8.9.11

பயங்கரவாதம் - ஓர் அதிர்ச்சியோடு

ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பு பற்றிப் படிக்கிற போதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது? தொலைதூரத்தில் இருக்கிற ஒருவனுக்கே இந்த அதிர்ச்சி என்றால், அருகில் இருப்பவனுக்கு, இதில் உயிர் இழந்த உறவினர், நண்பர்கள் இவர்களுக்கு இன்னும் எவ்வளவு, அதிர்ச்சி, சோகம், கோபம், இவைகளெல்லாம் இன்னும் உச்சத்தில் இருக்கும்.

இதோடு சம்பந்தப் படாத ஒரு நபராக இதைப் பற்றி எழுதுவது மிகவும் சுலபமானதுதான். ஆனால் அடிபட்டவனின் வலியும் வேதனையும் சொல்லி மாளாது.

நான் என்னையே கேட்டுக்கொள்வது இதுதான்? ஏன் இவர்கள் இத்தகைய அரக்கத்தனமான, கீழ்த்தரமான, கேவலமான, மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்யத் துணிகிறார்கள்?

ஒவ்வொருவனும் அவனது செயல்களை நியாயப் படுத்தவே செய்வான். தங்களது எதிர்ப்பைக் காட்ட, தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கான எதிர்ப்புக் குரலாக, ஒட்டு மொத்தக் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்ப, பழி வாங்க, கொள்கைகளுக்கான குரலைப் பதிவு செய்ய என்று ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத மனிதர்களை குண்டுகள் வைத்துக் கொல்லுவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் பட முடியாது.

எந்தவிதத்திலும் யாராக இருந்தாலும் அரசாக இருந்தாலும், தனி அமைப்புகளாக இருந்தாலும் எல்லாம் பயங்கரவாதம்தான்.

எங்கும் யாரும் நிரபராதிகளோ, அல்லது குற்றவாளிகளோ கூட அரசால் கொலை செய்யப் படக் கூடாது என்கிற மனித நேயக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறவர்கள் கூட இத்தகைய குண்டு வெடிப்புகளினால் அமைதிக்குள்ளாக்கப் படுவார்கள்.

தெரியாத நபர் ஒருவரோடு, பேஸ் புக்கில் இது விடயமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த போது அவர் சொன்னார் - "உனக்கு என்ன தெரியும் - மும்பையில் குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு அருகில் நான் இருந்தேன் - அதன் வலி தெரியுமா என்றார்" - ஸாரி என்கிற வார்த்தையோடு அந்தப் பரிமாற்றம் முடிந்து போனது - என்ன சொல்ல முடியும்?
இப்படி ஒவ்வொருவரும் அனுபவிக்கிற வலிக்கு அதேவழியில் திருப்பிக் கொடுத்தல் இன்னும் கீழ்த்தரமான நிகழ்வுகளைத் தானே கொண்டு சேர்க்கும்.

அரசுகள் நியாயமான போராட்டங்களுக்கு செவி சாய்த்தாலே பல விடயங்கள் சரியாகும். போராட்டங்களுக்கு அடக்கு முறை தீர்வாகும் என்று அரசு நினைத்தால் ... அல்லது அடக்கு முறைகளுக்கு குண்டிவெடிப்புதான் தீர்வு என்று நினைத்தால்... இன்னும் ...

அப்பாவிகளைக் கொன்று யாரும் எந்த நியாயத்தையும் நிலை நாட்ட முடியாது - எந்த அமைப்பாக இருந்தாலும் சரி. அடக்குமுறை கொண்டு அமைதியை நிலை நாட்ட முடியாது - எந்த அரசாக இருந்தாலும் சரி.

சுய லாபக் கணக்குகள், மந்தைகளாக மனிதர்களை நினைக்கும் அரசுகள், கருத்துக்களைத் தங்களுக்குள்ளே தெளிவாகப் பகிர்ந்து கொள்ளத் திராணி இல்லாத அரசியல் வாதிகள், எதிர்த் தரப்பு நியாயங்களை செவி கொடுத்தும் கேட்காத - கேட்க விரும்பாத "பண்டமென்டலிஸ்ட்டுகள்" நேர்மையான போராட்டங்கள் வழி நியாயம் கேட்க விரும்பாத கோழைகள் இவர்கள் இருக்கும் வரை எல்லாருக்கும் ஆபத்துதான்.

குண்டு வெடிப்பு கோழைகளின் ஆயுதம். அதற்கு - போராட்டத் தற்கொலைகள் ஆயிரம் மடங்கு மேலானதாவே தோன்றுகிறது.

நாளுக்கு நாள் குண்டு வெடிப்பு நடைபெறும் நிலையில் இதன் கோர முகத்தையும் கோழைத் தனத்தையும் வேரறுக்கும் வேலையையும் அதே சமயம், மனித நேயத்தை கைவிடாமல் இருக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது.

இதை அரசோ, குண்டு வெடிப்பாலிகளோ படிக்கப் போவதில்லை. நமக்குள் இந்த மனிதாபிமானம் பற்றிப் பேசியாவது அதை இன்னும் வாழ்விக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்