1.4.11

தேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 1

இது என் நண்பர்  அ. பிரபாகரன் எழுதிய கட்டுரை. அதன் முதற் பகுதி. 


பொது மக்களாய் இருங்கள் 

சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.
அப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.
இங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.
இங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.
தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா? நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.
இந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.
இன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.
எது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.

தொடரும்....

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்