31.8.10

உலகத்தின் நோக்கம் 2

அறிவாளி சொல்கிறார்:
இயற்கைக்கு நோக்கம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை, அதை நாமாகத் திணிக்கிறோம்.
எப்படி கடவுள் என்ற ஒன்றை நாம் கற்பிக்கிறோமோ அதுபோல இயற்கைக்கும் நாம் நோக்கத்தைக் கற்பிக்கிறோம்.

இயற்கை என்பது கல்லும் மண்ணும் சார்ந்த திடப் பொருள்.
consciousness என்பதோ அறிவு என்பதோ அல்லது அன்பு என்பதோ எதுவும் கிடையாது.
நாமாக இயற்கையைத் தாய் என்கிறோம்.
ஈர்ப்பின் படியோ அல்லது எப்படி வாழ முடியுமோ அப்படி அவைகள் இருந்தன. எனவே அதனடிப்படையில் உயிர்கள் வாழ்ந்த போது அவைகள் விதி முறைகளை உருவாக்கிக் கொண்டன. அல்லது - விதிமுறைகள் அதைத் தொடர்ந்து உருவாயின. அதாவது ஒரு விதியின் படி அவைகள் உருவாகவில்லை. அவைகள் உருவானதைத் தொடர்ந்து விதிகள் உருவானது.

எனவே இயற்கை என்பதும் நாமும் இருந்திருக்க வேண்டியதே இல்லை.
அதாவது நாம் இருப்பது - இருக்க வேண்டிய அவசியமில்லை - அதுவாக நடந்தது.

மரங்கள் ஏன் இருக்கின்றன?
அவைகள் இருக்கின்றன. அவ்வளவே?

மலைகள், ஆறுகள், தண்ணீர், மழை, எதற்கும் நோக்கம் இல்லை -
அவைகள் இருக்கின்றன எனவே அதற்கு நோக்கம் இல்லை.

ஆடு மாடுகள், விலங்குகள், இன்ன பிற உயிரினங்கள் இவைகள் எல்லாம் - survival of the fittest - டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதுவரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது.

அப்ப மனிதன் யாரு?

மனிதனும் அப்படித்தான்.

மனிதனும் ஒரு விலங்கினம் என்கிற ரீதியில், அவனும் அப்படியே.
எப்படி விலங்கினங்களுக்கு நோக்கமில்லையோ அப்படியே
அவனுக்கென்று ஒரு நோக்கம் இல்லை.
அப்படியெனில், மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை.
அவனுக்கும் நோக்கம் இல்லை.
இயற்கையின் மீது நாம் நோக்கம் கற்பிப்பது போல நமக்கு நாமே நோக்கத்தை கற்பித்து கொள்கிறோம்.

இந்த இடத்தில்தான் சிக்கலே.
நாமும் அதைத்தான் சொல்கிறோம். மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை. எனவே எந்தவிதத்திலும் நாம் இதை அழிக்கவோ, பரந்து விரிந்த உலகத்தை சொந்தம் கொண்டாடவோ அருகதையற்றவர்கள்.

ஆனாலும் ஏன் நாம்தான் உயர்ந்தவர்கள் போல எல்லாவற்றையும் நமக்குக் கீழ் கொண்டுவர முயல்கிறோம்?

சரி - இதற்குப் பின்னால் வருவோம்.





மேலும்....

30.8.10

உலகத்தின் நோக்கம் 1

நாம் வாழும் உலகம், இயற்கை என்பது உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்ற விவாதத்தை நாம் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

இயற்கை எப்படி இருக்கிறது என்பதை மட்டும் நாம் சிந்தித்தால் நல்லது.

அறிவியலாளர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் சொல்லும் அடிப்படைக் கருத்துக்களை யாரும் மறுக்கவும் முடியாது.
உலகம் எப்படித்தோன்றியது என்று அவர்கள் சொல்லும் கருத்துருவிலும், பரிணாமவாதத்திலும் நமக்கும் அடிப்படையில் உடன்பாடு உண்டு.

ஆனாலும் அதன் தொடர்ச்சிகள், அதன் விளைவுகள் எந்த அளவிற்கு நமது வாழ்க்கைக்கு உதவும் என்பது ஒரு புறம் இருந்தாலும்,
அது கொணரும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன என்பதைத்தான் நாம் முன் வைக்க நினைக்கின்றோம்.

இதனை மிகவும் விரிவாகவே மெய்யியலாலர்களும், இன்னும் அறிஞர்களும் பல்வேறு கோணங்களிலிருந்து விவாதித்து, பல விளைவுகளையும், எதிர் மறையான முடிவுகளையும் முன்வைக்கிறார்கள்.
அது நமக்குத் தேவையற்றது.

இக்கட்டுரையின் நோக்கம் மிகவும் அடிப்படையானது. இவ்வுலகில் நமது இருப்பின் பொறுப்புனர்வைப் பற்றி பேசுகிறது.
அதற்கான சில கேள்விகளை முன்வைக்கிறது. அவ்வளவே!

இயற்கைக்கு நோக்கம் ஒன்றும் இல்லை. அதுவாகத் தோன்றியது. அதுவாக இருக்கிறது. அதுவாக மறையும் - என்ற கொள்கையோடு பலர் நமது மத்தியில் இருக்கிறார்கள்.
அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் படித்தவர்களும் உண்டு, படிக்காதவர்களும் உண்டு.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நெருப்புப் பிழம்பாய் இருந்தது பின் பிரிந்து
(
எதிலிருந்து நெருப்பு வந்தது என்று கேட்கக் கூடாது)
அதன் பிறகு குளிர்ந்து, நீர் வந்து, மரங்கள் தோன்றி
அதன் பிறகு ஒன்று இரண்டு என உயிர்கள் தோன்றி, அது
பலதாய் பெருகி, இத்தகைய சூழ் நிலைகளுக்கு ஏற்ப
எதெல்லாம் ஈடு கொடுக்க முடிந்ததோ அவைகள் வாழ்ந்து -
பின் வாழ முடியாதவைகள் எல்லாம் மடிந்து -
இறுதியில்,
இயற்கையின் போக்கிற்கு ஈடு கொடுக்க முடிந்தவைகள் மட்டும் உயிர் வாழ்கின்றன.
அப்படி வாழ்ந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் பல நிலைகளைக் கடந்து மனித உயிர்கள் தோன்றி -
நாம் இன்று இருக்கக் கூடிய நிலையை அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதனடிப்படையில், பலர் தங்கள் வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.
இதில் எதுவுமே ஒரு நோக்கத்தோடு நடை பெற வில்லை.
அதுவாய்த் தோன்றியது. அதுவே நடந்தது.
மனித உயிர்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது
இயற்கையின் நோக்கம் அல்ல.
காலப் போக்கில் அது நடந்தது. பரிணாம வளர்ச்சியில் இது நடந்ததே தவிர இதற்கு நோக்கம் கற்பிப்பது அபத்தம் என்று சொல்கிறார்கள்.

மேலும்....

29.8.10

முதலிடமா அல்லது கடைசி இடமா?

அதிகமாக நேசிக்கப்படும் உலகத் தலைவர்களில் மன்மோகன் சிங் முதலிடம் பெற்றிருப்பதாக - அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதில் கூத்து என்னவென்றால் உலக நாடுகளில் இந்தியாவிற்கு 78 -ஆவது இடமாம். இப்படி உள்ள நாட்டின் தலைவர் முதலாவது இடத்தைப் பெற்றால் - இந்தத் தலைவர் இந்த நாட்டிற்கு இருந்து என்ன பயன் - இல்லாது என்ன பயன்.
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பட்டியல் எங்களிடம் இருக்கிறது என்ற போது தயவு செய்து வெளியிட வேண்டாம் என்றதற்காக இந்த முதலிடமா? -
ந்யூக்ளியர் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதற்காக இந்த முதலிடமா?
அணு உலை சம்பந்தமான விபத்துகளுக்கான இன்சுரன்சை மிகவும் மலிவாக்கியதற்காக இந்த முதலிடமா? 
இன்னும் இந்தியாவிடமிருந்து வேறு எதுவும் பெற வேண்டியிருக்கிறதா?

நகரங்களில் தரமான தண்ணீர் இல்லை


பி.பி.சி.யில் வெளிவந்த செய்தி: 


எல்லா முக்கியமான நகரங்களும் தரமான குடி நீர் கிடைப்பதில் இன்னும் பின் தங்கையே இருக்கின்றன என்பதை மாண்புமிகு அமைச்சர்கள் நமது நாடாளு மன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்தியர்கள் என்பதில் பெருமைப் படலாம்.

தமிழகத்தில் குடி நீர் கிடைக்கும் ஒரு நகரம் கூட முழுமையான மதிப்பெண்களைப் பெறவில்லை. கிடைத்த முதல் நகரத்திற்கும் இந்திய அளவில் தொண்ணூற்றி ஐந்தாவது இடம்தான். கலைகனர் பார்த்தால் நமக்குப் பின்னால் இன்னும் 350 நகரங்கள் இருக்கின்றன... தமிழகம் முன்னோடியாக இருக்கின்றது என்று பெருமைப் படுவார்..
தமிழகத்தில் முதலிடம் பாளைக்கு - தஞ்சைக்கு கடைசி இடமென்று பி.பி.சி. சொல்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம்???
 
நன்றி – பி.பி.சி. 
முழுச் செய்திக்கு  

இயற்கையின் கொடூரமும் - இஸ்லாமிய எதிர்ப்பும்

1926 க்குப் பிறகு பாகிஸ்தானை சிதறடித்திருக்கிற காட்டாற்று வெள்ளம் இது. ஏறக்குறைய 20 மில்லியன் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். 1.2 மில்லியன் வீடுகள் அழிக்கப் பட்டிருக்கின்றன.   பாகிஸ்தானின் மொத்தப் பரப்பில் ஏறக்குறைய 20 சதவீதம் அதாவது 160,000 சதுர கிலோமீட்டர்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. உடனடி தேவையாக 460 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என் ஐ. நா. கூறியிருக்கிறது.

ஆனால் - மற்ற எந்த நாடுகள் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் - உடனடியாக எல்லா நாடுகளின் உதவியும் எளிதாகக் கிடைத்து விடும்.
இப்போதும் எல்லா நாடுகளும் உதவி செய்கின்றன - ஆனால் மிகவும் மெதுவாக நடை பெறுகின்றன.

என்ன காரணம்?
  1. இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு- ஏறக்குறைய 1200 பேர் இறந்திருக்கலாம்.  சுனாமியினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அல்லது ஹெயிட்டியில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.ஒரு வேளை, இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிற போது மட்டுமே மக்களின் இதயங்கள் திறக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம்.
  2. ஐரோப்பிய நாடுகள் - பாகிஸ்தானுக்கு அனுப்பப் படுகின்ற பணம் தீவிரவாதிகள் கையில் கிடைத்து விடுமோ என்று அஞ்சுகின்றன. அதனடிப்படையில், தங்கள் பணத்தைக் கொண்டே தங்களை மீண்டும் தாக்குவதற்கு அவர்கள் சக்தி படைத்தவர்களாக ஆகி விடுவார்களோ என்கிற பயம் - சாதாரண மக்களிடத்தில் கூட இருக்கின்றது.
  3. தங்கள் நாட்டில் இவ்வளவு வறுமையும் அடிப்படைத் தேவைகளும் இன்றி மக்கள் இருக்கின்ற போது எதற்கு பாகிஸ்தான் பணத்தை அணு குண்டு வெடிப்பிற்குச் செலவு செய்கிறது. தங்கள் நாட்டின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றாமல் வெடி குண்டுகளுக்குச் செலவிடுகிற ஒரு நாட்டிற்கு, நான் உதவி செய்ய வேண்டுமா என்கிற ஒரு ஐரோப்பியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம்?
  4. பாகிஸ்தான் அரசில் நடக்கின்ற ஊழல் மிகப் பெரிது - என்று சில இஸ்லாமியப் பத்திரிக்கைகளும் தொலைக் காட்சிகளுமே கூட சொல்கிற அளவிற்கு இருப்பதனால் நமது உதவி சரியாய் சென்று சேருமா என்கிற ஐயம்.
  5. எல்லாவற்றிற்கும் மேலாக - ஒரு வேலை இஸ்லாமிய எதிர்ப்பின் வெளிப்பாடோ என்று என்ன வைக்கிறது.
  6. ஐரோப்பிய நாடுகளை விடுங்கள். அருகிலுள்ள நமது நாடு உடனடியாக இருபத்து மூன்று மில்லியன்களை கொடுத்த போது பாகிஸ்தான் ஏற்கத் தயக்கம் காட்டியது. உதவியை ஏற்றுக்கொள்ள ஒரு நாடு தயக்கம் காண்பிக்கிற போது, மற்றவர்கள் உதவி செய்யத் தயங்குவது சரியோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
  7. ஆனாலும், நமது நாட்டின் மக்களின் எண்ணம் எந்த அளவுக்கு பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் மீது இருக்கின்றது என்பது கேள்விக்குரியது. ஆப்ரிக்க நாடுகளில் நடக்கும் இயற்கை வன்முறைக்கு கூட நமது மனம் இரங்கும் - ஆனால் அது பாகிஸ்தான் என்கிறபோது மனம் கூட இறங்க மறுத்து விடுகிறது. ஒரு குரூர மனம் - ஏதோ இயற்கையே இந்தியர்களின் சார்பாக போரிட்டது போலவும் அதில் அவர்கள் சிதறடிக்கப் படுவது மிகவும் ஆறுதலாக இருப்பது போலவும்...
  8. அந்தவிதத்தில் ஐரோப்பியர்கள் மேலானவர்கள்தான் - அவர்களைக் காட்டிலும் நாமும் இஸ்லாமியர்களை எதிர்க்கிறோம். அது இந்தக் கொடூர நிகழ்விலும் வெளிப்படுவதுதான் வேதனை.

28.8.10

நீதித் துறை

நீதித் துறையில் -  2 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன. எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் இந்த வழக்குகள் முடிக்கப்பட?

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான் - ஒன்று வழக்குத் தொடுத்தவன் இறக்க வேண்டும் அல்லது  வழக்கு தொடுக்கப் பட்டவன் இறக்க வேண்டும் - ஆனாலும் வாரிசுகள் வழக்கில் ஆர்வம் காட்டும் போது ஆதுவும் வாழையடி வாழையாகத் தான் தொடரும்.

சீனாவில் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள் அளவிற்கு சாலையில் போக்குவரத்து ஜாம் ஆகியிருக்கிறது. இப்படி ஏறக்குறைய பத்து நாட்களாக இருக்கின்றது. சரியாக இன்னும் ஒருமாதம் ஆகும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ட்ராபிக் ஜாம் இன்னும் ஒரு மாதத்தில் சரியாகி விடும் - நமது நீதித்துறை ட்ராபிக் ஜாம் ஒரு போதும் சரியாகாது.

26.8.10

இந்திய அணு உலைஅரசியல்

 * அணுவிபத்து இழப்பீடு மசோதா நிறைவேறிவிட்டது. இதில் உள்ள குறைகள் விரிவாக தெரியவில்லை. ஆனால் இழப்பீடு 500 கோடியிலிருந்து 1500 கோடியாக உயர்த்தப் பட்டிருக்கிறது - இழப்பீடு ஏறக்குறைய ஆயிரம் கோடி உயர்த்தப் பட்டிருக்கிறது என்றால் - அவர்கள் முதலில் வைத்திருந்த தொகையைப் பாருங்கள் - யாருக்குச் சாதகமாக இந்த மசோதா இருக்கிறது என்பதை உணர்த்த இதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் நமக்குத் தேவையில்லை. எதிர்க் கட்சிகளின் போராட்டம் இதைச் சாதித்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு எவ்வளவு ஆதாயம் என்பதும் நமக்குத் தெரியவில்லை.

* மன்மோகன் சிங் உலகிலேயே மிகவும் அதிகம் நேசிக்கப் படக் கூடிய தலைவராக - இருக்கிறார் என்று அமெரிக்கா கூறுகிறதெனில் ஏன் என்பது நமக்குத் தெரியாதா?

* இந்த மசோதாவில் - அணு உலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் - அணு உலைகளை வடிவமைக்கும் நிறுவனங்களோ அல்லது உபகரணங்களை சப்ளை செய்யகூடிய நிறுவனங்களைப் பொறுப்பாக்கும் விதத்தில் எந்த ஒரு எந்தவாக்கியம் கூட இருக்கிறதா என்பது தெரியவில்லை.

* "இது அமெரிக்காவிற்குச் சாதகமானது என்று சொல்கிறார்கள் - ஆனால் இது உண்மையல்ல - வரலாறு இதற்குத் தீர்ப்புச் சொல்லும் " என்று மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார். இல்லை என்று சொல்வதற்கும் - வரலாறு தீர்ப்பளிக்கும் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு - ஆனால் வரலாறு தீர்ப்பளிக்கும் போது பிரதமரோ நாமோ இவ்வுலகில் இருக்கப் போவதில்லை - நமது சந்ததி அதைப் பார்க்கும் - அல்லது அனுபவிக்கும்.

* ஆயிரக் கணக்கில் புரளும் திட்டங்களிலேயே கோடிகளை நமது அரசியல் வாதிகள் கொள்ளையடிப்பார்கள் - இந்தத் திட்டத்தில் சொல்லவா வேண்டும்- இதில் பாதுகாப்பு என்பது முதலிடம் பெறுமா என்பதுதான் தெரியவில்லை.

18.8.10

சாதி

தமிழ் வலைப் பதிவுகளில் சாதி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதை உசாதீனப் படுத்தி விட்டு யாரும் பதிவுகளை எழுதி விட முடியாது.


இப்பக்கத்தில் கடந்த மாதங்களில் வந்த சில கட்டுரைகளை கொடிட்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. சில விரும்பப் படலாம் அல்லது வெறுக்கப் படலாம்.

விரும்பினால் உங்கள் கருத்தை நீங்களும் எழுத ஒருவேளை இது தூண்டுதலாயும் இருக்கலாம்.

----------------------------------------------------------------------------



***  இந்து மதத்தில் மட்டும்தான் தலித்தா?


*** இந்து மதத்தில் மட்டும்தானா -இரண்டு

------------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------------


*** மகளிரின் சாதி ஆர்வம்


*** சாதியக் கணக்கெடுப்பு

-------------------------------------------------------------------------------------------------


--------------------------------------------------------------------------------------------------



*** குற்ற உணர்வு தவிர்

*** சாதி உணர்வோடு முற்போக்காளனாக இருக்க முடியுமா?

*** தினமணியில் கார்ட்டூன்

15.8.10

சுதந்திரம் - ? ? ? ? ?

  •  கனவில் கண்டேன் பல்வேறு கனிகள் தரும் ஓர் ஒற்றை மரம் - நம் தேசம் போலவே - நம்ப முடியவில்லை! 


    • சுதந்திர தினம்  - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி ஒரு போதும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் இருக்காது... நல்ல சுதந்திரம்.

    • இது சுதந்திர தினக் கொண்டாட்டம் என்று சொல்வதை விடுத்து ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் தினம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    • மீண்டும் மீண்டும் சொல்கிற போது எதுவும் உண்மையாக வாய்ப்பு இருக்கிறது. அல்லது கடினமான ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்கிற போது அது இலகுவாகிறது - அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகி விடுகிறது.

    • தேசிய ஒருமைப் பாடு என்று சொல்கிற போது - இந்தியாவை - United States of India - என்றாவது பெயரிடலாம். உள்ளுக்குள்ளேயே வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பதில் உலக நாடுகளுக்கு இந்த உண்மையை எடுத்துரைக்கலாம். பெயர் மாற்றுவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. பெயரிடாமல் விட்டாலும் இந்த நிலை மாறிவிடப் போவதில்லை.

    • நாட்டைப் பற்றிக் குறை சொல்லாதே என்கிறார்கள் - சொன்னாலும், பல நாடுகளை விட இந்தியா மிகவும் உயர்ந்த நாடு - பதில் மொழி சொல்கிறார்கள். மீண்டும் கேட்டால் நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே - நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று சொல் - என்கிற கேள்வி வேறு! [அதெப்படி எப்போதுமே நமக்கு மட்டும் நமக்குக் கீழ் உள்ளவர்களைப் பார்த்து நாம் சுகத்தில் வாழ்கிறோம். மகிழ்ச்சிக்கு அது நல்லதுதான் ஆனால் வளர்ச்சிக்கு அல்லவே - அப்புறம்] 

    • சுதந்திரத்தில், சகிப்புத் தன்மையில், மக்களுக்கு நன்மை செய்வதில், போக்குவரத்து வசதியில், .... இதெல்லாம் இந்த நாட்டுத் தலைவர்களால் நடப்பதாகத் தெரியவில்லை - நாடு, மக்களால் நடப்பதகாவே தெரிகிறது. எந்த அரசு வந்தாலும் மக்கள் சகிப்புத் தன்மையோடுதான் இருக்கப் போகிறார்கள். விலை வாசி உயர்ந்தாலும் அமைதியைத் தான் இருக்கிறார்கள் - அடிமைத் தனம் இருந்தாலும் அமைதியாய்த்தான் இருக்கிறார்கள். ஊழல் நடந்தாலும் அப்படியே - கட்ட வேண்டிய பாலம் கட்டப்படாமலேயே முடிக்கப் பட்டாலும் அமைதிதான் - ரயில் விபத்தா, பாதுகாப்பின்மையா - காவல் துறையே மோசமானதாக இருக்கிறதா - அமைதிதான் - மீண்டும் மீண்டும் வரிசையாய் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து நம் வளங்களைச் சுரண்டவும், நமக்குக் கிடைக்காத வசிதிகள் எல்லாம் அவர்களுக்குக் கிடைத்தாலும் அமைதிதான்... இந்த நாடு இப்படி பல நாடுகளுக்கு மேலான நாடாக இருப்பதற்கு - இந்த நாடு அல்ல - நாட்டு மக்கள்தான் காரணம்- இந்தப் பெருமை நம்மையே சாரும்; நாட்டுக்கல்ல.  இனிமேல் யாரும் நம்மைக் கேட்கக் கூடாது "நாட்டுக்கு என்ன செய்தாய்" - இதை விட வேறென்ன செய்ய முடியும்? 

    • எல்லா தேசிய கட்டமைப்பிற்குப் பின்னும் ஒரு இரும்பு மனிதன் இருந்திருக்கிறான். அப்படி இருந்திருக்கவில்லையென்றால் இன்றைய உலக வரைபடத்தில் பல நாடுகளின் எல்லைக் கோடுகள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவுக்கும் ஒருவர் இருந்ததாக வரலாறு சொல்லுகிறது. இரும்புக்கு இதயம் இல்லை - எவ்வளவு மோதினாலும் நாம்தான் உடைந்து போவோம். எனக்கென்னவோ இந்தியாவை ஆளும் எல்லாருமே இரும்பு மனிதர்கள் போலவே தெரிகிறார்கள்.

    • நாம் நாட்டின் பிரதமர் - இன்றைய உரையில் "ஆம் -விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப் பட்டிருப்பது உண்மைதான்" என்று கூறியிருக்கிறார். இரும்பு மனிதர்கள் என்பது சரிதானா - அல்லது அன்றைய அரசர்கள் போல நாடு எப்படி இருக்கிறது என்று அமைச்சர்கள் ஒற்றர்கள் வழியாக கேட்டுத் தெரிந்து கொள்ள இவ்வளவு நாளாயிற்றா? அல்லது இவர் ஒத்துக்கொண்டால்தான் அது உண்மை என அறியப்படுமா? சரி.... உண்மை - என்ன செய்யலாம்? நாம என்ன செய்யலாம் இந்த நாட்டுக்கு.

    13.8.10

    மானுடமும் அதன் பொறுப்பும்

    அமெரிக்காவில் கடற்பரப்பில் எண்ணெய் - மும்பையில் பெற்றோலியம் - ரஷ்யாவில் காட்டுத் தீ - பாகிஸ்தானில் கடும் வெள்ளம் - சீனாவிலும் இப்படி ..... உலகின் பல்வேறு இடங்களில் நடக்கிற நிகழ்வுகளுக்கு நான் என்ன செய்ய முடியும்?  


    "எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பு - கடந்த வரலாற்றிற்கு, எதிர்கால நிகழ்விற்கு எல்லாவற்றிற்குமே நான் பொறுப்பு" - இந்த உலகின் ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது அதன் வழியாய் என்னோடு தொடர்பு கொண்டது - என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார் ஒரு  ஞானி - 


    ஒருவிதத்தில் நானும் இந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் - நடந்ததை மாற்ற முடியாது எனினும் இனிமேல் ஏதாவது செய்ய முடியும்.


    அதே ஞானி சிசுகொலை என்பது தவறல்ல என்றபோது - சிசுகொலை செய்யவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறதா அல்லது அதை எதிர்க்கிற பொறுப்பு எனக்கிருக்கிறதா என்று புரியவில்லை. அனைத்தையும் நேசி என்று புல்லையும் பூண்டையும், மண்ணையும் மரத்தையும் நேசிக்க வேண்டிய நான் ஏன்....


    இந்த அண்ட சராசரம் அனைத்தும் இங்கு நடக்கிற நிகழ்வு வழியாக தன்னையே அது சரி செய்து கொள்கிறது என்பது உண்மை என்றாலும் கூட- 


    போர், அடக்கு முறை, அடிமைத் தனம் இவைகளையெல்லாம் கூட  நாம் இயற்கை தன்னைச் சரி செய்து கொள்கிறது என்று சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. 


    சில தத்துவ ஞானிகள், தன்னுணர்வு பெற்ற ஞானிகள் - போர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை செய்வதற்கும் ஒன்றும் இல்லை என்று சொன்னது நமக்குத் தெரியும். "காட்டிற்குள் சென்று ஒரு சிங்கம் மானை வேட்டையாடுவதை படம் பிடிக்கிற ஒருவன் வெறும் பார்வையாளனாய் தான் இருக்கிறேநானே தவிர அவன் எதையும் காப்பாற்றுவது இல்லை என்பது போலத்தான்" என்று சில ஞானிகள் சொல்லுவதில் தவறு இல்லைதான் - 


    ஆனால் அதைப்போலவே மனிதனும் அப்படித்தான் - மனிதன் போர் புரிகிற போது நாம் அதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொல்லுகிற போதுதான் சிக்கலே. எல்லாம் தன்னை சரி செய்து கொள்கிறது என்றால் ஞானம் அடைந்த ஞானிகள் தாங்கள் மட்டுமே ஞானத்தை வைத்துக் கொண்டிருக்கலாமே - "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று எம் ஞானிகள் சொல்ல வேண்டியதில்லையே! பிற மனிதனை ஞானத்திற்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை இருக்கின்றது என்று கருத வேண்டிய தேவை இல்லையே? 



    கடவுள் நம்பிக்கையற்ற தத்துவவியலாளர்கள் கூட - மனிதப் பொறுப்புணர்வு பற்றிப் பேசினார்கள். ஆல்பர்ட் கமுஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளன் - நான் இறக்கப் போகிறேன், நான் உதவி செய்கிறவர்களும் இறக்கப் போகிறார்கள் என்று தெரிந்தாலும் உதவி செய்வதை நான் நிறுத்த முடியாது என்று சொன்னான் - கடவுள் நம்பிக்கை இல்லாதவன்தான்.


    ஸார்த் - (Sartre) என்கிற மற்றொரு பிரெஞ்சு தத்துவவாதி  - நாம் சுதந்திரம் கொண்டவர்கள் நமக்கான பொறுப்பை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று அறப் பொறுப்பைப் பற்றி பேசுகிற அவன் அஞ்ஞானி - அதாவது உயர் தத்துவத் தளத்தில் நாம் ஒன்றுமில்லாதவர்கள் தான் என்றாலும் சாமானியத் தளத்தில் மானுட மையம் என்கிற விதத்திலும் அப்படியே இல்லை என்றாலும் சார்தே போன்றோர் பொறுப்பு என்கிற விதத்திலாவது பேசியிருக்கிறார்கள்.அதாவது உயர் தளத்தை பின்னே வைத்து சாமானியத் தளத்தை முன்னே வைத்தார்கள்.


    ஆனால் எப்படி ....?- எல்லாம் பிரம்மம் என்று நம்புகிற நமக்கு - இவைகள் நிகழத்தான் வேண்டும் என்று நாம் சொல்லி - நாம் இதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று சொல்கிற போது - நாம் நமது அறப் பொறுப்பை தட்டித்தானே கழிக்கிறோம்.சிலர் ஞானம் அடையக் கூடத் தகுதி அற்றவர்கள் என்றுதானே பல ஞானிகள் கருதினார்கள் - இதுசாமானியத் தளமா அல்லது தத்துவத் தளமா?


    இந்திய தத்துவங்கள் - மிகப் பெரிய பிரபஞ்சத்தின் மானுடனை மையப் படுத்தாத நிலை இருந்தது உண்மை என்பது மட்டுமல்ல அது எல்லாவற்றையும் மையப்படுத்தியது என்பதும் உண்மை. 
    அதற்காக அது மானுட விரோதப் போக்கை கொண்டிருந்ததா என்பதெல்லாம் பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட முடியாது. சில ஞானிகள் கொண்டிருந்தார்கள் - சிலரிடம் இல்லை. 


    நமது பண்பாட்டுச் சின்னங்களை, குறியீடுகளை காக்கின்ற அவசரத்தில் பல சமயங்களில் நாம் எல்லாவற்றையும் சரி என்றோ நியாயப் படுத்தவோ வேண்டிய அவசியம் இல்லை.
    இரண்டு பக்கங்கள் - சாமானியத் தளத்தில் மானுட மையம் என்பதும் உயர் தத்துவத் தளத்தில் மானுடம் தாண்டி அனைத்தையும் மையப்படுத்துதல் என்பது மிகச் சரியான உண்மை.  


    ஆனால் பல சமயங்களில் உயர் தளம் என்பது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ நமது ஞானிகளால் சாமானியத் தளத்தில் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மானுட அறப் பொறுப்பும் மானுட நேயமும் மிக அதிகமாக நமது மண்ணில் ஞானிகள் நிகழ்த்தியிருக்கின்றனர் - வள்ளலார் போல..  
    அதே சமயத்தில் மனிதனை வெறும் ஜடமாக - அடிமையாக - மூடனாக நடத்தியதும் பல ஞானிகள்தான் என்பதையும் மறக்கக் கூடாது. 


    எது எப்படி இருந்தாலும் - நாம் இந்தப் பிரபஞ்சத்தின் மையமாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி - நமக்கென பொறுப்பும் , நாம் எல்லாவற்றோடும் இணைந்த நிலையில் இருக்கும் நிலை உணர்ந்தால் - நம் அறப் பொறுப்பும் மானுடத்திர்கான பொறுப்பும்  - பிரபஞ்சப் பொறுப்பும்  நன்றாய் உணர்வோம்.
    வெறும் மானுட மையம் - மரம் அழிக்கும் இப்பிரபஞ்சம் அழிக்கும் - வெறும் பிரபஞ்ச மையம் மானுடம் அழிக்கும்.

    Enhanced by Zemanta

    சாதி குறித்து சில வினவுகள்

    சாதி குறித்து சில வினவுகள்

    இது நமது மண்ணிலிருந்து அவ்வளவு சுலபமாய் மறைந்து விடுமா என்ன?
    நீண்ட நெடிய வரலாறு - அது மறையாது என்றால் அதை ஏற்றுக் கொள்வதும் - அதைப்பற்றி கேலி, கிண்டல் மற்றும் பகடி செய்வதும் - சாதிப் பிரச்சனை ஒழிகிறதோ இல்லையோ நமது இரட்டை வேடத்தையாவது கலைக்கும் அல்லவா?

    சில வாரங்களுக்கு முன்னாள் திரு -ஜெயமோகனின் பக்கங்களில் படித்த சில கட்டுரைகள் பல நாட்களாக என் மனதிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பற்றி சில கேள்விகள் - சில விளக்கங்கள் தேவைப் பட்டன. அவரிடம் கேட்பதற்கு முன்பு எனது கேள்விகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதாலும் - கேள்விகளை ஒழுங்காக கோர்த்துக் கொள்வதற்கு அவகாசம் தேவைப் படுவதாலும் - இப்போதைக்கு இங்கே பதிவு செய்வது மட்டுமே உத்தேசம் எனப் படுகிறது.

    அதுமட்டும் அல்லாமல் -  ஒரு கருத்தைப் பற்றிய பல பார்வைகள் உள்ளன - இதில் யார் சரி யார் தவறு என்பது அல்ல - ஜெயமோகன் கூறியுள்ள கருத்துக்கள் பல ஒரு மாற்றுப் பார்வையை வைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே சரி தவறு என்கிற விவாதத்திற்குள் செல்லாமல் இன்னோர் பார்வையை பதிய வேண்டிய தேவை உள்ளதால் அதைப் பதிகிறேன்.

    இதற்கு முன்னோட்டமாக இந்தக் கட்டுரையை வாசிப்பது அவசியம்.

    katturai 1 

    சிறில் அலெக்ஸ் சொல்லிய ஒரு கருத்துக்கு மாற்றாக ஜெயமோகன் அவர்கள் எழுதிய கட்டுரை இது - அலெக்ஸின் இரண்டு கருத்துக்கள்: சாதிபற்றி கிண்டல் செய்வது உயர் சாதிகளுக்கே உரித்தானது - மற்றவர்கள் இதுபற்றி வெளியில் பேச மாட்டார்கள் - இரண்டாவது சாதி மறைய வேண்டியது எனவே அது பற்றி பேசிக்கொண்டிருக்கக் கூடாது .....

    கேரளாவில் இன்னும் சாதிப் பெயர் சேர்த்துதான் சொல்கிறார்கள் - தமிழகம் இதை மறந்து விட்டது என்று சொல்கிறபோதும்  சாதியின் உணர்வுகள் அதிகமாக ஆகியிருக்கிறது என்று சொல்கிற போதும் அதை நம்மால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்லுவது சரிதான். கேரளாவில் சாதி பற்றி பகடி பண்ணுகிற அளவிற்கு அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள் - அதனால் சாதி இருந்தாலும் அதை வெளியில் காட்டினாலும் பகடி பண்ணுவது சதி உணர்வுகளிலிருந்து மீண்டு வர நல்ல வழி என்று ஜெயமோகன் இக்கட்டுரையில் முன்வைக்கிறார்.

     இதில் தமிழ் மக்கள் இரட்டை வேடம் போடக் கற்றுக் கொண்டுள்ளோம் என்று அவர் சொல்லுவது முற்றிலும் உண்மை. சாதி பற்றி வெளியே பேசத் தயங்குகிறோம் ஆனால் எல்லாமே சாதியின் வட்டத்திற்குள் தான் தீர்மானிக்கப் படுகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

    சாதியைப் பற்றிய புறவய உண்மையான வரலாறு இல்லை என்பதைப் பற்றி வருத்தப் பட்டு பின்வருமாறு கூறுகின்றார்.
    "உதாரணமாக தமிழினி மாத இதழில் ராமச்சந்திரன் அவர்கள் வேளாளர்களைப்பற்றி எழுதி வரும் கட்டுரை. புறவயமான ஓர் ஆய்வு அது. ஆனால் அதன்பொருட்டு இதழாளருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த வகையில் தமிழக பிற்படுத்தப்பட்ட ஏதாவது சாதிகளைப்பற்றி எழுதியிருந்தால் எழுத கை இருந்திருக்காது. அத்தகைய பல முன் நிகழ்வுகள் இங்கே உள்ளன."

    சிலர் ஒன்றுமில்லாத பெருமிதங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் - அதைச் சரி செய்ய வரலாறு உதவும் என்று சொல்வது சரிதான் - ஆனால் யார் ஒன்றுமில்லாத பெருமிதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு படுத்தப் பட வேண்டிய ஒன்று.

    வரலாறு - தெரிந்த வரலாறு - ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஒரு சாரார் - ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் என்பதனால் அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்கிற போது அத்தகைய கொடுமைகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் நாமும் பொறுப்பு மிக்கவர்களாக உள்ளோம். சில வரலாற்றுக் கொடுமைகள் தவறு என்று சொல்கிற அளவிற்கான உண்மையை - ஏற்கனவே சொல்லியிருந்தாலும் - ஒவ்வொரு புதிய கட்டுரையிலும் அதைக் கோடிட்டுக் காட்டுவது அவசியம் - இல்லையெனில் சாதி என்பதை இவ்வாறு பகடி செய்யலாம் என்று சொல்லுவது நமக்குச் சுலபமான விஷயம்.

    "அவர்கள் அதை எங்கும் விவாதிப்பதில்லை. ஆகவே எங்கும் அது மறுபரிசீலனைக்கு ஆளாவதுமில்லை. இது ‘உயர்’சாதி முதல் ‘தாழ்ந்த’ சாதி வரை எல்லாருக்கும் பொருந்தும்." உயர் மற்றும் தாழ்ந்த என்கிற சொற்களை மேற்கோள் இட்டு - அவைகள் உயர்ந்தவை சில தாழ்ந்தவை என்கிற உண்மையை மீண்டும் முன்மொழிகிற பொறுப்பு தெரிகிறது. வரலாற்றில் சில உயர்த்தப் பட்டன - பல தாழ்த்தப்பட்டன என்பதை மீண்டும் உணர்த்துவது அவசியம் என்பதையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

    ஆதிக்க நிலையில் இருப்பவர்களுக்கு சாதியைப் பகடி செய்யும் நிலை இயல்பாய் வருகிறது.

    அதே சமயத்தில் சாதியைக் கடந்து செல்ல அதை மறைப்பதும் - ஒதுங்கி ஓடுவதும் சரியல்ல என்பதை - ஜெயமோகன் அவர்களோடு சேர்ந்து ஆமோதிக்கிறோம் -

    சாதியைப் பற்றி பகடி செய்ய வேண்டும் என்று சொல்கிற ஆசிரியர் - "தாழ்த்தப் பட்ட சாதிகளைப் பற்றி எழுதியிருந்தால் எழுத கை இருந்திருக்காது" என்று சொல்கிற போது சில சாதிகள் இப்படித்தான் என்கிற பகடி நன்றாகத்தான் இருக்கிறது.

    ஆனால் இறுதியில் ஜெயமோகன் சொல்லுவது போல - சாதியை பற்றி நவீன மனிதன் பெருமையோ இகழ்ச்சியோ கொள்ள முடியாது என்கிற நிலை வரும் என்று நாம் எதிபார்க்க முடியுமா என்பதுதான் புரியவில்லை - ஒன்று இருக்கும் ஆனால் அது பெருமைக்கு உரிய விஷயமாகவோ அல்லது இகழ்ச்சிக்கு உள்ள விஷயமாகவோ இருக்காது என்பது எப்படி?

    "சாதி என்றும் அழியாது. நவீன முதலாளித்துவம் மூலம் சாதியின் அடுக்குமுறை காலப்போக்கில் பொருளிழக்கும்போது பண்பாட்டு நீட்சி என்ற முறையில் அது மேலும் முக்கியத்துவம் பெறும் என்றே நான் நினைக்கிறேன். உலகம் எங்கும் ஏதேனும் முறையில் மனிதர்களிடம் பிறப்பு சார்ந்து உருவாக்கப்படும் பண்பாட்டுச்சின்னங்கள் நீடிக்கத்தான் செய்கிறன. அவற்றை உணர்ச்சிகள்சார்ந்து ஆராயாமல் அறிவார்ந்து அணுகும் முறை மட்டுமே புதிதாக உருவாகி வரும். அன்று எவரும் சாதிகுறித்து வெட்கவும் மாட்டார்கள் பெருமிதம் கொள்ளவும் மாட்டார்கள்."

    பிறப்பு சார்ந்து உருவாக்கப் படும் பண்பாட்டுச் சின்னங்கள் - சாதியும் - கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.  பிறப்பினால் ஒருவன் ஒரு சாதிக்குரியவனாகவே இருப்பான் - ஆனால் அதைப் பற்றிய இகழ்ச்சியோ புகழ்ச்சியோ இருக்காது ----


    ஆனால் பண்பாட்டுச் சின்னங்கள் சாதி சார்ந்து இல்லாத நிலை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.


    இதைச் சார்ந்த இன்னும் பல கேள்விகள் உண்டுதான். அதைத் தொடர்ந்து உள்ள இந்த இரண்டாவது கட்டுரையையும் வாசியுங்கள்...

    Katturai 2


    இந்தக் கட்டுரையையும் அதற்குப் பின் வந்திருக்கிற பின்னூட்டங்களையும் பார்க்கிற போது - ஏறக்குறைய அதில் பெரும்பான்மையானோர்   - 'உயர்' குடிமக்கள்  - அவர்களே ஜெயமோகனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டது போலத் தெரிகிறது. அவரவர்களுக்குத் தான் வெளிச்சம்.


    தலித் நண்பர்கள் மிகவும்  புண்படும் நிலையிலேயே தங்களைப் பார்க்கிறார்கள் என்கிற ஜெய மோகனின் கருத்து சரிதான் - இது பல நூற்றாண்டுகளாக உருவாக்கப் பட்ட வடு  - அதற்காக பார்ப்பனரும் தங்களை புண்படும் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மையானால் - அதிகாரப் பீடத்தில் இருந்தவருக்கு புண்படும் நிலை வந்தால் - அடிபட்டவன் அவ்வளவு எளிதாய் வெளிவர முடியாது....


    பின்னூட்டங்களைப் பாருங்கள் -


    ஜெயமோகனின் கருத்துக்கு மாற்றுக் கருத்து எழுதியவருக்கு பல பேர் வசை பாடுவதைப் படிக்க இதையும் பாருங்கள்...



    Dondu Blogspot


    சாதி - அதைப் பற்றி எப்படி எழுதினாலும் எதிர்வினைகள் இல்லாமல் இருக்க முடியாது. எவ்வளவு முயற்சிகள் நடந்தாலும் அது நம் கண் முன்னே இல்லாதது போலத் தோன்றினாலும் எல்லாவற்றிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. 


    என்ன சொல்லமுடியும் - சாதி தேவையற்றது என்று வீரவசனம் பேசலாம் - ஆனால் நாம் அதற்குள்ளேயே தான் இருக்கிறோம். தலித் எழுச்சி பார்த்து கலங்குகிற சிலர் - சாதி பற்றிய பேச்சு தேவையில்லை என்று கூடச் சொல்லலாம் - சாதியற்றவர்களின் ஒரு அடையாளம் இப்போது சாதியாய்த் தெரிகிறது.


    உயர்சாதிக் காரர்கள் கூட தங்கள் சாதி அடையாளத்தை விட முன்வரலாம் ஆனால் தலித்துகள் அவ்வளவாக இல்லை என்று சொல்லலாம் - அடையாளம் அற்றவனாய் இருந்தபோதும் அவன் அமைதியாய் இருக்க வேண்டும் அடையாளம் கொள்ளும் போதும் அவன் அதை இழக்க வேண்டும் என்பது மேட்டிமை எண்ணம் தானோ?


    சாதி அடையாளம் பற்றிப் பேசுகிற போது தலித்துகள் மனம் புண்படுவது போல பல பார்ப்பனர்கள் தங்கள் உரிமை மறுக்கப் படுவதை உணர்கிறார்கள் - உண்மைதான் - வரலாறு ...



    மாற்றுக் கருத்து - புதிய பார்வை என்று சொல்லும் போது கூட மறு எதிர்வினையைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் "உயர்" குடிமக்கள் இருக்கிறார்கள் - ஆனால் வாருங்கள் தோழர்களே நாம் மட்டும் நம்மைப் பகடி செய்து கொள்வோம்.






    6.8.10

    எண்களுக்குப் பெயர்கள்

    தமிழில் எண்களுக்குப் பெயர்கள்  - நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். ஆனால் பதிய மறந்து போனேன். தற்போது அதை மனோஜ் என்பவர் எழுதியிருக்கக் கண்டேன்.

    நல்லது என்பதனால் அதை இங்கே பதிவு செய்கிறேன். மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணைப்பைப் படிக்கலாம்.





    ஏறுமுக இலக்கங்கள்
    1 = ஒன்று -one
    10 = பத்து -ten
    100 = நூறு -hundred
    1000 = ஆயிரம் -thouand
    10000 = பத்தாயிரம் -ten thousand
    100000 = நூறாயிரம் -hundred thousand
    1000000 = பத்துநூறாயிரம் – one million
    10000000 = கோடி -ten million
    100000000 = அற்புதம் -hundred million
    1000000000 = நிகர்புதம் – one billion
    10000000000 = கும்பம் -ten billion
    100000000000 = கணம் -hundred billion
    1000000000000 = கற்பம் -one trillion
    10000000000000 = நிகற்பம் -ten trillion
    100000000000000 = பதுமம் -hundred trillion
    1000000000000000 = சங்கம் -one zillion
    10000000000000000 = வெல்லம் -ten zillion
    100000000000000000 = அன்னியம் -hundred zillion
    1000000000000000000 = அர்த்தம் -?
    10000000000000000000 = பராத்தம் —?
    100000000000000000000 = பூரியம் -?
    1000000000000000000000 = முக்கோடி -?
    10000000000000000000000 = மஹாயுகம்
    இறங்குமுக இலக்கங்கள்
    1 – ஒன்று
    3/4 – முக்கால்
    1/2 – அரை கால்
    1/4 – கால்
    1/5 – நாலுமா
    3/16 – மூன்று வீசம்
    3/20 – மூன்றுமா
    1/8 – அரைக்கால்
    1/10 – இருமா
    1/16 – மாகாணி(வீசம்)
    1/20 – ஒருமா
    3/64 – முக்கால்வீசம்
    3/80 – முக்காணி
    1/32 – அரைவீசம்
    1/40 – அரைமா
    1/64 – கால் வீசம்
    1/80 – காணி
    3/320 – அரைக்காணி முந்திரி
    1/160 – அரைக்காணி
    1/320 – முந்திரி
    1/102400 – கீழ்முந்திரி
    1/2150400 – இம்மி
    1/23654400 – மும்மி
    1/165580800 – அணு
    1/1490227200 – குணம்
    1/7451136000 – பந்தம்
    1/44706816000 – பாகம்
    1/312947712000 – விந்தம்
    1/5320111104000 – நாகவிந்தம்
    1/74481555456000 – சிந்தை
    1/489631109120000 – கதிர்முனை
    1/9585244364800000 – குரல்வளைப்படி
    1/575114661888000000 – வெள்ளம்
    1/57511466188800000000 – நுண்மணல்
    1/2323824530227200000000 – தேர்த்துகள்


    ------------

    தவறுகள் இருந்தால் தெரியப் படுத்துங்கள்



    5.8.10

    சில செய்திகள் - சில தெரிவுகள்

    * கொத்துக் குண்டுகளை ஒழிக்க ஒப்புக் கொண்டு பல நாடுகள் ஒப்பம் இட்டதாகச் செய்தி - இது மனித நேய ஆர்வலர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று ஐ. நா. பொதுச் செயலாளர் கூறியிருக்கிறார்.
     - ஈழத்தில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக cluster குண்டுகளால் அழிக்கப் பட்ட போது - எத்தனை ஆயிரம் குரல்கள் - ஒன்றுமே கேட்காமல் போய் விட்டதே. இப்போது - கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் ? இன்னும் ஒரு செய்தி - இதில் அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீனா ஒப்பமிடவில்லை - இது எப்போதும் நடப்பதுதானே -

    * மின் கட்டணத்தைக் குறைக்குமாறு ஜெயலலிதா சொல்ல முடியாது என்று ஆற்காட்டார் சொல்லியிருக்கின்றார்.
     - அதுவும் சரிதான் - வராத மின்சாரத்திற்கு எதற்கு கட்டணக் குறைப்பு. அப்புறம் - நாம் எந்த ஆட்சியில் எந்த விலையை குறைத்திருக்கிறோம் - எப்போதுமே நாக்கு விலை வாசியை பொறுத்தவரை ஏறுமுகம்தான்...

    * மலேசியாவில் இந்தியர்கள் நாற்பதாயிரம் பேர் காணமல் போய் விட்டதாக மலேசிய துணைப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
    - ஒன்று அவர்களே மறைத்து வைத்திருக்கிறார்கள் அல்லது அவர்களின் எல்லைக் கோடுகள் சுதந்திரமாக இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் அங்கே போய் வரலாம் போல இருக்கிறதே. இத்தனை குடிமக்களைக் காணோம் என்று இந்திய அரசு கவலைப் பட்டது போல தெரிய வில்லையே.