29.5.13

தமிழுக்கு சிறுமை – தினமணி தலையங்கம்

பின்வரும் செய்தி இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக வெளி வந்துள்ளது. எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு நன்றி.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்: செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?
ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது  "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.
இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.
மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.
சேர நிலம் - மலைஞாலம்.  மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.
இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.
இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.
இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.
"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.
ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.
தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா?  செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.
வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!"

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தினமணி நாளிதழிலிருந்து மேற்கண்ட தலையங்கம் தரப்பட்டுள்ளது. தலையங்கம் எழுதிய ஆசிரியர் அல்லது ஆசிரியருக்காக எழுதியவருக்கு நன்றி.

இயன்றவர்கள் இக்கட்டுரையை பரந்த வாசிப்புக்கு உட்படுத்தலாமே!

5 comments:

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

அப்படி பார்த்தால், சமஸ்கிருதத்திற்கு கூட செம்மொழிக்கான தகுதி இல்லை.
சமஸ்கிருதம்,

கிரேக்க மொழியிலிரிந்து கிளைத்து வளர்ந்தது தொன்மையான ஈரானிய மொழி,
தொன்மையான ஈரானியத்திலிருந்து ஆர்ய மொழி கிளைத்தது.
ஆர்ய மொழியிருந்து சமஸ்கிருதம் கிளைத்து வளர்ந்தது.
இத்தனை தலைமுறை தாண்டி தோன்றிய சமஸ்கிருதத்திற்கு எப்படி செம்மொழி தகுதி இருக்க முடியும்?
கவிஞர் பாணாச்சியார், நெல்லை

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

//அப்படி பார்த்தால், சமஸ்கிருதத்திற்கு கூட செம்மொழிக்கான தகுதி இல்லை//

கவிஞரே, ஐ எக்ஸ்பெக்ட் மோர் எமோசன் ஃப்ரம் யூ! ஏன் இந்த கொலவெறி? இன்னொரு முறை முயற்சி செய்யவும் :-)

தமிழரசி சொன்னது…[பதிலளி]

ஒரு மொழி செம்மொழி எனும் தகுதியைப் பெறுவதற்கு
1. மிகத் தொன்மையான மொழியாக இருக்க வேண்டும்.
2. பிற மொழியின் துணையின்றி தானே தனித்து இயங்கக் கூடிய மொழியாக இருக்க வேண்டும்.
3. இலக்கிய வளம் நிறைந்த மொழியாக இருக்க வேண்டும்.
4. அந்த இலக்கியங்கள் அம்மொழி பேசிய மக்களின் பண்பாட்டை, கலைகளை எடுத்துக்காட்ட வேண்டும்.
5. அம்மொழி தாய்மொழியாய் பல பிறமொழிகளைத் தோற்றுவித்திருக்கவேண்டும்.
ஆகிய ஐந்து தகுதிகளும் இருக்க வேண்டும்.
இந்த ஐந்து தகுதிகளில் எந்தத் தகுதியை மளையாளம் வைத்திருக்கிறது? என்பதை அதற்கு செம்மொழி தகுதி அளிக்க ஒப்புதல் கொடுத்தவர்கள் சொல்வார்களா? சமஸ்கிருதமும் தமிழும் இல்லாது மலையாளம் தனித்து இயங்குமா? மலையாளத்தை படித்தவள் என்ற முறையில் கேட்கிறேன். இதைப் படிப்போரின் கூடுதல் கவனத்திற்கு
http://inithal.blogspot.co.uk/2011/10/blog-post_12.html

Unknown சொன்னது…[பதிலளி]

@பெயரில்லா
கவிஞருக்கு வணக்கம்.
அப்படிப் பார்த்தால் இந்த உலகத்தில் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் செம்மொழி என்கிற அந்தஸ்தைப் பெறாதா என்ன? மனித வரலாற்றின் மொழி வழக்கில் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டால் அந்தக் கணக்கில் இருந்து செம்மொழியை அறிந்து கொள்வதற்கான அளவு கோலாக அதைக் குறிக்கிறோம். மொழிக் கலப்பில் தமிழ் வார்த்தைகள் சமக்கிருதத்தில் விரவிக் கிடக்கிறது என்று நாம் சொல்கிறோம். சமக்கிருத வார்த்தைகள் தமிழில் விரவிக் கிடக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்த விவாதத்தைப் பிறகு வைத்துக் கொள்ளலாம்.

மலையாளம் செம்மொழி அந்தஸ்தைப் பெறுமா பெறாதா என்பதுதான் கேள்வி. உங்களது பதிலைப் பார்த்தால் சமஸ்கிருதத்திற்கே கொடுக்கும் போது மலையாளத்திற்கு கொடுத்தால் தப்பில்லை என்பது போல் இருக்கிறது.

அல்லது அந்த அந்தஸ்தைக் கொடுத்தால் என்ன கொடுக்காமல் இருந்தால் என்ன என்று விரக்தியில் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா?

Unknown சொன்னது…[பதிலளி]

@பெயரில்லா

இன்னொரு முறை என்ன முயற்சி செய்யணும்... எமோஷன்?

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்