27.7.15

அப்துல்கலாம்

சற்று நேரத்திற்கு முன்பு, உயர் திரு அப்துல் கலாம் இறந்து போனார் என்ற துயரச் செய்தியைக் கேட்டபோது அவரது அன்பான, கனிவான முகம் கண்முன்னே வந்து நின்றது. அவரைப் பற்றி எழுதலாம்  என்று அமர்வதற்குள் அத்துனை  கட்டுரைகள் வந்து விட்டன. 

எஸ் எம் எஸ்கள்  / வாட்ஸ் அப்  செய்திகள், வீடியோக்கள் பரிமாற்றம் என தேசம் முழுவதும் அவரைப் பற்றி பேசும் ஒன்றே அந்த மனிதர் மாமனிதர்  என்பதற்கு சாட்சியாகும். ஒரு அரசியல் தலைவர் திடீரென இறந்து போனால் கூட இத்தகைய பரிமாற்றங்கள் நிகழத்தான் செய்யும். ஆனால் இந்த பரிமாற்றம், மாநிலம் கடந்து, மதம் கடந்து, கட்சி கடந்து நடக்கிறபோதும், பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளைப் பார்க்கிற போதும், எவ்வளவு மாசில்லாத மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் மற்ற தலைவர்களைக் காட்டிலும், எவ்வளவு  மேலானவர்,என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஒரு மனிதன் இவ்வளவு உயரத்திற்கு சென்ற பிறகும் இவ்வளவு தாழ்ச்சியோடு இருக்க  முடியும் என்பதற்கு, நம் காலத்தில் இவரை விடச் சிறந்த ஒரு உதாரணத்தைத் தர முடியாது. 

அவரது அறிவிற்கும், படைப்புத்திறனுக்கும் இந்தியத துறையில் அவர் ஆற்றிய பணிகள் சான்றாக  இருக்கும்.

தமிழ்வழிக் கல்வியில், தன் பயணத்தைத் தொடங்கிய அவர் தொட்ட உச்சம் ஒன்றே போதுமானது - தாய் மொழிக் கல்வி ஒன்றும் எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று காட்ட.

தனது பதவிக் காலத்தில், குடியரசுத் தலைவருக்கு உண்டான பகட்டைக் களைந்து விட்டு மக்கள் தலைவராக இருந்ததை ஒரு போதும் மறக்க முடியாது.

எத்தனை குறைகள் நம்மிடத்தில் இருந்தாலும் நேர்மறையான விடயங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தியா முதன்மையான நாடு என்று சொல்லும் அந்த மனிதரின் பாஸிடிவ் அணுகுமுறை நம் ஒவ்வொருவருக்குமே இன்று தேவைப்படுகிறது.

பிரம்மச்சார்யம் உலகிலுள்ள எல்லார் மேலும் அன்பு காட்ட உதவும் என்பதற்கும் சான்றே அப்துல்கலாம்.

அவர் செல்லாத பள்ளிகள்,  கல்லூரிகள் மிகக் குறைவே. ஒவ்வொரு முறையும், சில குழந்தைகளையாவது ஊக்கப் படுத்துவதில் அயராது இருந்தார் என்பதற்கு சான்றாகவே பேசிக் கொண்டிருக்கையிலேயே அவர் உடல் தளர்ந்தது.

நீங்கள் விஞ்ஞானியாய், இந்தியராய், ஆசிரியராய், எழுத்தாளராய், பேச்சாளராய், அன்பான மனிதராய், உண்மைப் பற்றாளராய் எல்லாருக்கும் ருக்கும் உத்வேகம்  தந்திருந்தாலும், எங்களுக்கு நீர் தமிழராய் இருக்க வும் உத்வேகம் தந்திருக்கிறீர் என்பதும் மிகப் பெருமையே. 
எங்கு சென்றாலும் தமிழின்  பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகிற்குச் சொன்னவரே, உங்கள் நம்பிக்கை உங்களை வாழ்விக்கும்.




4.7.15

காக்கா முட்டை


காக்கா முட்டை  சென்னை ஒரு சேரியில் வாழும் இரண்டு குட்டிப் பையன்களின் கதை. அதில் அம்மக்களின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலையையும் , வாழ்க்கையின் தேடலையும் சேர்த்து மிக நுண்ணியமாய் படமாக்கி உள்ளார் இயக்குனர். 

இரண்டு மணி நேரம் படம் பார்த்து முடித்தவுடன் நமக்கு அவர்களோடு வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. எத்தனை முறை நாம் அச்சேரிகளுக்கு அருகில் பயணித்து இருந்தாலும் ஏன் இப்படிப்பட்ட நகரத்தைப் பார்க்காமலே இருந்திருக்கிறோம் என்று நம் மேல் ஒரு கோபம் ஏற்படுகிறது. என்ன மனிதர்கள் நாம்? சுற்றி என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய பிரக்ஜை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடிகிறது?

அப்படியே அந்த சேரியைப் பார்த்திருந்தாலோ அல்லது வழி தெரியாமல் சேரிக்குள் நுழைந்திருந்தாலும், நாம் ஏன் இவர்களைப் பார்த்து முகம் சுளித்திருக்கிறோம் என்று நினைவுகள் வேகமாய் வந்து நம்மை விசனப்படவும் வைக்கும். சின்ன காக்காமுட்டை, பெரிய காக்காமுட்டை, அம்மா, பாட்டி, பழரசம், காயலான்கடை மக்கள் என்று ஒவ்வொரு கதா பாத்திரத்தையும் எதார்த்தத்தோடு படம் பிடித்திருக்கிறார்.

காக்கை முட்டை என்கிற வார்த்தையை முதலில் கேட்டால் சிலருக்கு சிரிப்பு வரும். சிரிப்பு - அனுபவங்களின் நினைவில், நானும் அதை உண்டிருக்கிறேன் என்பதனால் சிரிப்பு வரும் அல்லது உண்டவர்களோடு கூட இருந்த அனுபவமாவது அந்தப் புன்னகைக்கு காரணமாக இருக்கும். ஆனால் பலருக்கு அந்த வார்த்தையைக் கேட்டவுடன் முகம் சுளிக்கத் தோன்றும். அதெல்லாம் தொடக்கூடாது அசிங்கம் என்பதனால் முகம் சுளிக்கலாம். முகம் சுளிக்கும் அதில் பலர், உண்பதற்கு பணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும். இருக்கப்பட்டவன் ஏன் சமுதாயத்தில் நல்லதென கொண்டாடப்படாததை எல்லாரும் பார்க்கும்படி உண்ணப் போகிறான்.

காக்கை முட்டை காசில்லாதவர்களின் புரதச்சொத்து. அதை மிகவும் எதார்த்தத்தோடு அனுகியிருப்பதில்தான் இயக்குனரின் வாழ்க்கை அனுபவமும், ஒரு விஷயத்தை எப்படி கலை நயத்தோடு அணுகவேண்டும் என்கிற கலை அனுபவமும் ஒரு சேர இருக்கின்றது.

இது விவேக்கின் காக்கா பிரியாணி காமெடி போல இல்லை. இதில் இருக்கும் காமெடிகள் மிக இயல்பானவைகள். இதில் மிகக் குறைந்தது மூன்று இடங்களிலாவது சிரிக்கவில்லைஎன்றால் அந்த உம்மானா மூஞ்சியை யார் வந்தாலும் சிரிக்க வைக்க முடியாது என்றே பொருள். இடைவேளைக்குப் பின் சிறிதே இழுத்தாலும் அந்தப் பையன்கள் அதை வேகமாய் நகர்த்துகிறார்கள்.

===

இது படம் பார்த்தவுடன் எழுதி வைத்தது. இன்னும் முடிக்கக் கூட முடியவில்லை. நீண்ட நாட்கள் அதை பதிவேற்றம் செய்யாமலே வைத்திருக்க மனமில்லை... எனவே பாதியானாலும் பரவாயில்லை  பதிவேற்றியாயிற்று .

===