின் நியாயமான கோரிக்கைகள் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளையும் நீதித் துறை ஒவ்வொரு மிகப் பெரிய தீர்ப்புக்கு முன்பும் எழுப்ப வேண்டியது அவசியம்... 
இல்லையெனில் கூடங்குளத்தில் இன்னும் இன்னும் அதிக அதிக உலைகள் தொடங்கப்படும் ஒட்டு மொத்த தமிழகத்திற்குமான அபாயம் இன்னும் அதிகமாகும்.

இன்னும் நீதித் துறையிடம் நம்பிக்கை இருக்கிறது... ஏனெனில் மக்களாட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது...