21.4.13

பாஸ்டனின் நிகழ்வுக்குப் பின்

மிகவும் சிறப்பு வாய்ந்த பாஸ்டன் மாரத்தான் நிகழ்வு முடிவு பெரும் தருவாயில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மூன்று பேர் இறந்து விட ஏறக்குறைய 170 நபர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியையே நான் இரண்டு நாட்கள் கழித்துத் தான் அறிந்து கொண்டேன்.

அமெரிக்காவின் மீதான தாக்குதல்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணங்கள் பல.  பராக் ஒபாமா இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி அறிவதற்கான ஆர்வம்தான் எனக்கு அதிகமானது.

ஒபாமாவின் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அல் கொய்தா வை வம்ம்புக்கு இழுத்திருப்பார்கள். இதே இந்தியாவில் நடந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் காரணம் என்று உடனேயே சவால் விட்டிருப்பார்கள்.

இதற்கான காரணம் - யார் செய்தது என்று தெரியவில்லை - மிக விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று ஒபாமா சொன்னார்.
நமது அரசியல் வாதிகளும் அங்கேயே பிரச்சனைகளுக்கு உரமிடும் புஷ் போன்றவர்களும் இதைக் கற்றுக் கொள்வது நல்லது.

எதற்கெடுத்தாலும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பள்ளிக் கல்லூரிகளுக்குச் சென்று பார்க்கிறவர்களைஎல்லாம்  சுட்டுத் தள்ளும் அமெரிக்க கலாச்சாரத்தின் போக்கையும், அதற்குப் பின் அவர்கள் மனநலம் அற்றவர்கள் என்று தப்பித்துக் கொள்ளும் மன நிலையையும் மாற்றுவதற்கு முதலில் அமெரிக்கர்கள் முயல வேண்டும். அதைச் செய்தாலே பாதிப் பிரச்சனை முடிந்து விடும்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப் பட்ட செய்தி இந்த அளவிற்கு உலகக் கவனத்தைப் பெற வில்லை என்பதும் இதனால்தான்  ஒபாமா அடக்கி வாசித்தாரோ என்றும் அல்லது இந்தச் செய்தியை மறைக்க அமெரிக்க நடத்தும் நாடகமா இந்த குண்டு வெடிப்பு என்று கேட்பது தவறில்லை என்றே தோன்றுகிறது.




பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை இங்கேயும் குண்டுவெடிப்பு. ஆனால் உடனேயே இது தீவிரவாதம் என்றும், பி. ஜே. பி யின் அலுவலகத்தை டார்கெட் செய்திருக்கிறார்கள் என்று சொல்லுவது மே மாதம் ஐந்தாம் தேதிக்கு ஆதரவைத் தேடும் யுத்தி என்றே தெரிகிறது. இரண்டு கார்களுக்கு நடுவில், தமிழ் நாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் தகட்டோடு என்பது வேண்டுமென்றே திட்டமிட்டிருப்பது போலவே தெரிகிறது.

இவைகளையெல்லாம் பார்க்கிற பொது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கான சுலபமான வழிகளை ஏற்படுத்தித் தருவதே விஞ்ஞானம்தான் என்பதில் நம்பிக்கை அதிகமாகிறது.
நவீனம் என்பது என்ன... மொத்தமாய் சாவதா? பயந்து பயந்தே வாழ்வதா?

தங்களது ஆதாயத்திற்காக தீவிரவாதம் என்ற லேபிலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா?

14.4.13

சித்திரை பேசுதடி



  • தமிழர் யார் என்பதில் எப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றனவோ அதோ போலவே தமிழரின் புத்தாண்டு எது என்பதிலும் சிக்கல்கள் பல இருக்கின்றன போல. தை – யா அல்லது சித்திரையா? பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யம் இல்லை. அதைத் தமிழர் புத்தாண்டு என்று கொண்டாடுவதிலும் எனக்குத் தயக்கம் இல்லை.
  • அதே சமயம் சில கேள்விகளை முன்னிறுத்த வேண்டியது அவசியம். இன்னமும் ஏப்ரல் மாத நடுவில் பல தெற்காசிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன. வங்காளம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சிறிலங்கா, லாவோ போன்ற நாடுகள். இந்தியாவில் சீக்கியர்கள், அஸ்ஸாமியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளர்கள் என பல இனங்கள் இந்த காலத்தில்தான் புத்தாண்டு கொண்டாடுகின்றன.
  • இதுமட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகளில் கூட வசந்த காலம் தொடங்கும் இந்த கால கட்டத்தில்தான் புத்தாண்டை கொண்டாடி வந்திருக்கின்றனர். அதாவது கிரகோரியன் காலண்டர் முறை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன்பு வரை என்று சிலர்  நினைக்கிறார்கள். அந்தக் காலண்டர் முறையை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏப்ரல் மாதங்களில் தொடர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிய மக்களை கேலி செய்வதற்காகவே உருவாக்கப் பட்டது முட்டாள்கள் தினம் என்று ஒரு தியரி உண்டு. அதுவே தொடர்ந்து ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடும் அனைவரையும் முட்டாள்கள் என கேலி செய்யும் நாளாக ஆனது என்று வாதிடுபவர்களும் உண்டு. அப்படியானால் தமிழர்களின் புத்தாண்டுதினமும் சித்திரையில்தானா?
  •  எது எப்படியோ நாம் இன்னும் நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழினம் பற்றி வெளிவந்திருக்கிற ஆய்வுகளை சாதாரண மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி – துப்பாக்கி, ஒசத்தி-போடா போடி இவைகளைத் தவிர்த்து தமிழ் மொழி குறித்தோ, இனம் குறித்தோ, சித்திரை குறித்தோ தொலைக்காட்சிகள் ஏதாவது ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் லட்டு தின்ன ஆசையா என்று கேட்டு, தமிழ் தெரியாத நடிகைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து தமிழ் மொழியை வளர்க்கலாம்.
  • அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

7.4.13

தமிழ் இனி - குறும்படம்

எதேச்சையாக என் கண்ணில் பட்டது.


20.3.13

தமிழின எழுச்சியும் மக்களாட்சியும்

இந்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கொண்டுவரப் படும் தீர்மானம் - அதில் இந்தித் திருநாட்டின் அணுகுமுறை - இதையெல்லாம் தாண்டி தமிழகத்தில் உருவான இந்த பேரெழுச்சி தான் எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது.

இந்தித் துணைக் கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தி நாட்டின் வல்லமை குறித்து இங்கு யாரும் மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் உருவாக்க வில்லை. ஒரு ஜன நாயக நாட்டில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உடைய இனங்கள் ஒன்றாக வாழும் போது நிச்சயமாக சிறு இனங்கள் மதிக்கப் படாமல் இருப்பது நடக்கத் தான் செய்யும். சில சமயங்களில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது தெரியாமல் நடக்கிற விஷயம். சில சமயங்களில் ஓர் இனம் தான் அங்கீகரிக்கப் பட வில்லை என்பதை ஆள்பவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் மிகக் கொடிய விஷயம். சிற்றினக் குழுக்கள் தங்களது அங்கீகாரம் பற்றியெல்லாம் எண்ணக் கூடாது என்று நினைப்பதுதான் மிகவும் மோசமானது. நம் நாட்டில் அதுதான் நடக்கிறது என்று தோன்றுகிறது.
இஸ்லாமியர்கள் தனகளது அங்கீகாரம் பற்றி பேசக் கூடாது. தமிழர்கள் தங்களது அங்கீகாரம் பற்றி நினைக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பது எல்லாம் மெஜாரிட்டெரியனிசத் தின் வெளிப்பாடுதான். 

இந்தி(ய) நாட்டில் எல்லா குடிமக்களும் மதிக்கப்படுகிறார்கள் என்ற நினைப்பை திரு மன்மோகன் சிங் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் அது இல்லை என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் அல்லது இஸ்லாமிய மக்கள் நினைக்கிறார்கள் என்றால் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? ஏன் தனது குடிமக்களில் சிலர் அவ்வாறு நினைக்கிறார்கள் - எங்கே தவறு நடந்திருக்கிறது என்று யோசிக்க வேண்டும். அப்படி நினைக்கிற போதுதான் அந்த நாட்டின் குடிமக்கள் தான் இந்த நாட்டின் உறுப்பினர் என்கிற உண்மை நிலையை அடைவார்கள்.

அதை ஒரு போதும் செய்யாமல் - என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பிரதம மந்திரிக்குத் தெரியப் படுத்துவோம் - இதை அவருக்குச் சொல்வோம் என்று மந்திரிகள் சொல்வதைக் கேட்கும் போது பிரதம மந்திரி பேப்பர் படிப்பதில்லை,  செய்திகள் பார்ப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. எதோ மன்னராட்சி நடப்பதைப் போல அரசனுக்குத் தெரியப் படுத்தும் தலையாட்டி மந்திரிகள் சொல்லுவதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.

சில பேர் கேட்கலாம் - இப்படி ஒவ்வொரு போராட்டத்திற்கும் பதில் சொல்லுவதும் அதற்குண்டான அங்கீகாரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் பிரதம மந்திரிக்கு வேறு வேலையே இல்லையா.
தன் நாட்டு குடிமக்களின் நலனை விட வேறு என்ன அடிப்படைவேலை இருக்கிறது?

அதுமட்டுமல்ல - எப்போது நாம் மக்களாட்சி என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அப்போதே நாம் இது போன்ற போராட்டங்களுக்குச் செவிமடுக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இல்லையெனில் இலங்கை அரசு தமிழர்கள் மேல் தொடுத்த இனப் படுகொலைக்கும், இந்திய அரசு தமிழரின் குரலுக்குச் செவி மடுக்காததற்கும் எந்த விதமான வேறு பாடும் இல்லை.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][]


ஏன் நான் ஒவ்வொரு முறையும் போராட்டங்களுக்கு ஆதரவாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் என்னையே கேட்டுக் கொள்வது உண்டு.

இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பெசிமிஸ்ட்டா நான்?
அல்லது பாலாவை ஒரு சாடிஸ்ட் என்று சிலர் கூவுவதைப் போன்று, பலர் போராடுவதில் சுகம் காணும் ஒரு சாடிஸ்டா நான்?
அல்லது போராடி போராடி அடி வாங்கி வீங்குவதில் சுகம் காணும் மசோக்கிஸ்டா?
பெசிமிஸ்டும் இல்லை சாடிஸ்டும் இல்லை - ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

ஜனநாயக நாட்டில் தங்களது அங்கீகரத்தையும் உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்று மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிற சாதாரண இந்திக் குடிமகன்.

எதெல்லாம் எம் இனத்திற்கான அவமானமாக இருக்கிறதோ - எப்போதெல்லாம் நாம் அழிக்கப்படும் சூழலில் இருக்கிறோமோ - ஆபத்தான சூழலில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த ஜன நாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துப் போராடும் மக்கள் இந்த நாட்டின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை நீர்த்துப் போய் விடக் கூடாது என்று நினைக்கும் குடி மக்களின் இனத்தில் நானும் ஒருவன்.

இந்தி நாடு என் தாய் நாடு இல்லை என்றாலும் அது என் நாடு என்று நினைக்கும் சில கோடிகளில் நானும் ஒரு கடைக் கோடி.

நம்மைக் காப்பாற்ற இன்னொரு காந்தியோ இன்னொரு காமராஜரோ வருவார் என்று காத்துக் கிடப்பதைக் காட்டிலும், ஒன் மேன் ஆர்மியில் நம்பிக்கை இழந்த ஆனால் மக்களின் மகத்தான சக்தி மீது நம்பிக்கை கொண்டவன்.

ஐந்து வருடத்திற்கு மட்டும் அரசியல் என்று மக்கள் நினைப்பதைத் தாண்டி, அரசியல் தளத்தில் மக்கள் தொடர்ந்து பங்கெடுக்கிற குடிமக்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் போல் ஒருவன்.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]



இந்த தமிழின எழுச்சி மிக அவசியமானதும் மிகவும் தேவையானதும் கூட.
நான் இந்த எழுச்சி அவசியம் என்பதனால் தமிழகம் பிரிந்து விட வேண்டும் என்று எந்த விதத்திலும் நினைக்க வில்லை. இந்தி(யா) என்கிற எமது நாடு பிரிந்து போய் விடக் கூடாது என்பதிலும் நான் உறுதியாய் இருக்கிறேன்.

இது மற்ற மாநிலங்களில் எல்லாம் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும், அவர்களது சொத்துக்களை சுரண்டிக் கொழுக்கும் நம் பிற இனச் சகோதர்கள் கொக்கரிக்கும் நாட்டு ஒற்றுமை அல்ல. ஒரு நாடு என்பது எல்லா இனங்களையும் மதித்து நடக்க இந்த நாடு உலகத்திற்கு இன்னும் ஒரு மாதிரிகையாய் இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே.

இந்த எண்ணம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கிற எல்லா இனத்தவருக்கும் வர வேண்டியது அவசியம் -    கொழுப்பதற்கு மாத்திரம் அல்ல.  இதைக் குடிமக்கள் மட்டுமல்ல ஆள்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால் இது இன்னும் இந்தியா என்பதைத் தாண்டி யு.எஸ்.ஐ. -யுனைட்டட்  ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்கிற இது அழைக்கப் பட வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். 

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பில்லா வண்ணம் அதே சமயத்தில் இன்னும் அதிகமாக இனங்கள் மதிக்கப் படுவதற்கும், தங்களது சுதந்திர உணர்வுகளோடு வாழ்வதற்கும் யு.எஸ்.ஐ. வழிவகுக்கும் என்றே நம்புகிறேன். எனவே ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா என்பதை வலியுறுத்துவதே நல்லது என்று கருதுகிறேன். அதற்கான முதல் படியாகவே இன எழுச்சி என்பதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில் எந்த விதத்திலும் தனி இனம் ஒன்று ஆட்சி அமைப்பது என்பது மெஜாரிட்டேரியன் ஆட்சியாகத்தான் அமையும். அதைத் தவிர்க்க வில்லை என்றால் அது பாசிசத்திற்கே வழி வகுக்கும். ஹிட்லர் ஆட்சி செய்ததைப் போல அல்லது ஸ்டாலின் போல. பாசிசம் என்பது எந்த ஆட்சி தத்துவத்திலும் சாத்தியம் என்பதே நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

தனி இனங்களின் அங்கிகாரம் மதிக்கப் படவில்லைஎன்றால் இந்தியா பாசிசப் பாதையில் மிக வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். அது கூடிய விரைவில் இன்னுமொரு ஹிட்லர், இன்னுமொரு ராஜ பக்சேவை நான் இந்தியாவில் சந்திக்க வைக்கும். அப்போது நாம் கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. - வலைகள் கூட முடக்கப் படலாம். வாய்கள் ஒட்டப் படலாம், கால்கள் ஒடிக்கப் படலாம், கரங்கள் முறிக்கப் படலாம் - அப்போது வெறுமனே ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வாய் திறக்கும் ஜன நாயக குடி மக்களாக இருப்பார்கள் இந்தியக் குடிமக்கள். இதைத்தானா நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரும்புகிறோம்?

[[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]


16.3.13

மாணவர் எழுச்சி

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் இயக்கம் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதமும் அதைத் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபடுவதைப் பார்க்கின்ற போது, எந்த அளவுக்கு நம்மைச் சுற்றியிருக்கிற பொது நலவாதிகள் 'பொது நலனை விட்டு அன்னியப் பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
அரசியல் வாதிகள், பொது நல வாதிகள் மாணவர்கள் தங்களது எல்லைகளை மீறுகிறார்கள் என்று உளறுவதை நிறுத்தி விட்டு இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வது நல்லது.

=============================================
இந்திய அரசிற்கு எந்த வித போராட்டமும் அரசின் கல்லைக் கரைக்காது. 
ஆனால் இந்தியாவைத் தாண்டி இண்டர்நேஷனல் அரங்கில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். அதைத் தான் இந்தப் போராட்டம் மனதில் வைத்துச் செயல் பட வேண்டும்.

================================================

தமிழக முதல்வர் புலி குட்டிகளுக்குப் பெயர் சூட்டிய நிகழ்வுக்குப் போக முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.  ஒரு இயக்கத்தையே அழித்து விட்டு குட்டிகளுக்குப் பெயர் சூட்டல் 

================================================

இந்திரா காந்தி என்றால் எமர்ஜென்சி ஞாபகம் வருவது போல மன்மோகன் -சோனியா என்றால் தமிழின அழிப்பு - ஊரடங்கு உத்தரவு தான் நினைவுக்கு வரும் போல... தமிழக அரசும் சேர்ந்து கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடுவதும், ஊரடங்கு உத்தரவிடுவதும் ... இ.கா. தேவலை என்றே தோன்றுகிறது.

================================================

இந்திய அரசு ஒரு மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அரசு. அதற்கு தமிழ் மீனவர்கள் வரிசையாகக் கொள்ளப் பட்ட போது அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் இருந்தது. இப்போது இரண்டு மீனவர்கள் கொள்ளப் பட்ட வழக்கில் இத்தாலிய வீரர்கள் திருப்பி அனுப்பப் படாததை கண்டித்து இத்தாலிய தூதர் நாட்டை விட்டுச் செல்லத் தடை - பிரதமர் இத்தாலிய அரசை கண்டிக்கிறார். அது நாட்டின் கௌரவத்தை பாதிக்கும் செயலாம்.

இதே இந்திய மண்ணைச் சார்ந்த மீனவர்களை சிங்கள அரசு சுட்டுக் கொள்கிற இதில் எதயாவது இந்த அரசி செய்திருக்குமா? இத்துனூண்டு இலங்கை அரசை செல்லமாய்க் கேக்கக் கூட நமக்கு நாதியில்லை. இத்தாலிக்கு சவால் வேறு. ஒருவேளை நேரடியாகக் காசை வேறு எங்கும் இறக்கி விட்டார்கள் என்ற கவலையா என்று தெரியவில்லை.
===============================================

இந்த மாணவர் எழுச்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நிறையத் தடைகள் வரும். பிரிக்க சதி நடக்கும். அடக்க ஆள் வருவார்கள். குற்றம் சாட்டுவார்கள் . குறை கூறுவார்கள்.

ஆனால் இந்த மாணவர்கள் கொண்டிருக்கிற ஈரம், உரம், இன உணர்வு, போராட்ட குணம், நீதிக்கான தாகம் இவைகளைப் பார்க்கின்ற போது -- இது எதுவும் இல்லாத நாம் அவர்களின் ........ .......... ......... ....

அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் உபத்திரவம் பண்ணாமல் இருந்தாலே போதும்.