இது திரைப்பட விமர்சனமல்ல - விவகாரம்
· என்னடா புதுப்படம் எதுவும் நமக்குத்
தெரியாம வந்துருச்சா அப்புடின்னு நினைக்க வேண்டாம். இந்த வாரம் மூணு திரைப்படங்கள்
பாத்தேன் – சங்கிலி புங்கிலி கதவைத் திற, எய்தவன் மற்றும் சரவணன் இருக்க பயம் ஏன்?
அந்த மூன்று படங்களுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஒன்னு பரவாயில்லை, இன்னொன்னு சுமார் இன்னொன்னு மோசம்
அப்படித்தான் சொல்லணும். ஹீரோசுக்கு பான்ஸ் இருந்தா மன்னிக்கணும்.
· இன்னைக்கு எப்படியாவது அந்தப் படம்
பாக்கணும்னு போன படங்களும் உண்டு. இன்னைக்கு எப்படியாவது படம் பாக்கனும்னு போன
நாட்களும் உண்டு. விடுமுறை நாட்களில் எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்பதனால்
இந்தப் படங்களை எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. நானாப் போய் மாட்டிகிட்ட படங்கள்
என்று சொல்லலாம். அவசரக் கல்யாணம் சாகாவச சங்கடம் என்பது போல அவசரப்பட்டுப் போய்
மாட்டிக்கொண்ட படங்கள். கட்டாயப் படுத்தி என்னைச் சங்கிலியில் கட்டிப்போட்ட என் நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம். நான் கட்டாயப்படுத்தி நான் இருக்க பயமேன் என்று நான் பயமுறுத்திய பயந்த என் நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.
· பல சமயங்களில், பார்க்கும் படங்களை விட,
படம் பார்க்கப் போகும்போது கிடைக்கும் அனுபவங்கள் நினைவில் நிற்கும். அப்படி ஒரு
சில நினைவில் நின்றன. இன்னைக்கு விட்டா படம் பாக்க முடியாது என்பதனால் ஒவ்வொரு
தியேட்டரா பார்த்துப் பார்த்து கடைசியில், தேவி – யில் சங்கிலி புங்கிலிய பாக்கப்
போனோம். விரும்பின தியேட்டரும் கிடைக்கல, விரும்பின படமும் கிடைக்கலை. வேகமாய் போற வழியில்
குறுக்கே ஒரு ஆட்டோ – திட்டலாம்னு பார்த்தா அருமையான வசனம் அந்த ஆட்டோவின்
பின்னால்:
“பாத்துப்
போ பங்காளி
நானும் ஒரு
தொழிலாளி”
அதைப் படிச்சிட்டு எங்க திட்டுறது?
அப்படின்னா
குறுக்கே
வாராதே பங்காளி ன்னுட்டு சைலன்ட்டா போய்ட்டோம்.
·
சென்னையைப் பொறுத்தவரை விடுமுறை நாட்கள்
என்றாலும் சாலைகள் முழுவதும் வண்டிகள் மற்றும் வண்டிகள். நாம் எப்போதுதான்
சாலையில் வண்டி ஓட்டப் போகிறோம் என்று தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில் ஒன்று
ஊர்ந்து செல்கிறோம் அல்லது நின்று கொண்டிருக்கிறோம். இந்த இரண்டைத்தான் நாம்
இப்போது சென்னை சாலைகளில் செய்ய முடிகிறது. ஓட்ட வேண்டுமென்றால், சென்னை முழுவதும்
பாலம் வேண்டும். போரூரை நாங்கள் கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
· இப்போதெல்லாம்
திரைப்படத்திற்கு தாமதமாகப் போவதையே நான் விரும்புகிறேன். சீரியல் விளக்குகள் போட்ட
ஸ்க்ரீன் ஓபன் செய்வதில் இருந்து படம் பார்ப்பதை விரும்பியவன் நான். ஆனால்
இப்போதுள்ள சூழலில் தாமதமாகச் செல்வதையே விரும்புகிறேன். சீரியல் விளக்குகளோ அல்லது
வெள்ளை ஸ்க்ரீனை மூடியிருக்கும் மற்றொரு ஸ்க்ரீன் இல்லை என்பதனால் எல்லாம் இல்லை.
திரைப்படத்திற்கு முன் நடக்கும் இரண்டு விஷயங்கள்.
· முதலாவது புகைப்பிடிப்பது பற்றிய
அறிவிப்பும் அதைத் தொடர்ந்து வரும் பயமுறுத்தும் விளம்பரமும். ஊரெல்லாம் புகையிலைக்
கடைகள். மதுக்கடைகளை தடை செய்யச் சொன்னால் போலிஸ் தடியடி. போலிஸ் பாதுகாப்புடன்
டாஸ்மாக் கடைகள். நேஷனல் ஹைவேயில் வைக்கக் கூடாது என்றால் முன்புற வாசலை அடைத்து பின்புற
வாசலைத்திறந்து முகவரியை மாற்றிக் கொள்வது. இப்படியெல்லாம் செய்து விட்டு,
குடிப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு என்று திரைப்படத்திற்கு முன்பு விளம்பரப்
படுத்தினால் சரியாகி விடுமா என்ன? இந்த விளம்பரத்தைப் பார்ப்பதற்கு சும்மா இருந்து
விடலாம். அல்லது, குடிக்கிறவனுக்கு குடிப்பதனால் என்ன நடக்கும் என்று தெரியாதா
என்ன? கடைகளைத் திறந்து வைப்பது கட்டாயம் ஆனால் யாரும் குடிக்கக் கூடாது என்றால்
எப்படி?
·
அடுத்தது நாம் பாடும் தேசிய கீதம். நீதி
மன்றத்தை அவமதிப்புச் செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அல்லது எனக்குத் தேசப்
பற்று இல்லை என்றும் அர்த்தம் இல்லை. திரைப்படத்திற்கு முன்னால் திரையரங்கில்
தேசியகீதம் பாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. முன்னே சென்று பிடிக்காமல் இருப்பதை
விட, வெளியே இருந்து விடுவதே நல்லதில்லையா? தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது
யாரையும் உள்ளே அனுமதிப்பது இல்லை. என்பதினால் இப்போது அதற்குப் பிறகே செல்கிறேன்.
நாட்டின் பன்முகத்தன்மையையும், நாட்டின் மீதான மதிப்பையும் அதிகப்படுத்துவதற்கு பதில் வெறும் தேசிய கீதம் மட்டும் போதாது. எப்படி புகையைக் கட்டுப்படுத்த புகையிலை
விளம்பரம் மட்டும் போதாதோ அதேபோல திரைப்படத்திற்கு முன்னால் தேசிய கீதம் பாடுவது மட்டும்
போதாது. பள்ளிக் கூடத்திற்கு அருகில் டாஸ்மாக் கடைகள், ஊழல் அரசியல்வாதிகள்,
கொர்போரெட் நிறுவனங்களுக்காக கைக்கூலியாய் செயல்படும் அரசுகள், பழிவாங்க மட்டுமே
பயன்படுத்தப்படும் வருமான வரித்துறை, என்று தேசத்தை வீழ்ச்சியுரும் செயல்கள் பல
செய்துவிட்டு, கற்பனைக் கதைகளை மட்டுமே பேசும் திரைப்படங்களுக்கு முன்பு நான்
தேசிய கீதம் பாடுவது ஏன் தேசப்பற்றையும் கற்பனை என்று ஆக்கிவிடாதா? நல்லவேளை
டிஸ்கொத்தேவில் முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று இன்னும் சொல்லப் படவில்லை.
தேசிய கீதத்தெற்கென்று மரியாதை இருக்கிறது. திரைப்படத்திற்கு முன்பு பாடவைத்து
அதைக் குலைப்பதாகாவே நான் கருதுகிறேன். அதைப் பாடும்போது நான் அமர்ந்திருந்தால்தான்
அவமதிப்பு. நான் உள்ளேயே இல்லையென்றால் அது அவமதிப்பாகுமா என்ன?
·
சரி விஷயத்திற்கு வருவோம். சங்கிலி புங்கிலி
ஒரு பேய்ப்படம். நல்ல பேயோடு ஜீவா சண்டை போடும் படம். சரவணன் இருக்க பயமேன்
இதெல்லாம் ஒரு பேய்ப்படம்னு சொல்லவே பேயே வெட்கப்படும் ஒரு பேய்ப்படம். இதுல ஒரு நல்ல
பேயோடு கூட்டுச் சேர்ந்து உதயநிதி நடிக்கும் படம். எய்தவன் ஒரு விதத்தில்
பேய்ப்படம்தான் – ஒரு சமூகப் பேயான கல்வி நிறுவனத்தைக் காசாக்கும் ஒரு பேயோடு
மோதும் ஹீரோ கலையரசன். இந்த மூன்று படங்களிலும் நல்ல செய்தி உண்டு.
·
எய்தவன் கல்வி நிறுவனங்கள் - குறிப்பாக
மெடிகல் கல்லூரிகள் எப்படி ஏஜன்ட்டுகளை வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்றும்,
மாணவர்கள் எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கல்வி
நிறுவனங்கள் மட்டுமல்ல இன்றைக்கு நம் நாட்டில் எல்லாமே கார்பொரேட் கைகளில்தான்
இருக்கின்றன. இந்தப் பேய்களோடு போட்டி போடுவதும், அதிலிருந்து உண்மையான அறிவை
வளர்ப்பதும் மிகக் கடினம் என்றே தோன்றுகிறது.
· சங்கிலி புங்கிலி கொர்போரெட் சுழலில்
சிக்கி சின்னாபின்னமாகி சிதைந்து போன கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை உணர வைக்க
முற்படுகிறது. சொத்துக்காக குடும்பங்களைப் பிரித்தவர்கள் நமக்கு அருகிலேயே உண்டு.
கூடி வாழ்வது அவசியம் என்பதை சங்கிலி பேயின் உதவியோடு செய்தி சொல்ல
முயற்சித்திருக்கிறார்கள். பேய் வந்து சொன்னால்தான் நமக்கு புத்தி உரைக்கும் என்று
நினைத்தார்களோ என்னவோ.
· சரவணன் ரொம்ப நார்மல் திரைப்படம். விஜய்
டிவி புகழ் கலக்கப் போவது யாரு டீமை குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்கள். ஒருத்தர்
கூட நம்மை இம்மியளவு கூட சிரிக்க வைக்கவில்லை என்பது மிகப்பெரிய நகைச்சுவை. ஒரு பேயின் உதவியோடு தான் விரும்பும் பெண்ணை
திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ. அதில் பேயும் சரியில்லை, படமும் சரியில்லை,
கதையும் சரியில்லை. நாமாகக் கட்டாயம் குடுத்த காசுக்கு சிரிக்க வேண்டும் என்றால்
சில இடங்களில் இவன் வந்தால் சிரித்து விடுவோம் என்று சிரிக்கலாம். போனாப்
போகுதுன்னு பாட்டுக்குப் பாட்டில் சிரிக்கலாம். மற்றபடி அதில் நடிப்பும் இல்லை,
கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை.
·
அதற்கு சங்கிலி பரவாயில்லை. பேய்
அடிக்கடி வருகிறது. கொஞ்சம் கதை இருக்கிறது. என்ன, ,இரட்டை அர்த்த வசனங்கள் ஓவரா
இருக்கிறது. சரவனனையும் சங்கிலியையும் இணைப்பது பேய் மட்டுமல்ல, சூரியும்தான்.
காமெடி என்பது சில இடங்களில் அவரது நடிப்பில் மட்டும்தான் வெளிப்படுகிறது ஸ்க்ரிப்ட்டில்
இல்லை. அதனால் கொஞ்ச நேரத்தில் அவரைப் பார்ப்பதும் போரடிக்கிறது. காமெடியன்களுக்கு
நிறைய பஞ்சம் இருக்கிறது. சாரி, சிரிக்க வைக்கும் காமெடியன்களுக்கு ... சூரி
இன்னும் நல்லா வரலாம்.
- வேறு வழியே இல்லாமல் படம் பார்க்கச் செல்லாதீர்கள். என்ன படம் பார்க்க விரும்புகிறீர்களோ அந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் அந்தப் படத்தைப் பார்க்காதீர்கள், பரவாயில்லைஅடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை என்றால் போய் பாருங்கள். இறுதியாய் செய்தி சொல்ல வேண்டுமல்லவா?
·
இந்த மூன்றில் எய்தவன் பரவாயில்லை என்றுதான்
சொல்ல வேண்டும். மருந்துக்குக் கூட சிரிப்பு இல்லை. ‘வெய்ட் பண்ணச் சொன்னானா’
என்கிற ஒரு இடத்தில் மட்டும் நீங்கள் சிறிதே உதட்டை இழுத்து புன்னகைக்கலாம்.
இருந்தும் இந்தப் படம் பரவாயில்ல என்று சொல்வதற்கான காரணம் – நமக்கு முன்னால் நிஜப்
பேய்கள் நிறையத் தாண்டவமாடுகின்றன. அவைகளோடு போராடுவதுதான் நமது இப்போதையத் தேவை.
செத்துப் போன பேய்களை வைத்து காதலியோடு சேர்வதோ, செத்துப் போன பேயின் பயமுறுத்துதலின்
வழியாய் நாம் சேர்ந்து இருப்பதெல்லாம் மீண்டும் ஓர் நாவல் போலத்தான். கற்பனை
வாழ்க்கைக்கு ஒத்து வராது. ஊழல் சமூகம் திருந்த வேண்டுமென்றால் கல்வி கல்வியை
இருக்க வேண்டும். அதைச் சரி செய்ய வேண்டிய கடமை எல்லாருக்கும் உண்டு. எந்தப்
பேயும் இதைச் சரி செய்ய உதவிக்கு வராது... நாம் செய்தால்தான் உண்டு...