புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.1.14

பொங்கல் வாழ்த்துகள்


  • கா. கவிதை


மூன்று மணி நேரம் வெந்நீர்
மூன்று மணி நேரம் குளிர் நீர்
மாறி மாறி குளித்தேன் நான்- [இரு முறை வாசிக்க]

நெருப்பாய் சிறிது நேரம்
எரிந்தது என் உடல்
பனியாய் சிறிது நேரம்
குளிர்ந்து என் உடல் - [இரு முறை வாசிக்க]

திடீரெனப் பார்த்த பெண்ணின்
மீதான காமமும் காதலும்
நெருப்பாய் பனியாய் வாட்டுதா?
---
பெரிதாய் ஒன்றும் சிந்திக்காதீர்கள்
பெயர் தெரியாத
ஒரு வைரசின்
காய்ச்சல்
என்னை
மாறி மாறி வாட்டுது.

இன்றுதான் சற்றே ஆறுதல்!

போகியில் காய்ச்சல் போய்
பொங்கலில் புது வாழ்வு
--
எல்லாருக்கும் வாழ்த்துகள்
........................

  • பொ. பொன்மொழி (கேட்டது)

தன் மொழியை உயர்வாய் சொன்னால் அதை நம்பாமல் கேலி செய்வதும்
தன் மொழியை இழிவாய்ச் சொன்னால் அதை ஏற்று ரசிப்பதும்
தமிழகத் தமிழர்கள்.

பிறன் மொழியை உயர்வைச் சொன்னால் அதை நம்பி ஏற்பதும்,
அம்மொழியின் பிழைகள் சொன்னால் தற்காத்து விவாதிப்பதும்
தமிழர்கள் தான்
ஏனெனில்
நாம்தான்
நடு நிலையானவர்கள்
அதனால்தான்
நாம்
பட்டி மன்றத்துக்கு பெயர் போனவர்கள்
-- -- -- -- -- --
வடிவேலுவின் பாணியில் சொல்வதென்றால்
நம்ம குடும்பத்தை
நாமலே கேவலமா பேசி
கிண்டலடிப்பதை
ஒரு வழக்காமாகவே
வச்சிருக்கோம்.
வாழ்க
நம் வீரப் பழக்கம்
​​​​ ______

 பொங்கல் வாழ்த்துகள்
மண்ணை நேசிக்கும் பழக்கம் இருந்தால்தான்
இனி வரும் காலங்களில்
பொங்கல் கூட கொண்டாட முடியும்...

இல்லையென்றால்
பொங்கல் செய்வது எப்படி
தொலைக் காட்சி
நிகழ்ச்சிகளில் தான்
பார்க்க முடியும்.

----






31.12.13

(நம்மாழ்வார்) இறுதியும் (ஆம் ஆத்மி) தொடக்கமும் 2013 - 4

வருடக்கடைசியில் முக்கியமான நிகழ்வுகள் குறித்து எழுதுவது 
மரபு என்பதனால் அதை மீற முடியவில்லை. 
(உருப்படியா ஒன்றும் எழுதவில்லை என்பதை எவ்வளவு நாகரிகமாக சொல்ல வேண்டியிருக்கிறது
அது போலவே இந்த வருடத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்தோமா 
என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.)
  • ஐ லவ் அமெரிக்கா நாட் தேவயானி 
    • இது போலவெல்லாம் நானே சொல்வேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நடக்கும் நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன. வெறும் தனது திறமையை மட்டும் ? வைத்து உயர் பதவியில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் தேவயானி மற்றும் அவரது தந்தையையும் நமக்கு இதற்கு முன்பு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் இந்த வயதில் பல முறை கேடுகளில் சிக்க ஒரு சிறு விஷயம் உதவி இருக்கிறது. விசா ஏமாற்று அதைத் தொடர்ந்து ஆதர்ஷ் குடியிருப்பில் வீடு வாங்கியது என்று நீண்டு கொண்டே போகிறது. இது அப்படியே இனிமேல் மறைக்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் சமாஜ்வாதி கட்சி MLA சீட் தர தயாராயிருக்கிறது - இயக்குனர்கள் யாரவது ஹீரோயின் அல்லது வில்லி வாய்ப்பு கூட கொடுக்கலாமப்பா...  
      • ஊழல் செய்தால் சீட்டு நிச்சயம். அப்துல்கலாமைத் தடவிப்பார்த்த போது இல்லாத தவிப்பு தேவயானிக்கு இருக்கும் பரபரப்பை பார்த்தால் - வடக்கில் பிறப்பது எவ்வளவு அவசியம் என்பதும், அப்படி முடியாத பட்சத்தில் ஓரளவு ஊழலாவது செய்வது அவசியம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
  • மரணம் - அனுதாபங்கள்
    • Walker - ன் மரணம் மிகப் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது திரைப்படத்தின் தலைப்பை போலவே வாழ்க்கை அவ்வளவு விரைவாய் முடிந்து போனது. இதுவே திரைப்படமாய் இருந்திருந்தால் நிச்சயம் அவர் தப்பியிருப்பார். மரணம் கொடுமையானது. திரைப்படத்தில் பல முறை உயிர் தப்பியவர் நிஜ வாழ்க்கையில் ஒரு முறை கூட தப்பவில்லை என்பது வேதனையே. 
    •  நெல்சன் மண்டேலா உடல் நிலை சரியில்லாத போதே இறந்து போனதாக முகநூலில் அஞ்சலி செய்தார்கள். இப்போதுதான் உண்மையான அஞ்சலிக்கு வேலை வந்தது. நிஜத்தில் பல முறை இறந்திருந்தாலும் எப்போதும் வாழ்பவர் அவர். 
      • இறப்பதோ ஒரு முறை. அதற்கு முன்பு கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் மண்டேலா போல. 
      • இறப்பு எப்படியும் வரும். இங்கிலாந்துக்கு டயானா போல அமெரிக்காவிற்கு வாக்கர். டயானா போல கொஞ்சம் ஆசணத்தில் இருந்து இறங்கி வாருங்கள். 
      • இந்தியாவிற்கு காந்தி போல தென் ஆப்பிரிக்காவிற்கு மண்டேலா. சுடப்பட்டாலும் கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் காந்தி போல. 
      • திடீரென இறந்தாலும், இயற்கையை நேசியுங்கள் நம்மாழ்வார் போல. இயற்கையோடு இயைந்து வாழுங்கள் அவர் போல!
    • நம்மாழ்வார் - திடீரென இறந்து இந்த ஆண்டின் சோகத்தை அதிகப் படுத்தி விட்டு சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை மட்டும் நம்பி, பாலை நிலத்தில் உறங்கிக் கிடந்த உயிரைத் தட்டி எழுப்பிய மகான்... போராட்ட நேரத்தில் மடிந்து பலருக்குள் உயிராய் கிளர்த்தெழுவார் என்று நான் நம்புகிறேன். விவசாய நாட்டுத் தலைவர்கள் நம்மாழ்வாரின் கருத்தை இப்போதாவது கேட்பார்களா? 
  • புதிய ஆண்டு 
  • ஜாதகம்
    • கணித மேதை ராமானுஜத்தை யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, கணக்கு பண்ணுவது மட்டும் எல்லாருக்கும் பிடிக்கிறது - உலகம் பூராவும். கணக்கு பிணக்கு என்றாலும் பொதுவாய் கணக்கிடுவது பிடிக்கிறது. கடந்த ஆண்டு பூராவும் மாயன் காலண்டர் பற்றி பேசினோம். வரப் போற ஆண்டைப் பற்றி அதற்குள் அடுத்த கணக்கு வந்துவிட்டது. 1947 ம் 2014 ம் ஒரே காலண்டராம்.. அதனால் அடுத்த விடுதலையைப் பற்றி எல்லாரும் அவதானிக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடிதான் அந்த விடுதலைப் போராட்ட தலைவர் எனவும், அடுத்த தேர்தல் முடிவுகள்தான் விடுதலை நாள் என்றும் பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. நானும் எனது பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா? 
      • விடுதலை சரிதான் 1947 நமது நாட்டில் பிளவு ஏற்படாமல் இருந்தால் சரி.
  • புதிய ஆண்டு
  • ஆம் ஆத்மி -
    • பெரியாரின் போராட்டக் கழகத்திலிருந்து தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த அண்ணாவின் தி. மு. கழகம் போல - அன்னா ஹசாரேவின் போராட்டக் களத்திலிருந்து அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி புறப்பட்டிருக்கிறது. அண்ணாவின் தி. மு. க. மிகப் பெரும் வெற்றி பெற்றது போலவே மிகச் சிறந்ததொரு வெற்றியை டெல்ஹியில் பதிவு செய்திருக்கிறது ஆம் ஆத்மி. 
    • எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் மிகப் பெரும் விடுதலையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதை வைத்தே கணிக்க முடியும். மக்கள் சார்பாக இப்போது போல எப்போதும் நிற்கும் என்று நிறைய எதிர் பார்க்கிறோம். ஒரு நாளைக்கு 700 லிட்டர் நீர், அரசு அதிகார்களின் மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது போன்ற நிறைய உத்திரவாதங்கள்... நல்ல தொடக்கம். இது போன்ற தொடக்கங்கள் தான் 2013 - ன் சோகங்களை பின்னுக்குத் தள்ளி நம்பிக்கையோடு வாழ வழி வகுக்கின்றன. 
    • தில்லியில் உள்ள ஆம் ஆத்மிக்கு கொடிகாத்த குமரனின் திருப்பூரில் ஒரு கிளை.... மக்கள் போராட்ட களத்தில் நிற்கும் உதய குமாருக்கு அழைப்பு என தமிழகத்திலும் ஏழை மக்களின் - (அரசு அதிகார எந்திரங்களுக்கு மத்தியில் சாதாரண மக்கள் எல்லாரும் ஏழைகள் தானே)- விடுதலைக்காய் உழைக்கும் தலைவர்கள் ஒன்று சேர வேண்டியது அவசியமாகவே படுகிறது. நிறைய மண்டேலாக்கள் - நிறைய நம்மாழ்வார்கள் - ஓரணி சேர வேண்டியது அவசியமாகிறது.
    • இப்போது 2014 இன்னும் ஒரு விடுதலை ஆண்டாய்தான் தெரிகிறது.
  • இன்னும் ஒரு உன்னதமான விடுதலையை அகிம்சை வழியாய் சாத்தியப் படுத்துவோம் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம். 
வாழ்த்துகள்!  

14.4.13

சித்திரை பேசுதடி



  • தமிழர் யார் என்பதில் எப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றனவோ அதோ போலவே தமிழரின் புத்தாண்டு எது என்பதிலும் சிக்கல்கள் பல இருக்கின்றன போல. தை – யா அல்லது சித்திரையா? பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யம் இல்லை. அதைத் தமிழர் புத்தாண்டு என்று கொண்டாடுவதிலும் எனக்குத் தயக்கம் இல்லை.
  • அதே சமயம் சில கேள்விகளை முன்னிறுத்த வேண்டியது அவசியம். இன்னமும் ஏப்ரல் மாத நடுவில் பல தெற்காசிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன. வங்காளம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சிறிலங்கா, லாவோ போன்ற நாடுகள். இந்தியாவில் சீக்கியர்கள், அஸ்ஸாமியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளர்கள் என பல இனங்கள் இந்த காலத்தில்தான் புத்தாண்டு கொண்டாடுகின்றன.
  • இதுமட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகளில் கூட வசந்த காலம் தொடங்கும் இந்த கால கட்டத்தில்தான் புத்தாண்டை கொண்டாடி வந்திருக்கின்றனர். அதாவது கிரகோரியன் காலண்டர் முறை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன்பு வரை என்று சிலர்  நினைக்கிறார்கள். அந்தக் காலண்டர் முறையை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏப்ரல் மாதங்களில் தொடர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிய மக்களை கேலி செய்வதற்காகவே உருவாக்கப் பட்டது முட்டாள்கள் தினம் என்று ஒரு தியரி உண்டு. அதுவே தொடர்ந்து ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடும் அனைவரையும் முட்டாள்கள் என கேலி செய்யும் நாளாக ஆனது என்று வாதிடுபவர்களும் உண்டு. அப்படியானால் தமிழர்களின் புத்தாண்டுதினமும் சித்திரையில்தானா?
  •  எது எப்படியோ நாம் இன்னும் நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழினம் பற்றி வெளிவந்திருக்கிற ஆய்வுகளை சாதாரண மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி – துப்பாக்கி, ஒசத்தி-போடா போடி இவைகளைத் தவிர்த்து தமிழ் மொழி குறித்தோ, இனம் குறித்தோ, சித்திரை குறித்தோ தொலைக்காட்சிகள் ஏதாவது ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் லட்டு தின்ன ஆசையா என்று கேட்டு, தமிழ் தெரியாத நடிகைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து தமிழ் மொழியை வளர்க்கலாம்.
  • அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

14.1.13

பொங்கல் வாழ்த்துகளா!


  • இந்த ஆண்டு வரிசையாய் புத்தாண்டு விழாக்கள். ஒன்று மாற்றி ஒன்று. முதல் புத்தாண்டு கடந்த டிசம்பர் 22 - ஆம் தேதி தொடங்கியது.  - மாயனில் மயங்கிப் போனவர்கள் கொண்டாடிய புத்தாண்டு அது. அதன் பிறகு உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடினார்கள்.  என்ன வித்தியாசம் என்றால், மாயன் காலண்டரின் ஆண்டுக் கணக்கு உலகம் முழுவதும் தெரிந்து விட்டது. அதனால் உலகம் முழுவதும் கொண்டாடினார்கள். ஆங்கிலப் புத்தாண்டும் உலகம்  முழுதும் கொண்டாடப் பட்டது. ஆனால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் கூட கொண்டாட மாட்டார்கள். நமக்கு இன்னும் தை தானா - ஆண்டின் தொடக்கம் என்கிற கேள்வியே முதலில் வந்து நிற்கிறது.
  • எதுவாய் இருந்து விட்டுப் போகட்டும் பொங்கல் கொண்டாடுவதில் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நல்லதுதானே!
  • நண்பர் ஒருவர் முகநூலில் பின்வரும் கருத்தை சொல்லியிருந்தார். இந்தியா முழுவதும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான பிறகு இந்தியா முழுவதும் பத்திரிக்கைகள் அதை டெல்லிக்கும் உலகத்திற்கும் கொன்று சென்றது. ஆனால் ஈழத்தில் இறந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் டெல்லியைக் கூட எட்ட வில்லை.  
  • அது எப்படி எட்டும்? தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள், கூடங்குளம் எதிர் நோக்கும் அபாயம், வரிசையாச் சுட்டுக் கொள்ளப்படும் தமிழ் மீனவர்கள் இவர்களைப் பற்றிய செய்தியைக் கூட வெளியிட மறுக்கும் தமிழ் பத்திரிக்கைகள், அல்லது இந்தியப் பத்திரிக்கைகள் இருக்கும் வரை, அது எங்கும் சென்று சேராது. ஒரு மீனவன் இறந்தால் அவன் தமிழ் மீனவன். இறந்தால் அவன் தமிழன். தமிழ் நாட்டு தமிழனைப் பற்றியே கவலைப் படாத டெல்லி எப்படி ஈழம் பற்றிக் கவலைப் படும்?
  • உழும் நிலம் வறண்டு நிற்கிற போது , இந்திய நீதி மன்றம் வரையறுத்து இருக்கிற தண்ணீரைத் தருவதற்குக் கூட கர்நாடகம் மறுத்து நிற்கிற அவலம் இந்த டெல்லியை எட்டாது. எட்டா உயரத்தில் இருக்கும் டெல்லியை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால், வடிவேலு சொல்லுவது மாதிரி - இங்க இருக்குற தமிழ் நாட்டை எடுத்து அப்படியே டெல்லி பக்கத்துல வச்சுட்டா ரொம்ப சுலபமாக் கேட்கும்.
  • பொங்கல் கொண்டாடுவோம்.

18.1.11

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு.
நாம் அதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை.
நமக்கென்று இருக்கவே இருக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு – அரையாண்டு விடுமுறையில் வருவதால் நன்றாகக் கொண்டாடவும் முடிகிறது.

அது மட்டுமல்லாமல் ஒரே ஆண்டில் எத்தனைப் புத்தாண்டுதான் கொண்டாடுவது என்ற கேள்வி வேறு எழுகிறது? ஆங்கிலப் புத்தாண்டு, பிறகு, தமிழ் புத்தாண்டு; பிறகு தெலுங்குப் புத்தாண்டு. சிறு பிள்ளைகள் போல நினைத்தால், அவைகளெல்லாம் வெறும் விடுமுறை நாட்களாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்குப் பின்புலம் எதுவும் உண்டா என்பது புரியாமலே இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் காரணம் அடையாளம்தான் [identity]. நமது அடையாளம் எது என்பது புரியாத நிலையில் நாம் இருக்கிறோம். மொழி மட்டுமா அல்லது அதனோடு தொடர்புடைய விழாக்களா / பண்பாட்டுக் காரணிகளா , அல்லது சமயமா, அல்லது தேசமா, உலகமா? எதில் நம் அடையாளம் இருக்கிறது. எல்லாமே என்றால் தனித்துவ அடையாளம் என்று ஒன்று இருக்க வேண்டுமே? அது எது? எதனடிப்படையில் அதை வரையறுப்பது? புத்தாண்டுக் கேள்வியாய் இது இருக்கட்டும்.

வேறு விடயத்திற்கு வருவோம்.
நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாட விருப்பம் இல்லாதவர்கள் என்று நானே எண்ணிக் கொள்கிறேன். எனவே அதற்கான தர்க்கத்திற்கு வருவோம்.
சித்திரையைத் தான் இத்தனை ஆண்டுகளாய் நாம் தமிழர் புத்தாண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தோம். எனவே அதை கலைஞர் மாற்றி விட்டார் என்பதனால், அந்தக் கோபத்தினால் இந்தப் புத்தாண்டு வேண்டாமென்றால் நாம் தமிழர் வரலாற்றை [இதை எப்போது முடிவு செய்தார்கள், யார் யார் செய்தார்கள் – எதற்காக முடிவெடுத்தார்கள் என்பது பற்றியெல்லாம்] ஆழ்ந்து படிக்க வேண்டியிருக்கிறது. அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்.

அல்லது "புத்தாண்டு வாழ்த்துக்கள்" சற்று இடைவெளி விட்டு - "மூன்று மாதங்களுக்கு முன்பாகவே" என்று சோ போல கிண்டல் அடிக்கலாம்.
வேதங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சமஸ்கிருத வருடங்கள் ஏப்ரலில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு விரோதி ஆண்டு. இப்போது விக்ருதி ஆண்டில் இருக்கிறோம். இது பங்குனி மாதம் முடிந்து “கர” ஆண்டு சித்திரையில் தான் தொடங்குகிறது. எனவே அப்போதுதான் தமிழ் ஆண்டு தொடங்குகிறது என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. “இந்து இந்தி இந்தியா” பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வெற்றுச் சடங்காககிப் போன இந்தப் பொங்கலைக் கொண்டாடித்தான் ஆக வேண்டுமா என்ற வேதனை இருப்பதால் இப்பொங்கல் விழாவை கொண்டாட மனதில்லை என்றால் சடங்காக இல்லாமல் உண்மையான பண்பாட்டு விழாவாய்க் கொண்டாட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
அல்லது
இதைக் கொண்டாடுகிறவர்கள் என்றால் எதற்காக இந்த விழா அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து கொண்டாடுவதும் முக்கியமானது. மொழி என்பது வெறும் தொடர்பு இணைப்பான் – எனவே இந்த மொழி பேசுகிறவர்கள் கொண்டாடுவது என்கிற மேலோட்டமான புரிதல் மட்டுமே போதாது. ஏனென்றால் விழாக்களுக்கு மட்டுமே நாம் பேர் போனவர்கள் – எனவே இதன் சிறப்பும் நமக்குப் புரியாது.

ஆக என்ன செய்யலாம். இதை எழுதிய என்னை இரண்டு திட்டு திட்டிவிட்டு வேறு வேலை இருந்தால் செய்யலாம்: அல்லது இந்தப் பண்பாட்டு விழாவை பொருள் உணர்ந்து கொண்டாடலாம். பொங்கலாம்.
இது வெறும் புத்தாண்டு மட்டுமல்ல – அடையாள விழா! ஆனால் அடையாளம் பற்றிய நீண்ட விவாதமும் தேவைப்படுகிறது. விவாதிப்போம்.
வாழ்த்துக்கள்.

14.1.11

பொங்கல் வாழ்த்துகள்

தமிழர் திருநாள் – பொங்கல் – வாழ்த்துகள்
  • பொங்கல் தமிழர் திருநாளில் ஒரு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இது தமிழர்களின் அடையாளம் என்று அழுத்திச் சொல்லலாம். அதோடு கூட இது தமிழர் புத்தாண்டாகவும் கொண்டாடப் படுவது கூடுதல் சிறப்பு.

  • சித்திரைத் திருநாளை ஆண்டின் முதல் நாளாகக் கொண்டாடி வந்தவர்கள் – நீண்ட நெடிய ஆய்வு, போராட்டம், விரக்தி, வேண்டுதல்களுக்குப் பிறகு அரசின் கட்டிடங்கள் விழாக் கோலம் பூண்டு மக்கள் இதை நமது புத்தாண்டாகக் கொண்டாட வழி வகுத்திருப்பது போற்றக் கூடியதே. ஆனாலும் நம்மில் பலருக்கு இது கலைஞர் மேலுள்ள வெறுப்பு காரணமாகவும் அல்லது மரபின் காரணமாகவும், சித்திரையை மாற்றுவதில் உடன்பாடற்று இருக்கிறோம். தவறான மரபில் ஊறிப்போய் அதிலே உழலும் நமக்கு மாறுவதும், மாற்றுவதும் கடினமே. நமக்கென இருக்கும் அடையாளங்கள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் நமக்கென ஒரு புத்தாண்டாவது இருந்து விட்டுப் போகட்டுமே. அடையாளம் அழியாமல் இருக்கட்டும்.
  • தமிழக முதல்வரின் வேண்டுதலுக்கு இணங்க கேரள முதல்வர் அய்ந்து மாவட்டங்களுக்கு பதினைந்தாம் தேதி விடுமுறை விட்டிருப்பது சிறப்புச் செய்தி. அதற்குப் பதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மன சாட்சியோடு நடப்பதே சரியான செயல் பாடாக இருக்கும்.
  • இது சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் விழா. அதோடு சேர்த்து மற்ற வான் கடவுளர்கள், உழவுக்குத் துணை புரியும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விழா. சூரியன் எல்லாப் பண்பாடுகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதும் – சூரியனே முதல் கடவுளாக பழமையான சமயங்களில் இருப்பதும் நாம் அறிந்ததுதான். பழைய எகிப்தில் ... அல்லது ஹீலேயோஸ் என்கிற கிரேக்க சூரியக் கடவுள், சமாஸ் என்கிற பாபிலோனிய சூரியக் கடவுள் ... இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களாகிய நாம் நமது ஆதியை விட்டுவிடாமல் இருப்பது ஆச்சரியமே. ஆனால் சூரியன் என்பது நமது அரசியலோடு தொடர்பு கொண்டுள்ளதால் சூரியன் பற்றி நாம் யோசிப்பதையே விட்டுவிட்டோம்.“சுட்டெரிக்கும் சூரியன்” என்று மட்டுமே சொல்லப் பழகிப் போய் விட்டோம் – ஆனால் நமது பிரிவினைகளை சுட்டெரிக்க அனுமதிக்காமல் நமது சாதிகள், மதங்கள் மேல் கூரை கட்டப்பழகி விட்டோம். அதனின் “இயங்காமல் இயக்கும் தன்மை”, “வாழ்வாக்கம்” ... இன்னபிறக்களில் நம் கவனம் செல்ல இப்புதிய ஆண்டு வழி வகுக்கட்டும்.
  • ஏறக்குறைய, 320 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதிய ஆண்டில் அனைவருக்கும் [உழைக்காமல்] இலவசப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. உழைப்பாளர் தின வாழ்த்துக்களை கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லாருக்கும் தவிர்த்து உழவர்களுக்கென மட்டுமேன்றிருந்தாலும் உழைப்பாளர் தினத்தன்றாவது அவர்களை மதிக்கிறோம் என்றாகி இருக்கும். இப்போது அதற்கும் வழியில்லை.
  • விவசாயத்தை மதிக்காமல் – விளை நிலங்களைப் பராமரிக்காமல் – அதற்கு வழியே விடாமல் – வெறும் ரியல் எஸ்டேட் பிசினஸ் – குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு – அறைக்குள் மட்டும் கணனிகளின் அணிவரிசை – உணவு உற்பத்திக்கான முயற்சிகளில் இறங்குபவரை ஊக்கப் படுத்தாமல், நீராதார வளங்களைப் பெருக்காமல் இப்போது விலை வாசி உயர்வு – ஒரு நாள் பொங்கல் பொட்டலம் ஒன்றும் செய்யாது.உழைப்பாளர் அழியாமல் இருக்கட்டும்.
வாழ்த்துகள்


1.1.11

புதிய ஆண்டு - 2011

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் புதிய நாள். பல்வேறு காரணங்களுக்காக அது அவ்வாறு இருக்கும். எனவே ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். 
ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் எல்லாரும் விமரிசையாகக் கொண்டாடுகிற நிலை ஒரு குழும உணர்வை - தான் தனித்து இல்லாமல் அனைவரோடும் இருக்கிறோம் - ஒரே மன நிலையில் இருக்கிறோம் என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது.

மகிழ்ச்சி நீடிக்கட்டும்.

ஆங்கிலப் புதிய ஆண்டை ஏறக்குறைய எல்லாரும் கொண்டாடுகிற போது அனைவரும் தங்களது குறுகிய மனநிலையத் தாண்டி ஒரே எண்ணத்தோடு இருக்கிறோம் என்பது இதின் பலம்.

ஆனால் - இந்த விழாக்கள் நிறைய வியாபார நோக்கிலேயே இருக்கின்றன. குழும உணர்வு என்கிறதைத் தாண்டி, அதன் பொருள் மாறி - உணர்வற்ற, பொருளற்ற, சத்தங்கள் எழுப்புகின்ற, சத்தங்கள் மட்டுமே எழுப்புகின்ற நாட்களாக மாறி விட்டன.

எதுவும் செய்வதற்கில்லை - இக்கடலில் கலப்பதைத் தவிர.


புத்தாண்டு வாழ்த்துக்கள்.