சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுதந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.8.16

அகண்ட பாரதம்

இந்தியாவின் எழுபதாவது சுதந்திர  தின நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நேற்றே பத்திரிக்கைகள் எங்கே எங்கே யார் யார் கொடி  ஏற்றுவார்கள் என்ற செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டன. இன்றைய செய்தித்தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றுகிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டிருக்கின்றன. நாளைய செய்தித் தாள்கள் எங்கே எங்கே யார் யார் கொடி ஏற்றினார்கள் என்ற செய்தியை வெளியிடும். அந்த அளவிற்கு நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடுவதிலிருந்தே சுதந்திர இந்தியாவை எவ்வளவு மதிக்கிறோம் என்பது நமக்குப் புரியும். வாழ்க பாரதம்.

# # #

மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்வோம். பல மொழிகள், சமயங்கள், கட்சிகள், கொள்கைகள். இவைகளைத் தாண்டி ஒன்றாய் இருக்கத் துடிக்கும் மக்களைப் பெரும்பான்மை மக்களில் நானும் ஒரு அங்கமாய் இருக்கின்றேன் என்பதில் எனக்குப் பெருமையே. ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

ஆனால் சில நாட்களாக இந்த நம்பிக்கையை சிதைக்கும் செயல்கள் இந்தியாவில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அரசு செய்ய வேண்டிய செயல்களை சில நிறுவனங்கள் செய்கின்றன. காவல் துறை செய்ய வேண்டிய வேலையை சில குழுக்கள் செய்கின்றன. அவைகளும் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன. வன்முறைகள் அவிழ்த்து விடப் படுகின்றன. தலித் மக்கள் தாக்கப் படுகின்றனர். பன்மைத் தன்மையை அழிக்க பல்வேறு முயற்சிகள் நடை பெறுகின்றன.
அகில இந்தியா வானொலியில் தமிழ் மொழிச் செய்திகள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. கல்வி வரைவில் சமஸ்கிருதம் திணிக்கப் படுகிறது. என் மொழியை நான் மதிப்பது என்பது இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் குலைப்பதாய் பார்க்கப் படுகிறது.
இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

ஏனெனில் வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாய் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

# # #

இன்னும் ஒரு தியாகி பென்சன் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பதாய் இன்றைய செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது. தியாகள் மதிக்கப் படாத ஊரில், தியாகத்திற்கு என்ன மரியாதை இருக்கும்.

# # #

தென்கோடியில் இருக்கும் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. மின்சாரம் தடை பட்டு பதிவேற்றம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன். சுதந்திர நாட்டின் ஓர் அங்கம்தான் இவைகள் எல்லாம். குறைகள் இருப்பதனால் ஒரு நாட்டைக் குறை சொல்ல முடியாது. நாமும் முயன்றால் குறைகளைக் குறைக்க முடியும். முயல்வேன்.

# # #

சுதந்திர தேசம் – அது பன்முக தேசம் – அனைவரையும் மதிக்கும் தேசம் - வேறுபடுகளில்தான் நாம் ஒற்றுமையைப் பேண முடியும். இந்தியா அதைப் பேணும்.
வாழ்க இந்தியா! 

30.5.14

உள்ளே போ! ... காந்தி உள்ளே போ

எவ்வளவோ முறை மெதுவா... ..அன்பா..  நீங்க செய்யுறது தப்பு - இது சரியில்லைன்னு எத்தனயோ முறை சொல்லிப் பாத்தாச்சு - கதர் யாரும் கேக்கலை.... அதுதான் உள்ளே போ... உள்ளே போன்னு ரொம்ப சத்தமா கத்தி அனுப்பி வச்சுட்டாங்க. ரஜினி தன்  தம்பியைப் பார்த்து சொல்றமாதிரி...



இந்த மக்கள் குடுத்த அடியைப் பாக்கிறப்ப இது சாதாரன அடி மாதிரி தெரியலை..."நாடி நரம்பு, ரத்தம் சதை எல்லாத்துலயும் 'வெறுப்பு' வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இந்த மாதிரி அடிக்கமுடியும்" அப்படின்னு அரசியல் விமர்சகர்கள் எல்லாரும் சொல்லிக்கினு இருக்காங்க. ஆனா இப்படி அடிக்க முடியுமான்னு கதர்கள் எல்லாம்  உள்ள உக்காந்து யோசிச்சுக்குகிட்டு இருக்காங்க.... அதோடு சேர்ந்து கதறிக்கிட்டும் இருக்காங்க. சில பேரு ராகுல்தான் காரணமென்றும், சில பேர் சோனியான்னும், சில பேர் மன்மோகன் என்றும், இன்னும் சிலர் ஊழல் என்றும் மாற்றி மாற்றி குற்றம் சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நாம் இந்தப் பத்தாண்டு காலத்தில் ஒரு நல்ல ஆட்சியைத் தரவில்லையே என்று வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில்தான் இருக்கின்றனர். இதுதான் இன்னும் பத்தாண்டுகளுக்கு இவர்கள் ஆட்சிக்கு வரவே தகுதியில்லாதவர்கள் என்பதை காட்டுகிறது.
...

இந்தச் சூழலில்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடி அவர்களின் இந்த புர்ஜ் காலீபா வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் காங்கிரஸ் என்று நம்மைப் போன்ற சிலரால் கணிக்க முடிகிறது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் காட்டிலும், யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் எல்லாரும் - மிகச் சரியாகவே  இருந்திருக்கிறார்கள்.   ஆக மூன்று முக்கியக் காரணங்கள் தேடினால் அதில் எல்லாம் காங்கிரஸ்காரர்களே காரணம் என்பது எல்லாரும் அறிந்திருப்பார்கள்.
....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான  வெற்றி பெற காரணம் காங்கிரஸ் என்றாலும் அவருக்குண்டான பங்கை அவ்வளவு குறைத்தும் மதிப்பிட முடியாது. இந்தியத் தேர்தல்களின் தேதி  முன்னரே என்ன செய்ய வேண்டும் என்பதை அவரும், மீடியாக்களும் முன்னெடுத்து விட்டனர்.குஜராத் முன்னோடி மாநிலம் என்று எல்லாரும் போட்டி போட்டு எழுத ஆரம்பித்த போதே இந்த முடிவுகள் முன்கூட்டியே தெரிந்து விட்டது. ஆனால் குஜராத்தைக் காட்டிலும் மேலோங்கிய மாநிலங்கள் இருந்தன என்றாலும், அவைகளை விட  மிகச்சிறந்த மாநிலமாக, ஒரு மாடலாக காண்பிக்கப்பட்டது.  உண்மையிலேயே அதுதான் மாடலா என்றால் அதற்கான பதில் எப்படி இருக்கும் என்பது தெரியாது. இந்தத் தருணத்தில் ஜான் ஸ்வின்டன் பத்திரிகை சுதந்திரம் பற்றி 1880 ; ல் சொன்ன சிறு விஷயத்தை பதிவு செய்வது அவசியம். -

"The business of the journalists is to destroy the truth, to lie outright, to pervert, to vilify, to fawn at the feet of mammon, and to sell his country and his race for his daily bread. You know it and I know it, and what folly is this toasting an independent press?
பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் கணிப்புகள் வெளியிட்ட அனைத்து பத்திரிகை நண்பர்களும் இதை நோக்குவார்களாக.... அப்படி வெளிவந்த செய்தியை நீர்த்துப் போகச் செய்த நண்பர்களும்  கவனிப்பார்களாக.

இந்தச் சூழலில் ஒட்டு மொத்தமாக ஓட்டு வங்கிகள் தங்களது ஓட்டுக்களை விரயம் செய்துவிட விருப்பம் இல்லாமல் வெற்றி பெரும் கூட்டணிக்கே வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். அவர்களது வாக்குகளைப் பெரும் தகுதியும், திறமையும், தனக்கு இருக்கிறது என்று தனது அசராத பிரச்சாரத்தால்  மோடி மக்களது நம்பிக்கையைப் பெற்றார். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மோடி  இந்த வெற்றியை உறுதி செய்து கொண்டார். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி இருக்கும் என்று பலர் எதிர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

என்னதான் சுற்றுப் பயணம் செய்தாலும், பேசுவதற்கான கருவை வழங்கியது காங்கிரஸ் தானே. டீ விற்பவர் என்கிற வார்த்தை இவ்வளவு பிரபலம் ஆகும் என்று காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. ஒரு முறை மோடி சொன்னதைப் போல - ராகுல் காந்தி மிகச் சிறந்த காமெடியன். ஸ்ட்ரெஸ் குறைய ராகுலின் பேச்சைக் கேட்க வேண்டும் என்றார்... இந்தத் தேர்தலில் காமெடியன்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். துரைமுருகன் சொன்னார் - முன்பெல்லாம் சிரிப்பதற்கு வடிவேலுவின் ஜோக்கைக் கேட்பேன், இப்போதெல்லாம் விஜயகாந்த் அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்கிறேன்.

....
மோடி சர்க்கார் எப்படி செயல் படுகிறது என்பதைப் பொருத்துதான் பார்க்க்க வேண்டும். நடக்கிற நிகழ்வுகளை இதுவரை கவனிக்கிற போது முந்தய அரசின் கொள்கைகள் எதையும் இவர்கள் மாற்றுவது போலத் தெரியவில்லை. அதே தாராள மயமாக்கல் கொள்கைகள் - ரயில் துறை உட்பட 49 சதவிகிதம் தனியார்களுக்கு எந்தவித தொல்லைகளும் இல்லாமல் சேர் பெற வசதி (யோசிக்கிறார்கள்) - மதாமாதம் பெட்ரோல் விலை உயர்வு...  இலங்கை அரசோடு உள்ள உறவு என்று மிகப் பெரிய வேறுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.தேர்தல் செலவுகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்...

இருந்தாலும் இப்போது பொறுப்பேற்றிருக்கிற அரசு சுற்றியுள்ள அரசுகளோடு நல்ல உறவை மேம்படுத்த செய்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் வந்தால் வெறி கொள்ளும் ஆர். எஸ். எஸ். பாகிஸ்தான் பிரதமர் வந்த போது அமைதி காத்தது ஏனோ? எதுவாக இருந்து விட்டுப் போகட்டும். பொறுப்பேற்றிருக்கும் அரசை விரைவில் குறை கூறுவது சரியல்ல என்றே படுகிறது. வாழ்த்துக்கள்.

தனிப் பெரும்பான்மை - அதிக அதிகாரம் தனியானது அல்ல. அதோடு மிக அதிகமான பொறுப்பும் சேர்ந்தே வரும். தனித்து பார்க்க இயலாது.

ஹானரபில் பிரதம மந்திரி அவர்களே!



        --------------------------------------------------------------------------------------------


1.2.14

இந்தியக் குடியரசும் அரசியம் அமைப்பும் - 1

65 ஆவது குடியரசு  தினத்தை இந்தியா சிறப்பாக கொண்டாடி முடித்து தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குடியரசு பற்றியும் இந்தியாவின் அரசியல் பற்றியும் அலசுவது நல்லது  என படுகிறது.

பல சமயங்களில் ஜனநாயகத்திற்கும் குடியரசிற்கும் உள்ள வித்தியாசம் குழப்பம் விளைவிப்பதாகவே இருக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு மற்றும் குடியரசு நாடு. ஜன நாயகம் என்பது மக்கள் அல்லது ஜனங்கள்தான் நாட்டின் நாயகர்கள். தங்களைத் தாங்களே ஆள்வது என்பதுதான் ஜனநாயகத்தின் கரு.
ஆனால் எல்லா ஜனநாயகமும் உண்மையிலேயே எல்லா மக்களின் நலத்தையும் பூர்த்தி செய்யும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் கால கிரேக்க மக்களின் கலாச்சாரத்தில் கூட மக்களாட்சி தான் இருந்தது. ஆனால் எல்லா மக்களும் சமமாணவர்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அடிமைகள் ஒரு நாட்டின் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகள் பெற்றவர்களாக இல்லை. ஆனால் இந்தியக் குடியரசு அப்படி இல்லை. நாட்டின் குடி மக்கள் எல்லாரும் சமமானவர்கள் என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது.

குடியரசு என்பது குடி மக்களின் அரசு என்கிற விதத்தில் ஜனநாயகத்தோடு தொடர்புடையதுதான். ஆனால், அதையும் தாண்டி குடி மக்கள் அனைவரும் எப்போதும், எக்காலத்திலும், யாராலும், எதனாலும், மறுக்கப் படாத இயற்கை உரிமைகளைக் கொண்டுள்ளார்கள் என்கிற தளத்தில் இருந்து, சட்டத்தையும், அரசியல் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவது குடியரசு.

ஹிட்லர் என்கிற மாபெரும் இன வெறித் தலைவன் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான். ஆனால் அந்த ஆட்சியில் தனி மனித உரிமைகள் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு அந்த உரிமைகள் இல்லை என்பதாக கருதப் பட்டது. இந்தப் படிப்பினைக்குப் பிறகு, மனித உரிமைகள்   இனவெறிக் கொள்கைகளும் உலகில் எல்லா மக்களாலும் வெறுக்கப் பட்டது என்பதையும் நாம் அறிவோம்.

இந்திய சுதந்திரம் என்பது ஹிட்லருக்குப் பிறகு வந்தது. எனவே, இந்தியா வெறும் ஜனநாயக நாடாக மட்டுமில்லாமல் குடியரசாகவும் வேண்டும் என்கிற சிந்தனை நம் தலைவர்களுக்கு வரவே, அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா அமைப்புச் சட்டத்தினால் ஆளப்படுகிற அரசு என்பதை நாம் அடிக்கடி நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

வெறும் ஜனநாயக நாடு என்பது மெஜாரிட்டேரியன் அரசாகவும், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றும் அரசாக மட்டுமே இருக்க முடியும். இதை ஒரு கற்பனை உதாரணத்தினால் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில், ஓர் இந்து பாசிச அமைப்பு இது இந்துப் பெரும்பான்மை நாடு எனவே இங்கே இந்துக்கள் மட்டுமே இருக்க முடியும், பிறர் வெளியேற வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியும். அதனால், ஹிட்லர் போன்று சில முடிவுகளை எடுக்க முடியும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை விரும்புகிற  ஒவ்வொருவரும், வேறு வழியின்றி இந்த முடிவுக்கு தள்ளப் படுவதற்கான  காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய காரணங்கள் இன்னும் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
இந்துத்துவ பெரும்பான்மை என்பது மட்டுமே ஆட்சி அமைக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படும் போது, இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதனால், இந்தியாவின் எல்லா இந்துக்களும், இந்தி பேச வேண்டும் என்றோ அல்லது இந்தி பேசாத இந்துக்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பெரும்பான்மை இந்துக்கள் முடிவுக்கு வரமுடியும்.  அதன் பிறகு, இந்துக்களுக்குள் சைவ வைணவ பிரிவு பெரும்பான்மை என்று வரிசையாக - பெரும்பான்மை என்பது எந்த விதமான வேறுபாடுகளையும் சகித்துக் கொள்ள முடியாத கொடூரமான பாசிசத்தில் முடியும் சாத்தியக் கூறுகளே இருக்கின்றன. இனவெறி என்பது எவ்வளவு கொடூரமான விடயம் என்பதைப் புரிந்து கொள்ள இது போதும்.

ஆனால், இது போன்ற பெரும்பான்மை எண்ணங்கள் உருவாக்கப்படுவது இமோஷன்ஸ் வழியாகத்தான். இன்று எல்லாரையும் மிகச் சுலபாமாக ட்ரிகர் பண்ணுவது மதம்தான். அதன் பிறகு மொழி. இது போன்ற அம்சங்கள் தவறு என்றெல்லாம் நான் வாதட வில்லை. இதில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எனக்கான கருத்து இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு, இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு... மீண்டும் நமது விஷயத்துக்கு வருவோம்.

இதுபோன்ற இமோஷனல் சமாச்சாரங்களால் ஒரு தவறான அல்லது இனவெறி, பாசிசக் கொள்கையில் நாம் புதைந்து போகாமல் இருக்க, நம்மை நெறிப் படுத்த உதவுவன அரசியல் அமைப்பும் சட்டங்களும். அதனால்தான் நீதி மன்றங்கள் தனி மனித உரிமையை நிலை நாட்டும் ஒரு தன்னாட்சி [அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக இல்லாமல் (!)] நிறுவனங்களாக இருக்கின்றன.

ஆம் ஆத்மியின் சட்ட அமைச்சரின் இனவெறிக் கெதிராக எல்லாரும் வெகுண்டெழுவது நாம் இன்னமும் குடியரசு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதே சமயம், இன்று இனவெறிக் கொள்கைக்கு எதிராக வெகுண்டெழும் பத்திரிக்கைகள் தமிழக மீனவர்களுக்கெதிரான சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு மவுனத்தை பதிலாகத் தருவது பத்திரிகைத் தூண் எப்படி தனது பங்கை ஆற்றுகிறது என்று கேட்க வைக்கிறது. 

பங்களாதேஷில் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப் படுவதிற்கு எதிராக இந்தியாவில் பா.ஜ.க. அமைப்பு போராட்டங்கள் நடத்தியது ஒரு நாட்டில் பன்முகத்தன்மை என்பது எப்போதும் பாதுக்காகப்பட வேண்டும் என்கிற உண்மையை உணர்த்துகிறது. அது இந்தியாவிற்கும் பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் அரசியல்  அமைப்பையும்,சட்டங்களையும் ஒழுங்கு படுத்தும் அமைப்பாக அரசு இருக்க வேண்டும்.

தொடரும்.....


31.12.13

(நம்மாழ்வார்) இறுதியும் (ஆம் ஆத்மி) தொடக்கமும் 2013 - 4

வருடக்கடைசியில் முக்கியமான நிகழ்வுகள் குறித்து எழுதுவது 
மரபு என்பதனால் அதை மீற முடியவில்லை. 
(உருப்படியா ஒன்றும் எழுதவில்லை என்பதை எவ்வளவு நாகரிகமாக சொல்ல வேண்டியிருக்கிறது
அது போலவே இந்த வருடத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்தோமா 
என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.)
  • ஐ லவ் அமெரிக்கா நாட் தேவயானி 
    • இது போலவெல்லாம் நானே சொல்வேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நடக்கும் நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன. வெறும் தனது திறமையை மட்டும் ? வைத்து உயர் பதவியில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் தேவயானி மற்றும் அவரது தந்தையையும் நமக்கு இதற்கு முன்பு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் இந்த வயதில் பல முறை கேடுகளில் சிக்க ஒரு சிறு விஷயம் உதவி இருக்கிறது. விசா ஏமாற்று அதைத் தொடர்ந்து ஆதர்ஷ் குடியிருப்பில் வீடு வாங்கியது என்று நீண்டு கொண்டே போகிறது. இது அப்படியே இனிமேல் மறைக்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் சமாஜ்வாதி கட்சி MLA சீட் தர தயாராயிருக்கிறது - இயக்குனர்கள் யாரவது ஹீரோயின் அல்லது வில்லி வாய்ப்பு கூட கொடுக்கலாமப்பா...  
      • ஊழல் செய்தால் சீட்டு நிச்சயம். அப்துல்கலாமைத் தடவிப்பார்த்த போது இல்லாத தவிப்பு தேவயானிக்கு இருக்கும் பரபரப்பை பார்த்தால் - வடக்கில் பிறப்பது எவ்வளவு அவசியம் என்பதும், அப்படி முடியாத பட்சத்தில் ஓரளவு ஊழலாவது செய்வது அவசியம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
  • மரணம் - அனுதாபங்கள்
    • Walker - ன் மரணம் மிகப் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது திரைப்படத்தின் தலைப்பை போலவே வாழ்க்கை அவ்வளவு விரைவாய் முடிந்து போனது. இதுவே திரைப்படமாய் இருந்திருந்தால் நிச்சயம் அவர் தப்பியிருப்பார். மரணம் கொடுமையானது. திரைப்படத்தில் பல முறை உயிர் தப்பியவர் நிஜ வாழ்க்கையில் ஒரு முறை கூட தப்பவில்லை என்பது வேதனையே. 
    •  நெல்சன் மண்டேலா உடல் நிலை சரியில்லாத போதே இறந்து போனதாக முகநூலில் அஞ்சலி செய்தார்கள். இப்போதுதான் உண்மையான அஞ்சலிக்கு வேலை வந்தது. நிஜத்தில் பல முறை இறந்திருந்தாலும் எப்போதும் வாழ்பவர் அவர். 
      • இறப்பதோ ஒரு முறை. அதற்கு முன்பு கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் மண்டேலா போல. 
      • இறப்பு எப்படியும் வரும். இங்கிலாந்துக்கு டயானா போல அமெரிக்காவிற்கு வாக்கர். டயானா போல கொஞ்சம் ஆசணத்தில் இருந்து இறங்கி வாருங்கள். 
      • இந்தியாவிற்கு காந்தி போல தென் ஆப்பிரிக்காவிற்கு மண்டேலா. சுடப்பட்டாலும் கொஞ்சம் அகிம்சையை விதையுங்கள் காந்தி போல. 
      • திடீரென இறந்தாலும், இயற்கையை நேசியுங்கள் நம்மாழ்வார் போல. இயற்கையோடு இயைந்து வாழுங்கள் அவர் போல!
    • நம்மாழ்வார் - திடீரென இறந்து இந்த ஆண்டின் சோகத்தை அதிகப் படுத்தி விட்டு சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையை மட்டும் நம்பி, பாலை நிலத்தில் உறங்கிக் கிடந்த உயிரைத் தட்டி எழுப்பிய மகான்... போராட்ட நேரத்தில் மடிந்து பலருக்குள் உயிராய் கிளர்த்தெழுவார் என்று நான் நம்புகிறேன். விவசாய நாட்டுத் தலைவர்கள் நம்மாழ்வாரின் கருத்தை இப்போதாவது கேட்பார்களா? 
  • புதிய ஆண்டு 
  • ஜாதகம்
    • கணித மேதை ராமானுஜத்தை யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, கணக்கு பண்ணுவது மட்டும் எல்லாருக்கும் பிடிக்கிறது - உலகம் பூராவும். கணக்கு பிணக்கு என்றாலும் பொதுவாய் கணக்கிடுவது பிடிக்கிறது. கடந்த ஆண்டு பூராவும் மாயன் காலண்டர் பற்றி பேசினோம். வரப் போற ஆண்டைப் பற்றி அதற்குள் அடுத்த கணக்கு வந்துவிட்டது. 1947 ம் 2014 ம் ஒரே காலண்டராம்.. அதனால் அடுத்த விடுதலையைப் பற்றி எல்லாரும் அவதானிக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடிதான் அந்த விடுதலைப் போராட்ட தலைவர் எனவும், அடுத்த தேர்தல் முடிவுகள்தான் விடுதலை நாள் என்றும் பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. நானும் எனது பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா? 
      • விடுதலை சரிதான் 1947 நமது நாட்டில் பிளவு ஏற்படாமல் இருந்தால் சரி.
  • புதிய ஆண்டு
  • ஆம் ஆத்மி -
    • பெரியாரின் போராட்டக் கழகத்திலிருந்து தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்த அண்ணாவின் தி. மு. கழகம் போல - அன்னா ஹசாரேவின் போராட்டக் களத்திலிருந்து அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி புறப்பட்டிருக்கிறது. அண்ணாவின் தி. மு. க. மிகப் பெரும் வெற்றி பெற்றது போலவே மிகச் சிறந்ததொரு வெற்றியை டெல்ஹியில் பதிவு செய்திருக்கிறது ஆம் ஆத்மி. 
    • எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் மிகப் பெரும் விடுதலையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதை வைத்தே கணிக்க முடியும். மக்கள் சார்பாக இப்போது போல எப்போதும் நிற்கும் என்று நிறைய எதிர் பார்க்கிறோம். ஒரு நாளைக்கு 700 லிட்டர் நீர், அரசு அதிகார்களின் மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது போன்ற நிறைய உத்திரவாதங்கள்... நல்ல தொடக்கம். இது போன்ற தொடக்கங்கள் தான் 2013 - ன் சோகங்களை பின்னுக்குத் தள்ளி நம்பிக்கையோடு வாழ வழி வகுக்கின்றன. 
    • தில்லியில் உள்ள ஆம் ஆத்மிக்கு கொடிகாத்த குமரனின் திருப்பூரில் ஒரு கிளை.... மக்கள் போராட்ட களத்தில் நிற்கும் உதய குமாருக்கு அழைப்பு என தமிழகத்திலும் ஏழை மக்களின் - (அரசு அதிகார எந்திரங்களுக்கு மத்தியில் சாதாரண மக்கள் எல்லாரும் ஏழைகள் தானே)- விடுதலைக்காய் உழைக்கும் தலைவர்கள் ஒன்று சேர வேண்டியது அவசியமாகவே படுகிறது. நிறைய மண்டேலாக்கள் - நிறைய நம்மாழ்வார்கள் - ஓரணி சேர வேண்டியது அவசியமாகிறது.
    • இப்போது 2014 இன்னும் ஒரு விடுதலை ஆண்டாய்தான் தெரிகிறது.
  • இன்னும் ஒரு உன்னதமான விடுதலையை அகிம்சை வழியாய் சாத்தியப் படுத்துவோம் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம். 
வாழ்த்துகள்!  

13.8.13

குளோபல் காங்கிரசிடம் சமர்ப்பிக்க காந்திக்கு ஒரு வேண்டுகோள்

பாட்டும்   பெட்ரோலும் 
சின்ன வயசு  விஷயங்கள் பலவற்றை இப்போது நினைக்கிற போது எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுவதால் நான் என் முட்டாள் தனங்களை எல்லாம் மறந்தே போய் விட்டேன்.
சின்ன வயதில் எம். ஜி. ஆர். மற்றும் சிவாஜி படங்களை பார்த்த போதெல்லாம் எப்படி இவர்கள் இப்படி அழகாகப் பாடுகிறார்கள் என்று தோன்றும்... சிவாஜியின் வாயசைவில் அவரே பாடுவது போலத் தோன்றுவதால் அவர்தான் பாடுகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். .... அதாவது பின்னணிப் பாடகர்கள் என்கிற விஷயம் எனக்குத் தெரியவில்லை...
ரஜினிப் படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு - வேறெங்க ஊர்த் திருவிழாக்களில்தான் --- எங்க திருவிழான்னாலும் நடந்து போய் செட்டில் ஆகி ... விடிய விடிய படம் பார்த்த காலங்கள் உண்டு --- நான் சொல்வது இதற்கு முன்பு---

ஒருமுறை ஏதோ ஒரு பாட்டில் ஹீரோ வாய் அசைக்காமல் இருந்தாலும் பாட்டு தொடர்கிறது... எனக்கு முடியலை எப்படி வாயைத் திறக்காமல் இப்படி சுத்தமா சத்தமா பாட முடியும்... நானும் வீட்டுக்கு வந்து வாயை மூடிக் கொண்டு பாடிப் பாக்குறேன்.... ம்க்கும் ம்க்கும் தான்... அதை அப்படியே தொடந்திருந்தால் நான் மங்கி வெங்கி மாதிரி ரொம்ப பேமஸ் ஆகி இருப்பேன்.  என் அண்ணன் நான் செய்யுற செட்டைஎல்லாம் பாத்துட்டு அட மக்கு மக்கு பாடுறது அவன் இல்லை வேற ஆளுன்னு சொன்னதுக்கு என்னைய முட்டாள்ன்னு நினைச்சியான்னு திருப்பிக் கேட்டேன்... இப்ப நினைச்சா சிரிப்பா இல்லை...
°°°
இதாவது பரவாயில்லை எங்க ஊர் மெயின் ரோட்ல இருந்தாலும் சுத்து வட்டாரத்துல இருபது கிலோ மீட்டருக்கு பெட்ரோல் பங்கே கிடையாது... ஒரு வாட்டி மே மாச விடுமுறையில் மாமா வீட்டுக்கு திருச்சிக்கு போனேன் - அப்பா கூட்டிட்டுப் போய் விட்டாரு. பெட்ரோல் இருக்கிற இடத்துலதான் பெட்ரோல் பங்க் இருக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... மாமா திருச்சில மட்டும் எப்புடி இம்புட்டு பெட்ரோல் கிடைக்குது எங்க ஊர்ல ஏன் பெட்ரோலே இல்லை - ன்னு கேட்டேன்...  மாமா ரெண்டு விஷயம் சொன்னார்... அட முட்டாப் பயலே... பெட்ரோல் தோன்ற எடத்துல வராது ஊத்தி வச்சு எடுக்குறாங்கன்னு சொன்னதுக்கு போங்க மாமா பெட்ரோல் நிலத்துலேர்ந்துதான் வருதுன்னு ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்தாங்க நீங்க என்ன ஊத்தி எடுக்குறாங்கன்னு சொல்றீங்க போங்க மாமா ...

°°°
கேட்டா உங்களுக்கு சிரிப்பு வருதா இல்லையா? இவன் இவ்ளோ பெரிய முட்டாப் பயலான்னு  என்னையப் பத்தி நினைப்பு வரும்... பரவாயில்லை... நான் சின்னப்பயலா இருந்தப்பதான் அப்படி இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் விஷயங்கள் அறிந்து கொண்டேன். ஆனால் நம்ம நாட்ட ஆள்கிற மிகப் பெரியவர்களைப் பார்த்தா, வளர்ந்த பிறகும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளாமல் மேலோட்டமாய்ப் பார்க்கிற அவங்க என்னைய விட பெரிய முட்டாள்களாத் தெரிவதானால் என் சின்ன வயசு முட்டாள் தனங்களை ஜாலியாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கிறது.
°°°
முப்பது ரூபாயும் மூன்று வேளை  சாப்பாடும் 

முப்பது ரூபாய்க்கு ஒரு நாளைக்கு சாப்பிட முடியும் என்று பேசுற அமைச்சர் அந்த முப்பது ரூபாய்க்கு அரை லிட்டர் பெட்ரோல் போட முடியுமான்னு கேட்டிருப்பாரா ... மூணு வேலை ரோட்டுக் கடையில சாப்பிட்டு இடையில இரண்டு காப்பித் தண்ணி குடிச்சாலே முப்பது ரூபா பத்தாதே அறிவு ஜீவிகளா எப்படி முப்பது ரூபா போதும்?
சரி அது போதும்னா எல்லா அமைச்சர்களுக்கும் 900 ரூபா சம்பளம் குடுத்து மக்களோட மக்களா வைக்கலாமே சாமி... அப்படியே எல்லாரும் கவர்ன்மெண்டு பஸ்லதான் பார்லிமென்ட்டுக்கு வரணும்னு சொன்னாங்கன்னா குடுக்குற 900 ரூபாயையும் பஸ்ஸுக்கே சரியாப் போகும்னு இந்த அறிவு ஜிவிகளுக்குத் தெரியுமா...முப்பது ரூபா குடுத்தா இருக்க இடத்துக்கு சாப்பாடு வந்துர்ற மாதிரி --- வாயை மூடிக்கிட்டா சுதி சுத்தமா பாட்டு வர்ற மாதிரி பேசுறீங்களே மான்பு மிகு அமைச்சர்களே...
முப்பது ரூபாய்க்கு நம்ம தேசியக் கொடிக்குள்ள சுத்தி வைக்கிற பூ வாங்க முடியுமா சாமி.  இதுக்கு வக்காளத்துக்கு  பதிப்பாளர்கள் வேற. உங்க பதிப்பகத்தை எல்லாம் மூடிட்டு ஹோட்டல் நடத்தி முப்பது ரூபாய்க்கு மூணு வேளை  சாப்பாடு போடுங்க நானும் லைப் டைம் பிளான்ல முதல் ஆளா சேர்கிறேன்.

முக நூலில் படிச்சேன் --- ஒரு பணக்காரனின் ஷாம்ப்பூவில் இருக்கும் பழங்கள் கூட ஒரு ஏழையின் தட்டில் இருப்பதில்லை என்று... ஷாம்பே முப்பது ரூபாய்க்கு வாங்க முடியாதே அவன் எப்படி சாப்பாடு வாங்க முடியும்...
முப்பது ரூபாய்க்கு ஒரு ஷாம்பூ வாங்க முடிந்தால் வாங்கி ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் வீட்டில் இருக்கிற எல்லாரும் சாப்பிட வேண்டியதுதான்.
சரி ஒரு வீட்டில் மூணு இருந்தால் ஒருத்தர் வேலைக்குப் போனால் மூணு பேரும் முப்பது ரூபாய்க்குள்ள  சாப்பிட முடியமா மாமு.

காந்தியின் சுதேசி காங்கிரஸ் 


காந்தித்தாத்தா சுதேசி இயக்கம்னு ஒன்னு ஆரம்பிச்சாரு... கதர் இயக்கம் -- உப்புச் சத்தியாகிரகம்.... வெளி நாட்டுப் பொருட்களை வாங்காதே... புத்தகத்துல படிக்கிறோம்... ருப்பியாவுல மட்டும் காந்தித் தாத்தா சிரிக்கிறார்... இன்னைக்கு இதே காங்கிரஸ்தான் வாங்க வாங்க ன்னு வெளி நாட்டுக் காரனைக் கூப்பிடுது.
ஒரு கட்டுரை ஒன்று படித்தேன். தமிழ்ப் பற்று இந்தியப்பற்றாளர்கள் எல்லாரும் போட்டி போட்டு நாம் அனைவரும் முயற்சி செய்தால், இந்தியப் பொருட்களை வாங்கினால் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த முடியும்... அதனால் சோப்பு என்றால் சந்திரிகா, சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பூ என்றால் டாபர், குளிர் நீர் பானம் என்றால் இளநீர் ... இப்படி நாம் ஒரே நாளில் வெளி நாட்டுப் பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் இருபது ரூபாய் உயரும் ...

அது மட்டுமல்ல அந்தக் கட்டுரையில சாதாரணக் குடிமகனான எனக்கே தெரிஞ்சுர்க்கே ஏன்  இது நிதி அமைச்சருக்குத் தெரியலைன்னு அண்ணனுங்க கேட்குறாங்க... நம்ம அமைச்சரு அடப் போங்கடா முட்டாப் பசங்களான்னு சொல்றாரு...

நம்ம அண்ணன்களுகிட்ட வருவோம்... ரூபாய் மதிப்பு உயரக் கூடாதுன்னுதானே அவங்க இப்படியே பண்றாங்க... சில்லறை வியாபாரம் முதக் கொண்டு, காந்தி அந்நிய பொருட்களை, துணிகளை வாங்காதீர்கள் என்று எதிர்த்த அந்நிய கம்பெனிகளை உள்ளே கூட்டிகிட்டு வர்றாங்க ... ஒரு ஏரியா விடாம எல்லாப் பக்கமும் கடையத் திறந்து கோகோ கோலாவும் கோல்கேட்டும் வித்தா நான் எங்க போய் தேடுறது... ஏதோ பவொண்டோ  மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடிச்சு ஓடுது...

காங்கிரசுகாரர்கள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து நான் என் அண்ணனைச் சொன்ன மாதிரி காந்தியின் சுதேசியை முட்டாள்ன்னு சொல்றாங்க... நான் வளர்ந்துட்டேன்... நம்ம அரசியல்வாதிகள் எப்போ வளரப் போறாங்கன்னு  தெரியலை...
***
வெளி நாட்டு மோகம் நம்மைக் கண்ணை கட்டிருச்சு... எத்தனை காந்தி வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. இந்தக் காங்கிரசுக்காரர்கள் இப்படி இருக்கிற வரை... இந்தியா ஒளிரனும்னா வெளிநாடு மாதிரி இருக்கணும்னு கதை சொல்லுவாங்க... அவங்களை மாதிரி இருந்தாதான் பிரகாசமா இருப்போம்... பொருளாதாரம் வளரும் அப்படி இப்படி எல்லாம் கதை சொல்லுவாங்க.
இதெல்லாம் வெறும் கனவு... வெளிநாட்டுக்காரனுக்கு மார்க்கெட் இல்லை அதுனால நம்மளைத் தேடுறான்... என் மாமா ரெண்டு விஷயம் சொன்னாருன்னு சொன்னேன். முதலாவது நான் முட்டாப்பயன்னு சொன்னார். இரண்டாவது... தோன்ற எடத்துல பெட்ரோல் வந்தா நாம ரொம்ப பணக்கார நாடா ஆகிடுவோம்...
எனக்கு -பெட்ரோல் தோன்ற எடத்துல வரலை'ன்னு தெரிஞ்சிருச்சு... ஆனா அதே சமயத்துல நம்ம பொருட்களை மட்டுமே நாம பயன்படுத்தினா நாம நல்லா இருப்போம் அப்படின்னு தெரியுது... எனக்கு அறிவு வளர்ந்திருச்சு ...

தோன்ற இடத்துல வர தண்ணியையே அந்நியக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கிற இந்த அரசியல் வாதிகள் தோன்ற இடத்துல பெட்ரோல் வந்தாலும் நம்ம நாட்டை வளமான நாடா ஆக விட்டிடுவாங்களா என்ன​?
நம்மகிட்ட இருக்குற விஷயத்தை வச்சு நாம பணக்காரனா ஆகிறத தடுக்குற இந்த அரசியல்வாதிகள் முட்டாளா அறிவாளிகளா மாமா!
***
அணுப்பிரகாசம் வெடிப்பிரகாசம் 
அணையப் போற விளக்கு பிரகாசமாய் எரியும்ன்னு சொல்லுவாங்க ... நம்ம நாடு என்னைக்கும் பிரகாசமா இருக்கணும், என்றுமே ஒளி கொடுக்கணும்னு நினைக்கிற பல பேர் ரோட்டுல நின்னு குரல் கொடுக்கிறாங்க.... அணு உலை ஆபத்தானது அது அணையும் போது பிரகாசமாய் எரியும் மெழுகு மாதிரி அது நிரந்தரமில்லைன்னு சொல்றாங்க ...

நம்ம காங்கிரஸ்வாதிகள் கேக்குறது இல்லை... அடப்பாவிங்களா சில்லறை வியாபாரிகள் வயுத்துல அடிக்காதிங்கடா ன்னா கேக்குறதில்லை... அறிவு ஜீவிகள், மனித ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் இவர்கள் சொல்லுவதை இந்த அரசியல்வாதிகள் கேட்பதில்லை...

யார் எது சொன்னாலும் அவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்கிறது சுதேசிக் காங்கிரஸின் பேத்தி...
எந்த ஊர்ல எவன் போராட்டம் பண்ணினான் தண்ணியை கோகோ கோலா இல்லாட்டி பெப்சிக்கு குடுன்னு.... எந்த ஊர்ல வெளி நாட்டுக் கம்பெனிகளை உள்ள விடுங்கன்னு போராட்டம் பண்ணினான்... நீங்களா உள்ள விடுறீங்க... நீங்களா ஒளிரும் இந்தியாங்கிறீங்க ... நகரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் வறுமைக் கோட்டுக்கு மேலே இருக்கிறார்கள்என்று சொல்றீங்க ... சென்னை என்ன வெறும் மவுண்ட் ரோடா... அப்ப கொட நாட்டுல இருக்குறவங்க எல்லாம் ஏழைகளா என்ன... என்ன கருமாந்திரமோ!
ஆனா நாட்டுக்கு நல்லது, மக்களுக்கு நல்லதுன்னு சொல்ற போராட்ட, வீரம் மிக்க மக்களை, மனித ஆர்வலர்களை, சூழல் நண்பர்களை முட்டாள்கள் என்கிறீர்களே நான் எங்க அண்ணனையும் மாமாவையும் சொன்னது மாதிரி... என்ன செய்ய முடியும்?
வெளிநாடு வெளிநாடுன்னு மோகத்துல இருக்குற இந்தக் காங்கிரஸ் காரர்களை காந்தித் தாத்தாவே நீதான் காப்பாத்தணும்...

ஆனா தாத்தா, நீர் கோமணத்தோட போகாதேயும்,  அப்படியே போனாலும் இன்டிமிசிமியின் கோவனம் கிடைச்சாக் கட்டிகிட்டுப் போம். அப்பத்தான் காங்கிரஸ் ஆபிசுக்குள்ளேயே அனுமதி கிடைக்கும் (இன்டிமிசிமி / ஒரு இத்தாலிய நாயுடு ஹால் மாதிரி) - இப்பப் புரியுதா​?  அதுக்கப்புறம் தான் சுதேசியே பேச முடியும்... ஆமா​!

அப்படியே அவங்க கிட்ட சுதந்திர தின வாழ்த்துக்களையும் சொல்லிருங்க - அதாவது இந்திய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்து அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்ய முதலாளிகளுக்கு கொண்டு போய் சேர்த்த உண்மையான காங்கிரஸ் இதுதான் என்பதால் வாழ்த்துக்களை நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

காங்கிரசுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் -  மக்களிடமிருந்து பிடுங்கி அந்நியர்களுக்கு நாட்டைக் கொடுத்ததற்கு... உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ்காரர்கள் தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்ன?

8.2.13

ட்ரூ மேன் ஷோ - வும் – சமரும்


ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு ஏதோ ஒரு வேலையாய் போனபோது ‘மாஸ்க்’ என்ற ஜிம் கேர்ரி யின் படம் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். அதன் பிறகு ஜிம் கேர்ரியின் படம் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் ட்ரூ மேன் ஷோஇதுவும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
  • உலகம் என்பது ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று எப்போதும் எல்லாரும் சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு அது சரியோ என்று தோன்றிய தருணங்களும் இருந்திருக்கும். யாரோ ஆட்டிவைக்கும் பொம்மையாக நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை. மிகப் பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கியும், இறைவன் கருணை மிக்கவன் என்கிற கருத்தை கேலி செய்யும் விதத்திலும், இந்தக் கதைப் பின்னல்கள் கேள்வி எழுப்பும் – பார்ப்பவர்கள் மனதில்.

“இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் உண்மை – எதுவும் பொய்யில்லை” என்கிற ஒரு தொனியில் தொடங்கும் ஒரு லைவ் ஷோ. தனியாக, முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு. முடிவடையாத ஒரு கடல் என்கிற ஒரு பிரம்மை. உருவாக்கப் பட்ட அந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் ஒரு சிறு துளி - ஒரு விளக்கு கூரையிலிருந்து கீழே விழுவதில் தொடங்குகிறது அந்தக் கதை. அந்த தவறை மறைக்க மேலே சென்ற ஒரு விமானத்தின் விளக்கு கழன்று விழுவதாக சொல்லப் படும் செய்தி அதை உண்மையென்று அவனை நம்பச் செய்கிறது. அந்தக் கடலில் இறங்குவது ஆபத்து – ஏனெனில் அதில்தான் அவரது தந்தை இறந்து போனதாக ஒரு நிகழ்வு என்று சின்னச் சின்ன விஷயங்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஒரு தீவில் பிறந்ததிலிருந்தே அங்கே வளர்க்கப் படுகின்ற மனிதன் தான் ஜிம் கேர்ரி. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நிமிடமும் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக தான் ‘உருவாக்காப்பட்ட ஒரு மாய உலகத்தில்’ இருக்கிறோம் என்பதை அறியாமலே இருக்கிறான் அவன். அவன் வழியெங்கும் பார்க்கிற ஆட்கள், இயக்குனர் அவர்களுக்கு கொடுக்கும் வேடம், சொல்லும் வசனங்கள் என்று எல்லாமே நாடகத்தின் ஒரு அங்கம். ஒரே ஆட்கள் பல வேடங்கள் போடுகிறார்கள். இறந்து போன அவனது அப்பாவை திடீரென அவன் பார்ப்பதும், அது அவர் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சியும், என்று பல நிலைகளில், கேர்ரி யோசிக்க ஆரம்பிக்கிறான்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கண்டறியவும், பயந்து இருந்த கடல் எல்லையற்றதாகத் தெரியவில்லை. படகேறி செயற்கையாய் கட்டமைக்கப் பட்ட கடலைத் தாண்டும் முயற்சியில் இருக்கும் போது இயக்குனர் அவரிடம் உரையாடுகிறார் – வெளி உலகம் மிக மோசமானது. இங்கே உனக்கு எல்லாம் கிடைக்கும் போகாதே என்கிற தொனியில் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் “வெளியே” பயணிக்கிறான்.

சிந்திக்கத் தொடங்கும் போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் என்பது கூட படத்தின் கருவாக இருக்கலாம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைப்பதைப் போன்று அவனது சுதந்திரத்திற்கு தடை போடுவது சரியல்ல என்று தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட கருத்தாக இருக்கலாம். வாழ்க்கையே ஒரு நாடக மேடை எனவே அதில் அதிகக் கேள்வி கேட்காமல் வாழ்வது சரி என்பதோ, மாய உலகில் கட்டமைக்கப்பட்ட விதிகளைத் தகர்த்தெறிந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பது கூட செய்தியாக இருக்கலாம். காதல் என்பது வேறொருவன் நிர்ணயிக்கிற ஒரு ஆளை வைத்தோ, அழகை வைத்தோ வருவது அல்ல அது உள்ளிருந்து வருவது என்பது கூட செய்தியாக இருக்கலாம். ஆனால் பார்க்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
  • இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

இந்த அளவுக்கு ஒரு நாடகத் தன்மையுடைய கதை நமக்கு ஒத்து வராது – நமக்குத் தேவை வேகம் – வேகமான திருப்பங்கள் – த்ரில் – சண்டைக் காட்சிகள் – பாடல்கள் – என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டிருக்கும் படம் சமர்.
தமிழ் ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிக்க வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பாக செல்லும் படம் என்று நினைக்கிறேன். ட்ரூமேன் ஷோ பார்க்காதவர்களுக்கு இந்த படம் நிறைய பிடிக்கலாம் – பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது என்றே நம்பலாம் – சில சீன்களுக்குப் பிறகு கதையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்து விட்டது.  அது தவிர சில சீன்களை வேறு ஏதோ படத்தில் அப்படியே பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால் நினவுக்குத்தான் வர மறுக்கிறது. எனக்கு ஒருவேளை அம்நீஷியாவோ என்னவோ.
ஆனால் இறுதியில் ட்ரூ மேன் ஷோ எழுப்பும் எந்தக் கேள்வியையும் சமர் படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுப்பாது என்பது மட்டும் நிச்சயம் – அந்தக் கேள்விகள் நமக்குத் தேவையில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். எந்த விதமான மற்ற திரைக்கதைக்கான நன்றியோ, தாக்கம் என்பது பற்றிய திரைப்படக் கதைகளோ டைட்டில் கார்டில் வரவில்லை. ஒரு வேளை நான் கவனிக்க வில்லையோ என்னவோ. அல்லது இயக்குனருக்கும் அம்னிஷியாவோ என்னவோ?

11.8.12

டெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்


டெசோ மாநாடு பற்றி எல்லாரும் எழுதி எழுதி கிழித்து எரிந்து விட்டார்கள். கலைஞர் மட்டும் வலைப்பூக்களைப் படிப்பவராக இருந்தால், எழுதியிருப்பதை படித்து இருந்தால் அவர்மேலே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும். நிறையப் படிப்பவர் அவர். அதனால் பத்திரிகைகளில் வந்திருப்பதைப் பார்த்தும் அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் கூட கொஞ்சமாவது மாற்றம் தெரிந்திருக்கும். அதற்கெல்லாம் அசருபவர் அல்ல. சரி இது கலைஞர் பற்றிய கட்டுரை அல்ல.  அதுமட்டுமல்லாமல் டெசோ மாநாடு நடத்தும் அருகதை, கலைஞருக்கோ அல்லது வேறு யாருக்கோ இங்கே இருக்கிறதா என்பதைப் பற்றியும் நான் எழுதப் போவதில்லை.

ஆனால் டெசோ மாநாடு நடத்துவதற்கான எதிர்ப்பு ஆள்பவர்களிடமிருந்து வருவதைக் கண்டுதான் எழுதவேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.

டெசோ மாநாட்டை புறக்கணிப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அது இதுவரை அவரை நம்பிக் கேட்டோம் என்பது தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே இதை மறுப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. 

ஆனால் அனுமதி மறுப்பதற்கான உரிமை அரசிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அரசு சொல்லுமேயானால், அது எந்த அளவுக்கு இலங்கையின் மீது அனுசரணையோடு இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று நாராயண சுவாமி சொல்லியிருக்கிறார். கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுவதற்கு இதுவே மேல்தான். ஆனால் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த இலங்கைக்கு கைகட்டும் காங்கிரஸ் அங்கே சீனா வந்து ஆட்டம் போட்ட பிறகுதான் ஆஹா சூடு வைத்துக் கொண்டேமே என்று யோசிக்கும்.

எல்.டி. டி. யை ஆதரிப்பது குற்றம் என்றும் சொன்ன போதும் கூட எல்.டி.டி. ஐ ஆதரித்துப் பேசக்கூடாது என்றுதான் அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது அந்த வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது புரிகிறது.  கலைஞர் வேடதாரி என்பது எல்லாருக்கும் தெரியுமானால், எதற்கு இந்த அரசாங்கங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு இதை எதிர்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசு அங்கே பங்கேற்கும் நபர்களை தான் தனியாக கவனிப்பேன் என்கிறது. சிலருக்கு அங்கிருக்கிற இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுக்கிறது. இந்திய அரசு 'ஈழம்' என்பதை பயன்படுத்தக் கூடாது என்கிறது. தமிழக அரசு சென்னையில் இதை நடத்தக் கூடாது என்கிறது. 

ஆகமொத்தம் காரணம் ஒன்றுதான்: ஈழம் பற்றிப் பேசினால் அதன் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதில் நாம் கலைஞரை விமர்சிக்கிறோம் என்று இந்த மாநாட்டின் எதிர்ப்பில் -  "ஈழம்" மீது நமக்கு இருக்கும் வேட்கையை குறைத்து விடவும்,இனி யாருமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையயைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேறு யாரும் கூட ஈழ மாநாடு என்கிற ஒன்றை நடத்த முடியாது. உண்மையான ஈழ ஆதரவாளர்கள் கூட. 

அரசியல்வாதிகளில் பச்சோந்திகள் தவிர வேறு யாரும் இல்லை. இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா? ஒவ்வொருவருக்கும் வயதுதான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாகூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனால் அவர்கள் ஈழ ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அம்மாவைப் பாராட்டி ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, பாராட்டி, .... கொஞ்ச நாளிலேயே அம்மா எல்லாருக்கும் ஆப்பு வைத்தார்கள். அதே அம்மா புரானிகள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள். 

கலைஞர் மாநாடு நடத்த வேண்டும் என்றோ, கூடாது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இதுதான். 

சுதந்திர நாட்டில் ஒருவன் தான் விரும்பிகிற, நம்புகிற கொள்கையை வெளிப்படுத்துவதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை மறுப்பவர்கள் அரக்கர்கள் - அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் கூட.

இந்தக் கருத்துச் சுதந்திரம் மிதிக்கப் படும் நேரத்தில் அது கலைஞருக்கு எதிரானது என்று நாம் மகிழும் வேளையில், மிதிக்கும் கால்கள் நமது தலையின் மேல் இருப்பதை கவனிக்க மறக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத இந்த இந்தியா நாடு விரைவில் 
சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறது. 

15.8.11

சுதந்திர இந்தியாவும் - இத்தாலியும்


 இந்திய சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களை சொல்லும் இவ்வேளையில், சில வருடங்களுக்கு முன்பு பார்க்க நேர்ந்த ஒரு வீடியோவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 இந்த வீடியோ மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இத்தாலி நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லும் வீடியோ.

அப்போது நண்பர்கள் சிலர் ஒரு தலைப்புக் கொடுத்தார்கள் - ஏன் சோனியா காந்தி இந்தியாவை நேசிக்கிறார்?  மிகச் சரியான தலைப்பு. 
இந்தியா சுதந்திர இந்தியா

வீடியோவில் - இத்தாலி என்பதை இந்தியா என்று
வாசியுங்கள் -

கொடி ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.

 சுதந்திர தின வாழ்த்துக்கள்.

26.1.11

குடியரசு தினம் - யார் குற்றம்?

 62 வது குடியரசு தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.



  • குடியரசு தினக் கொண்டாட்டத்தை - நாசிக் அருகே பெட்ரோலில் கலப்படம் செய்த கும்பல் ஒன்று கூடுதல் மாவட்ட ஆட்சியரை [கலக்டர் சோனாவானேவை ] உயிருடன் எரித்து - தொடங்கி வைத்திருக்கிறது. மக்களாட்சியைக் கொண்டாட இதை விட சிறப்பான கொண்டாட்டம் இருக்கமுடியுமா?

ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே, அவரது உயிருக்கே, பாதுகாப்பற்று இருக்கும் போது நாமது நாட்டைக் குடியரசு என்று சொல்லுவது தகுமா? அல்லது மக்களாட்சி என்பது இதுதானா? தான் செய்வதை சரி என்று சொல்வதற்கும் அதற்காக ஒருவனை உயிருடன் எரிப்பதற்கும் நாம் இன்றும் தயாராக இருக்கிறோம் என்றால் என்ன குடியரசு இது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நீதியும், நேர்மையும், உண்மையான உழைப்பும் நமது மதிப்பீடுகளாக மாறமுடியாமல் போனது யார் குற்றம்? மதிப்பீடுகள் தெரியாமல் பிறரை ஏமாற்றி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் குற்றமா? அல்லது ஊழல் தான் நமது உயிர் மூச்சு என்று முன்மாதிரி காட்டிக் கொண்டிருக்கிற அரசியல் வாதிகள் குற்றமா? அல்லது மதிப்பீடுகளை கற்பித்துக் கொடுக்க மறந்த அதிகாரிகள் குற்றமா? அல்லது ஏமாற்றினால்தான் இன்றைய பொருளாதார சூழலில் வாழ முடியும் என்கிற நிலைக்குத தள்ளியிருக்கிற பொருளாதார முறையா? அல்லது சமூக அமைப்பு முறையா?
  • இறந்த அந்த மாவட்ட அதிகாரியின் நினைவு இல்லாமலே குடியரசு தினம் நிறைவு பெரும். நமது நாட்டைப் போல வேறு ஜனநாயக நாடு இல்லவே இல்லை என்கிற பெருமையோடு இந்த விழாவும் நிறைவு பெரும்.
இந்த ஆண்டு பிறந்து பன்னிரண்டு நாட்களுக்குள் இரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய எந்த வருத்தமோ தெரிவிக்க முடியாமல் இருக்கிற அரசு நமது அரசு.

அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்றும், அதற்கான ஆதாரத்தை தராமல் வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்துகிற முயற்சி என்று இலங்கை சொல்லிவந்த நிலையில்; சென்னை புத்தக் கோவில் ஒன்றில் தாக்குதல் நடந்த பிறகு இலங்கைத் தூதர் "இனிமேல் தாக்குதல் நடை பெறாது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

வெறும் கோரிக்கைகள் ஒன்றிற்கும் உதவாது என்ற நிலையில் அரசு இருப்பது யார் குற்றம்?
தாக்குதல் நடத்தியவர்களை விஷமிகள் [உபயம் - தினகரன்] என்று பத்திரிக்கைகள் எழுதியதும், இலங்கைக் கடற்படையினரின் அநீத செயல்களைக் கண்டிக்காமல் எழுதும் வியாபாரப் பத்திரிக்கைகள் இங்கே இருப்பது யார் குற்றம்?

  • புத்தக் கோவிலில் கல்லெறிந்தால்தான் நீதி கிடைக்கும் என்கிற நிலை இருந்தால் இது யார் குற்றம்?
  • இந்த அரசு எங்களுக்கு பாதுகாப்பு தரவில்லைஎன்றால் இலங்கை அரசிடம் சென்று தஞ்சமடைவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று நாகப்பட்டினம் மீனவர்கள் சொல்கிறார்களே - இது யார் குற்றம்.?
  • கச்சத் தீவை சென்று கொடுத்தது யார் குற்றம்? இலங்கைக் கடற்படையினருக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பலை வழங்கியதே  இந்த இந்திய அரசு - இது யார் குற்றம். இறந்து போன மீனவர்கள் குற்றமா?
  • என்நாட்டு மக்களைக் கொள்கிற ஹிட்லரே மேல் என்று இந்த நாட்டு மக்களை நினைக்க வைப்பதுதான் குடியரசா?
நானே பாதிக்கப் பட்டேன். நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்...

பாதிக்கப் பட்டவன்தான் குரல் எழுப்ப வேண்டும் என்பதா குடியரசு?

பராசக்தி - பார்த்துக் கொண்டா இருக்கிறாய்!
                 - பார்த்து சிரித்துக் கொண்டா இருக்கிறாய்.