சாலை விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலை விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.5.17

குப்பை லாரியும் ஆட்டோவும்


ஏறக்குறைய மிகச்சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்ததற்கான காரணம் கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி சும்மா ஊர் சுற்றியே போரடித்துப் போய் விட்டது என்பதாக இருந்தாலும், இன்றைக்கு ஊர் திரும்பும் வேளையில் சந்தித்த குப்பைலாரியும் ஆட்டோவும் இந்தப் பதிவிற்கான காரணம் என்பதே மிகச்சரி. 
வேலையின்றி இருப்பது ஒரு கலை. வடிவேலு சொல்லுவதை போலவே அது ரொம்பக் கடினமான ஒன்றுதான்.
பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிமித்தம் காரணமாக ரயில் நிலையமும், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களும் பிதுங்கி விழுந்து கொண்டிருந்தன. எனது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வேளையில் எனக்கு முன் அந்தக் குப்பை லாரி ...

குடிதண்ணீர் லாரிகள் தண்ணீரை வீணாக்காமல் சென்றதாகவோ, விபத்தில்லாமல் சென்றதாகவோ வரலாறு இல்லை. குப்பை லாரிகளும் அதை போலவே தன்பங்குக்கு சில தனித்த பெருமைகளை பதிவு செய்திருக்கின்றன. புகை மூட்டத்தால் அது செல்கிற இடங்களை மாசு படுத்தாமல்சென்றதாக இல்லை. தண்ணீரை வீணடித்து தண்ணீர் கொண்டுவருவதை போல, மாசுபடுத்தித்தான் குப்பைகளை அள்ள  வேண்டியிருக்கிறது.

அப்படிப்பட்ட லாரி ஒன்றுதான் புகையை வாரி இறைத்து எல்லாரும் இருமித் தும்மும் படி செய்தது. வேகமாகச் செல்லும் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு முன்னே உள்ள வாகனங்கள் ஒதுங்கி வண்டியை நிறுத்து விட வேண்டும். அதே போல அம்புலன்சுக்கு பின்னால் குறைந்தது நூறு மீட்டர் இடைவெளி கிடைத்த பிறகுதான் நிறுத்தப் பட்ட வாகனங்கள் செல்ல வேண்டும். நம்ம ஊரில் ஆம்புலன்சுக்கு வழி விடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வந்திருக்கிறது. ஆனால் ஆம்புலன்ஸை ஒட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே செல்லும் பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. ஆம்புலன்சுக்கு எங்கே வழி இருக்கிறதோ அங்கே செல்லும். எப்போது பிரேக் விழும் என்று தெரியாது. அப்படிப் போடும் போது பின்னால் வரும் வண்டிகள் மோதி மற்றொரு விபத்து ஏற்பட்டு, இன்னொரு ஆம்புலன்ஸை அழைக்கக் கூடாது என்பதற்காகவே பின்னால் இடைவெளி. ஆனால் அது நம்ம ஊர் ரோட்டில் சாத்தியமே இல்லை. ஆம்புலன்சுக்கு ஒதுங்கி நாம் நிற்கும் வேளையில் நாம் மீண்டும் வண்டியை எடுப்பதற்குள் சர் சர் - என்று நூறு வண்டியாவது போய் விடும். ஆம்புலன்சுக்கு வழி விட்ட நம்ம முட்டாப் பசங்க. அவங்க ரொம்ப அறிவாளிங்க. நிற்க ...

இந்த குப்பை லாரிக்கு பின்னால் நூறு மீட்டருக்கு நாங்கள் யாரும் போக வில்லை. அந்தப் புகை யாரையும் நெருங்கி வரவிடவில்லை. இனிமேல் ஆம்புலன்சுக்குப் பின்புறமும் இப்படி கறுப்புப் புகை வரும் மெக்கானிசம் இருந்தால் பல விபத்துக்களைத் தவிர்க்கலாம். ஆனால் இந்த மெக்கானிசம் வேண்டுமெனில் குப்பைலாரியைத் தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. என்ன சிக்கல்? அதற்கு நான் மீண்டும் காலை சந்தித்த குப்பை லாரிக்குத் தான் செல்ல வேண்டும்.

நூறு மீட்டர் இடைவெளியில் நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு படத்தில் வடிவேலு காலை எழுந்து சாமி கும்பிட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் போல ஒருவர் எனக்கு வலப்புறம் ஓவர்டேக் செய்ய முயல்கிறார். வளசரவாக்கம் ரோட்டில் இடது புறம் வாகனங்கள் நிற்கும் என்பதால் வழிவிட முடியாமல் நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, வேறு வழியின்றி சற்றே ஒதுங்கி போய்யா போ என்று வழி விட, புகைவிடும் குப்பை லாரிக்குப் பின்னால் இருக்கும் அந்த நூறு மீட்டர் இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள வேகமாகச் சென்று அந்த லாரியை நெருங்கும் வேளையில் பிரேக் லைட் இல்லாத அந்தக் குப்பை லாரி பிரேக் போட, சுதாரித்து பிரேக் போட்டு  வலது புறம் திருப்ப, அப்படியே மிகப் பெரும் சத்தத்தோடு, கவிழ்ந்து விழுந்தது அந்த ஆட்டோ. நாங்கள் ஒவ்வொருவரும் பிரேக் போட வேறு எந்த விபத்தும் இல்லாமல் முடிந்தது அந்த விபத்து. 

எங்கிருந்தோ ஓடி வந்த அத்துனை பெரும் ஆட்டோவைத் தூக்கி அந்த ஓட்டுனரையும், அதில் பயணம் செய்த இருவரையும் உடனே வெளியில் தூக்கினார்கள். யாருக்கும் எந்த சிராய்ப்பும் இல்லாமல். 

நிமிர்த்து பார்க்கும் போது எல்லாவற்றிற்கும் காரணமான அந்த குப்பை லாரி புகையை மட்டும் விட்டுவிட்டு கண்ணுக்கெட்டாத தூரம் சென்று விட்டது. 

ஆட்டோ சரிந்து செல்வதை திரைப்படத்தில் மட்டுமே பார்த்த எனக்கு என் கண் முன் பார்த்தது தூக்கிவாரிப் போட்டது. அதன் பின்னால் வந்த நாங்கள் அனைவரும் பிரேக் போட்டது எங்களுக்குள்ளே விழிப்பாய் இருந்த அந்த ஓட்டுனர்தானே தவிர நாங்கள் இல்லை. எல்லா நேரமும் அந்த ஓட்டுநர் விழிப்பாய் இருப்பானா தெரியாது.

ஆம்புலன்சுக்குப் பின்னால் வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் குப்பை லாரியைத்தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் என்று சொன்னேன்.  சிக்கல் என்னவென்றால் அதில் பிரேக் லைட்பிக்ஸ் பண்ண வசதி இருக்காது. மேலும் பின்னால் எத்தனை பேர் அடிபட்டுக் கிடந்தாலும் அந்த ஓட்டுனருக்கு எதுவும் தெரியாது.

இதுவே இப்படி இருக்க இதுபோல ஆட்டோ ஓட்டுனர்களை வைத்து அரசுப்பேருந்துகளை இயக்குகிறார்களாம். ஏன் குப்பை லாரி ஓட்டுபவர்களை வைத்துக் கொண்டால் இன்னும் சுகமாக இருக்கும்.....


28.9.11

விபத்தும் வறுமையும் - எல்லாரும் மன்னர்கள்


விபத்து

இரு நாட்களுக்கு முன்புதான் சாலை விபத்துக்கள் குறைந்திருக்கின்றனவா என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று எழுதினோம். ஆனால் அதற்கெல்லாம் ஆய்வு தேவையே இல்லை என்கிற விதமாக நேற்று திருவள்ளூரில் மூன்று மாணவர்கள் லாரி மோதி உடல் நடுங்கி இறந்திருக்கிறார்கள். நேரடியாக கவிதை வீதி சுந்தர் - களத்தில் இருந்து ஒரு ரிப்போர்ட்டும் கொடுத்து இருந்தார்.

பூந்தமல்லி சாலையில், செம்பரம்பாக்கம் பகுதியில் இருந்து சென்னைக்குள் வரும் தண்ணீர் லாரிகள், மணல் லாரிகள், கல்லூரி பேருந்துகள், நிறுவன பேருந்துகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு போகிற காட்சியைப் பார்த்தாலே மனம் பதைக்கும். இன்று மூன்று உயிர்களைக் குடித்தது. ஏற்கனவே பல உயிர்களை மணல் லாரிகள் காவு வாங்கியிருக்கின்றன. ஷேர் ஆட்டோக்கள் பலரின் உயிர்களை எடுத்தது முதற்கொண்டு எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் ஒன்றும் நடப்பது போலத் தெரியவில்லை.

ஓட்டுனர்கள் முதலாளிகள் கையில் சிக்கித் தவித்து ஒரு நாளைக்கு எத்தனை லோடு அடித்தால் சம்பளம் கிடைக்கும் என்கிற ரீதியில் தன உயிரை பணயம் வைத்து சாகசம் செய்ய வேண்டிய அவலத்திற்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள் - இல்லையெனில் வேலை கிடைக்காது என்பதனால். ஒவ்வொருவரும் தங்கள் தினசரி வாழ்க்கைக் காகப் போராட வேண்டிய சூழலில் தள்ளப் படுகிறார்கள். எல்லாருக்கும் குறைந்த பட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தராமல் - விலை வாசியைக் கட்டுப் படுத்துவது எப்படி என்று புரியாமல் - சாலை விதிகளை மதித்து நடந்தால் அவனுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்காது என்பதானால் மீறி நடப் பவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிற அரசுகள் - [மதிய மாநில அரசுகள்] .அவர்களைத் தானே சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள் அனைவருக்குமான அரசு என்பதோ அல்லது இந்தியர்கள் எல்லாருக்குமான அரசு என்பதெல்லாம் சும்மா. இந்தியாவைப் பொறுத்த வரை நான்கு நகரங்கள் முக்கியமானவை. தமிழகத்தைப் பொறுத்த வரை அவர்களுக்கு ஒரே நகரம் மட்டும்தான் முக்கியம். எல்லா வளர்ச்சிப் பணிகள் இந்த நகரங்களை சுற்றி மட்டுமே இருக்கும். தமிழக விவசாயிகள், விளை நிலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் நகரங்களை நோக்கி மட்டுமே வரவேண்டும். ஆனால் அவர்களாக வேலை தேடிக் கொள்ள வேண்டும். இவர்கள் கொண்டுவரும் தொழிலகங்கள் அல்லது வேலை வாய்ப்பைப் பேருக்கும் எதுவாக இருந்தாலும் சென்னையில் மட்டுமே குடி கொள்ளும்.

வளர்ச்சிப் பணிகள், வேலை வாய்ப்பிற்கான உத்திர வாதம் இவைகளெல்லாம் அவர்களது நகரங்கள், கிராமங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் எனில், எதற்காக எல்லாரும் சென்னை நோக்கு வரவேண்டும்? வறுமை அவர்களை விரட்டுகிறது. உயிரைக் கொடுத்தாவது அன்றைய சம்பளத்தைப் பெற வேண்டும் என்கிற நோக்கம் - தனது உயிரோ அல்லது அடுத்தவன் உயிரோ. போகிற விலை வாசி உயர்வில் முதலாளி சொல்லுகிற படி நடந்தால்தால் வேலை. அவர் 10 லோடு அடிக்கனும்னா அடித்துத் தானே ஆக வேண்டும்- ஓட்டுனர் உரிமம் இல்லாமலே வண்டி ஒட்டித்தான் ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். வயிற்றைக் கழுவத்தானே இத்தனை கூத்தும்.  
---
ஆனால் இதைவிடப் பெரியக் கூத்து.

இந்தியாவில் விலை வாசி உயர்வே இல்லை என்பது போலவும், இந்தியாவில் யாரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லை என்பது போலவும் மத்தியத் திட்டக் குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்து இருப்பதுதான்.
மத்தியத் திட்டக் குழு அறிக்கையில், கிராமங்களில் வசிப்பவர்கள் மாதம் 965 ரூபாய் செலவு செய்தால் அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லைஎன்று சொல்லியிருக்கிறது. அது மட்டுமல்ல நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகைக்காகவோ அல்லது பேருந்திற்காகவோ மாதம் 49 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்களும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இல்லையாம். அதனால் இந்தியாவின் மக்கள் எல்லாரும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாக ஒரு மாயை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
http://www.vikatan.com/news.php?nid=4078

சாதாரணக் கூலி விவசாயி கூட பணக் காரன்தான் அரசுகளின் பார்வையில். எதார்த்தம் தெரியாத இந்த அரசுகளா மனித வாழ்வை மேம்படுத்தப் போகின்றன - வேலை வாய்ப்பைப் பெருக்கப் போகின்றன - விபத்துக்களைத் தவிர்க்க ஆவன செய்யப் போகின்றன?

இதனால்தான் அன்றே கவி சொன்னான் போல 
"நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று-"


மத்தியத் திட்டக் குழு நம் எல்லாரையும் மன்னராக்கி விட்டது.

26.9.11

எங்கேயும் எப்போதும்

இந்தத் திரைப்படம் நேற்று பார்த்தவுடன் எனது இரண்டு பதிவுகளை மீண்டும் பதிய வேண்டும் என்று தோன்றியது.

முதலாவது - நால் வழி மயானம் - இது விதியா [மே இந்த ஆண்டு]

  • கடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது.
  • நால்வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள்.
  • வழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது.
  • கம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.
  • மஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான். indicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும்? அவன் என்ன கடவுளா? நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'
  • லேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...
  • நால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது. நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது.
  • ஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம்.
  • ஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது.

இரண்டாவது பதிவு
சாலை மரணம் - நவீனக் கொடை [கடந்த ஆண்டு - ஜூன்]
  • முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.
  • முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.
  • மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.
  • சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?
  • சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. ....

இரண்டையும் முழுமையாய் படிக்க கீழே சொடுக்கவும்.

நால்வழி மயானம்

சாலை மரணம் நவீனக் கொடை

இனி சில வார்த்தைகள்

நேரெதிரே மோதிக்கொள்ளும் பேருந்துகளின் பயணிகளின் ஊடகப் பயணிக்கும் ஒரு கதை. இதை வெறும் திரைப் படமாக மட்டும் அழகியல் நோக்கில் பார்த்தாலும், வாழ்வின் நிகழ்வுகளை மிகவும் கச்சிதமாய்ச் சொல்லியிருக்கும் படம் என்று பார்த்தாலும் அதைப் பற்றி பேசுவதற்கு இந்தப் படத்தில் நிறைய இருக்கின்றது. இந்தத் திரைப் படத்திற்குப் பிறகு எல்லா ஓட்டுனர்களின் மனதிலும் குறைந்தது மீண்டும் வீட்டுக்குப் போகும் வரையாவது மிகவும் கவனமாகப் போகிற அளவுக்கானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - அது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு "ஓட்டுனராய்ப் பார்த்து திருந்தா விட்டால் விபத்தை ஒழிக்க முடியாது" என்பதை மட்டும் சொல்லலாம்.

இந்தப் படம் வெளி வந்த பிறகு விபத்துக்கள் குறைந்திருக்கிறதா என்று யாராவது ஆய்வு செய்யலாம். குறையவில்லையெனில் - வெறும் ஓட்டுனர்களின் கவனமின்மையைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியுமா என்று தெரிவில்லை. ஏனெனில் திருடர்கள் திருடவதற்கான அல்லது அதில் நுழைவதற்கான பல சமூகக் காரணிகள் உண்டு. அது போலவே ஓட்டுனர்களும் யாரும் தான் வேண்டுமென்றே விபத்தை உருவாக்குவதும் இல்லை. அந்தக் காரணிகளும் அலசப் பட வேண்டியிருக்கிறது.

ஆனால் ஓட்டுனர்கள் இன்னும் சிறிதே முயன்றால் - பல விபத்துக்களை தினம் தினம் தவிர்ப்பது போல இன்னும் நிறையத் தவிர்க்கலாம்.

நாம் அதன் அங்கமாய் இல்லாத வரை இது எங்கேயோ எப்போதும் நடப்பதுதான். நாம் அதில் உள்ளபோதே நமக்குத் தெரியும் - இது இங்கேயும் இப்போதும் நடந்தது விட்டதே என்று - அதை உணர்வதற்கான அளவிற்கான நினைவிருந்தால்.  


எப்போதாவது நடந்தால்தான் விபத்து - எங்கேயும் எப்போதும் நடந்தால் அது என்ன?

24.5.11

'நால் வழி' மயானம் - இது விதியா?

  • தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாலை விபத்தில் காலமானது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. கடந்த அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவைத் தோற்கடித்த மரியம் பிச்சை சாலை விபத்தில் இறந்தது விதியின் செயலா என்று தெரியவில்லை.
  • ஒரு மனிதர் இறந்திருக்கும் போது அஞ்சலி செலுத்துவதைத் தாண்டி வேறு ஒன்றும் பேசாமல் இருப்பதே நாகரிகமாக இருக்கும். ஆனால் இதே போல தினமும் பல பேர் சாலை விபத்துகளில் இறந்து கொண்டிருக்கும் போது நாம் மௌனமாய் இருப்பது மனிதாபிமான செயலாக இருக்காது என்பதால் இதைப் பற்றி இந்த நேரத்தில் பேச வேண்டியிருக்கிறது.
  • கடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது. 
  • கடந்த வருடம், அந்த வேதனையில்தான் 'சாலை மரணம் நவீனக் கொடை' என்று எழுத வேண்டி வந்தது. மீண்டும் இந்த ஆண்டு அதைப் பற்றியே பேச வேண்டியிருக்கிறது.  இன்று தினமணி தலையங்கத்தில் - நால்வழிச் சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் எல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்குப் பதில் நிறைய வேலையின்மையைத் தான் உருவாகியிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள். நாள் வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள். 
  • வழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது. 
  • எத்தனை எத்தனை விபத்துகள்? ஓட்டுனர் உரிமம் இருக்கான்னு செக் பண்றாங்களே - அவனுக்கு ஓட்டுனர் உரிமம் ஒழுங்காக வழங்கப் படுகிறதான்னு செக் பண்றாங்களா? 
  • கம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.
  • மஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான். 
  • indicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும்? அவன் என்ன கடவுளா? நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'
  • லேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...
  • நால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லளாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது.  நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது. 
  • ஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம். 
  • இப்படி இருக்கிற போது வெறும் சாலைப் பாதுகாப்பு வாரம் ஒன்றும் செய்துவிட முடியாது. விதியாய்க் குறை சொல்லக் கூடாது - இது மதியின்மைதான். இதைப் பற்றி யாரும் எதுவும் செய்துவிடப் போவது இல்லை.
  • ஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது. 

தொடர்புடைய பழைய கட்டுரைகள்:

சாலை மரணம் - நவீன கொடை

இணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்

 


    23.7.10

    இணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்


    உலகின் மிகப்பெரிய இரயில்வேத்துறையில் தொடர்ந்து விபத்துகள் - 

    லாலுவிற்குப் பிறகு வந்த ரயில்வே அமைச்சரின் கவனக் குறைவா அல்லது லாலுவின் காலத்தில் எல்லா இடங்களிலும் பணியில் நிரப்பப் பட்ட  பீகார் நண்பர்களின் கவனக் குறைவா – அல்லது இவர்களின் எப்போதையக் கவனக் குறைவையும் மீறி இரயில்கள் விபத்தில்லாமல் தப்பிக்கின்றனவா - நமக்குத் தெரியாது.

    ஆனால் நம் அரசுக்கும் ஓட்டுனர்களுக்கும் உயிரின் மதிப்பைப் பற்றி கவலை இல்லை என்பது மட்டும் தெரிகிறது. விபத்து நடந்தவுடன் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் – திடீர் சோதனை – கூட்டங்கள் – விபத்து நடந்தவுடன் சில ஆயிரங்கள் இறந்தவர் குடும்பத்துக்கு – பிறகு யார் குற்றவாளியோ அவர் சஸ்பென்ட் – அப்புறம் ஒரு விசாரணைக் குழு – அதன் முடிவு வருவதற்குள் அடுத்த விபத்து – சில அவசர சட்டம் – சில நாட்களுக்கு கெடுபிடி – பிறகு வேறு ஏதாவது பிரச்சனை – அதற்கான விசாரணைக் குழு – கொடுமை சார் ...

    மனித உயிர் அவ்வளவு கேவலமானதா? நிற்கின்ற இரயிலில் எவனாவது மோதுவானா  - சிவப்பு விளக்குகள் என்ன ஆனது? – ஒரு நிலையத்தைக் கடக்கிற போது ஓட்டுனரின் கண்கள் முன்னே இருக்க வேண்டாமா? நாம் எல்லாவற்றையும் “take it for granted” – என எடுத்துக் கொள்கிறோம். என்னை நம்பி இத்தனை உயிர்கள் இருக்கின்றன என்பதை ஓட்டுனர், நிலைய இயக்குனர், ... ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பு பற்றி உணர வேண்டாமா? 

    தங்கள் மேல் அளவுக்கு மீறிய நம்பிக்கை. எல்லாம் ஒழுங்காக நடக்கும் – எல்லோரும் கடமை உணர்வோடு பணியாற்றுகிறார்கள் – எல்லோரும் கவனமாகக் கடமை உணர்வோடு இருப்பார்கள் – எல்லாம் சரிதான் ஆனால் ஓட்டுனர்கள் மட்டும் எப்போதும் தன்னைத் தவிர வேறு யாரும் கடமை உணர்வோடு பணியாற்றுவது இல்லை என்று தான் எண்ண வேண்டும் – இதைத் திமிர் என்றாலும் பரவாயில்லை – தான்மட்டும்தான் கவனத்தோடு வண்டி ஓட்ட வேண்டும் வேறு யாரும் கவனத்தோடு வண்டி ஓட்டுவதில்லை என்றுதான் நினைக்க வேண்டும் – இதைக் கொழுப்பு என்றாலும் பரவாயில்லை – கடமை உணர்வும் பொறுப்புணர்வும் நிமிடம் அதிகரிக்காத வரை சாலைகளாகட்டும். தண்டவாளங்களாகட்டும் விபத்துக்கள் என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் –

    தெரியாமல் நடப்பதுதான் விபத்துகள் – தெரிந்தே நடந்தால் ...

    தொடர்புடைய கட்டுரைக்கு கீழே சொடுக்கவும்.

    சாலை மரணம் நவீனக் கொடை


    "ஒரு வார" நோய் 

    1.6.10

    சாலை மரணம் - நவீன கொடை

    முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.

    முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.

    மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.

    1. சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?

    2. சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. இந்தியன் படம் வந்தபிறகு - ஒவ்வொருவனும் தங்களது உரிமம் எப்படிப் பெற்றார்கள் என்பதை நினைவு படுத்தி அதோடு அனைவரும் RTO அலுவலகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவியும் செய்தது. ஆனாலும் இதுவரையும் RTO அலுவலகங்கள் அப்படித்தான் இருக்கின்றன. படிக்காதவர்களுக்கு உரிமம் மறுக்கப் படக் கூடாதுதான் - ஆனால் விதிகளே தெரியாமல் உரிமம் பெறலாம் என்கிற நிலை இருந்தால் எப்படி விதிகளை கடைப் பிடிப்பதைப் பற்றி பேச முடியும்?

    3. சரி. சாலைகளில் விதிமுறைகளைக் கடைபிடிக்காத ஓட்டுனர்களை எப்படி சரிசெய்ய முடியும். காவல் துறை நண்பர்கள் - மிகவும் பாராட்டப் பட வேண்டியவர்கள். சென்னை சாலைகளில் - அனல் பறக்கும் வெயிலிலும் தார்ச் சாலையின் நடுவில் வியர்க்க வியர்க்க நிற்கும் அவர்களையும் மீறி
    தங்கள் விருப்பம் போல வண்டி ஓட்டுபவர்களை நாம் என்ன செய்ய முடியும். எல்லாருக்கும்தான் அவசரம்.

    4. அரசுப் பேருந்துகளை அதிகப் படுத்தி மக்கள் அவைகளைப் பயன்படுத்த ஊக்கப் படுத்த வேண்டும். சென்னையைச் சுற்றி எத்தனை கல்லூரிகள், எத்தனை தொழிற்சாலைகள் - ஒவ்வொன்றிற்கும் எத்தனை சொகுசுப் பேருந்துகள் - சென்னையின் போக்குவரத்து இப்படி இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் இப்படி ஆயிரக்கணக்கில் இயங்கும் பேருந்துகள்தான். இத்தகைய பேருந்துகளை தாம்பரம், பூந்தமல்லி எண்ணூர் போன்ற இடங்களுக்குப் பிறகு அனுமதிக்கக் கூடாது. அரசுப் பேருந்துகளையோ அல்லது மின்சார இரயிலைப் பயன்படுத்தி சென்னையின் போக்குவரத்து கூட்டத்தைக் கொஞ்சம் குறைக்கலாம். விதிகளை மீறி ஓட்டுவதிலும், தடம் மாறி ஓட்டுவதிலும், சொகுசுப் பேருந்து என்பதனால் அதிக இட ஆக்கிரமிப்புச் செய்வதிலும், அரசுப் பேருந்து நின்று செல்கிற இடங்களில் எல்லாம் இவர்களும் அவ்விடங்களை ஆக்கிரமிப்புச் செய்து...ஆனால் அவர்களிடமிருந்து வரும் பணத்திற்காக அரசு அதைச் செய்யாமல் இருக்கலாம் ?


    5. எப்படித்தான் அனைவரையும் சாலை விதிகளை மதிக்கச் செய்வது - சாலை விதிகளை மதித்தால் விபத்துக்கள் தானாய் குறையும். ஒழுங்காகத் திட்டமிடுவது, நேரத்தோடு கிளம்புவது, சிறிது தாமதமானாலும் அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போடும் தைரியம், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதனால் நமது பாதுகாப்பை முதன்மைப் படுத்துவது ... நாம் நினைத்தால் முடியும் - அரசு நினைத்தால் முடித்துக் காட்டலாம்...

    சாலை விதிகள் மதிக்கப் பட்டால், சாலைகள் நன்றாய் இருந்தால், நாடும் வளம் பெரும் - நாமும் வளம் பெறலாம்.