அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.12.13

ச. சசிமா .....


°சச்சின்
அளவுக்கு அதிகமாக புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கார் இனிமேல் விளையாட மாட்டாரே என்கிற கவலை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. இது என் தொண்டைக் குழியை இழுக்க இதைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு பல வருடங்களாகி விட்டது. (அப்பவே அவர் ரிட்டயர்டு ஆகியிருக்கனுமான்னு கேள்வி கேக்கப்புடாது).

அவரின் இறுதி விளையாட்டைக் கூட செய்தியாய்த்தான் படித்தேன். ஏதாவது ஒரு ஹீரோ பின்னால் போவதை நம்மால் தடுக்க முடியவில்லை. விடயம் அதுவல்ல.
இந்தியப் பத்திரிக்கைகள் போலவே பாக்கிஸ்தானியப் பத்திரிக்கைகளும் சச்சினை மிகவும் புகழ்ந்து எழுதியதைப் பார்த்த தாலிபான் - இனிமேல் சச்சினைப் புகழ்ந்து எழுதவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனக்கென்ன பயமா இருக்குன்னா நானும் தான் இந்தியப் பத்திரிக்கைகள் அளவுக்கு அதிகமாக சச்சினைப் புகழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். என்னையும் தலிபான் என்று நினைத்து விடுவார்களோ?

° சங்கரராமன்
சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஏறக்குறைய எண்பத்தி ஒரு நபர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி, ஆவணங்கள் மறைக்கப்பட்டு (அப்படி என்று சில பத்திரிக்கைகள் சொல்லுகின்றன) அனைவரும் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர். பிறழ் சாட்சிகளாவது குற்றம் என்றே இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால் தனியாகவோ ஒட்டு மொத்தமாகவோ அந்தர் பல்டி அடிப்பதெல்லாம் குற்றம் இல்லை என்று இப்போதுதான் தெரிந்திருக்கிறது.  அவர்கள் எல்லாம், உயிருக்குப் பயந்தோ, பணம் விரும்பியோ தங்கள் சாட்சியங்களை மாற்றிக் கொள்ள வில்லை. உண்மையை மட்டுமே சொன்னார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும், மறதி இருப்பது உண்மை என்றும், தமிழக மக்கள் அனைவரையும் போல, நான் நம்புகிறேன்.

எண்பதுக்கும் மேற்பட்டோர் மாற்றி சொல்லி பலரை விடுதலை செய்தததும், ஒரு அதிகாரி வாக்கு மூலத்தை மாற்றி எழுதி பல பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதும் இந்திய நீதித் துறைக்கு அழகல்ல. பேரறிவாளன் உட்பட பலர் இன்னும் உள்ளே இருப்பது நமக்குத் தான் அவமானம். 

ஒன்று இப்போதும் புரிகிறது. அரசும், அதிகாரமும், சேர்ந்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இவை இரண்டே போதுமானது.


° சிக்கியது - (பணமல்ல) 
ஒவ்வொரு ஆண்டும்  - அதாவது ஓர் ஆண்டு மட்டும், ஆர்.டி.ஓ சோதனைகளில் 22,000 கோடி லஞ்சம் பெறப் பட்டிருக்கிறது என்று ஒரு நிறுவனம் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட ஓர்  ஆய்வு தெரிவிக்கிறதாம். நான் சொல்லலை டைம்ஸ் ஒப் இந்தியா சொல்லுகிறது. 

"சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது, சாட்சிகளான ஓட்டுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக பிறழ்வதை கருத்தில் கொண்டு அனைத்து அதிகாரிகளையும் விடுதலை செய்கிறோம்." 

° மங்கள்யான் 
மங்கள்யான் - மங்களகரமான பெயர். [எனக்கென்னமோ மங்கள் அண்ட் மங்கல் மெட்டல் மார்ட் என்கிற வானொலி விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது.] 
மங்கள்யான் - செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பியிருக்கும் விண்கலம். செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு அங்கு சென்று சேரும் என்று சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து இந்தியா காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியே. அதுவெல்லாம் கூடாது என்று கோபித்துக் கொள்ள நாம் யார்? சொன்னால் நாம் பிற்போக்கு வாதி என்று சொல்வதற்கு விளக்கமாத்துக் கட்டையை  தூக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கில் ஓடிவருவார்கள்.  RTO காரர்களிடம் லஞ்சத்தில் சிக்கிய பணத்தை மீட்டாலே வருடத்திற்கு 42 விண்கலங்களை இந்தியா அனுப்ப முடியும். அதனால அதெல்லாம் கேட்கலை.
ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புறது போல அது போல ஒரே ஒரு போட் இந்திய இலங்கை கடற்பரப்புக்கு அனுப்புங்க. அதைத்தான் கேட்குறோம். இன்னைக்கு நினச்சு உடனே அனுப்பினா அது இன்னைக்கே போய் சேரும். செப்டம்பர் 2014 வரை காத்துக்குட்டு இருக்க வேண்டியது இல்லை பாருங்க. அதை விட்டுட்டு இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்று சொல்றீங்களே என்ன நியாயம்?

°°°°°°°°°°​​


அடுத்த பதிவு 
தமிழ் கூறும் நல்லுலகில் 
பின்நவீனத்துவக் கூறுகளை உள்ளடக்கி 
கதை கட்டுரை எழுதும் 
தமிழ் புத்திரன் அ. பிரபாகரனின் - 
(கை) எழுத்தும் நானும் 
என்கிற கட்டுரை... 
எதிர் நீச்சல் என்கிற படத்தின் கரு 
எங்கிருந்து கிடைத்தது என்பதை 
விவரிக்கும் கட்டுரை.

(விளம்பரம்)
இதை தினமணி, தினகரன் 
மற்றும் அனைத்து நாளிதழிலும் வரும் 
விளம்பரமாக நினைத்துக்கொள்ளவும்.
°°°°°°°°°°

30.7.12

பேசும்படம்

 சில சமயங்களில் படங்கள் நமது எழுத்தை விட அதிகமாக பேசும்...

முதல் படம் நேற்று டோக்கியோவில் அணு உலைகளுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்..




விபரம்: http://kgmi.com

இந்த கூட்டம் அங்கேயே பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது.

மேலும் விபரம்:
http://www.dianuke.org/



விபரம்:

http://www.theaustralian.com.au/

31.12.11

யார் கதாநாயகன்? அறிவியலா ஆண்டவனா?

இந்த ஆண்டின் இறுதி பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் புதிய ஆண்டின் தொடக்கத்தில் நமது நம்பிக்கை யாரை, எதைச் சார்ந்தது இருக்க வேண்டும் என்பதற்கான தொடக்கமாகவும் இருக்கலாம். 
அறிவியலையா அல்லது கடவுளையா?


அறிவியல் மட்டும்தான் மக்களை மூட நம்பிக்கையிலிருந்து காப்பாற்றுகிறது என்று நோபல்  விஞ்ஞானி வெங்கட்ராமன் நேற்று சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நரசிம்மன் நினைவுச் சொற்பொழிவில் பேசினார். இதில் சொல்லப்பட்டிருக்கிற ஒவ்வொரு பெயரும் மிக முக்கியமானது. நோட் த பாய்ன்ட்.

அதில் மிக கவனிக்கப் பட வேண்டியது என்ன வென்றால் எந்த நட்சத்திரங்களும் நம் வாழ்வில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பற்றி எல்லாம் நமக்குக் கேள்வி இல்லை. அவர் என்ன சொல்கிறார் - அறிவியல் மட்டும்தான் ஆதரத்தோடு சொல்கிற போது அதை ஏற்றுக் கொள்கிறது. 
அவரே கொடுத்திருக்கும் உதாரணம் - முன்னாடி வைட்டமின் சி சாப்பிட்டா  சளி புடிக்காது கான்சர் வராதுன்னு புகழ் பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் அறிவித்தார். ஆனால் அது இப்போது ஆதார பூர்வமாக மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே நாங்கள்தான் புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம்.
அட!

நினைச்சா ஆதார பூர்வமா வைட்டமின் சி தேவைன்னு சொல்லுவீங்க அப்புறம் வேற ஆதாரம் வந்த உடனே அது இல்லை இதுன்னு சொல்லுவீங்க.. புது ஆதாரம் வந்தா இல்லை இது தப்புன்னு சொல்லுவிங்க.. 
அணு நல்ல கண்டு பிடிப்புன்னு சொல்லுவீங்க அப்புறம் கொஞ்ச நாள்ல ஆமா அதுல கதிர் வீச்சு நமக்கு நல்லதில்லைன்னு சொல்லுவீங்க... 
செல் போன் நல்ல கண்டுபிடிப்புன்னு சொல்லுவிங்க அப்புறம் அத பயன் படுத்துரதுனால ஒன்னும் ஆகாதுன்னு ஆதாரப் போர்வமா சொல்லுவீங்க .. இன்னும் ஒருத்தர் உடம்புக்கு நல்லதில்லைன்னு ஆதாரப் பூர்வமா சொல்லுவார்...

இப்படி நீங்க சொல்றதப் பார்த்தா வளர்ச்சி மாதிரி தெரியலையே... உங்களை நம்பி நாங்க இன்னும் வைட்டமின் சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப என்னடான்னா - பெருமாளே நீதான் காப்பத்தனும்.
 *********
பெருமாளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? 
இந்த வருஷம் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் வருமானம் மட்டும் ஆயிரத்து எழுநூறு கோடியாம். இப்ப நான் என்ன பண்றது? திரு வெங்கட்ராமன் சொல்றதைக்  கேக்குறதா அல்லது பெருமாளைக்  கேக்குறதா?
ஏன்னா "இஸ்ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் விண்வெளியில் செயற்கைக் கோளை ஏவுவதற்கு முன்பாக ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாராம்".

செய்தியில கடைசிப் பாராவைப் படிங்க!


அப்ப, ஆன்றோர்களே சான்றோர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நீங்களே சொல்லுங்கள் - ஹூ இஸ் தி ஹீரோ? ஹூ இஸ் தி ஹீரோ?

திரு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களே 
நீங்கள் முதலில் செல்ல வேண்டியது  ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு: சொல்லவேண்டியது திரு இராதாகிருஷ்ணனிடம்... 


[இராமகிருஷ்ணனும் இராதா கிருஷ்ணனும் - 
-ன்னு தலைப்பு வைத்திருக்கனும்
மிஸ்ட்]


கொசுறு:
தமிழக பக்தர்கள்! ஐயப்பன் கோவிலுக்கு போவதற்கு பதில் பழனிக்குப்  போவதற்கு முல்லைப் பெரியாறு உதவுனமாதிரி திருப்பதிக்குப் போகும் பண பக்தர்கள் திருத்தனியோட முடிச்சுக்கிட்டா நல்லா இருக்கும்.

கொசுறு:

அறிவியலை ஏற்றுக்கொள்ளுவது தவறு என்றோ அல்லது பக்தியும் மூட நம்பிக்கையும் சரி என்பதையோ இந்தப் பதிவு வெளிப்படுத்தவில்லை. அறிவியலில் உறைந்திருக்கும் முரணை வெளிப்படுத்துவது - அவ்வளவே.

நன்றி: தினமணி செய்திகளுக்காக...


11.11.11

11/11/11 அன்று 11 மணி 11 நிமிடம் 11 வினாடி ["நேர அரசியல்" ]

பதினோரு மணி பதினோரு நிமிடம் பதினோரு வினாடி - இது இந்த ஆண்டின் இன்றைய சிறப்பான தருணம் என்று எப்படியெல்லாமோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில நடிகர் நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் யாரென்பது உங்களுக்கே தெரியும்.

  • உண்மையில் அந்தச் சிறப்பை எந்த ஆண்டுகளும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் வருடங்களைக் கணக்கிடுவது என்பது வரலாற்றில் மிகவும் தாமதமான ஒன்று.  இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பண்பாட்டை சார்ந்த நண்பர்களும் அவர்களுக்கென்று ஒரு காலண்டரை வைத்திருக்கிறார்கள். எனவே கணக்கிடுதல் முறையில் மிகவும் பழமையான முறை கொண்டிருக்கிற காலண்டர் அடிப்படையில் வேண்டுமானால் இதைப் பற்றி யோசிக்கலாம்.
ஆனால் அது இன்னும் பல்வேறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணமாக ஆகலாம்.

  • சரி இப்போது நாம் பின்பற்றுகிற காலண்டர் முறை என்பதையே உண்மை என்று கணக்கில் கொண்டாலும், இப்படி எல்லாம் ஒன்று ஒன்றாக வந்தது என்றால் ஜனவரி ஒன்று, பதினொன்றாம் ஆண்டு; அந்த ஆண்டே  நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மற்றும் பதினொன்றாம் தேதி.... : அல்லது நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு;
இன்னும் மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆயிரத்து நூற்றிப் பதினொன்றாம் ஆண்டு: நவம்பர் பதினொன்று...

மற்றதெல்லாம் உல்டாதானே -
நாமாக இரண்டாயிரத்திப் பதினொன்றை வெறும் பதினொன்றாகச் சுருக்கி விட்டு -
அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும்தான் நவம்பர் வருகிறது - வெறும் பதினொன்று பதினொன்று என்று ஏதாவது சிறப்பு உண்டா?
சரி ஆண்டே வேண்டாமே: ஒவ்வொரு மாதமும் பதினொன்றாம் தேதி வருகிறது.
ஒவ்வொரு நாளும்தான் பதினோரு மணி வருகிறது - இரண்டு முறை...

  • என்ன ஒரே பிரச்சனைன்னா --- இந்தத் தேதி வெள்ளிக்கிழமை வந்தாதான் பிரச்சனை: ஏன்னா அன்னைக்கு ராகு காலம் பத்து முற்பதிலிருந்து பனிரெண்டு வரையாம்ல.

  • ஆஹா - இன்னைக்கு வெள்ளிக் கிழமை - பதினொன்னு பதினொன்னு பதினொன்னு பதினொன்னு நல்ல நேரம்னு நினைச்சேன்!

ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க?

  • இல்லைன்னா சிறப்பான நேரம் இரவு பதினோரு மணி பதினோரு நிமிடம்னு நினைச்சுக்குங்க...

கொசுறு:


"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"

                                                                                        இது "சம்பந்தரின் மாலை மாற்று" 
[இதை நீங்கள் கீழிருந்தும் படிக்கலாம் - அதே வார்த்தைகள் அதே பொருள்]

இதன் அர்த்தம் - 
"சீர்காழியில் குடிகொண்டு, பாம்புகளை அணிகலனாகக் கொண்ட, வீணை வாசித்து கொண்டிருக்கும் ஒப்பிடமுடியாத சிவனே - மக்களின் குறை தீர்ப்பவனே " என்று பொருள் என்று கருதுகிறேன்.


எனது மொழிபெயர்ப்பு முழுமையானதாக இல்லை...


மேலும் விபரம் அறிய: 



10.11.11

நிலவும் ஜூபிடரும் அருகருகே பிரகாசமாய்

ஒரு மாறுதலுக்காக - அறிவியல்

நிலா, சந்திரன், பௌர்ணமி, பூரண நிலவு என்று முழு நிலவு பல பெயர்களிலும் அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் உள்ள முழு நிலவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

இன்று இரவு ஒன்பதாம் தேதி [அநேகமாக அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இன்னும் இரவு வரவில்லை] முழு நிலவும் ஜுபிடரும் [வியாழன்] அருகருகே இருக்கும் அற்புதமான காட்சியைக் கண்டு களிக்கலாம். நண்பர் ஒருவர் சொன்ன பிறகே நான் அதைக் கவனிக்க நேர்ந்தது. எனது அறையில் இருக்கும் மிகப் பெரிய சன்னல் வழியாக அந்தக் காட்சியைக் கண்டுகொண்டே எழுதுகிறேன்.

சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு என்பதை நாம் படித்திருந்தாலும், இப்போது எட்டு கிரகங்கள் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள் [நமது பள்ளிக் கூடங்களில் இப்போது என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்?]. புளூட்டோ ஒரு கிரகம் இல்லை என்று சொல்லுகிறார்கள். இருக்கிற எட்டு கிரகங்களில் மிகப் பெரிய கிரகமான ஜுபிடர் நிலவுக்கு அருகில் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

நவம்பர் மாத முழு நிலவை Hunter 's மூன் என்று அழைக்கிறார்கள். பல பெயர்கள் அமெரிந்தியர்கள் இட்ட பெயர்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு மாதத்திற்கான முழு நிலவுக்கும் பெயர் உண்டு. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் அதற்கான பெயர்கள் உண்டு என்றே நினைக்கிறேன்.

எனது சிறிய காமெராவில் எடுத்த புகைப் படங்கள்.
பார்க்கத் தவறியர்கள் பார்ப்பதற்காக.





இதைப் பற்றிய ஆராய்ச்சி நிறையச் செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள் முயலலாம்.

1. http://earthsky.org/tonight
2. http://en.wikipedia.org/wiki/Full_moon