மரண தண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரண தண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.2.14

எல்லாம் சிவமயம் - குடியரசு - 2

இது இந்தியக் குடியரசும் அரசியல் அமைப்பும் - 1 என்ற முந்தைய தொடர்ச்சியாக படிக்க விரும்புவோர் இந்தச் சுட்டியை அழுத்தவும்.

உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கடந்த ஏழு மாதங்களுள் மிக உன்னதமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே ஜனவரியில் அவர் வழங்கிய தீர்ப்பு நேற்று வழங்கிய தீர்ப்பை முன்னறிவித்ததாகவே கொள்ளலாம். ஒரு குடியரசின் மிக முக்கியமான அம்சம் என்பது நீதித் துறை. அது மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்கும் போதுதான் மக்களுக்கு குடியரசின் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.

ஏற்கனவே பேரறிவாளனை பொறுத்த வரை, அவரது சாட்சியம் மாற்றி எழுதப்பட்டு அவரையும் குற்றவாளியாக்கிய உண்மை, சாட்சியம் வாங்கிய அதிகாரியால் ஒப்புக்கொள்ளப் பட்டபோதே, நீதி மன்றமே தானாக அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, குறைந்த பட்சம் பேரறிவாளனையாவது விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது நடக்க வில்லை என்றாலும், இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட கருணை மனு காரணமாக மரண தண்டனை ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்கிற போது - அது கொஞ்சம் நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது. 

தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களைப் போல நீதிபதிகள் அனைவரும் நேர்மையோடும், துணிச்சலோடும் இருப்பது அவசியமாகிறது. நிரபராதிகள் ஒரு போதும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுதான் நீதி தேவதையின் அறைகூவலாக இருந்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் நிரபராதிகள் போல வெளிவிடப் படுவதும் தான் குடியரசின் மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.

எப்போது ஒரு நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து விசா மோசடி செய்த ஒரு தேவயானிக்காக தவம் இருந்து அவரை வரவழைத்து அதைக் கொண்டாடியதோ, அவருக்கு பதவி உயர்வு கொடுத்ததோ அப்போதே நாம் உண்மையையும் நீதியையும் தூக்கிப் பிடிக்கிறோமா இல்லையா என்பது உலகுக்கு தெரிந்து விட்டது. எப்போதும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டு வருகிறதோ என்கிற சந்தேகத்தை இந்தத் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது. இது போல தொடர்ந்து நீதி பட்சத்தில் உண்மையான குடியரசாக இந்தியா மலர வாய்ப்புள்ளது.

இந்த மரண தண்டனை ரத்து ஒரு சிலரால் கேலி செய்யப் படலாம். திரு ராகுல் காந்தி போல - "ஒரு பிரதமரைக் கொன்றவர்களுக்கே மரண தண்டனை ரத்து, விடுதலை என்றால் சாதாரண மக்களைக் கொன்றவர்களுக்கு என்ன நடக்கும் என்று பயந்து போயிருக்கிறார். அதிகாரம் தனது கையில் இருந்து, சாட்சியங்களை மாற்றிய அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு நிரபராதியை 23 ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்த இவர்களை - என்னவென்று கேள்வி கேட்பது? இவ்வளவு பேசப்பட்ட வழக்கிலேயே நீங்கள் சாட்சியங்களை மாற்றியிருக்கிறீர்களே - யாருக்கும் தெரியாத வழக்குகளில் உங்களின் கை வரிசை எப்படி இருந்திருக்கும் என்று கேட்கலாம் அல்லவா?

எது எப்படியெனினும், இப்போது இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் அம்மாவுக்கு இருப்பதால், எல்லாம் சிவமயத்திலிருந்து, அம்மாமயத்திற்கு மாறியிருக்கிறது. ஒரு சிலரை விடுவிப்பதாலேயே, குடியரசின் மீதும் அரசியல் அமைப்பின் மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடாது.

முன்னால் நீதிபதி சுரேஷ் குஜராத் கலவரத்தில், தங்கள் வஞ்சம் தீர்க்க வருபவர்களை அனுமதியுங்கள் என்று சொன்னதற்கான 'ஒலிப்பதிவு' இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதைத் தெரிவித்த திரு பாண்ட்யா சுட்டுக் கொள்ளப் பட்டதும் அனைவருக்கும் தெரியும். சஞ்சீவ்பட் என்கிற போலிஸ் அதிகாரி திரு மோடி இவ்வாறு சொன்னார் என்று சொன்னதும், அவரை வேறு சில காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்ததும் அனைவரும் அறிந்ததே. இது போல எத்தனை வந்தாலும், அரசியல் வாதிகள் விடுவிக்கப் படலாம்... ஆனால் சதாசிவம் போல சில உண்மையான நீதிபதிகள் நேர்மையோடு செயலாற்றும் வரை நீதி தாமதமானாலும், காப்பாற்றப் படலாம் என்கிற நம்பிக்கையையும் தான் குடியரசின் மீதும் வைக்க வேண்டியிருக்கிறது.



20.12.11

போராட்ட வருடம் - தமிழ் கழுகுப் பார்வை - 2011 இரண்டு

இந்த ஆண்டு தமிழகத்தைப்  பொறுத்தவரை 
நான்கு  போராட்டங்களைக் கண்டிருக்கிறது. 
அவை நான்கும் மிக முக்கியமான போராட்டங்கள்.

முதலாவது - தமிழக மீனவர் போராட்டம்


"தண்ணிரில் பிழைக்க வைத்தான் பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்" என்று ம. கோ. இராமச்சந்திரன் பாடும் பாடல் வந்து பல வருடங்கள் ஓய்ந்து விட்டது. தண்ணிரில் பிழைக்க மட்டும் இல்லை, தண்ணிரில் சுடப்பட்டு இறந்து மிதக்கும் நிலையும் இருக்கிறதே என்பதில்தான் சோதனை அடங்கியிருந்தது. இயற்கையின் சீற்றத்திற்கு மத்தியில், போராடி வாழும் மீனவர்களுக்கு சிங்கள இனவெறியர்கள் எல்லைப் பிரச்சனைஎன்று கொன்று குவித்த மீனவர்களின் கண்ணிற் வாழ்க்கை கேட்பார் யாருமின்றி - தமிழகம் இந்திய எல்லைக்குள் இருப்பது என்பதை மறந்தே வாழ்கிறார்கள் நாடாளும் அதி புத்திசாலி நண்பர்கள்.

கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி மீன் பிடிக்கச் சென்ற சிலர் மீது கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடித்திருக்கிறது இலங்கை அரசு. கேட்பார் யாருமில்லை. 

பாதிக்கப் படும் பகுதிகள். ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டினம் என்று இலங்கையை ஒட்டிய பகுதிகள் - இன்னும் சொல்லப் போனால் - தென் தமிழக கடற்கரையோரப் பகுதிகள்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இரண்டாவது - இடிந்த கரை போராட்டம்


"தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்.' என்று கடற்கரையை ஒட்டியவர்கள் மட்டுமல்ல - கடற்கரை தாண்டிய மக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒரு மிகப் பெரிய அரக்கன் எப்போதும் தூக்கி நிறுத்திய அணுகுண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அது எப்போது வெடிக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள இராணுவமாவது ஏ.கே. 47 என்கிற நிலையில் சிலருடைய வாழ்வோடு முடிந்து போகிற ஒன்று. ஆனால் இது எப்ப வெடிக்கும் எப்படி வெடிக்கும், எத்தனை பேரைக் கொண்டு போகும், எத்தனை வருடங்களுக்கு இருக்கும், எத்தனை தலை முறைக்கு அந்த விளைவுகள் எதுவும் தெரியாது...

இது மட்டுமல்ல - இந்தப் பிரச்சனையோடு பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விவகாரங்கள் வெளியில் வந்த பிறகுதான் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  வெளிவரும் கதிர் வீச்சுகள் பற்றிய உண்மையும் அதோடு சேர்ந்து எந்த அளவிற்கு தமிழகத்தின் வடக்குப் பகுதியும் ஆபத்தில் இருக்கிறது என்கிற உண்மை வெளிவந்தது. ஆனாலும் இந்தப் போராட்டங்களைக் கடுமையாக எதிர்பவர்களும் இல்லாமல் இல்லை.

கல்பாக்கம் பகுதியில் உள்ள கதிர் வீச்சு அபாயங்கள் குறித்து இங்கே அறியலாம்.

பாதிக்கப் படும் பகுதிகள் - தூத்துக்குடி, அதோடு சேர்ந்த கிராம நகரப் பகுதிகள். இவைகளில் தான் ஏற்கனவே பல்வேறு நச்சுப் பொருள்கள் காற்றில் கலந்து விளைவை உருவாக்கும் ஆலைகள் இருப்பதும் கவனிக்கப் பட வேண்டியிருக்கிறது.

மூன்றாவது -  அணை காக்க கேரளாவிற்கு எதிரான போராட்டம்

இதுவும் தண்ணீரை மையப் படுத்திய போராட்டமே - தண்ணீர் இல்லாமல் இறக்க வைக்கிற கொடுமை. ஒவ்வொரு முறையும் தமிழக கேரளா உறவில் ஏதாவது விரிசல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இதைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியாகிவிட்டது.

பாதிக்கப் படும் பகுதிகள் - மீண்டும் தென் தமிழகமே....




முக்கியமான மற்றொரு போராட்டம்
மரண தண்டனைக்கு எதிரானது






மற்ற மூன்று போராட்டங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாதது போலத் தோன்றலாம். ஆனால் இந்த மரண தண்டனை எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழர்கள் என்பதால் - நியாயமற்ற முறையில் வழங்கிய தீர்ப்பு என்கிற வகையில் இது முன்னெடுக்கப் பட்டது.

தமிழக மீனவர்கள் என்பதனால் அரசு எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை.  இடிந்த கரையிலும் ஏற்கனவே கல்பாக்கத்தில் தொடங்கிய அந்த அதே கதிர்வீச்சை தமிழகத் தின் தென் பகுதிகளுக்கு பரப்புவதில் இன்னும் ஆர்வத்தோடு இருக்கிற மத்திய அரசு... முல்லைப் பெரியாறு அணையிலும் - வாய் திறந்த ப. சி கூட வாபஸ் பெரும் விதத்தில் மத்திய காங்கிரசும் கேரளா காங்கிரசும் கூட்டணியில் இருக்கிறது. இவைகள் எல்லாவற்றிலும் தமிழினத்திற்கு எதிரான போக்கே இருக்கிறது என்பதைப் பார்க்கும் போதே இந்த கடைசிப் போராட்டத்தின் உண்மை உங்களுக்குப் புரியலாம்.


இதனால் அறிவது என்னவென்றால்:
இந்த ஆண்டு தமிழர் அழிப்பை பல்வேறு வழிகளில் பலரும் முயற்சி செய்வது போல தமிழர்களின் விழிப்புணர்வும் ஆச்சரியப் பட வைக்கிறது.
எது எப்படியெனினும் - தமிழகத்தை சுற்றி ஆபத்து காத்துக் கொண்டே இருக்கிறது.

இரண்டாயிரத்துப் பதினொன்று - போராட்ட வருடம்

ஆபத்து அதிகமாகிக் கொண்டேயும் இருக்கும் வருடம்.





எத்தனை போராட்டங்கள் என்றால் என்ன தமிழின அழிப்புத் தொடருமா அல்லது வாழ்வு விடியுமா?.


கொசுறு:
இந்த ஆண்டு தொடங்கிய முதற் போராட்டம் தொடங்கி அனைத்துப் போராட்டங்களும் இன்னும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு வேளை - தெலுங்கானா மாதிரி பிரிக்கும் போராட்டம்தான் தீர்வா?????


நன்றி:

அனைத்து புகைப் படங்களும் வலைப் பூக்களின் முகவரி கொண்டு அப்லோடு [தரவேற்றமா?] செய்யப் பட்டிருக்கின்றன. அந்தந்த வலை உரிமையாளர்களுக்கு நன்றிகள்.
தொடரும் ...

6.9.11

செல் வாங்கினால் மரண தண்டனை

மணி சங்கர அய்யர்  - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம்; ஆனால் இறக்கும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் - என்று மொழிந்திருக்கிறார்.

சுப்ரமணிசாமிக்கு இவர் எவ்வளவோ தேவலைதான். ஒரு விதத்தில் மரண தண்டனையே வேண்டாம் என்று கருதுவோர் இப்படி நினைப்பதில் தப்பில்லை. அப்படித்தான் மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் சொல்லுகிறார்கள். அதில் தப்பில்லை. சில பயங்கரவாதக் குற்றங்களுக்கான தண்டனை இப்படி இருப்பதில் தப்பில்லைதான். 

ஆனால் மீண்டும் மீண்டும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழக்கப்பட்டுள்ள இம்மூவருக்கும் என்பதைத் தான் தலைவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை - அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

 இரண்டு விதங்களில் நாம் இந்த மூன்று விவகாரங்களையும் பார்க்கலாம். ஒன்று அவர்கள் மூவரும் பயங்கர வாதிகள். எனவே அவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கான மரணதண்டனையை இறக்கும் வரையில் சிறையில் வைத்து தண்டனையை வழங்கலாம். பெரும்பாலனோர் அப்படித்தான் பார்க்கிறார்கள். இங்கேதான் இந்தப் போராட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லை.

முக்கியமான விடயம் - அவர்கள் இரட்டை ஆயுள் தண்டனையோ அல்லது இறக்கும்வரை சிறையில் இருக்கும் தண்டனையோ அல்லது மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கான தண்டனையை செய்திருக்கிறார்களா என்பதுதான்.

தனது மக்களையே கொன்று குவித்த சதாம் ஹுசைன் வழக்கு கூட மிகவும் வெளிப்படையாக நடந்தது - கேட்கப்பட்ட கேள்விகள் - அவரின் சாட்சியங்கள் என்று வெளியில் வந்தது. அனால் இவ்வழக்கு அப்படி நடத்தப் பட வில்லை.

 கேள்விக்குட்படுத்த வேண்டிய தலைவர்கள் பலர் வெளியில் இருக்கும் போது இந்தத் தண்டனை தவறு என்கிற விதத்தில்தான்.

விடுதலைப் புலிகள் இப்படிக் கருணைப் பிச்சை கேட்கலாமா என்று சாமி கேட்குறாரு. அவர்கள் விடுதலைப் புலிகள் இல்லை என்பதுதானே வாதமே! அது கூட அந்த ... அரசியல்வாதிக்குப் புரியவில்லை.

ஆனால் இந்த வழக்கில், நடந்த உள் கூத்துகளைப் பற்றி கேட்டுக் கேட்டு நமக்குப் போரடித்துப் போய் விட்டது.

ஒரு செல் [பாட்டரி] வாங்கிக் கொடுத்ததற்காக யாராவது மரண தண்டனை கொடுப்பார்களா?

எதற்கென்றே தெரியாமல் வாங்கிக் கொடுத்தாலும் தண்டனையா? அவர் தெரிந்தே வாங்கிக் கொடுத்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள் - அதற்காக தூக்குத்தண்டனையோ - இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? அப்படியே அதற்கென்று மரன தண்டனை வழங்கினால் எல்லாருக்கும் தெரிந்த விதத்தில் வழக்கு நடத்தி இதே தீர்ப்பை வழங்கலாமே.

  • இது இப்படியே போனால் நாளை நீங்கள் யாருக்காவது டீயோ அல்லது பன்னோ வாங்கிக் கொடுத்தால், ஒருவேளை சிறைப் பிடிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப் படலாம். 
  • அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவசர உதவி என்று ஒரு தமிழ் ஆள் என்று நின்றாலும், ஒருவரும் உதவி செய்ய மாட்டார்கள் - ஏனென்றால் நல்ல தமிழ் பேசினால் அவன் விடுதலைப்புலி அல்லது தீவிரவாதி. அதனால்தான் சாமி அப்படித் தமிழ் பேசுகிறார். அப்படி எல்லாரையும் நினைக்க வைக்க விரும்புகிறார்கள்.
  • இப்படியே போனால் தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்கக் கூட நம்ம ஊர்ல ஆள் இருக்காது.
  •  தமிழகத்துல ஓரளவுக்கு தெரியாத ஆள் என்றாலும் முன்பெல்லாம் உதவி செய்தார்கள் - இனி அவசர உதவிக்குக் கூட நமக்கு பாஸ்போர்ட் - ஐடெண்டி கார்டு தேவைப்படும் - அப்படியே இருந்தாலும் உதவுவதற்கு ஆளிருக்காது.




4.9.11

சுப்பிரமணி சாமி - யின் பேட்டி


சுப்பிரமணி சாமி - யின்  பேட்டி ஒன்று புதியதலைமுறை டிவி யில் ஒளிபரப்ப பட்டதை பார்க்க நேர்ந்த்தது. ஜெயின் கமிஷன் அறிக்கையில் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று இருக்கிறதே இன்னும் இந்த வழக்கு முடியவில்லை எனவே இந்த மூன்று பேருக்கும் தண்டனை வழங்கக் கூடாது என்று சொல்லும் போது -
அதெல்லாம் முடிஞ்சிடுத்து - அவா யாரும் என் மேல வழக்குப் போடலை - நீங்கல்லாம் இந்தியாவின் எதிரிங்க - துரோகிகள் - அப்படின்னு பச்ச பச்சையாப் பேசுறாரு -
இருபத்தி ஒரு வருஷம் சிறையில இருந்தா அதுக்கு என்ன பண்ண முடியும் - அப்படிங்கிறாரு. இப்படிப் பட்ட தியாகிக்கு கறுப்புப் பூனைப் படை வேற? இந்தியாவைப் பிரிக்கிறது யாருங்க?

சுப்பிர மணியன் வெர்சஸ் சுபவீ பாருங்க 



 இவரு இன்னமும் தமிழ் நாட்டுக்கு எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வந்துட்டுப் போறது மட்டுமில்லாமல் - தனக்கு பதவி கொடுத்த மக்கள் மேல சேற்றையும் வீசுறாரு.

இத எங்க பொய் சொல்றது?

30.8.11

காஞ்சிபுரத்துக் கண்ணகியா மதுரைச் செங்கொடியா?


நீதி
கேட்டு மதுரையை
எரித்தாளாம் கண்ணகி –
      
          நீதி
         கேட்டு உன்னையே
          எரித்தாயே செங்கொடி

ஆராயாமல்
வழங்கிய அநீதிக்கு
மதுரை எரிந்தது

          அடித்து/உதைத்து
          வழங்கிய அநீதிக்கு
          நீ எரிந்தாய்.

ஒருவன் இறந்ததற்காய் 
ஊரே எரிந்தது அன்று

          மூவர் உயிர் வாழ
          உன் உடல் எரிந்ததே இன்று

அன்றும் அநீதி
இன்றும் அநீதி [தமிழகத்தில்]
நீதி கேட்டவள்
அன்றும் பெண் இன்றும் பெண்.

நீ காஞ்சிபுரத்துக் கண்ணகிதான்.

ஆனால்
கண்கண்ட கணவனுக்காய்
ஊரை எரித்த கண்ணகியைக் காட்டிலும்
காணாத தமிழருக்காய்
உன்னையே எரித்த செங்கோடியே -
நீ ஆயிரம் மடங்கு மேல்.

நீதி கேட்டு
யாரேனும் வெகுண்டு எழுந்தால்
அடித்துச் சொல்லுவேன்
அவள் செங்கோடி என்று.

* * *

நீதிகேட்ட செங்கோடியே, உனக்கும் முத்துக்குமாருக்கும் ஏதாவது சொந்தமா? பந்தமா? இருவருமே உங்கள் உடலை போராட்டத்திற்கான ஆயுதமாக்க வேண்டும் என்றல்லவா எரித்திருக்கிறீர்கள். உயிர் கொடுத்துப் போராடும் திட மனம் படைத்தவர்கள் இப்படி ஒவ்வொருவராய் மாண்டு கொண்டிருந்தால் யார்தான் திடமாய் களத்தில் நிற்பார்? உறுதியாய் நின்று களத்தில் மடியாமல் உயிரை மாய்த்தல் தவறே.

தன்னைச் சாய்த்துக் கொள்ளுதல் சத்தியாக்கிரகம்தான் – அன்னா சாய்ந்தால் அது சத்தியாக் கிரகம் – நீ சாய்ந்தால் சத்தியாக்கிரகமா – பின்னால் மீடியாக்கள் வருமா? நீதி உரத்தக் கேட்குமா? யாரும் வரவில்லைஎனினும் இதுவும் சத்தியாக் கிரகம்தான். ஆனாலும் உறுதியாய் நின்று களத்தில் மடியாமல் உயிரை மாய்த்தல் தவறே.

நீ செய்தது சரியில்லைதான் – இருந்தால் இன்னும் நிறைய குரல் கொடுத்திருக்கலாம்தான் – எரிந்தே இங்கே பலருக்கு அது தெரியவில்லையே பேசியிருந்தால் கேட்டிருக்குமா?

* * *

எழுதி அடித்தது

[எரிந்து போகும் கண்ணகியை விட / எரிக்கும் கண்ணகிதான் தேவையோ?]

அடித்துதான் எழுத வேண்டும் போலிருக்கிறது.

* * *

காஞ்சிபுரத்துக் கண்ணகியே
கண்ணகி சிலையையே
மதிக்காதவர்
கண்ணகியின் உயிர் பிரிவை
மதிப்பாரா?

* * *



29.8.11

தூக்குத் தூக்கி - மரண தண்டனைக்கு எதிராக

செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி குறிக்கப் பட்டிருக்கிற மூன்று பேருக்கான மரண தண்டனை குறித்த விடயம் இது.

உலகம் முழுதும் மரண தண்டனை ஒழிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் மூவரின் மரணதண்டனையை நிறைவேற்றுவது நாம் நாகரிக உலகத்தில் நமது நிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும்.

தண்டனை என்பது சமூகத்தைப் பயமுறுத்துவதற்காகவோ அல்லது எதிர் காலச் சந்ததியினர் எப்படி வாழ வேண்டும் என்கிற படிப்பினைக்காக மட்டும் என்றால், நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோம்.

தண்டனை பல படி நிலைகளைக் கொண்டது. ஒரு ரூபாய் திருடுனவனுக்கும், ஒரு கோடி திருடுனவனுக்கும் வித்தியாசம் இருக்கு – அடிப்படையில் திருட்டு என்பது ஒன்றுதான் என்றாலும். கொலை செய்தவனையும் கொலைக்கு உதவி செய்தவனையும், எதற்கு என்று தெரியாமலேயே உதவி செய்தவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா. பல இஸ்லாமிய நண்பர்கள் இப்படித் தான் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் – சில உதவிகள் வேண்டும் என்று செய்யப் போய் / எதுக்குன்னு தெரியாம செய்யப் போய் கடைசியில மிகப் பெரியத் திட்டம் தீட்டி செயல் பட்டதா ...

கொலைக் குற்றம் புரிந்தவனுக்கு அதிக பட்ச தண்டனை மரணம் என்றால் – திரு. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் ஏற்கனவே இறந்து போய் விட்டார்கள். இறந்தவர்களைத் தூக்கில் இட முடியாது என்பதற்காக மற்றவர்களைத் தூக்கில் இடுவது – ஒரு கோடிக்கும் தூக்கு ஒரு ரூபாய்க்கும் தூக்கு என்கிற விதத்தில் வந்து விட்டால் நமக்கு நீதி மன்றங்களே தேவையில்லையே – வெறும் காவல் துறை மட்டும் போதும். இந்தத் தவற்றுக்கு இந்தத் தண்டனை என்கிற அளவில் சட்டம் இருந்தால் மட்டும் போதுமே. எதற்கு நீதி மன்றங்கள் எதற்கு ஒரே மாதிரி வழக்குகளுக்கு வேறு வேறு மாதிரியான தண்டனை. வெறும் காவல் துறை மட்டும் தண்டனையை நிறைவேற்றலாமே.

சரி - தண்டனையில் வித்தியாசம் இருக்கிறது என்றால் – இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கிப்பட்டிருக்கிற மூவருக்கும், கொலையில் ஈடுபட்ட மற்றவர்களுக்கும் தண்டனையில் வித்தியாசம் வேண்டாமா? பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்ற ஒருவனுக்கும் மரண தண்டனை – ஒருவரைக் கொன்றதற்காக பலருக்கு மரண தண்டனை என்பது சரியா?

அல்லது இந்த வழக்கு என்பது தடாச் சட்டத்தில் வராது என்கிற போது [இதைத்தான் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் எல்லாத் தலைவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்], எப்படி அதில் பெற்ற வாக்கு மூலம் மட்டும் செல்லு படியாகும்? – எப்படி அந்த சட்டத்தைப் பயன் படுத்தி பெற்றுக் கொண்ட வாக்கு மூலத்தைக் கொண்ட தீர்ப்பு செல்லுபடியாகும்?

அல்லது அப்படியே அவர்கள் குற்றவாளிகள் என்றாலும் – ஏற்கனவே ஏறக்குறைய இருபது ஆண்டுகள் சிறைச்சாலைக்குள் முடங்கிக் கிடந்த ஒருவருக்கு இப்போது மரணம் என்கிற தண்டனை வேறு தேவையா?

நண்பர்களே – உணர்ச்சிப் பிழம்புகள் கொதிக்க இதற்குப் பின் உள்ள அநியாயங்கள் குறித்தெல்லாம் யோசித்து இந்த மரண தண்டனையை எதிர்க்க வேண்டியதில்லை. மனித நேயம் உள்ள யாரும் எதிர்க்கலாம். இருபது ஆண்டுகள் சிறைக்குள் ஏற்கனவே ஆயுள தண்டனை முடிந்து இரண்டாவது ஆயுள் தண்டனையில் பாதியை முடித்தவர்களுக்கு மீண்டும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை தானே என்கிற பார்வையில் யோசித்தால் போதும். மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம்.

பின் குறிப்பு

மனிதன் நாகரிகம் அடைந்து விட்டான் என்பதற்கான மிகப் பெரிய அடையாளம் போர், மனித இழப்பு, வன்முறை இவைகளெல்லாம் வெறுக்கத் தக்கவை என்ற நிலையை அடைந்ததுதான். அந்த நிலையை மானிட சமூகம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்தான் அடைந்தது – அதற்குப் பிறகுதான் மனித உரிமையும், மனிதன் ஒருபோதும் ஒரு பொருளாக நடத்தப் படக்கூடாது என்பது மட்டுமல்ல மனிதன் ஒவ்வொருவனும் மதிப்பு மிக்கவன் என்கிற சித்தாந்தம் வெகுவாக ஊன்ற ஆரம்பித்தது.

பல போர்களுக்குப் பிறகு –உயிரிழப்பிற்குப் பிறகு ஞானோதயம் வந்து – எல்லாரையும் மதிக்க உறுதியோடு இருக்கிறார்கள். இது நடைமுறையில் எந்த அளவுக்குக் கடைப் பிடிக்கப் படுகிறது என்பதும், எந்த அளவுக்கு அரசியல் ஆதாயத்தோடு மனித உரிமைகள் மதிக்கப் படுகின்றன, மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கப் படுகின்றன என்பதும் விவாதத்துக் குள்ளாக்கப் படவேண்டியதுதான் – ஆனாலும் அதையும் தாண்டி இன்றைக்கு பல நாடுகள் சாதித்திருக்கிற மனித உரிமை பற்றிய கருதுகோள்களும் மனித மாண்பு மதிக்கப் பட மேற்கொண்டிருக்கிற முயற்சிகளையும் பார்க்கிற போது அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உண்டு. அதில் ஒன்றுதான் மரண தண்டனை ஒழிப்பு என்பது.

நாம் நாகரீகவாதிகளா?

இன்னுமொரு பின் குறிப்பு
அம்மாவை நம்பி எல்லாரும் பல ஐடியாக்கள் கொடுத்தார்கள் - அம்மா ஒரே வரியில் எனக்கு அதிகாரம் இல்லை அது பொய்ப்பிரச் சாரம் என்கிறார் - அம்மாவிடம் எதிர் பார்த்ததுதான்.