உடையும் அணை பற்றி ஊரே பற்றி எரிகிற மாதிரி விவாதம். கலைஞர் முதற்கொண்டு எல்லாரும் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறார்கள். தமிழக முதல்வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காட்டி தடை செய்திருக்கிறார். இதுபோன்ற படங்களுக்கான எதிர்வினை ஆற்ற வேண்டியது அல்லது எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம்தான் - ஆனால் தடை செய்து எதிர்ப்பைக் காட்டுவது சரியானது அல்ல என்பதனால் மட்டுமல்ல - இந்தத் தடையோடு நம் அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாரைப் பற்றி மறந்து போவார்களே என்பதனாலும்தான்.
* * * * * * * * * * * * *
முல்லைப் பெரியாறு அணை விவாகரம் என்பது பற்றி விரிவாக எழுத தனிப் பதிவோ அல்லது தொடர் பதிவோ அவசியம் என்பதனால் இதில் அதைப் பற்றி எதுவும் எழுதப் போவது இல்லைஅது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா
சுய நல நோக்கத்தோடு இதுவரை இருந்திருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இப்போது வரை
அது தங்களது தனிப்பட்ட விருப்பத்தை, மற்றும் உள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பலப் பல வழிகளில் முயல்கிறது முயலும் என்பதையும் யாம் அறிவோம்.
அது ஒருக்காலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கவனித்தது இல்லை என்பதோடு அருகில் உள்ள தமிழகத்தின் நலன் கருதி எல்லாம் அது சிந்தித்ததும் இல்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
* * * * * * * * * * * * *
இந்தத் திரைப் படம் உள் நோக்கத்தோடு எடுக்கப் பட்டிருந்தாலும், அல்லது கேரள அரசு ஆசிரோடே இந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தாலும்,
இந்த ராய் தனது கடின உழைப்பினால் மட்டுமே ஹாலிவுட் வரை சென்று வார்னர் சகோதரர்களைப் பார்த்து தயாரித்தார் என்பது பொய்யாகவே இருந்தாலும் - டேம் 999 தடை செய்வது தவறு மற்றும் நியாயமற்றது என்று தோன்றுகிறது. ஏன்? ஒரு திரைப் படம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்கிற விதத்தில் மட்டும் இந்த விஷயத்தை அணுக வேண்டிய அவசியம் என்பதில் இந்தத் தடை நியாயமற்றது.
டா வின்சி கோட் என்கிற ஒரு படம் வந்தபோது கிறித்தவ நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். சில சிறப்புக் காட்சிகள் வெளியிட்டு பார்த்தார்கள் - என்ன நடந்தது அந்தப் படமும் அந்தப் புத்தகமும் இன்னும் பிரபலமானது. இந்தப் படத்திற்கான இவ்வளவு பெரிய பிரச்சாரம் தேவையா?
டேம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது [
என்ன நம்பர் அது - இதற்குப் பின்னால்தான் கேரள அரசின் மற்றும் இயக்குனரின் சகுனித்தனம் ஒளிந்திருக்கிறது] என்ற படம் ஏதோ ஒரு ராயால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வார்னர் சகோதரர்கள் பணம் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். எனவே ஹாலிவுட் தரம் என்று சொல்லப் படுகிறது.
கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படவேண்டும் என்று குரல் எழுப்பும் யாரும் இந்தப் படத்தை தடை செய்வதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. இது வெறும் பயத்தை, பீதியைக் கிளப்புகிற முயற்சி என்று சொன்னாலும் கூட -
அதற்காக ஒரு படத்தைத் தடை செய்ய முடியுமா... தடை என்பதை விட்டுவிட்டு -- அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டுமல்லவா...
பின் எதற்காக இந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தடை கோருகிறார்கள்.? இந்தப் பிரச்சனையைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். எனவே தடை செய் என்கிறார்கள்.
இதையே கேரள முதல்வர் கிராபிக்ஸ் செய்து தனது வலைப் பக்கத்தில் போட்டபோது தமிழக அரசின் மற்றும் அரசியல் வாதிகளின் செயல்பாடு எப்படி இருந்தது? வை.கோ வைத் தவிர வேறு யாரும் எதுவும் பேசினார்களா - என்ன செய்ய முடிந்தது. தங்களது எண்ணத்தை, நிறைவேற்ற பரவலாக்க, இன்னும் பரவலாக்கவும்,
ஒட்டு மொத்த கேரளாவும் - கட்சி வேறுபாடு இன்றி - முடிவு செய்கிறார்கள்.
தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்தி விட்டால் இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் தன் பங்கிற்கான கடமை முடிந்து விட்டது என்று சொல்லி மீண்டும் இந்த விஷயத்தை நீதி மன்றத்தின் பார்வைக்கு விடலாம். நாம் அமைதியாய் இருப்போம். அப்புறம் அவர்கள் நீதி மன்றத்தின் கருத்துக்களை சட்டை செய்யாமல் வேறு ஏதாவது செய்வார்கள்...
அப்போதெல்லாம் நாம் கட்சி சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்போம்.
எது எப்படி இருந்தாலும் வெறும் கோஷங்கள் போடுவதால், அல்லது
தடை செய்வதுதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு அப்புறம் அந்தத் தீர்மானங்களை குப்பையில் போடுவதை விட்டு விட்டு கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம் என்கிற [பேருக்காவது] அளவிலாவது நாம் இருக்க வேண்டியது அவசியம். அவரால் ஒன்றை மிக்ஸ் செய்ய முடிகிறது என்றால், நீங்கள் கேரளா பற்றி ஏதாவது மிக்ஸ் செய்ய ஹாலிவுட்டுக்கு ஆள் அனுப்புங்கள் - அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்... நமக்குள் அடித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது...
கேரளா சகோதரர்கள் எங்கே இருந்தாலும் கேரள அரசின் மற்றும் தங்களது நலனை மட்டுமே முன்னிறுத்தும் விதத்தைக் நாம் கற்றுக் கொண்டாலே போதும் -
இங்கே தமிழர் நலனை அழிப்பதற்கென்றே தமிழக அரசும். மத்திய அரசும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது - இதில் இந்த DAMN dam 999 அதைவிடப் பெரியதாய் என்ன செய்து விடப் போகிறது?
கொசுறு? 1
கேட்பாரா நாராயணசாமி?
யார் இந்த ராய் - ஹாலிவுட்டில் படம் எடுக்கும் அளவுக்கு எப்படி உயர்ந்தார்? கேரளா அரசின் உதவியில்லாமல் இப்படிப் படம் எடுக்க முடியுமா? கணக்கு வழக்கு வைத்திருக்கிறாயா என்று அவரிடம் நாராயணசாமி கேட்பாரா? .... கேட்டாத் தெரியும் எல்லா நாயரும் சேர்ந்தே அடிப்பாங்க.
கொசுறு 2
படிப்பினை - பிளவை ஏற்படுத்துமா?
எத்தனைக் கேரளா சகோதரர்கள் தமிழ் நாட்டிலேயே வளர்ந்து வாழ்ந்து தமிழர்களின் உணர்வுகளோடு இருக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்தாலும், தங்களது பூர்விக சொத்தும், மனதும் எப்போதும் கேரளா விடம் மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும். இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், என்றைக்காவது இங்கேயே வாழும் அந்தச் சகோதரர்கள் தமிழர் நலுனுக்காக குரல் கொடுத்தது உண்டா... இந்தியப் பிரஜை என்பதற்காக அல்ல, நாம் இங்கேதானே வசிக்கிறோம் அந்த நல்லெண்ணத்தின் அடிப்பைடயில் என்பதற்காக அல்ல, குறைந்த பட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது.... ஏற்கனவே அவர்கள் பிளந்துதானே இருக்கிறார்கள் அப்புறம் என்ன பெரிதாய் இந்தப் படம் வந்து பிளவை ஏற்படுத்தப் போகிறது. அப்புறம் எதுக்குப் பயப்படனும்?
கொசுறு 3
அதுமட்டுமல்ல இந்த நாட்டில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிற பாட புத்தகங்கள் இன்னும் தடை செய்யப் படாமல் இருக்கிறது. அடிமைத்தன எண்ணங்களை விதைக்கிற படங்கள், முயற்சிகள், நபர்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் என்னத்திற்குள் தங்கள் ஜாதிய வெறியை நிலை நிறுத்தும் மற்றும் நியாயப் படுத்தும் படங்கள், புத்தகங்கள் - நாளிதழ்கள் --- இன்ன பிற இத்யாதி இத்தியாதிகளை எல்லாம் தடை செய்ய வேண்டியிருக்கிறது.
தினமலரும்தான் பிரிவினை மற்றும் பிளவை உண்டு பண்ணும் விதத்தில் தினம் செய்தியை வெளியிடுகிறது - அண்மையில் கூட ஒரு மரண தண்டனை கொடுக்கப்பட்டதற்காக தமிழ் ஆர்வலர்கள் கேரளா அரசுக்கு எதிராக எழ வேண்டாமா என்று கேட்டது.....அதற்காக யாராவது அதைத் தடை செய்ய வேண்டுமெண்டு குரல் கொடுக்கிறார்களா என்ன...?