25.8.11

அன்னா ஹசாரே - காந்தியா? கடவுளா?

அன்னா ஹசாரே - இன்றைக்கு ஒரு கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஒரு சிம்பல் - அடையாள நிலைக்கு உயர்த்தப் பட்டிருக்கிறார். அவரைப் பற்றி ஏதாவது சொல்லவேண்டுமென்றால் பயந்து பயந்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது. பாரத மாதாவை யாரும் எப்படி எதுவும் சொல்லிவிடக் கூடாதோ, காந்தியை எப்படி யாரும் விமர்சித்து விடக் கூடாதோ – தோனியை – தென்டுல்காரை யாரும் எப்படி விமர்சனம் செய்யக் கூடாதோ [இந்த ஒப்புமைக்கு மன்னிக்கவும்] அப்படி இன்றைக்கு அன்னா உயர்ந்திருக்கிறார்.

இது ஒரு நல்ல தொடக்கமா என்பது தெரியவில்லை. அன்னாவைப் பொருத்தவரைக்கும் மிகப் பெரிய மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பும் ஆற்றல் அல்லது சரியான நேரத்தில் சரியான ஒன்றைத் தொடங்குதல் அல்லது முன்னெடுத்தல் என்பது தொடங்கி - மிகச் சரியாக மீடியாவின் துணை என்று பல விதங்களில் இந்தப் போராட்டம் கவவனிக்கப் படவேண்டியது. இத்தகைய - எல்லாவற்றிலும் மிகச் சரியாக அமைதல் என்பது எல்லாருக்கும் வாய்க்காது - அல்லது வாய்க்க வைப்பதற்கான சக்தி இருக்காது. [அது எதுவாக வேண்டுமானாலும் கூட இருக்கலாம் - கார்ப்பரேட் சக்திகளாகக் கூட இருக்கலாம்] - அன்னாவிற்கு அது வாய்த்திருக்கிறது. இது ஒரு மக்கள் சக்தியாக உருவெடுக்கும் பட்சத்தில் - தனி நபர்களாக செய்ய முடியாத காரியத்தை ஒரு இயக்கத்தின் வழியாகச் செய்ய முடியும் என்று சேர்ந்து இணைகிற மக்கள் சக்தியை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

அதே சமயத்தில் சிலர் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்வோர் இவ்வியக்கத்தில் இணைவதையும் அதற்கு அதரவு தெரிவிப்பர்களை கிண்டல் செய்வதும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை - நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிற இளைஞர்கள் வெறும் சம்பளம் ஆட்டம் பாட்டம் என்று இல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கிற சூழலையும் மாற்றுவதற்கு தங்களது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யத் தயாராக இருக்கிற பொது நலம் அதிகமாகிக் கொண்டு வருகிறது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்றே படுகிறது. தங்களால் முழு நேரத்தையும் இதற்காகச் செலவு செய்ய முடியாது என்கிற போது செய்பவர்களோடு இணைய வேண்டும் என்கிற ஆர்வம் நல்லது என்றே படுகிறது. இதற்கு முன்பு ஈழத் தமிழர்களின் நலனிலும் அவர்கள் அக்கறை கொண்டு செயல்பட்டதும் நினைவில் கொள்ள வேண்டும்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம் - அன்னா ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்புகிறார் என்பதற்காக அவர் செய்வது எல்லாம் சரி என்று பேசாமல் நாம் இருக்க வேண்டுமா? - அல்லது ஜன்லோக்பாலில் உள்ளது எல்லாம் சரி என்றோ அல்லது அவைகளைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காப்பது நல்லதா, அல்லது அது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பாகாதா என்பதே கேள்வி. அருந்ததிராய் சில கேள்விகள் எழுப்பி விட்டார் என்பதற்காக அவரை தேசத் துரோகி என்றோ அல்லது அவர் அரை நிர்வாணப் படம் வெளியுட்டு நாவல் எழுபவர்தானே என்று கிண்டல் செய்வதோ சரியா என்றே படுகிறது. இன்னும் நாம் கருத்துச் சுதந்திரங்களுக்குத் தயாராக வில்லை என்பதுதான் தெரிகிறது.

மக்களாட்சியை விரும்புகிற நேசிக்கிற ஒரு அரசில் தனிப் பட்ட முழுச் சக்தி வாய்ந்த ஒரு 'சுதந்திர அமைப்பு' எந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் அல்லது பணபலம் உடையவர்கள் கையில் செல்லாது என்பதைக் கேட்கிற உரிமை எல்லாருக்கும் உண்டு. இன்றைக்கு அன்னா – சரி- நாளைக்கு - மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிற ஒருவனே ஹிட்லராக மாறிவிடும் சமயத்தில் - இந்த அமைப்பு மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருக்கிறது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள் –

அல்லது மற்ற மக்கள் இயக்கப் போராட்டங்களில் போராடுகிறபோது இந்த அளவுக்கு மீடியாக்களின் பங்கு இல்லையே என்று கேட்பதற்கான உரிமை ஒருவனுக்கு உண்டு. மீடியா மக்கள் நலனை மையைப் படுத்தும் புள்ளி என்றால் - மக்களின் உயிருக்கே பங்கம் விளைவிக்கும் அணு மின் நிலையம் பற்றியும், மற்ற இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டு கூடங்குளத்தில் அமைக்கப் பட்டிருக்கும் அணுமின் நிலையப் பாதுகாப்பு முதற்கொண்டு உண்ணாவிரதம், போராட்டம் என்று அதில் ஈடு பட்டிருக்கும் மக்கள் கேட்பதற்கான உரிமை இருக்கிறது. அதை அவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ கேள்வி எழுப்பும் பட்சத்தில் அதில் உள்ள உண்மைகளைக் குறைந்த பட்சம் கேட்பதற்கான திறந்த மனது வேண்டும்.

ஏன் திறந்த மனது என்று பேசுகிறேன் - எல்லா அறிவு ஜீவிகளுமே - 'தாங்கள் எது சரி என்று நினைக்கிறார்களோ’ அதுதான் சரி என்கிற அளவில்தான் சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள். தங்களுக்குத் தேவை என்றால் பிறர் சதி என்று எழுதுகிறார்கள். காந்தியைப் பற்றி யாராவது விமர்சித்தால் இந்தியாவைத் துண்டாட அமேரிக்கா சதி என்று எழுதுகிறார்கள். காங்கிரஸ் இதைப் பி.ஜே.பி. யின் சதி என்றால் ஏற்றுக் கொள்ள மனம் வரலை. [இந்திராகாந்திக்குப் பிறகு ? ? ?] காங்கிரசில் ஜன நாயகம் இல்லை அது பிரித்தாளுகிறது –

காந்தி கடவுளாக இருக்கலாம் - அதற்காக அவர் செய்தது எல்லாம் சரி என்று சொல்லுகிற அளவிற்குத் தான் நாம் இருக்க வேண்டும் என்றால் அது நாம் தனி மனித கடவுளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் பொருள்.

தனக்கு வேண்டுமென்றால் மிகப் பெரிய அடையாளமாக இருக்கக் கூடிய நபர்களைக் கட்டுடைப்புச் செய்வது, தனக்குப் பிடித்த நபரை யாராவது கட்டுடைப்புச் செய்தால் அதை சதி என்பதும் 'திறந்த மனது என்பது' இருக்கிறதா என்றே தோன்றுகிறது.

அருந்ததி ராயைப் பிடிக்காமல் இருக்கலாம் - அருணா ராயைப் பிடிக்காமல் போகலாம் - அதற்காக அவர்கள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இருப்பதை குறைந்த பட்சம் பார்க்காவாவது செய்ய வேண்டும்.

முதலில் இது வரட்டும் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் சரியா என்று தெரியவில்லை. வராற்றின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் சொன்னார் - முதலில் சாதியை ஒழிப்பதற்கு வழியப் பாருங்கள் பிறகு விடுதலையைப் பற்றிப் பேசலாம் - இல்லை உன் வாயைப் பொத்து இதைப் பத்திப் பின்னாடிப் பேசிக்கலாம்னு சொன்னாங்க. அல்லது சில பேரு தனியாப் போகணும்னாங்க - இல்ல இப்ப ஒண்ணா இருப்போம் பின்னாடிப் பாத்துக்கலாம்னாங்க - வடக்கும் தெற்கும் எல்லாம் ஒன்னு - வளர்ச்சி மட்டும் வடக்கே - தெற்கு - எதுவாக இருந்தாலும் தெற்கு நிறைய வருமானத்தை கொடுக்கிறது - இரயில்வே சிறு உதாரணம் - ஆனால் வளர்ச்சி மட்டும் வடக்கேயாவா என்று சில பேர் கேட்டார்கள் - பேசாம இரு முதலில் இந்தி கத்துக்க பின்னாடிப் பார்க்கலாம். எவ்வளவு உயிர் போகிற பிரச்சனைகள் இருக்கு இங்கேன்னா - முதல்ல பேசாம இரு பின்னாடிப் பாத்துக்கலாம்னா - அது கூடப் பரவாயில்லை - அதுக்காக கேள்வி எழுப்புறவனைப் பத்தி மட்டமா விமர்சித்தால் நல்லா வளரும் பத்திரிகை சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் - ஜனநாயகமும்.

ஊழல் ஒழிக்கப்பட வேண்டியதுதான். அன்னா வின் முயற்சிப் பாராட்டப்பட வேண்டியதுதான் - அரசின் அடாவடித் தனங்களுக்கும் ஊழலுக்கும் எதிராக அன்னாவோடு சேர்ந்து போராடலாம்தான் - போராடனும்தான் - அதற்காக ஜன்லோக்பாலை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ -

அதைக் கேள்வி கேட்டால், கேட்பவன் சமூக அக்கறை இல்லாதவன் என்று முத்திரை குத்தப் படுவதோ, அல்லது அவன் ஊழலை விரும்புகிறான் என்பதோ - நாம் சமத்துவத்தையும், பல்வேறு தரப்பு நியாங்களுக்கும், பார்வைகளுக்கும் மதிப்பளிக்கத் தெரியாத மனிதர்களாய் இருக்கிறோம் என்றுதான் பொருள். அதனால் தான் அன்னாவோ, அண்ணாவோ, யாரும் ஒரு சிம்பலாக்கப் படுவதை - ஐடல் -ஆக்கப் படுவதை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

4 comments:

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

தோழா
என் மனதில் இருந்ததை அப்படியே படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.இனைய தளத்தில் இருக்கும் இந்த கருத்து சுதந்திரம் பத்திரிக்கைகளில் கிடையாது.இதே கட்டுரையை பத்திரிக்கைகளில் எழுதியிருந்தால் உங்களை தேச துரோகி என்றே முத்திரை குத்தியிருப்பார்கள் இந்த போலி ஊழல் ஒழிப்புவாதிகள்

Unknown சொன்னது…[பதிலளி]

தோழரே!
மிகச் சரியாகச் சொன்னீர்கள். நாம் இன்னும் எல்லாருமே பிற பார்வைகளில் உள்ள உண்மையை ஏற்றுக் கொள்வது இருக்கட்டும் - குறைந்த பட்சம் அப்படி ஒரு பார்வை இருக்கலாம் என்பதைக் கூட ஏற்றுக் கொல்லாதுதான் வருத்தம்.

thiyagarajan.s சொன்னது…[பதிலளி]

காந்தி மட்டும் என்ன கடவுளா....பாலகங்காதர திலகர்,கோகலே போன்ற தலைவர்கள் துவக்கிய போராட்டத்தை நடுவில் வந்து பிடுங்கிக்கொண்டு தானே கஷ்ட்டப்பட்டு போராடி வாங்கியது போல் காட்டிகொண்டு,விடுதலைக்குப் பின் தேசப் பற்றுள்ள பட்டேல் போன்ற ஒரு மனிதரை பிரதமர் ஆக்காமல் ஒரு விளம்பரப் பிரியரை,அடுத்தவன் பெண்டாட்டி மேல் ஆசைப்படுகிற ஒருமனிதரை பிரதமராகிய சுயநலவாதிதானே இந்த காந்தி....?????

Unknown சொன்னது…[பதிலளி]

காந்தி பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. அதைப் பற்றி தனியாக எழுதலாம். ஆனால் காந்தியை அனைவரும் மதிக்கிற தலைவராக முன்னிறுத்தத் தானே எல்லாரும் செய்தார்கள். அப்படி ஒருவரை இன்று முன்னிலைப் படுத்துகிறார்கள். அது சரியா தவறா என்கிற விவாதமும் கூட அவசியமானது. ஒருவர் மட்டுமே உன்னதம் என்கிறது தவறு - மக்கள் போராட்டங்களுக்கான முன்னிலைப் படுத்துதல் குறைந்துவிட்டது.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்