அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.9.13

இந்தியர்கள் கோமாளிகள் ஆக்கப் படுகிறார்களா? - (தினமணி தலையங்கம்)

அணு உலை விஷயத்தைப் பற்றியும் அதில் உள்ள சிக்கல்களை பற்றி எழுதும் போதெல்லாம் பொது மக்கள் கோபப்படுவதைத்தான் பார்க்கிறேன்.  அணு உலையே வேண்டாம் என்பதுதான் நமது நிலையாக இருந்தாலும், அரசு அதற்கு செவிமடுக்கும் சூழ்நிலையில் இல்லை. இந்த அரசு அவசரப் பட்டு எடுக்கும் எந்த முடிவும் நாட்டை அதல பாதாளத்திற்குத்தான் தள்ளும். நாட்டு மக்களின் பாதுகாப்பை பணயம் வைத்துத்தான் நமது வளர்ச்சி இருக்க வேண்டுமா என்பதைக் கேட்க வேண்டியிருக்கிறது. 

ஆனானப் பட்ட ஜப்பானே எல்லா அணு உலைகளையும் மூடியிருக்கிறது. நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

விபத்தினால் ஏற்படும் எந்த நிலையையும் பணம் சரி செய்துவிடாதுதான். அதற்காக விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் இருந்து அணுஉலை வழங்கும் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொழில் நுட்பக் கோளாறோ அல்லது சேவைக் குறைபாட்டினாலே விபத்து ஏற்பட்டால் அதை வழங்கிய நிறுவனத்தின் மீதான பொறுப்பை இந்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. 

சாதரணமாக வாங்கும் பொருட்களுக்கே கியாரண்டி எல்லாம் இருக்கும் போது அணு உலைகள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்... இப்படியே போனால் ஐ.எஸ்.ஐ. க்கெல்லாம் வேலையே இருக்காது. கியரான்டிக்கும் வேலை இருக்காது - சைனாப் பொருட்களைப் போல. ஆனால் உடைத்தால் தூக்கிப் போட இது ஒன்றும் கொசு அடிக்கும் பேட் அல்ல.
விபத்தினால் உயிரிழக்கப் போகிறவர்கள் கையெழுத்து இடப் போகிறவர்களும் அல்ல.
நம்மை பணயம் வைத்து நிறுவனங்களை - அமெரிக்க நிறுவனங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? 

அமேரிக்கா சிரியா மீது கட்டப் பஞ்சாயத்து பண்ணுகிறது? தனது நாட்டு மக்கள் மீதே சிரியா அதிபர் காஸ் பயன்படுத்தினார் என்று. இப்ப இந்தியப் பிரதமரைப் பயன்படுத்தி இந்திய மக்களின் பாதுகாப்பை உசாதீனப் படுத்த வைக்கும் இந்த வேலைக்கு யார் கட்டப் பஞ்சாயத்து பண்ணுவது? இந்தியப் பிரதமர் மீதோ, இதைச் செய்யத் தூண்டும் அமேரிக்கா மீது யார் படையெடுப்பது?

இனி தினமணி தலையங்கம்...
 ===============================================================
போபால் விஷவாயு விபத்தில், யூனியன் கார்பைடு நிறுவனம் இந்திய மக்களை ஏமாற்றியதைப் போன்ற இழிநிலை இனியும் ஏற்படலாகாது என்பதற்காக, மிகப்பெரும் எதிர்ப்புகள் போராட்டங்களுக்குப் பிறகு, அணுஉலை விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருந்தால், அணுஉலைகளை வழங்கியவர்கள் பொறுப்பேற்கவும், இழப்பீடு வழங்கவும் செய்யும் சட்ட விதிமுறைகள் ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இப்போது, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அணுஉலையை வழங்கிய நிறுவனம் பொறுப்பேற்று, இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையை இந்திய அரசு தளர்த்தவிருக்கிறது என்கின்ற செய்தி "கதிர்வீச்சுக் கசிவாக' வந்துகொண்டிருக்கிறது.
அணுஉலை விபத்தில் குடிமை கடப்பாடு சட்டம், பிரிவு 17-ல், விபத்துக்குக் காரணம் அணுஉலை, அல்லது தொழில்நுட்பம், அல்லது சேவைக் குறைபாடு என உறுதிப்படும்போது, அதை வழங்கிய நிறுவனமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.
தற்போது அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆலோசனை கூறியிருப்பதைப் போல, "இந்த பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்துவதோ அல்லது வலியுறுத்தாமல் விட்டுவிடுவதோ அந்த அணுஉலையை நடத்தும் நிறுவனத்தின் விருப்பத்தை சார்ந்தது' என்று மாற்றுவதன் மூலம், அணுஉலை வழங்குபவரைப் பொறுப்பேற்பிலிருந்து விடுவித்துவிட வழியேற்படுகிறது.
இந்தியாவில் அத்தனை அணுஉலைகளையும் தற்போது இயக்குவது இந்திய அணுமின் கழகம் (என்பிசிஐஎல்). இது இந்திய அரசு நிறுவனம். ஆக, பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்தாமல் தவிர்த்தால், முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய கடப்பாடு இயல்பாக இந்திய அணுமின் கழகத்தையே சேரும்.
அடுத்த கட்டமாக, அணுமின் நிலையங்களைத் தனியார்மயமாக்கும்போது, ஒப்பந்தத்தில் யாரைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பது அந்த தனியாரின் விருப்பம். ஆகவேதான் இந்த விதித்தளர்வு என்று இந்திய அரசு எதிர்வாதம் வைக்கக்கூடும்.
அனல்மின் நிலையங்களைப் போல, அணுமின் நிலையங்களையும் தனியார் நடத்துவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். ஆனால், அணுஉலை விபத்தில் குடிமைக் கடப்பாடு சட்டத்தில், இழப்பீடு தொகை அதிகபட்சம் எவ்வளவு? அரசு சார்ந்த நிறுவனம் என்றால் 300 மில்லியன் டாலர், அதாவது, இன்றைய கணக்கில் 1850 கோடி ரூபாய். அதுவே, தனியார் நிறுவனம் என்றால் ரூ.1500 கோடி மட்டுமே! எப்படி இருக்கிறது?
இந்திய அரசுக்கு அதிக தொகையும், தனியாருக்கு குறைந்த தொகையும் இழப்பீடு என்பதே ஒரு ஏமாற்று வேலை. இப்போதைக்கு அரசுதான் அணுஉலைகளை அமைக்கப் போகிறது என்று கூறி மக்களை ஏமாற்றும் வித்தை. இது தவறு என சுட்டிக்காட்டினால், "இந்தத் தொகை அந்தந்த நேரத்துக்கு மாறுதலுக்கு உட்பட்டது' என்பதையே இந்திய அரசு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.
இழப்பீடு வழங்குவதில் அதிகபட்ச அளவு என்ற கட்டுப்பாடு கூடாது என்றும், இழப்பின் தன்மையை கணக்கிட்டு முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கூறிய போதிலும் அதனை அரசு பொருட்படுத்தத் தயாராக இல்லை.
தனியார் நிறுவனங்கள் அணுமின்நிலையங்களை நடத்தும்போது, இழப்பீடு தொகைக்காக காப்பீடு செய்து கொள்வதே வழக்கம். இந்திய அரசு சொல்வதைப் போல, அவர்கள் காப்பீடு செய்து கொண்டால், ரூ.1500 கோடிக்கு மட்டுமே காப்பீடு செய்வார்கள். விபத்து மிகப்பெரியதாக இருப்பின், மீதி செலவினத்தை நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசுதான் ஏற்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுக்கு அணுஉலைகள் வழங்கப்போகும் அமெரிக்க நிறுவனங்கள் இரண்டு: வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ. இதில், புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு அணுஉலைகள் வழங்கிய ஜிஈ நிறுவனம் அடைந்த லாபம் 5 பில்லியன் டாலர். 2011, மார்ச் 11 ல் அணுஉலைகள் சேதமடைந்தன. இதற்கு ஜிஈ நிறுவனம் பொறுப்பேற்க சட்ட விதிகள் இல்லை. அப்படியே இருந்தாலும், இயற்கை பேரிடருக்கு (இந்திய சட்டத்திலும்கூட) அணுஉலை வழங்கியவர் பொறுப்பாக மாட்டார். இப்போது இந்த அணுமின் நிலையத்தை நடத்திய "டெப்கோ' காப்பீட்டுத்தொகையைவிட இழப்பீடு அதிகமாக இருப்பதால் நட்டத்தில் தத்தளிக்கிறது.
பட்டுத் திருந்துபவன் ஏமாளி. பார்த்துத் திருந்துபவன் அறிவாளி. நாம் அறிவாளியாக இல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாலேயே கோமாளி ஆக்கப்படுகிறோமே, அதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை!
(ஆசிரியர் தினமணி)
==============================================================================================

16.7.13

நான்கு தலைவர்கள்


நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் ஒன்றாக சேர்ந்து நிற்பது போன்ற விஷயங்கள் இந்தியாவில் நடப்பது மிக அரிது. இந்தியாவில் இது போன்ற நான்கு பிரதம மந்திரிகள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இப்படி இருப்பது நிச்சயமாக நடக்கும் என்று தோன்றவில்லை. அப்படியே நடந்தாலும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ...


அமெரிக்காவில் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எப்போதும் தங்களது நாட்டு மக்களின் நலன், நாட்டு மக்களின் சுதந்திரம், உலக நாடுகளிடம் தங்களது அதிகாரத்தைக் காட்டுவது... தங்களை மட்டுமே உயர்ந்தவர்களாகக் காட்டுவது எல்லாவற்றிலும் ஒன்றாகத் தான் இருப்பார்கள்...

வி பிலீவ் இன் சேன்ஜ்  -- என்று சொன்ன ஒபாமா மிகப் பெரிய முன்மாதிரியாகத் தெரிந்தார்... ஆனால் வெளி நாடுகளின் மீது போர்ட் தொடுத்த புஷ்ஷுக்கும் .. வெளி நாடுகளின் இரகசியங்களை ஆராய்ந்த ஒபாமாவுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

எட்வர்ட் ஸ்நோடவுன் NSA செய்த வண்டவாளங்களை வெளியில் கொண்டு வந்தாலும், அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல் அவரை நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்... எந்த நாடும் அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கிறது...


எல்லா நாட்டுத் தலைவர்களும் செகுரிடி நிறுவன ங்களும் இதைத் தானே செய்கின்றன... அப்புறம் எப்படி எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள்?

இது ஒபாமா செய்தது மட்டுமல்ல அவருக்கு முன்பு இருந்த அத்தனை தலைவர்களும் இதைத்தான் செய்தார்கள்...நம்ம தலைவர்கள் அடுத்தவன் செய்த தவறை மட்டும் சுட்டிக் காட்டுவான்... இவர்கள் அந்த விஷயத்தில் யாரும் எதையும் வெளியிடுவதில்லை.. கூட்டுக் களவாணிகள்... அவர்களும் எல்லா நாட்டுத் தலைவர்களும் தான்...

ஆனால் வாய் கிழியப் பேசுவார்கள்.... நாங்கள் தனி மனித சுதந்திரத்தை மதிக்கிறோம் என்று... 
நமக்கெல்லாம் அமெரிக்காதான் முன்மாதிரி... 

12.6.13

"மூணு படம் நாலு விஷயம்"

ஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும்  ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம்  உண்டு. ஆனால் என்ன செய்வது..  தொடர்ந்து பெய்து வந்த  நீர்   ஜெர்மனியில்  அணை  உடைந்து ஊருக்குள் வந்து விட்டதாம். இயற்கையின் சக்திக்கு முன்பு எந்த தொழில் நுட்பமும் ஒன்றும் இல்லை.
இது திரு நாராயண சாமியின் கவனத்திற்கு.....



இந்தியாவும்  பாகிஸ்தானும் தொடர்ந்து அடிச்சிக்குது. ஆனால் வாரம் இருமுறை செல்லும் இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் லக்கேஜ்ஜை ஸ்கானர் செய்யும்   இயந்திரம் பழுது ஆகி ரொம்பநாள் ஆயிடுச்சாம். என்னத்த சரி பண்ணினாலும் நடக்குறது கட்டாயம் நடக்கும்.  நடக்காதது கட்டாயம் நடக்காதுன்னு அதைச் சரி பண்ணாமலேயே விட்டுட்டாங்களாம்.


அமெரிக்காவின் 29 வயது எட்வர்ட் ஸ்நோடவுன் அமேரிக்கா எப்படி எல்லார் தலைக்கும் மேல பம்பரம் விடுதுன்னு ஹாங்காங் போய் உலகத்துக்கு எல்லாம் தெரியப் படுத்தி இருக்காரு. அதாவது இன்டர்நெட் மூலமாக எல்லாரின் கணக்குகள்  எல்லாவற்றையும், எல்லார் பேசுவதையும் ஒட்டுக் கேட்கிறதாம். அது மட்டுமல்ல மற்ற நாடுகளோடு போட்டிருக்கிற  ஒப்பந்தங்களைக் கூட சீரியசாக எடுத்துக் கொள்வது  இல்லையாம்.  உரிமை பேசுற நாட்டுல இப்படி நடக்குது... இதைக்கேட்டு ஐயையோ ஆனந்தமே ன்னு பாட்டு பாடுறத விட்டுட்டு - ஷாக் ரியாக்ஷன் குடுத்தாராம் நம்ம நாட்டு மேதை ...  இங்க அப்புடி ஒன்னும் நடக்காத மாதிரி... ஒருவேளை உண்மையா இருக்குமோ... பார்டர் விட்டு பார்டர் போற வண்டிகளையே ஒழுங்க நாம பாக்குறதில்லை இதுல போய்  யாராவது டெலிபோன  ஒட்டுக் கேப்பாங்களா என்ன?





இந்தியாவில ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவருக்கு - படிக்காத படிப்புக்கு, விண்ணப்பிக்காத தேர்வுக்கு, தேர்வு எழுத மத்திய அரசுத் தேர்வாணையம் ஒபாமா புகைப்படத்தோட தேர்வு அனுமதிச்  சீட்டு வழங்கியிருக்கிறதாம்... இதக் கேட்டா ஒபாமா ஷாக் ஆவாரா மாட்டாரா...




ஏன்  இப்புடி? தொழில் நுட்பம் பல சமயங்களில் கேவலமாய் பிய்த்துக்  கொள்ளும் என்பதற்கான சமீபத்திய உதாரணங்கள் இவைகள்...





21.4.13

பாஸ்டனின் நிகழ்வுக்குப் பின்

மிகவும் சிறப்பு வாய்ந்த பாஸ்டன் மாரத்தான் நிகழ்வு முடிவு பெரும் தருவாயில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மூன்று பேர் இறந்து விட ஏறக்குறைய 170 நபர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியையே நான் இரண்டு நாட்கள் கழித்துத் தான் அறிந்து கொண்டேன்.

அமெரிக்காவின் மீதான தாக்குதல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணங்கள் பல.  பராக் ஒபாமா இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி அறிவதற்கான ஆர்வம்தான் எனக்கு அதிகமானது.

ஒபாமாவின் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அல் கொய்தா வை வம்ம்புக்கு இழுத்திருப்பார்கள். இதே இந்தியாவில் நடந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் காரணம் என்று உடனேயே சவால் விட்டிருப்பார்கள்.

இதற்கான காரணம் - யார் செய்தது என்று தெரியவில்லை - மிக விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று ஒபாமா சொன்னார்.
நமது அரசியல் வாதிகளும் அங்கேயே பிரச்சனைகளுக்கு உரமிடும் புஷ் போன்றவர்களும் இதைக் கற்றுக் கொள்வது நல்லது.

எதற்கெடுத்தாலும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பள்ளிக் கல்லூரிகளுக்குச் சென்று பார்க்கிறவர்களைஎல்லாம்  சுட்டுத் தள்ளும் அமெரிக்க கலாச்சாரத்தின் போக்கையும், அதற்குப் பின் அவர்கள் மனநலம் அற்றவர்கள் என்று தப்பித்துக் கொள்ளும் மன நிலையையும் மாற்றுவதற்கு முதலில் அமெரிக்கர்கள் முயல வேண்டும். அதைச் செய்தாலே பாதிப் பிரச்சனை முடிந்து விடும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்தி இந்த அளவிற்கு உலகக் கவனத்தைப் பெற வில்லை என்பதும் இதனால்தான்  ஒபாமா அடக்கி வாசித்தாரோ என்றும் அல்லது இந்தச் செய்தியை மறைக்க அமெரிக்க நடத்தும் நாடகமா இந்த குண்டு வெடிப்பு என்று கேட்பது தவறில்லை என்றே தோன்றுகிறது.




பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை இங்கேயும் குண்டுவெடிப்பு. ஆனால் உடனேயே இது தீவிரவாதம் என்றும், பி. ஜே. பி யின் அலுவலகத்தை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்று சொல்லுவது மே மாதம் ஐந்தாம் தேதிக்கு ஆதரவைத் தேடும் யுத்தி என்றே தெரிகிறது. இரண்டு கார்களுக்கு நடுவில், தமிழ் நாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் தகட்டோடு என்பது வேண்டுமென்றே திட்டமிட்டிருப்பது போலவே தெரிகிறது.

இவைகளையெல்லாம் பார்க்கிற பொது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான சுலபமான வழிகளை ஏற்படுத்தித் தருவதே விஞ்ஞானம்தான் என்பதில் நம்பிக்கை அதிகமாகிறது.
நவீனம் என்பது என்ன... மொத்தமாய் சாவதா? பயந்து பயந்தே வாழ்வதா?

தங்களது ஆதாயத்திற்காக தீவிரவாதம் என்ற லேபிலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா?

24.9.12

அன்பின் வன்முறை ....

இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்தக் குரல் உலகம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு மேலாகியும் அது குறைவதாய்த் தெரியவில்லை. அநேகமாக இன்னும் அதிகமாகலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த முறையான அடையாளம் இல்லாத ஓர் அமெரிக்க யூதர் இஸ்லாமியர்களின் மீது மிகுந்த வெறியோடு, எந்தவிதமான அடிப்படைத் தரவுகளுமின்றி மிக மோசமான ஒரு குறும் படத்தை இயக்கப் போக உலகமெங்கும் இருக்கிற இஸ்லாமியர்கள் ஒட்டு மொத்தமாக அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். 

லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப் பட்டதாகவும் அவரோடு இணைந்து மேலும் இருவரும், பாகிஸ்தானில் இதுவரை பத்தொன்பது நபர்களும் கொல்லப்  பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் இல்லை - அவர்களும் பாகிஸ்தானியர்கள் என்றே நினைக்கிறேன்.

இதோடு இணைந்து இந்த சமயத்தில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று நபிகளின் கார்ட்டூன் ஒன்று வெளியிட இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. மத சம்மந்தப் பட்ட கோட்பாடுகளில் கைய வைக்கிற யாரும் மிகக் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தீப் பொறி ஒரு காட்டை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்கர்கள் கிறித்தவக் கடவுளைக் கிண்டலித்து பழகிப் போனவர்கள். இப்போது அவர்களின் கோபம் இஸ்லாமியர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. இதை அவர்கள் கருத்துச் சுதந்திரம் என்று நியாயப் படுத்தலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளப் படாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

உலகின் எல்லா நாடுகளும் ஒருங்கே அமெரிக்காவின் கருத்துச் சுதந்திரம் என்கிற கோட்பாட்டை அவர்கள் பாணியில் யாரும் புரிந்து கொள்ள முடியாது. அப்படி எல்லாரும் அதே விதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டதாகத் தான் அது இருக்கும். 

ஒரு மனிதனின் தவறான கருத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்காக வன்முறை எதிப்பை ஒரு போதும் நியாயப் படுத்த முடியாது.  

அடிப்படையில் எல்லாம் சமயங்களும் 
அன்பைப் போதிப்பவைகளாகவே இருக்கின்றன. 
ஆனால், அதில் இருக்கும் உறுப்பினர்கள்
தாங்கள் போதிக்கும் அன்பே உயர்ந்தது என்று சண்டையிடப் போய் 
அவர்கள் அனைவரும் 
தாங்கள் போதிக்கும் அன்பிற்கு எதிரானவர்களாகவே ஆகி விடுகின்றனர். ஆனால் இதை அவர்கள் உணராமல் இருப்பதுதான் 
பிரச்சனையின்  ஆணிவேரே.

கொசுறு:

இன்னொசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் - முழு ஸ்கிரிப்ட் - சொடுக்கவும்.



13.9.11

இரட்டைக் கோபுரம் - நினைவலைகள்


இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்ட பத்தாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சில தினங்களுக்கு முன் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு மிகப்பெரிய மோசமான இழப்பாகப் பேசப்பட்டது. இதில் தவறேதும் இல்லை. எந்த ஒரு நாட்டின் குடிமகனும் இவ்வளவு பெரிய இழப்பை அப்படித்தான் பார்க்க வேண்டும். சர்வதேச அரங்கமும் இதனை மிகுந்த வேதனையோடும் அக்கறையோடும் கண்டித்தது. அதனால் பிறகு ஏற்பட்ட போரும் அதனால் இறந்தவர்களும் பற்றிய விபரங்கள் எல்லாருக்கும் தெரியும்.

அமெரிக்காவின் இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிச்சயமாக அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான். அவர்களுக்கு அனுதாபங்கள்.

ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் அதிகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டியது அரசியல் ரீதியான தீர்வு. அந்தத் தீர்வு போர் என்கிற முழக்கத்தோடு எழுந்ததும் அதை மக்கள் எல்லாரும் முழுமையாக ஆதரித்ததும்தான். தங்களுடைய பாதுகாப்பு என்கிற ஒரு முழக்கம் அமெரிக்க மக்களை எல்லாம் ஒன்றினைத்தது. உணர்ச்சி வேகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுகிற ஒரு அரசியல்வாதியாக புஷ் மிக நன்றாகவே செயல் பட்டுக் கொண்டார். தனது செல்வாக்கு சரிந்திருந்த நேரத்தில் இந்த வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தனது செல்வாக்கை மீட்பதற்காக அவரது திட்டத்தின் கீழேயே இந்த வகைத் தாக்குதல் நடத்தப் பட்டாக சிலர் கேள்விக்கு உள்ளாக்கினார்கள்.

ஆனால் போர் என்பது மட்டுமே மிகச் சிறந்த தாரக மந்திரமாக இருந்தது. அதில் மிகச் சிறப்பாகத் தன் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொண்டார் புஷ். நமது அரசியல் வாதிகளுக்கு மேலாக செயல் பட்ட புஷ் அமெரிக்கப் பாதுகாப்பு என்கிற ஒற்றை மந்திரத்தில் எல்லாவற்றையும் நியாயப் படுத்தவும் செய்தார். ஒரு பிரச்சனை வருகிற போது அதிலிருந்து மீள்வதற்கு பாதுகாப்பு பிரச்னையை கையில் எடுப்பதே நமது அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலையாகிவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு முறை அரசியல் குழப்பங்கள் வருகிற போதும் ஒரு வெடி வெடிக்கிறது!

டவர் பற்றிய ஆயிரமாயிரம் கேள்விகள் இன்னும் விடையளிக்கப் படாமலேயே இருக்கின்றன? அதெப்படி ஒருகட்டிடத்தை தரை மட்டமாக்க வெடிவைத்து தகர்பதைப் போல அந்த டவர் இடிந்து விழும் என்கிற கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. எப்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்றுவரை சில கேள்விகளுக்கு பதில் இல்லையோ அதே போல அதிலும். ஆனால் சிலர் டார்கெட் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டார்கள் அல்லது தண்டிக்கப் பட்டார்கள். கவுண்டமணி சொல்வது போல அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

இந்த விடயத்திற்காக அமெரிக்க தொடுத்தபோரை நியாப் படுத்திய மேற்குலக நாடுகள் [சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர] ஏன் அவ்வாறு செய்தன என்பதற்கு ஆயில் என்கிற ஒரே வார்த்தையிலேயே பதில் சொல்லிவிட முடியும். அது மட்டுமல்ல - இன்றைக்கு அமெரிக்க சந்திக்கும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு புஷ் மட்டுமே முக்கியமான காரணம் என்று கூட [வேறு சில காரணங்களும் இருந்தாலும்] சொல்ல முடியும்.

இன்றைக்கி லிபிய போராட்டங்களை ஆதரிக்கும் இதே உலக அரங்குகள் அல்லது தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த நாடுகள் ஏன் இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு மட்டும் ஆதரவு தர அவ்வளவு யோசித்தார்கள்?

அங்கே ஆயில் இருந்து அவர்களோடு புலிகள் சில ஒப்பந்தங்களைப் போட்டிருந்தால் - இந்தப் போராட்டம் எப்போதோ முடிவுக்குவந்திருக்கும் -

ஆயில்தான் ஒரு போராட்டத்திற்கான ஆதரவைத் தீர்மானிக்கும் என்றால் - இந்த அரசியலில், ஆசியாவில் நடக்கும், உண்மையான போராட்டங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வெகு நாட்களாகும்.

அதுசரி ஆயிலுக்காக தன் மக்களையே காவு கொடுக்கத் துணிந்த அரசியல் வாதிகளிடம் இதை எதிர்பார்ப்பது நியாயமில்லைதான். இத்தனை ஆண்டுகள் செப்டம்பர் பதினொன்றே காலண்டரில் இல்லாதது மாதிரி இந்தப் பத்தாண்டுகளாகத் தான் அது இருப்பது போல பிரகடனப் படுத்தும் ஆற்றல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உண்டு.

எது எப்படியோ தனது குறைகளையெல்லாம் அமெரிக்க விசுவாசி என்கிற ஒரே போரவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டதைப் போலவே இங்கும் பலர் தான் இந்திய விசுவாசி என்கிற போர்வைக்குள் தங்களது தவறையும் அநீதிகளையும் மறைத்து வைக்கிறார்கள். காலம்தான் அவர்களைத் தோலுரிக்க வேண்டும். அதுவரை இன்னும் எத்தனை செப்டம்பர் பதினோரு வந்தாலும், புஷ்ஷே முன்னின்று அஞ்சலி செலுத்துவார்!!!

என்ன செய்வது - போராட்டங்கள் மழுங்கடிக்கப் படுகின்றன! பழிவாங்கல் ஜரூராக நடக்கின்றன.

11.8.11

கலவரம் - அமெரிக்கா - கடன் அன்பை முறிக்கும்?

வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக்கொண்ட இரு நாடுகளுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. உலக பொருளாதாரத்தின் வல்லரசு என்று கருதப்பட்ட ஒரு நாடு - அமெரிக்கா - தனது கடன் வரம்பை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டது. அதன் வழியாகவே அது உடனடியாக மிகப் பெரிய இக்கட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது.காவல் துறையினர் செய்த ஒரு தவறு ஒருவரின் உயிரைக் குடிக்க இங்கிலாந்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் நடந்த கலவரம் என்று எண்ணி விட முடியவில்லை.
இன்று அமெரிக்கக் கலவரம் பற்றி -

அமெரிக்கா என்ற உடன், வானளாவிய கோபுரங்களும், வழுக்கிச் செல்லும் சாலைகளும், மின்னொளி நகரங்களும், ஹாலிவுட் தொழில் நுட்பம், நாகரிகத்தின் உச்ச கட்டம் என எல்லாரையும் நினைக்க வைத்தது மட்டுமல்ல – இப்படித்தான் ஒரு நாடு இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு எல்லாரையும் மயக்கி வைத்திருக்கிறது. ஷங்கர் படங்களில் அந்த தாக்கம் தெரியும்.
இந்த மயக்கத்தில் அமெரிக்கர்களும் இருந்தார்கள் – அமெரிக்க மோகத்தில் [நாம் எல்லாரும்தான்?] இருந்தவர்களும் மயக்கத்தில் இருந்தார்கள். இந்தப் பொருளாதார நெருக்கடி என்பது எல்லாரையும் மயக்கத்தில் இருந்து எழுப்பும் மருந்து என்றே என்றத் தோன்றுகிறது.

அமெரிக்கர்களைப் பொருத்தவரை அவர்களது மமதைக்குக் கிடைத்த அடி – அம்மாவுக்கு நேற்று கிடைத்தது போல. ஊரு உலகத்துக்கு எல்லாம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணி லோக்கல் பஞ்சாயத்துல கோட்டை விட்ட கதைதான். கோடிக்கணக்கான டாலர்கள் இன்னும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க மமதையில் இருப்போர் கொஞ்சம் விழித்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கிக் கடன் வாங்கித் தனது பொருளாதாரத்தை மேல் நோக்கி வைத்திருப்பது – மேக்-அப்பு கதைதானே. எவ்வளவு நாளைக்குத்  தான் சாயம் பூசிக்கிட்டே இருக்க முடியும். அப்படி என்னய்யா கடன் வாங்கி சாயம் பூசி? ஒரு மனிதன் எப்போது செயற்கையாய் தனது அழகைக் கூட்ட முயற்சிக்கிறானோ அது அவனுக்கு ஆபத்திலேதான் முடியும் – என்ன இருக்கிறதோ அதை வைத்து பிழைப்பு நடத்துவது என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்ல உதாரணம்.

இந்தியாவும் அமெரிக்கக் கடன்பத்திரம் நிறைய வாங்கி வைத்திருக்கிறதே – நாளைக்கு என்ன ஆகுமோ? இந்த வீழ்ச்சியிலிருந்து இந்தியா எதுவும் கற்றுக் கொள்ளுமா என்பது தெரியாது. புதிய பொருளாதாரக் கொள்கைதான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வழி வகுத்தது என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் கதிதான் நமக்கும் நாளைக்கு. இதற்குப் பிறகுதான் அளவுக்கு அதிகமான ஊழலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகமயமாக்கல் என்கிற ஒரு மாய வலையில் நாம் எல்லாருமே சிக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் இருந்து நாம் எப்போது விழிக்கிறோமோ அப்ப தான் நாம் தப்பிக்க முடியும்.

இன்னைக்கு பொருளாதாரத் தரம் நம்ம நாட்டில உயந்திருக்கு என்று சொல்கிறவர்கள் எல்லாரும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள்தான் [என்றே நான் நினைக்கிறேன்]. எல்லாவற்றையும் கடன் அட்டை வழியாகத் தேய்க்கிறோம். வருமானம் உயர்ந்ததால் மக்களுக்கிடையே இருந்த இடைவெளி பன்மடங்கு உயர்ந்தது [முன்பு பணக்காரர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது இப்போது அதிகமாய் இருக்கிறது – அதோடு கடனும் அதிகமாய் இருக்கிறது]– ஒரு மனிதன் கடன் வாங்கி கார் வாங்குகிறான் – மாத மாதம் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கட்டிகிறான் – அதோடு வீடு வாங்குகிறான் – அதற்கும் கடன் வாங்குகிறான் – இப்போது வீடு இருக்கிறது, கார் இருக்கிறது, ... இருக்கிறது எல்லாவற்றிற்கும் வட்டியோடு சேர்ந்து கடன் இருக்கிறது – வெளியிலிருந்து பார்க்கிறவனுக்கு – இருந்தா இப்படி இருக்கணும் என்று தோன்றுகிறது. அமெரிக்கா அதைத்தான் செய்தது – இந்தியா அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது – நாமும்தான்.

முன்பு ஒரே வீட்டில் எல்லாம் இருந்தோம் – இப்ப அப்படி இல்லை. எல்லாம் தனித் தனி – இனி ஒரு வீட்டில் எத்தனை பேரோ அத்தனை கார் – அவ்வளவு கடன் – அளவுக்கு மீறிப் போகிற போது மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க வேண்டியதுதான் – தனி ஆள் கொடுக்கலாம் – அல்லது பிசினஸ் பார்ட்டி கொடுக்கலாம். ஒரு அரசு கொடுக்க முடியுமா – எனக்குத் தெரியலை – அப்படிக் கொடுக்க முடிந்து அமெரிக்கா மஞ்சள் நோட்டீஸ் குடுத்தால் பாவம் – அதிகமா பாதிக்கப்படுவது இந்தியாவாத் தான் இருக்கும் [ அதிகமா அமெரிக்காவுக்குக் கடன் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் இருக்கே!]

டாலருக்கு ஏற்பட்ட கதி இன்னும் சில நாட்களில் ஈரோ –வுக்கு ஏற்படும் – ஜோதிடம் ! 

கடன் அன்பை முறிக்கும் என்று நம்ம ஊரில எல்லாம் முன்பு எழுதியிருப்பார்கள் – இன்றைக்கு கடன் இல்லையென்றால் வாழ்வே இல்லை என்ற நிலைக்கு நம்மை எல்லாரும் சேர்ந்து தள்ளியிருக்கிறார்கள் – நாமும் நம்மையே தள்ளிக் கொள்கிறோம்.

25.9.10

டெர்ரி ஜோன்ஸ் - நவீன யூதாஸ் [கிறித்தவத் தீவிரவாதம்]

கிறித்தவர்களின் புனித நூலான புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கை வரலாறும் அதில் இயேசுவைக்  காட்டிக் கொடுத்த யூதாஸ் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
யூதாஸ் இயேசுவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் காட்டிக் கொடுத்தவன்.  கிறித்துவைப் பின்பற்றுகிற பலர் இன்றும் வெறும் யூதாசாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் - டெர்ரி ஜோன்ஸ்.
உலக குர்ரான் எரிப்புத் திட்டம் - 9 / 11 என்கிற ஒரு தீவிரவாதத் திட்டத்தை டெர்ரி ஜோன்ஸ் முன்மொழிய உலகத்தின் பல மூலைகளிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.
கிறித்துவ அடிப்படை வாதத்தின் முகம் பலருக்கு வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது அது மிக நன்றாய் வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அதற்குப் பிறகு அத்திட்டம் கைவிடப் பட்டதைச் சொன்னாலும் யாரோ ஒருவர் குரானை எரித்து விட பிடித்தது சூடு.

  • இது தீவிரவாதத்திற்கு எதிரானனது என்ற கதையை டெர்ரி ஜோன்ஸ் கட்டினாலும் இது இஸ்லாமியத்திற்கு எதிரான நவீன சிலுவைப் போர் என்பதையே இது காட்டுகிறது. 
  • இத்தகையே செயலே தீவிரவாதத்தின் அடித்தளம் தானே தவிர வேறொன்றுமில்லை. இதுமட்டுமில்லாமல் இததான் அடிப்படை வாதத்தின் ஆணி வேர்.
  • கிருத்துவத்தின் அடிப்படை நற்செய்தியைக் கூட புரிந்து கொள்ளாதவர் பாஸ்டர் என்றால் அவரை யூதாஸ் என்று சொல்லாமல் வேறென்ன வென்று சொல்வது.
  • இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் "இரட்டைக் கோபுரங்களின்" தகர்ப்பிற்குகாரணம் என்று வைத்துக் கொண்டாலும் கூட - அதற்காக ஒரு மதத்தைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம். ஒரு கிறித்தவன் தீவிர வாதச் செயலில் ஈடுபட்டால் ... பைபிளை எரித்தால் சரியாகிவிடுமா? 
  • ஒருவன் புகழ் பெற பல வழிகளைக் கடைப் பிடிக்கின்றனர் - சிலர் இதுபோல... ஆனால் எல்லாவற்றையும் பூதாகாரப் படுத்தி - காலை முதல் இரவு வரை காமெராவைத் தூக்கிச் சென்று அவனைப் பிரபலப் படுத்தும் அமெரிக்க ஊடகங்களும் இதற்குக் காரணம் - அவைகளுக்குத் தொழில் முக்கியம்.
  • இதனால் அறிவது என்னவென்றால்... மதம் எல்லாரையும் மதம் பிடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.