1.9.10

உலகத்தின் நோக்கம் 3

அறிவாளியிடம், இதனடிப்படையில்
சில கேள்விகளை மட்டும் இப்ப முன் வைப்போம்.

மனிதனுக்கு நோக்கம் என்ற ஒன்று இல்லை என்றால்,
மனித வாழ்க்கையும் அர்த்தமற்றது.
எந்த விதத்திலும் நமக்கு அர்த்தம் கற்பித்துக் கொள்ளக் கூடாது.
உறவுகள், அம்மா அப்பா, காதலன், காதலி, கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், எதுவமே அர்த்தமற்றது.
ஏனெனில் நாமாகத் தான் இந்த உறவுகளின் மீது அர்த்தத்தைத் திணிக்கிறோம். ஆக இதுவும் கற்பிதமாகிறது. உண்மைதானே?

தேசம், அல்லது நாடு, இனம் மொழி, மதம் - இவைகளும் கற்பிதம்தான்.
எல்லாம் கற்பிதம்தான் என்றால் எந்த விதத்தில் இவைகளை நாம் எதிர் கொள்வது?

ஏன் மக்கள் மொழிக்காக அடித்துக் கொள்கிறார்கள்?
ஏன் மதத்தின் பெயரால் சண்டைகள்?
சிலர் சொல்கிறார்கள், இதற்காகத்தான் இவைகளெல்லாம் கற்பிதங்கள் என்று நாம் சொல்கிறோம். அல்லது கற்பிதம் என்கிற உண்மையைக் கட்டுடைக்கிறோம்.

சரி - மனித இனத்தின் மீது மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை?
நாமும் இயற்கையின் வழி அதன் போக்கில் வந்தவர்கள் என்றால்,
நமக்கு மட்டும் ஏன் இந்த அறிவு சார்ந்த விவாதங்கள்?
ஒரு ஆடு புலியிடம் அடிபட்டால் அது இயற்கை என்று சொல்கிற நமக்கு,
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்தால் மட்டும் நமக்கு ஏன் வலிக்கிறது? இதுவும் இயற்கைதானே.
இதுவும் survival of the fittest தானே?

நாம் மட்டும் ஏன் மனித உரிமை பற்றி பேசுகிறோம்?
மனிதன் ஒன்றும் இல்லாதவன்தானே - அவன் விருப்பபடி வாழ அவனுக்கு உரிமையில்லையா?

அமெரிக்க ஏகாதிபத்திய அரசாக இருக்கிறது என்றால் இருந்து விட்டு போகட்டும். எதிர்கொள்ளத் திராணி உள்ள அரசு எதிர்கொள்ளட்டும். இல்லையென்றால் இருக்கிற வரைக்கும் உள்ளதைத் தின்று விட்டு 'விதி வந்தால் செத்து விட்டுப் போகிறோம்.'

உடனே அறிவாளி சொல்கிறார்:
அது கூடாது. மனிதர்கள் உயர்ந்தவர்கள். நாம் ஆடு மாடுகளைப் போல் அடித்துக் கொண்டு சாகக் கூடாது.
நாம் அறிவாளிகள். ஆறாம் அறிவு கொண்ட உயர்ந்த பிறவிகள்.
நாம் சேர்ந்து வாழ நமக்கென்று சில கட்டுக் கோப்புகளை நாமே விதித்துக் கொள்வோம்.
நமக்கென்று சில நோக்கத்தைக் கற்பித்துக் கொள்வோம்.

இயற்கைக்கு நாம் நோக்கம் கற்பிப்பது தவறு என்று சொல்லுபவர்கள் கூட இப்போது நமெக்கென்று ஒரு நோக்கத்தைக் கற்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்வோம்.

வேறு வழியில்லை எனவே சரி இருந்து விட்டுப் போகட்டும் என்று ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்.
நமக்கு பெரிய நோக்கம் என்று ஒன்று இல்லையென்றாலும் ஒரு சிறிய நோக்கத்தைக் கற்பித்துக் கொள்வோம். நாமெல்லாம் அடித்துக் கொள்ளாமல், ஒன்றாக வாழ சிலவற்றை சரி என்போம் சிலவற்றைத் தவறு என்போம்.

அதாவது கற்பிதம் என்றாலும் அதை நாம் கற்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.



மேலும்...

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்